Friday, December 31, 2010

கிரிமினல்கள் வீரர்களானால்...??


தங்களைப் பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்துவதாக சக ராணுவத்தினர் மீது அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த பெண்கள் 3 ஆயிரத்து 230 புகார்களை அளித்துள்ளனர்.

இது குறித்து அமெரிக்கப் பத்திரிகையாளரான தஹர் ஜமாயில் விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ளார். இந்தப்பிரச்சனை ஒன்றும் புதிதல்ல என்று தனது ஆய்வறிக்கையிலேயே அவர் குறிப்பிடுகிறார். ஆனால், 2009 ஆம் ஆண்டில் இது ஒரு பெரும் பிரச்சனையாக மாறிவிட் டது. பாலியல் கொடுமைகளை 2008 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது 2009 ஆம் ஆண்டில் 11 விழுக்காடு அதிகரித்தது என்கிறார் அவர்.

அவரது ஆய்வு பல அதிர்ச்சிகளை வெளிக் கொண்டு வந்துள்ளது. அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றுகையில் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானோம் என்று மூன்றில் ஒரு பகுதியினர் தெரிவித்துள்ளனர். இதில் கொடுமை எ னவென்றால், அமெரிக்க சிவில் சமூகத்தில் நடப்பதைவிட, இரண்டு மடங்கு அதிகமான அளவில் அமெரிக்க ராணுவத்தில் பாலியல் கொடுமைகள் நடந்து வருகின்றன.

இந்தக்கொடுமைகள் பற்றி அமெரிக்க சமூக ஆர்வலர்கள் கடுமையான கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். இராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு போர் புரிவதற்காகச் செல்லும் பெண் ராணுவத்தினர், போரில் குண்டு துளைத்து கொல்லப்படுவதை விட, சக ஆண் ராணுவத்தினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் வாய்ப்புகள்தான் அதிகம் என்று அவர்கள் கூறுகிறார்கள். பாலியல் தொந்தரவுகள் மற்றும் வன்முறைகள் மிகவும் அதிகமாக இருக்கின்றன என்று அமெரிக்க ராணுவத்தலைமையகமான பென்டகன் நடத்திய ஆய்விலேயே தெரிய வந்துள்ளது.


அமெரிக்க ராணுவத்திற்குள் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்த விபரங்களை வெளியிட ராணுவத் தலைமையகம் மறுத்து வருகிறது. இதற்கு எதிராக அமெரிக்க சிவில் உரிமைகள் கழகம் உள்ளிட்ட பல மனித உரிமை அமைப்புகள் வழக்குத் தொடுத்தன. பாலியல் பலாத்காரம், பாலியல் தொல்லைகள் போன்றவை எந்த அளவுக்கு ராணுவத்திற்குள் நடக்கின்றன மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன ஆகிய விபரங்கள் வெளியிடப்பட வேண்டும் என்று அந்த அமைப்புகள் கோரியுள்ளன. இந்த விபரங்கள் அடங்கிய ஆவணங்களை மறைப்பது சுதந்திரத் தகவல் சட்டத்திற்கு விரோதமானது என்று அந்த அமைப்புகள் குறை கூறியுள்ளன.

இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களால் அமெரிக்க ராணுவத்திற்கு கூடுதல் ஆட்கள் தேவைப்பட்டனர். இந்த ஆட்பற்றாக்குறையைப் பயன்படுத்தி குற்றப் பின்னணிகளைக் கொண்டவர்கள்கூட ராணுவத்திற்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பத்தாண்டுகளுக்கு முன்பு கிரிமினல்களாக இருந்தவர்கள் தற்போது அமெரிக்க ராணுவத்தினராகக் காட்சியளிக்கின்றனர் என்ற அதிர்ச்சியான தகவல்களையும் மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.

Thursday, December 30, 2010

தலித்தா... நாற்காலி கிடையாது, போ...!!

தலித் என்ற ஒரே காரணத்தால் அரசுப்பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு நாற்காலி மறுக்கப்பட்ட அவலம் நேர்ந்துள்ளது. பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில்தான் இந்தக் கொடுமை.

2005 ஆம் ஆண்டில் பணியில் அமர்ந்த அவர், முதல்நாள் முதல் இன்று வரை தரையில் அமர்ந்துதான் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், நாற்காலியில் அவர் அமர்வதை மற்ற ஆசிரியர்கள் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியரிடம் அவர் கடந்த மாதத்தில் புகார் கொடுத்தார்.

அவர் புகாரை ஏற்றுக்கொண்டு தலைமையாசிரியர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். போனவர், திரும்பியும் வந்துவிட்டார். இருப்பினும் ஆதிக்க சாதி மனப்பான்மை கொடிகட்டிப் பறக்கிறது. நாற்காலி தர இன்னும் மறுத்தே வருகிறார்கள். ஆசிரியையின் உரிமைப்போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Tuesday, December 28, 2010

மதம் மாறியும் ஒழியாத சாதிப்பீடை..!



சென்னையில் நல்ல வேலையில் இருப்பவர் ஜெயன். கிறித்தவ மதத்தைச் சேர்ந்த இவர் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் பல திருமணப்பதிவு மையங்களிலும் பதிவு செய்து இருந்தார்.

அவருடைய வயதுக்கேற்ப ஒரு பெண்ணின் விபரங்கள் தமிழ்மேட்ரிமோனி.காம் இணையதளத்தில் கிடைத்தது. மதம் என்பதற்கு எதிராக கிறித்தவர்-புரோட்டஸ்டன்ட் என்று அந்தப்பெண் குறிப்பிட்டிருந்தார். அடுத்தபடியாக, சாதி என்பதற்கு எதிராக சாதி ஒரு தடையில்லை என்பதாக (caste is no bar) என்று குறிப்பிட்டதைப் பார்த்தவுடன் ஜெயனுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கிறது. ஆனால் அது ஒரு விநாடி கூட நிலைக்கவில்லை. சாதி ஒரு தடையில்லை என்பதற்கு அடுத்து அடைப்புக்குறிகளுக்குள் எஸ்.சி,எஸ்.டி நீங்கலாக(SC/ST excuse) என்று குறிப்பிடப்பட்டு இருந்திருக்கிறது.

மதம் மாறியும் இந்தச் சாதிப் பீடை ஒழிய மாட்டேன்கிறதே என்று கோபமடைந்த ஜெயன், அந்தப் பெண்ணின் தொடர்பு எண்ணை டயல் செய்து ஆத்திரத்துடன் கேள்விகள் எழுப்பி இருக்கிறார். “இந்த சாதியில் மாப்பிள்ளை வேண்டும் என்று கேட்கலாம். இந்த சாதியில் வேண்டாம் என்று சொல்வதற்கு நீங்கள் யார்?” என்ற அவரது குமுறல் மிக நியாயமானது. ஆனால் மறுமுனையில் அந்தப் பெண்மணியோ எந்தவிதக் குற்றவுணர்வும் இல்லாமல் பேசியிருக்கிறார். எல்லா ஜாதிகளையும் ஒப்புக்கொள்ள முடிகிற ஒருவர், எஸ்.சி/எஸ்.டி ஜாதியை மட்டும் விலக்கி வைப்பது பெரும் அவமானமாக இருக்கிறது.

சாதி தடையில்லை என்று போட்டுவிட்டு, இவ்வாறு எஸ்.சி மற்றும் எஸ்.டியாக இருந்தால் வேண்டாம் என்பதை குறிப்பிடும்படியாக மென்பொருளை (SC/ST excuse) உருவாக்கியிருக்கும் திருமணப்பதிவு இணையதளம் முதலில் கண்டிக்கப்படவேண்டும் என்கிறார் ஜெயன். உண்மைதான். இவ்வகை தீண்டாமையை, ஒரு தெரிவாக (option) ஆக இணையதளத்தில் வடிவமைத்திருப்பது, சமூகத்தில் இருக்கும் அழுக்குகளை ஒப்புக்கொள்வதாயும், மேலும் வளர்ப்பதாயும் இருக்கிறது.

பத்திரிகைகள் அலுவலகங்களுக்கும் தொலைபேசியில் கோபத்தோடு பேசிய ஜெயன், இது ஒரு நவீன தீண்டாமை என்று பொரிந்து தள்ளியிருக்கிறார். இது தனது முதல் அனுபவமல்ல என்கிறார் அவர். கிறித்தவ திருமணத் தகவல் தொடர்பு மையங்கள் சிலவற்றிலும், சாதி பார்க்க மாட்டோம், ஆனால் தலித் என்றால் வேண்டாம் என்று கூறும் பழக்கம் இருக்கிறது என்று வேதனையோடு குறிப்பிடுகிறார் அவர்.

நகரம் விரிவடைகையில் தலித்துகளை சிறைப்படுத்தும் ரியல் எஸ்டேட்காரர்களின் சுவர்கள், சாதி வெறியர்களின் முன்பாக தலித்துகள் செல்போனில் பேசவியலாமை போன்ற நவீன தீண்டாமைக் கொடுமைகளின் பட்டியலில் திருமணப் பதிவில் சாதி தடையில்லை என்று கூறிவிட்டு தலித்-பழங்குடி வேண்டாம் என்று சொல்லும் கொடுமையும் சேர்கிறது.

Monday, December 20, 2010

"பொறுக்கத்" துவங்கிய புரட்சிக்காரர்கள்!




என்.டி.சி(தேசிய பஞ்சாலை கழகம்) மில் தொழிற்சங்க அங்கீகாரத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வெறும் மூவாயிரம் வாக்காளர்கள்தான் என்றாலும் பரபரப்பாகவே இது நடந்தது. ஓட்டுப்பொறுக்கிகள் என்று மற்ற கட்சிகளைப் பார்த்துச் சொல்லி வந்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வாக்குகள் கேட்டது(பொறுக்கியது!!) பலரின் கண்களை விரிய வைத்தது. இதையும் அவர்கள் பெருமையாகவே சொல்லிக் கொண்டார்கள். "பார்த்தீர்களா... எங்களை மக்கள் கவனிக்கிறார்கள்" என்று.

முடிவுகளின்படி நான்கு தொழிற்சங்கங்கள் பத்து விழுக்காட்டிற்கு மேல் வாக்குகள் வாங்கியுள்ளன. தொமுச(திமுக) 650 வாக்குகளும், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் சங்கம் 477 வாக்குகளும், சிஐடியு 381 வாக்குகளும், ஐ.என்.டி.யு.சி 200 வாக்குகளும் பெற்றன. இந்த சங்கங்கள்தான் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடியும். 12 சங்கங்கள் தேர்தலில் போட்டியிட்டன.

தேர்தல் முடிவு பற்றி புளகாங்கிதத்துடன் எழுதியுள்ள வினவு, ஒரே ஒரு மில்லில்தான் சங்கமே இருந்தது. தேர்தல் நடைபெற்றதால் மற்ற மில்களில் உள்ள தொழிலாளர்களும் எங்களுக்கு வாக்களித்தார்கள் என்று குறிப்பிடுகிறது. எவ்வளவு பெரிய உண்மை. தேர்தலில் நின்றதால் மற்ற மில்களில் உள்ளவர்களையும் இவர்களால் திரட்ட முடிந்திருக்கிறது. தொழிற்சங்கப் பேச்சுவார்த்தையில் ஒரு பிரதிநிதிக்கான உரிமையைப் பெற்றிருப்பதால் அதை தொழிலாளர்களின் பணி நிரந்தரத்திற்கான கால்கோள் என்று வர்ணித்திருக்கிறார்கள்.

477 வாக்குகள் வாங்கினாலே இவ்வளவு நம்பிக்கையை ஏற்படுத்த முடியுமானால், நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் நின்று லட்சக்கணக்கான வாக்குகளை வாங்கி, ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்கே கால்கோள் விழா நடத்தலாமே...? அதைவிட்டுவிட்டு அந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு மக்களைத் திரட்டிக் கொண்டிருப்பவர்களை ஓட்டுப் பொறுக்கி என்று விமர்சித்துவிட்டு, "நாங்க 477 ஓட்டு வாங்கிட்டோம்ல" என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொள்வதுதான் "புதிய" ஜனநாயகமா?

Saturday, December 18, 2010

பொங்கலுக்கும் வராது காவலன்? ஏகபோகத்தின் பிடியில் தமிழ்த்திரையுலகம்!

ஏற்கெனவே மூன்று முறை தேதி அறிவிக்கப்பட்டு, கடைசியாக அறிவிக்கப்பட்ட டிசம்பர் 17 அன்று வெளியிட திரையரங்குகள் கிடைக்காது என்ற நிலையில் பொங்கலுக்கு வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது அப்படக்குழுவினரின் அந்த ஆசையிலும் மண் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வரின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள் திரையுலகை ஆட்டிப்படைக்கின்றன என்ற குற்றச்சாட்டு அண்மைக்காலத்தில் பெரும் அளவில் எழுந்துள்ளது. அப்படி யெல்லாம் இல்லை என்று கூறி இந்தப்படங்கள் எல்லாம் வெளிவரவில்லையா என்று சில படங்களின் பெயர்களைக்கூட அவர்கள் பட்டியலிட்டதுண்டு. வெளிவந்தது உண்மைதான். ஆனால் இந்த மூன்று நிறுவனங்களின் படங்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் வர வேண்டும் என்பதுதான் நிபந்தனை.

இவர்கள் போடும் பட்டியலில் உள்ள படங்கள் வந்தது உண்மைதான். திரையரங்குகள் கிடைத்தால் போதும் என்று வெளியிட்டு விடுகிறார்கள். தா என்ற படம் வெளியானது. படம் நன்றாகயிருக்கிறது என்பதுதான் பார்த்தவர்களின் கருத்தாகும். ஆனால் ஒரு வாரத்திலேயே படத்தை திரையரங்கு உரிமையாளர்கள் எடுத்துவிட்டார்கள். இதுதான் மற்ற படங்கள் வெளியாகும் உண்மை.

டிசம்பர் 17 ஆம் தேதி காவலன் படம் வெளியாவதற்கும் கூட எந்தத்தடையும் இல்லாமல்தான் இருந்தது. நிபந்தனை என்னவென்றால், டிசம்பர் 23 அன்று மன்மதன் அம்பு படத்திற்கு திரையரங்குகள் மாறிவிட வேண்டும். அதாவது, காவலன் படம் நன்றாக இருக்கிறதா, இல்லையா, மக்கள் ரசிக்கிறார்களா இல்லையா என்பதெல்லாம் கணக்கில் இல்லை. ஆறு நாட்கள்தான் படத்தை ஓட்ட வேண்டும். அதற்கு இடையூறு பண்ண மாட்டார்களாம்.

