Sunday, September 27, 2009

"உன் நெஞ்சத்தொட்டு சொல்லு... என் ராசா..."

"உன் நெஞ்சத்தொட்டு சொல்லு... என் ராசா..." என்ற பாடல் ரசிகர்களைக் கிறங்கடித்த ஒன்று. அதேபோல், "உன் இதயத்துல கை வெச்சு சொல்லு" என்பது பெரும்பாலான திரைப்படங்களில் வரக்கூடிய வசனமாகும். உண்மையைக் கூற வேண்டும் என்பதை வலியுறுத்தவே அத்தகைய வசனம் இடம்பெறும். தொட்டுப்பார்த்த உடன், இப்படித்தான் நீ சொல்ல வேண்டும் என்றெல்லாம் இதயம் கட்டுப்பாடுகளை விதிக்காது. இதயத்தின் பணி ரத்தத்தை பம்ப் பண்ணிக் கொண்டிருப்பதுதான். அது சிந்திக்காது. சிந்திக்கும் திறன் அதற்குக் கிடையாது. ஆனால் சிந்தனைகள் இதயத்தைப் பாதிக்கும். மகிழ்ச்சி, கோபம், துக்கம் என்று அனைத்து உணர்வுகளுமே இதயத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதனால் முக்கியமான தருணங்களில் இதயத்தைத் தொட்டுச்சொல்வது சொந்த உடலின் நலனுக்கு நல்லதே.

மாரடைப்பால் இறந்துவிட்டார் என்றால் அவர் வயதானவராகத்தான் இருக்கும் என்பதுதான் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை. இப்போதெல்லாம் முப்பதுகளிலும், நாற்பதுகளிலும் மாரடைப்பு வந்து அல்பாயுசில் போய்விடுபவர்கள் இருக்கிறார்கள். அந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1 கோடியே 72 லட்சம் பேர் இதய நோயால் உயிரிழக்கிறார்கள் என்று உலக இதயக்கூட்டமைப்பு தெரிவிக்கிறது. இதயத்தைப் பாதுகாப்பதை வலியுறுத்தியும், இதய நோய்களின் பாதிப்புகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையை உலக இதய நாளாகக் கொண்டாடுகிறார்கள்.

நடப்பாண்டில் "இதயத்தோடு பணியாற்றுங்கள்" என்ற முழக்கத்தை சர்வதேச அளவில் முன்வைத்துள்ளார்கள். பணியிடங்களில் ஏற்படும் பல்வேறு சூழ்நிலைகள் இதயத்தைப் பாதிக்கிறது என்பதால்தான் இந்த முழக்கம் முன்வைக்கப்பட்டுள்ளது. உலக இதயக்கூட்டமைப்பு, உலக சுகாதாரக் கழகம் மற்றும் உலகப் பொருளாதார அமைப்பு ஆகியவை இணைந்து ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளன. பணியிடங்கள் ஆரோக்கியமானதாகவும், சுமூகமான சூழல் இருப்பதாகவும் அமைய வேண்டும் என்று அரசாங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோருக்கு இந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

2008 ஆம் ஆண்டில் சஃபோலாலைப் என்ற ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்வில் இந்தியர்களுக்கு மோசமான செய்தியே கிடைத்தது. எட்டாயிரம் இந்தியர்களை அந்த ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். இந்தியர்களின் உணவில் போதிய அளவு ஊடடச்சத்து இல்லாமல் போய்விடுவதால் மற்ற நாடுகளில் உள்ள அவர்களையொத்த வயதினரைவிட மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளவர்களாக இருக்கிறார்கள். சராசரியாக 49.1 இந்தியர்கள் இத்தகைய மோசமான உடல்நிலையில் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவித்தது. குறிப்பாக, 30 முதல் 39 வயதுவரையுள்ளவர்களுக்கும் இந்தப்பிரச்சனை இருப்பதாக தெரிய வந்தது. மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில்தான் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள்.

இந்தியாவில் நாற்பது வயதைத் தாண்டியவுடன் இருபது சதவிகிதப் பெண்கள் மாரடைப்பு வரும் அபாயத்தில் இருக்கிறார்கள். இயற்கையாகவே பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது என்றாலும், அதிக அளவிலான அழுத்தம் அல்லது சர்க்கரை நோய் ஆகியவை அந்தப் பாதுகாப்பை உடைத்து எறிந்துவிடும். உடலில் ஒட்டுமொத்த கொழுப்பின் அளவு 200 மில்லிகிராமைத் தாண்டக்கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள். முன்பெல்லாம் மருத்துவர்களிடம் வந்தவர்களின் நோய்க்கும், தற்போது அவர்களிடம் மாரடைப்புக்காக வருபவர்களின் நோய்க்கும் பெரும் வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. வாழ்க்கை முறை பெரும் பங்காற்றுகிறது என்பதுதான் தற்போது நோய்வாய்ப்பட்டு வரும் பெரும்பாலானவர்களின் சிக்கலாகும்.

அதோடு, சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி லப்..டப்.. சத்தத்தை அதிகரித்துவிட்டது. பணியிடச்சூழல் குறித்து பேசுகையில் பணிப்பாதுகாப்பு, போதிய ஊதியம் போன்றவையும் அந்த விவாதத்தில் இடம் பெற வேண்டும். பணியிடச்சூழலை நிர்ணயிப்பதில் இவை பிரதான இடம் பெறுகின்றன. நிர்வாகத்தில் தொழிலாளர்களுக்கு கூடுதலான பங்கேற்பு என்பது தங்கள் நிறுவனத்தின் ஒரு அங்கமாக இருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்தும். சரியான நேரத்தில் உலகக்சுகாதாரக்கழகமும், இதயக்கூட்டமைப்பும் இணைந்து இதயத்தோடு பணியாற்றுங்கள் என்ற முழக்கத்தை வைத்துள்ளன.

Tuesday, September 22, 2009

கால்பந்து சங்கத்தலைவரானார் அத்வானி!



நரேந்திர மோடி குஜராத் கிரிக்கெட் சங்கத்தலைவராகத் தேர்வு - செய்தி.


இந்தச் செய்தியைத் தொடர்ந்து ஒருவரையொருவர் மிஞ்ச வேண்டும் என்ற ஆசை எழுவது இயல்புதானே... இதோ ஒரு கற்பனை.

கால்பந்து சங்கத்தலைவரானார் அத்வானி

ஏற்கெனவே தன்னைவிட மேலானவராக மோடியை சொந்தக் கட்சிக்காரர்களே சித்தரித்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வளவு நாள் அரசியலில் இருந்துவிட்டு ஒரு விளையாட்டுச்சங்கத்திற்குக் கூட தலைவராகவில்லையே என்று எதிர்கோஷ்டி பிரச்சனை எழுப்பிவிடக்கூடாது என்பதற்காக கால்பந்து சங்கத்திற்கு தலைவராகி விட்டார் அத்வானி. ராமர் கால்பந்து விளையாடிய இடங்களாகத் தேர்வு செய்து 108 இடங்களில் மசூதிகளும், சர்ச்சுகளும் எழுப்பப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் தெரிவித்தார். ஜின்னாவும், தானும் ஒருமுறை கால்பந்து ஆடியதை மிகவும் நெகிழ்ச்சியுடன் அத்வானி குறிப்பிட்டார்.
--------------

மாஜிக் கலைஞர்கள் சங்கத்தலைவராக பிரணாப்


நூறு நாளில் அதை வரவழைக்கிறேன், இதை வரவழைக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே மக்களை மயக்கிய பிரணாப் முகர்ஜி மாஜிக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராகியுள்ளார். வளர்ச்சி என்று சொல்லிக்கொண்டே தனது மாஜிக் தொப்பியிலிருந்து ஆட்குறைப்பு, பணிநீக்கம், சம்பள வெட்டு, விலைவாசி உயர்வு என்று அவர் எடுத்துவிடும்போது பிரமிப்பாகத்தான் இருக்கும். தன்னை விட புதிய தலைவர் நன்றாகவே ஏமாற்றுகிறார் என்று முன்னாள் தலைவரும், மாஜிக் கலைஞருமான ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்தார்.
----------------

கண்ணாமூச்சி விளையாட்டு சங்கத்திற்கு அழகிரி தலைவர்


தில்லியில் தனது துறை அதிகாரிகள் தேடிக் கொண்டிருக்கையில், இதோ, இதோ என்று சொல்லிக்கொண்டே மதுரையிலேயே பதுங்கி தனது கண்ணாமூச்சித் திறமையை வெளிக்காட்டிய அழகிரி அந்த விளையாட்டின் நிர்வாகத்தையே எடுத்துக் கொண்டுள்ளார். தனது கண்ணாமூச்சி விளையாட்டுக்கு ஐடியா கொடுத்தால் அவர்களுக்கு சங்கத்தில் பொறுப்பும் தரப்போகிறார். இதேபோல் கண்ணாமூச்சி காட்டிய முன்னாள் ஆட்டக்காரர்களைத் தேடிக் கொண்டிருக்கிறார். மறைந்து கொள்ளும் நேரத்தை நீட்டிக்கொள்வது எப்படி என்று கேட்கத்தான் அந்தத் தேடுதல்.

---------------
தடகளச் சங்கத்தலைவராக சு.சாமி முயற்சி

செல்லும் இடங்களில் எல்லாம் பிரச்சனை பண்ணி விரட்டியடிக்கப்பட்டு ஓடிக்கொண்டேயிருக்கும் அனுபவத்தால் தடகளச் சங்கத்திற்கு தலைவராகலாம் என்று சுப்பிரமணிய சுவாமிக்கு ஆசை வந்துள்ளது. தனது ஆசை நிறைவேற ஏற்கெனவே நெருக்கடியில் இருக்கும் பாஜகவில் சேரப்போகிறார். காந்தஹார் வரை ஓடிய ஜஸ்வந்த்சிங் இல்லாததும், பேட்டி என்றால் ஓட்டமாய் ஓடும் வெங்கய்யா நாயுடு அடக்கி வாசிப்பதும் இந்தப்பதவிக்கு போட்டியிருக்காது என்ற நம்பிக்கையை அவருக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

Thursday, September 17, 2009

அக்கா மாலாவையும், கப்சியையும் ரசிக்கலையா..?

பணத்தை அதிகமாகக் கொட்டி எடுக்கிறார்களோ அல்லது சிக்கனமாக எடுக்கிறார்களோ, தாங்கள் பார்க்கும் படங்களில் மருந்துக்காவது கதை இருக்கிறதா என்று ரசிகர்கள் பார்க்கும் காலமிது. இதனால் கதையைத் தேடி அலையும் திரைப்படத் துறையினர், புதிதாக எதுவும் கிடைக்காவிட்டால் பழைய கதையை மாற்றிப் போட்டாவது ஏதாவது பண்ணி விடலாமா என்ற முயற்சியில் இறங்கியுள்ளனர்.

