Monday, December 28, 2009

அழவைக்கும் வெங்காய விலை..!


அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வால் மக்கள் கடுமையான துயரைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருட்களின் விலை உச்சத்திற்குச் சென்றுள்ளது. பல தனியார் நிறுவனங்களும், ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் சிலரும் இதற்கெல்லாம் முன்பேர வர்த்தகம் காரணமல்ல என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் இந்த விலையுயர்வு காரணமாக விளைபொருட்கள் மீதான முன்பேர வர்த்தகத்தைத் தடை செய்யப் போகிறோம் என்கிறார்கள் மத்திய அரசு அதிகாரிகள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகள் அத்தியாவசியப் பொருட்களை முன்பேர வர்த்தகத்தில் ஈடுபடுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

எகிறிய அரிசி, கோதுமை விலை

கடந்த 2007ம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றிருந்த இடதுசாரிகளின் வற்புறுத்தலால், அரிசி, கோதுமை, துவரம்பருப்பு மற்றும் உளுந்து மீது முன்பேர வர்த்தகம் மேற் கொள்ள மத்திய அரசு தடைவிதித்தது. இதன் பிறகு, சர்க்கரை உள்ளிட்ட மேலும் பல பொருட்கள் மீதும் முன்பேர வர்த்தகம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சென்ற நவம்பர் மாதத்தில், அனைத்து பொருட்களுக்கான பணவீக்க விகிதம் (4.78 சதவீதம்) அக்டோபர் மாதத்தைக் காட்டிலும் நான்கு மடங்கு உயர்ந்துள்ளதால் அனைத்து விளைபொருட்கள் மீதும் முன்பேர வர்த்தகம் மேற்கொள்ள தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இயற்கை ரப்பர் விலை, வழக்கத்திற்கு மாறாக மிகவும் உயர்ந்துள்ளது. இதற்கு ஊக அடிப்படையில் மேற்கொள்ளப்படும் முன்பேர வர்த்தகமே காரணம் என்று மோட்டர் வாகன டயர் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமை இயக்குநர் கூறுகிறார்.

இரண்டு மடங்கான உருளைக்கிழங்கு

பொதுமக்களில் கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தக்கூடிய உருளைக்கிழங்கின் விலை அதிகரித்துக் கொண்டே போகிறது. கிடைக்கும் வருமானத்தில் ஐம்பது விழுக்காட்டை உணவுப்பொருட்களுக்காகவே மக்கள் செலவிடுகிறார்கள். ஒரே ஆண்டில் உருளைக் கிழங்கு விலை இரண்டு மடங்கிற்கு மேல் அதாவது 136 விழுக்காடு அதிகரித்துள்ளது. பருப்பு வகைகள் (40 விழுக்காடு), வெங்காயம் (15.4 விழுக்காடு), கோதுமை (14 விழுக்காடு), பால் (13.6 விழுக்காடு), அரிசி (12.7 விழுக்காடு), பழங்கள் (11 விழுக்காடு) விலையும் உயர்ந்துள்ளது. இதனால் உணவுப் பொருட்களுக்கான பணவீக்க விகிதம் இதுவரை இல்லாத அளவிற்கு 20 சதவீதத்தை எட்டி உள்ளது. அன்றாடம் தேவைப்படும் இந்தப் பொருட்களின் விலையுயர்வு மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது.

பொய்த்த பருவமழை

விலை கடுமையாக அதிகரித்துள்ளதற்கு, போதிய அளவு மழையின்றி உற்பத்தி குறைந்ததும் காரணமாகும். ஒரு ஆண்டு சர்க்கரையின் தேவை 2.35 கோடி டன்னாக இந்தியாவில் இருக்கிறது. அதே சமயம், நடப்பு சர்க்கரை பருவத்தில் (சர்க்கரை பருவம் என்பது முந்தைய ஆண்டின் அக்டோபரிலிருந்து நடப்பாண்டு செப்டம்பர் வரையிலானது) 1.60 கோடி டன் மட்டுமே சர்க்கரை உற்பத்தியாகும் எனக் கூறப்படுகிறது. அதாவது 75 லட்சம் டன் சர்க்கரை பற்றாக்குறையாக இருக்கப்போகிறது. கடந்த நிதியாண்டில், பத்து கோடி டன்னாக இருந்த அரிசி உற்பத்தி, நடப்பு நிதியாண்டில் 8.45 கோடி டன்னாகக் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் சமையல் எண்ணெய் தேவை ஆண்டிற்கு 1.20 கோடி டன் சமையல் எண்ணெய் ஆகும். ஆனால் 65 லட்சம் டன்னாகத்தான் உற்பத்தி இருக்கிறது.

கடந்த 2003-04 ஆம் நிதியாண்டில் ஒரு ரூபாய்க்கு 7.70 கிராம் உணவு தானியம் கிடைத்தது. இது தற்போது பாதியாக அதாவது 3.7 கிராமாக சரிவடைந்துள்ளது. உணவு பொருட்கள் விலை உயர்வுக்கு உற்பத்தி குறைவுதான் காரணம் என்று கூறப்பட்டாலும், முன்பேர வர்த்தகமும் ஒரு காரணமாக உள்ளது என்று பல பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால்தான் விலையுயர்வுக்குக் காரணமாக இருக்கும் முன்பேர வர்த்தகத்திற்குத் தடைவிதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகள் வலியுறுத்தின. விலைவாசி உயர்வுக்கும், முன்பேர வர்த்தகத்திற்கும் உள்ள தொடர்பை ஆராயுமாறு பொருளாதார நிபுணரும், மத்தியத் திட்டக்குழு உறுப்பினருமான அபிஜித் சென் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அதன் அறிக்கையில் "விலைவாசி உயர்வுக்கு முன்பேர வர்த்தகம் வழிவகுத்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.

Sunday, December 27, 2009

ஏழு லட்சம் காலிப்பணியிடங்கள்...!!


ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் வேலைக்கான கனவுகளோடு படிப்பை நிறைவு செய்து கொண்டிருக்கின்றனர். வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு வேலை கிடைக்காமல் நாற்பது வயதைத் தொட்டுக் கொண்டிருப்பவர்களின் பட்டியலோ மிக நீளமானது. இவ்வளவு வேலை வாய்ப்பை உருவாக்கப்போகிறோம் என்ற மத்திய, மாநில அரசுகளின் உறுதிமொழிகளைப் பட்டியலிட்டாலும் அந்தப்பட்டியலுக்கு போட்டியாக நீளத்தான் செய்யும். கடந்த பத்தாண்டுகளாக காலியாக இருக்கும் அரசுப்பணியிடங்களை நிரப்ப அரசுகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தமிழகத்தில் இரண்டு லட்சம் அரசுப்பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. 2004 ஆம் ஆண்டிலிருந்து வேலைக்கு நியமிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 6 ஆயிரத்து 816 தான்.


இந்த 6 ஆயிரத்து 816 பேரில் கிராம நிர்வாக அலுவலர்(வி.ஏ.ஓ) பதவிக்கு மட்டும் 2 ஆயிரத்து 500 பேர் நியமிக்கப்பட்டனர். இந்த விளம்பரத்தைப் பார்த்து சுமார் ஏழு லட்சம் பேர் விண்ணப்பம் செய்தனர். எந்த அளவிற்கு வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது என்பதை அந்த பரபரப்பு காட்டியது. இந்த 6 ஆயிரத்து 816 பேரைத் தேர்வு செய்வதற்கான தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால் அது 13 லட்சத்தைத் தொடுகிறது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு பஞ்சமில்லை. வேலைகளுக்கும் பஞ்சமில்லை. வேலையில்லாதவர்களுக்கு வேலை தர வேண்டும் மற்றும் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பதற்கான அரசின் முன்முயற்சிக்குதான் பஞ்சம்.


ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை மாநில அரசு அறிவித்து வருகிறது. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஆட்பலம் இருக்கிறதா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பே அந்த சமயத்தில் காலியாக இருந்த 1 லட்சத்து 86 ஆயிரத்து 837 பணியிடங்களை படிப்படியாக நிரப்பப் போவதாக முதல்வரே உறுதியளித்திருந்தார். ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை. சில காலிப்பணியிடங்களுக்கு விளம்பரம் வந்தாலே விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கை பெரும் அளவிலேயே இருந்து வருகிறது. இத்தகைய நிலைமைகளைச் சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பணியிடங்களை நிரப்புமாறு தொடர்ந்து கோரிக்கையை வைத்து வருகிறது.


மாநில அரசு எந்திரத்தின் முக்கியமான அங்கம் வருவாய்த்துறையாகும். இந்தத் துறையின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 12 ஆயிரமாகும். அதில் நான்காயிரம் இடங்கள் காலியாக உள்ளன. அதாவது மூன்றில் ஒரு பகுதி ஊழியர்கள் இனிதான் நியமிக்கப்பட வேண்டும். ஒரு திட்டத்தை அறிவித்தால், பொது மக்களிலிருந்து இதனால் பயனடையப் போகிறவர் யார் என்பதை இந்தத்துறைதான் தீர்மானிக்கும். ஆனால் அதைத் தீர்மானிக்கப் போதிய ஊழியர்கள் தேவை என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் திட்டங்களுக்கான அறிவிப்பு வந்துகொண்டே இருக்கின்றன. சரியான நேரத்தில் திட்டத்தின் பலன் மக்களுக்கு போய்ச்சேர இயலாது என்பதுதான் இந்த அவலத்தின் விளைவாகும்.


எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள விலைவாசியின் தாக்குதலிலிருந்து மக்களைக் காக்க ரேசன் கடைகளை முறைப்படுத்துவதுதான் தீர்வு என்பது நிபுணர்களின் கருத்து. ஆனால் இந்தத்துறையின் உயர்மட்ட அலுவலகங்களிலிருந்து ரேசன் கடைகள் வரை பணியிடங்கள் காலியாக இருப்பதே வழக்கமானதாகப் போய்விட்டது. அண்மையில் ரேசன் கடைகளுக்கான ஊழியர்களை நியமித்திருந்தாலும் போதிய அளவு நியமனம் நடைபெறவில்லை. குறிப்பாக, உணவு வழங்கல் ஆணையர் அலுவலகத்திலேயே எக்கச்சக்கமான இடங்கள் காலியாக இருக்கின்றன. இதேபோல் கூட்டுறவுத்துறையில் 600 காலியிடங்கள், தொழிலாளர் துறையில் 750 காலியிடங்கள், வணிகவரித்துறையில் 4 ஆயிரத்து 275 என்று கணக்கிட்டுக் கொண்டே சென்றால் மொத்தக் காலியிடங்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்தைத் தொடுகிறது. இதில் அரசுசார் நிறுவனங்களில் உள்ள காலியிடங்களும் அடங்கும்.


வேலைவாய்ப்புத்துறையின் நிலையே மோசமாகத்தான் இருக்கிறது. சராசரியாக ஐந்து லட்சம் பேர் புதிதாக வேலைவாய்ப்பு அலுவலகங்களின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள். 62 லட்சம் பேர் வேலைக்காகப் பதிவு செய்துள்ளார்கள். இந்தத்துறையில் இருக்க வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கை 1,100. இருப்பதோ 630 பேர் மட்டும்தான். 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் மேலும் இரண்டு அல்லது மூன்று லட்சம் அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறப் போகிறார்கள். காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை ஏழு லட்சத்தைத் தொட்டுவிடும். இந்தப் பணியிடங்களை நிரப்பும் வேலை ஒட்டுமொத்த சமூகத்திற்கு நல்லது என்பது ஒருபுறம். சமூக நீதிக்காக ஏங்கித்தவிக்கும் தலித்துகள் குறிப்பாக, அருந்ததியர்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் அது ஏற்படுத்தும்.

Friday, December 25, 2009

பயங்கரவாதத்தின் ஆணிவேரை அசைக்கும் வாய்ப்பு

கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதை என்பார்கள். அதுபோலத்தான் மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணை சென்று கொண்டிருக்கிறது. பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் தூண்டுதலால் இந்தத் தாக்குதலை நடத்துவது தொடர்பான சதித்தீட்டம் தீட்டினார்கள் என்று அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஹெட்லி மற்றும் அவரது சகா தகாவுர் ராணா ஆகிய இருவரையும் அமெரிக்க மத்தியப் புலனாய்வுத்துறை கைது செய்தது. இந்தக் கைதுக்குப்பிறகு விசாரணை வெகு வேகமாக நகர்வது போன்ற தோற்றம் ஏற்பட்டது.


ஆனால் புதிய, புதிய பிரச்சனைகள் கிளம்பிக் கொண்டிருக்கின்றன. கைதாகியுள்ள டேவிட் ஹெட்லி அமெரிக்க மத்தியப் புலனாய்வுத்துறையின் கண்காணிப்பில் ஏற்கெனவே இருந்தார் என்ற செய்தி பல்வேறு சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. அவ்வாறு கண்காணிப்பில் இருந்தவருக்கு ஐந்தாண்டுகள் செல்லுபடியாகக்கூடிய 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்தியாவிற்குள் வந்து செல்வதற்கான வர்த்தக விசா வழங்கப்பட்டுள்ளது. இந்த விசாவைப் பயன்படுத்திதான் ஹெட்லி மற்றும் ராணா ஆகியோர் தங்கள் சதித்திட்டத்தைத் தீட்டுவதற்காக அடிக்கடி இந்தியா வந்து சென்றுள்ளார்கள்.


அமெரிக்காவைத் தங்கள் தளமாகக் கொண்டு இயங்கிய இந்த இருவரின் விசா தொடர்பான ஆவணங்களைக் காணவில்லை என்று சிகாகோவில் உள்ள இந்திய துணை தூதரகம் அடுத்த குண்டை வீசியுள்ளது. கேட்டால், தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று மத்திய வெளியுறவுத்துறை பொறுப்பாகப்(!) பதிலளித்துக் கொண்டிருக்கிறது. இருவரையும் கைது செய்த அமெரிக்க மத்தியப் புலனாய்வுக்குழு எந்த அளவுக்கு இந்திய விசாரணை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தருகிறது என்பதில் இந்திய வெளியுறவுத்துறை மற்றும் உள்துறை ஆகிய இரண்டிற்கும் இடையில் கூட ஒருமித்த கருத்து இல்லை.


மும்பையில் நடந்த தாக்குதலாக இருந்தாலும் சதித்திட்டம் தீட்டிய சூத்திரதாரிகளை விசாரிக்க உங்களை அனுமதிக்க முடியாது என்று இந்திய விசாரணை அதிகாரிகளிடம் அமெரிக்க புலனாய்வுத்துறையினர் கூறிவிட்டனர். மும்பையில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பே ஹெட்லி மீது தங்கள் சந்தேகப் பார்வையைப் பதித்துவிட்ட அமெரிக்க புலனாய்வுத்துறை அதை ஏன் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்ற நியாயமான கேள்வியைப் பலரும் எழுப்பியுள்ளார்கள்.


அமெரிக்க உளவுத்துறை ஏஜண்டுகள் பட்டியலில் ஹெட்லியின் பெயரும் அடக்கம் என்று மார்க்சிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான பிருந்தா காரத் குற்றம் சாட்டியுள்ளார். இந்திய விசாரணை அதிகாரிகளிடம் ஹெட்லியை ஒப்படைத்தால் அமெரிக்காவின் இரட்டை வேடம் அம்பலமாகிவிடும் என்பதால்தான் அதைச் செய்ய மறுக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். போதை மருந்து கடத்தலை செய்து வந்த ஹெட்லி, 1999 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க உளவுத்துறை சிஐஏவில் பணியாற்றியுள்ளார்.


முழுமையான விசாரணை நடைபெற்றால் பாகிஸ்தானிலிருந்து இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகளின் நடவடிக்கைகள் அம்பலமாவதோடு, அந்த அமைப்புகளுக்கு அமெரிக்காவிடமிருந்து கிடைக்கும் உதவிகளும் வெளிச்சத்திற்கு வரும். குற்றவாளிகளை விசாரிக்கும் உரிமையை இந்தியா வலியுறுத்திப் பெறுவதன் மூலம் பயங்கரவாதத்தின் ஆணிவேரை அசைத்துப் பிடுங்கி எறியும் வாய்ப்பு கிடைக்கும். இந்த வாய்ப்பை மத்திய அரசு நழுவவிடக்கூடாது.

Friday, December 18, 2009

மதுரை இன்னும் அங்கதான் இருக்கா...?