பொங்கல் என்று சொல்லிவிட்டார்களே ஒழிய, திரையரங்குகளைக் கேட்டபோதுதான் அவையெல்லாம் கிடைக்காது என்று தெரிந்திருக்கிறது. காரணம் வேறொன்றுமில்லை, முதல்வர் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய இளைஞன், சன் குழுமத்தின் ஆடுகளம், தயாநிதி அழகிரியின் சிறுத்தை ஆகிய படங்கள் வருகின்றன என்பதுதான். இந்தப்படங்கள் வெளியாகாத திரையரங்குகள் வேண்டுமானால் காவலனுக்குக் கிடைக்கலாம். இதோடு மன்மதன் அம்பு படத்தையும் அவ்வளவு எளிதில் திரையரங்குகளிலிருந்து எடுக்க விட மாட்டார்கள். இப்படிப்பார்த்தால் காவலன் வெளியீட்டை மீண்டும் தள்ளிவைக்க வேண்டியதுதான்.

பத்திரிகைகளில் வந்துள்ள மற்றொரு செய்தி, திட்டமிட்டே காவலன் படத்தை வெளியிட தடை போடுகிறார்கள் என்று நம்ப வைக்கிறது. காவலன் படத்தை இந்த மூன்று நிறுவனங்களின் ஒன்று கேட்டதாகவும், தர மறுத்ததால்தான் இந்த நெருக்கடி என்பதாகவும் வெளியாகியுள்ள செய்திதான் அது.

Wednesday, December 15, 2010

விக்கிலீக்ஸ் : ஜனநாயக சமூகத்தின் தேவை



ஒரு புதிய வகை இதழியலை விக்கிலீக்ஸ் முன்வைத்துள்ளது. விஞ்ஞான இதழியல் என்பதுதான் அது. மற்ற ஊடக அமைப்புகளோடு இணைந்து செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் நாங்கள் பணியாற்றுகிறோம். அதேவேளையில், அது உண்மையான செய்திதான் என்பதையும் நாங்கள் நிலை நிறுத்துகிறோம். செய்தியை நீங்கள் படிப்பதற்கு விஞ்ஞான இதழியல் அனுமதிப்பதோடு, இணையத்திலேயே "கிளிக்" செய்து அசல் ஆவணத்தையும் பார்த்துக் கொள்ள முடிகிறது. செய்தி உண்மையானதா ? பத்திரிகையாளர் துல்லியமாகச் செய்தியைத் தந்துள்ளாரா? இந்தக் கேள்விகளுக்கான விடைகளின் உண்மைத்தன்மையை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.

ஜனநாயக சமூகங்களுக்கு வலுவான ஊடகத்துறை தேவைப்படுகிறது. அத்தகையதுதான் விக்கிலீக்ஸ். நேர்மையாக அரசு இருப்பதற்கு விக்கிலீக்ஸ்உதவுகிறது. இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்கள் பற்றி சில ஜீரணிக்க முடியாத உண்மைகளை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது. பெருநிறுவனங்களின் ஊழல்கள் பற்றிய செய்திகளையும் வெளியிட்டது. நான் போருக்கு எதிரானவன் என்று மக்கள் கூறியுள்ளார்கள். நான் அப்படியில்லை. சில சமயங்களில் நாடுகள் போரைத் தொடுத்துதான் ஆக வேண்டும். ஆனால் அவை வெறும் போர்கள் மட்டுமே. அந்தப் போர்களைப் பற்றி மக்களிடம் பொய்களைச் சொல்வது, அதன்பிறகு எந்த மக்களிடம் அதைச் சொல்கிறோமோ அவர்களின் உயிரையும் பொருளையும் அந்தப் பொய்களுக்காக அர்ப்பணிக்கச் சொல்வதையும் விட பெரிய தவறு வேறு எதுவும் இருக்க முடியாது.

ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் போர்கள் பற்றிய விபரங்களையோ, அமெரிக்கத் தூதரங்களின் தகவல்களையோ அல்லது விக்கிலீக்ஸ் வெளியிட்ட வேறு எந்த செய்தியையோ நீங்கள் படித்தால், அனைத்து ஊடகங்களும் இத்தகைய செய்திகளை சுதந்திரமாக வெளியிட வேண்டிய முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். அமெரிக்க தூதரகத் தகவல்களை விக்கிலீக்ஸ் மட்டும் வெளியிடவில்லை. பிரிட்டனின் தி கார்டியன், தி நியூயார்க் டைம்ஸ், ஸ்பெயினின் எல் பய்ஸ் மற்றும் ஜெர்மனியின் டெர் ஸ்பீஜெல் ஆகியவையும் இவற்றைப் பிரசுரித்துள்ளன.

ஊருக்கு இளைத்தவன்தான் குறி

ஆனால் இந்த செய்திகளை ஒருங்கிணைத்த விக்கிலீக்ஸ்தான் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தேசத்துரோகம் செய்து விட்டதாக அமெரிக்காவும், அதன் கூட்டாளிகளும் குற்றம் சாட்டியுள்ளார்கள். இத்தனைக்கும் நான் அமெரிக்கக் குடிமகனல்ல, நான் ஒரு ஆஸ்திரேலியக் குடிமகன். அமெரிக்காவின் சிறப்புப் படைகளைக் கொண்டு என்னைப் பிடிக்க வேண்டும் என்று பல அமெரிக்கர்கள் கேட்டுள்ளனர். ஒசாமா பின் லாடனைப் போல் என்னையும் வேட்டையாட வேண்டும் என்கிறார் சாரா பாலின். பன்னாட்டு அபாயம் என்று என்னை அறிவிக்க வேண்டும் என்று குடியரசுக்கட்சி சார்பில் ஒரு மசோதா தயாராகி வருகிறது. கனடா பிரதமர் அலுவலக ஆலோசகர் ஒருவர் தொலைக்காட்சியில் தோன்றி என்னைக் கொலை செய்துவிட வேண்டும் என்கிறார். ஆஸ்திரேலியாவில் இருக்கும் எனது 20 வயது மகனைக் கடத்தி, சித்தரவதைக்குள்ளாக்க வேண்டும் என்று அமெரிக்கர் ஒருவர் வலைத்தளத்தில் கோரியிருக்கிறார்.

இதுபற்றியெல்லாம் எந்தக்கவலையுமில்லாமல் இருக்கும் ஜூலியா கில்லார்டு மற்றும் அவரது அரசு பற்றி ஆஸ்திரேலியர்கள் யோசிக்க வேண்டும். ஆஸ்திரேலிய அரசின் அதிகாரங்கள் அனைத்தும் அமெரிக்காவின் கைவசம் இருப்பது போல் தோன்றுகிறது. எனது பாஸ்போர்ட்டை ரத்து செய்தா அல்லது வேவு பார்ப்பதா அல்லது விக்கிலீக்ஸ் ஆதரவாளர்களை தொந்தரவுக்குள்ளாக்குவதா என்ற வழிகளை ஆஸ்திரேலிய அரசு ஆய்வு செய்து வருகிறது. ஆஸ்திரேலியாவின் அரசு வழக்கறிஞரோ, தன்னால் முடிந்த அளவுக்கு அமெரிக்க விசாரணைக்கு உதவி ஆஸ்திரேலியர்களைக் கப்பலேற்றி அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கான அனைத்து வேலைகளையும் செய்கிறார்.
மற்ற ஊடகங்களைப் பற்றி பிரதமர் கில்லார்டு மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் ஆகியோர் எதுவும் சொல்லவில்லை. ஏனென்றால், கார்டியன், நியூயார்க் டைம்ஸ் மற்றும் டெர் ஸ்பீஜல் ஆகியவை பழமையானது என்பதோடு, பெரிய ஊடக நிறுவனங்களாகும். விக்கிலீக்ஸ் புதியது மற்றும் சிறிய அளவுள்ளதாகும். செய்தி கொண்டு வந்தவரைக் கொலை செய்து உண்மையை மறைக்க கில்லார்டு அரசு விரும்புகிறது. ஆஸ்திரேலிய அரசு மற்றும் அரசியல் பேரங்கள் குறித்த தகவல்களையும் சேர்த்து மூடி மறைக்க முயற்சிக்கிறார்கள்.

கையாலாகாத ஆஸ்திரேலிய அரசு

இவ்வளவு மிரட்டல்கள் எனக்கு வந்திருப்பது குறித்து ஆஸ்திரேலிய அரசு என்ன செய்தது? தனது குடிமகன்களில் ஒருவரைப் பாதுகாக்க ஆஸ்திரேலிய பிரதமர் முயன்றிருப்பார் என்று நினைக்கலாம். அதுதான் இல்லை. பிரதமரும், அரசு வழக்கறிஞரும் பாரபட்சமில்லாமல் பணியைச் செய்ய வேண்டும் என்பது நியதி. தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வேலையில் அவர்கள் இருப்பதால், அதை அவர்கள் செய்ய மாட்டார்கள். ஒவ்வொரு முறை உண்மையை வெளியிடும்போதும், "அய்யோ.. உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும்", "தேசியப் பாதுகாப்பு போச்சு", "படைகளைச் சந்திக்க நேரிடும்" என்றெல்லாம் கூக்குரலிடுகிறார்கள். அதன்பிறகு, விக்கிலீக்ஸ் வெளியிடுவதில் எந்தவித முக்கியத்துவமும் இல்லை என்றும் சொல்கிறார்கள். இதில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்க முடியும். அது எது?

இரண்டுமே கிடையாது. நான்கு ஆண்டுகளாக விக்கிலீக்ஸ் செய்திகளைப் பிரசுரித்து வருகிறது. இந்தக் காலகட்டத்தில் ஒட்டுமொத்த அரசையே மாற்றியிருக்கிறோம். ஆனால் ஒரு தனிநபர்கூட இதனால் பாதிக்கப்படவில்லை. ஆனால், அமெரிக்காவோ, ஆஸ்திரேலியாவின் உதவியுடன், கடந்த சில மாதங்களில் ஆயிரக்காணவர்களைக் கொன்று தீர்த்துள்ளது. ஆப்கானிஸ்தான் போர் பற்றிய விபரங்கள் வெளியானதால் அமெரிக்காவின் உளவு வேலைகளோ அல்லது உளவு உத்திகளோ பாதிக்கப்படவில்லை என்று அமெரிக்க நாடாளுமன்றத்திடம் அந்நாட்டு ராணுவத்துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸ்கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறார். நாம் விபரங்களை வெளிட்டதால் ஆஸ்திரேலியப் படைகளுக்கு எந்த பாதிப்பு ஏற்படவில்லை.

ஆனால் நமது வெளியீடுகள் பல அதிர்ச்சிகரமான தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளன.

* ஈரானைத் தாக்குமாறு சவூதி அரேபிய அரசர் அப்துல்லா அமெரிக்காவைக் கேட்டுக்கொண்டார்.

* இராக் தொடர்பாக பிரிட்டனில் நடத்தப்பட்ட விசாரணை அமெரிக்க நலன்களைப் பாதுகாக்கும்படி இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்தித்தார்கள்.

* நேட்டோ அமைப்பில் மறைமுக உறுப்பினராக ஸ்வீடன் உள்ளது.

* குவாண்டனாமோவில் இருக்கும் கைதிகளை மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா நிர்ப்பந்தித்தது. ஒரு கைதியை ஸ்லோவேனியா ஏற்றுக் கொண்டால்தான் அந்நாட்டு ஜனாதிபதியை ஒபாமா சந்திக்க முடியும் என்று கூறப்பட்டது.

பெண்டகன் ஆவணங்கள் வழக்கில், "சுதந்திர மற்றும் கட்டுப்பாடுகளற்ற ஊடகத்துறையே அரசின் தவறுகளை அம்பலப்படுத்தும்" என்று அமெரிக்காவின் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கான உரிமை அனைத்து வகையான ஊடகங்களுக்கும் இருக்க வேண்டும் என்ற தேவையை விக்கிலீக்சைக் சுற்றி உருவாகியுள்ள நெருக்கடி உணர்த்துகிறது.

ஜூலியன் அசாங்கே

- தி ஆஸ்திரேலியன் நாளிதழில் வெளியான கட்டுரையின் ஒரு பகுதி.

தமிழில் : கணேஷ்
------------




Sunday, November 28, 2010

உள்குத்தில் இறங்குவதுதான் சமூகநீதிப் பாதையா?

தமிழகத்தில் உள்ள அட்டவணை சாதியினரில் மூன்று பிரிவுகள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளவையாகும். பள்ளர், பறையர் மற்றும் அருந்ததியர் ஆகிய பிரிவுகளே அவை. நீண்ட நெடுங்காலமாக சாதி ரீதியான ஏற்றத் தாழ்வை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களின் விளைவாகப் பெற்ற உரிமைகளில் அட்டவணை சாதியினருக்கான இட ஒதுக்கீடும் ஒன்றாகும். மனிதகுலம் சந்திக்கும் எந்த நெருக்கடியைப் பட்டியலிட்டாலும் இந்தியாவைப் பொறுத்த வரை, இந்த அட்டவணை சாதியினர்தான் அதில் அதிக நெருக்கடியைச் சந்தித்தவர்களாக இருக்கிறார்கள்.

மற்றவர்களோடு ஒப்பிடும்போது இந்த நிலை. அட்டவணை சாதியினருக்குள் ஒப்பிட்டுக்கொண்டால், எத்தனை முறை சொன்னாலும் பொருத்தமாக இருக்கும் ஒரு வரி என்னவென்றால், மூட்டைகளில் அடி மூட்டை என்கிற வரிக்குச் சொந்தக் காரர்களாக அருந்ததியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். இட ஒதுக்கீடு மூலம் பலன் பெற்று அட்ட வணை சாதியினரில் ஒரு சிறு பிரிவு முன்னேற முடிந்ததோ, அதுபோன்று உள் ஒதுக்கீடு தரப்பட்டால் அருந்ததியின மக்களில் ஒரு சிறு பிரிவினர் முன்னேற வாய்ப்புள்ளது என்ற கோரிக்கை 26 ஆண்டுகளுக்கு முன்பாக எழுந்தது.

இந்தக் கோரிக்கை காகித அளவில் தான் துவக்கத்தில் இருந்தது. அருந்ததிய சமூக அமைப்புகள் இந்தக் கோரிக்கை யை அந்த சமூகத்து மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றன. 2007 ஆம் ஆண்டில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியால் அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவு கிடைத்தது. வலுவான மக்கள் இயக்கங் கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண் டாமை ஒழிப்பு முன்னணி, மற்றும் அருந்ததிய அமைப்புகளால் நடத்தப்பட்டன. இந்த இயக்கங்களுக்கு அருந்ததிய மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல், மற்ற தரப்பினரிடம் கிடைத்த ஆதரவு அரசிடம் அசைவை ஏற்படுத்தியது. நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில் ஒருநபர் குழு ஏற்படுத்தப்பட்டது. அருந்ததிய மக்க ளின் துயர நிலையைக் கணக்கில் எடுத்துக் கொண்ட அக்குழு, மூன்று விழுக்காடு உள்ஒதுக்கீட்டுக்கு பரிந்துரை செய்தது. சட்டமன்றத்தில் 2009, ஏப்ரல் 29 அன்று ஒப்புதல் தரப்பட்டு, 27.5.2009 அன்று அரசாணை வெளியானது.