பெரும் ஆரவாரத்துடன் வெளிவந்துள்ள கந்தசாமி திரைப்படத்தின் தோல்வியும் தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் யோசிப்பதற்காக ரூம் போடச் செய்துள்ளது. புதிதாகக் கதையைத் தேடுவானேன் என்று நினைத்த இயக்குநர் பி.வாசு ஏதாவது ஒரு வெற்றிப்படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரித்து விடலாமே என்று ரூம் வாடகையை மிச்சம் பிடிக்கத் திட்டமிட்டார்.

அவருக்கு உடனே தோன்றியது சந்திரமுகி படம்தான். ரஜினிகாந்தையே அதில் நடிக்க வைத்து விடலாம் திட்டமிட்டார். அவரோ எனக்காகக் காத்திராமல் வேறு கதையை எடுக்கலாமே என்று கூறிவிட்டாராம். மீண்டும் கதையைத் தேடத் தொடங்கி விட்டார் பி.வாசு. இவரைப்போல பலரும் கதைகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

வெறும் நாலு சண்டை, நாலு பாட்டு போதும் என்றிருந்த காலம்போய் இப்படியொரு காலம் வரும் என்பதை பலர் எதிர்பார்க்கவில்லை. மக்கள் விரும்புவதால்தான் மசாலாப்படங்களை எடுக்கிறோம் என்று சவடால் விட்டுக் கொண்டிருந்த பல இயக்குநர்களுக்கு புதிய சூழல் சவாலாக உருவாகியுள்ளது. கதைக்கா பஞ்சம்... ஹாலிவுட்காரர்கள் பொருளாதார நெருக்கடியை மையமாக வைத்து படத்தை எடுத்து, முதலாளித்துவம் - ஒரு காதல் கதை என்று கிண்டலாகவும் பெயர் வைத்துவிட்டார்கள்.

கதைகளை வீடுகளுக்குள்ளும், குடும்பங்களுக்குள்ளும் புகுந்து திருடிக் கொண்டு வருவதற்கு கொஞ்சம் இடைவெளி விட்டு சமூக நிகழ்வுகளை, நாட்டு நடப்புகளைப் படமாக்கலாமே... அக்கா மாலாவையும், கப்சியையும் இம்சை அரசன் 23ஆம் புலிகேசியில் மக்கள் ரசித்துப் பார்த்தார்களே...?

ஆந்திரா : அம்பலமாகும் தற்கொலை மோசடிகள்

ஹெலிகாப்டர் விபத்தில் ஆந்திராவின் முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர்ரெட்டி உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டவுடன் ஆந்திராவில் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டதாகவும், மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளிவந்தன.

ஆனால் மெயில் டுடே பத்திரிகை சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதில் பலர் இயற்கையாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது தெரிய வந்தது. செப்.3 அன்று ராஜசேகர்ரெட்டியின் உடல் கிடைத்ததாக செய்தி வெளியாகியது. அப்போதிருந்து தற்கொலை மற்றும் அதிர்ச்சி மரணங்கள் நடந்ததாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. சிலருக்கு அதில் சந்தேகங்கள் எழுந்தன. விசாரித்ததில் அந்த சந்தேகங்கள் சரிதான் என்று தெரிய வந்துள்ளது.

யாராவது இறந்துவிட்டார் என்று தெரிந்தவுடன் உள்ளுர் காங்கிரஸ்காரர்கள் அந்தக் குடும்பத்தினரைச் சந்தித்து பணம் கொடுத்து ராஜசேகர்ரெட்டி இறந்த அதிர்ச்சியில்தான் அவர் இறந்தார் என்று சொல்லச் செய்துள்ளனர். ஒரு சம்பவத்தில் மாநில அமைச்சர் ஒருவரே நேரிடையாகத் தலையிட்டார் என்று கூறப்படுகிறது. மறைந்த முதல்வரைச் சுற்றி ஒரு ஒளிவட்டத்தைத் தோன்றச் செய்யவும், ஜகன்மோகன் ரெட்டியை முதல்வராக்கும் முயற்சிகளை அதிகப்படுத்தவுமே இத்தகைய செய்திகள் மோசடியாகப் பரப்பப்பட்டன. காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக்குழு ஒவ்வொரு மணி நேரமும் உயிரிழப்புப் பட்டியலை வழங்கிக் கொண்டே இருந்தது.

அவர்களின் கடைசி பட்டியலின்படி மொத்தம் 462 பேர் உயிரிழந்தனர். அதில் 402 பேர் மாரடைப்பாலும், 60 பேர் தற்கொலை செய்தும் மரணமடைந்தனர். அவர்கள் அளித்த புள்ளிவிபரங்களின்படி, கிழக்கு கோதாவரி மாவட்டத்தில்தான் அதிகம் பேர் இறந்தனர். அங்கு 58 பேரும், வாரங்கல்லில் 48 பேரும், கரீம்நகரில் 46 பேரும் உயிரிழந்ததாக காங்கிரஸ் கட்சிக்காரர்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். வாரங்கல் மாவட்டத்தில் மெயில் டுடே பத்திரிகை மேற்கொண்ட ஆய்வு, சுமார் ஐந்தாயிரம் ரூபாய் வரை இறுதிச்சடங்களுக்காக காங்கிரஸ்காரர்களால் தரப்பட்டது என்பதும், அதற்குப்பதிலாக ராஜசேகர்ரெட்டியின் மறைவுதான் இறப்புக்குக் காரணம் என்று சொல்ல நிர்ப்பந்தித்ததும் அம்பலமாகியுள்ளது.

எடுத்துக்காட்டாக, வாரங்கல் மாவட்டத்தின் பரக்கலா தாலுக்காவைச் சேர்ந்த எழுபது வயதான உப்பலய்யா மாரடைப்பால் இறந்து போனார். அவர் திடீரென்று மாரடைப்பால் இறந்ததாக அவரது மகன் மல்லையா கூறினாலும், ஒருமாதமாகவே மூச்சுவிட முடியாமல் உப்பலைய்யா அவதிப்பட்டு வந்ததாக மல்லையாவின் மனைவி லட்சுமம்மா கூறியுள்ளார். ஜகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான சாக்சி தொலைக்காட்சியைத் தொடர்பு கொண்ட உள்ளுர் காங்கிரஸ்காரர்கள் ராஜசேகர்ரெட்டி மறைவின் அதிர்ச்சிச் செய்திதான் உப்பலய்யாவின் மரணத்திற்குக் காரணம் என்று செய்தி போடச் செய்துள்ளார்கள்.

40 வயதான பி.ஸ்ரீஹரி, 80 வயதான சுக்கா சாயம்மா என்ற பெண்மணி, 45 வயதான ராஜமவுலி ஆகியோரின் மரணங்களும் இயற்கையான மரணங்களே என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவர்களின் குடும்பங்களின் வாயை அடைக்க காங்கிரஸ்காரர்கள் பணம் தந்துள்ளார்கள். ஹனம்கொண்டாவைச் சேர்ந்த 25 வயதான தீகலா சிரஞ்சீவியின் கதை வித்தியாசமானது. அவருக்கென்று யாரும் கிடையாது. அதோடு அவர் ஒரு மனநோயாளி. செப்டம்பர் 5 அன்று அவர் திடீரென்று தனது உடலில் நெருப்பை பற்ற வைத்துக் கொண்டார். அவரது உடலை வாங்கவோ அல்லது எரிக்கவோ யாரும் இல்லாததால் உள்ளுர் மாணவர் காங்கிரஸ்காரர்கள், இவரும் ராஜசேகர்ரெட்டியின் மறைவின் துயரம் தாங்காததால்தான் தற்கொலை செய்து கொண்டார் என்று செய்தியைப் பரப்பிவிட்டார்கள்.

இத்தகைய மோசடியான தகவல்களைப் பரப்புவதில் ஜகன்மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள் பெரும்பங்கு வகித்துள்ளனர் என்பதும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Sunday, September 13, 2009

திருவாளர் முஸ்லிம் அவர்களே...



சக முஸ்லிம் ஒருவருக்கு பயப்படுவதில் 10 சதவீதமாவது முஸ்லிம்கள் அல் லாவுக்கு பயந்தார்கள் என்றால், அவர்கள் சிறந்த முஸ்லிம்களாகவும் உணர்வுமிக்க மனிதர்களாகவும் மாறுவார்கள் என்று பாலிவுட் திரைக்கதை ஆசிரியரும், பாடலாசிரியரும், கவிஞருமான ஜாவெத் அக்தர் பல மேடைகளில் பேசியிருக்கிறார். மும்பை, டில்லி, லக்னோ, கான்பூர், அலகாபாத், ஐதராபாத் மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் முஸ்லிம்களைச் சீண்டிவிடக்கூடிய இந்த வாக்கியங்களை அவர் வெளிப் படையாகப் பேசியிருக்கிறார். இந்த வசனங்களைக் கேட்டவர்களிடையே ஆமோதிக்கும் தலையாட்டமும், சங்கடம் நெளியும் புன்னகையும், சப்தமான வாவ் வாவ் குரல்களும் வெளிப்பட்டன.


இதே வசனங்களை ஜமியாத்-உல்-உலேமா-இ ஹிந்த் அமைப்பைச் சேர்ந்த மதிப்புமிக்க மவுலானா ஒருவரும், கடந்த ஆண்டு தனிப்பட்ட உரையாடலின் போது கூறினார். முஸ்லிம் தலைவர்களும் முஸ்லிம் ஊடகங்களும் எங்களுக்கு முன்நிற்கும் பெரும் தடைகள் என்றும் அவர் கூறினார். எது சொன்னாலும் நடந்தாலும் அல்லாவைக் கூறுகிறார்கள். எதிர் கருத்துக்களைக் கூற விரும்புவோர் அச்சப்படவேண்டும்.


