Thursday, March 25, 2010

மருமகளை மாமியார் எட்டி உதைக்கலாமா..?


மாமியார் தனது மருமகளை எட்டி உதைத்தாலோ அல்லது தனது மகன் விவாகரத்து செய்து விடுவான் என்று மிரட்டினாலோ இந்தியக் குற்றவியல் பிரிவு 498ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகக் கருத முடியாது என்று கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஜூலை 27, 2009 அன்று வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு வெளியானவுடன் நாடு முழுவதுமுள்ள மாதர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான பிருந்தா காரத்தான் முதலில் இப்பிரச்சனையில் குரல் எழுப்பினார். இத்தகைய பிற்போக்கான தீர்ப்பில் உள்ள குறைகளைக் களையும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லியை சந்தித்து வலியுறுத்தினார்.


பெண்களுக்கு எதிரான பெரும்பாலான கொடுமைகள் பதிவு செய்யப்படாதவையாகும். தேசிய குற்றப்பதிவுப் பிரிவு இறுதியாக திரட்டிவைத்துள்ள புள்ளிவிபரங்கள் 2007 ஆம் ஆண்டுக்குரியவையாகும். கணவன் மற்றும் கணவனின் உறவினர்களால் இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து 2007 ஆம் ஆண்டில் 75 ஆயிரத்து 930 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்படுபவர்களுக்கு தண்டனை வழங்குவது வெறும் 20 விழுக்காடு வழக்குகளில்தான் இருந்துள்ளது. வரதட்சணை காரணமாக கொலை செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கையோ 8 ஆயிரத்து 93 ஆகும். இந்த வரதட்சணைக் கொலை வழக்குகளிலும் மூன்றில் இரண்டு பங்கு வழக்குகளில் குற்றவாளிகள் தப்பித்து விடுகின்றனர். பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் என்று கணக்கில் எடுத்தால் 2007 ஆம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 2 லட்சத்தைத் தொடுகிறது.


1961 ஆம் ஆண்டிலிருந்து வரதட்சணை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியா எழுகிறது என்று கூறினார்கள். இந்தியா எழுந்ததோ இல்லையோ வரதட்சணை எழுந்தது. வரதட்சணையின் பரிணாம வளர்ச்சி அதிர்ச்சியூட்டும் வகையில்தான் இருந்தது. அண்மையில் ஆந்திராவில் நடந்த ஆய்வில், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். மணமகனாக இருந்தால் உச்சபட்ச விலை அவர்களுக்கு விதிக்கப்படுகிறது என்ற தகவல்கள் அம்பலமாகின. விலை உயர, உயர வரதட்சணை தராத அல்லது கொண்டு வராத பெண்கள் மீதான தாக்குதல்களும் அதிகரிக்கின்றன. அவ்வாறு தாக்கப்பட்ட மோனிகா என்ற பெண் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார். தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் தனது கணவர் விகாஸ் சர்மா, விகாசின் பெற்றோர்கள் பாஸ்கர் லால் சர்மா மற்றும் விமலா ஆகியோர் மீது கொடுமை செய்யததற்காகவும், நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் நடந்து கொண்டதற்காகவும் அவர் வழக்கு தொடுத்திருந்தார்.


எட்டி உதைத்து கொடுமை பண்ணினார் என்றும், விவாகரத்து செய்ய வைத்து விடுவேன் என்றும் தனது மாமியார் குறித்து மோனிகா புகார் கூறியிருந்தார். ஆனால் மாமியார் எட்டி உதைப்பதோ, விவாகரத்து செய்ய வைத்து விடுவோம் என்று கூறுவதோ 498ஏ பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களல்ல என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. இந்த தீர்ப்பின் கருத்தை விளக்கிக் கூறுமாறும், அதை மறுபரிசீலனை செய்யக் கோரியும் தேசிய மகளிர் ஆணையம் மனு போட்டது. அந்த மனுவை ஏற்றுக்கொண்டு விசாரிக்க தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் எஸ்.எச்.கபாடியா, அல்டமஸ் கபீர் மற்றும் சிரியாக் ஜோசப் ஆகியோர் முடிவு செய்துள்ளனர். வழக்கில் தொடர்புள்ள இரு தரப்புக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


இந்தத்தீர்ப்பு வந்தவுடன், பெண்களின் துயரங்களை இது அதிகப்படுத்தவே செய்யும். பெண்களின் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு சட்ட மசோதாக்களின் பலன்களை நிராகரித்துவிடும் என்று பிருந்தா காரத் குறிப்பிட்டார். சட்ட அமைச்சகத்துக்கு அவர் எழுதிய கடிதத்தில், கொடுமைகள் குறித்து நீதித்துறைக்கு இத்தகைய கருத்து இருப்பது குடும்ப வன்முறைகளுக்கு உரிமம் வழங்குவது போலாகிவிடும். மனைவிகளை அடிப்பவர்களுக்கு இந்தத் தீர்ப்பு ஊக்குவிக்கும். பெண்களின் உயிரையும், கவுரவத்தையும் காக்க அரசும், நாடாளுமன்றமும் எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகள் வீணாகிப் போய்விடும் என்று குறிப்பிட்டிருந்தார்.