இந்த ஒதுக்கீட்டுக்கு காரணங்களாக நீதிபதி ஜனார்த்தனம் அளித்து, அரசு ஏற்றுக்கொண்ட அம்சங்கள் அருந்ததி யருக்கு உள்ஒதுக்கீடு என்பதை முழுமை யாக நியாயப்படுத்துகிறது-

* அரசுப்பணிகளின் ஏ,பி, மற்றும் சி- பிரிவுகளில் அருந்ததியருக்கான பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக இருக்கிறது.

* டி - பிரிவுகளில்தான் அருந்ததியினர் பெரும்பாலும் பணிபுரிகிறார்கள். மனித மலம் அள்ளுவது போன்ற பணியாக இருப்பதால் இதில் மற்ற பிரிவினர் வருவதில்லை. மேலும் இந்தப் பணிகளுக்கு எந்தவித கல்வித்தகுதியும் தேவையில்லை.

* பொதுத்துறை நிறுவனங்களில் நம்ப முடியாத அளவுக்கு அருந்ததிய சமூகத்தினரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இடஒதுக்கீட்டிலும் தலித்துகளில் கொஞ்சம் முன்னேறிய பிரிவினர்தான் வாய்ப்பை பயன்படுத்தியுள்ளார்கள். அருந்ததிய சமூகத்தினர் விடுபட்டுள்ளனர்.

* கல்வி கிடைப்பதற்கான வாய்ப்புகள் பெயரளவில்தான் உள்ளன.

இவையே நீதிபதி ஜனார்த்தனத்தின் ஒருநபர் குழு, அரசிடம் 2008, நவம்பர் 22 அன்று தந்த அறிக்கையில் உள்ள விளக் கங்களின் சுருக்கம், இதற்கு ஆதரவான புள்ளிவிபரங்களையும் தனது அறிக்கையில் விரிவாக நீதிபதி சொல்லி யிருக்கிறார் என்று தமிழக அரசு சொல்கிறது. அட்ட வணை சாதியினருக்கு தனியாக இட ஒதுக்கீடு என்ற கொள்கை உருவான தற்கு எந்த நியாயங்கள் சொல்லப்பட் டனவோ அவையனைத்தும் இங்கும் பொருந்துகிறது.

இந்த சமூக நீதி நடவடிக்கைக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. பின்தங்கிய இஸ்லாமியர்களுக்கான இடஒதுக் கீட்டை ஆர்.எஸ்.எஸ்-பாஜகவினர் எதிர்க்கிறார்கள் என்றால் அவர்களின் மதவெறிக் கொள்கை என்று எடுத்துக் கொள்ளலாம். தலித்துகளில் ஒருபிரி வினரே எதிர்க்கிறார்கள் என்றால் அது ஒட்டுமொத்த சமூக நீதிக் கொள்கைக்கே வேட்டு வைத்துவிடும் என்ற கவலை ஜனநாயக, முற்போக்கு சக்திகளின் மத்தியில் எழுந்துள்ளது. அட்டவணை சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று பார்ப்பனியம் எத்தகைய வாதங்களை முன்வைக்குமோ அதையே உள்ஒதுக்கீட்டுக்கு எதிராக கூறுகிறார்கள்.

அருந்ததியினரின் மக்கள் தொகைக்கு ஏற்ற அளவிற்கு இந்த உள்ஒதுக்கீடு இருக்கிறதா என்ற கேள்வி ஒருபுறம். காகிதத்தில் உள்ள மூன்று விழுக்காட்டை நடைமுறைக்குக் கொண்டு வர தனிப் போராட்டம் தேவைப்படுகிறது. அர சாணைக்குப் பிறகு நிரப்பப்பட்ட ஆசிரியர் மற்றும் மின்வாரியத் தொழில்நுட்ப உதவி யாளர் பணியிடங்களில் உள்ஒதுக்கீடு இல்லை. தமிழ்நாடு அரசு போக்குவரத் துக்கழகம் (கோவை) 17 உதவிப் பொறி யாளர்கள் பணியிடங்களுக்கான நபர் களைப் பரிந்துரை செய்யுமாறு மதுரை வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியது. ஆனால் இடஒதுக்கீட்டுப் பட்டியலில் அருந்ததியருக்கு என்று தனியாக அவர்கள் குறிப்பிடவில்லை. இது அரசாணைக்கு முரணான அம்சமாகும். பொருத்தமான முறையில், வேலை வாய்ப்பு அலுவலகம் தலையிட்டு அருந்த திய சமூகத்தினருக்கு ஒரு இடம் என்று ஒதுக்கியது. நேர்காணல் நடத்தி மூன்று மாதங்கள் ஆகியும் பணி நியமனம் செய் யாமல் இருக்கிறார்கள். ஒரே ஒரு (கோவையைச் சேர்ந்த லெனின் என்பவர்) அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்தவர் தான் இந்த நேர்காணலில் பங்கேற்றார்.

அரசாணை வெளியாகி சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆனபிறகும் பெரிய அளவில் வேலைவாய்ப்பில் அருந்ததி யர்கள் பயனாளிகளாக இல்லை என்பது தான் நிதர்சனம். காவலர் வேலைவாய்ப்பு மட்டுமே விதிவிலக்கு. இதற்கான போராட்டங்களை ஒருபுறம் நடத்திக் கொண்டிருக்கும் வேளையில்தான் முதலுக்கே மோசம் என்று சொல்வார்களே, அதை ஏற்படுத்து வதற்காக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுப்பையா ராஜ் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் அருந்த தியர் உள்ஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார். அரசின் நோக்கம் சந்தேகத்திற்குள்ளாகியுள்ளது. இரண்டு மாதங்கள் கழித்து விசாரணைக்கு வந்தபோது மேலும் அவகாசம் வேண்டும் என்றுதான் கேட்டது.

சமூகநீதிப் பாதையைத் திருப்பி வேறு பக்கம் கொண்டு போய்விடுவார்களோ என்கிற அச்சத்தில், பெற்ற உரிமையைப் பாதுகாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்தியக்குழு உறுப்பினர் என்.வரதராஜன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாநிலத் தலைவர் பி.சம்பத் ஆகியோரும் வழக்கில் சேரும் வகையில் மனு செய்துள்ளனர். புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக் டர் கே.கிருஷ்ணசாமி, தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரை அருந்ததியர் சமூகத்திற்கு எதிராக நிறுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். திருச்சி, மதுரை போன்ற ஊர்களில் பிரச்சனையை எழுப்பக்கூடிய வாசகங்களுடன் சுவரொட்டி கள் ஒட்டப்பட்டிருக்கின்றன.

அட்டவiணை சாதியினரின் மக்கள் தொகைக்கு ஏற்ப தமிழகத்தில் 18 விழுக்காடு இட ஒதுக்கீட்டை 19 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வலு வாக முன்வைக்க வேண்டிய நேரத்தில் உள்குத்தில் இறங்குவது சமூக நீதிப் பாதையா என்று டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் யோசிப்பது நல்லது

Sunday, October 10, 2010

பாவம்... ராகுல் காந்தியை விட்டுவிடுங்கள்...!!

தான் செய்த குற்றத்துக்காக ஒரு ஆண்டு சிறைக்குச் சென்று திரும்பி வந்த ஒருவர் தன்னைவிட்டு அனைவரும் ஒதுங்கிப் போவதால் கோபமாக இருந்தார். அப்போதுதான் அவருக்கு அந்த விபரம் கிடைத்தது, பக்கத்துத் தெருவில் ஒரு முன்னாள் கைதி இருக்கிறார் என்று.

உற்சாகத்துடன் அவரைப் பார்க்கக் கிளம்பினார்.

"வணக்கம்... என் பெயர் கேசவன்.."

"சொல்லு... கேசவா.. என்ன விஷயமா என்னப் பாக்க வந்த.."

"நானும் உங்கள மாதிரிதான்..."

"அப்படின்னா..."

"உங்கள மாதிரியே ஜெயில்ல இருந்துட்டு வந்தேன்..."

"எத்தனை வருஷம் இருந்த..."

"ஒரு வருஷம் இருந்துட்டு வந்தேன்..." இப்படி சொல்லி முடிப்பதற்குள் ராமசாமிக்கு வந்த கோபத்தைப் பார்த்து கேசவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

"நாயே... ஓடிப்போயிடு... ஒரே ஒரு வருஷம் ஜெயில்ல இருந்துட்டு வந்து உங்கள மாதிரின்னு எனக்கு சமமா இருக்குற மாதிரி பேச எவ்வளவு தைரியம் இருக்கணும்..."

கேசவனுக்கு தலைகால் புரியவில்லை. ஏழு ஆண்டு சிறையில் இருந்த அனுபவசாலி என்ற உயர்வு(!) மனப்பான்மைதான் கோபத்துக்குக் காரணம் என்று அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கேசவனிடம் சொல்லியிருக்கிறார்கள்.

இப்படித்தான் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு கோபம் வந்துள்ளது போலும். தடை செய்யப்பட்டுள்ள சிமி அமைப்போடு ராகுல் காந்தி ஒப்பிட்டவுடன் மூக்குக்கு மேல் கோபம் வந்து பொங்கி எழுந்துவிட்டார்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள். இரண்டு அமைப்புக்கும் உள்ள வேறுபாட்டை ராகுல் காந்தி புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் ஆர்.எஸ்.எஸ். செய்தித்தொடர்பாளர் ராம் மாதவ்.

என்ன வேறுபாடு மாதவ் அவர்களே... காந்தி கொலை செய்யப்பட்டவுடன் தடை செய்யப்பட்ட உங்களோடு, போயும், போயும் இப்போது தடை செய்யப்பட்டுள்ள சிமியோடு ஒப்பிட்டதால் உங்களுக்கு இழுக்கு நேர்ந்துவிட்டதா?

மதக்கலவரங்கள் நடந்த ஒவ்வொன்றிலும் அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன்களில் பெரும்பாலும் ஆர்.எஸ்.எஸ்.சை நோக்கிதான் விரல்கள் நீண்டுள்ளன என்பதால்தான் ராகுல் காந்திக்கு வரலாறு தெரியாது என்கிறீர்களா..?

அவர் சொன்னது தவறுதான். அண்மைக்காலங்களில் உங்களோடு தொடர்புடையவர்கள் எவ்வளவு, எவ்வளவு குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியுள்ளார்கள். தென்காசியில் சொந்த அலுவலகத்திலேயே குண்டுவைத்து சாதனை நிகழ்த்திய இந்து முன்னணியைப் பெற்ற தாயல்லவா ஆர்.எஸ்.எஸ்.?!

உங்க "சீனியாரிட்டி" தெரியாமல் பேசிவிட்டார் ராகுல்காந்தி. பாவம், அவரை விட்டுவிடுங்கள்.
- ஹரி.

நன்றி : தீக்கதிர்

Monday, October 4, 2010

எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!


ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) "ஜெமினி பிலிம்ஸ்' உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான "சந்திரலேகா' 1948-ல் தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் வெளியானது. இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது, இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை.

தஞ்சாவூரில் "சந்திரலேகா' வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் என்ற உரிமையில் வாசனை நேரடியாகவே அவர் அணுகினார். வாசனோ மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: ""ஒரு சின்ன நகரத்தில் பல திரையரங்குகளில் படம் வெளியிடுவது நல்லதல்ல. யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது. நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. எல்லோரும் பிழைக்க வேண்டும் அல்லவா?''

படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியில் எல்லோருக்கும் பங்கு தரப்பட வேண்டும் என நினைத்தார் வாசன். படத் தயாரிப்புக் குழு மேலாளரிலிருந்து படம் ஓடிய திரையரங்குகளில் டிக்கெட் கிழித்த தொழிலாளிகள் வரை எல்லோருக்கும் சிறப்பு ஊக்கப் பரிசு அளித்தது "ஜெமினி ஸ்டுடியோ'. "சந்திரலேகா' வரலாறானது. தொழில் தர்மத்துக்காக இன்றளவும் வாசன் நினைவுகூரப்படுகிறார்!

ஏறத்தாழ ரூ.160 கோடி முதலீடு, ஒரே நேரத்தில் 3 மொழிகளில் 2,200 பிரதிகளுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, இதுவரை இந்திய கதாநாயகிகள் யாரும் பெற்றிராத ரூ. 6 கோடி சம்பளத்தில் கதாநாயகியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஆஸ்கர் விருதுபெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசை, எல்லாவற்றுக்கும் மேலாக "சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்...

வரலாறுதானா "சன் பிக்சர்'ஸின் "எந்திரன்'?

நிச்சயமாக "எந்திரன்' ஒரு வரலாறுதான். ஒரு ஜனநாயக நாட்டில் விஞ்ஞானத்தின் உதவியுடன், அரசாங்கத்தின் ஆசியுடன் வணிக மோசடியும் வணிக ஏகாதிபத்தியமும் எப்படி ஜனநாயகமாக மாற்றப்படுகிறது என்கிற வரலாறு.

மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள். முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள்; 4 காட்சிகள்; டிக்கெட் விலை ரூ. 250 எனக் கொண்டால்கூட முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி. "சன் குழும' ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான "கோலோஸியம்' உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை "எந்திரன்' உருவாக்கி இருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்! எனில், மொத்த வருமானம்?

ஒரு தொழில் நிறுவனம் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இப்படிச் சம்பாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். நியாயம்தான். தொழில் நிறுவனம்தான், புத்திசாலித்தனமாகத்தான் சம்பாதிக்கிறார்கள்; "வால்மார்ட்'டுக்கும் "கோகோ கோலா'வுக்கும் "ரிலையன்ஸ் ஃப்ர'ஷுக்கும்கூட இந்த நியாயம் பொருந்தும். ஆனால், நாம் அவர்களை ஆதரிக்கவில்லையே, ஏன்? அவர்களை எந்தக் காரணங்கள் எதிர்க்க வைக்கின்றனவோ அதே காரணங்கள்தான் "எந்திர'னையும் எதிர்க்கவைக்கின்றன.