முஸ்லிம்கள்தான் சக முஸ்லிம்களைக் கண்டு பயப்படுகிறார்கள் என்றால், தேசிய சட்டக்குழு யாரைக்கண்டு பயப்படுகிறது? வெளிப்படையாகக் கூறுவதைக் காட்டிலும் பொதுவான சங்கடங்களை ஏன் அது தேடிக்கொள்ள வேண்டும்? இருதார மணம் குறித்த முஸ்லிம்கள் சட்டம் குறித்த வழிவழிவந்த புரிதல்கள், அடிப்படையிலேயே தவறானதாகும். அது உண்மையான முஸ்லிம் சட்டங்களிடம் எழுத்திலும் உணர்விலும் முரண் பட்டு நிற்கிறது என்று அண்மையில் வெளியான தேசிய சட்டக்குழுவின் 277வது அறிக்கை குறிப்பிடுகிறது. நன்றாகவே சொல்லியுள்ளது. ஆனால் அந்த அறிக்கை அடுத்து என்ன சொல்கிறது? இருதார மணத்துக்காகச் செய்யப்படும் மோசடி மதமாற்றத்தைத் தடுக்க, இந்து குடும்பச் சட்டத்தில் ஒரு புதிய சட்டப் பிரிவை சேர்க்குமாறு அது முன்மொழிந்துள்ளது. ஆனால் “மத உணர்வுகளை” மனதிற்கொண்டு முஸ்லிம் தனிநபர் சட்டங்களில் அவசியம் என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றி அறிக்கை வாய் திறக்கவில்லை.


இஸ்லாமிய சட்டம், இந்து சட்டம், மதம் மாற்றும் சட்டம், சிறுபான்மையினர் சட்டங்கள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் தாஹிர் முகமது, இந்திய சட்டக்குழுவில் ஒரு உறுப்பினர் ஆவார். இஸ்லாமில் உள்ள இருதாரமுறை பற்றிய சட்டக்குழுவின் கணிப்புகளுக்கு இவர் ஒரு உந்து சக்தியாக இல்லாதபோதும் அதன் கணிப்பில் இவருக்கும் பங்கு உண்டு என்பதில் ஐயம் இருக்க முடியாது. அவரைப் பற்றி நாம் சிறிது சிந்திப்போம். அவர் தம்முடைய மனசாட்சிக்கும் மதத்துக்குமிடையே அல்லாடுகிறார். முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் உள்ள சில பிரிவுகள் இஸ்லாத்தினுடையதல்ல என்று அவருடைய இஸ்லாம் பற்றிய அறிவு கூறுகிறது. கடந்த சில பத்தாண்டுகளில், பல இஸ்லாமிய நாடுகளில் முல்லாக்களின் ஒப்புதலோடு பரந்துபட்ட சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன வென்று இஸ்லாமிய உலகம் பற்றிய அவருடைய அறிவு கூறுகிறது.


உதாரணமாக, பாகிஸ்தான், எகிப்து, இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் பெண்ணின் திருமண வயது குறைந்தது 16 ஆகும்; லெபனான், டுனீசியா மற்றும் சிரியாவில் இது 17 ஆகும்; அல்ஜீரியா, மொராக்கோ மற்றும் ஜோர்டானில் 18 ஆகும். ஆனால் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம், முஸ்லிம் சிறுமியர்களுக்கு பாலியல் விவாகம் குறித்த சட்டப்பிரிவுகளில் இருந்து விலக்களிக்கப்பட வேண்டுமென்று கேட்டது.


டுனீசியா, துருக்கி மற்றும் லெபனான் (சிலபிரிவினருக்கு) போன்ற நாடுகளில் பலதார மணம் தடை செய்யப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் தீவிரமான கட்டுப்பாடுகள் உள்ளன. பாகிஸ்தானில் சில நிபந் தனைகளுக்கு உட்பட்டு பலதார மணம் அனுமதிக்கப்படுகிறது. தற்போதைய மனைவியிடம் முன்அனுமதி பெற்றது குறித்து மத்தியக்குழுவை நம்பவைப்பது, உள்ளிட்ட சில நடைமுறைகள் பின்பற்றப் பட்ட பின்தான் அங்கு இருதாரமணம் அனுமதிக்கப்படுகிறது. மலேசியாவில் ஷரியாத் நீதிமன்றத்தின் சம்மதத்துடன் தான் இரண்டாவது திருமணம் செய்ய முடியும்.


இந்தோனேசியாவில் பொதுத்துறை யில் பணிபுரியும் பெண்கள் இரண்டாம் தாரமாக ஆக முடியாது. அத்துடன் வங்க தேசம், சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்சில் பொதுத்துறையில் ஊழியம் செய்யும் ஆண், இரண்டாம் திருமணம் செய்ய விரும்பினால், அதற்குரிய நிபந்தனைகளை நிறைவேற்றுவதுடன் மேலதிகாரிகளின் அனுமதியையும் பெறவேண்டும். இரண்டாம் திருமணத்திற்கு நீதிமன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும். 1990ல் இரண்டு முஸ்லிம் நீதிபதிகள் அடங்கிய டாக்கா உயர்நீதிமன்றப் பெஞ்சு அளித்த தீர்ப்பு குறிப்பிடத்தக்கது. குரானில் கூறப்படும் நியதிகள் அனைத்தும் ஒருதார மணத்தைப் பற்றியதே என்று அத்தீர்ப்பு கூறியது. மாறுபட்ட அரசியல் சூழலில் வங்கதேச உச்சநீதிமன்றம் அத் தீர்ப்பை தள்ளுபடி செய்தது.


ஆனால், ஏராளமான சலுகைகளைப் பெற்றுள்ள இந்திய முஸ்லிம் ஆடவருக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. இவை அனைத்துக்கும் மேலாக ஒரு முஸ்லிம் ஆடவர் ஒரே சமயத்தில் நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று இரண்டாண்டுகளுக்கு முன் ஐதராபாத்தில் ஒரு மதக்கட்டளை (பட்வா) பிறப்பிக்கப்பட்டது.


ஒரு முஸ்லிம் ஆடவர் தன்னிச்சைப் படி திருமணத்தை ரத்து செய்வது ‘தலாக்’ எனப்படும். அல்ஜீரியா, இந்தோனேசியா மற்றும் டுனீசியா ஆகிய நாடுகளில் இந்த உரிமைக்கு அங்கீகாரம் கிடையாது. நீதிமன்றங்கள் மூலமே விவாகரத்து பெறமுடியும். மொராக்கோவிலும் விவாக ரத்து நீதிமன்றங்களின் கறாரான கட்டுப் பாட்டில் உள்ளது. ஜோர்டான், லெபனான், மலேசியா மற்றும் சிரியாவில் விவாகரத்து பெற அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்யவேண்டும்.


பெரும்பாலான நாடுகளில் விவாகரத்துக்கு முன்பாக சமரச முயற்சிகள் செய்வது கட்டாயமாகும். ஈரானில் தலாக் கூறி யதற்கு அவசியமாக இரண்டு சாட்சிகள் தேவை. இந்திய முஸ்லிம்கள் மட்டுமே உடனடி தலாக் (மும்முறை) உரிமையை கட்டுப்பாடின்றி அனுபவித்து வருகின்றனர். எந்தவொரு நிலையிலும், குடித்திருந்தாலும், இல்லாவிட்டாலும், ஆத்திரப்பட்டோ அல்லது ஒருவித மனக்கிலே சத்திலோ அவர் எப்போது, எப்படி, தலாக்கை முகத்துக்கு எதிரிலோ, கடிதத்திலோ, தந்தியிலோ, தொலைபேசியிலோ, ஒரு மின் அஞ்சலிலோ அல்லது குறுஞ்செய்தி சேவையிலோ (எஸ்எம்எஸ்) முஸ்லிம் கணவர் அறிவிக்க முடியும்.


டுனீசியா, மொராக்கோ மற்றும் துருக்கியின் குழந்தைகளைப் பாதுகாத்து பராமரிக்கும் உரிமை, விவாகரத்து பெறும் இருவருக்கும் சமமாக அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் தகப்பனுக்கு மட்டுமே ‘இயல்பான உரிமை’ அளிக்கப் பட்டுள்ளது. பாலியல் நீதியைப் பொறுத்த வரை பாரம்பரிய மன்னராட்சி கொண்ட மொராக்கோ முஸ்லிம் பெண்களுக்கு சிறந்த இடமாகத் திகழ்கிறது.


மன்னர் ஆறாம் முகமது, அக்டோபர் 2003ல் அறிவித்த குடும்ப நியதிகளை பிப்ரவரி 2004ல் மொராக்கோ நாடாளுமன் றம் ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. அதன்படி திருமண ஒப்பந்தத்தில் ஆணும், பெண்ணும் சம கூட்டாளிகளாவர். கணவன் இனியும் குடும்பத்தலைவன் என்று கூறமுடியாது. கணவன் -மனைவி இருவருமே குடும்பத்துக்கு கூட்டு பொறுப்பாளிகளாவர்.


சுருக்கமாகச் சொல்வதென்றால், ஏரா ளமான முஸ்லிம் நாடுகளில் பெண்களுக்கு கிடைக்கும் உரிமைகளைவிடக் குறைவாகவே இந்திய முஸ்லிம் பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன என்பது விந்தையான விஷயம். கற்றறிந்தவரும் சிறந்த முஸ்லிமுமான டாக்டர் முகமது இந்தியாவில் இஸ்லாத்தின் பெயரால் ஆணாதிக்கம் மேலோங்கி நிற்பதை வேதனையோடு உணராமல் இருக்க முடியாது. அவர்கள் போற்றித்துதிக்கின்ற நம்பிக்கைகளைப் பற்றிய அறியாமை கொண்ட முஸ்லிம்கள் அல்லது வெளி வேஷமிட்டு நம்பிக்கையின் மேல் சபதம் செய்தவர்களுக்கு மத்தியில் வாழும் அவர், தனது வார்த்தைகளை அளந்து பேசுவது சரி என்று எண்ணுகிறார்.


இந்திய நாட்டின் திருவாளர் முஸ்லிம், இஸ்லாத்தில் மதகுருக்களுக்கு இடமில் லை என்று பெருமையுடன் கூறுவார். ஆனால், இஸ்லாத்தைப் பற்றிய சகல ஞானத்தையும் அவர் கேள்விக்குள்ளாக்கும் மதகுருக்களுக்கு அவுட்சோர்சிங் செய்துவிடுகிறார். அதன் விளைவாக இஸ்லாத்தைப்பற்றி, மோட்சத்துக்குப் போக தகுதியான பாஸ்போர்ட் இஸ்லாம் என்பதைத் தவிர வேறு எதுவும் அவருக்குத் தெரியாது.


திருவாளர் முஸ்லிம் அவர்களே, பாலின அநீதியுள்ள இஸ்லாம் வெட்கப்பட வேண்டியதொன்றே தவிர பெருமைக்குரியது அல்ல.