தீர்ப்பு வந்தவுடன் போனால் சன் டிவி உரிமையாளர் கலாநிதி மாறனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று பயந்திருந்த பத்திரிகையாளர்கள் சில நாட்கள் கழித்து அவரைச் சந்திக்கிறார்கள். தினகரன் ஊழியர்கள் எரிந்து சாம்பலானபோது கொந்தளிப்போடு பேட்டி கொடுத்த கலாநிதி மாறனின் மனநிலை தீர்ப்புக்குப் பிறகு எப்படி இருக்கிறது என்பதை பார்ப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது.
பத்திரிகையாளர்கள் : தினகரன் அலுவலகம் தாக்குதல் தொடர்பான தீர்ப்பு வந்துவிட்டதே...?
கலாநிதி மாறன்(உற்சாகமாக) : ஆமாம், நீதி வென்றது.
பத்திரிகையாளர்கள் : அலுவலகம் எரிக்கப்பட்டப்ப நீங்க என்ன சொன்னீங்களா அதுக்கு மாறான தீர்ப்பு வந்துருக்கே...
கலாநிதி மாறன் : நீங்கள் வேண்டுமென்றே எதையோ கிளறுகிறீர்கள்... நானாகவே சொல்லிடுறேன்... உங்க எதிர்பார்ப்பு பொய்யாகிரும்.. நான் கடைசியாக மதுரைக்கு போனது இன்னும் நினைவுல அப்படியே இருக்கு... அப்ப சின்னப்பையனா எங்கப்பாவோட விரலைப் புடிச்சுக்கிட்டே போனேன்...அதுக்கப்புறம் மதுரைய பாக்கவே இல்லை... தெற்குப்பகுதிலதான இருக்கு..
பத்திரிகையாளர்கள் : இன்னும் அங்கதான் இருக்கு...நாங்க அதக் கேக்க வரல...
கலாநிதி மாறன் : பின்ன என்ன கேக்கப்போறீங்க... தினகரன்னு சொல்றீங்களே... அப்படி ஒரு பத்திரிகையே இல்லை..அது நின்னு போய் பல வருஷம் ஆச்சு... இதெல்லாம் நீங்க கௌப்பி விட்டதுதான...
பதறிப்போன பத்திரிகையாளர்கள் தயாநிதி மாறனிடமாவது கேட்கலாம் என்று அவரைத் தேடினார்கள். அவர் கோபாலபுரத்தில் இருப்பது தெரிந்து "ஆஹா... ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிக்கலாம். கலைஞரிடமும் அப்படியே கேட்டு விடலாம்" என்று அங்கு படையெடுக்கிறார்கள்.
முதல்வர் கருணாநிதி : என்ன... பத்திரிகை அன்பர்கள்லாம் சேந்து வந்துருக்குற மாதிரி இருக்கே.. உங்களுக்கு தொந்தரவு வேணாம்னுதான நானே கேள்வி கேட்டு பதில் தந்துட்டு இருக்கேன்...
பத்திரிகையாளர்கள் : நாங்க கலாநிதி மாறன் வீட்டுல இருந்து வர்றோம்...
கருணாநிதி : இப்பதான் கண்மணி மாறனின் அன்புச் செல்வத்துக்கிட்ட இருந்து அழைப்பு வந்தது... நானும் கேள்விப்பட்டேன்...
பத்திரிகையாளர்கள் : என்ன கேள்விப்பட்டீங்க...
கருணாநிதி : தினகரன் பத்திரிகை நின்னு போய் ரொம்ப நாளாச்சுன்னு...
பத்திரிகையாளர்கள் : உறுதியாச் சொல்றீங்களா...

கருணாநிதி : இதுல என்ன இருக்கு... இந்த விஷயத்துல மேற்கு வங்கத்துல என்ன நிலைமையோ அதுதான் இங்கயும்...
அப்போது அங்கிருந்த மத்திய அமைச்சர் தயாநிதிமாறனும் தலையிட்டார், "நாங்க சொல்றத நம்பலைன்னா வெளியில தினகரன் நிருபர் நிக்குறாரு... அவர்கிட்டயே கேட்டுக்குங்க... அப்படியும் நம்பலைன்னா ஒண்டிக்கு ஒண்டி வர்றீங்களா..."
திடீர்த் தாக்குதலால் அதிர்ந்து போய்க் கலைஞரை நோக்கித் திரும்பினார்கள் பத்திரிகையாளர்கள்.
கருணாநிதி : ஒன்றும் கவலைப்படாதீர்கள். பெரியார் மற்றும் அண்ணாவின் தம்பியாகிய நானே உங்கள் மனநிலையை எடுத்துரைப்பேன். யாரிடம் எடுத்துரைப்பேன். முதல்வராகிய என்னிடமே எடுத்துரைப்பேன்...
எல்லாரும் ஒரே மாதிரியா கூட்டு சேந்துட்டாங்கன்னு சொல்லிவிட்டு ஓடுகிறார்கள் பத்திரிகையாளர்கள்.
*******

Friday, December 11, 2009

மூடி மறைக்கப்படும் படுபாதகச்செயல்


திரிணாமுல் காங்கிரசின் ஆதரவுடன் மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகள் நடத்தி வரும் வெறிச்செயல்களால் டிச.10 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூவர் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்தச் செய்தி கிட்டத்தட்ட அனைத்து பத்திரிகைகளிலும் உள்பக்கங்களில் சிறிய அளவில் இடம் பெற்றுள்ளது.

Thursday, December 3, 2009

கம்யூனிஸ்டுகள் சுமப்பது சுகமான சுமை


கே : கம்யூனிஸ்டுகளின் இப்போதைய முக்கிய எதிரி யார்?

ப : கம்யூனிசம்தான். அவர்கள் அதைத் தூக்கிக் கொண்டு அலைய வேண்டியிருக்கிறது. பிரேதம் கனக்கத்தான் செய்யும். அதனால்தான் தடுமாற்றம். அதுதான் சுமை. அதுதான் சோதனை. அதுதான் எதிரி.

* * *

கே : இனி பா.ஜ.க.; இனிமேலும் பா.ஜ.க.; இனியுமா பா.ஜ.க.?

ப : உண்டு; தேவை; ஆமாம்.
* * *
டிச.9 தேதியிட்ட துக்ளக் இதழில் சோ அளித்த பதில்கள்தான் இவை. அண்மைக்காலமாகவே கம்யூனிஸ்டுகளைப் பற்றி அதிகமாக விமர்சிக்கத் துவங்கியிருக்கிறார் சோ. அதனால் கொள்கையே எதிரி என்பது போன்று சித்தரிக்க முனைந்துள்ளார். கனமாக இருப்பதெல்லாம் பிரேதம் என்று முடிவு செய்துவிட்டார் போலும். ராணுவத்தினருக்கான பிரேதப் பெட்டி வாங்கியதில்கூட ஊழல் செய்து சாதனை புரிந்த கட்சியின் ஆதரவாளராயிற்றே.. அதனால்தான் பிரேதம் நினைவுக்கு வருகிறது.

ஆம், கம்யூனிசம் கனக்கத்தான் செய்கிறது. பிரேதம் என்பதால் அல்ல, கனமான கொள்கை என்பதால். கனவான்களுக்காகவே கொள்கைகள் உருவாக்கப்பட்ட வேளையில் கனமான சுமைகளை வாழ்க்கையில் சுமந்துகொண்டிருந்த சாமான்யர்களுக்காக உருவான கனமான கொள்கைதான் கம்யூனிசம். கனக்கத்தானே செய்யும். இந்த கனமான கொள்கை மீதான அச்சத்தால்தான் உலகம் முழுவதும் சமூகப்பாதுகாப்புத்திட்டங்களை முதலாளித்துவ அரசுகள் கொண்டு வர நேர்ந்தது.

கம்யூனிசத்தைத் தூக்கி அலைய வேண்டியிருக்கிறது என்று கம்யூனிஸ்டுகள் சலித்துக் கொள்ளவில்லை. அண்மையில் தலைநகர் தில்லியில் நடந்த சர்வதேசக் கம்யூனிஸ்டு கட்சிகளின் மாநாடு இதைத்தான் காட்டியது. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட சர்வதேசக் கட்சிகள் புலம்பித்தள்ளவில்லை. தெளிவாக வருங்காலத்தை நோக்கிச் செல்ல வேண்டிய பிரகடனத்தை வெளியிட்டது. அதுவும் கனமாகவே உள்ளது, உள்ளடக்கத்தில்.

அது ஒருபுறம் இருக்கட்டும். இவர் எதை மாற்றாகக் காட்டுகிறார்? அதைத்தான் இரண்டாவது பதில் காட்டுகிறது. இவரே மூக்கைப்பிடித்துக் கொள்ளும் அளவுக்கு கர்நாடகத்தில் நாறிப் போய்க்கிடக்கும் கட்சியைத் தூக்கிச்சுமக்கிறார். மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு நல்லாசிரியர் விருது கொடுத்த நரேந்திர மோடியை யோக்கிய சிகாமணி என்கிறார். இதெல்லாம் இவருக்கு கனக்கவில்லை.

தான் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாகக் காட்டிக் கொள்கிறாராம். அதனால்தான் இனியும் பாஜக உண்டு. இனிமேலும் பாஜக தேவை என்று வக்காலத்து வாங்கும் அவர், இனியுமா பாஜக என்று கேட்கும்போதும் ஆமாம் என்று வலுவாகக் குரல் கொடுக்கிறார். கரன்சிப் பெட்டிகளின் கனம் பற்றிய கவலைகளுடன் அலைபவர்களைத் தூக்கிப்பிடிக்கும் சோவின் தோள்களால் மக்களுக்கான கொள்கை கனமாகவே இருக்கும்.

கம்யூனிஸ்டுகள் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பது கனக்கலாம். ஆனால் அது சுகமான சுமை. மக்களுக்கான சுமை. மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு சோதனை. தேச விரோத சக்திகளுக்கு எதிரி.

Friday, November 20, 2009

வாங்க... அரசு ஊழியராகலாம்...!

காலிப்பணியிடங்களை நிரப்புக, சம்பள விகிதத்தில் உள்ள குறைபாடுகளைக் களைய வேண்டும். மத்திய சம்பளக் கமிஷனை அப்படியே மாநில அரசு ஊழியர்களுக்கும் நடைமுறைப்படுததுக என்றெல்லாம் முழக்கங்களை எழுப்பிவிட்டுக் கலைந்து செல்பவர்களாக அரசு ஊழியர் சங்கம் இல்லை என்று விருதுநகர் மாவட்டத்தில் வேலை தேடும் ஆண்களும், பெண்களும் பூரிப்போடு கூறுகிறார்கள். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு ஊழியர் சங்கத்தின் கட்டிடம் களைகட்டி விடுகிறது. சுமார் 500 பேர் ஒவ்வொரு வாரமும் தவறாது போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிக்காக வந்து அமர்ந்து விடுகிறார்கள்.

2006 ஆம் ஆண்டிலிருந்து விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் இதை நடத்தி வருகிறார்கள். தலைமைச் செயலக உதவியாளர்களுக்கான தேர்வுதான் இந்த சங்கத்தினருக்கு முதல் "தேர்வு". தேர்வு எழுதியவர்களைவிட வகுப்பு எடுத்தவர்கள் ஆவலோடு தேர்வு முடிவை எதிர்பார்த்துக் காத்துக்கிடந்தார்கள். இந்த வகுப்பில் படித்தவர்கள் நான்கு பேர் தேர்வு பெற்றார்கள் என்ற செய்தி வெற்றி பெற்றவர்களைவிட அதிக மகிழ்ச்சியை அரசு ஊழியர் சங்கத்தினருக்கு பெற்றுத்தந்தது. அடுத்த போட்டித்தேர்வுக்கு கூடுதல் மாணவர்களைப் பெற்றுத்தந்ததோடு, இதோ நாங்களும் வகுப்புகள் எடுக்க வருகிறோம் என்று கூடுதல் ஆசிரியர்களையும் அழைத்து வந்தது.

வகுப்புகள் விருதுநகருக்கு சற்று வெளியேயுள்ள அரசு ஊழியர் சங்கத்திற்கு சொந்தமான கட்டிடத்தில்தான் வாராவாரம் வகுப்புகள் நடக்கின்றன. அண்மையில் வெளியான தொகுதி-2க்கான தேர்வு முடிவில் இந்த பயிற்சி மையத்திலிருந்து 60 பேர் தேர்வாகியுள்ளார்கள். கடந்த மூன்றாண்டுகளில் சுமார் 200 பேர் இங்கு பயிற்சி பெற்று அரசு ஊழியராகியுள்ளனர். கூட்டுறவுத்துறையில் சார்பதிவாளராக பணியாற்றும் போ.ரவீந்திரன் பயிற்சி வகுப்புகள் எடுக்கும் குழுவின் தலைவராக இயங்கிக் கொண்டிருக்கிறார். உங்கள் வகுப்பில் இவ்வளவு பேர் தேர்வு பெற்றிருக்கிறார்களாமே... வாழ்த்துக்கள் என்று யாராவது தொலைபேசியில் கூறினால், நன்றி.. என்ற வார்த்தையோடு நிறுத்துவதில்லை. அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்பதை விவாதிக்கத் தொடங்கி விடுகிறார். அவரோடு ஒரு பெரிய படையே இணைந்து வேலை செய்து கொண்டிருக்கிறது.

லட்சுமணக்குமார், கந்தசாமி, சம்பத், லியாகத் அலி, ராமராஜ், முருகன், சவுந்திரபாண்டியன், வெங்கடேஷ், செல்வக்குமார், சந்திரசேகரன், ஸ்ரீதர், செந்தில்குமார் மற்றும் மாரிமுத்து என்று அந்தப்பட்டியல் செல்கிறது. இதில் கந்தசாமி, வெங்கடேஷ் மற்றும் செல்வக்குமார் ஆகியோர் இந்த அரசு ஊழியர் சங்கம் நடத்தும் வகுப்பில் கலந்து கொண்டு அரசு ஊழியர்களாகி, அடுத்த கட்டத்திற்காக படித்துக் கொண்டே ஆசிரியர்களாகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பணி தலைமைச் செயலகத்தில் என்றாலும், வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டு விருதுநகருக்கு வந்து வகுப்பு எடுக்கிறார்கள்.

வெளிமாவட்டங்களிலிருந்து வகுப்பில் பங்கேற்க வருபவர்களும் இருக்கிறார்கள். சனிக்கிழமை காலையில் வந்திறங்கி நேராக வகுப்புக்கு சென்று விடுவார்கள். அன்றிரவு உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் வீடுகளில் தங்கிவிட்டு ஞாயிறன்று வகுப்பில் பங்கேற்று அப்படியே சொந்த ஊருக்கு வண்டியேறி விடுகிறார்கள். இது வாராவாரம் தொடர்கிறது. இவ்வளவு பேரையும் உட்கார வைக்கும் அளவுக்கு சங்கத்தின் கட்டிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்தக்கட்டிடத்திற்குப் பின்பும் ஒரு அர்ப்பணிப்பு இருப்பதை சங்கத்தினர் சொல்கிறார்கள்.

அரசு ஊழியர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடியபோது பலரும் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள். அவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு சங்கத்தின் சார்பில் மாதாமாதம் உதவித்தொகை வழங்கப்பட்டது. அவர்கள் மீதான நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டு ஊதியம் கிடைத்தபோது, சங்கம் வழங்கிய உதவித்தொகையைத் திருப்பித்தருவது என்று அரசு ஊழியர்கள் முடிவெடுத்தார்கள். அதில் கணிசமான நிதி வந்ததால் கட்டிடத்தைக் கட்டி விடலாமே என்று வேலையைத் துவங்கிவிட்டார்கள். ஒரே நேரத்தில் மேல்தளத்தில் 500 பேர், கீழ்த்தளத்தில் 500 பேர் அமர்ந்து கொள்ளும் அளவுக்கு அந்தக்கட்டிடம் வளர்ந்து நிற்கிறது.

தொகுதி-2 தேர்வுக்கான பயிற்சி வகுப்பைத் துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் ரகுபதி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமானது தங்களது உரிமைகளுக்கு மட்டும் போராடாமல் சமுதாய நோக்கோடு பல்வேறு பயனளிக்கும் ஒரு சிறந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர் என்று மேடையிலேயே தனது பாராட்டைத் தெரிவித்தார். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் இயங்கினாலும், அர்ப்பணிப்பு உணர்வோடு இலவசமாக இந்தப் பயிற்சியை அரசு ஊழியர் சங்கம் நடத்துகிறது. இதுபோன்று பழநி ஆயக்குடி மக்கள் மன்றமும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியை தொடர்ந்து தருகிறது. கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் ஒரே கிராமத்தில் 50 பேருக்கு மேல் அவர்கள் நடத்திய வகுப்புகளிலிருந்து தேர்வு பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டத்திற்கு விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர் சங்கம் தயாராகிவருகிறது. பயிற்சிக்கான நிரந்தர மையம் என்ற இலக்கை நோக்கி அவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். மக்களை நோக்கி என்பதுதான் அரசு ஊழியர் சங்கத்தின் முழக்கம். விருதுநகரைச் சேர்ந்த சங்கத்தினர் அந்தப் பாதையில் ஏற்கெனவே நடைபோடத் துவங்கிவிட்டார்கள்.

Tuesday, November 3, 2009

எல்லோரும் கோவிலுக்குள் போகலாமே...??

ஒன்றை உயர்த்திச் சொல்ல வேண்டுமானால் அதைக் கோவில் மாதிரி என்று சொல்கிறோம். ஆனால் அந்தக் கோவிலே மனிதர்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு அந்நியமாகிப் போவது நியாயமா... தூரத்தில் நின்று கொண்டு கைகளைக் தூக்கி கும்பிட்டுவிட்டுப் போகும் தலித்துகளின் மனதில் கடவுள் பற்றிய எண்ணங்களை விட தன்னை இப்படித் தள்ளி வைத்துள்ளார்களே என்ற எண்ணமே மேலோங்கியிருக்கும்...