சென்னையில் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் "எந்திரன்' வெளியாகி இருக்கிறது. ஆனால், ஆச்சர்யம் இது இல்லை. தமிழகத்தின் மிக சாதாரண நகரங்களில் ஒன்றான (தமிழகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் தங்கிய மாவட்டத்தின் தலைநகரமும்கூட) புதுக்கோட்டையில்கூட 4 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் நிலை.
இந்தச் சூழல் இதுவரை ஒருபோதும் இல்லாதது. இந்தியத் திரையுலகம் முன்னெப்போதும் எதிர்கொண்டிராதது. ரசிகனுக்கு "எந்திரன்' படத்தைத் தவிர, வேறு எந்தப் படத்தையுமே பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி, தங்களது பணபலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் பெருவாரியான திரையரங்குகளில் தங்களது படத்தை மட்டுமே திரையிட வைத்திருக்கும் ஏகபோக மனோபாவம்.

படம் வந்த சில நாள்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வமே பரந்துபட்ட "எந்திரன்' பட வெளியீட்டுக்கான வியாபார சூட்சமமாக மாறியிருக்கிறது. பொதுவாக, எந்த ஒரு வெற்றித் திரைப்படத்துக்கும் அதிகபட்சம் 10 நாள்களுக்குத்தான் கூடுதல் விலையில் டிக்கெட்டை விற்க முடியும். நூறு நாட்கள் ஓடக்கூடிய ஒரு வெற்றிப் படம் ஓர் ஊரில் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டால், முதல் 10 நாட்களில் பார்க்கும் ரசிகர்கள்தான் கூடுதல் கட்டணத்தில் படம் பார்க்க நேரிடும். எஞ்சிய 90 நாட்களில் படம் பார்க்கும் ரசிகர்கள் சாதாரண கட்டணத்திலேயே படம் பார்த்துவிடலாம். ஆனால், ஒரு திரையரங்குக்குப் பதில் ஊரிலுள்ள 10 திரையரங்குகளிலும் படத்தை வெளியிட்டால், 100 நாள்களும் படத்தைக் கூடுதல் கட்டணத்திலேயே ஓட்டியதற்குச் சமம். இதுதான் "எந்திரன்' அறிமுகப்படுத்தி இருக்கும் "ஏகபோக' (மோனாப்பலி) வியாபார சூட்சமம்.

தயாரிப்பாளர்கள் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு எழுதப்படாத விதியை அறிவித்தது. அதன்படி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற ஆரம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாநாயகர்கள் நடித்த திரைப்படத்தை தீபாவளி, பொங்கல், சித்திரைப் புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் மட்டுமே திரையிட வேண்டும். ஏனைய நாள்களில் சிறிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவை குறைந்தது இரண்டு வாரங்களாவது ஓடி விநியோகஸ்தர்களுக்கு குறைந்தபட்ச லாபத்தையாவது ஏற்படுத்திக் கொடுக்கும். மற்றவர்களுக்கு நியாயம் சொல்லும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமோ, விநியோகஸ்தர்கள் சங்கமோ, "எந்திரன்' விஷயத்தில் வாயைத் திறக்கவே இல்லையே, ஏன்? பயமா இல்லை ஆட்சியாளர்களின் பாததூளிகளுக்கு சாமரம் வீசும் அடிமைத்தன மனோபாவமா!

"எந்திரன்' திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்டிருந்தால் திரையிடக் காத்திருக்கும் பல சிறிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டு இரண்டு, மூன்று வாரங்கள் ஓடியிருக்கும். "எந்திரன்' வெற்றிப்படமாகவும் அமைந்துவிட்டால், பாவம் சிறிய படங்களைத் தயாரித்து வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிட மேலும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை திரையரங்குகள் கிடைக்காது. கிடைத்தாலும் "எந்திரன்' படத்தின் வெற்றி ஜுரத்தில் அந்தப் படங்கள் ஓடாது. போட்ட முதலும், அதிகரித்த வட்டியும், அந்தத் தயாரிப்பாளர்களை திவாலாக்கி நடுத்தெருவில் நிறுத்தும். ஏகபோகத்தின் கோர முகம் இதுதான்!



நன்றி - தினமணி

Wednesday, July 21, 2010

நான் பிள்ளையார் பேசுறேன்....



வணக்கம். நான்தான் கோவை, சிங்காநல்லூர் பத்தாவது வட்டம் ஜீவா வீதில குடியிருந்த பிள்ளையார் பேசுறேன். இவ்வளவு நாள் மவுனமா இருந்த நான் பேசுறது அவசியம்னு நெனச்சுதான் வாயத் துறந்துட்டேன். 1989 ஆம் ஆண்டுங்குறது நல்லாவே நெனவுல இருக்கு... அப்பதான் நான் ஜீவா வீதிக்குள்ள வர்றேன். என்னக் கொண்டு வந்தவங்க உள்மனசுல என்ன இருக்குன்னு அப்போ என்னால படிக்க முடியல. என் முதுகுக்குப் பின்னாலதான் பல வேலைகள் நடந்துருக்கு...

கும்பிடறதுக்குதான் என்ன கொண்டு வந்தாங்கன்னு நெனச்சேன்... வந்த அன்னிக்கு உற்சாகம் கரை புரண்டு ஓடுச்சு. அதெல்லாம் கொஞ்ச நாள்தான். பக்கத்து வீட்டம்மா மாட்டைக் கொண்டு வந்து கட்டுச்சு. அது சாப்புடுற அழக ரசிச்சேன்... நாக்கை சுழற்றி அசை போட்டது பிரமாதமா இருந்துச்சு.. சாணம் போட்டப்ப கூட இயற்கைதானே என்றுதான் மனதுக்குள் ஓடியது.

ஆனால் மாடுகள் நிரந்தரமாகக் குடியேறினப்பதான் அது அவங்களுக்கு சொந்தமான இடம். நான் வெறும் வாட்ச்மேன்தான்னு புரிஞ்சுது. என் முதுகுக்குப் பின்னால் என்ன செய்யுறதுன்னு தெரியாம திகைச்சு நின்னவங்கள ஒரு வேளை நான் திரும்பிப் பார்த்துருவனோன்னு பயந்து ஒரு பெரிய சுவரை எழுப்பிட்டாங்க. நான்கூட அது என்னுடைய பாதுகாப்புக்குத்தானோன்னு நெனச்சுட்டேன். ஆனா அது தீண்டாமைச் சுவர். பெரியார் நகர்ல இருக்குற அருந்ததிய மக்கள் தங்களோட வீதிக்குள்ள வந்துரக்கூடாதுன்னுதான் எனக்கு கோவில்.

முதல் விநாயகர் சதுர்த்தி வந்தப்ப கொஞ்சம் பரபரப்பாக இருந்தேன். ஆனா எந்த அசைவும் இல்லை. வழக்கம்போல மாடுகள் மட்டும் வந்தன. இப்படியே ஒவ்வொரு சதுர்த்தியும் கழிஞ்சுது. ஒண்ணுல்ல... ரெண்டுல்ல... 20 விநாயகர் சதுர்த்திகள் கழிஞ்சு போச்சு. என்னோட தரப்புல இருக்குறவங்க கண்டுக்கல. அந்தத் தரப்புல இருக்குறவங்க பாதையத் திறக்க என்னவெல்லாமோ பண்ணிப் பாத்திருக்காங்க. முடியல.

திடீர்னு ஒருநாள் ஏதோ மின்னுச்சு. அப்புறம்தான் தெரிஞ்சுது புகைப்படம் எடுக்குறாங்கன்னு. மறுநாளும் வந்தாங்க. முதல்நாள் இல்லாத மாடுகள் அப்ப இருந்துச்சு. சாணம் போட்டு அந்த இடத்தையே நாறடித்த நிலைய அவங்கள்லாம் பாத்தாங்க. அதயும் ஃபோட்டோ எடுத்தாங்க. இப்படிப் பாதை போக வேண்டுமே... ஆனால் இடையில் எப்படி கோவில் வந்தது என்று அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். குறுக்கே புகுந்து சொல்ல வாய்நுனி வரைக்கும் வார்த்தைகள் வந்துருச்சு, இது கோவிலல்ல. மாட்டுத்தொழுவம்தான் என்று. கட்டுப்படுத்திக்கிட்டேன்.

ஆனா ரெண்டு, மூணு நாட்கள்ல ஒண்ணு புரிஞ்சுது. இவங்க ஏதோ வந்தார்கள்,, சென்றார்கள் மாதிரி ஆட்களல்ல. அவங்க பேச்சுலருந்து புரிஞ்சுது, ஏற்கெனவே பல மனச்சுவர்களையும், கல் சுவர்களையும் தகர்த்தவங்க இவங்கன்னு. எனக்காகவும் சில பேர் பரிஞ்சு பேசுனாங்க. அவங்கள்லாம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் விடுதலை முன்னணி அமைப்புகளச் சேந்தவங்கன்னு அப்புறம்தான் தெரிஞ்சுது.

ஜன.30. அரசு அதிகாரிகள் வந்தப்ப இவ்வளவு சீக்கிரமாவா நம்மை இந்த இடத்த விட்டு கூட்டிட்டுப் போயிருவாங்கன்னு நானும் மத்தவங்களப் போல நெனச்சேன். ஆனா இறங்குறப்பயே வந்த எல்லா அதிகாரிகள் கைலயும் பாத்தேன். தீக்கதிர்தான் இருந்துச்சு. அவங்க வர்றாங்கன்னு தெரிஞ்சு அங்கு கூடுன பெரியார் நகர் மக்களும் ஒவ்வொருத்தர் கைலயும் தீக்கதிரோடதான் நின்னாங்களாம். தீக்கதிரோட முதல் பக்கச் செய்திதான் மந்திரமாக இருந்துருக்கு. ஜேசிபி எந்திரம் வந்துச்சு. முதல்ல என்னோட முதுகுப்புறந்தான் வந்து நின்னுச்சு.
நான் மாட்டுத் தொழுவத்துல மூக்கைப் பிடிச்சுட்டு உக்காந்திருந்தப்ப வராத சில பேரு அப்ப வந்து விநாயகர் மேல கை வெச்சுருவீங்களான்னு வாய்ச்சவடால் பேசுனாங்க. வந்தவங்களோட அடைமொழியக் கேட்டா எனக்கு சிரிப்புதான் வந்துச்சு... ஒருத்தரு எரியீட்டி, இன்னொருத்தரு ஸ்டோனு. அவங்க பாச்சா பலிச்சுரக்கூடாதுன்னு அப்ப வேண்டிக்கிட்டேன். யார்கிட்ட வேண்டிக்க முடியும்.. என்கிட்டயே வேண்டிக்கிட்டேன். சுவரைப் பாத்து ஜேசிபி எந்திரம் போனதுதான் தாமதம். ஏதோ அதுக்காகவே காத்துருந்த மாதிரி பொல, பொலன்னு சுவர் உதிர்ந்து போச்சு.

சுவரை எடுத்த ஜேசிபி நானிருந்த மாட்டுத் தொழுவத்தோட வளாகச் சுவர்களையும் தீண்டுச்சு. அடுத்து நான்தான்னு மூச்சைப் பிடிச்சுக்கிட்டு உட்காந்திருந்தேன். ஆனா ஜேசிபி பின்வாங்குச்சு. பேசிக்கலாம்னு கிளம்பிட்டாங்க. அச்சச்சோ... நம்மள விட்டுட்டாங்களேன்னு நெனச்சேன். ஆனா அதுக்கப்புறமும் ஒவ்வொரு நாளும் பாத்துட்டுப் போனாங்க தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்காரங்க.

பிப்ரவரி 6. காலைல என்னோட முதுகுப்பக்கம் பரபரப்பா இருந்துச்சு. எல்லாரும் தீக்கதிர் வாங்கிப் படிச்சுட்டுருக்குற சத்தம் கேட்டுச்சு. ஏதோ மார்க்சிஸ்ட் கட்சியோட மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் முதல்வருக்கு கடிதம் எழுதிருக்காருன்னு வாசிச்சாங்க. அப்பவே நெனச்சேன், இன்னக்கி ஏதாவது நடக்கும்னு. நெனச்ச மாதிரியே மீண்டும் ஜேசிபி.

என்னைத் தூக்க மாநகராட்சி ஊழியர் தொட்டப்ப ஏதோ சாப விமோசனம் கிடைச்ச உணர்வுதான். பெரியார் நகர் நோக்கி என்னை அவர் எடுத்துட்டுப் போனப்பதான் அவ்வளவு நாளும் எனது முதுகுப்புறத்துல இருந்தவங்கள பாக்க முடிஞ்சுது. என்னை ஆவலா பாத்தாங்களே ஒழிய, குத்துக்கல் மாதிரி இவ்வளவு நாள் எங்கள மறிச்சு உட்கார்ந்திருந்தாயேனு யாரும் பாக்கலை. அங்கருந்து என்னைத் தொட்டுத் தூக்கிட்டு வந்தவர் அருந்ததியர்னு பேசிக்கிட்டதும் என்னோட காதுல விழுந்துச்சு.

எனக்காக அருந்ததியர் சமூகத்தினர் செஞ்சு வெச்ச மேடைல ஜம்முனு உக்கார வெச்சாங்க. முறைப்படி எனக்கு எதெல்லாம் செய்யணுமோ அதெல்லாம் செஞ்சாங்க. பாதை கிடைத்ததோடு, போனசாக நானும் கிடைத்தேன்னு மக்கள் பேசுனாங்க. வழிவிட்டான் பிள்ளையார் என்று எனக்கு பெயரும் சூட்டிட்டாங்க. எனக்குமல்லவா சேர்த்து வழி பிறந்துருக்கு...

Tuesday, April 13, 2010

"அங்காடித் தெரு"வாகும் பொதுத்துறை உருக்காலை!


தனது நாசகர உலகமய, தனியார் மய மற்றும் தாராளமயப் பாதையில் மத்திய அரசு தீவிரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் எதையும் அரசு புதிதாக உருவாக்கவில்லை. அதோடு ஏற்கெனவே இருந்துகொண்டிருக்கும் பொதுத்துறை நிறுவனங்களையும் சீர்குலைக்கும் வேலையில் இறங்கியுள்ளது. நிரந்தர மற்றும் முறையான ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகிறது. இன்றைக்கு, பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களில் நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கையை விட ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.


இன்றைக்கு ஏராளமான பணத்தை ஒவ்வொருவரும் தங்கள் கல்விக்காக செலவழித்து வருகிறார்கள். பத்தாம் வகுப்பு, ஐடிஐ, பட்டயப்படிப்புகள் மற்றும் பட்டப்படிப்புகள் என்று பல்வேறு தடைகளைத் தாண்டி தங்கள் படிப்புகளை முடிக்கிறார்கள். சரியான வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையில் அமரும் இவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலை பார்க்க சம்மதிக்கிறார்கள். ஒப்பந்ததாரர்கள் மூலமாக இந்தத் தொழிலாளர்களை நிர்வாகம் சுரண்டி எடுக்கிறது. அவர்களுக்குத் தரப்படும் சம்பளமோ அற்பமானதாகும். அதோடு, தற்போது எழுந்துள்ள நெருக்கடி நிலைமை, இருப்பதையும் பிடுங்கிவிடும் அபாயத்தை இந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் முன்பு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.