ஜாவேத் ஆனந்த்

கட்டுரையாளர், மதவாத எதிர்ப்பு இதழின் கூட்டாசிரியரும், மதச்சார்பற்ற ஜனநாயகத்துக்கான முஸ்லிம்கள் அமைப்பின் பொதுச்செயலாளரும் ஆவார்.

தமிழாக்கம்: தாஸ்

Thursday, September 10, 2009

கமலுக்கு ஒளிவட்டம் தேவையா...?


களத்தூர் கண்ணம்மாவில் துவங்கிய கமல்ஹாசனின் திரைப்பட வாழ்க்கை ஐம்பது ஆண்டுகளைத் தொட்டுவிட்டது. சாதனைகள், வெற்றிகள், தோல்விகள், படிப்பினைகள் என்று பல மட்டங்களைத் தொட்டு இன்றும் அவருக்கென்று திரைப்பட உலகில் ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார் கமல்ஹாசன்.


வித்தியாசமான படங்களைத் தர வேண்டும் என்ற தாகத்தை உடையவர்களில் ஒருவர் என்று சொல்வதை விட, அந்தத் தாகத்தைக் கொண்டவர்களில் பலருக்கு உத்வேகம் அளிக்கக்கூடியவராகவும் இருப்பவர் கமல்ஹாசன். கமல்ஹாசனின் பரம ரசிகனுக்கு சகலகலா வல்லவன் படம் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் வர்த்தக ரீதியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இத்தகைய படங்கள் அவருக்கு அவ்வப்போது தேவைப்பட்டன.


பெரும் மகிழ்ச்சிகரமான செய்தி அவரிடம் சொல்லப்பட்டபோது எந்தவித நியாயமும் இல்லாத ஒரு கேள்வியும் அவரிடம் எழுப்பப்பட்டது. மூன்றாம்பிறை படத்தில் நடித்ததற்காக தேசிய அளவிலான சிறந்த நடிகர் விருது அவருக்குக் கிடைத்தது என்பதுதான் அந்த மகிழ்ச்சிகரமான செய்தி. ஆனால் அந்தப்படத்தில் நடித்த ஸ்ரீதேவிக்குக் கிடைக்காமல் இவருக்குக் கிடைத்தது எந்தவிதத்தில் நியாயம் என்ற கேள்வியும் அப்போது எழுப்பப்பட்டது.
பரபரப்புக்காக செய்திகளைப் போட்ட பத்திரிகைகள், அவரிடம் பேட்டி என்ற பெயரில் கேள்வியையும் எழுப்பின. சிரித்துக்கொண்டே பதில் சொன்னார். எனக்குக் கிடைத்துள்ள சிறந்த நடிகருக்கான விருது, நடிகைக்கான விருதல்ல என்று.
கமல்ஹாசனின் திறமை ஒருபோதும் குறைத்து மதிப்பிடப்பட்டதில்லை. ஆனால் அவரைச்சுற்றி ஒரு ஒளிவட்டத்தை எழுப்பவும் சில முயற்சிகள் நடந்தன. குரு திரைப்படத்தில் நாயகி ஸ்ரீதேவியைத் தூக்கிக்கொண்டே கண்ணாடியை உடைப்பது போன்ற காட்சி. அதற்கு டுப் போட விரும்பாத கமல் தானே உடைப்பதாகக் கூறி அதில் நடித்திருக்கிறார். உடைத்தபோது அடிபட்டு அவரது கையில் ரத்தம் கொட்டியது. இதுதான் நடந்தது.
ஆனால் அவர் உடைத்தபோது அந்த உடைசல் இதயம் போன்ற வடிவத்தைக் கொண்டிருந்தது என்று வதந்தி பரவியது. அவர் காதல் இளவரசன். அதனால்தான் உடைந்த கண்ணாடியில் இதய வடிவம் இருந்தது என்றெல்லாம் விவாதத்தைக் கிளப்பினார்கள்.

Wednesday, September 9, 2009

கொலைகார (அமெரிக்க) மருத்துவர்கள்!


அமெரிக்க மத்தியப் புலனாய்வுக்குழு(சிஐஏ)வில் இணைந்து பணியாற்றும் மருத்துவர்கள் சித்திரவதை செய்யும் கொடுர செயல்களில் பெரும் பங்கு வகித்துள்ளார்கள் என்பது அம்பலமாகியுள்ளது. இது குறித்த ஆய்வை மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் என்ற அமைப்பு மேற்கொண்டது. 1977 ஆம் ஆண்டில் சமாதானத்திற்கான நோபல் பரிசை இந்த அமைப்பும் பகிர்ந்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. சிஐஏவுடன் இணைந்து பணியாற்றிய மருத்துவர்கள் கடுமையான மனித உரிமை மீறல்களை செய்துள்ளார்கள் என்று இந்த அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆகஸ்ட் 31 அன்று இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் உத்தரவுப்படி வெளியாகியுள்ள சிஐஏயின் ரகசிய ஆவணங்களின் அடிப்படையில்தான் இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. "மேம்படுத்தப்பட்ட விசாரணை உத்திகள்" என்ற பெயரில் மருத்துவர்களையும் இணைத்துக் கொண்டு அமெரிக்க புலனாய்வுத்துறையினர் கொடுரமான சித்தரவதைகளை மேற்கொண்டுள்ளனர். சித்தரவதை உத்திகளை வடிவமைத்துக் கொடுத்து, அதை நடைமுறைப்படுத்திக் காட்டுவதோடு, எந்தளவுக்கு அது உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் மருத்துவர்களைக் கொண்டு கண்காணித்துள்ளார்கள். போதிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லையென்றால் உத்திகளைக் கடுமையாக்கும் வேலையும் மருத்துவர்களிடம் விடப்பட்டது.

நேர்மையற்ற முறையில் சட்டவிரோதமான செயல்களில் மருத்துவர்கள் எவ்வாறு இறங்கினார்கள் என்பதை சிஐஏயின் ரகசிய ஆவணங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. பொதுவாக, விசாரணையின்போது கைதிகளுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதைத் தீர்ப்பதற்காகவே மருத்துவர்களை அழைப்பது வழக்கம். ஆனால் எந்த அளவுக்கு சித்தரவதையை அதிகரித்துக் கொள்ள முடியும் என்பதைத் தீர்மானிக்கவே அவர்கள் சித்தரவதையின்போதே நாற்காலி போட்டு அருகில் அமர்ந்து கொள்கிறார்கள். தலையிலிருந்து கழுத்துவரை உறை போட்டு மறைப்பது, உணவு தராமல் ஏமாற்றுவது, உடலோடு சேர்த்து துணியைக் கட்டிவிட்டு இயற்கை உபாதைகளை தீர்த்துக் கொள்ளச் செய்து அதை சுத்தம் செய்ய வாய்ப்பு தராமல் இருப்பது போன்ற கொடுரங்களை நிகழ்த்தச் செய்கிறார்கள். இந்த உத்தியெல்லாம் பழையதுதான். ஆனால் ஒரு கூண்டில் அடைத்து வைத்து செய்யச் சொல்லும் புதிய உத்தியை மருத்துவர்கள்தான் சிஐஏக்காரர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார்கள்.

அதோடு, ஒரே சமயத்தில் இரு கொடுமைகளைச் செய்தால் அதிக பலன் கிடைக்கும் என்று உயிர்களைக் காப்பாற்றுவதற்காக படித்துப் பட்டம் பெற்ற இந்த மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளார்கள். அதோடு, ஒவ்வொரு கொடுர செயலுக்கும் எவ்வகையான விளைவு இருக்கும் என்றும் அந்த மருத்துவர்கள் ஆய்வு(!) செய்துள்ளார்கள். குறிப்பாக, கூண்டிற்குள் அடைத்து தலையிலிருந்து கழுத்துவரை துணியால் மூடிவிடுவதால் வாழ்க்கை குறித்த அச்சத்தை ஏற்படுத்த முடியும். உடல் ரீதியாக, மூச்சுவிடுவதை சிரமமாக்கும் என்பதைத்தவிர வேறு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும் மனரீதியாகப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

கவனம் சிதறுதல், ஞாபக மறதி, வாய்விட்டு புலம்புதல், குழறும் பேச்சு, எதையாவது எதிர்பார்த்துக் கொண்டே இருக்கும் தன்மை, அசாதாரண நடவடிக்கை மற்றும் தற்கொலையை நோக்கி செல்லுதல் போன்ற விளைவுகள் சித்தரவதைக்கு உள்ளாக்கப்படுபவரிடம் ஏற்படுகின்றன என்கிறது அந்தக் கொடுர மருத்துவர்களின் குறிப்புகள். மனரீதியாக மட்டுமில்லாமல் உடல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்த திரவ உணவை மட்டுமே தரும் பழக்கத்தை உண்டாக்கியுள்ளார்கள். உடல் ரீதியாக சக்தி இழக்கச்செய்து அதன் மூலம் கைதிகளை தங்கள் வழிக்கு வரவைக்கும் உத்தியாக இதைக் கையாண்டுள்ளார்கள்.

எவ்வளவு திடமானவராக இருந்தாலும், அவரைத் திணறச் செய்வதற்காக துணியைக் கட்டிவிட்டு அதிலேயே இயற்கை உபாதைகளைத் தீர்த்துக் கொள்ளச் செய்யும் முறையைக் கடைப்பிடித்துள்ளார்கள். 36 மணிநேரம் வரை இந்த சித்தரவதை நீடித்துள்ளது. சிறுநீரகக்கோளாறு, வயிற்றுப்புண், தோல்வியாதி போன்றவற்றை உருவாக்கி அதன் மூலம் கைதிகளை சோர்வடையச் செய்யும் உத்தியாக இதைக் கடைப்பிடித்துள்ளார்கள். சில சமயங்களில் துணியைக் கட்டிவிடாமல், நின்றுகொண்டே இயற்கை உபாதைகளைத் தீர்த்துக் கொள்ளச் செய்திருக்கிறார்கள். இதெல்லாம் மருத்துவர்களின் உதவியோடு நடந்திருக்கிறது. அதுசரி.. அமெரிக்க அரசு என்ன செய்யப்போகிறது? அதான் வெளியிட்டாச்சுல்ல... என்று கூறி விட்டு நகர்ந்துவிட்டது. அமெரிக்க மக்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதுதான் இன்னும் தெளிவாகவில்லை.

Tuesday, September 8, 2009

மோடியின் அலமாரியிலிருந்து அடுத்த எலும்புக்கூடு!