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எப்போதுமே போராடி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் அண்மைக்காலத்தில் இதற்கு எதிராகக் கடுமையான போராட்டங்களை நடத்தியுள்ளன. அண்மைக்காலத்தில் கிடைத்த பலன்களை பட்டியலிடுவது பொருத்தமானதாக இருக்கும்.

* அருந்தியர் உள் ஒதுக்கீடு 3 சதம் கிடைத்தது.

* உத்தப்புரம் தீண்டாமைச் சுவரின் ஒரு பகுதி உடைக்கப்பட்டு தலித் மக் களுக்குப் பொதுப்பாதை கிடைத்தது.

* திருவண்ணாமலை மாவட்டம், தாமரைப்பாக்கம் அக்னீஸ்வரர் கோவில்;

* திண்டுக்கல் மாவட்டம், ஆயக்குடி காளியம்மன் கோவில்

* நெல்லை மாவட்டம், பந்தப்புளி மாரியம்மன் கோவில்

* பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட் டை தாலுகா பாதாங்கி கிராமம் சிவன் கோவில்

* பெரம்பலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம் அழகாபுரம் காசிவிஸ்வ நாதர் கோவில்

* திருவண்ணாமலை மாவட்டம், வேட வந்தாடி கிராமம் கூத்தாண்டவர் கோவில்

* விழுப்புரம் மாவட்டம், காங்கியனூர் கிராமம் திரௌபதியம்மன் கோவில்

* நாகை மாவட்டம் செட்டிப்புலம் கிராமம் ஏகாண்ட ஈஸ்வரர் கோவில்ஆகிய ஆலயங்களில் தலித் மக்களின் ஆலயப் பிரவேசம் வெற்றி பெற்றது.

தமிழகத்தில் பல கிராமங்களில் இரட்டைக் குவளை முறை ஒழிப்பு, முடிவெட் டும் உரிமை, பொதுப்பாதையை பயன்படுத்தும் உரிமை, சலவையகங்களில் துணி சலவை செய்துதரும் உரிமை, பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்தும் உரிமை, பொது மயான உரிமை, தனி மயானத்தில் பாதை உரிமை என பல தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களில் வெற்றி கிடைத்தன. அக்.27 அன்று சென்னையில் நடைபெற்ற பேரணியில் இந்த வெற்றிகளின் பிரதிபலிப்பு இருந்தது.

அந்தப் பிரதிபலிப்பின் அர்த்தம் இதுதான்...

போராட்டம் தொடரும் என்பதுதான்.

Monday, November 2, 2009

நாங்க பட்ட கஷ்டம் போதுமே...!!!


ஓ....

இப்பல்லாம் இத நீங்கதான் குடிக்கிறீங்களா...

நாமெல்லாம் ஒரே தலைமுறைங்குற முறைல ஆலோசனை சொல்றேன்... கேக்குறீங்களா...

விட்டுருங்க...

வேணாம்...

நாங்க பட்ட கஷ்டம் போதும்...

Friday, October 30, 2009

நம்மோடு இல்லை தோழர் மோகன்


என்ன தோழர்... ஆபீசுக்கு எப்ப வந்தாலும் பனியனோடதான் உக்காந்துருக்கீங்க... சட்டை சேர்ல தொங்கிட்டு இருக்கு...
அழுக்காகலீன்னா நாளக்கி போட்டுக்கலாமே...

பத்தாண்டுகள் எம்.பி.யாக இருந்துவிட்டு நேற்று மாலை நம்மை விட்டுப் பிரிந்த மகத்தான தோழர் மோகனுக்கும் எனக்கும் இடையில் நடந்த உரையாடல் இது.

* * * * *

எம்.பியான புதிதில் அவரை தில்லியில் ஒருமுறை சந்தித்தேன். என்னுடன் வந்த நண்பர் முதன்முறையாக ஒரு எம்.பி.க்கு எதிரில் அமர்கிறார். காலில் இருந்த ஆணியை அகற்றிவிட்டு ஓய்வில் இருந்த தோழர்.மோகன், வெல்லக்கட்டியையும், நிலக்கடலைப் பருப்பையும் வைத்து எங்களை உபசரித்தார்.

வெல்லத்தை வாங்க அவர் பட்ட சிரமத்தையும் சொன்னார். அப்போதுதான் அவர் எம்.பி.யாகியிருந்தார். வெல்லம் வாங்க கடைக்குச் சென்றிருக்கிறார். இந்தியில் எப்படி கேட்பது என்று தெரியவில்லை. கடைகளுக்குள் புகுந்து தேடியுள்ளார். அதைக்காட்டியாவது வாங்கிவிடலாம் என்று பார்த்திருக்கிறார். கிடைக்கவில்லை. கடைசியில் தமிழிலேயே கேட்பது என்ற முடிவுக்கு வந்த அவர், வெல்லம் குடு என்றிருக்கிறார்.
உடனே வெல்லம் வந்துவிட்டது. அரைக்கிலோவை வாங்கிவிட்டுத் திரும்பியவருக்கு ஒரே ஆச்சரியம். தமிழில் கேட்டால் எப்படி அவர்களால் கொடுக்க முடிந்தது என்ற கேள்வி அவரைப் பல நாட்கள் வலம் வந்து கொண்டிருந்தது. கூ(g)ட்(d) என்றே வட இந்தியாவில் வெல்லத்தை அழைக்கிறார்கள் என்று பிறகுதான் அவருக்கு தெரிய வந்தது. சொல்லி சொல்லி சிரித்தார். அந்த சிரிப்பு, மக்களின் பிரச்சனைகளைச் சொல்லும்போது அவரது கண்களில் இயல்பாகவே எழும் அனுதாபம் நினைவுக்கு வந்துகொண்டே இருக்கிறது. வந்து கொண்டேதான் இருக்கும்.

* * * * * *

ஒரு முறை குடும்பத்தோடு காரில் சென்று கொண்டிருக்கிறோம். மக்களவைத் தேர்தல் முடிந்துவிட்ட நேரமது. அழகிரி வெற்றி பெற்று விட்டார். எனது மனைவியின் தங்கை அப்போது குறிப்பிட்டார். பிரச்சாரத்துக்கு வராம உங்க மோகன் வேணும்னேதான் ஆஸ்பத்திரில போய்ப் படுத்துட்டாருன்னு பேசிக்குறாங்களே... என்றார். வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த அவருடைய கணவரும் தலையை ஆட்டி ஆமோதித்தது போல் தெரிந்தது. அப்படில்லாம் இல்லை. மார்க்சிஸ்ட் கட்சிக்காரர்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்றேன். பெரும்பாலான அரசியல்வாதிகள் கொள்ளைக்காரர்களாகவே திரிவதால் அரசியல்வாதியைப் பற்றிய குற்றச்சாட்டுகள் அனைத்தையுமே மக்கள் நம்பி விடுகிறார்கள் என்று எண்ணிக்கொண்டேன்.

ஆனால் தான் நிரபராதி என்று காட்டுவதற்கு இவ்வளவு வலுவான சாட்சியத்தை நம்முன் கொண்டு வந்து தோழர்.மோகன் நிறுத்துவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. போயே விட்டார். எந்த நோய்க்காக தேர்தல் பிரச்சாரத்திற்காக வரமுடியாமல் மருத்துவமனையில் படுத்தாரோ, அதே நோயின் கொடுரத்தைத் தாங்க முடியாமல் சென்றுவிட்டார். எந்த வாய்கள் எல்லாம் அவரைத் தூற்றினவோ, யாரெல்லாம் அந்தத் தூற்றுதலை நம்பினார்களோ அவர்களெல்லாம் தோழர்.மோகனிடம் போய் சொல்லவா முடியும்... உங்களை நாங்கள் நம்புகிறோம் என்று.
* * * * * *

Thursday, October 29, 2009

66வது கொலை விழுந்துவிட்டது!

மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நாளிலிருந்து இதுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 65 பேர் மாவோயிஸ்டுகள் மற்றும் எதிர்க்கட்சியினரால் கொலை செய்யப்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகள் மீது நடவடிக்கை எடுத்தபோதுகூட ரத்தம் சிந்தாமல்தான் அந்த நடவடிக்கை இருக்க வேண்டும் என்பதில் மேற்கு வங்க மாநில அரசு கவனமாக இருந்தது.

அறிவுஜீவிகள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக்கொள்ளும் ஒரு கூட்டம் மாவோயிஸ்டுகளின் மீதான நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்று மனப்பாடம் செய்து ஒப்பிப்பவர்களைக் போல சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் தொடர்ந்து கொலை செய்யப்படுபவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை அங்கீகரிக்கவோ அல்லது யாராக இருந்தாலும் வன்முறையில் இறங்கக்கூடாது என்று பொதுவாகச் சொல்லவோ அவர்கள் தயாராக இல்லை.

இதோ மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் 66வது கொலை விழுந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஊடகங்களின் ஒரு பகுதியினரும் பாரபட்சமாகவே செய்தி வெளியிடுகிறார்கள். ஜார்க்கண்டில் தாக்குதல் நடத்துபவர்கள் மாவோயிஸ்டுகளாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடத்துபவர்கள் பழங்குடி மக்களாம். தாக்குதல் நடத்துபவர்கள் அனைவரும் ஒரே அமைப்புதான். கண்ணை மூடிக்கொண்டு செய்தி எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

Tuesday, October 27, 2009

ஆலய நுழைவில் அரசியல் நுழைவா...?


“ஆலய அரசியலில், நுழைவு அவசியமா?” என்ற தலைப்பில், இரா.சோமசுந் தரம், தினமணி நாளேட்டில், அக்டோபர் 27ல் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். எந்த ஆல யத்திலும் தலித்துக்கள் நுழையக் கூடாது என்று சொல்வதைப் போன்ற காட்டுமிராண் டித்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது என்ற பீடிகையோடு இந்த கட்டுரை துவங்கு கிறது. ஆகா, சமூகநீதிக்காக குரல்கொடுக் கிறார், சோமசுந்தரம் என்ற மகிழ்ச்சியோடு கட்டுரைக்குள் நுழைந்தால், அன்றைக்கு பிரிட்டிஷ் ஆட்சியின்போது ஆலய நுழை வுப் போராட்டம் நடத்தியது சரிதான், இன் றைக்கு அரசு நம்முடையது; இந்து அறநிலை யத்துறை கோயில்களில் தலித்துக்கள் நுழை யத் தடை எதுவும் இல்லை; இந்நிலையில், தனியார் அல்லது ஒரு சமூகத்திற்கு சொந்த மான கோயில்களில், தலித்துக்களை அனு மதிக்காததற்காக கம்யூனிஸ்டுகள் போரா டுவது, சரிதானா; இது, அரசியல் சாயம் பூசப்பட்டது அல்லவா? என்று அடுக்கிக் கொண்டே சென்று, தனியார் அல்லது ஆதிக்க சமூகத்தினரால் நடத்தப்படும் கோயில்களில், தலித்துக்களை அனுமதிக்கா ததை நியாயப்படுத்துகிறார், கட்டுரையாளர். இதைத்தான் பாவேந்தர் பாரதிதாசன், “அழ காக முடிச்சவிழ்த்தால் விடுவார் உண்டோ” என்பார்.

தனியார் நிறுவனங்கள் போல, தனியார் கோயில்களும் இருக்கலாம் போலிருக்கிறது. அத்தகைய கோயில்களில், சாதியின் பெய ரால், ஒருபகுதி மக்கள் இழிவுசெய்யப்பட் டால் அதை யாரும் கேள்வி கேட்கக் கூடாது, என்பது சோமசுந்தரத்தின் வாதம். அப்படி பிரச்சனை இருந்தால், அரசு மற்றும் காவல்துறையிடம் புகார் செய்து, நடவடிக்கை எடுக்கலாம் அல்லவா? என்று ரொம்பவும் நல்லவர் போல கேள்வி எழுப்புகிறார், இவர். காங்கியனூரிலோ அல்லது செட்டிப்புலத் திலோ, எடுத்தவுடனேயே தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம் நடத்தவில்லை. அரசு அலுவலகங்களின் கதவுகளை பலமுறை தட்டி பலன் கிடைக்காத நிலையிலேயே, அரசின் கவனத்தை ஈர்க்க கோயில் கதவுகள் நேரடியாக தட்டப்பட்டன. காங்கியனூர் திரௌபதியம்மன் கோயி லில் தீமிதி விழாவின் போது தலித்துக்கள் யாரும் நுழையக்கூடாது என்று ஒலிபெருக்கி யிலேயே பகிரங்கமாக அறிவிக்கப்படும்; ஒலி பெருக்கிக்கும் அதை அறிவிப்பவருக்கும் சேர்த்தே காவல்துறை பாதுகாப்பு தரும். தீண் டாமையை எந்த வகையிலேனும் கடைப் பிடிப்பது, கிரிமினல் குற்றம் என்கிறது, அரசி யல் சாசனம். ஆனால், அதை மீறுபவர் களுக்கு, காவல்துறை பாதுகாப்பு தரும் நிலை.

உடல் முழுவதும் காணப்பட்ட புண் குண மாகி விட்டதாம். தற்போது சிறுபுண் மட்டுமே உள்ளதாம். அதற்கு மருத்துவ சிகிச்சை செய்யாமல், அதை ஆவேசமாக சொறிந்து புண்ணாக்குவது சரிதானா, என்று இவர் கேட்கிறார். இவர், எந்த உலகத்தில் வாழ் கிறார் என்று தெரியவில்லை. இன்னமும் கூட தமிழகத்தில் 7 ஆயிரத்திற்கும் மேற் பட்ட கிராமங்களில், பொது கிளாசில் டீ குடிக்க தடை; செருப்பு போட்டு நடக்கத் தடை; சைக்கிளில் செல்லத் தடை; தோளில் துண்டு அணியத் தடை; இவ்வளவு ஏன், பொதுக்கழிப்பறையை பயன்படுத்தக் கூட தடை; தலித் மக்கள் ஆண்நாய் வளர்க்கத் தடை என தீண்டாமைக் கொடுமை தலை விரித்து ஆடுகிறது. இவையெல்லாம் சிறு புண்ணாகத் தெரிகிறது இவருக்கு. ஆனால், சமூகத்தையே அரித்துத் திண்ணும் புற்றுநோ யாக தெரிகிறது கம்யூனிஸ்டுகளுக்கு! இத னால்தான் அரசிடம் சொல்லி நடக்காத இடங்களில் ஆலய நுழைவுப் போராட்டம் போன்றவற்றை கம்யூனிஸ்டுகள் நடத்து கிறார்கள். இது அரசியல் சாயம் என்றால், இதை இன்னும் அழுத்தமாக்கவே, அவர்கள் விரும்புகிறார்கள்.

செட்டிப்புலம், காங்கியனூரில் அமைதி குலைந்திருப்பதாக, கட்டுரையாளர் கவலைப் படுகிறார். சாதி ஆதிக்க வெறியால் செயற் கையாக ஏற்படுத்தப்பட்டு இருக்கும் மயான அமைதியை கலைப்பதே நல்லது. இப்படி கலைத்ததால்தான் செட்டிப்புலத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், தலித்துக்கள் ஆல யப் நுழைவு செய்ய முடிந்திருக்கிறது. காங் கியனூரிலும் அரசை அசைக்க முடிந்திருக் கிறது. பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலத் தில் தலித் தலைவர்களை பதவியேற்கச் செய்ததிலும், உத்தப்புரம் சாதிச்சுவரின் ஒருபகுதியைத் தகர்த்ததிலும், பந்தப்புளி, கல் கேரி உள்பட பல்வேறு கோயில்களில் தலித் துக்கள் நுழைய முடிந்ததிலும், கம்யூனிஸ்டு களின் “அமைதிக் குலைப்பு” முக்கியப் பங்கு வகித்துள்ளது.

போராட்டங்கள் நடத்த, தமிழகத்தில் பிரச் சனைகளா, இல்லை...? என்று கேட்டுவிட்டு, தனியார் பள்ளி- கல்லூரிகளில் நடைபெறும் அநியாய கல்விக் கட்டணத்திற்கு எதிராக போராடி ரத்தம் சிந்தக் கூடாதா? என்று கட் டுரையாளர் கேட்கிறார். சில மாதங்களுக்கு முன்பு, சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் போதே, இந்திய மாணவர் சங்கத்தினர், தனியார் கல்வி நிறுவனங்க ளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராகவும், சமச்சீர் கல்விக்காகவும் போராடி ரத்தம் சிந் தியபோது, சோமசுந்தரம் கையெடுத்துத் தொழுதிருக்க வேண்டாம்; மாணவர்களை ஆதரித்து ஒரு கட்டுரையாவது எழுதியிருக் கலாமே! உணவுக்காகப் போராடினால் கம்யூனிஸ் டுகளை தமிழகம் கையெடுத்து தொழுமே... என்று கூறியுள்ளார். சென்னையில் உணவுப் பாதுகாப்பிற்காக இடதுசாரிகள் இணைந்து கருத்தரங்கம் நடத்தினார்கள். நவம்பர் 17ல் சிறைநிரப்பும் போராட்டத்தையும் நடத்த உள்ளனர். இதில் சோமசுந்தரம் முதல் ஆளாக நின்று பங்கேற்பார் என எதிர்பார்க்கலாம்.