விசாகப்பட்டினம் உருக்கு ஆலையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இந்த விபரங்களை உறுதிப்படுத்துகிறது. இந்த ஆலையில் பணியாற்றும் 300 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மத்தியில் சிஐடியு சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பணியிடத்தில் கேள்வி கேட்டால் பதில் சொல்ல மாட்டார்கள் என்பதற்காக அவர்கள் வசிக்கும் இடங்களில் போய் ஆய்வு நடத்தினார்கள். விசாகப்பட்டினத்தில் உள்ள அப்பிகொண்டா மற்றும் சப்பாவரம் ஆகிய பகுதிகளில் இந்த ஆய்வு நடந்தது. அவர்களின் ஊதியம், பணியால் உண்டாகும் நோய்கள், பொருளாதார நிலை, நவீனமயத்தின் பாதிப்பு, வாழ்விடத்தில் உள்ள பிரச்சனைகள் மற்றும் சமூகப் பிரச்சனைகள் ஆகியவற்றைச் சுற்றியே கேள்விகள் அமைந்திருந்தன.


சுமை தூக்கும் பணியாளர்களின் ஊதியம் பரிதாபமாக உள்ளது. இந்தப்பணியில் இருப்பவர்களில் பலர் மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் பெறுகிறார்கள். அதிகபட்சமாக ஒரு சுமை தூக்கும் பணியாளரின் சம்பளம் வெறும் 4 ஆயிரம் ரூபாய்தான். இந்த அதிகபட்ச ஊதியம்கூட மாநில அரசு நிர்ணயித்திருக்கும் குறைந்தபட்ச கூலியை விடக்குறைவானதாகும். அதிலும் வேலை இருந்தால்தான் சம்பளம் கிடைக்கும். வேறு எந்த சலுகைகளும் அவர்களுக்கு இல்லை. கூடுதல் நேரம் வேலை செய்தால் அதற்காகத் தனி ஊதியம் எதுவும் கிடையாது. வேலை செய்யும் நாட்கள் குறைவாக இருந்தால் பி.எப் மற்றும் ஈ.எஸ்.ஐ. பிடித்தம் எல்லாம் கிடையாது. அதனால் முடிந்த அளவிற்கு இந்தப்பிடித்தம் இல்லாத அளவிற்கு நாட்களைக் குறைக்கும் வேலையையும் நிர்வாகம் செய்துவிடுகிறது.


இந்தப் பொதுத்துறை ஆலையில் 25 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். ஆலைக்குள் 10 ஆயிரம் பேரும், கட்டுமானப்பணியில் 15 ஆயிரம் பேரும் உள்ளனர். ஆலைக்குள் பணியாற்றும் 10 ஆயிரம் பேரில் சுமார் 4 ஆயிரம் பேர் நிரந்தரப்பணியாளர்கள் போலவே பணியாற்றுகிறார்கள். அவர்களுக்குத் தரப்படும் பணி, வேலை நேரம், பொறுப்பு ஆகிய நிரந்தரப் பணியாளர்களுக்குள்ளது என்றாலும் சம்பளம், படிகள் மற்றும் இதர சலுகைகள் மட்டும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இவர்களின் பெரும்பாலானவர்கள் 20 முதல் 30 வயதுக்கு சொந்தக்காரர்களாவர். தார், கால்சியம், அம்மோனியா சல்பேட், அசிட்டிலின் ஆகியவற்றை இவர்கள் கையாளுவதால், இளம் வயதிலேயே தோல் மற்றும் தொண்டை தொடர்பான வியாதிகள், எலும்புருக்கி நோய் மற்றும் முகங்களில் ஏற்படும் மாறுதல்கள் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.


700 டிகிரி முதல் 1,000 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பம் உள்ள இடங்களில் இவர்கள் பணியாற்றுகிறார்கள். 60 முதல் 80 மீட்டர் உயரத்தில் பணிபுரிபவர்களில் பலர் விபத்துக்கு உள்ளாகிறார்கள். கிடைக்கும் வருமானம் போதாததால் கிட்டத்தட்ட அனைத்து தொழிலாளர்களுமே கடனில் மூழ்கி விடுகிறார்கள். போதாக்குறைக்கு, நவீனமயம் வேறு. இதனால் ஆய்வு செய்யப்பட்ட 300 பேரில் சுமார் 50 பேருக்கு தொடர்ச்சியாக வேலை கிடைப்பதில்லை. சில சமயங்களில் ஒரு மாதம், இரண்டு மாதம் என்று வேலை கிடைக்காமல் காத்திருக்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் அவர்களுக்கு சம்பளம் கிடையாது. அதோடு, தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் அண்டை மாவட்டங்களிலிருந்து வந்தவர்களாவர்.


அவர்களிடம் ரேசன் அட்டைகள் கிடையாது. குழந்தைகளின் கல்விக்காக மாதாமாதம் 200 முதல் 300 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு வீட்டு வாடகைக்கே போய்விடுகிறது. இதெல்லாம் போதாதென்று ஏறிக்கொண்டே போகும் விலைவாசியும் இவர்களை வாட்டி எடுக்கிறது. அங்காடித் தெரு திரைப்படத்தில் ஒரு வசனம் வருகிறது. சொந்த ஊர்ல பிச்சை கூட எடுக்க முடியாது என்று. விசாகப்பட்டின உருக்காலையில் பணியாற்றும் பலருக்கும் அந்த நிலைதான். இவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தற்போது சிஐடியு இறங்கியுள்ளது.

Monday, April 5, 2010

"குழந்தைகள் தியாகம் வீண் போகாது...!"



என்ன தொழில் செய்கிறார் என்று கேட்டால், அதற்குப் பதில் சொல்ல வேண்டுமென்பதற்காக வேண்டுமென்றால் விவசாயம் என்று சொல்லலாமே ஒழிய, அவருக்கென்று நிரந்தரத் தொழில் எதுவும் கிடையாது. ஆனால் பலரும் கையில் எடுக்க அச்சப்படும் ஒரு விஷயத்தில் போராடி நின்று வெற்றி பெற்றுள்ளார் 55 வயதாகும் சந்திரபதி என்ற பெண்மணி. ஜூன் 15, 2007 அன்று மனோஜ் மற்றும் அவரது மனைவி பப்லி ஆகிய இருவரும் கொலை செய்யப்பட்டனர். இருவரும் தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் ஒரே கோத்திரத்தில் பிறந்த அவர்கள் திருமணம் செய்வதை அனுமதிக்க மாட்டோம் என்று சட்டவிரோதமாக ஊர்ப்பஞ்சாயத்து என்ற பெயரில் சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்தார்கள்.


இவர்கள்தான் ஊர்ப்பெரியவர்கள் என்றும் தங்களைக் கூறிக்கொள்பவர்கள். அவ்வாறு திருமணம் செய்த மனோஜ் மற்றும் பப்லி ஆகிய இருவரும் படுகொலையும் செய்யப்பட்டனர். இதில் கொலை செய்யப்பட்ட மனோஜின் தாய்தான் சந்திரபதி. இந்தக் கொடுரத்தை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஊர்க்கட்டுப்பாடு என்று பயந்து நடுங்கி இருந்து கொள்ளாமல் பஞ்சாயத்து தலைவர்களிலிருந்து கொலைகாரர்கள் வரை அனைவரையும் நீதிமன்றத்தில் கூண்டில் நிறுத்துவதில் வெற்றிபெற்றார். அவ்வாறு நிறுத்தப்பட்டவர்களில் பப்லியின் உறவினர்கள் ஐந்து பேருக்கு மரண தண்டணையும், பஞ்சாயத்துத் தலைவர் கங்கா ராமுக்கு ஆயுள் தண்டனையும் மார்ச் 30 அன்று வழங்கப்பட்டுள்ளது.


ஆனால் இந்த மூன்றாண்டுக்காலத்தில் ஏராளமான தடைக்கற்களை சந்திரபதி சமாளிக்க வேண்டியிருந்தது. ஒட்டுமொத்தமாக ஊரே அவரை சமூகப்புறக்கணிப்பு செய்தது. அதைப்பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை. கோத்திரம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொள்ள குழந்தைகளுக்கு உரிமையுள்ளது என்றார் அவர். காலம் இப்போது பெரும் அளவில் மாறியிருக்கிறது. தங்கள் வாழ்க்கைத் துணையை குழந்தைகள் தேர்வு செய்யும்போது பெண்கள் ஆதரவு தர வேண்டும். ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்து கொண்டவர்களைப் பார்த்து நீங்கள் இருவரும் சகோதர, சகோதரி என்று கூறுபவர்கள்தான் உண்மையில் கொலை செய்கிறார்கள் என்று பொரிந்து தள்ளுகிறார் சந்திரபதி.


இந்தப் போராட்டத்தில் அவருக்கு முதலில் கைகொடுத்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்தான். தற்போது வழங்கப்பட்டுள்ள கர்நால் நீதிமன்றத் தீர்ப்பு பற்றிப் பேசிய ஜனநாயக மாதர் சங்கத்தின் அரியானா மாநிலத் தலைவரான ஜக்மதி சங்வான், ஒவ்வொரு நபரும் தங்கள் விருப்பத்திற்கேற்ப திருமணம் செய்து கொள்ளலாம் என்று அரசியல் சட்டம் அளித்திருக்கும் உரிமை காக்கப்பட வேண்டும் என்று எங்கள் அமைப்பு நம்புகிறது என்றார். வழக்கம்போலவே, பாஜகவின் கருத்து மழுப்பலாகவே இருந்தது. அக்கட்சியின் தேசிய செயலாளர்களில் ஒருவரான கேப்டன்.அபிமன்யு கூறுகையில், காலத்தின்போக்கில் மாற்றமும் வரும் என்று கூறிக்கொண்டார். இவர் ஜாட் சாதி அமைப்பின் தலைவர்களில் ஒருவராகவும் இரூப்பதாலேயே இந்த மழுப்பல் பதில் வருகிறது.


சந்திரபதிக்கு ஆதரவான கருத்து சொல்பவர்களில்கூட பெரும்பாலானவர்கள் அதை வெளிப்படையாக சொல்ல மறுக்கிறார்கள். ஜாட் கூட்டமைப்பின் மற்றொரு தலைவரான ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி எம்.எ°.மாலிக் போன்றவர்கள் மறைமுகமாக இந்தக் கொடுமைகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்து கொள்வது 1946 ஆம் ஆண்டுவரை தடைசெய்யப்பட்டதாகவே இருந்தது என்று மழுப்புகிறார்கள். சாதி அமைப்புகள் கிராமப்புறங்களில் இன்னும் வலுவாக ஊடுருவியிருப்பதே இதற்குக் காரணமாகும். ஆனால் எனது குழந்தைகளின் தியாகம் வீணாகிப்போய்விடாது. சமூகத்தில் மாற்றத்தை இவர்களின் தியாகம் கொண்டு வந்தே தீரும் என்று உறுதியாகக் கூறுகிறார் சந்திரபதி.


உங்களுக்கு இரண்டு பெண்கள் இருக்கிறார்களே... அவர்களின் திருமணம் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டால், நான் அவர்களிடம் ஏற்கெனவே சொல்லிவிட்டேன். தங்கள் வாழ்க்கைத் துணைவர்களை அவர்களே தேர்வு செய்து கொள்ளலாம். அவர்களுடைய கோத்திரத்தில் உள்ளவர்களையோ அல்லது வெளியில் உள்ளவர்களையோ தங்கள் இஷ்டப்படி அவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு தடையேதும் இல்லை என்று உறுதியாகச் சொல்கிறார் சந்திரபதி. இதுவரை கட்டப்பஞ்சாயத்துப் பேர்வழிகளுக்கு ஆதரவாக இருந்த நிலை மாறி, சமூகநீதிக்காற்றின் திசை மாறியுள்ளது என்பதையே இது காட்டுகிறது என்கிறார்கள் அரியானாவைச் சேர்ந்த பலர்.

Thursday, March 25, 2010

மருமகளை மாமியார் எட்டி உதைக்கலாமா..?


மாமியார் தனது மருமகளை எட்டி உதைத்தாலோ அல்லது தனது மகன் விவாகரத்து செய்து விடுவான் என்று மிரட்டினாலோ இந்தியக் குற்றவியல் பிரிவு 498ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகக் கருத முடியாது என்று கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஜூலை 27, 2009 அன்று வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு வெளியானவுடன் நாடு முழுவதுமுள்ள மாதர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான பிருந்தா காரத்தான் முதலில் இப்பிரச்சனையில் குரல் எழுப்பினார். இத்தகைய பிற்போக்கான தீர்ப்பில் உள்ள குறைகளைக் களையும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லியை சந்தித்து வலியுறுத்தினார்.


பெண்களுக்கு எதிரான பெரும்பாலான கொடுமைகள் பதிவு செய்யப்படாதவையாகும். தேசிய குற்றப்பதிவுப் பிரிவு இறுதியாக திரட்டிவைத்துள்ள புள்ளிவிபரங்கள் 2007 ஆம் ஆண்டுக்குரியவையாகும். கணவன் மற்றும் கணவனின் உறவினர்களால் இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து 2007 ஆம் ஆண்டில் 75 ஆயிரத்து 930 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்படுபவர்களுக்கு தண்டனை வழங்குவது வெறும் 20 விழுக்காடு வழக்குகளில்தான் இருந்துள்ளது. வரதட்சணை காரணமாக கொலை செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கையோ 8 ஆயிரத்து 93 ஆகும். இந்த வரதட்சணைக் கொலை வழக்குகளிலும் மூன்றில் இரண்டு பங்கு வழக்குகளில் குற்றவாளிகள் தப்பித்து விடுகின்றனர். பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் என்று கணக்கில் எடுத்தால் 2007 ஆம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 2 லட்சத்தைத் தொடுகிறது.