சோராபுதீன் ஷேக் என்பவர் கொல்லப்பட்டது போலி மோதலில்தான் என்று ஆதாரங்கள் வெளிவந்து அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குமாறு குஜராத் அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், 2004 ஆம் ஆண்டில் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் கொல்லப்பட்டதும் போலி மோதல்தான் என்பது அம்பலமாகியுள்ளது. சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களில் அரசு எந்திரம் பெரும் அளவிற்கு தவறான வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கான சாட்சியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருக்கின்றன. இவற்றோடு காந்தி பிறந்த மண்ணில் கள்ளச்சாராயத்தை ஆறாகப் பெருகி ஓடச்செய்ததும் மோடியின் மேற்பார்வையில்தான் என்ற செய்தி நிர்வாகம் செயலிழந்து போயிருப்பதையே காட்டுகிறது.


ஜூன் 2004 ஆம் ஆண்டில் நடந்த மோதலில் குஜராத் முதல்வர் மோடியைக் கொலை செய்ய சதி செய்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி வெளிவந்தது. மும்பையைச் சேர்ந்த இஷ்ரத், கேரளாவைச் சேர்ந்த கோபிநாத் பிள்ளையின் மகன் ஜாவேத் ஷேக், பாகிஸ்தானைச் சேர்ந்த அம்ஜத் அலி ரானா மற்றும் ஜிஷான் ஆகிய நான்குபேரும் மோடியைக் கொலை செய்யும் நோக்கத்துடன் வந்தார்கள் என்றும், அகமதாபாத் நகருக்கு வெளியில் நடந்த மோதலில் இந்த நான்கு பேரும் கொல்லப்பட்டார்கள் என்றும் அப்போது காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

இஷ்ரத்தின் உடலை வாங்குவதற்காக வந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள், முதன்முறையாக லஷ்கர்-இ-தொய்பா என்ற பெயரைக் கேள்விப்படுகிறோம் என்று கதறி அழுதனர். மோடியின் தலைமையில் மாநில அரசு இருப்பதால் நீதி கிடைக்காது என்ற எண்ணத்தில் அவர்கள் மும்பை திரும்பினர். ஆனால் குஜராத் படுகொலைகள் மற்றும் அதைத்தொடர்ந்து நடக்கும் போலி மோதல்கள் குறித்து உச்சநீதிமன்றம், குஜராத் உயர்நீதிமன்றம் போன்றவை பல்வேறு வழக்குகளை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளன. இஷ்ரத் கொலை சம்பந்தமாகவும் குஜராத் உயர்நீதிமன்றம் அத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ள வேளையில்தான் அகமதாபாத் மாநகர் மாஜிஸ்ரேட் எஸ்.பி.தமங்கின் விசாரணை அறிக்கை வெளிவந்துள்ளது.

243 பக்கங்களைக் கொண்ட இந்த விசாரணை அறிக்கையில், காவல்துறை அதிகாரி வன்ஜாரா உள்ளிட்ட பலர்தான் நான்கு பேரையும் கொலை செய்துள்ளனர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் சிலர் ஏற்கெனவே சோராபுதீன் வழக்கு தொடர்பாக சிறையில் உள்ளனர். முதல்வரைத் திருப்திப்படுத்தி பதவி உயர்வைப் பெறுவதே இந்த காவல்துறை அதிகாரிகளில் நோக்கமாக இருந்திருக்கிறது என்று குற்றம் சாட்டும் மாஜிஸ்ட்ரேட் தமங், இரு பக்க அளவிலான காவல்துறையினரின் பெயர்ப்பட்டியலையும் பதிவு செய்துள்ளார். ஜூன் 12, 2004 அன்று இந்த நான்கு பேரையும் குஜராத் காவல்துறை கடத்திக் கொண்டு வந்துள்ளது. காவல்துறைப் பாதுகாப்பில் இருக்கும்போதே ஜூன் 14 இரவில் அந்த நான்கு பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் மறுநாள் காலையில் மோதல் நடந்ததாகக் காவல்துறையினர் ஜோடித்துள்ளனர். இதற்காக ஏற்கெனவே உயிரிழந்த இஷ்ரத்தின் உடலைத் தோட்டாக்களால் துளைத்துள்ளனர். அகமதாபாத்திலிருந்து மும்பை சென்ற இவர்கள் காரில் குண்டுகளும், துப்பாக்கிகளும் இருந்ததாக காவல்துறையினர் கூறியிருந்தனர். அது காவல்துறையாலேயே வைக்கப்பட்டது என்று தமங் அறிக்கை அம்பலப்படுத்துகிறது. அதோடு, இஷ்ரத் ஜஹான் மற்றும் ஜாவேத் ஷேக் ஆகிய இருவரையும் பாகிஸ்தானிலிருந்து இயங்கும் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புபடுத்துவதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்றும், மோடியைக் கொல்வதற்காகவே அவர்கள் குஜராத்திற்கு வந்தார்கள் என்பதையும் நிரூபிக்கவில்லை என்றும் அந்த அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

குஜராத் படுகொலை தொடர்பான ஏராளமான வழக்குகள் இழுத்து மூடப்பட்டன. அவற்றில் சில வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் தலையீடு காரணமாக மீண்டும் விசாரிக்கப்படுகின்றன. பாரபட்சமில்லாத ஒவ்வொரு விசாரணையும் மோடி தலைமையிலான பாஜக அரசின் வெறியாட்டத்தையே அம்பலப்படுத்தி வருகிறது. இவர்களின் இந்த மதவெறியை தங்கள் வளர்ச்சிக்காக காவல்துறையினர் பயன்படுத்த முயற்சித்துள்ளனர். அப்பாவி மக்கள், குறிப்பாக அப்பாவி சிறுபான்மை மக்கள் இந்த இரு தரப்பின் வெறியாட்டங்களுக்கு பலியாகியுள்ளனர். மோடியின் அலமாரியிலிருந்து மேலும் எலும்புக்கூடுகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Monday, September 7, 2009

இதுதான்(ங்க!) அரசாங்கம்...!

நெருக்கடி...
நெருக்கடி...
நெருக்கடி...
இந்த வார்த்தைதான் இன்றைய தினம் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளை உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா ஆட்டம் கண்டால் தென் அமெரிக்க நாடுகள் உருளத் தொடங்கிய காலமும் இருந்தது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் பாதிக்கப்பட்டாலும், சமாளிக்க முடியாத நிலைக்கெல்லாம் தென் அமெரிக்க நாடுகள் போய் விடவில்லை. ஐ.எம்.எப். கடனை ஏன் ஒரே தவணையில் திருப்பிக் கட்டுகிறீர்கள் என்று அர்ஜெண்டினா ஜனாதிபதியைப் பார்த்துக் கேட்டபோது, எங்கள் நாட்டு தலைவிதியை நாங்களே நிர்ணயிக்க விரும்புகிறோம் என்று பதிலளித்தார். அவர் கூறியது ஒரு சில ஆண்டுகளிலேயே நிரூபணம் ஆகிவிட்டது. நெருக்கடி காலத்திலும் அனைத்து தென் அமெரிக்க நாடுகளும் அடிப்படைத்துறைகளில் செய்த செலவைக் குறைக்கவில்லை.
வெனிசுலாவின் தேசிய புள்ளியியல் மையத்தின் தலைவர் எலியாஸ் எல்ஜூரி இதை விளக்குகிறார். உலகப் பொருளாதார நெருக்கடிக் காலகட்டத்தில் தனது வளர்ச்சியை வெனிசுலா தக்க வைத்துக் கொண்டுள்ளது. இயற்கை வளங்களை அன்னிய நிறுவனங்கள் தங்குதடையின்றி அள்ளிக் கொண்டு சென்ற காலத்திற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இயற்கை வளங்கள் சேமிக்கப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வருமானம் மக்களின் நலன்களுக்காக செலவிடப்பட்டது. இந்தக் காலகட்டத்திலும் அந்தச் செலவு குறையவில்லை. கேந்திரத்துறைகளில் அரசின் முதலீடும் குறைக்கப்படவில்லை என்கிறார் எலியாஸ். நாட்டின் இயற்கை வளத்தால் கிடைக்கும் வருமானத்திற்கும், மக்களுக்கும் உள்ள தொடர்பு தற்போதுள்ள அரசின்கீழ் பெருமளவு அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் பெரும் நெருக்கடியைச் சந்தித்ததால் பல்வேறு இடங்களில் தொழிற்சாலைகளை இழுத்து மூடிய அமெரிக்க நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் வெனிசுலாவில் உள்ள தொழிற்சாலையைத் திறக்கப்போகிறது. வெனிசுலா மக்களின் வாங்கும் சக்தியில் எந்தப் பாதிப்பும் இல்லை என்பதால்தான் தொழிற்சாலையை மீண்டும் இயக்க முடிவு செய்திருக்கிறார்கள். ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 140 டாலரைத் தொட்டபோது வெனிசுலாவின் பட்ஜெட் போடப்பட்டது. தற்போது விலை பெரும் அளவில் சரிந்துள்ளதால் பட்ஜெட் கணக்கை சிறிது மாற்றியமைத்துள்ளார்கள். அப்போது ஒதுக்கப்பட்ட அளவிற்கு நிதியை பல்வேறு துறைகளுக்கும் வழங்க முடியாவிட்டாலும் குடியிருப்பு வசதி மற்றும் கல்வி ஆகிய இரண்டுக்குமான ஒதுக்கீட்டில் கைவைப்பதில்லை என்று சாவேஸ் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், இந்த இரண்டு துறைகளின் முக்கியத்துவத்தைக் கருதி அரசின் முதலீட்டை அதிகரிக்கப்போகிறார்கள். கடந்த மாதத்தில் புதிய கல்வி மசோதா ஒன்றை வெனிசுலா நாடாளுமன்றம் நிறைவேற்றியது. அதிலும் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று கூறியிருந்தது. 20 சதவிகித நிதியை கல்விக்காக ஒதுக்கி வெனிசுலா அரசு சாதனை பண்ணியுள்ளது. வீட்டு வசதி மற்றும் பொதுப்பணித்துறைக்காக பத்து சதவிகிதமும், 50 சதவிகிதத்தை மாநில மற்றும் உள்ளாட்சி அரசுமைப்புகளுக்கும் ஒதுக்கியுள்ளார்கள். எஞ்சியுள்ள 20 சதவிகிதம் சுகாதாரம் மற்றும் விவசாயத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் முதல் பாதியை விட நடப்பாண்டில் குறைவாகவே வெனிசுலா அரசு செலவு செய்துள்ளது. இதை சமாளிக்க சிறிதளவு விற்பனை வரியை அரசு விதித்தது.
தற்போது எண்ணெய் விலை மேலும் உயர்ந்துள்ளது. ஒரு பீப்பாயின் விலை 40 டாலர் வரை சரிந்த நிலை மாறி தற்போது 65க்கும், 70க்கும் இடையில் அங்குமிங்குமாய் மாறிக் கொண்டிருக்கிறது. வெனிசுலாவின் ஏற்றுமதியில் எண்ணெயின் பங்கு 90 சதவிகிதமாகும். எண்ணெய் விலை சற்றே ஏறியதால் வெனிசுலா அரசுக்கும் நிதி வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. அதனால்தான் உடனடியாக வீட்டுவசதி மற்றும் கல்வி ஆகிய துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அரசு அதிகப்படுத்திவிட்டது. எந்தவித பயனுமின்றி சும்மா கிடக்கும் அரசு மற்றும் தனியார் நிலங்களை அடையாளங்கண்டு அதில் ஏழை மக்களுக்கு குடியிருப்பு வசதியை ஏற்படுத்தித்தர அரசு திட்டம் தீட்டியுள்ளது.
அதேவேளையில் சாமான்ய மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க, குறைந்தபட்ச ஊதியத்தின் வரம்பையும் உயர்த்தியுள்ளார்கள். குறைந்தபட்ச மாத ஊதியம் 447 டாலர்(22 ஆயிரத்து 350 ரூபாய்) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் தேதியன்று அரசுத்தரப்பில் ஒரு உறுதிமொழியை அளித்தார்கள். கூடிய விரைவில் குறைந்தபட்ச ஊதியத்தில் 20 சதவிகித உயர்வு அளிக்கப்படும் என்பதுதான் அந்த உறுதிமொழி. தற்போதுள்ள மேற்கொண்டுள்ள உயர்வோடு அந்த உறுதிமொழி நிறைவேறிவிட்டது. தென் அமெரிக்க நாடுகளின் மக்கள் இடதுசாரிக்கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதிகளைத் தேர்ந்தெடுத்தது சரியான முடிவு என்பதையும் இந்த நடவடிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன.