அரசு ஊழியர் சங்கத்தில் உள்ள தங்கள் தோழர்களை, மக்கள் நலப்பணிகளில் ஈடு படுத்தலாமே என்றும் கூறுகிறார். இடதுசாரி மனோபாவம் கொண்ட அரசு ஊழியர்கள், இரத்ததானம்; ஏழை- எளிய மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க இலவசப் பயிற்சி என பல்வேறு வழிகளில் மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். தங்களின் பணியிடங்களில் மக்கள் நலனை பாதுகாப்பதில் அவர்கள் முன்னிற்கிறார்கள். ஆலய நுழைவுப் போராட்டம் நடத்துவ தால், தலித்துக்களின் வாக்கு கம்யூனிஸ்டு களுக்கு கிடைக்காது என்று கடைசியாக சாபமிட்டுள்ளார், கட்டுரையாளர். இது வாக்குகளைக் குறிவைத்து நடத்தப்படும் இயக்கமல்ல; எதிர்காலப் போக்கு சமத்துவ சமுதாயத்தை நோக்கி இருக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் இயக்கம்.

மார்க்சிஸ்ட் கட்சி போன்று பிற கட்சிகளும் ஏன் சமூகநீதிக்காகப் போராடவில்லை என்று சோமசுந்தரத்தின் எழுதுகோல் கேட்டிருந்தால் அதில் ஒரு நியாயம் இருந்திருக்கும். தீண்டாமையை கடைப்பிடிப் பவர்களிடமிருந்து, வாக்குகள் கிடைக்காது என்று பல கட்சிகள் இந்த பிரச்சனைக்குள் நுழைவதே இல்லை என்பதுதான் உண்மை. மதம் ஒரு அபின் அல்லவா.. என்று கேட்டு முடித்திருக்கிறார். மாமேதை மார்க்ஸ் சொல்வதை, முன்னும் பின்னும் கத்தரித்து விட்டு, பலரும் பயன்படுத்துவதைப் போலவே, இவரும் கூறியிருக்கிறார். மதம் அடக்கப்பட் டவர்களின் பெருமூச்சு என்றும் மார்க்ஸ் கூறியிருக்கிறார். எல்லோருக்கும் பொது வானது என்று கதைக்கப்படும் கோயிலுக்குள் நுழைய முடியாமல் உழைக்கும் மக்கள் பெரு மூச்சு விடும்போது, அதை புயலாக மாற்று வதே கம்யூனிஸ்டுகளின் அரசியல் பணி.

- மதுக்கூர் இராமலிங்கம்

Monday, October 26, 2009

மலத்தை மனிதனே அள்ளும் கொடுமை தீருமா..?



ச்சீ...ச்சீ... என்று மலத்தைப் பார்த்தவுடன் முகத்தைச் சுளித்தவாறு நகர்ந்து விடுவார்கள் பெரும்பாலான மனிதர்கள். ஆனால் அதையும் மனிதர்கள்தான் பெரும்பாலும் அள்ளிச் சென்று அப்புறப்படுத்தும் அவல நிலை உள்ளது. இத்தனைக்கும் கையால் மலம் அள்ளுவதை சட்டம் தடை செய்துள்ளது. 1993 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட கையால் மலம் அள்ளுவோர் பணி நியமனம் மற்றும் திறந்தவெளி கழிப்பிடங்கள்(தடுப்பு) சட்டம் சில மாற்றங்களை ஏற்படுத்தியது உண்மைதான். ஆனால் பெரும்பாலும் அந்தக் கொடுமை இன்னும் நடைமுறையில் உள்ளது.


மத்திய சமூக நீதி மற்றும் வளர்ச்சிக்கான துறையின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி 6.7 லட்சம் மலம் அள்ளுபவர்கள் நாடு முழுவதும் உள்ளனர். இது 2003 ஆம் ஆண்டு தந்த புள்ளிவிபரமாகும். ஆனால் இதுவரை இதில் எத்தனை பேருக்கு மாற்றுப் பணிகள் தந்து மலம் அள்ளும் பணியிலிருந்து விலக்கிக் கொண்டுள்ளார்கள் என்ற விபரங்கள் இல்லை. உலர் கழிப்பிடங்கள் மற்றும் திறந்தவெளிக் கழிப்பிடங்களே இல்லாமல் ஆக்க வேண்டும் என்ற நோக்கத்தை நோக்கி மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது அடிகளை எடுத்து வைப்பதில் முனைப்பு இல்லை.


2007 ஆம் ஆண்டுக்குள் இதை முடிவுக்குக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று மத்திய அரசு லட்சுமணன் கோடு ஒன்றையும் போட்டது. கோடு அழிந்ததுதான் மிச்சம். 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும், மனிதக்கழிவை மனிதனே அள்ளும் கொடுமைக்கு முற்றுப் புள்ளி வைத்து, அதில் ஈடுபடுபவர்களுக்கு மாற்றுப் பணிகள் தருவதாகவும் உறுதியளிக்கப்பட்டது. 2006-07 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 11 ஆயிரத்து 691 பேருக்கு மாற்று வேலைகளுக்கான பயிற்சி தர 50 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது என்ற அறிவிப்பும் வெளியானது.


ஆனால் அடிப்படையான பிரச்சனையைத் தீர்க்காமல் மேற்பூச்சு வேலைகளால் எந்த பலனும் இல்லை. 2001 ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்குப்படி, தமிழகத்தில் உள்ள 1.41 குடும்பங்களில் சுமார் 92 லட்சம் குடும்பங்களின் வீடுகளுக்குள் கழிப்பறைகள் இல்லை. சுமார் ஆறரை லட்சம் உலர் கழிப்பிடங்கள் உள்ளதாகவும் அந்தப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. உலர் கழிப்பிடங்கள் மற்றும் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இருக்கும் வரையில் அதை அள்ளுவதற்கான ஆட்களைத் தேடும் நிலை நிற்காது.


இந்தியாவில் அதிகமான ஊழியர்களைக் கொண்டுள்ள நிறுவனமான ரயில்வேயில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்கள் தண்டவாளங்களுக்கு நடுவில் கிடக்கும் மலத்தை அள்ளிச்சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். எது, எதற்கோ நவீன கருவிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். அசிங்கம் என்று கருதப்படும் மலத்தை அள்ளத்தான் கருவிகளைக் கண்டுபிடிக்க மாட்டேனென்கிறார்கள்.


இத்தகைய கொடுரங்களுக்கு எதிராக, வெறும் காகிதத்தில் இருக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்துக என்ற அக்.27 பேரணி முழக்கம் ஆட்சியாளர்களின் காதுகளில் போர்ப்பறையாக ஒலிக்கவிருக்கிறது.

0.16 சதவிகிதம்தான் பத்தாம் வகுப்பைத் தாண்டியவர்கள்!


தமிழகத்திலுள்ள துப்புரவுத் தொழிலாளர்களில் 95 சதவிகிதம் பேர் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். அதிலும் 33 சதவிகிதம் பெண்கள்தான். இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மற்ற சாதியினரின் தயவில்தான் வாழ்க்கையை ஓட்டுகின்றனர். பத்து சதவிகித அருந்ததியர்கள் கையில்தான் சிறிய அளவிலாவது நிலம் உள்ளது.

கல்வி ரீதியாகவும் இந்த சமூகத்தினர் மிகவும் பின்தங்கியவர்களாக உள்ளனர். கிராமப்புற பெண்கள் மேம்பாட்டு அமைப்பு என்ற தொண்டு நிறுவனம் அளிக்கும் புள்ளிவிபரங்களின்படி, அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களில் 1.75 சதவிகிதம் பேர் மட்டுமே எழுத்தறிவு பெற்றவர்களாக உள்ளனர். 0.16 சதவிகித அருந்ததியர்கள் மட்டுமே பத்தாம் வகுப்பைத் தாண்டியுள்ளனர்.

இந்த சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலான கிராமப்புற சிறுவர்கள் வயல்களில் கொத்தடிமைகளாக வேலை செய்கிறார்கள். நகர்ப்புறங்களில் ஓட்டல்கள் போன்றவற்றில் கூலி வேலைகள் செய்பவர்களாகவும் உள்ளனர். ஒருவேளை, பத்தாம் வகுப்பை முடித்து விட்டாலும் மேற்கொண்டு படிப்பதற்கு போதிய பொருளாதார வசதி அவர்களிடம் பெரும்பாலும் இருப்பதில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு அருந்ததிய அமைப்புகளின் வலுவான இயக்கத்தால் இந்த சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மூன்று சதவிகித உள்ஒதுக்கீடு கிடைத்துள்ளது.

இதை முறையாக நடைமுறைப்படுத்தக்கோரும் மக்களின் எழுச்சிக்குரல்கள் அக்.27 அன்று கோட்டையின் கதவுகளை தட்டப்போகின்றன.

Saturday, October 24, 2009

அணுகுண்டா... இது வீண் பழியே...!


வெனிசுலாவில் யுரேனியம் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள் என்ற செய்தி வெளியானவுடனேயே ஈரானுக்கு யுரேனியத்தை வெனிசுலா ஏற்றுமதி செய்யப்போகிறது என்றும், சொந்தமான அணுகுண்டைத் தயாரிக்க வெனிசுலா திட்டமிட்டுள்ளது என்றும் மேற்கத்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிடத் துவங்கிவிட்டன. அந்த யுரேனியம் பயன்படுமா இல்லையா என்பது பற்றியெல்லாம் கூட இன்னும் ஆய்வுகள் முடியவில்லை. இதை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள் என்று சாவேசை கேள்வி கேட்டும் பத்திரிகையாளர்கள் துளைத்து எடுத்து விட்டார்கள்.

அவருடைய பதில் மிகவும் தெளிவாக இருந்தது. "அணுகுண்டை வெனிசுலா ஒருபேதும் தயாரிக்காது. அடுத்தவர்களைக் குறை சொல்லி தங்களை வளர்த்துக்கொள்ள விரும்பும் நாடுகள் இத்தகைய பொய்ப்பிரச்சாரத்தை செய்கின்றன. யுரேனியத்தை நாங்கள் தவறாகப் பயன்படுத்தப்போவதாக மேற்கத்திய ஊடகங்கள் எங்களைக் குறை சொல்லப் போகின்றன. இப்பொழுதுதான் யுரேனியம் எங்கள் மண்ணில் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளோம். அதற்குள்ளாக எங்கள் நாட்டுக்கெதிரான பிரச்சார யுத்தத்தை துவக்கி விட்டார்கள். ஆயுதங்களைத் தயாரிப்பதைத் தாண்டி மின்னுற்பத்தி போன்ற மிக முக்கியமான பணிகளை நாங்கள் செய்து கொள்ள முடியும்" என்றார் அவர்.

தங்களிடமிருக்கும் யுரேனியத்தை பயன்படுத்தும் வித்தையைக் கற்றுக் கொடுங்கள் என்று ரஷ்யாவிடம் வெனிசுலா கேட்கப்போகிறது. தென் அமெரிக்க நாடுகள் இந்தியா, ரஷ்யா, சீனா, மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தி வருகின்றன. தனது பிடி பெரும் அளவில் நழுவியுள்ளதால் மீண்டும் இறுக்கிப்பிடிக்க அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன் முதல்கட்டமாகத்தான் இருக்கும் ஒன்றிரண்டு கூட்டாளிகளில் கொலம்பியாவில் புதிய ராணுவத்தளங்களை அமைக்கிறது. தனது இந்த நடவடிக்கைகளை மறைக்கவே வெனிசுலாவின் அணுகுண்டு என்ற புரளியைக் கிளப்பி விட்டுள்ளது.

மேலும், சாவேஸ் தலைமையிலான வெனிசுலா அரசு அமெரிக்காவின் ஒவ்வொரு தலையீட்டையும் கடுமையாகக் கண்டித்து வருகிறது. ஒபாமாவுக்கு சமானத்திற்கான நோபல் பரிசு வழங்கியதை விமர்சித்த அவர், கொலம்பியாவில் ஏழு ராணுவத்தளங்களை அமைக்கப்போகிறோம் என்பது அவரின் நினைவுக்கு வருவது நல்லது என்றார். அதோடு நிற்காமல் தென் அமெரிக்க நாடுகளின் ஒற்றுமைக்காகவும் வெனிசுலா பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தங்களுக்குள் பரிவர்த்தனை செய்து கொள்ள சுக்ரே என்ற புதிய நாணயத்தை அறிமுகப்படுத்தப்போவது இந்த நடவடிக்கைகளில் ஒன்றாகும். டாலருக்கு மாற்றாகக் கிளம்பியுள்ள இந்த புதிய நாணயம் அமெரிக்காவுக்கு பீதியைக் கிளப்பியுள்ளது.
அண்மையில் நடந்த அல்பா(தென் அமெரிக்க நாடுகளுக்கான பொலிவாரிய மாற்று) அமைப்புக்கூட்டத்தில் பல அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டன. சுற்றுச்சூழல் உறுதிமொழிகளை நிறைவேற்றாத நாடுகளை கூண்டுக்குள் ஏற்றி விசாரிக்கும் வகையில் ஒரு பருவநிலை மாற்றம் குறித்த நீதிமன்றத்தை அமைக்க அந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும் அல்பாஎக்சிம் என்ற ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் ஒன்றையும் தென் அமெரிக்க நாடுகள் இணைந்து துவக்கியுள்ளன. பரஸ்பர நலன்களைப் பாதுகாக்கும் வகையில் அந்த நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் நடப்பதை இந்த நிறுவனம் உறுதிப்படுத்தும்.

கடந்த நூற்றாண்டில் தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளால் பிரிந்து கிடந்த தென் அமெரிக்க நாடுகள் எப்போதும் இல்லாத அளவிற்கு அணி திரண்டுள்ளார்கள். அமெரிக்காவின் புழக்கடை போன்று தங்கள் நாடுகளை நடத்துவதை இனி ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற உறுதியை அவர்கள் எடுத்துள்ளார்கள். இது வெறும் ஆட்சியாளர்களின் ஆசையல்ல. ஒட்டுமொத்த தென் அமெரிக்க மக்களின் விருப்பமாகும். இதனால்தான் பிரித்து வைக்கும் முயற்சியில் வெனிசுலாவில் யுரேனியம் கிடைக்கிறது என்றவுடனேயே அணுகுண்டு வதந்தியைப் பரப்புகிறார்கள். யுரேனியத்தில் வெனிசுலா விஞ்ஞானிகளே இன்னும் கை வைக்கவில்லை. அதற்குள் ஈரானுக்கு கப்பலில் யுரேனியம் கிளம்பிவிட்டதாக கதை கட்டுகிறார்கள்.

Friday, October 23, 2009

"வளர்ச்சி"க்காக வளர்ச்சியை சிதைக்கும் மாவோயிஸ்டுகள்!



மாவோயிஸ்டுகளின் வன்முறை நடவடிக்கைகளையும் தாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறிக்கொண்டாலும், அவர்களுக்கு ஆதரவாக திரண்டுள்ள சில அறிவுஜீவிகள் அந்த வன்முறைகள் நிகழும்போதெல்லாம் மவுனம்தான் சாதிக்கின்றனர். நாட்டிலுள்ள 625 மாவட்டங்களில் 161 மாவட்டங்களில் இயங்கி வரும் இந்த மாவோயிஸ்டுகள் கடந்த பத்து மாதங்களில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்டவர்களைக் கொலை செய்துள்ளனர். வளர்ச்சிப்பணிகளை அரசுகள் செய்திருந்தால் இந்த வன்முறைகள் நிகழ்ந்திருக்காதே என்று அவர்கள் அங்கலாய்க்கிறார்கள்.


வளர்ச்சிப்பணிகள் நடைபெறவில்லை என்ற மாவோயிஸ்டுகளின் குற்றச்சாட்டு ஒருபுறம். மறுபுறத்தில் ஏற்கெனவே செய்யப்பட்டுள்ள வளர்ச்சிப்பணிகளை தரைமட்டமாக்கும் வேலையை மாவோயிஸ்டுகள் செய்கின்றனர். ரயில்வே தண்டவாளங்கள், தொலைபேசிக் கோபுரங்கள், மின்னுற்பத்தி நிலையங்கள், கனிம சுரங்கங்கள், பள்ளிக்கட்டிடங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்கள் ஆகியவற்றைத் தகர்த்து எறிகிறார்கள்.


2009 ஆம் ஆண்டில் மட்டும் இத்தகைய இடங்களைக் குறிவைத்து 183 வன்முறைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். எந்த மக்களுக்காக போராடுகிறோம் என்று சொல்லிக் கொள்கிறார்களோ, அந்த மக்களுக்கான பள்ளிக்கூடங்கள், உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்கள் ஆகியவைதான் இந்த வன்முறைத் தாக்குதல்களின்போது குறிவைக்கப்பட்டன. மக்களின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட மக்கள் பணத்திலிருந்தே இந்தக் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைகள் ஏழை மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் வேலையையே செய்கின்றன.


இவர்கள் தாக்குதல்கள் நடத்தும் பகுதிகளில் நூறு நாள் வேலைத்திட்டங்கள் போன்றவற்றை நடைமுறைப்படுத்துவதில் பெரும் சிரமங்கள் ஏற்படுகின்றன. சில மாநிலங்களில் இந்தத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட பல்வேறு பணிகள் மாவோயிஸ்டுகளால் சிதைக்கப்பட்டன. அரசை ஸ்தம்பிக்கச் செய்கிறோம் என்று இவர்கள் நடத்தும் வளர்ச்சிக்கு எதிரான வன்முறைகளை இவர்களுக்கு ஆதரவாக இயங்கும் அறிவுஜீவிகள் கண்டுகொள்வதேயில்லை.