1961 ஆம் ஆண்டிலிருந்து வரதட்சணை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியா எழுகிறது என்று கூறினார்கள். இந்தியா எழுந்ததோ இல்லையோ வரதட்சணை எழுந்தது. வரதட்சணையின் பரிணாம வளர்ச்சி அதிர்ச்சியூட்டும் வகையில்தான் இருந்தது. அண்மையில் ஆந்திராவில் நடந்த ஆய்வில், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். மணமகனாக இருந்தால் உச்சபட்ச விலை அவர்களுக்கு விதிக்கப்படுகிறது என்ற தகவல்கள் அம்பலமாகின. விலை உயர, உயர வரதட்சணை தராத அல்லது கொண்டு வராத பெண்கள் மீதான தாக்குதல்களும் அதிகரிக்கின்றன. அவ்வாறு தாக்கப்பட்ட மோனிகா என்ற பெண் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார். தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் தனது கணவர் விகாஸ் சர்மா, விகாசின் பெற்றோர்கள் பாஸ்கர் லால் சர்மா மற்றும் விமலா ஆகியோர் மீது கொடுமை செய்யததற்காகவும், நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் நடந்து கொண்டதற்காகவும் அவர் வழக்கு தொடுத்திருந்தார்.


எட்டி உதைத்து கொடுமை பண்ணினார் என்றும், விவாகரத்து செய்ய வைத்து விடுவேன் என்றும் தனது மாமியார் குறித்து மோனிகா புகார் கூறியிருந்தார். ஆனால் மாமியார் எட்டி உதைப்பதோ, விவாகரத்து செய்ய வைத்து விடுவோம் என்று கூறுவதோ 498ஏ பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களல்ல என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. இந்த தீர்ப்பின் கருத்தை விளக்கிக் கூறுமாறும், அதை மறுபரிசீலனை செய்யக் கோரியும் தேசிய மகளிர் ஆணையம் மனு போட்டது. அந்த மனுவை ஏற்றுக்கொண்டு விசாரிக்க தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் எஸ்.எச்.கபாடியா, அல்டமஸ் கபீர் மற்றும் சிரியாக் ஜோசப் ஆகியோர் முடிவு செய்துள்ளனர். வழக்கில் தொடர்புள்ள இரு தரப்புக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


இந்தத்தீர்ப்பு வந்தவுடன், பெண்களின் துயரங்களை இது அதிகப்படுத்தவே செய்யும். பெண்களின் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு சட்ட மசோதாக்களின் பலன்களை நிராகரித்துவிடும் என்று பிருந்தா காரத் குறிப்பிட்டார். சட்ட அமைச்சகத்துக்கு அவர் எழுதிய கடிதத்தில், கொடுமைகள் குறித்து நீதித்துறைக்கு இத்தகைய கருத்து இருப்பது குடும்ப வன்முறைகளுக்கு உரிமம் வழங்குவது போலாகிவிடும். மனைவிகளை அடிப்பவர்களுக்கு இந்தத் தீர்ப்பு ஊக்குவிக்கும். பெண்களின் உயிரையும், கவுரவத்தையும் காக்க அரசும், நாடாளுமன்றமும் எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகள் வீணாகிப் போய்விடும் என்று குறிப்பிட்டிருந்தார்.


பிருந்தா காரத்தின் கருத்துகளையே தேசிய மகளிர் ஆணையத்தில் மனு பிரதிபலிக்கிறது. 498ஏ பிரிவு என்பது வெறும் வரதட்சணைக் கொடுமை குறித்தது மட்டும்தான் என்று பார்த்து விடக்கூடாது. அது வரதட்ணைக் கொடுமை மற்றும் அந்தக் கோரிக்கையால் ஏற்படும கொடுமை ஆகியவற்றோடு வரதட்சணை கோராமல் புகுந்த வீட்டாரால் நடத்தப்படும் கொடுமைகளையும்கூட சேர்த்தே பார்க்க வேண்டும் என்று அந்த மனு கூறுகிறது. அதனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அந்த மனு முன்வைக்கிறது. இந்த மனுவை விசாரணைக்கு நீதிபதிகள் எடுத்துக் கொண்டுள்ளதால் உச்சநீதிமன்றத்தின் கருத்து மாறலாம் என்ற எதிர்பார்ப்பு மாதர் சங்கங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Friday, March 19, 2010

ஜீவனிழந்து கிடக்கும் யமுனை...!!!



மீத்தேன் வாயு மெதுவாக வெளிக்கிளம்பிக் கொண்டிருக்கிறது. தேங்கிக் கிடக்கும் குட்டை போலக் காட்சியளிக்கும் இடங்களில் முட்டை விடுவது போல குமிழியை உருவாக்கி பிறகு உடைந்து அதன் மூலம் மீத்தேன் வெளியேறிக் கொண்டிருக்கிறது. அருகில் சென்றாலே குடலைப் பிடுங்கும் அளவுக்கு நாறிப் போய்க்கிடக்கிறது. புனித நதி என்றும், இந்துக்களால் கடவுள் என்றும் அழைக்கப்படும் யமுனை நதிதான் இவ்வாறு சீரழிந்துபோய்க்கிடக்கிறது. ஒரு உணர்ச்சிப் பிரவாகத்தோடு ஓடிக்கொண்டிருந்தது போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்த யமுனை நதி, ஜீவனின்றிக் கிடப்பதுபோல தற்போது காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.


இத்தனைக்கும் மார்ச் 22 அன்று உலக தண்ணீர் தினத்தை உலகமே அனுசரிக்கப்போகிறது. ஆனாலும் இந்தியாவின் பெரிய ஆறுகளில் ஒன்றான யமுனை தனது உண்மைத்தன்மையை இழந்து நிற்கிறது. புதுதில்லியின் உயிர்நாடியான யமுனை நதி பெரும் அளவுக்கு மாசுபட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் போய்ச் சேராததற்கு காரணம், நதி தெரியாத அளவிற்கு பெரிய, பெரிய சுவர்களும், மேம்பாலங்களும், சாலைகளும், ஆலைகளும் கட்டப்பட்டுள்ளதாகும். ஒரு சில இடங்களில் மட்டும்தான் ஆற்றிற்கு மக்கள் செல்லும் வாய்ப்பு உள்ள நிலை ஏற்பட்டுள்ளது. புதுதில்லியைச் சேர்ந்த மக்களில்கூட 60 விழுக்காட்டினர்தான் யமுனை நதி ஓடுவதைப் பார்த்திருக்கிறார்கள் என்று கணக்கு சொல்கிறது °வேச்சா என்ற தொண்டு நிறுவனம். புதுதில்லியின் மக்கள் தொகை 1 கோடியே 40 லட்சமாகும்.


யாருமே யமுனையைப் பார்க்கவில்லை என்றால் அதை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் என்று கேள்வி எழுப்புகிறார் ஸ்வேச்சா அமைப்பின் செயல் இயக்குநரான விமலேந்து கே. ஜா. தில்லியை வந்தடையும்வரை யமுனை மிகவும் அழகாகத்தான் இருக்கிறது. தலைநகருக்கு வெளியே நீர் மிகவும் தெளிவாக உள்ளது. பறவைகள் நீருக்கு மேல் பறந்து கொண்டிருப்பது கொள்ளை அழகாகக் காட்சியளிக்கிறது. வலையைப் போட்டு மீன்களை அள்ளும் மீனவர்கள் மகிழ்ச்சியோடு திரிந்து கொண்டிருக்கிறார்கள். இங்கிருந்துதான் ஆலைக்கழிவுகள் மற்றும் ஒட்டுமொத்த தில்லியின் சாக்கடைகள் யமுனையில் கலக்கத் துவங்குகின்றன. இந்தக் கலக்கலுக்கு முன்பே விவசாய நோக்கத்திற்காக அரியானா கட்டியுள்ள அணை மூலம் தங்களுக்குத் தேவையான நீரை அந்த மாநிலம் திருப்பிக் கொள்கிறது.


இமயமலையில் உருவாகி கங்கையில் சங்கமமாகும் யமுனையின் மொத்த நீளம் 1,370 கிலோ மீட்டராகும். இதில் வெறும் 22 கி.மீ. தூரம்தான் புதுதில்லியில் உள்ளது. ஆனால் யமுனை நதியை மாசுபடுத்துதலில் 80 விழுக்காடு பணிகள் இந்த 22 கி.மீ. தூரத்தில்தான் நடைபெறுகின்றன. தலைநகரின் பல பகுதிகளிலுமிருந்து 18 பெரிய சாக்கடைக் கால்வாய்கள் யமுனை நதியில் வந்து சேருகின்றன. யமுனையில் உள்ள ஆக்சிஜனில் பெரும்பகுதியை இந்தக் கழிவுகள் காலி செய்து விடுகின்றன. இந்த தண்ணீரால் விலங்குகளைக் கூட கழுவிவிடக்கூடாது என்று தில்லி நிர்வாகம் சொல்லும் அளவுக்கு நதியின் நச்சுத்தன்மை அதிகரித்துள்ளது.


மேலும் ஒன்பது விழுக்காடு மாசு என்பது தில்லியைத் தாண்டியவுடன் ஆக்ராவில் நடக்கிறது. இந்த யமுனைக்கரையில்தான் உலகக் புகழ்பெற்ற தாஜ்மகால் அமைக்கப்பட்டுள்ளது. யமுனையின் தாக்கம் அதோடு நின்று விடுவதில்லை. மற்றொரு புனித நதி என்று அழைக்கப்படும் கங்கையில் கலந்து அதை மேலும் மாசுபடுத்தி விடுகிறது. தில்லியின் குடிநீர்த் தேவையை யமுனைதான் பூர்த்தி செய்து வருகிறது. ஆனால் தேவைப்படும் நீரை தலைநகருக்குள் நுழைவதற்கு முன்பே எடுத்துக் கொள்கிறார்கள். தலைநகருக்குள் இருக்கும் பல்வேறு சுத்திகரிப்பு நிலையங்களும் சரியாக வேலை செய்யவில்லை. இது மாசுபடுதலை அதிகரித்துவிடும் என்பதுதான் சுற்றுச்சூழல் வல்லுநர்களின் கருத்தாகும்.


தலைநகரில் வீடில்லாமல் தவிப்பவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. குளிர் தாங்காமல் வீடில்லாத ஏழை மக்கள் உயிரிழக்கிறார்கள் என்பதால்தான் அந்த உத்தரவு இடப்பட்டது. அவர்களின் பெரும்பாலானவர்கள் இந்த யமுனை நதிக்கரையில்தான் தங்குகிறார்கள். மாசுபடிந்து கிடக்கும் யமுனைதான் அவர்களுக்கு குளியலறை மற்றும் குடிநீர்த்தொட்டி. அவர்களைப் பொறுத்தவரை தண்ணீரே இல்லாமல் இருப்பதைவிட நாறிப்போயிருக்கும் தண்ணீரே பரவாயில்லை என்பதுதான் நிலை. தில்லியைத் தாண்டிய பிறகு யமுனை பாய்ந்து ஓடும் அனைத்து மாநிலங்களுக்கும் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. நதியைச் சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்ட பணம் எல்லாம் எங்கு சென்றது என்பதே தெரியவில்லை. நம்முன் அதிகமாக மாசுபட்டு நிற்கும் யமுனையே அதற்கு சாட்சி என்கிறார் விமலேந்து ஜா.

Sunday, March 14, 2010

ஓ... மகசீயா.. ஓ.. மகசீயா...


தமிழ்ப்படம்


படத்தின் நாயகர் அழகிரி அடிக்கடி "தமிழ்... தமிழ்" என்று சொல்லியவாறு வலம் வருகிறார். "ஓ.. மகசீயா" பாடலை அவர் பாடும்போது பன்மொழிப்புலவரைப் போன்ற ஒரு பெருமிதம் முகத்தில் தெரிகிறது. பல பாத்திரங்களை ஒரே படத்தில் கொடுக்க முனைந்திருக்கிறார். இடைத்தேர்தல்கள் அடிக்கடி வருவதால் வாக்கு வித்தியாசங்களைக் கணக்கிட நிரந்தரமாக ஒரு கால்குலேட்டரை பாக்கெட்டிலேயே வைத்திருப்பது அபாரம். 2011 தேர்தலுக்குப்பிறகு அவர்கள் இருக்க மாட்டார்கள், இவர்கள் இருக்க மாட்டார்கள் என்று படம் முழுவதும் சொல்லிக் கொண்டே இருக்கிறார். தில்லிக்கு விமானம் ஏறும் சோகக்காட்சிகளிலும் வெளுத்து வாங்குகிறார்.

**********

விண்ணைத் தாண்டி வருவாயா?

விலைவாசியைச் சுற்றிதான் கதை வளைய வருகிறது. எந்த பொருளின் விலை அதிவேகமாக ஏறுகிறது என்று போட்டி நடப்பது போன்ற காட்சிகள் நகைச்சுவைக் காட்சிகளாக வைக்கப்பட்டிருந்தாலும், பார்ப்பவர்களின் வயிறையும் எரியச் செய்கிறது. துணைக்கதையாக, முரளிதியோரா, பிரணாப் காட்சிகள். இவர்தான் எண்ணெய் விலையை ஏற்றப்போகிறார் என்று எல்லோரும் தியோராவையேப் பார்த்துக் கொண்டிருக்கும்போது பிரணாப் அதிரடியாக விலையை ஏற்றும் காட்சி திகில்தான். தியோராவை நம்பி வசனம் பேசிய துணை நடிகர்களான கருணாநிதி மற்றும் மம்தா ஆகியோர் முழிக்கும் காட்சி சிரிப்பூட்டுகிறது.

**********

தீராத விளையாட்டுப்பிள்ளை

சண்டைக்காட்சிகள் அதிகமாக இடம் பெற்றுள்ளன. ஆன்டி-ஹீரோ என்பார்களே... அதாவது வில்லன்தான் கதைக்கு நாயகன். அதுதான் இந்தப்படம். அப்பாவிகளாகப் பார்த்து வில்லன் கூட்டம் போட்டுத்தள்ளுகிறது. கதாநாயகன் கிஷன்ஜியோ, கொலைகளை இயக்குகிறார். தொலைபேசிகளில் பேசுகிறார். "93 கொலைகளை செய்துள்ளேன். ஆனால் நான் மென்மையானவன்" என்று அவர் சொல்லும்போது தோளில் சாய்ந்திருக்கும் துப்பாக்கி நக்கலாக சிரிப்பதாக இருக்கும் கிராபிக்ஸ் காட்சி அபாரம். 25ஆம் தேதி முதல் நாங்கள் இரண்டு நாட்களுக்கு சண்டையை நிறுத்துகிறோம் என்று 29 ஆம் தேதி அவர் சொல்வதாக அமைந்துள்ள காட்சி தியேட்டரையே சிரிப்பலையில் ஆழ்த்துகிறது. படத்தின் இசைக்கு மம்தா பானர்ஜி பொறுப்பேற்றுள்ளார்.