பிருந்தா காரத்தின் கருத்துகளையே தேசிய மகளிர் ஆணையத்தில் மனு பிரதிபலிக்கிறது. 498ஏ பிரிவு என்பது வெறும் வரதட்சணைக் கொடுமை குறித்தது மட்டும்தான் என்று பார்த்து விடக்கூடாது. அது வரதட்ணைக் கொடுமை மற்றும் அந்தக் கோரிக்கையால் ஏற்படும கொடுமை ஆகியவற்றோடு வரதட்சணை கோராமல் புகுந்த வீட்டாரால் நடத்தப்படும் கொடுமைகளையும்கூட சேர்த்தே பார்க்க வேண்டும் என்று அந்த மனு கூறுகிறது. அதனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அந்த மனு முன்வைக்கிறது. இந்த மனுவை விசாரணைக்கு நீதிபதிகள் எடுத்துக் கொண்டுள்ளதால் உச்சநீதிமன்றத்தின் கருத்து மாறலாம் என்ற எதிர்பார்ப்பு மாதர் சங்கங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Friday, March 19, 2010

ஜீவனிழந்து கிடக்கும் யமுனை...!!!



மீத்தேன் வாயு மெதுவாக வெளிக்கிளம்பிக் கொண்டிருக்கிறது. தேங்கிக் கிடக்கும் குட்டை போலக் காட்சியளிக்கும் இடங்களில் முட்டை விடுவது போல குமிழியை உருவாக்கி பிறகு உடைந்து அதன் மூலம் மீத்தேன் வெளியேறிக் கொண்டிருக்கிறது. அருகில் சென்றாலே குடலைப் பிடுங்கும் அளவுக்கு நாறிப் போய்க்கிடக்கிறது. புனித நதி என்றும், இந்துக்களால் கடவுள் என்றும் அழைக்கப்படும் யமுனை நதிதான் இவ்வாறு சீரழிந்துபோய்க்கிடக்கிறது. ஒரு உணர்ச்சிப் பிரவாகத்தோடு ஓடிக்கொண்டிருந்தது போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்த யமுனை நதி, ஜீவனின்றிக் கிடப்பதுபோல தற்போது காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.


இத்தனைக்கும் மார்ச் 22 அன்று உலக தண்ணீர் தினத்தை உலகமே அனுசரிக்கப்போகிறது. ஆனாலும் இந்தியாவின் பெரிய ஆறுகளில் ஒன்றான யமுனை தனது உண்மைத்தன்மையை இழந்து நிற்கிறது. புதுதில்லியின் உயிர்நாடியான யமுனை நதி பெரும் அளவுக்கு மாசுபட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் போய்ச் சேராததற்கு காரணம், நதி தெரியாத அளவிற்கு பெரிய, பெரிய சுவர்களும், மேம்பாலங்களும், சாலைகளும், ஆலைகளும் கட்டப்பட்டுள்ளதாகும். ஒரு சில இடங்களில் மட்டும்தான் ஆற்றிற்கு மக்கள் செல்லும் வாய்ப்பு உள்ள நிலை ஏற்பட்டுள்ளது. புதுதில்லியைச் சேர்ந்த மக்களில்கூட 60 விழுக்காட்டினர்தான் யமுனை நதி ஓடுவதைப் பார்த்திருக்கிறார்கள் என்று கணக்கு சொல்கிறது °வேச்சா என்ற தொண்டு நிறுவனம். புதுதில்லியின் மக்கள் தொகை 1 கோடியே 40 லட்சமாகும்.


யாருமே யமுனையைப் பார்க்கவில்லை என்றால் அதை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் என்று கேள்வி எழுப்புகிறார் ஸ்வேச்சா அமைப்பின் செயல் இயக்குநரான விமலேந்து கே. ஜா. தில்லியை வந்தடையும்வரை யமுனை மிகவும் அழகாகத்தான் இருக்கிறது. தலைநகருக்கு வெளியே நீர் மிகவும் தெளிவாக உள்ளது. பறவைகள் நீருக்கு மேல் பறந்து கொண்டிருப்பது கொள்ளை அழகாகக் காட்சியளிக்கிறது. வலையைப் போட்டு மீன்களை அள்ளும் மீனவர்கள் மகிழ்ச்சியோடு திரிந்து கொண்டிருக்கிறார்கள். இங்கிருந்துதான் ஆலைக்கழிவுகள் மற்றும் ஒட்டுமொத்த தில்லியின் சாக்கடைகள் யமுனையில் கலக்கத் துவங்குகின்றன. இந்தக் கலக்கலுக்கு முன்பே விவசாய நோக்கத்திற்காக அரியானா கட்டியுள்ள அணை மூலம் தங்களுக்குத் தேவையான நீரை அந்த மாநிலம் திருப்பிக் கொள்கிறது.


இமயமலையில் உருவாகி கங்கையில் சங்கமமாகும் யமுனையின் மொத்த நீளம் 1,370 கிலோ மீட்டராகும். இதில் வெறும் 22 கி.மீ. தூரம்தான் புதுதில்லியில் உள்ளது. ஆனால் யமுனை நதியை மாசுபடுத்துதலில் 80 விழுக்காடு பணிகள் இந்த 22 கி.மீ. தூரத்தில்தான் நடைபெறுகின்றன. தலைநகரின் பல பகுதிகளிலுமிருந்து 18 பெரிய சாக்கடைக் கால்வாய்கள் யமுனை நதியில் வந்து சேருகின்றன. யமுனையில் உள்ள ஆக்சிஜனில் பெரும்பகுதியை இந்தக் கழிவுகள் காலி செய்து விடுகின்றன. இந்த தண்ணீரால் விலங்குகளைக் கூட கழுவிவிடக்கூடாது என்று தில்லி நிர்வாகம் சொல்லும் அளவுக்கு நதியின் நச்சுத்தன்மை அதிகரித்துள்ளது.