Saturday, September 5, 2009

அணு உலைகள் : இந்த சரணாகதி ஏன்?


அனைத்து எதிர்ப்புகளையும் மீறி அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றிய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அணுசக்தி உற்பத்திச் சந்தையையும் அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதேவேளையில், இதில் இறங்கும் அமெரிக்க நிறுவனங்கள் லாபத்தை அப்படியே எடுத்துக் கொள்ளலாம். நஷ்டம் வந்தால் அதற்கு வரம்பு விதித்துக்கொள்வது அல்லது அப்படியே அணுஉலையை செயல்படுத்துபவர் தலை மீது சுமத்திவிடுவது என்ற வசதிகளை இந்திய அரசு செய்து கொடுக்க முனைந்துள்ளது. அமெரிக்க நிறுவனங்களுக்கு கிடைக்கப்போகும் இந்த வசதிகள் பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவிலிருந்து வரும் அணு உலை நிறுவனங்களுக்கு கிடையாது.


அணுஉலைகளால் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அதை வழங்கிய அமெரிக்க நிறுவனங்கள் தர வேண்டிய இழப்பீடு 45 கோடி டாலரைத் தாண்ட வேண்டியதில்லை என்று வரம்பு விதிக்க முயற்சிக்கிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் குற்றம் சாட்டியிருந்தார். அதிலும் சலுகை அளிக்கலாமே என்று இந்தியத் தொழிலதிபர்களின் கூட்டமைப்பில் ஒன்றான ஃபிக்கி கேட்டுள்ளது. அணுஉலையை செயல்படுத்தும் இந்திய நிறுவனமும், அணு உலையை வழங்கிய அமெரிக்க நிறுவனமும் அதைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொடுத்தால் என்ன என்பதுதான் ஃபிக்கி வழங்கும் திட்டம். மொத்தத்தில் அமெரிக்க நிறுவனங்கள் இந்திய மக்களின் தலையில் மொட்டை அடிக்க அரசும், இந்திய முதலாளிகளும் தண்ணீர் தெளித்து தயார் செய்து கொண்டிருக்கிறார்கள்.


கேட்டால், இத்தகைய சலுகைகளை வழங்காவிட்டால் முதலீடு வராதே என்று அங்கலாய்க்கிறார்கள். ஆனால் சலுகைகள் தரப்படுவது அமெரிக்க நிறுவனங்களுக்கு மட்டும்தான் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். பிரான்ஸ் மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடமிருந்து இழப்பீடு பெறுவதில் எந்தவித வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை. இதிலும் தனியார் பாசம் வழிந்து ஓடுகிறது. பிரான்ஸ் மற்றும் ரஷ்ய நிறுவனங்கள் முழுமையாக அல்லது பெரும்பகுதி அரசின் வசம் உள்ளவையாகும். ஆனால் அமெரிக்க அணுஉலை நிறுவனங்கள் முழுக்க, முழுக்க தனியாருக்குச் சொந்தமானவையாகும். அமெரிக்க நிறுவனங்களுக்கு மட்டும் சலுகை வழங்க வேண்டும் என்று இந்திய அரசும், இந்திய முதலாளிகளும் முனைந்திருப்பதற்கு இது பிரதான காரணமாகும். இந்திய அணு மின்சாரச்சந்தையின் மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் என்று கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய சந்தையை அமெரிக்க நிறுவனங்கள் இழந்துவிடுமே என்று இந்த இரு தரப்பும் கவலைப்படுகிறது.


மற்றொரு ஆலோசனையும் முன்வைக்கப்படுகிறது. அதுவும் ஃபிக்கி தரப்பிலிருந்துதான் வருகிறது. இந்திய மின்கழகத்தின் முன்னாள் தலைவர் எ°.கே.ஜெயின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளித்துள்ள பரிந்துரையில், அணுஉலைகளால் ஏற்படும் பாதிப்புக்கு இந்தியாவில் அந்த அணுஉலைகளை இயக்குபவர்களை இழப்பீடு வழங்கச் செய்வதுதான் பொருத்தமானதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தங்கள் மோசடியை மறைப்பதற்காக அமெரிக்க .நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, அனைத்து அன்னிய நிறுவனங்களுக்குமே இந்த சலுகையைத் தந்துவிடலாம் என்று அக்குழு கூறுகிறது. அமெரிக்காவின் ஜி.இ மற்றும் வெஸ்டிங்ஹவுஸ், பிரான்சின் அரேவா மற்றும் ரஷ்யாவின் ரோசாடோம் ஆகிய நிறுவனங்கள் கொள்ளை லாபத்தை சம்பாதிக்க இந்த பரிந்துரைகள் உதவப் போகின்றன.


அணுஉலைகளில் விபத்து ஏற்படுவதற்கு அதன் கருவிகள் பழுதுபடுவதோ அல்லது செய்யப்பட்ட வடிவத்தில் ஏற்பட்ட கோளாறோதான் காரணமாக இருக்க முடியும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். அணுஉலையை வழங்கிய நிறுவனம்தான் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவதற்கு இதுதான் காரணமாகும். சர்வதேச அளவில் இதுதான் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். அதைத்தாண்டி, செயல்படுத்தும் நிறுவனத்தைப் பொறுப்பாக்கும் வேலை 1960, 1997 ஆகிய ஆண்டுகளிலும் நடந்துள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை, இந்திய அணுமின்கழகம் என்ற அரசு நிறுவனம்தான் உலைகளை கையாளப்போகிறது. இழப்பீட்டுக்கான வரம்பை ஒப்புக்கொண்டால் விபத்து ஏற்படும் வேளையில் அன்னிய நிதியுதவி கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் உதிர்க்கப்படுகின்றன.


1984 ஆம் ஆண்டில் நடந்த போபால் எரிவாயு விபத்தில் சுமார் 15 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 50 ஆயிரம் பேர் நிரந்தர ஊனமானார்கள். இப்போது பிறக்கும் குழந்தைகளுக்கும் அதன் பாதிப்புகளின் தாக்கம் உள்ளது. இந்த விபத்திற்கு 47 கோடி டாலர் இழப்பீடு வழங்கப்பட்டது. அதுவும் போதாது என்பதுதான் வல்லுநர்களின் கருத்து. அணுஉலைகளில் விபத்து ஏற்பட்டால் இதைப்பல மடங்கு அதிகமான பாதிப்புகள் ஏற்படும். இதற்கு முன்பாக பல நாடுகளிலும் ஏற்பட்டுள்ள விபத்துகள் இதை உறுதிப்படுத்துகிறது. அத்தகைய பாதிப்புகளை சமாளிப்பதற்கான இழப்பீட்டை வெறும் 45 கோடி டாலர் என்று மட்டும் நிர்ணயிப்பது கடுமையான விளைவுகளை உருவாக்கிவிடும். இது நாட்டின் வருங்காலம் பற்றியது என்பது காங்கிரஸ் மற்றும் அதோடு கூட்டு சேர்ந்து ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்கள் ஆகியோருக்கு நினைவுக்கு வந்தால் சரி.

Friday, September 4, 2009

அவர்கள் இல்லை, அதனால்தான்...

அமெரிக்காவின் பகாசுர தொலைத்தொடர்பு நிறுவனமான ஏடி அண்டு டி நிறுவனம் நேரடியாக பொதுத்துறை பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை அணுகியுள்ளது. அழையா விருந்தாளிகளாக வந்த அவர்கள் கதவைத்தட்டாமலேயே உள்ளே நுழைந்துள்ளனர். உங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்ய ஆர்வமாயிருக்கிறோம் என்று சொல்லியிருகிறார்கள். பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கும் வேளையில், யாரைக் கேட்டு உள்ளே நுழைந்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்னும் பங்குகள் விற்பது குறித்து முடிவே எடுக்கப்படவில்லை. ஆனால் பல் பிடித்துப் பார்க்கும் வேலையில் அமெரிக்க நிறுவனம் இறங்கிவிட்டது. அரசு இதுவரையிலும் எதையும் சொல்லாத நிலையில், அதன் அனுமதியுடன்தான் ஏடி அண்டு டி நிறுவனம் களத்தில் இறங்கியிருக்க வேண்டும் என்பது தெரிகிறது. பி.எஸ்.என்,எல். நிர்வாகம் பளிச்சென்று பதில் சொல்லியிருக்கிறது. நாங்கள் எதையும் முடிவு செய்ய முடியாது. அரசின் கதவுகளைத் தட்டுங்கள் என்று கூறிவிட்டார்கள். ஆனால் அரசோடு உட்கார்ந்து மூக்கு பிடிக்க சாப்பிட்டுவிட்டுதான் பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தைப் பார்க்கச் சென்றார்களோ என்னவோ...?