**************
அசல்
யார் அசல் என்பதைக் கண்டுபிடிக்க படத்தைப் பார்ப்பவர்களுக்கு போட்டி வைத்து விடுகிறார்கள். மகளிருக்கு 33 விழுக்காடு மசோதா வருகிறது. இதற்கு யார் எதிரி என்பதுதான் கதை. சரத் யாதவ் தலைமறைவே ஆகி விடுகிறார். லாலு, முலயாம் ஆகியோர் வெளிப்படையாகவே மிரட்டுகிறார்கள். இவர்கள்தான் எதிரி என்று முடிவுக்கு வருவதற்குள் மசோதாவைக் கொண்டு வந்தவரே, வந்த வேகத்தில் திரும்பவும் ஓடிவிடுகிறார். ஓஹோ... இவர்கள்தான் எதிரிகள் என்பதற்குள், காட்சி மாறுகிறது. அப்பாடா... அவர்களே திரும்ப ஓடி விட்டார்கள் என்று நெஞ்சைத் தடவியவாறு நிற்கிறார் அருண் ஜெட்லி. கடைசிக்காட்சியில், வாருங்கள் பேசுவோம் என்று லாலு, முலயாம் ஆகியோரின் தோள்கள் மீது கைகளைப் போட்டவாறு அழைத்துச் செல்கிறார் மன்மோகன்சிங். மகிழ்ச்சிகரமான முடிவை வைக்கவேண்டிய கட்டாயம் இயக்குநர் சோனியா காந்திக்கு இருந்திருக்கிறது என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது.
************
குரு சிஷ்யன்

குருவாக அத்வானியும், சிஷ்யராக நரேந்திர மோடியும் நடித்துள்ளனர். இப்ப மாநிலத்துக்குள்ளயே அடக்கி வாசிக்குற மாதிரி, நான் பொறுப்புல இருந்தப்ப இருந்துருக்கலாமேன்னு மோடியைப் பார்த்து அத்வானி கேட்பதுபோல படம் துவங்குகிறது. அனல் பறக்கும் வசனங்கள் படத்தில் உள்ளன. நான் இல்லேனா நீங்க எம்.பி.கூட கிடையாதுன்னு குருவைப் பார்த்து சொல்லும்போது சிஷ்யரின் முகத்தில் ஆக்ரோசம். அந்த காட்சியில் மோடியின் தயவில் எம்.பி. பதவி பெற்ற மற்றொருவரான அருண் ஜெட்லியைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறார் சுஷ்மா சுவராஜ். இதைப்பற்றி யோசிக்காமல் கோட்லா மைதானம் பற்றிய கவலையில் இருக்கிறார் அருண் ஜெட்லி. இடையிடையே நகைச்சுவைக் காட்சிகள். நான் குருவும் இல்ல...எனக்கு சிஷ்யனும் இல்லனு சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசும் நிதின் கட்காரி கலகலப்பூட்டுகிறார்.
***********

Wednesday, March 10, 2010

தேங்கிய வழக்குகளை தீர்க்க 320 ஆண்டுகள்...!!


தற்போதுள்ள நிலையில் நாடு முழுவதும் தேங்கிக்கிடக்கும் வழக்குகளைத் தீர்க்க இந்திய நீதித்துறைக்கு 320 ஆண்டுகள் ஆகும் என்று ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதி வி.வி.எஸ்.ராவ் கூறியுள்ளார்.

உயர்நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளையும் சேர்த்து நாடு முழுவதுமுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் 3 கோடியே 12 லட்சத்து 80 ஆயிரம் வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன. குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படாமலும், அப்பாவிகளுக்கு நீதி கிடைக்காமலும், கிடைக்க வேண்டிய தண்டனையை விட கூடுதல் தண்டனை அனுபவிப்பதும் தொடர்கதைகளாகி உள்ளன. ஆந்திரப் பிரதேச நிர்வாகத் தீர்ப்பாயக் கூட்டமொன்றில் பேசிய வி.வி.எஸ்.ராவ், இந்திய நீதித்துறையில் தேங்கிக் கிடக்கும் அனைத்து வழக்குகளையும் நாம் கணக்கில் எடுத்துக் கொண்டால், நாட்டிலுள்ள ஒவ்வொரு நீதிபதியின் வசமும் சராசரியாக 2 ஆயிரத்து 147 வழக்குகள் இருக்கும் என்கிறார். இந்த சராசரி ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளன.

இதற்குப் பிரதான காரணம், அனைத்துத்துறைகளிலும் சொல்லப்படும் ஆட்பற்றாக்குறை என்ற அதே காரணம்தான். அரசால் ஒப்புதல் தரப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 641 ஆகும். இதில் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையான 630 என்பதும் அடங்கும். ஆனால் தற்போது வெறும் 14 ஆயிரத்து 576 நீதிபதிகள்தான் உள்ளனர். பத்து லட்சம் பேருக்கு 10.5 நீதிபதிகள் என்கிற முறையில் நாட்டின் நீதித்துறையின் நிலைமை உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி வி.வி.எஸ்.ராவ், 2002 ஆம் ஆண்டிலேயே இது குறித்து உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. பத்து லட்சம் பேருக்கு 50 நீதிபதிகள் என்பதே சரியாக இருக்கும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது என்கிறார்.

மேலும் பேசிய அவர், 2030 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 150 கோடியாகவோ அல்லது 170 கோடியாகவே இருக்கும். பத்து லட்சம் பேருக்கு 50 நீதிபதிகள் என்பது அப்போது நிறைவேறினால் நீதிபதிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரமாக உயர்ந்துவிடும். ஆனால் அவர்கள் கைவசமோ 30 கோடி வழக்குகளுக்கு மேல் இருக்கும். எழுத்தறிவு விகிதம் மற்றும் விழிப்புணர்வு அதிகரிப்பதால் வழக்குகளும் அதிகரித்து வருகின்றன என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. கேரளாவை இதற்கு எடுத்துக்காட்டாகக் காட்டலாம். மக்கள் தொகையின் ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் சராசரியாக 28 புதிய வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் பதிவாகி வருகின்றன என்று குறிப்பிட்டார்.

Sunday, March 7, 2010

எதிரலையில் சிக்கிய மக்கள் டிவி!


அடித்து நொறுக்கப்பட்ட தீக்கதிர் வாகனம்.


பாட்டாளி மக்கள் கட்சியின் தொலைக்காட்சியான மக்கள் டிவி தோழர் உ.ரா.வரதராசன் மரணம் தொடர்பாக அவதூறான செய்தியை வெளியிட்டது. ஜனநாயக முறையில் அந்த அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்யச் சென்ற தோழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையெல்லாம் கூறாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மக்கள் தொலைக்காட்சி மீது தாக்குதல் என்று மட்டும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். மக்கள் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. எந்த பத்திரிகை தர்மத்தை மதிக்காமல் அவதூறு செய்தியை மக்கள் தொலைக்காட்சி வெளியிட்டதோ, அந்த அணுகுமுறை அடுத்த நாள் நடந்த சம்பவங்கள் பற்றிய செய்தியிலும் இருந்தது.


மக்களிடம் ஒரு தங்களுக்கு சாதகமான கருத்தை உருவாக்கும் முயற்சியாக தொலைபேசியில் மக்களிடம் கருத்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். இவையெல்லாம் நேரலை என்று ஒளிபரப்பினார்கள். வன்முறை பற்றி ஒரு நேயர் பேச ஆரம்பித்தார். எந்த அரசியல் கட்சியும் இப்படி செய்யக்கூடாது.. வன்முறை எந்த வடிவில் இருந்தாலும் அதை அனுமதிக்கக்கூடாது என்று சொல்லிக்கொண்டிருந்தார். இவர் இப்படியே பேசினால் நேயர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நினைவு வந்துவிடக்கூடாது என்பதற்காக, நிகழ்ச்சியைத் தொகுத்துக் கொண்டிருந்தவர், இப்படி மார்க்சிஸ்ட் கட்சி செய்திருக்கக்கூடாது என்கிறீர்களா... என்று தலையை நுழைக்கிறார்.


மற்றொரு நேயரோ, "ஆயுதம் ஏந்துனா மாவோயிஸ்டு, கீழே போட்டா மார்க்சிஸ்டு" என்று பஞ்ச் டயலாக் விட்டார். அதன்பிறகு, மாவோயிஸ்டுகளைப் பற்றியே கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருந்தார். மாவோயிஸ்டுகளை வளரவிடவே கூடாது என்று அவர் கூறியபோது சலித்துப் போன தொகுப்பாளர் அடுத்த நேயரின் அழைப்பை எதிர்நோக்கத் துவங்கினார்.


காங்கிரசைச் சேர்ந்த இதயத்துல்லா பேசுகையில், இதை மார்க்சிஸ்ட் கட்சியினர் செய்திருக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டார். அவரது வாயில் வார்த்தைகளைத் திணிக்க தொகுப்பாளர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில்தான் முடிந்தது. சில நேயர்கள் ஏதோ சொல்லிக்கொடுத்ததை மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போல எந்திரமாகப் பேசினார்கள். சிலர் பிருந்தா காரத் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று சம்பந்தா, சம்பந்தமில்லாமல் பேசினார்கள். இதற்கிடையில், ஜனநாயகத்தை அணைத்து உச்சி முகர்ந்து கொஞ்சும் இந்து முன்னணி போன்ற அமைப்பினர் வன்முறை பற்றி வியாக்கியானம் செய்தார்கள்.


சுவாரஸ்மான நிகழ்ச்சி இருக்க வேண்டுமே? ஒரு பெண்ணின் பேட்டி இடையில் ஒளிபரப்பாகியது. மக்கள் தொலைக்காட்சி அலுவலகத்தில் வரவேற்பாளராகப் பணியாற்றுகிறார். "திடீரென்று சிலர் உள்ளே நுழைந்தார்கள். நான் பதற்றமாயிட்டேன். இன்னும் எனக்கு பட, படன்னு இருக்கு" என்று அவர் குறிப்பிட்டார். அடுத்து திரையில் தோன்றும் தொகுப்பாளர், "படுகாயமடைந்துள்ள பெண் ஊழியரின் பேட்டி அது" என்கிறார். அவர் படுகாயமடைந்ததாக இவர்கள் தொலைக்காட்சியே கூட காட்டவில்லை.
அடுத்து துவங்கியது சிறப்பு அழைப்பாளர்களின் சிறப்பு கருத்துகள். நேரலை என்றுதான் போட்டார்கள். புதிய தலைமுறை ஆசிரியர் மாலன் மற்றும் வெப்துனியா ஆசிரியர் அய்யநாதன் ஆகிய இருவரையும் தொகுப்பாளர் வரவேற்கிறார். மாலன் கருத்து தெரிவிக்கிறார். கருத்து மாறுபடுவதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு என்கிறார். கொலை செய்யப்பட்டார் என்ற பொய்யான தகவலை செய்தியாக்கியதோடு, கட்சியின் ஒருபகுதியினர்தான் அந்தக் கொலைக்கு காரணம் என்று ஒளிபரப்பியதா கருத்து மாறுபாடு?


அவர் அதோடு நிற்கவில்லை. ஊடகவியலாளர்களும் மனிதர்கள்தான். அவர்கள் தவறு செய்யமாட்டார்கள் என்று சொல்ல முடியாது என்று கூறத் துவங்கினார். மக்கள் தொலைக்காட்சி செய்தியே தவறு என்று கூறிவிடுவாரோ என்று பயந்த தொகுப்பாளர், வெப்துனியா அய்யநாதனிடம் பேசத்துவங்குகிறார். துவங்கும்போதே, நான் முன்பே கூறியபடி.. என்கிறார் அய்யநாதன். நேரலையாக நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அப்போதுதான் அவர் வந்து அமர்ந்ததாகக் காட்டினார்கள். அப்புறம் எப்படி "நான் முன்பே கூறியபடி" என்று கூறுகிறார்? அப்படியால் அவர் முன்பே பேசியது வெட்டப்பட்டு விட்டதா? அந்த வெட்டப்பட்ட பகுதியில் அவர் என்ன பேசினார்? நேரலையில் எதிரலை அடித்துவிட்டதா?இந்த இருவரிடமும் பேசிக் கொண்டிருந்தபோதுதான் தொகுப்பாளர் தங்கள் தொலைக்காட்சி சார்பாக அந்தர் பல்டி ஒன்றை அடித்தார். மக்கள் மத்தியில் நிலவிய சந்தேகங்களை செய்தியாக்கினோம் என்றார். செய்தி வாசிக்கும்போது இப்படிச் சொல்லவில்லையே? உடற்கூறு அறிக்கை என்றல்லவா கூறினீர்கள்? காவல்துறை அதை மறுத்துள்ளதே? அந்த மறுப்பு செய்தியையாவது நீங்கள் ஒளிபரப்பியிருக்க வேண்டுமே...


தாக்குதலுக்கு கடுமையான கண்டன அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருக்கிறார். அதில் செய்தி ஆசிரியரிடம் சிபிஎம் மாநிலச்செயலாளர் பேசியதாகவும்(அவ்வாறு அவர் பேசவில்லை என்பது ஒருபுறம்), மறுப்பு அறிக்கை வெளியிட செய்தி ஆசிரியர் ஒப்புக் கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளார். வெறுப்புணர்வைக் கிளப்பிக் கொண்டிருந்த தொகுப்பாளரிடம் இதைச் சொல்லியிருக்கலாமே...??


மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுவின் அலுவலகத்திற்குள்ளேயே புகுந்து தாக்கி அட்டுழியம் செய்துள்ளார்களே... பொதுவுடமை இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரான தோழர்.பி.ராமமூர்த்தியின் படத்தையும் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தைத் தாக்கியவர்கள் விட்டுவைக்கவில்லை. எதையும் தயங்காமல் செய்தி வெளியிடும் மக்கள் தொலைக்காட்சி என்று சொல்லிக் கொள்பவர்கள், அதை செய்தியாக்கி வெளியிட்டீர்களா... அவர்கள்தான் உங்களைப் பின்னாலிருந்து இயக்குபவர்கள் என்பதால் பத்திரிகை தர்மத்தை காவு கொடுத்து விட்டீர்களா..??


நேரலையில் எதிரலைகள்தான் கிடைக்கும் என்பதால்தான் கடையை சீக்கிரமே இழுத்து மூடிவிட்டு கிளம்பி விட்டீர்களா? மக்கள் சந்தேகங்களை வைத்து செய்தியாக்கினீர்களே... இதோ, இந்த சந்தேகங்களை வைத்து செய்தியாக்குங்கள் பார்க்கலாம்..

* சந்தேகங்களை செய்தியாக்கிய நீங்கள், ஏதோ துப்பறிவு நிறுவனம் போலல்லவா செய்தியை வெளியிட்டீர்கள்... ஏன்?