மேலும் ஒன்பது விழுக்காடு மாசு என்பது தில்லியைத் தாண்டியவுடன் ஆக்ராவில் நடக்கிறது. இந்த யமுனைக்கரையில்தான் உலகக் புகழ்பெற்ற தாஜ்மகால் அமைக்கப்பட்டுள்ளது. யமுனையின் தாக்கம் அதோடு நின்று விடுவதில்லை. மற்றொரு புனித நதி என்று அழைக்கப்படும் கங்கையில் கலந்து அதை மேலும் மாசுபடுத்தி விடுகிறது. தில்லியின் குடிநீர்த் தேவையை யமுனைதான் பூர்த்தி செய்து வருகிறது. ஆனால் தேவைப்படும் நீரை தலைநகருக்குள் நுழைவதற்கு முன்பே எடுத்துக் கொள்கிறார்கள். தலைநகருக்குள் இருக்கும் பல்வேறு சுத்திகரிப்பு நிலையங்களும் சரியாக வேலை செய்யவில்லை. இது மாசுபடுதலை அதிகரித்துவிடும் என்பதுதான் சுற்றுச்சூழல் வல்லுநர்களின் கருத்தாகும்.


தலைநகரில் வீடில்லாமல் தவிப்பவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. குளிர் தாங்காமல் வீடில்லாத ஏழை மக்கள் உயிரிழக்கிறார்கள் என்பதால்தான் அந்த உத்தரவு இடப்பட்டது. அவர்களின் பெரும்பாலானவர்கள் இந்த யமுனை நதிக்கரையில்தான் தங்குகிறார்கள். மாசுபடிந்து கிடக்கும் யமுனைதான் அவர்களுக்கு குளியலறை மற்றும் குடிநீர்த்தொட்டி. அவர்களைப் பொறுத்தவரை தண்ணீரே இல்லாமல் இருப்பதைவிட நாறிப்போயிருக்கும் தண்ணீரே பரவாயில்லை என்பதுதான் நிலை. தில்லியைத் தாண்டிய பிறகு யமுனை பாய்ந்து ஓடும் அனைத்து மாநிலங்களுக்கும் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. நதியைச் சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்ட பணம் எல்லாம் எங்கு சென்றது என்பதே தெரியவில்லை. நம்முன் அதிகமாக மாசுபட்டு நிற்கும் யமுனையே அதற்கு சாட்சி என்கிறார் விமலேந்து ஜா.

Sunday, March 14, 2010

ஓ... மகசீயா.. ஓ.. மகசீயா...


தமிழ்ப்படம்


படத்தின் நாயகர் அழகிரி அடிக்கடி "தமிழ்... தமிழ்" என்று சொல்லியவாறு வலம் வருகிறார். "ஓ.. மகசீயா" பாடலை அவர் பாடும்போது பன்மொழிப்புலவரைப் போன்ற ஒரு பெருமிதம் முகத்தில் தெரிகிறது. பல பாத்திரங்களை ஒரே படத்தில் கொடுக்க முனைந்திருக்கிறார். இடைத்தேர்தல்கள் அடிக்கடி வருவதால் வாக்கு வித்தியாசங்களைக் கணக்கிட நிரந்தரமாக ஒரு கால்குலேட்டரை பாக்கெட்டிலேயே வைத்திருப்பது அபாரம். 2011 தேர்தலுக்குப்பிறகு அவர்கள் இருக்க மாட்டார்கள், இவர்கள் இருக்க மாட்டார்கள் என்று படம் முழுவதும் சொல்லிக் கொண்டே இருக்கிறார். தில்லிக்கு விமானம் ஏறும் சோகக்காட்சிகளிலும் வெளுத்து வாங்குகிறார்.

**********

விண்ணைத் தாண்டி வருவாயா?

விலைவாசியைச் சுற்றிதான் கதை வளைய வருகிறது. எந்த பொருளின் விலை அதிவேகமாக ஏறுகிறது என்று போட்டி நடப்பது போன்ற காட்சிகள் நகைச்சுவைக் காட்சிகளாக வைக்கப்பட்டிருந்தாலும், பார்ப்பவர்களின் வயிறையும் எரியச் செய்கிறது. துணைக்கதையாக, முரளிதியோரா, பிரணாப் காட்சிகள். இவர்தான் எண்ணெய் விலையை ஏற்றப்போகிறார் என்று எல்லோரும் தியோராவையேப் பார்த்துக் கொண்டிருக்கும்போது பிரணாப் அதிரடியாக விலையை ஏற்றும் காட்சி திகில்தான். தியோராவை நம்பி வசனம் பேசிய துணை நடிகர்களான கருணாநிதி மற்றும் மம்தா ஆகியோர் முழிக்கும் காட்சி சிரிப்பூட்டுகிறது.

**********

தீராத விளையாட்டுப்பிள்ளை

சண்டைக்காட்சிகள் அதிகமாக இடம் பெற்றுள்ளன. ஆன்டி-ஹீரோ என்பார்களே... அதாவது வில்லன்தான் கதைக்கு நாயகன். அதுதான் இந்தப்படம். அப்பாவிகளாகப் பார்த்து வில்லன் கூட்டம் போட்டுத்தள்ளுகிறது. கதாநாயகன் கிஷன்ஜியோ, கொலைகளை இயக்குகிறார். தொலைபேசிகளில் பேசுகிறார். "93 கொலைகளை செய்துள்ளேன். ஆனால் நான் மென்மையானவன்" என்று அவர் சொல்லும்போது தோளில் சாய்ந்திருக்கும் துப்பாக்கி நக்கலாக சிரிப்பதாக இருக்கும் கிராபிக்ஸ் காட்சி அபாரம். 25ஆம் தேதி முதல் நாங்கள் இரண்டு நாட்களுக்கு சண்டையை நிறுத்துகிறோம் என்று 29 ஆம் தேதி அவர் சொல்வதாக அமைந்துள்ள காட்சி தியேட்டரையே சிரிப்பலையில் ஆழ்த்துகிறது. படத்தின் இசைக்கு மம்தா பானர்ஜி பொறுப்பேற்றுள்ளார்.