இவர்கள் "வளர்ச்சி" என்று சொல்வது மாவோயிஸ்டு அமைப்பின் வளர்ச்சியைப் பற்றியதாக இருக்குமோ...?

Tuesday, October 20, 2009

குள்ள அப்புவின் சர்க்கஸ் துப்பாக்கியும், தங்க விலையும்

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. மக்களின் தேவைகள் மற்றும் அவர்களின் வாங்கும் சக்தியைத்தாண்டி விலை சென்றுவிட்டதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் மக்கள், தங்கத்தின் மீது முதலீடு செய்வது பற்றியெல்லாம் யோசிக்கும் நிலையில் இல்லை.

இந்த நிலை ஒருபுறம் இருந்தாலும், இந்தியாவில் தங்கம் விலை மேலே, மேலே... மேலே என்று விளம்பரப்பாட்டைப் பாடிக் கொண்டே உயரப் பறக்க ஆரம்பித்தது. சர்வதேசச் சந்தையில் அதிகரித்துவிட்டதே... என்ன செய்வது என்று கையைப் பிசைவதைப் போல அபிநயம் பிடித்துக் காட்டினர் அத்துறையைச் சேர்ந்தவர்கள். அதையும் மீறி இந்தியர்கள் தங்கம் வாங்கினார்கள் என்று விலையேற்றத்திற்கு ஆதரவாக செய்திகளும் வெளிவந்தன. விலையேற்றம் காரணமாக பல திருமணங்கள் தள்ளிப் போயிருக்கின்றன என்பது பிரசுரமாகாத செய்திகளில் ஒன்றாக இருந்துவிட்டது.

அபூர்வ சகோதரர்கள் என்ற படத்தில் குள்ள வேடத்தில் நடித்த கமல்ஹாசன் கையில் ஒரு சர்க்கஸ் துப்பாக்கி இருக்கும். வில்லன் கையில் அந்தத் துப்பாக்கி சிக்கிவிடும். கமல்ஹாசனை குறிவைத்து வில்லன் சுடும்போது துப்பாக்கியின் பின்புறமிருந்து குண்டு கிளம்பி வில்லனையே பதம்பார்த்துவிடும். கமல்ஹாசன் சிரித்துக் கொண்டே சொல்வார், அது சர்க்கஸ் துப்பாக்கி. பின்னாடியும் சுடும் என்று. உடனே வில்லன், துப்பாக்கியைத் திருப்பிப் பிடித்துக் கொண்டு சுடுவார். அப்போதும் குண்டு அவர் மேல்தான் பாயும். முன்னாலும் சுடும் என்பார் கமல்.

இதுபோல்தான் தங்கத்தின் விலை ஆகிவிட்டது. சர்வதேசச் சந்தையில் ஏறும்போதும் ஏறியது. அங்கு இறங்கும்போதும் இங்கு ஏறுகிறது. ஒரேயொரு வித்தியாசம். படத்தில் அடிபட்டது வில்லன். இங்கு அடிபடுவது பொது மக்கள்.

Sunday, October 18, 2009

"தேசியவாதி நரகாசுரன்" - கற்பனை



தீபாவளி மலருக்கு சிறப்பு பேட்டி கேட்டு பலரைச் சந்திக்கிறார் பத்திரிகையாளர் ஒருவர்.

வணக்கம். அத்வானிஜி, தீபாவளிக்கு சிறப்பு செய்தியா ஏதாவது சொல்ல விரும்புறீங்களா...

அத்வானி : நான் அப்புடி பாரபட்சமா பாக்குறதுல்லயே... எப்பவுமே சிறப்பு செய்திதான். ஜின்னா, காந்தஹார், ஜஸ்வந்த்சிங்னு தீபாவளி, தசரா பாத்தா கொடுத்தேன்...??

பத்திரிகையாளர் : இருந்தாலும் தீபாவளின்னா மக்கள்கிட்ட ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்ல...

அத்வானி : ஓ... சரி...சரி.. தீபாவளின்னா நரகாசுரன்தான் நினைவுக்கு வர்றாரு...

பத்திரிகையாளர் : இயல்புதான... எல்லாருக்குமே நினைவுக்கு வருவாரு...

அத்வானி : அது வேற... என்னோட பார்வை வேற... நரகாசுரன் ஒரு தேசியவாதி.

பத்திரிகையாளர் : அப்படியா... சொல்லவே இல்லை...

அத்வானி : அதான் சொல்லிட்டனே... அவரு சமாதி எங்கருக்குனு தெரியாது. தெரிஞ்சா பெரிய மாலை ஒண்ணு வெச்சு தீபாவளி அன்னிக்கு அஞ்சலி செலுத்தலாம்...

பத்திரிகையாளர் : உங்க கட்சிக் கொள்கைக்கு எதிரா போற மாதிரில்ல இருக்கு...

அத்வானி : கட்சியா... அத ஆரம்பிக்குறதயே நான் ஒத்துக்கலை... கட்சி துவக்குறதுக்காக நடந்த கூட்டத்துல நான் கலந்துக்கல...
பத்திரிகையாளர் : இல்லையே... அந்தக்கூட்டப் புகைப்படத்துல நீங்க இருந்தது எங்களுக்கு ஞாபகம் இருக்கே...

அத்வானி : ஃபோட்டோவுல இருப்பேன்... ஆனா கூட்டத்துல இல்லை..

பத்திரிகையாளர் : தீபாவளி அதுவுமா சிறப்பா ஏதாவது பேட்டி கொடுப்பீங்கன்னு பாத்தா விவகாரமால்ல போகுது...

அத்வானி : தீபாவளி கொண்டாடுறதயே நான் ஒப்புக்கலை.. தெரியுமா...

அங்கிருந்து ஓட்டம் பிடிக்க ஆரம்பித்த பத்திரிகையாளர் மன்மோகன்சிங் முன்னால் மூச்சிரைக்க போய் நின்றார்.

(கவலையுடன் காட்சியளிக்கும் மன்மோகன்சிங்) : வாங்க... வாங்க...

பத்திரிகையாளர் :தீபாவளிக்கு ஒரு சிறப்பு பேட்டி எடுக்கலாம்னு வந்தேன். நீங்க கவலையா இருக்குற மாதிரி இருக்கே...

மன்மோகன்சிங் : ஆமா... தீபாவளி அன்னக்கி எல்லாரும் அணுகுண்டு வெடிப்பாங்களே... ஒபாமா ஏதாவது நினைச்சுப்பாரோன்னு கவலையா இருக்கு...

பத்திரிகையாளர் : தீபாவளிக்கு சிறப்பா ஏதாவது சொல்ல விரும்புறீங்களா...

மன்மோகன்சிங் : ஒரே கோரிக்கைதான்... அணுகுண்டு வெடிய மட்டும் வெடிக்காதீங்கன்னு பெரியவங்க, சின்னவங்கங்களுக்கு கேட்டுக்குறேன்... அமெரிக்க இந்தியர்கள் வெடிச்சுக்கலாம்.. இந்திய இந்தியர்கள் தயவு செஞ்சு வெடிக்காதீங்க... ஒபாமா சர்டிபிகேட் தர மாட்டேன்னு சொல்லிட்டா அவ்வளவுதான்... என்னோட காதல் தோல்விக்கு நீங்க காரணமாயிராதீங்க...

அதற்குள் தொலைபேசி அழைப்பு.

மன்மோகன்சிங் : யாரு... குட்ரோச்சியா.. ஹேப்பி தீபாவளி...(என்று உற்சாகமாகிறார்) ஆமா... கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. சின்ன வேலைதான்... உங்கள வழக்குலருந்து விடுவிக்குற வேலை... எவ்வளவு நாளாகிப்போச்சு...(மீண்டும் சோகம் அவரைக் கவ்வுகிறது)

இவர் சோகம் நம்மளத்தாக்கி... ம்..ஹூம்.. தாங்காது.. என்றவாறு நகர்கிறார் பத்திரிகையாளர்.

அடுத்து அவர் சந்தித்தது மத்திய அமைச்சர் அழகிரி. மக்கள் நலத்திட்டங்கள் எல்லாமே அவர் கையால்தான் இப்போதெல்லாம் வழங்கப்படுகிறது. மனுவில் குத்த குண்டுசி வேணும்னு ஒரு பொதுஜனம் கேட்டால்கூட அவரை அழைத்து அவர் கையால் கொடுக்க வைப்பார்கள் என்ற அளவிற்கு போயுள்ளது.

தீபாவளி வருது... விலைவாசி எக்குத்தப்பா ஏறிப்போயிருக்கே.. என்று கண்ணீரும், கம்பலையுமாக நிற்கும் மக்களின் கண்ணீரைத் துடைக்க அரசு இலவச கைக்குட்டையை வழங்கும் திட்டத்தை அறிவித்தது. மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அழகிரியே கைக்குட்டைகளை வழங்கிக் கொண்டிருந்தார். மேடைக்குக்கீழ் இருந்த கட்சிக்காரர்கள் சிலர், அடுத்தது அமைச்சரே கண்ணீரைத்துடைத்துவிடும் திட்டம்தான் என்றனர்.

பத்திரிகையாளர் : வணக்கம் சார். தீபாவளிக்கு ஏதாவது...

அழகிரி : அது வட இந்தியப் பண்டிகையாச்சே... இப்பல்லாம் வட இந்தியான்னாலே வெறுப்பாதான் இருக்குது... ஏன்னே புரியலை...

பத்திரிகையாளர் : பருவநிலை ஒத்துக்கலையோ...

அழகிரி : பருவநிலை, சூழ்நிலை, கோப்புநிலைனு எல்லாம்தான் ஒத்துக்க மாட்டேங்குது... மதுரைல இருந்தாதான் தெம்பா இருக்குற மாதிரி இருக்கு...

பத்திரிகையாளர் : என்ன சார்... தீபாவளிக்கு யாருமே சிறப்பா எதுவும் சொல்ல மாட்டேங்குறீங்களே...

அழகிரி : அப்படின்னா பல பேர்கிட்ட கேட்டுகிட்டு கடைசியாத்தான் இங்க வந்தீங்களா...?? (சுற்றியிருந்தவர்கள் பத்திரிகையாளரை நோக்கி பாய்ந்தனர்.)

தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடிய பத்திரிகையாளர் கமலாலயத்திற்குள் நுiஎழகிறார் பத்திரிகையாளர். கூட்டமாகத் தெரிந்தது. மூன்று பேர் அமர்ந்திருந்தார்கள். அதில் ஒருவர் இல.கணேசன்.

பத்திரிகையாளர் : வணக்கம்.. கணேசன்ஜி..

இல.கணேசன் : வாங்க... வாங்க...

பத்திரிகையாளர் : தீபாவளிக்கு சிறப்பு செய்தி வாங்க வந்தேன்...என்று இழுத்தார்.

இல.கணேசன் : அடடே.. வாங்க.. சிறப்போ சிறப்புதான்... தீபாவளிய ஒட்டி நாடே திரும்பிப்பாக்குற மாதிரி ஒண்ணு செய்யப்போறோம்...

பத்திரிகையாளர் : என்னது அது...இல.கணேசன் : தீபாவளியக் கொண்டாடுற எல்லாரும் எங்க கட்சி உர்ருப்பினர்கலனு அறிவிக்கப்போறோம்...

பத்திரிகையாளர் : அவங்க ஒப்புக்கணுமே...

இல.கணேசன் : ஒப்புக்குறவங்க மட்டும்தான் தீபாவளி கொண்டாடனும்... மத்தவங்கள்லாம் பாகிஸ்தானுக்கு போயிரலாம்... இதக்கண்காணிக்க முத்தாலிக் தலைமைல குழு போட்டிருக்கோம்...

பத்திரிகையாளர் : இதுக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன சம்பந்தம்...?

இல.கணேசன் : அதப்பத்தி பேசாம எப்படி இருக்க முடியும்... எங்க கட்சில இருக்கணும்னா பாகிஸ்தானத் திட்டணும்... கட்சில இருந்து வெளியேறணும்னா பாகிஸ்தானப் பாராட்டணும்... இதான் கொள்கை...

பத்திரிகையாளர் : நரகாசுரனக் கொன்னதுக்குதான தீபாவளி கொண்டாடுறோம்...

இல.கணேசன் : நஸ்ருதீன்தான் நரகாசுரன்... எல்லை தாண்டி வந்த ஆள்தான். பேர மாத்திக்கிட்டான்...

இளைப்பாறலாம் என்று வந்த இடத்தில் தலைவலி அதிகமாகி விடுமோ என்ற அச்சத்தில் பத்திரிகையாளர் வெளியேற முயன்றபோது, இருங்க... உறுப்பினர் கார்டு வாங்கிட்டுப்போய் தீபாவளி கொண்டாடுங்க... என்று தடுத்தார் இல.கணேசன்.

அய்யய்யோ... என்னை விட்டுருங்க... சிறப்புப் பேட்டியே வேண்டாம்.. என்றவாறு ஓடுகிறார் பத்திரிகையாளர்.

யார் மீதோ மோதி விடுகிறார். யார் என்று நிமிர்ந்து பார்த்தால் சாட்சாத் நரகாசுரனே நிற்கிறார்.

நரகாசுரன் : என்னைப் பார்த்தால் பயமாக இல்லையா...??

பத்திரிகையாளர் : யார் நீங்க...

நரகாசுரன் : நான்தான் நரகாசுரன்...

பத்திரிகையாளர் : துவரம்பருப்பு கிலோ 100 ரூபாயைத் தொட்டுக்கிட்டு இருக்குற பயங்கரத்த பாத்த மக்கள் உமக்கெல்லாம் இனி பயப்பட மாட்டார்கள்...

நரகாசுரன் : என்ன...

பத்திரிகையாளர் : இதுக்கு மேலயும் இங்க நின்னா ஏதாவது பெரிய ஜவுளிக்கடை வாசல்ல வர்றவங்கள வரவேற்குறதுக்கு நிறுத்திருவாங்க... போறவங்க, வர்றவங்க எல்லாம் காமெடி பண்ணிருவாங்க...
"அய்யய்யோ" என்று அலறியவாறு நரகாசுரன் ஓடுகிறார்.
பத்திரிகையாளர் நிதானமாக நடந்து செல்கிறார்.

Tuesday, October 13, 2009

எம்.பி.க்களுக்கு "விஸ்கி" அனுப்பினார் மல்லையா!



தீபாவளி பரிசாக விஸ்கி பாட்டில்களை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் மதுபான தொழிலதிபர் விஜய் மல்லையா.


தில்லியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு இந்த பாட்டில்கள் அனுப்பப்பட்டன. பல உறுப்பினர்கள் தலைநகரில் தற்போது இல்லை. அவர்கள் பெரும்பாலும் தீபாவளி கழித்துதான் தலைநகருக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் வீடுகளில் இருந்த உறுப்பினர்களில் சிலர் இதை தங்களுக்கு ஏற்பட்ட அவமரியாதையாகப் பார்த்துள்ளனர்.


இவ்வாறு மது பாட்டில்களை அனுப்புவதற்கு முன்பாக நாடாளுமன்றம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் சட்டம் ஆகியவற்றிற்கு உள்ள கவுரவத்தை மனதில் கொண்டிருக்க வேண்டும் என்று பிரபாத் ஜா என்ற உறுப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளார். பொது இடங்களில் குடிப்பவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்போவதாக தில்லி அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் வெளிப்படையாக இந்தப் பாட்டில்களை அனுப்பிய மல்லையா மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கன் என்று தெரியவில்லை என்கிறார் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்.


இவ்வாறு பாட்டில்களை வாங்கியது மற்றும் அனுப்பி வைப்பதற்காக ஏற்பட்ட செலவை மல்லையாவின் பாக்கெட் ஏற்றுக்கொள்கிறதா அல்லது அவரது தலைமையிலான நிறுவனங்களின் தலையில் கட்டப்படுகிறதா என்பதையும் பார்க்க வேண்டும் என்கிறார்கள் சிலர். வெறும் காலண்டர் தயாரிப்பதற்காக நூற்றுக்கணக்கான மாடல்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று நிறுவனத்தின் கணக்கில் கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்தவர் இந்த மல்லையா என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, October 12, 2009

தெற்கில் மீண்டும் வட்டமிடுகிறது அமெரிக்கக்கழுகு!




ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் ஆகிய நாடுகளின் ஆக்கிரமிப்பில் பெரும் கவனம் செலுத்திக் கொண்டிருந்த அமெரிக்கா மீண்டும் தென் அமெரிக்க நாடுகளின் பக்கம் திரும்பியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் தென் அமெரிக்காவின் அரசியல் சூழல் பெரிதும் மாறியுள்ளது. வெனிசுலா முன்னேற்றப்பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் நலக்கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் வெனிசுலா கண்டுள்ள வெற்றி மற்ற தென் அமெரிக்க நாடுகளை உத்வேகப்படுத்தியது. அரசியல் ரீதியாகவும் தென் அமெரிக்க அரசுகள் ஏகாதிபத்திய அமெரிக்காவுடன் முன்பு இருந்தது போன்ற நெருக்கத்தை வைத்துக் கொள்ளவில்லை.