லட்சம் கோடிக்கு மேல் மதிப்புடைய நிறுவனத்தைக் குறைத்து மதிப்பிடும் வேலைகளும் துவங்கிவிட்டன. 81 ஆயிரம் கோடிதான் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் மதிப்பு என்ற கட்டுக்கதையைப் பரப்புகிறார்கள். 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுடன் 26 சதவிகித பங்குகளை ஏடி அண்டு டிக்கு தாரை வார்க்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். இத்தகைய திட்டத்தை அவ்வளவு எளிதாக நடைமுறைப்படுத்தி விட முடியாது என்றாலும் ஒவ்வொரு நகர்த்தல்களையும் நன்றாக யோசித்துதான் எடுக்கிறார்கள். ஒவ்வொரு பிரச்சனை எழும்போதும் ஊழியர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரின் மனங்களிலும் "இடதுசாரிகள் இல்லை. அதனால்தான் கண்மூடித்தனமாக இயங்குகிறார்கள்" என்ற எண்ணம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

"கிழக்கு லண்டன்" லட்சணம் இதுதானா...?

இந்தியாவின் வணிகத்தலைநகர் என்று பெயர் பெற்ற மும்பையில் தனிநபர் வருமானம் ரூ. 65,361 ரூபாய். இதுதான் நாட்டிலேயே மிக அதிக வருமானத்தைக் கொண்ட நகரமாகும். ஆனால் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மும்பை மக்கள் ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்கும் குறைவாக வருமானம் ஈட்டுகிறார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது நாட்டின் வணிகத்தலைநகரில் வசிக்கும் மக்களில் பத்து சதவிகிதம் பேர் வயிற்றை நிரப்பிக் கொள்வதற்கான வருமானத்தை ஈட்ட முடியாமல் இருக்கிறார்கள். இந்த நகரத்தில்தான் ஒவ்வொரு அடுக்குமாடிக் குடியிருப்பும் பத்து கோடி ரூபாய் முதல் 25 கோடி ரூபாய் வரை விலை வைத்து விற்கப்படுகிறது.


ஐ.நா.வளர்ச்சித்திட்ட அமைப்பின் நிதியுதவியுடன் மும்பை மாநகராட்சிக்காகத் தயாரிக்கப்பட்ட மனிதவள மேம்பாட்டு அறிக்கையில்தான் இந்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. நகரின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதிப்பேர் மனிதர்கள் வசிக்க தகுதியற்ற நிலையுள்ள இடங்களில்தான் வசிக்கிறார்கள். மேலும் இவர்கள் வசிக்கும் பகுதி மும்பை நகரில் ஆறு சதவிகிதப்பரப்பை மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளது. எஞ்சியுள்ள பாதிப்பேர் 94 சதவிகிதப் பரப்பில் வசிக்கிறார்கள். குடிசைப்பகுதிகளில் அவ்வளவு அடர்த்தியான மக்கள் தொகை இருக்கிறது. இவ்வளவு மோசமாக மக்கள் வாழும் பகுதியாக இருக்கும் மும்பையை, கிழக்கின் லண்டன் என்று இனிமேலும் அழைப்பது சரியாக இருக்குமா? என்று அந்த அறிக்கையே கேள்வி எழுப்புகிறது.



அது சரி, இந்த மும்பை யாருக்குச் சொந்தம் என்று கேட்கும் அந்த அறிக்கை, நகர்ப்புற வறுமை பெருகிக்கிடக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. 12.17 லட்சம் பேரின் மாத வருமானம் 591 ரூபாய்க்கும் குறைவாகவே இருக்கிறது. இத்தனைக்கும் நாட்டின் தனிநபர் வருமானத்தின் சராசரி 29,382 ரூபாயாக 2006-07 ஆம் ஆண்டில் இருந்தபோது, மும்பையின் சராசரி 65,361 ரூபாயாக இருந்தது. இந்தியாவுக்குள்ளேயே ஒரு குபேரபுரி என்று பலரால் வர்ணிக்கப்படும் மும்பை நகரில்தான் இவ்வளவு கோரமான ஒரு நிலைமை நீடித்துக் கொண்டிருக்கிறது. அதோடு, இத்தகைய ஏழ்மை நிலைமை இருப்பதை அனைவராலும் கண்கூடாகப் பார்க்க முடிகிறது என்று சொல்லும் அளவிற்கு பரவலாக உள்ளது.



வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ளவர்களின் எண்ணிக்கை குறித்து பல்வேறு புள்ளிவிபரங்கள் தரப்படுகின்றன. இதையும் இந்த ஆய்வு கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது. 1998 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வொன்று வெறும் 8.5 சதவிகித மும்பைவாசிகள்தான் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளார்கள் என்று கூறியது. ஆனால் மும்பை நகர்ப்புற போக்குவரத்துத்திட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, 40 சதவிகித மும்பைவாசிகள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளார்கள் என்று கூறியது. இத்தகைய பல்வேறு ஆய்வுகள் மும்பையில் வறுமை பரவலாக இருக்கிறது என்பதைத்தான் சுட்டிக்காட்டியது என்று இந்த அறிக்கை கூறுகிறது.



தனிநபர் வருமான சராசரி பற்றிக் கூறியுள்ள இந்த அறிக்கை, இந்த சராசரி என்பது மக்கள் மத்தியில் இருக்கும் பெரும் ஏற்றத்தாழ்வுகளைப் பிரதிபலிப்பதாக அமையவில்லை. இங்கு பெரும் பணக்காரர்கள், பணக்காரர்கள், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள், வறுமையில் உழல்பவர்கள் என்று அனைவருமே மும்பையில் வாழ்கின்றனர். அனைத்து நகரங்களைப் போலவே, இங்கும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஏற்படாமலேயே போய்விட்டது. இந்திய சமூகத்தின் நிலைமையும் கூட அதுதான். மும்பையின் மக்கள் தொகையில் 54 சதவிகிதம் குடிசைப்பகுதிகளில் வாழ்கின்றனர். அதோடு, இந்தக் குடிசைப்பகுதி மும்பையின் நிலப்பரப்பில் வெறும் ஆறு சதவிகிதத்தைதான் எடுத்துக் கொண்டுள்ளது என்பது நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது என்று குறிப்பிடுகிறது.



குடிசைப்பகுதியில் வாழும் மும்பைவாசிகளின் வாழ்க்கை மற்ற பகுதியில் இருப்பவர்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போனதாகும். மற்ற பகுதியில் வாழ்பவர்களின் வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொள்வதோடு, மலிவான பொருட்களை அவர்களுக்கு விற்பவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த மும்பையின் ஒரு பாதியில்லாமல், மற்றொரு பாதியின் வாழ்க்கை முடங்கிப் போய்விடும். இவர்களின் குறைந்த செலவுக்கான சேவையால் பல குடும்பங்கள் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளன. மற்ற பகுதிகளில் வாழும் பெரும்பாலானோருக்கு இந்தக் குடிசைப்பகுதிகளுக்கு வர வேண்டிய அவசியமோ அல்லது அப்பகுதி வழியாகச் செல்ல வேண்டிய கட்டாயமோ கூட ஏற்படுவதில்லை. இத்தனைக்கும் இந்த வறுமையில் வாடும் மனிதர்கள் இருப்பது அவர்களுக்கு மிக, மிக அத்தியாவசியமானதாக இருக்கிறது.

Thursday, September 3, 2009

புரோக்கர்களாக மாறிய மம்தாயிஸ்டுகள்




மேற்கு வங்கத்தின் தொழில் வளர்ச்சிக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது. அதற்கெதிராக கிளம்பிய திரிணாமுல் காங்கிரஸ், மாவோயிஸ்டுகள், காங்கிரஸ், பாஜக மற்றும் எஸ்.யு.சி.ஐ ஆகியவை அடங்கிய கூட்டணி வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களைக் குறிவைத்து நடந்த தாக்குதல்களில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். முதலாளித்துவ ஊடகங்களின் உதவியுடன் பொது மக்களுக்கும், மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் இடையிலான மோதல் என்று தவறான மோசடிப் பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. இந்தப் பிரச்சாரத்திற்கு அப்பாவிப் பொது மக்களும் பலியானார்கள்.


நந்திகிராமத்தில் சிக்கல் நிலவியபோதே மாவோயிஸ்டுகளின் பயங்கரவாத நடவடிக்கைகளை திரிணாமுல் காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்கிறது என்று எச்சரிக்கை விடப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சி மீதான கண்மூடித்தனமான எதிர்ப்பு பெரும்பாலான ஊடகங்களை மவுனமாக இருக்கச் செய்துவிட்டது. ஆனால் லால்கரில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, மம்தாஜி சரணம் என்ற அபயக்குரல் மாவோயிஸ்டுகளின் தலைவர்களில் ஒருவரான கோடீஸ்வர ராவ் என்ற கிஷன்ஜி மூலமாக எழுந்தது. நந்திகிராமத்தில் நாங்கள் செய்த உதவிக்கு நன்றிக்கடன் ஆற்ற வேண்டாமா என்று ஏற்கெனவே செய்த கூட்டுச்சதியையும் போட்டு உடைத்தார்.


அதேபோல், தொழிற்சாலைகளை அமைக்க நிலங்களை மாநில அரசு எடுத்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள் அல்ல, புரோக்கர்கள்தான் என்று மார்க்சிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியது. அது உண்மைதான் என்பதும் தற்போது அம்பலமாகியுள்ளது. ஹால்டியா பகுதியில் உள்ள பல நிலங்களை தொழில் நிறுவனங்களுக்கு வாங்கித்தர புரோக்கர்கள் கிளம்பியுள்ளனர். இவர்கள் அனைவருமே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினரான சுபேந்து அதிகாரியின் ஆதரவாளர்களாவர். எட்டு லட்சம் மதிப்பிலான நிலத்தை 25 லட்சத்திற்கு புரோக்கர்கள் பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார் கொல்கத்தாவைச் சேர்ந்த தொழில் நிறுவன உரிமையாளர் ஒருவர்.


இவ்வாறு நடத்தப்படும் பேரத்தால் விவசாயிகளுக்கு பலன் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இடையிலுள்ள புரோக்கர்களே லாபத்தை அடித்துக் கொண்டு போய் விடும் அபாயம் இருக்கிறது. இந்த புரோக்கர்களுக்கு ஆதரவாகவே நிலம் கையகப்படுத்துவதற்காக மத்திய அரசு கொண்டு வரும் புதிய மசோதாவில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று மம்தா பானர்ஜி நிர்ப்பந்தித்து வருகிறார். தனியார் தொழில் துவங்குவதற்காக நிலம் கையகப்படுத்தும் வேலையை அரசு செய்யக்கூடாது என்கிறார் அவர். நேரடியாக விவசாயிகளிடமிருந்து தனியார் நிறுவனங்கள் நிலங்களை வாங்கிக் கொள்ளலாம் என்ற திட்டத்தால் பல்வேறு மாநிலங்களில் அடிமட்ட விலைக்கு விவசாயிகளின் நிலங்கள் பறிபோனது குறிப்பிடத்தக்கது.