**************
அசல்
யார் அசல் என்பதைக் கண்டுபிடிக்க படத்தைப் பார்ப்பவர்களுக்கு போட்டி வைத்து விடுகிறார்கள். மகளிருக்கு 33 விழுக்காடு மசோதா வருகிறது. இதற்கு யார் எதிரி என்பதுதான் கதை. சரத் யாதவ் தலைமறைவே ஆகி விடுகிறார். லாலு, முலயாம் ஆகியோர் வெளிப்படையாகவே மிரட்டுகிறார்கள். இவர்கள்தான் எதிரி என்று முடிவுக்கு வருவதற்குள் மசோதாவைக் கொண்டு வந்தவரே, வந்த வேகத்தில் திரும்பவும் ஓடிவிடுகிறார். ஓஹோ... இவர்கள்தான் எதிரிகள் என்பதற்குள், காட்சி மாறுகிறது. அப்பாடா... அவர்களே திரும்ப ஓடி விட்டார்கள் என்று நெஞ்சைத் தடவியவாறு நிற்கிறார் அருண் ஜெட்லி. கடைசிக்காட்சியில், வாருங்கள் பேசுவோம் என்று லாலு, முலயாம் ஆகியோரின் தோள்கள் மீது கைகளைப் போட்டவாறு அழைத்துச் செல்கிறார் மன்மோகன்சிங். மகிழ்ச்சிகரமான முடிவை வைக்கவேண்டிய கட்டாயம் இயக்குநர் சோனியா காந்திக்கு இருந்திருக்கிறது என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது.
************
குரு சிஷ்யன்

குருவாக அத்வானியும், சிஷ்யராக நரேந்திர மோடியும் நடித்துள்ளனர். இப்ப மாநிலத்துக்குள்ளயே அடக்கி வாசிக்குற மாதிரி, நான் பொறுப்புல இருந்தப்ப இருந்துருக்கலாமேன்னு மோடியைப் பார்த்து அத்வானி கேட்பதுபோல படம் துவங்குகிறது. அனல் பறக்கும் வசனங்கள் படத்தில் உள்ளன. நான் இல்லேனா நீங்க எம்.பி.கூட கிடையாதுன்னு குருவைப் பார்த்து சொல்லும்போது சிஷ்யரின் முகத்தில் ஆக்ரோசம். அந்த காட்சியில் மோடியின் தயவில் எம்.பி. பதவி பெற்ற மற்றொருவரான அருண் ஜெட்லியைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறார் சுஷ்மா சுவராஜ். இதைப்பற்றி யோசிக்காமல் கோட்லா மைதானம் பற்றிய கவலையில் இருக்கிறார் அருண் ஜெட்லி. இடையிடையே நகைச்சுவைக் காட்சிகள். நான் குருவும் இல்ல...எனக்கு சிஷ்யனும் இல்லனு சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசும் நிதின் கட்காரி கலகலப்பூட்டுகிறார்.
***********

Wednesday, March 10, 2010

தேங்கிய வழக்குகளை தீர்க்க 320 ஆண்டுகள்...!!


தற்போதுள்ள நிலையில் நாடு முழுவதும் தேங்கிக்கிடக்கும் வழக்குகளைத் தீர்க்க இந்திய நீதித்துறைக்கு 320 ஆண்டுகள் ஆகும் என்று ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதி வி.வி.எஸ்.ராவ் கூறியுள்ளார்.

உயர்நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளையும் சேர்த்து நாடு முழுவதுமுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் 3 கோடியே 12 லட்சத்து 80 ஆயிரம் வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன. குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படாமலும், அப்பாவிகளுக்கு நீதி கிடைக்காமலும், கிடைக்க வேண்டிய தண்டனையை விட கூடுதல் தண்டனை அனுபவிப்பதும் தொடர்கதைகளாகி உள்ளன. ஆந்திரப் பிரதேச நிர்வாகத் தீர்ப்பாயக் கூட்டமொன்றில் பேசிய வி.வி.எஸ்.ராவ், இந்திய நீதித்துறையில் தேங்கிக் கிடக்கும் அனைத்து வழக்குகளையும் நாம் கணக்கில் எடுத்துக் கொண்டால், நாட்டிலுள்ள ஒவ்வொரு நீதிபதியின் வசமும் சராசரியாக 2 ஆயிரத்து 147 வழக்குகள் இருக்கும் என்கிறார். இந்த சராசரி ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளன.

இதற்குப் பிரதான காரணம், அனைத்துத்துறைகளிலும் சொல்லப்படும் ஆட்பற்றாக்குறை என்ற அதே காரணம்தான். அரசால் ஒப்புதல் தரப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 641 ஆகும். இதில் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையான 630 என்பதும் அடங்கும். ஆனால் தற்போது வெறும் 14 ஆயிரத்து 576 நீதிபதிகள்தான் உள்ளனர். பத்து லட்சம் பேருக்கு 10.5 நீதிபதிகள் என்கிற முறையில் நாட்டின் நீதித்துறையின் நிலைமை உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி வி.வி.எஸ்.ராவ், 2002 ஆம் ஆண்டிலேயே இது குறித்து உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. பத்து லட்சம் பேருக்கு 50 நீதிபதிகள் என்பதே சரியாக இருக்கும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது என்கிறார்.