கொலம்பியா மற்றும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசைக் கவிழ்த்துவிட்ட ஹோண்டுரஸ் ராணுவம் ஆகியவைதான் அமெரிக்காவிற்கு ஜால்ரா தட்டிக் கொண்டிருக்கின்றன. ஹோண்டுரசின் ஜனநாயகப் படுகொலை அமெரிக்காவின் ஆதரவில்லாமல் நடந்திருக்க முடியாது என்பதுதான் தென் அமெரிக்க நிகழ்வுகளைத் தொடர்ந்து கவனித்துவரும் அரசியல் வல்லுநர்களின் கருத்தாகும். தென் அமெரிக்க நாடுகள் ஒன்றிணைந்து தற்போது ஏற்படுத்தியுள்ள தனியாக வங்கி, தொலைக்காட்சி நிறுவனம், பிராந்திய ரீதியான வர்த்தக ஒப்பந்தங்கள் என்பதெல்லாம் 1990களில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. வெனிசுலா மற்றும் கியூபா ஆகிய நாடுகள் இந்த முயற்சிகளை எடுப்பதில் முன்நின்றன.

இந்த நிலையில்தான் அமெரிக்கா தென் அமெரிக்க நாடுகள் தனது கண்களைப் பதித்துள்ளது. கொலம்பியாவில் புதிதாக ஐந்து ராணுவத்தளங்களை அமெரிக்கா அமைக்கிறது. கேட்டால், போதைப்பொருட்கள் கடத்தலைத் தடுக்கவே இந்த ஏற்பாடு என்று கூறிக்கொள்கிறது. போதைப்பொருட்கள் கடத்தும் நாடுகள் என்று கூறி வெனிசுலாவையும், பொலிவியாவையும் கருப்புப்பட்டியலில் வைத்திருப்பதாகவும் அமெரிக்கா கூறுகிறது. ஆனால் இந்தப்பகுதியிலேயே அமெரிக்கா மற்றும் கொலம்பிய ஆகிய இருநாடுகள்தான் அதிகமாக போதைப்பொருட்களை விளைவிப்பதோடு நுகரவும் செய்கின்றன. இடதுசாரிக்கொள்கைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தும் இருநாடுகள் வெனிசுலா மற்றும் பொலிவியா என்பதே கருப்புப்பட்டியல் தயாரிப்புக்குக் காரணமாகும்.

அதோடு, பிரேசில் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் ஆயுதங்களை வாங்கிக் குவிக்கின்றன என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. கொலம்பியாவும் ஆமாம் என்று அருகில் அமர்ந்து கொண்டு தலையாட்டுகிறது. அமெரிக்காவிடமிருந்து வாங்காமல் பிரேசில் பிரான்சிடமிருந்தும், வெனிசுலா ரஷ்யாவிடமிருந்தும் ஆயுதங்களை வாங்குவதால்தான் இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. படைப்பெருக்கம் மற்றும் ஆயுதக்குவிப்பு என்று அமெரிக்கா கூறுவதெல்லாம் சொந்த நாட்டு மக்களை அச்சுறுத்தி வெளியில் தனது ஆக்கிரமிப்பை அதிகரித்துக் கொள்ளவே என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியமாகிவிட்டது.

உலகிலேயே அதிகமான நாடுகளில் தனது ராணுவத்தளங்களை ஏற்படுத்தியிருப்பது அமெரிக்காதான். 46 நாடுகளில் 865 அமெரிக்கத்தளங்கள் உள்ளன. பல நாடுகளில் அதன் அரசுகள் மற்றும் மக்களின் விருப்பத்திற்கு மாறாகவும் இந்தத்தளங்கள் அமைந்துள்ளன. லத்தீன் அமெரிக்காவிலேயே எல் சால்வடார், ஹோண்டுரஸ், பியூர்ட்டோ ரிகோ, கியூபா, அருபா, கியுராசோ மற்றும் பராகுவே ஆகிய நாடுகளில் இந்தத் தளங்கள் இன்னும் உள்ளன. இரண்டாம் உலகப்போருக்குப்பிறகு முதன்முறையாக, தென் அமெரிக்கக் கடற்பகுதிகளில் அமெரிக்கக் கப்பற்படை உலாவத் தொடங்கியுள்ளது. அர்ஜெண்டினா மற்றும் உருகுவே ஆகிய நாடுகளின் அரசுகள் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அமெரிக்க படைத்தளங்கள் தொடர்பாக ஊசலாட்டம் காட்டுகின்றன.

சொந்த பாதுகாப்பிற்காக ஆயுதங்களை வாங்கும் எங்களைப் பார்த்து, கொலம்பியாவில் ஏழு படைத்தளங்களை உருவாக்கத்திட்டமிடும் அமெரிக்கா எப்படி கேள்வி எழுப்பலாம் என்று உரிமைக்குரல் எழுப்புகிறது வெனிசுலா. அமேசான் பகுதிகளின் இயற்கைவளங்களைக் கொள்ளையடிக்கவே இந்தப்புதிய படைத்தளங்கள் என்று தென் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்புக் கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது. இந்தக்கூட்டத்தில் கொலம்பியாவும் கலந்து கொண்டது. அமெரிக்காவின் படைத்தளங்கள் அமைப்பதற்கான ஒப்பந்த விபரங்களைத் தெரிவிக்குமாறு மற்ற தென் அமெரிக்க நாடுகள் கேட்டபோது அதைத்தர கொலம்பியா மறுத்துவிட்டது. சொந்த நாட்டிற்கு எதிரான அம்சங்கள் அதில் இருப்பதுதான் காரணம் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.


Saturday, October 10, 2009

அடடே... மதியுமா...??


அடடே...(தினமணி, அக்.7) பகுதியில் ஏர் இந்தியா மகாராஜாவே சலித்துக் கொள்வது போன்ற கேலிச்சித்திரம் வரையப்பட்டுள்ளது. அவரால் தனது பைலட்டுகளை நம்ப முடியவில்லையாம். எப்ப சம்பளத்தை உயர்த்திக் கேப்பாங்க.. எப்ப ஸ்டிரைக் பண்ணுவாங்க... அடிதடியில இறங்குவாங்க... ஒண்ணுமே புரிய மாட்டேங்குதுன்னு சொல்வது போல் அந்தக் கேலிச்சித்திரம் உள்ளது.


பொதுத்துறை, வங்கி, காப்பீடு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் தங்கள் கோரிக்கைகளுக்காக போராடினால் வரிந்து கட்டிக் கொண்டு இறங்கி விடுகிறார்கள் இந்த தனியார்துறை ஆதரவாளர்கள். மதியும் அவர்களின் வரிசையில் இணைந்து கொள்கிறார். ஜெட் ஏர்வேஸ் பைலட்டுகளின் வேலை நிறுத்தம் நிறைவு பெற்று இன்னும் அந்நிறுவனத்தின் அனைத்து விமானங்களும் விண்ணில் பறக்கத் துவங்கவில்லை. அப்போதுமட்டும் ஜெட் நிறுவனத்தைக் கேலி செய்து சித்திரம் வரைய மதிக்கு ஏன் தோணவில்லை..? அது தனியார் நிறுவனம் என்பதாலா...??


சில நாட்களுக்கு முன்பு, முதலாளிகள் தங்கள் நிறுவனத்திலிருந்து எடுத்துக்கொள்ளும் ஊதியத்திற்கு வரம்பு தேவை என்று மத்திய அமைச்சர் சல்மான் குர்சித் கூறினார். உடனே முதலாளிகள் சங்கங்கள் அவர் மீது பாய்ந்து விட்டன. இவர்களுக்கு ஆதரவாக ஊடகங்களும் தொடையைத் தட்டிக் கொண்டு இறங்கிவிட்டன. பாவம்... ஊதியத்தைக் குறைத்துவிட்டால் அடுத்த வேளைச் சோற்றிற்கு எங்கே போவார்கள்... என்பதுபோல ஓலமிடுகிறார்கள்.


இதுதான் இவர்களின் சம்பளப் பட்டியல்(ரூ.கோடியில்)


முகேஷ் அம்பானி - 44.02

மல்விந்தர் சிங் - 19.59

சுனில் மிட்டல் - 19.55

சஜ்ஜன் ஜிண்டால் - 16.73

பங்கஜ் ஆர் படேல் - 14.43

குமாரமங்கலம் பிர்லா - 11.25

கமல் சிங் - 10.64

ஒவ்வொரு ஆண்டும் வெறும் சம்பளமாக இவர்கள் வாங்கும் தொகை இது. நெருக்கடி நிலவுகிறது என்று கூறி சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மானியமாக வாங்கிக்கொண்ட முதலாளிகள் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள மாட்டேனென்கிறார்கள். ஆனால் ஊழியர்கள் என்று வந்துவிட்டால் அவர்கள் சீட்டைக் கிழித்து அனுப்பவதுதான் முதலாளிகளின் தலையாய கடமையாக இருக்கிறது.

அடடே... மதியுமா..? என்ற வாசகர்கள் நினைத்துக் கொள்வதுபோல்தான் இந்தக் கேலிச்சித்திரமும் உள்ளது.

Thursday, October 8, 2009

கோவிலுக்குள் நுழைந்தே விட்டார்கள் தலித்துகள்!



விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்தில் உள்ளது காங்கியனூர் கிராமம். இங்குள்ள திரௌபதி அம்மன் கோவிலில் வழிபட தலித்துகள் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் தீ மிதி திருவிழாவில் பங்கேற்கவும் தடைசெய்யப்பட்டது.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் புகார் அளித்தனர். தலித்து மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்கப்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் அதைக் கிடப்பில் போட்டார்கள். இதனால் மக்களைத் திரட்டி கோவிலுக்குள் நுழைவது என்று முடிவு செய்யப்பட்டது.


செப்.30 அன்று ஆலய நுழைவுப் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், ஜி.லதா எம்எல்ஏ, மாவட்ட செயலாளர் ஜி.ஆனந்தன், அம்பேத்கர் நிக் கோலஸ் ஆகியோர் தலைமை தாங்கி னர். ஊர்வலமாக சென்ற போது காவல்துறையினர் 3கி.மீ தூரத்திற்கு முன்னதாகவே தடுத்து நிறுத்தினர். மேலும், தலைவர்கள் மீதும் மக்கள் மீதும் காட்டு மிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியதோடு 105 பேரை கைது செய்து கடலூர் மத்திய சிறை யில் அடைத்தனர்.


காவல்துறையின் அடாவடி தனத்தை கண்டித்தும், தலித் மக்கள் வழிபட அனுமதிக்க வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் தொடர்ந்து கண்டன இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில் கிராமத்தில் அமைதி யை நிலைநாட்ட அக்டோபர் 6 மற் றும் 7 ஆகிய தேதிகளில் திருக்கோவி லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற் றது. 6ம் தேதி கோட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமையில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில், திரௌபதி அம்மன் கோவில்அனைவருக்கும் பொதுவானது. அனைத்து மதத்தினரும் சாமியை வழிபட உரிமை உள் ளது. இதனை தடைசெய்ய யாருக்கும் உரிமை இல்லை. அப்படி தடை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப் பட்டது.


மேலும் இந்தகூட்டத்தில் அமைதி ஒப்பந்தமும் ஏற்படுத்தப்பட்டது. இதில் தலித் பகுதியில் இருந்து சென்ற முக்கிய பிரமுகர்கள் மட்டும் கையொப்பமிட்டனர். எதிர் தரப்பில் கையெழுத்திட அவகாசம் கோரப் பட்டது. 24 மணி நேர அவகாசம் வழங்கிய அதிகாரிகள் உரிய பதில் கிடைக்க வில்லை என்றால் கோவி லுக்கு பூட்டு போடப்படும் என்றும் எச்சரித்தனர். மறுநாள் (அக்டோபர் 7) மாவட்ட வருவாய் அலுவலர் கதிர வன் தலைமையில் மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெற்றது. மறுதரப்பி னர் கையெழுத்து இடவில்லை. அதனை தொடர்ந்து டிஎஸ்பி நல்லியப்பன் தலைமையில் தலித் மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபட்டனர். இதுபோன்று தலித்துகள் உள்ளே நுழைய முடியாத நூற்றுக்கணக்கான கோவில்கள் தமிழகத்தில் இன்னும் உள்ளன. பட்டியல் பெரியதுதான். ஆனால் தீண்டாமை ஒழிப்பு முன்னணி துவக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள்தான் ஆகியுள்ளது. அதற்குள் சுமார் 25 கோவில்களில் நுழைய அனுமதி பெற்றுத்தந்துள்ளது. இரட்டைத் தம்ளர், பொதுக்குளத்தில் தண்ணீர் எடுக்க தடை, சலூனில் தலித்துகளுக்கு முடிவெட்ட தடை உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகளோடு தலித்துகளின் அன்றாட வாழ்க்கையே போராட்டமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 105 பேரும் இன்னும் சிறையில்தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, October 7, 2009

இடைநிலைக்கல்வியை இடையிலேயே விட்ட அரசு!



பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே விட்டு விட்டு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த நிலையை கல்வி வல்லுநர்கள் கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், அரசோ அனைத்தையும் தனியார் கையில் கொடுத்துவிட்டால் எல்லாம் தீர்ந்துவிடும் என்று கூறுகிறது. தற்போதைய மத்திய கல்வித்துறை அமைச்சரான கபில் சிபல், புரட்சிகரமான(!) பல திட்டங்களை அறிவித்துக் கொண்டே போகிறார். அரசுப்பள்ளிகளை தரமாக்க அதிரடி ஆலோசனை ஒன்றையும் கூறினார். அப்பள்ளிக்கட்டிடங்களில் முதல் மாடியில் தனியார்கள் பள்ளி நடத்த அனுமதி அளிக்கப்போவதாகக் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார்.



சமூக நல நடவடிக்கைகள் வெட்டுங்கள் என்று இவர்களுக்கு மருந்துச்சீட்டு எழுதிக்கொடுத்த உலக வங்கியே கொந்தளிக்கும் அளவிற்கு மத்திய அரசின் அலட்சியம் உள்ளது. இந்தியாவின் ஆரம்ப, இடைநிலை மற்றும் உயர்கல்வி குறித்து உலக வங்கி ஆய்வொன்றைச் செய்துள்ளது. சாம் கார்ல்சன் என்ற ஆய்வாளர் இந்த ஆய்வை மேற்கொண்டார். அதில் திறன்படைத்த உழைப்பாளிகளை உருவாக்கக்கூடிய இடைநிலைக்கல்விக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதை அவர் கண்டுள்ளார். தற்போது கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியில் ஆரம்பக்கல்விக்கு 52 சதவிகிதமும், இடைநிலைக்கல்விக்கு 30 சதவிகிதமும், உயர்கல்விக்கு 18 சதவிகிதமும் செலவழிக்கப்படுகிறது.



கடந்த முறை ஆட்சிக்கு வந்தபோதே கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்துவோம் என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதிமொழி அளித்தது. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு சதவிகித நிதியை கல்விக்காக ஒதுக்குவோம் என்று குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் எழுதியே வைத்தனர். இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டதற்கு இடதுசாரிக்கட்சிகள் அளித்த நிர்ப்பந்தமே காரணம். ஆனால் பெயரளவுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீட்டை அதிகரித்த மத்திய அரசு, தற்போது இடதுசாரிகளின் ஆதரவில் ஆட்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லாததால் அது பற்றிப் பேசுவதேயில்லை.



நாடு முழுவதுமுள்ள பள்ளிகளில் சுமார் 25 சதவிகித ஆசிரியப் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன. கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றுபவர்களில் முதுநிலைப்பட்டம் அல்லது ஆய்வுப்படிப்பு முடிக்காமல் இருப்பவர்கள் 57 சதவிகிதம் பேராகும். இடைநிலைக்கல்வி முடித்து உயர்கல்விக்கு செல்பவர்களுக்காக ஏழு சதவிகித இடங்கள் மட்டுமே உள்ளன. ஆரம்பக் கல்வி நிறைவு செய்பவர்களிலேயே 52 சதவிகிதம் பேர்தான் இடைநிலைக்கல்விக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. சீனாவில் இது 91 சதவிகிதமாகவும், இலங்கையில் 83 சதவிகிதமாகவும், வியட்நாமில் 72 சதவிகிதமாகவும் உள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த நிலைமை மோசவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. 2017-18 ஆம் ஆண்டில் ஆரம்பக்கல்வி பயில சுமார் ஆறு கோடி மாணவர்கள் பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள் என்று உலகவங்கி ஆய்வு கணிக்கிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாதிரியான நிலைமை இருக்கிறது. ஆரம்பக்கல்வி முடித்து இடைநிலைக்கல்விக்கு அனுமதி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை பீகாரில் 22 சதவிகிதமாக உள்ளது. ஜார்க்கண்டு மிக மோசமான நிலையில் வெறும் நான்கு சதவிகிதமாக இருக்கிறது. தமிழகத்திலும் வெறும் 44 சதவிகித மாணவர்கள்தான் ஆரம்பக் கல்வியிலிருந்து இடைநிலைக்கல்விக்கு செல்கிறார்கள் என்று உலகவங்கி கூறுகிறது. பொதுவாகவே கல்வியில் முன்னேறிய மாநிலமான கேரளாவில் 92 சதவித மாணவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்கின்றனர். படிப்பை நடுவிலேயே கைவிடும் பிரச்சனையைத் தீர்க்க பல்வேறு ஆலோசனைகளை தனது ஆய்வறிக்கையில் உலகவங்கி முன்வைத்துள்ளது.