இதுவரை நிலம் கையகப்படுத்தலுக்காக அரசாணை வெளியிடப்படாத தொழில் திட்டங்களுக்காக நிலங்களை எடுக்கப்போவதில்லை என்று மேற்கு வங்க அரசு முடிவெடுத்துள்ளது. மத்திய அரசின் புதிய மசோதாவுக்காக மாநில அரசு மற்றும் தொழில் நிறுவனங்கள் காத்திருக்கின்றன. ஆனால் புரோக்கர்களின் பிடியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் செல்வாக்குள்ள பகுதிகளில் நிலங்களை அடையாளம் காணும் வேலையில் அக்கட்சிக்காரர்கள் இறங்கியுள்ளனர். தனது நிலத்திற்கு என்ன விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பது விவசாயிகளுக்கு தெரியாத நிலை இருக்கிறது.


நிலத்தை எடுக்கும் நடவடிக்கையில் அரசு இருந்தபோது அதற்கு ஒரு வெளிப்படையான தன்மை இருந்தது. ஏழைகளிலும் ஏழையாக இருப்பவருக்கு அதில் பாதுகாப்பு கிடைத்தது. இந்த நடவடிக்கைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தவர்கள் விவசாயிகள் அல்ல, வெறும் புரோக்கர்கள்தான். தங்கள் வருமானம் போய்விடுமே என்பதுதான் அவர்களுடைய அச்சம். சந்தை மதிப்பை விட அதிகமாகக் கொடுத்து, விவசாயிகளுக்கு மாற்று வேலைக்கும் ஏற்பாடு செய்யும் மாநில அரசுக்கு எதிராக மோசடிப் பிரச்சாரத்தைக் கிளப்பிவிட்டு வன்முறையையும் ஏவிவிட்டனர். புரோக்கர்களைப் பொறுத்தவரை விவசாயிகள் ரத்தமும், சதையும் கொண்டவர்களல்ல. அவர்களும் விற்பனைப் பண்டம்தான்.

தாத்தாவுக்கு இறுதிசடங்கு செய்த சகோதரிகள்!

உத்தரப்பிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தில் உள்ள பாகல்பூரைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் தங்கள் தாத்தாவுக்கு இறுதிச்சடங்கை செய்துள்ளார்கள்.

பாகல்பூரைச் சேர்ந்தவர்கள் ரிங்கு யாதவ்(வயது 27). அவருக்கு ரீமா மற்றும் அஞ்சு என்ற இரு தங்கைகள். 2005 ஆம் ஆண்டின் தங்கள் தந்தையை அவர்கள் இழந்தனர். அதற்குப்பிறகு தாயோடு தாத்தா வீட்டுக்கு சென்றார்கள். தாத்தா பகதூரின் பராமரிப்பில் அவர்கள் இருந்து வந்தார்கள். இவர்கள் தங்கள் தாத்தாவிடம் வந்து சேர்ந்தபிறகு தாத்தாவின் இரு சகோதரர்கள் சில கருத்து வேறுபாடுகளால் பிரிந்து சென்று விட்டனர். பக்கத்தில் உள்ள கிராமத்தில் அவர்கள் வசித்து வந்தனர்.

இந்நிலையில் 70 வயதான பகதூர் திடீரென்று மரணமடைந்தார். பக்கத்து கிராமத்தில் இருக்கும் அவருடைய சகோதரர்கள் இந்தச் செய்தி கிடைத்தபிறகும் வரவில்லை. அவருக்கு இறுதிச்சடங்குகளைச் செய்ய வேறு ஆண்கள் யாருமில்லை என்பதால் தாங்களே அதைச் செய்வது என்று மூன்று சகோதரிகளும் முடிவெடுத்தனர். கிராமத்தினர் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பகதூரின் சகோதரர்களுக்கு வேண்டுகோள் விடுத்து சகோதரிகள் அழைத்து வர வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.

ஆனால் இறுதிச்சடங்குகளைச் செய்ய தங்கள் பாட்டி மற்றும் தாய் ஆகிய இருவரின் அனுமதியைப் பெற்ற சகோதரிகள் சரயு நதிக்கரையில் உள்ள காளிச்சரண் சுடுகாட்டில் தாத்தாவின் உடலுக்கு நெருப்பு வைத்தனர். கிராமத்தினர் மத்தியில் சகோதரிகளின் முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அவர்களில் சிலர் ஆதரவாகவும் பேசியது சிறிய மாற்றம் ஏற்பட்டதை உணர்த்தியது.

Tuesday, September 1, 2009

என்ன கொடுமை சார் இது...?

எல்லோருக்கும் வேணுமே இந்த மகிழ்ச்சி...



தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறந்து சுமார் மூன்று மாதங்களாகிவிட்டன. கட்டண உயர்வுகள் நடுத்தர மக்களையே முழிபிதுங்கச் செய்துவிட்டன. தனியார் பள்ளிகளில் ஆரம்ப வகுப்புகளில் பயிலும் தங்கள் குழந்தைகளுக்காகக்கூட கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். பல இடங்களில் அநியாயக் கட்டண உயர்வை எதிர்த்து பெற்றோர்கள் போர்க்கொடி உயர்த்தினர். சில இடங்களில் அந்த எதிர்ப்பினால் பள்ளி நிர்வாகங்கள் கட்டணத்தைக் குறைத்தன. கிட்டத்தட்ட காலாண்டுத் தேர்வை எதிர்கொள்ளும் நிலைக்கு இங்குள்ள குழந்தைகள் வந்துவிட்டன.

வட இந்தியப் பள்ளிகள் பெரும்பாலும் ஜூலை மாதத்தில்தான் திறக்கப்படுகின்றன. சுமார் ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில் கட்டண உயர்வு பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. போட்டி என்றால் அடுத்தவரின் கழுத்தை நெரிக்கும் அளவுக்கு நிலைமை சென்று கொண்டிருப்பதால் சாதாரண மக்களும் தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க முயற்சிக்கின்றனர். கடன்பட்டாவது தனது குழந்தைகளையும் போட்டியில் பங்கேற்க முனைகின்றனர். ஆனால் ஆண்டுதோறும் அநியாயத்திற்கு உயர்த்தப்படும் கட்டணங்கள் அவர்களை நிலைகுலையச் செய்கின்றன. அவர்களின் குழந்தைகளோ வாழ்வில் மறக்கமுடியாத கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். வாழ்க்கை முறையைக் கற்றுக்கொடுக்க வேண்டிய ஆசிரியர்களே வில்லன்களாகிறார்கள்.

ராஜஸ்தான் மாநிலத்தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ளது மகாராஜா பள்ளி. இதை ரமேஷ் சைன் என்பவர் நடத்திவருகிறார். இந்தப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் சிறுமி நடப்பாண்டிற்கான கல்விக்கட்டணத்தை இன்னும் செலுத்தவில்லை. அது குறித்து விசாரிக்க தனது அறைக்கு வருமாறு அழைத்த ரமேஷ் சைன் அப்பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இந்தக்கொடுரம் அம்பலமானதால் ரமேஷ் சைன் தலைமறைவாகிவிட்டார். அவரைக் கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் காவல்நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கைது செய்யாததால் பள்ளிக்கூடம் மீது கற்களை வீசியுள்ளனர். இவ்வளவு நடந்தும் ரமேஷ் சைன் இன்னும் கைது செய்யப்படவில்லை.

தனியார் பள்ளியின் கொடுரங்களுக்கு மற்றொரு எடுத்துக்காட்டாக ஃபரீதாபாத்தில் நடந்த சம்பவம் உள்ளது. அரியானா மாநிலம் ஃபரீதாபாத்தில் உள்ள பள்ளியொன்றில் ஒன்பது வயதான மாணவி ஒருவர் மூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறார். அந்த மாணவிக்கு கல்வி கட்டணம் கட்டுவதிலிருந்து மாநில அரசு விலக்கு அளித்திருந்தது. ஆனால் கட்டணத்தைக் கட்டியே ஆக வேண்டும் என்று பள்ளிநிர்வாகம் பிடிவாதம் பிடித்தது. அதோடு நிற்கவில்லை, வகுப்பில் அனைத்து மாணவர்களுக்கும் முன்பாக அந்தச் சிறுமியை நிறுத்திய இரு ஆசிரியைகள் மேலாடையை அவிழ்த்திருக்கிறார்கள். இதுதான் எல்லை என்று நினைப்பதற்குள் அடுத்த கொடுரத்தையும் அரங்கேற்றினார்கள்.

அந்த அரைகுறை ஆடையோடு ஒவ்வொரு வகுப்பறையாக அழைத்துச் சென்றார்கள். மற்ற வகுப்பறைகளில் இருந்த மாணவிகளை, வெட்கம், வெட்கம்(ஷேம், ஷேம்) என்று குரல் எழுப்பப் சொல்லியிருக்கிறார்கள். கண்ணீரோடு தனது இரு கைகளையும் மார்பின் குறுக்கே வைத்து மறைத்துக் கொண்டு சென்ற கொடுமை பல மாணவிகளின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. இந்த கொடுமைக்கு உள்ளான சிறுமியின் தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுநர். அவர்களது குடும்பம் மிகவும் குறைவான வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டி வந்தது. கொடுரத்தை நிகழ்த்திய லலிதா மற்றும் நீது என்ற இரு ஆசிரியைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அவமானத்தை சந்தித்துள்ள அந்தச்சிறுமியின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.

தனியார் கல்வியின் குரூரவடிவங்கள் அம்பலத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில்தான் இருக்கிற அரசுப்பள்ளிக்கூடக் கட்டிடங்களில் முதல் மாடி, இரண்டாம் மாடிகளை தனியாருக்கு விட்டு புரட்சி செய்ய மத்திய கல்வித்துறை அமைச்சர் கபில் சிபல் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு சதவிகிதத்தை கல்வித்துறைக்கு அரசு செலவு செய்யும் என்று 2004 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதி அளித்தது. ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்தபிறகும் அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. இடதுசாரிகளின் நிர்ப்பந்தம் தற்போது இல்லாததால் உறுதிமொழியையே எடுத்து விட்டார்கள்.