மேலும் பேசிய அவர், 2030 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 150 கோடியாகவோ அல்லது 170 கோடியாகவே இருக்கும். பத்து லட்சம் பேருக்கு 50 நீதிபதிகள் என்பது அப்போது நிறைவேறினால் நீதிபதிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரமாக உயர்ந்துவிடும். ஆனால் அவர்கள் கைவசமோ 30 கோடி வழக்குகளுக்கு மேல் இருக்கும். எழுத்தறிவு விகிதம் மற்றும் விழிப்புணர்வு அதிகரிப்பதால் வழக்குகளும் அதிகரித்து வருகின்றன என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. கேரளாவை இதற்கு எடுத்துக்காட்டாகக் காட்டலாம். மக்கள் தொகையின் ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் சராசரியாக 28 புதிய வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் பதிவாகி வருகின்றன என்று குறிப்பிட்டார்.

Sunday, March 7, 2010

எதிரலையில் சிக்கிய மக்கள் டிவி!


அடித்து நொறுக்கப்பட்ட தீக்கதிர் வாகனம்.


பாட்டாளி மக்கள் கட்சியின் தொலைக்காட்சியான மக்கள் டிவி தோழர் உ.ரா.வரதராசன் மரணம் தொடர்பாக அவதூறான செய்தியை வெளியிட்டது. ஜனநாயக முறையில் அந்த அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்யச் சென்ற தோழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையெல்லாம் கூறாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மக்கள் தொலைக்காட்சி மீது தாக்குதல் என்று மட்டும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். மக்கள் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. எந்த பத்திரிகை தர்மத்தை மதிக்காமல் அவதூறு செய்தியை மக்கள் தொலைக்காட்சி வெளியிட்டதோ, அந்த அணுகுமுறை அடுத்த நாள் நடந்த சம்பவங்கள் பற்றிய செய்தியிலும் இருந்தது.


மக்களிடம் ஒரு தங்களுக்கு சாதகமான கருத்தை உருவாக்கும் முயற்சியாக தொலைபேசியில் மக்களிடம் கருத்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். இவையெல்லாம் நேரலை என்று ஒளிபரப்பினார்கள். வன்முறை பற்றி ஒரு நேயர் பேச ஆரம்பித்தார். எந்த அரசியல் கட்சியும் இப்படி செய்யக்கூடாது.. வன்முறை எந்த வடிவில் இருந்தாலும் அதை அனுமதிக்கக்கூடாது என்று சொல்லிக்கொண்டிருந்தார். இவர் இப்படியே பேசினால் நேயர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நினைவு வந்துவிடக்கூடாது என்பதற்காக, நிகழ்ச்சியைத் தொகுத்துக் கொண்டிருந்தவர், இப்படி மார்க்சிஸ்ட் கட்சி செய்திருக்கக்கூடாது என்கிறீர்களா... என்று தலையை நுழைக்கிறார்.


மற்றொரு நேயரோ, "ஆயுதம் ஏந்துனா மாவோயிஸ்டு, கீழே போட்டா மார்க்சிஸ்டு" என்று பஞ்ச் டயலாக் விட்டார். அதன்பிறகு, மாவோயிஸ்டுகளைப் பற்றியே கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருந்தார். மாவோயிஸ்டுகளை வளரவிடவே கூடாது என்று அவர் கூறியபோது சலித்துப் போன தொகுப்பாளர் அடுத்த நேயரின் அழைப்பை எதிர்நோக்கத் துவங்கினார்.


காங்கிரசைச் சேர்ந்த இதயத்துல்லா பேசுகையில், இதை மார்க்சிஸ்ட் கட்சியினர் செய்திருக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டார். அவரது வாயில் வார்த்தைகளைத் திணிக்க தொகுப்பாளர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில்தான் முடிந்தது. சில நேயர்கள் ஏதோ சொல்லிக்கொடுத்ததை மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போல எந்திரமாகப் பேசினார்கள். சிலர் பிருந்தா காரத் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று சம்பந்தா, சம்பந்தமில்லாமல் பேசினார்கள். இதற்கிடையில், ஜனநாயகத்தை அணைத்து உச்சி முகர்ந்து கொஞ்சும் இந்து முன்னணி போன்ற அமைப்பினர் வன்முறை பற்றி வியாக்கியானம் செய்தார்கள்.


சுவாரஸ்மான நிகழ்ச்சி இருக்க வேண்டுமே? ஒரு பெண்ணின் பேட்டி இடையில் ஒளிபரப்பாகியது. மக்கள் தொலைக்காட்சி அலுவலகத்தில் வரவேற்பாளராகப் பணியாற்றுகிறார். "திடீரென்று சிலர் உள்ளே நுழைந்தார்கள். நான் பதற்றமாயிட்டேன். இன்னும் எனக்கு பட, படன்னு இருக்கு" என்று அவர் குறிப்பிட்டார். அடுத்து திரையில் தோன்றும் தொகுப்பாளர், "படுகாயமடைந்துள்ள பெண் ஊழியரின் பேட்டி அது" என்கிறார். அவர் படுகாயமடைந்ததாக இவர்கள் தொலைக்காட்சியே கூட காட்டவில்லை.
அடுத்து துவங்கியது சிறப்பு அழைப்பாளர்களின் சிறப்பு கருத்துகள். நேரலை என்றுதான் போட்டார்கள். புதிய தலைமுறை ஆசிரியர் மாலன் மற்றும் வெப்துனியா ஆசிரியர் அய்யநாதன் ஆகிய இருவரையும் தொகுப்பாளர் வரவேற்கிறார். மாலன் கருத்து தெரிவிக்கிறார். கருத்து மாறுபடுவதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு என்கிறார். கொலை செய்யப்பட்டார் என்ற பொய்யான தகவலை செய்தியாக்கியதோடு, கட்சியின் ஒருபகுதியினர்தான் அந்தக் கொலைக்கு காரணம் என்று ஒளிபரப்பியதா கருத்து மாறுபாடு?