தரமான கல்வி, போதிய வாய்ப்புகள், நலிந்த பிரிவினருக்கு சிறப்பு உதவிகள் என்றெல்லாம் உலகவங்கியால் தரப்படும் பரிந்துரைகள் இந்திய கல்வி வல்லுநர்களால் முன்வைக்கப்பட்டவையே ஆகும். உலக வங்கியின் ஆய்வில் மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயம் ஒன்றுதான். அதாவது, மிகவும் அபாரமான கல்வித்திறனை வெளிப்படுத்தக்கூடிய முதல் ஐந்து சதவிகித இந்திய மாணவர்கள் சர்வதேச அளவிலும் முன்னணியில் இருக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான். ஆனால் ஒட்டுமொத்த மாணவர்களின் கல்வித்திறன் பற்றிய ஆய்வில், ஆய்வு செய்யப்பட்ட 51 நாடுகளில் இந்தியாவுக்கு 43வது இடம்தான் கிடைத்துள்ளது. இந்தப் புள்ளிவிபரங்கள் மத்திய அரசுக்கு புதிதாக இருக்கலாம். ஆனால் பிரச்சனை மத்திய அரசுக்கு புதிதல்ல. ஏற்கெனவே தெரிந்தும் கண்டுகொள்ளவில்லை. தெரிந்தே மத்திய அரசு செய்யும் தவறுகளில் இதுவும் ஒன்று.

Tuesday, October 6, 2009

பண்டங்களாக மாற்றப்படும் சிறுமிகள்!


பாலியல் தொழிலுக்காக பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தப்படுகிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவலை தேசிய பெண்கள் ஆணையம் கவலையுடன் தெரிவித்துள்ளது. இவ்வாறு கடத்தப்படுவது குறித்து தேசிய பெண்கள் ஆணையத்தின் சார்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. ஆய்வு விபரங்களை ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. நாட்டிலுள்ள 612 மாவட்டங்களில் 378 மாநிலங்களில் இந்தக் கொடுரம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, தென் மற்றும் கிழக்கு மாநிலங்களில்தான் இது அதிகமாக நடப்பதாக ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. இந்தக் கொடுமைகள் நடப்பதற்கு வறுமை, வேலையின்மை, எழுத்தறிவின்மை மற்றும் பாலினப் பாகுபாடு ஆகியவை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : சராசரியாக 90 சதவிகித தென் மற்றும் கிழக்கு மாநில மாவட்டங்களிலிருந்து பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்காக கொண்டு செல்லப்படுகின்றனர்.தமிழகத்திலும் இந்தக் கொடுமை பரவலாக இருக்கிறது. இங்கிருந்து 93.33 சதவிகித மாவட்டங்களிலிருந்து பெண்களையும், சிறுமிகளையும் கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பது நடந்து கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் சுமார் 28 லட்சம் பெண்கள் இந்தப் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நாட்டில் 15 முதல் 35 வயதுவரையுள்ள பெண்களின் மொத்த எண்ணிக்கையில் 2.4 சதவிகிதப் பெண்கள் இத்தகைய கொடுரங்களால் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுபவர்களில் 43 சதவிகிதம் பேர் சிறுமிகளாவர்.
இதில் பெரும்பாலான பெண்கள் மற்றும் சிறுமிகள் கட்டாயப்படுத்தப்பட்டே இத்தகைய தொழிலுக்கு தள்ளப்படுகிறார்கள். ஆசை வார்த்தை காட்டி அழைத்துச் செல்லப்பட்டுதான் இவர்கள் இத்தகைய நெருக்கடியை சந்திக்க வேண்டி வருகிறது. இதில் கொடுமையிலும் பெரிய கொடுமை என்னவென்றால் கணிசமான பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களாலேயே இத்தொழிலுக்கு தள்ளப்படுகிறார்கள் என்பதுதான். கிட்டத்தட்ட 22 சதவிகிதம் பேர் குடும்பத்தினரின் நிர்ப்பந்தம் காரணமாகவே இத்தொழிலுக்கு செல்கிறார்கள். எட்டு சதவிகிதம் பேர் தாலி கட்டிய கணவனாலேயே இந்தப் புதைகுழியில் தள்ளப்படுகின்றனர். சுமார் 18 சதவிகிதம் பேர் நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஆகியோரின் தவறான ஆலோசனைகளால் இதில் சிக்கிக்கொள்கிறார்கள்.
இவ்வாறு பெண்களும், சிறுமிகளும் நிர்ப்பந்தத்தாலும், ஆசைவார்த்தைகளாலும் சிக்கிக்கொள்வதற்கு வறுமையே பிரதான காரணமாகும். அதோடு பாலினப்பாகுபாடும் முக்கிய காரணமாக உள்ளது. பெண்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்க ஏராளமான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால் அந்த சட்டங்கள் சரியான முறையில் அமல்படுத்தப்படுவதில்லை. பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் தள்ளப்பட்டு சதி வலையில் சிக்கிக்கொள்வதற்கும், அவர்களுக்கு எதிராக அநீதி இழைக்கப்படுவதற்கும் இத்தகைய அம்சங்களே காரணங்களாக இருக்கின்றன. இவ்வாறு இந்த கொடுமை குறித்த ஆணையத்தின் அறிக்கை கூறுகிறது.இதிலிருந்து அப்பாவி பெண்களையும், சிறுமிகளையும் விடுவிக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கான தீர்வையும் தேசிய பெண்கள் ஆணையமே தனது அறிக்கையில் முன்வைக்கிறது.
பெண்களுக்கு பொருளாதார ரீதியான சுதந்திரம் இல்லாதது முக்கியமான காரணமாகும். அவர்களுக்கு அந்த சுதந்திரம் கிடைக்கச் செய்ய வேண்டும். காகிதங்களில் இருக்கும் சட்டங்கள் முறையாக நடைமுறைக்கு வர வேண்டும். அதோடு, பெண்களும் நம்மைப் போலவே ரத்தமும் சதையும் கொண்டவர்கள். அவர்களும் சமுதாயத்தில் மதிக்கப்படக்கூடியவர்கள் என்ற மனப்பான்மை மக்கள் மத்தியில் உருவாக்கப்பட வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலம் பெரும்பாலான குற்றங்களைத் தடுத்து நிறுத்திவிட முடியும் என்று தேசிய பெண்கள் ஆணையம் கருதுகிறது. பெண்களைப் பண்டங்களாகவும், குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் எந்திரங்களாகவும் பார்க்கின்ற மனநிலை மாற பள்ளிப் பாடத்திட்டத்திலேயே இது குறித்த கருத்துகள் சேர்க்கப்பட வேண்டும். சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான பாகுபாடுகள் இல்லாத நிலை உருவானாலேயே இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதுதான் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடுபவர்களின் கருத்தாகும்.
ஆட்சியாளர்களின் கொள்கைகள் மாற வேண்டும். அதுவே ஆண், பெண் பாகுபாடற்ற நிலையை நோக்கிச் செல்வதற்கான முதல்படியாக அமையும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

வெடிக்கக் காத்திருக்கும் புற்றுநோய்க்குண்டு!



இந்தியர்களைப் பெருமளவில் பாதிக்கும் நோய் காசநோயாகும். எய்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நோய்களைப் பற்றிய விவாதங்கள், விளம்பரங்கள் மற்றும் சிகிச்சைக்கான நிதியுதவிகள் என்று நடந்தாலும் காசநோய் பற்றிய அக்கறை அரசுத்தரப்பில் பெருமளவில் காட்டப்படுவதில்லை. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 17 லட்சம் பேர் காச நோயால் மடிந்து போகிறார்கள். அதில் கிட்டத்தட்ட 30 சதவிகிதம் பேர் இந்தியர்களாவர். இந்த கொடுமை ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மறுபுறத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 2020 ஆம் ஆண்டில் பெருமளவில் வெடிக்கும் வகையில் இதன் பாதிப்பு இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

புற்றுநோய் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்தியக் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் 2020 ஆம் ஆண்டுக்குள் 20 சதவிகிதம் அதிகரிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 4 லட்சத்து 47 ஆயிரம் பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். 2020 ஆம் ஆண்டுக்குள் இந்த ஆண்டு சராசரி சுமார் ஐந்தரை லட்சத்தைத் தொட்டுவிடும் அபாயம் எழுந்துள்ளது. அனைத்து வகையான புற்றுநோய்களுமே அதிகரித்துள்ளன. கடந்த 24 ஆண்டுகள் குறித்த இந்த ஆய்வின்படி வாய்ப்புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

தற்போது ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 28 ஆயிரத்து 66 புதிய வாய்ப்புற்று நோயாளிகள் உருவாகின்றனர். 2020 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 46 ஆயிரத்து 785 ஆக அதிகரிக்கப் போகிறது. சுமார் 66 சதவிகித அதிகரிப்பை புதிய நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்த பத்தாண்டுகள் ஏற்படுத்தப்போகிறது. இரண்டாவதாக மார்பகப்புற்று நோய் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. புதிய நோயாளிகளின் ஆண்டு சராசரி தற்போது 42 ஆயிரத்து 863 ஆக உள்ளது. 2020க்குள் இந்த சராசரி எண்ணிக்கை 51 ஆயிரத்து 194 ஆக உயர்ந்துவிடும். மூளை, நரம்பு, வயிறு என்று அனைத்துப் புற்றுநோய்களுமே அதிகரிக்கவே செய்கின்றன.

இந்த ஆய்வறிக்கையை தயார் செய்துள்ள குழுவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் வினோத் ரெய்னா, இந்தியாவில் ஏற்படும் புற்றுநோயில் முப்பது சதவிகிதம் புகை பிடிப்பதாலும், புகையிலையை வாயில் போட்டு மென்று தின்றுவிடுவதாலும்தான் ஏற்படுகிறது. மார்பக மற்றும் வாய்ப்புற்று நோய்கள் அதிகரித்துள்ளதற்கும் இதுதான் காரணமாகும். பொது இடங்களில் புகை பிடிப்பது மற்றும் புகையிலை சாப்பிடுவது தொடர்பாக செய்யப்படும் விளம்பரங்கள் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும் நாம் பார்க்க வேண்டும். அதோடு, அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் அதிகமாக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். இந்திய மக்கள் தொகையில் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் நெருக்கடியை அதிகரிக்கச் செய்கிறது என்று கூறுகிறார்.

புற்றுநோய்க் கட்டுப்பாட்டுத்திட்டத்தில் புதிய உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது. அதற்கு இந்த ஆய்வறிக்கையின் புள்ளிவிபரங்கள் பெரிதும் உதவும் என்கிறார் மருத்துவ ஆய்வுக்கான இந்தியக்கவுன்சிலின் அதிகாரி ஒருவர். செல்போன்கள் பயன்படுத்துவதால் மூளையில் ஏற்படுத்தும் பாதிப்பை தனியாக ஆய்வு செய்ய வேண்டும். அதன் பயன்பாடு அதிகரித்திருப்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது கவுன்சிலின் கருத்தாக உள்ளது. நார்ச்சத்து உள்ள உணவுகள் குறைந்ததாலும் இந்தியாவில் பாதிப்பு அதிகரித்துள்ளது. மேற்கத்திய உணவுப்பழக்கங்கங்களுக்கு மாறியுள்ளவர்கள்தான் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது ஆய்வறிக்கை.

தேசிய புற்றுநோய் நிதியம் ஒன்றை உருவாக்கி புற்றுநோயால் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு உதவப்போவதாக மத்திய அரசு கூறுகிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வந்தபோதே சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவிகிதமாக உயர்த்துவோம் என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதிமொழி அளித்தது. மக்களுக்கு அளிக்கப்பட்ட அந்த உறுதிமொழி இன்றுவரை காப்பாற்றப்படவில்லை. நோய்கள் பெருகுகின்றன. பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றன என்று அரசுத்துறைகள் தரும் புள்ளிவிபரங்களே கூறுகின்றன. தேவை ஒரு சரியான சுகாதாரக் கொள்கையே என்கிறார்கள் அத்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள்.

Sunday, October 4, 2009

வரம் தர மறுக்கும் பூசாரி!

கிராமப்புற இந்தியாவில் வெறும் 28.3 சதவிகிதம் பேர் மட்டுமே வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்கள் என்பதுதான் அரசின் அதிகாரபூர்வ ஒப்புதல் வாக்குமூலம். வறுமையின் அளவைக் குறைக்க புதிய உத்தியையும் கண்டுபிடித்தார்கள். கிராமப்புற இந்தியர் மாதம் 365 ரூபாய் வருமானம் ஈட்டினால் வறுமைக்கோட்டைத் தாண்டி விடுகிறார் என்பதுதான் அந்த உத்தி. ஒவ்வொரு மனிதருக்கும் தேவையான கிலோரி உணவு அடிப்படையில் கணக்கிட்டால் உதைக்கிறதே என்பது ஆட்சியாளர்களின் கவலை. ஆட்சியாளர்களின் கணக்கு பல ஏழைக்குடும்பங்களை வறுமைக்கோட்டிலிருந்து உதைத்துத் தள்ளியுள்ளது.

இதற்கிடையில் மேலும் புதிய உத்திகளோடு வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்களை எதிர்கொள்ள(!) சுரேஷ் டெண்டுல்கர் தலைமையில் ஒரு குழுவைப் போட்டார்கள். இந்தக்குழு தனது வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. தங்களைப் பற்றி ஒரு குழு ஆய்வு செய்கிறது என்பது எத்தனை ஏழைகளுக்கு தெரியும் என்பது ஒருபுறம். மறுபுறத்தில், ஆட்சியாளர்களும் செல்வந்தர்களும் இந்தக்குழுவின் அறிக்கையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையைச் சொன்னால் இந்த அறிக்கையின் நிலைமை என்ன ஆகும் என்பதை திட்டக்குழு நடத்திக் காட்டியிருக்கிறது. வறுமைக்கோடு பற்றி கிராமப்புற மேம்பாட்டுத்துறை ஒரு ஆய்வு செய்தது. அதை திட்டக்குழு கடுமையாக விமர்சித்துள்ளது. வறுமைக்கோட்டை நிர்ணயிக்க தற்போதுள்ள வருமான வரம்பின்படி சுமார் 1800 கலோரிகளைத்தான் கிராம மக்களால் பெறமுடியும் என்பது அத்துறையின் கண்டுபிடிப்பு. இதனால் தற்போதுள்ள வருமான வரம்புப்படி 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற இந்தியர்கள் வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது. கிராமப்புற வருமான வரம்பை ரூ.700 ஆக உயர்த்தலாம் என்பது அக்குழுவின் பரிந்துரை. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி தர மாட்டார் என்று சொல்வார்கள். இங்கும் மாண்டேக்சிங் அலுவாலியா போன்ற பூசாரிகள் இடைமறிக்கிறார்கள்.

ஐம்பது சதவிகிதத்திற்கு மேல் வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளார்கள் என்று சொல்வதா... என்று திட்டக்குழு துணைத்தலைவர் அலுவாலியா கேள்வி எழுப்புகிறார். இவ்வளவு பேர் வறுமையில் வாடுவது அபாயமான நிலை இல்லையாம். அப்படிச் சொல்வதுதான் அபாயமாம். சுரேஷ் டெண்டுல்கரின் ஆய்வறிக்கைக்கு காத்திருக்கலாம் என்று கூறிவிட்டார்கள். அவரும் அபாயச் சங்கை கையிலெடுத்தால் பூசாரி அலுவாலியா பாய்ந்து பிடுங்கி விடுவார் போலிருக்கிறது.

Sunday, September 27, 2009

"உன் நெஞ்சத்தொட்டு சொல்லு... என் ராசா..."

"உன் நெஞ்சத்தொட்டு சொல்லு... என் ராசா..." என்ற பாடல் ரசிகர்களைக் கிறங்கடித்த ஒன்று. அதேபோல், "உன் இதயத்துல கை வெச்சு சொல்லு" என்பது பெரும்பாலான திரைப்படங்களில் வரக்கூடிய வசனமாகும். உண்மையைக் கூற வேண்டும் என்பதை வலியுறுத்தவே அத்தகைய வசனம் இடம்பெறும். தொட்டுப்பார்த்த உடன், இப்படித்தான் நீ சொல்ல வேண்டும் என்றெல்லாம் இதயம் கட்டுப்பாடுகளை விதிக்காது. இதயத்தின் பணி ரத்தத்தை பம்ப் பண்ணிக் கொண்டிருப்பதுதான். அது சிந்திக்காது. சிந்திக்கும் திறன் அதற்குக் கிடையாது. ஆனால் சிந்தனைகள் இதயத்தைப் பாதிக்கும். மகிழ்ச்சி, கோபம், துக்கம் என்று அனைத்து உணர்வுகளுமே இதயத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதனால் முக்கியமான தருணங்களில் இதயத்தைத் தொட்டுச்சொல்வது சொந்த உடலின் நலனுக்கு நல்லதே.