அவர் அதோடு நிற்கவில்லை. ஊடகவியலாளர்களும் மனிதர்கள்தான். அவர்கள் தவறு செய்யமாட்டார்கள் என்று சொல்ல முடியாது என்று கூறத் துவங்கினார். மக்கள் தொலைக்காட்சி செய்தியே தவறு என்று கூறிவிடுவாரோ என்று பயந்த தொகுப்பாளர், வெப்துனியா அய்யநாதனிடம் பேசத்துவங்குகிறார். துவங்கும்போதே, நான் முன்பே கூறியபடி.. என்கிறார் அய்யநாதன். நேரலையாக நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அப்போதுதான் அவர் வந்து அமர்ந்ததாகக் காட்டினார்கள். அப்புறம் எப்படி "நான் முன்பே கூறியபடி" என்று கூறுகிறார்? அப்படியால் அவர் முன்பே பேசியது வெட்டப்பட்டு விட்டதா? அந்த வெட்டப்பட்ட பகுதியில் அவர் என்ன பேசினார்? நேரலையில் எதிரலை அடித்துவிட்டதா?இந்த இருவரிடமும் பேசிக் கொண்டிருந்தபோதுதான் தொகுப்பாளர் தங்கள் தொலைக்காட்சி சார்பாக அந்தர் பல்டி ஒன்றை அடித்தார். மக்கள் மத்தியில் நிலவிய சந்தேகங்களை செய்தியாக்கினோம் என்றார். செய்தி வாசிக்கும்போது இப்படிச் சொல்லவில்லையே? உடற்கூறு அறிக்கை என்றல்லவா கூறினீர்கள்? காவல்துறை அதை மறுத்துள்ளதே? அந்த மறுப்பு செய்தியையாவது நீங்கள் ஒளிபரப்பியிருக்க வேண்டுமே...


தாக்குதலுக்கு கடுமையான கண்டன அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருக்கிறார். அதில் செய்தி ஆசிரியரிடம் சிபிஎம் மாநிலச்செயலாளர் பேசியதாகவும்(அவ்வாறு அவர் பேசவில்லை என்பது ஒருபுறம்), மறுப்பு அறிக்கை வெளியிட செய்தி ஆசிரியர் ஒப்புக் கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளார். வெறுப்புணர்வைக் கிளப்பிக் கொண்டிருந்த தொகுப்பாளரிடம் இதைச் சொல்லியிருக்கலாமே...??


மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுவின் அலுவலகத்திற்குள்ளேயே புகுந்து தாக்கி அட்டுழியம் செய்துள்ளார்களே... பொதுவுடமை இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரான தோழர்.பி.ராமமூர்த்தியின் படத்தையும் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தைத் தாக்கியவர்கள் விட்டுவைக்கவில்லை. எதையும் தயங்காமல் செய்தி வெளியிடும் மக்கள் தொலைக்காட்சி என்று சொல்லிக் கொள்பவர்கள், அதை செய்தியாக்கி வெளியிட்டீர்களா... அவர்கள்தான் உங்களைப் பின்னாலிருந்து இயக்குபவர்கள் என்பதால் பத்திரிகை தர்மத்தை காவு கொடுத்து விட்டீர்களா..??


நேரலையில் எதிரலைகள்தான் கிடைக்கும் என்பதால்தான் கடையை சீக்கிரமே இழுத்து மூடிவிட்டு கிளம்பி விட்டீர்களா? மக்கள் சந்தேகங்களை வைத்து செய்தியாக்கினீர்களே... இதோ, இந்த சந்தேகங்களை வைத்து செய்தியாக்குங்கள் பார்க்கலாம்..

* சந்தேகங்களை செய்தியாக்கிய நீங்கள், ஏதோ துப்பறிவு நிறுவனம் போலல்லவா செய்தியை வெளியிட்டீர்கள்... ஏன்?


* ஒருமுறையல்ல, இருமுறை செய்தி ஒளிபரப்பினீர்கள். இதில் பொதுவான நிகழ்ச்சிகளுக்கிடையில் விளம்பரம் வேறு. சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்ற குறைந்தபட்ச பத்திரிகை தர்மம் இல்லையே... ஏன்..?


* உங்கள் செய்தியை மறுநாள் காலையில் கூட வேறு எந்த ஊடகமும் வெளியிடவில்லையே... அது ஏன்?


* காவல்துறையின் மறுப்பு வந்தபிறகும் எதுவும் நடக்காததுபோல் இருந்தது ஏன்?


* பிரச்சனை ஆனவுடன் மக்கள் மத்தியில் நிலவும் சந்தேகத்தைதான் செய்தியாக வெளியிட்டோம் என்று தொகுப்பாளர் மூலம் பல்டியடித்தது ஏன்?

* இதெல்லாம் இருக்கட்டும், கட்சி அலுவலகத்தின் முன் நின்ற தீக்கதிர் வாகனத்தை அடித்து நொறுக்கியிருக்கிறார்களே? அது பத்திரிக்கை சுதந்திரத்துக்கு எதிரானதா... இல்லையா??


கேள்விகளை தொடுத்துக் கொண்டே போகலாம். சிறப்புச் செய்தியாக்குவீர்களா?


- சந்தேகம் சாமிக்கண்ணு

Saturday, March 6, 2010

குஜராத் நிலைமை தெரியுமா?



அமிதாப் பச்சனுக்கு மல்லிகா சாராபாய்

திறந்த மடல்


எனதருமை பச்சன்ஜி,


குஜராத்தி என்ற முறையில் வாழ்த்துகிறேன். நீங்கள் உண்மையிலேயே ஒரு அற்புதமான நடிகர். நீங்கள் அறிவுகூர்ந்தவர். புத்திசாலித்தனமான வர்த்தகர். ஆனால் எந்தப் பொருளை வாங்க வேண்டுமென்று நீங்கள் விளம்பரங்களில் சொல்கிறீர்ளோ, அதை நான் நம்ப வேண்டுமா? உங்களுக்கு எதிலெல்லாம் நம்பிக்கை இருக்கிறது என்பதைப் பார்க்கலாமா?(பெரும் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவ்வாறு சொல்வதாக இருந்தாலும்..!). பிபிஎல், ஐசிஐசிஐ, பார்க்கர் மற்றும் லக்சர் பேனாக்கள், மாருதி வெர்சா, காட்பரி சாக்கலேட்டுகள், நெரோலக் பெயிண்ட்ஸ், டாபர், இமாமி, எவரெடி, சஹாரா சிட்டி ஹோம்ஸ், டிஙடமாஸ், பினானி சிமெண்ட் மற்றும் ரிலையன்ஸ். இதுதான் அந்தப் பட்டியல். தற்போது குஜராத்.


உங்கள் வீடு பினானி சிமெண்டால் கட்டப்பட்டதா? காட்பரி சாக்கலேட்டோ அல்லது டாபர் நிறுவனத்தின் ஹாஜ்மோலாவையோ உண்மையிலேயே நீங்கள் விரும்புகிறீர்களா? எந்தப் பேனாவை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்? விளம்பரத்துக்கான படப்பிடிப்பு நேரத்தைத் தவிர, வேறு சமயத்தில் மாருதி வெர்சா காரை ஓட்டியதுண்டா? வீட்டிற்காக வாங்கச் சொல்லும் நெரோலக் பெயிண்டில் ஈயம் இருக்கிறது. அது உங்களையும், மற்ற பலரையும் கொஞ்சமாக, கொஞ்சமாக விஷமேற்றி விடும் என்பதை நீங்கள் அறிவீர்களா?(உங்கள் வீட்டில் அந்த பெயிண்டைதானே பயன்படுத்துகிறீர்கள்..?). இல்லையென்றால், வெறும் பணத்துக்காகத்தான் இந்த விளம்பரங்களில் தோன்றுகிறீர்களா?


ஆனால் எந்தவித நேரடியான வருமானத்தையும் பெற்றுக்கொள்ளாமல் குஜராத்தை முன்னிறுத்த ஒப்புக்கொண்டீர்கள்? பிராண்ட் குஜராத்தை முன்னிறுத்தும் முடிவுக்கு எப்படி சரி என்று சொன்னீர்கள்? மாநிலத்தின் நிலை என்ன என்பதை கேட்டீர்களா? எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இந்த முடிவும், அறிவிப்பும் ஒரே ஒரு சந்திப்பிற்குப் பிறகு வெளிவந்தது. அதனால்தான் குஜராத்தில் உள்ள நிலைமை பற்றி நீங்கள் கவனமாகப் பார்த்திருக்க மாட்டீர்கள் என்று நான் சந்தேகப்படுகிறேன்.


அதனால் குஜராத்தி என்ற முறையில், எனது மாநிலத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்த அனுமதி கொடுங்கள். துடிப்பான குஜராத் என்ற பெயரில் கடந்த இரண்டாண்டுகளாக நடத்தப்பட்டு வரும் விழாக்களின் மூலம் லட்சக்கணக்கான கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்று அனைவருக்குமே தெரியும். ஆனால் இந்த ஒப்பந்தத்தைத் தாண்டி அடுத்த கட்டத்தை வெறும் 23 விழுக்காடு ஒப்பந்தங்கள்தான் அடைகின்றன என்பதை குஜராத் அரசே ஒப்புக்கொண்டுள்ளதை நீங்கள் அறிவீர்களா? பெரும் பணம் படைத்த வணிக நிறுவனங்களுக்கு எக்கச்சக்கமான மானியங்கள் அள்ளி வழங்கப்படுகின்ற வேளையில், 75 ஆயிரம் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் மூடப்பட்டு, அதனால் 10 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர் என்பது தெரியுமா?


குஜராத்தை வளப்படுத்த பெரும் முதலாளிகள் வரிசையாக நிற்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். யாரை வளப்படுத்த? நமது ஏழைகள் பரம ஏழைகளாக மாறி வருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? 1993 முதல் 2005 வரையில் வறுமைக்குறைப்பில் அகில இந்திய சராசரி 8.5 விழுக்காடாகும். ஆனால் குஜராத்தில் அது வெறும் 2.8 விழுக்காடு மட்டும்தான். குடும்பத்தலைவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த விவசாயக்குடும்பமே குஜராத்தில் தற்கொலை செய்து கொள்கிறது.