மாரடைப்பால் இறந்துவிட்டார் என்றால் அவர் வயதானவராகத்தான் இருக்கும் என்பதுதான் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை. இப்போதெல்லாம் முப்பதுகளிலும், நாற்பதுகளிலும் மாரடைப்பு வந்து அல்பாயுசில் போய்விடுபவர்கள் இருக்கிறார்கள். அந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1 கோடியே 72 லட்சம் பேர் இதய நோயால் உயிரிழக்கிறார்கள் என்று உலக இதயக்கூட்டமைப்பு தெரிவிக்கிறது. இதயத்தைப் பாதுகாப்பதை வலியுறுத்தியும், இதய நோய்களின் பாதிப்புகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையை உலக இதய நாளாகக் கொண்டாடுகிறார்கள்.

நடப்பாண்டில் "இதயத்தோடு பணியாற்றுங்கள்" என்ற முழக்கத்தை சர்வதேச அளவில் முன்வைத்துள்ளார்கள். பணியிடங்களில் ஏற்படும் பல்வேறு சூழ்நிலைகள் இதயத்தைப் பாதிக்கிறது என்பதால்தான் இந்த முழக்கம் முன்வைக்கப்பட்டுள்ளது. உலக இதயக்கூட்டமைப்பு, உலக சுகாதாரக் கழகம் மற்றும் உலகப் பொருளாதார அமைப்பு ஆகியவை இணைந்து ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளன. பணியிடங்கள் ஆரோக்கியமானதாகவும், சுமூகமான சூழல் இருப்பதாகவும் அமைய வேண்டும் என்று அரசாங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோருக்கு இந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

2008 ஆம் ஆண்டில் சஃபோலாலைப் என்ற ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்வில் இந்தியர்களுக்கு மோசமான செய்தியே கிடைத்தது. எட்டாயிரம் இந்தியர்களை அந்த ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். இந்தியர்களின் உணவில் போதிய அளவு ஊடடச்சத்து இல்லாமல் போய்விடுவதால் மற்ற நாடுகளில் உள்ள அவர்களையொத்த வயதினரைவிட மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளவர்களாக இருக்கிறார்கள். சராசரியாக 49.1 இந்தியர்கள் இத்தகைய மோசமான உடல்நிலையில் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவித்தது. குறிப்பாக, 30 முதல் 39 வயதுவரையுள்ளவர்களுக்கும் இந்தப்பிரச்சனை இருப்பதாக தெரிய வந்தது. மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில்தான் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள்.

இந்தியாவில் நாற்பது வயதைத் தாண்டியவுடன் இருபது சதவிகிதப் பெண்கள் மாரடைப்பு வரும் அபாயத்தில் இருக்கிறார்கள். இயற்கையாகவே பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது என்றாலும், அதிக அளவிலான அழுத்தம் அல்லது சர்க்கரை நோய் ஆகியவை அந்தப் பாதுகாப்பை உடைத்து எறிந்துவிடும். உடலில் ஒட்டுமொத்த கொழுப்பின் அளவு 200 மில்லிகிராமைத் தாண்டக்கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள். முன்பெல்லாம் மருத்துவர்களிடம் வந்தவர்களின் நோய்க்கும், தற்போது அவர்களிடம் மாரடைப்புக்காக வருபவர்களின் நோய்க்கும் பெரும் வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. வாழ்க்கை முறை பெரும் பங்காற்றுகிறது என்பதுதான் தற்போது நோய்வாய்ப்பட்டு வரும் பெரும்பாலானவர்களின் சிக்கலாகும்.

அதோடு, சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி லப்..டப்.. சத்தத்தை அதிகரித்துவிட்டது. பணியிடச்சூழல் குறித்து பேசுகையில் பணிப்பாதுகாப்பு, போதிய ஊதியம் போன்றவையும் அந்த விவாதத்தில் இடம் பெற வேண்டும். பணியிடச்சூழலை நிர்ணயிப்பதில் இவை பிரதான இடம் பெறுகின்றன. நிர்வாகத்தில் தொழிலாளர்களுக்கு கூடுதலான பங்கேற்பு என்பது தங்கள் நிறுவனத்தின் ஒரு அங்கமாக இருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்தும். சரியான நேரத்தில் உலகக்சுகாதாரக்கழகமும், இதயக்கூட்டமைப்பும் இணைந்து இதயத்தோடு பணியாற்றுங்கள் என்ற முழக்கத்தை வைத்துள்ளன.

Tuesday, September 22, 2009

கால்பந்து சங்கத்தலைவரானார் அத்வானி!



நரேந்திர மோடி குஜராத் கிரிக்கெட் சங்கத்தலைவராகத் தேர்வு - செய்தி.


இந்தச் செய்தியைத் தொடர்ந்து ஒருவரையொருவர் மிஞ்ச வேண்டும் என்ற ஆசை எழுவது இயல்புதானே... இதோ ஒரு கற்பனை.

கால்பந்து சங்கத்தலைவரானார் அத்வானி

ஏற்கெனவே தன்னைவிட மேலானவராக மோடியை சொந்தக் கட்சிக்காரர்களே சித்தரித்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வளவு நாள் அரசியலில் இருந்துவிட்டு ஒரு விளையாட்டுச்சங்கத்திற்குக் கூட தலைவராகவில்லையே என்று எதிர்கோஷ்டி பிரச்சனை எழுப்பிவிடக்கூடாது என்பதற்காக கால்பந்து சங்கத்திற்கு தலைவராகி விட்டார் அத்வானி. ராமர் கால்பந்து விளையாடிய இடங்களாகத் தேர்வு செய்து 108 இடங்களில் மசூதிகளும், சர்ச்சுகளும் எழுப்பப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் தெரிவித்தார். ஜின்னாவும், தானும் ஒருமுறை கால்பந்து ஆடியதை மிகவும் நெகிழ்ச்சியுடன் அத்வானி குறிப்பிட்டார்.
--------------

மாஜிக் கலைஞர்கள் சங்கத்தலைவராக பிரணாப்


நூறு நாளில் அதை வரவழைக்கிறேன், இதை வரவழைக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே மக்களை மயக்கிய பிரணாப் முகர்ஜி மாஜிக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராகியுள்ளார். வளர்ச்சி என்று சொல்லிக்கொண்டே தனது மாஜிக் தொப்பியிலிருந்து ஆட்குறைப்பு, பணிநீக்கம், சம்பள வெட்டு, விலைவாசி உயர்வு என்று அவர் எடுத்துவிடும்போது பிரமிப்பாகத்தான் இருக்கும். தன்னை விட புதிய தலைவர் நன்றாகவே ஏமாற்றுகிறார் என்று முன்னாள் தலைவரும், மாஜிக் கலைஞருமான ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்தார்.
----------------

கண்ணாமூச்சி விளையாட்டு சங்கத்திற்கு அழகிரி தலைவர்


தில்லியில் தனது துறை அதிகாரிகள் தேடிக் கொண்டிருக்கையில், இதோ, இதோ என்று சொல்லிக்கொண்டே மதுரையிலேயே பதுங்கி தனது கண்ணாமூச்சித் திறமையை வெளிக்காட்டிய அழகிரி அந்த விளையாட்டின் நிர்வாகத்தையே எடுத்துக் கொண்டுள்ளார். தனது கண்ணாமூச்சி விளையாட்டுக்கு ஐடியா கொடுத்தால் அவர்களுக்கு சங்கத்தில் பொறுப்பும் தரப்போகிறார். இதேபோல் கண்ணாமூச்சி காட்டிய முன்னாள் ஆட்டக்காரர்களைத் தேடிக் கொண்டிருக்கிறார். மறைந்து கொள்ளும் நேரத்தை நீட்டிக்கொள்வது எப்படி என்று கேட்கத்தான் அந்தத் தேடுதல்.

---------------
தடகளச் சங்கத்தலைவராக சு.சாமி முயற்சி

செல்லும் இடங்களில் எல்லாம் பிரச்சனை பண்ணி விரட்டியடிக்கப்பட்டு ஓடிக்கொண்டேயிருக்கும் அனுபவத்தால் தடகளச் சங்கத்திற்கு தலைவராகலாம் என்று சுப்பிரமணிய சுவாமிக்கு ஆசை வந்துள்ளது. தனது ஆசை நிறைவேற ஏற்கெனவே நெருக்கடியில் இருக்கும் பாஜகவில் சேரப்போகிறார். காந்தஹார் வரை ஓடிய ஜஸ்வந்த்சிங் இல்லாததும், பேட்டி என்றால் ஓட்டமாய் ஓடும் வெங்கய்யா நாயுடு அடக்கி வாசிப்பதும் இந்தப்பதவிக்கு போட்டியிருக்காது என்ற நம்பிக்கையை அவருக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

Thursday, September 17, 2009

அக்கா மாலாவையும், கப்சியையும் ரசிக்கலையா..?

பணத்தை அதிகமாகக் கொட்டி எடுக்கிறார்களோ அல்லது சிக்கனமாக எடுக்கிறார்களோ, தாங்கள் பார்க்கும் படங்களில் மருந்துக்காவது கதை இருக்கிறதா என்று ரசிகர்கள் பார்க்கும் காலமிது. இதனால் கதையைத் தேடி அலையும் திரைப்படத் துறையினர், புதிதாக எதுவும் கிடைக்காவிட்டால் பழைய கதையை மாற்றிப் போட்டாவது ஏதாவது பண்ணி விடலாமா என்ற முயற்சியில் இறங்கியுள்ளனர்.

பெரும் ஆரவாரத்துடன் வெளிவந்துள்ள கந்தசாமி திரைப்படத்தின் தோல்வியும் தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் யோசிப்பதற்காக ரூம் போடச் செய்துள்ளது. புதிதாகக் கதையைத் தேடுவானேன் என்று நினைத்த இயக்குநர் பி.வாசு ஏதாவது ஒரு வெற்றிப்படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரித்து விடலாமே என்று ரூம் வாடகையை மிச்சம் பிடிக்கத் திட்டமிட்டார்.

அவருக்கு உடனே தோன்றியது சந்திரமுகி படம்தான். ரஜினிகாந்தையே அதில் நடிக்க வைத்து விடலாம் திட்டமிட்டார். அவரோ எனக்காகக் காத்திராமல் வேறு கதையை எடுக்கலாமே என்று கூறிவிட்டாராம். மீண்டும் கதையைத் தேடத் தொடங்கி விட்டார் பி.வாசு. இவரைப்போல பலரும் கதைகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

வெறும் நாலு சண்டை, நாலு பாட்டு போதும் என்றிருந்த காலம்போய் இப்படியொரு காலம் வரும் என்பதை பலர் எதிர்பார்க்கவில்லை. மக்கள் விரும்புவதால்தான் மசாலாப்படங்களை எடுக்கிறோம் என்று சவடால் விட்டுக் கொண்டிருந்த பல இயக்குநர்களுக்கு புதிய சூழல் சவாலாக உருவாகியுள்ளது. கதைக்கா பஞ்சம்... ஹாலிவுட்காரர்கள் பொருளாதார நெருக்கடியை மையமாக வைத்து படத்தை எடுத்து, முதலாளித்துவம் - ஒரு காதல் கதை என்று கிண்டலாகவும் பெயர் வைத்துவிட்டார்கள்.

கதைகளை வீடுகளுக்குள்ளும், குடும்பங்களுக்குள்ளும் புகுந்து திருடிக் கொண்டு வருவதற்கு கொஞ்சம் இடைவெளி விட்டு சமூக நிகழ்வுகளை, நாட்டு நடப்புகளைப் படமாக்கலாமே... அக்கா மாலாவையும், கப்சியையும் இம்சை அரசன் 23ஆம் புலிகேசியில் மக்கள் ரசித்துப் பார்த்தார்களே...?

ஆந்திரா : அம்பலமாகும் தற்கொலை மோசடிகள்

ஹெலிகாப்டர் விபத்தில் ஆந்திராவின் முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர்ரெட்டி உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டவுடன் ஆந்திராவில் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டதாகவும், மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளிவந்தன.

ஆனால் மெயில் டுடே பத்திரிகை சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதில் பலர் இயற்கையாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது தெரிய வந்தது. செப்.3 அன்று ராஜசேகர்ரெட்டியின் உடல் கிடைத்ததாக செய்தி வெளியாகியது. அப்போதிருந்து தற்கொலை மற்றும் அதிர்ச்சி மரணங்கள் நடந்ததாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. சிலருக்கு அதில் சந்தேகங்கள் எழுந்தன. விசாரித்ததில் அந்த சந்தேகங்கள் சரிதான் என்று தெரிய வந்துள்ளது.

யாராவது இறந்துவிட்டார் என்று தெரிந்தவுடன் உள்ளுர் காங்கிரஸ்காரர்கள் அந்தக் குடும்பத்தினரைச் சந்தித்து பணம் கொடுத்து ராஜசேகர்ரெட்டி இறந்த அதிர்ச்சியில்தான் அவர் இறந்தார் என்று சொல்லச் செய்துள்ளனர். ஒரு சம்பவத்தில் மாநில அமைச்சர் ஒருவரே நேரிடையாகத் தலையிட்டார் என்று கூறப்படுகிறது. மறைந்த முதல்வரைச் சுற்றி ஒரு ஒளிவட்டத்தைத் தோன்றச் செய்யவும், ஜகன்மோகன் ரெட்டியை முதல்வராக்கும் முயற்சிகளை அதிகப்படுத்தவுமே இத்தகைய செய்திகள் மோசடியாகப் பரப்பப்பட்டன. காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக்குழு ஒவ்வொரு மணி நேரமும் உயிரிழப்புப் பட்டியலை வழங்கிக் கொண்டே இருந்தது.

அவர்களின் கடைசி பட்டியலின்படி மொத்தம் 462 பேர் உயிரிழந்தனர். அதில் 402 பேர் மாரடைப்பாலும், 60 பேர் தற்கொலை செய்தும் மரணமடைந்தனர். அவர்கள் அளித்த புள்ளிவிபரங்களின்படி, கிழக்கு கோதாவரி மாவட்டத்தில்தான் அதிகம் பேர் இறந்தனர். அங்கு 58 பேரும், வாரங்கல்லில் 48 பேரும், கரீம்நகரில் 46 பேரும் உயிரிழந்ததாக காங்கிரஸ் கட்சிக்காரர்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். வாரங்கல் மாவட்டத்தில் மெயில் டுடே பத்திரிகை மேற்கொண்ட ஆய்வு, சுமார் ஐந்தாயிரம் ரூபாய் வரை இறுதிச்சடங்களுக்காக காங்கிரஸ்காரர்களால் தரப்பட்டது என்பதும், அதற்குப்பதிலாக ராஜசேகர்ரெட்டியின் மறைவுதான் இறப்புக்குக் காரணம் என்று சொல்ல நிர்ப்பந்தித்ததும் அம்பலமாகியுள்ளது.

எடுத்துக்காட்டாக, வாரங்கல் மாவட்டத்தின் பரக்கலா தாலுக்காவைச் சேர்ந்த எழுபது வயதான உப்பலய்யா மாரடைப்பால் இறந்து போனார். அவர் திடீரென்று மாரடைப்பால் இறந்ததாக அவரது மகன் மல்லையா கூறினாலும், ஒருமாதமாகவே மூச்சுவிட முடியாமல் உப்பலைய்யா அவதிப்பட்டு வந்ததாக மல்லையாவின் மனைவி லட்சுமம்மா கூறியுள்ளார். ஜகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான சாக்சி தொலைக்காட்சியைத் தொடர்பு கொண்ட உள்ளுர் காங்கிரஸ்காரர்கள் ராஜசேகர்ரெட்டி மறைவின் அதிர்ச்சிச் செய்திதான் உப்பலய்யாவின் மரணத்திற்குக் காரணம் என்று செய்தி போடச் செய்துள்ளார்கள்.

40 வயதான பி.ஸ்ரீஹரி, 80 வயதான சுக்கா சாயம்மா என்ற பெண்மணி, 45 வயதான ராஜமவுலி ஆகியோரின் மரணங்களும் இயற்கையான மரணங்களே என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவர்களின் குடும்பங்களின் வாயை அடைக்க காங்கிரஸ்காரர்கள் பணம் தந்துள்ளார்கள். ஹனம்கொண்டாவைச் சேர்ந்த 25 வயதான தீகலா சிரஞ்சீவியின் கதை வித்தியாசமானது. அவருக்கென்று யாரும் கிடையாது. அதோடு அவர் ஒரு மனநோயாளி. செப்டம்பர் 5 அன்று அவர் திடீரென்று தனது உடலில் நெருப்பை பற்ற வைத்துக் கொண்டார். அவரது உடலை வாங்கவோ அல்லது எரிக்கவோ யாரும் இல்லாததால் உள்ளுர் மாணவர் காங்கிரஸ்காரர்கள், இவரும் ராஜசேகர்ரெட்டியின் மறைவின் துயரம் தாங்காததால்தான் தற்கொலை செய்து கொண்டார் என்று செய்தியைப் பரப்பிவிட்டார்கள்.

இத்தகைய மோசடியான தகவல்களைப் பரப்புவதில் ஜகன்மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள் பெரும்பங்கு வகித்துள்ளனர் என்பதும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.