நர்மதா திட்டத்தில் 29 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டுள்ளார்கள். இதுவரை 29 விழுக்காடு பணிதான் நடந்துள்ளது. அதிலும் கட்டுமானப் பணியின் தரம் மிக மோசம். கடந்த ஒன்பது ஆண்டுகளில் 308 இடங்களில் உடைப்பு(எந்த சிமெண்டில் கட்டினார்கள் என்பது உங்களுக்கு ஒருவேளை தெரிந்திருக்கலாம்..!!) ஏற்பட்டது. லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டார்கள். உப்பளங்களில் இருந்து உப்பு அடித்துச் செல்லப்பட்டது. 1999ல் 4 ஆயிரத்து 743 குஜராத் கிராமங்கள் குடிநீர் கிடைக்காமல் இருந்தன. இரண்டே ஆண்டுகளில் அது 11 ஆயிரத்து 390 ஆக உயர்ந்தது.


குஜராத்தின் தலைமை நிர்வாகியாக சித்தரிக்கப்படும் எங்கள் முதல்வரின் தலைமையில் கடனாளிகளின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளோம். 2001 ஆம் ஆண்டில் மாநிலத்தின் மீதான கடன் 14 ஆயிரம் கோடியாக இருந்தது. இப்போது 1 லட்சத்து 5 ஆயிரம் கோடியாகிவிட்டது. இந்தக்கடனைத் தீர்க்க ஒவ்வொரு ஆண்டும் 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்கிறோம். இது எங்கள் மாநில பட்ஜெட்டில் 25 விழுக்காடாகும்.


இதற்கிடையில், கல்வித்துறையில் சரிவு. ஏழைகளுக்காக புதிதாக எந்த அரசு மருத்துவமனையும் கட்டப்படவில்லை. மீனவர்கள் பிச்சைக்காரர்களாக மாறி வருகிறார்கள். பிரசவத்தின்போது இறக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு பாலியல் பலாத்காரம், பெண்கள் மீது ஒரு நாளைக்கு சராசரியாக 17 தாக்குதல்கள், கடந்த பத்தாண்டுகளில் 8 ஆயிரத்து 802 தற்கொலைகள் மற்றும் "விபத்தால்" 18 ஆயிரத்து 152 பெண்கள் மரணம் என்ற புள்ளிவிபரங்கள் அனைத்தும் அதிகாரபூர்வமாக அரசால் தரப்பட்டுள்ளதாகும். உண்மையான விபரம் எவ்வளவு என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.


சோமநாத் கோவிலும், காந்தியும் தன்னை ஊக்குவித்ததாக நீங்கள் கூறியுள்ளீர்கள். சோம்நாத் கோவில் மக்களுக்காகக் கட்டப்பட்டது. காந்தியும் மக்களோடு மக்களாக இருந்தவர். உங்களுக்கு உண்மையிலேயே இந்த மாநில மக்கள் மீது அக்கறை இருக்கிறதா? இருந்தால் உங்கள் முடிவு வேறுமாதிரியாக இருந்திருக்கும். இக்கடிதத்தை படித்து முடிவெடுப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.


- மல்லிகா சாராபாய்

Friday, March 5, 2010

கடைசி இடமே நமது இலக்கு!



தங்கள் பொருளாதார அணுகுமுறையில் புதுமைகளைக் கடைப்பிடிப்பதில் இந்தியா 56வது இடத்திற்கு இறங்கிவிட்டது என்று இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்திய ஆய்வு கூறுகிறது. கடந்த ஆண்டு 41வது இடத்தில் இந்தியா இருந்திருக்கிறது.


சுமார் 130 நாடுகளை வரிசைப்படுத்தியிருக்கிறார்கள். ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை, இந்தோனேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை இந்தியா பின்னுக்குத்தள்ளிவிட்டது. முதல் பத்து இடங்களில் சீனாவின் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரும் உள்ளன. முதல் ஐந்து இடங்களில் சீனாவின் ஹாங்காங் இடம் பிடித்துள்ளது.


இந்த ஆய்வு உலக வங்கி, உலகப் பொருளாதார மாமன்றம், சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் ஆகியவற்றில் உள்ள விபரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் முதலிடத்தில் ஐஸ்லாந்து இடம் பெற்றிருப்பது ஒட்டுமொத்த ஆய்வையே கேள்விக்குறியாக்கியுள்ளது.


அமெரிக்காவில் துவங்கி, சர்வதேச அளவில் நெருக்கடியாக மாறிய பொருளாதார சிக்கலால் ஐஸ்லாந்து நாடே திவாலானது. ஒட்டுமொத்த நாடே திவாலாகும் அணுகுமுறைதான் உலகிலேயே சிறந்த அணுகுமுறை என்று ஆய்வு கருதினால் தரவரிசையை மேலிருந்து பார்க்க வேண்டுமா அல்லது கீழிருந்து பார்க்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.


வங்கிகள் திவாலில் இரட்டை சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் அமெரிக்கா 11வது இடத்தில் இருக்கிறது. அரசுக்கட்டுப்பாட்டில் நிதித்துறையை வைத்திருந்ததால் நெருக்கடியில் சிக்காமல் தப்பிப்பிழைத்த சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் புதுமையைக் கடைப்பிடிக்கவில்லையாம்.


அபாயப் பாதையில் அழைத்துச் செல்வதுதான் புதுமை என்று இவர்கள் கருதினால், நம்மைப் போன்ற வளரும் நாடுகளுக்கு புதுமையே அவசியமில்லை. இவர்களின் தரவரிசையில் கடைசி இடத்தைப் பிடிப்பதற்கான முயற்சியில்தான் ஈடுபட வேண்டும்.