* ஒருமுறையல்ல, இருமுறை செய்தி ஒளிபரப்பினீர்கள். இதில் பொதுவான நிகழ்ச்சிகளுக்கிடையில் விளம்பரம் வேறு. சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்ற குறைந்தபட்ச பத்திரிகை தர்மம் இல்லையே... ஏன்..?


* உங்கள் செய்தியை மறுநாள் காலையில் கூட வேறு எந்த ஊடகமும் வெளியிடவில்லையே... அது ஏன்?


* காவல்துறையின் மறுப்பு வந்தபிறகும் எதுவும் நடக்காததுபோல் இருந்தது ஏன்?


* பிரச்சனை ஆனவுடன் மக்கள் மத்தியில் நிலவும் சந்தேகத்தைதான் செய்தியாக வெளியிட்டோம் என்று தொகுப்பாளர் மூலம் பல்டியடித்தது ஏன்?

* இதெல்லாம் இருக்கட்டும், கட்சி அலுவலகத்தின் முன் நின்ற தீக்கதிர் வாகனத்தை அடித்து நொறுக்கியிருக்கிறார்களே? அது பத்திரிக்கை சுதந்திரத்துக்கு எதிரானதா... இல்லையா??


கேள்விகளை தொடுத்துக் கொண்டே போகலாம். சிறப்புச் செய்தியாக்குவீர்களா?


- சந்தேகம் சாமிக்கண்ணு

Saturday, March 6, 2010

குஜராத் நிலைமை தெரியுமா?



அமிதாப் பச்சனுக்கு மல்லிகா சாராபாய்

திறந்த மடல்


எனதருமை பச்சன்ஜி,


குஜராத்தி என்ற முறையில் வாழ்த்துகிறேன். நீங்கள் உண்மையிலேயே ஒரு அற்புதமான நடிகர். நீங்கள் அறிவுகூர்ந்தவர். புத்திசாலித்தனமான வர்த்தகர். ஆனால் எந்தப் பொருளை வாங்க வேண்டுமென்று நீங்கள் விளம்பரங்களில் சொல்கிறீர்ளோ, அதை நான் நம்ப வேண்டுமா? உங்களுக்கு எதிலெல்லாம் நம்பிக்கை இருக்கிறது என்பதைப் பார்க்கலாமா?(பெரும் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவ்வாறு சொல்வதாக இருந்தாலும்..!). பிபிஎல், ஐசிஐசிஐ, பார்க்கர் மற்றும் லக்சர் பேனாக்கள், மாருதி வெர்சா, காட்பரி சாக்கலேட்டுகள், நெரோலக் பெயிண்ட்ஸ், டாபர், இமாமி, எவரெடி, சஹாரா சிட்டி ஹோம்ஸ், டிஙடமாஸ், பினானி சிமெண்ட் மற்றும் ரிலையன்ஸ். இதுதான் அந்தப் பட்டியல். தற்போது குஜராத்.


உங்கள் வீடு பினானி சிமெண்டால் கட்டப்பட்டதா? காட்பரி சாக்கலேட்டோ அல்லது டாபர் நிறுவனத்தின் ஹாஜ்மோலாவையோ உண்மையிலேயே நீங்கள் விரும்புகிறீர்களா? எந்தப் பேனாவை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்? விளம்பரத்துக்கான படப்பிடிப்பு நேரத்தைத் தவிர, வேறு சமயத்தில் மாருதி வெர்சா காரை ஓட்டியதுண்டா? வீட்டிற்காக வாங்கச் சொல்லும் நெரோலக் பெயிண்டில் ஈயம் இருக்கிறது. அது உங்களையும், மற்ற பலரையும் கொஞ்சமாக, கொஞ்சமாக விஷமேற்றி விடும் என்பதை நீங்கள் அறிவீர்களா?(உங்கள் வீட்டில் அந்த பெயிண்டைதானே பயன்படுத்துகிறீர்கள்..?). இல்லையென்றால், வெறும் பணத்துக்காகத்தான் இந்த விளம்பரங்களில் தோன்றுகிறீர்களா?


ஆனால் எந்தவித நேரடியான வருமானத்தையும் பெற்றுக்கொள்ளாமல் குஜராத்தை முன்னிறுத்த ஒப்புக்கொண்டீர்கள்? பிராண்ட் குஜராத்தை முன்னிறுத்தும் முடிவுக்கு எப்படி சரி என்று சொன்னீர்கள்? மாநிலத்தின் நிலை என்ன என்பதை கேட்டீர்களா? எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இந்த முடிவும், அறிவிப்பும் ஒரே ஒரு சந்திப்பிற்குப் பிறகு வெளிவந்தது. அதனால்தான் குஜராத்தில் உள்ள நிலைமை பற்றி நீங்கள் கவனமாகப் பார்த்திருக்க மாட்டீர்கள் என்று நான் சந்தேகப்படுகிறேன்.


அதனால் குஜராத்தி என்ற முறையில், எனது மாநிலத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்த அனுமதி கொடுங்கள். துடிப்பான குஜராத் என்ற பெயரில் கடந்த இரண்டாண்டுகளாக நடத்தப்பட்டு வரும் விழாக்களின் மூலம் லட்சக்கணக்கான கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்று அனைவருக்குமே தெரியும். ஆனால் இந்த ஒப்பந்தத்தைத் தாண்டி அடுத்த கட்டத்தை வெறும் 23 விழுக்காடு ஒப்பந்தங்கள்தான் அடைகின்றன என்பதை குஜராத் அரசே ஒப்புக்கொண்டுள்ளதை நீங்கள் அறிவீர்களா? பெரும் பணம் படைத்த வணிக நிறுவனங்களுக்கு எக்கச்சக்கமான மானியங்கள் அள்ளி வழங்கப்படுகின்ற வேளையில், 75 ஆயிரம் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் மூடப்பட்டு, அதனால் 10 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர் என்பது தெரியுமா?


குஜராத்தை வளப்படுத்த பெரும் முதலாளிகள் வரிசையாக நிற்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். யாரை வளப்படுத்த? நமது ஏழைகள் பரம ஏழைகளாக மாறி வருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? 1993 முதல் 2005 வரையில் வறுமைக்குறைப்பில் அகில இந்திய சராசரி 8.5 விழுக்காடாகும். ஆனால் குஜராத்தில் அது வெறும் 2.8 விழுக்காடு மட்டும்தான். குடும்பத்தலைவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த விவசாயக்குடும்பமே குஜராத்தில் தற்கொலை செய்து கொள்கிறது.


நர்மதா திட்டத்தில் 29 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டுள்ளார்கள். இதுவரை 29 விழுக்காடு பணிதான் நடந்துள்ளது. அதிலும் கட்டுமானப் பணியின் தரம் மிக மோசம். கடந்த ஒன்பது ஆண்டுகளில் 308 இடங்களில் உடைப்பு(எந்த சிமெண்டில் கட்டினார்கள் என்பது உங்களுக்கு ஒருவேளை தெரிந்திருக்கலாம்..!!) ஏற்பட்டது. லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டார்கள். உப்பளங்களில் இருந்து உப்பு அடித்துச் செல்லப்பட்டது. 1999ல் 4 ஆயிரத்து 743 குஜராத் கிராமங்கள் குடிநீர் கிடைக்காமல் இருந்தன. இரண்டே ஆண்டுகளில் அது 11 ஆயிரத்து 390 ஆக உயர்ந்தது.


குஜராத்தின் தலைமை நிர்வாகியாக சித்தரிக்கப்படும் எங்கள் முதல்வரின் தலைமையில் கடனாளிகளின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளோம். 2001 ஆம் ஆண்டில் மாநிலத்தின் மீதான கடன் 14 ஆயிரம் கோடியாக இருந்தது. இப்போது 1 லட்சத்து 5 ஆயிரம் கோடியாகிவிட்டது. இந்தக்கடனைத் தீர்க்க ஒவ்வொரு ஆண்டும் 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்கிறோம். இது எங்கள் மாநில பட்ஜெட்டில் 25 விழுக்காடாகும்.


இதற்கிடையில், கல்வித்துறையில் சரிவு. ஏழைகளுக்காக புதிதாக எந்த அரசு மருத்துவமனையும் கட்டப்படவில்லை. மீனவர்கள் பிச்சைக்காரர்களாக மாறி வருகிறார்கள். பிரசவத்தின்போது இறக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு பாலியல் பலாத்காரம், பெண்கள் மீது ஒரு நாளைக்கு சராசரியாக 17 தாக்குதல்கள், கடந்த பத்தாண்டுகளில் 8 ஆயிரத்து 802 தற்கொலைகள் மற்றும் "விபத்தால்" 18 ஆயிரத்து 152 பெண்கள் மரணம் என்ற புள்ளிவிபரங்கள் அனைத்தும் அதிகாரபூர்வமாக அரசால் தரப்பட்டுள்ளதாகும். உண்மையான விபரம் எவ்வளவு என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.


சோமநாத் கோவிலும், காந்தியும் தன்னை ஊக்குவித்ததாக நீங்கள் கூறியுள்ளீர்கள். சோம்நாத் கோவில் மக்களுக்காகக் கட்டப்பட்டது. காந்தியும் மக்களோடு மக்களாக இருந்தவர். உங்களுக்கு உண்மையிலேயே இந்த மாநில மக்கள் மீது அக்கறை இருக்கிறதா? இருந்தால் உங்கள் முடிவு வேறுமாதிரியாக இருந்திருக்கும். இக்கடிதத்தை படித்து முடிவெடுப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.


- மல்லிகா சாராபாய்

Friday, March 5, 2010

கடைசி இடமே நமது இலக்கு!



தங்கள் பொருளாதார அணுகுமுறையில் புதுமைகளைக் கடைப்பிடிப்பதில் இந்தியா 56வது இடத்திற்கு இறங்கிவிட்டது என்று இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்திய ஆய்வு கூறுகிறது. கடந்த ஆண்டு 41வது இடத்தில் இந்தியா இருந்திருக்கிறது.


சுமார் 130 நாடுகளை வரிசைப்படுத்தியிருக்கிறார்கள். ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை, இந்தோனேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை இந்தியா பின்னுக்குத்தள்ளிவிட்டது. முதல் பத்து இடங்களில் சீனாவின் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரும் உள்ளன. முதல் ஐந்து இடங்களில் சீனாவின் ஹாங்காங் இடம் பிடித்துள்ளது.


இந்த ஆய்வு உலக வங்கி, உலகப் பொருளாதார மாமன்றம், சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் ஆகியவற்றில் உள்ள விபரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் முதலிடத்தில் ஐஸ்லாந்து இடம் பெற்றிருப்பது ஒட்டுமொத்த ஆய்வையே கேள்விக்குறியாக்கியுள்ளது.


அமெரிக்காவில் துவங்கி, சர்வதேச அளவில் நெருக்கடியாக மாறிய பொருளாதார சிக்கலால் ஐஸ்லாந்து நாடே திவாலானது. ஒட்டுமொத்த நாடே திவாலாகும் அணுகுமுறைதான் உலகிலேயே சிறந்த அணுகுமுறை என்று ஆய்வு கருதினால் தரவரிசையை மேலிருந்து பார்க்க வேண்டுமா அல்லது கீழிருந்து பார்க்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.


வங்கிகள் திவாலில் இரட்டை சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் அமெரிக்கா 11வது இடத்தில் இருக்கிறது. அரசுக்கட்டுப்பாட்டில் நிதித்துறையை வைத்திருந்ததால் நெருக்கடியில் சிக்காமல் தப்பிப்பிழைத்த சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் புதுமையைக் கடைப்பிடிக்கவில்லையாம்.


அபாயப் பாதையில் அழைத்துச் செல்வதுதான் புதுமை என்று இவர்கள் கருதினால், நம்மைப் போன்ற வளரும் நாடுகளுக்கு புதுமையே அவசியமில்லை. இவர்களின் தரவரிசையில் கடைசி இடத்தைப் பிடிப்பதற்கான முயற்சியில்தான் ஈடுபட வேண்டும்.

Thursday, February 25, 2010

தோழர் உ.ரா.வரதராசனின் துயர மரணம்!


தோழர் உ.ரா.வரதராசன் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்திருப்பது, ஒட்டுமொத்த கட்சியையும் விரிந்து பரந்த தொழிற்சங்கத்தின் ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. டபிள்யுஆர்வி என்று பிரபலமாக அறியப்பட்ட, அவர் ஒரு ஆற்றல் மிக்க தொழிற்சங்கத் தலைவர். சிஐடியு அகில இந்திய செயலாளர்களில் ஒருவர். பிப்ரவரியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் வரையிலும் அவர் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வந்தார். தமிழக சட்டப்பேரவையில் ஒருமுறை உறுப்பினராக பணியாற்றியுள்ள அவர் மிகச்சிறந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளர்.


பிப்ரவரியில் நடைபெற்ற கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில் உ.ரா.வரதராசன் மீது கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு பரிந்துரையின் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கட்சியின் தேர்வு செய்யப்பட்ட பொறுப்புகளிலிருந்து அவரை நீக்குவது என்ற முடிவின் அடிப்படையில் கட்சியின் மத்தியக்குழு மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இதற்குப் பிறகு உ.ரா.வரதராசன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிப்ரவரி 11ந்தேதி இரவு இது நடந்திருக்கலாம். தமிழகத்தில் கட்சியின் வளர்ச்சிக்கும், தொழிற்சங்க இயக்கத்துக்கும் மிக முக்கியமான பங்களிப்பினை செய்த, பல்வேறு ஆற்றல்களைக் கொண்ட ஒரு தோழரின் இந்தத் துயரமான முடிவு கட்சிக்குள்ளும், அவரோடு இணைந்து பணியாற்றிய நம் அனைவருக்கும் மிகப்பெரிய துயரத்தை அளித்துள்ளது.


அவர் மரணமடைந்த விதமானது கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியிலும் ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளது இயல்பான ஒன்றே. ஆனால் இந்த துயரார்ந்த நிகழ்வை ஒரு பகுதி ஊடகத்தினர், உண்மையின் ஒரு பகுதியை மட்டும் கூறுவது விஷயத்தை திரித்துக் கூறுவது, அடிப்படையற்ற ஊகங்களை எழுப்புவது என்ற முறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான தாக்குதலுக்கு பயன்படுத்தி வருவது மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்த நிலையில் உ.ரா.வரதராசன் மீதான ஒழுங்கு நடவடிக்கை, எப்படி, ஏன் எடுக்கப்பட்டது என்பது தொடர்பான விபரங்களை விளக்குவது அவசியம் என்று கட்சியின் அரசியல் தலைமைக்குழு கருதுகிறது.


உ.ரா.வரதராசன் பாலியல் ரீதியாக தொல்லை தருகிறார் என்று பெண் ஒருவரிடமிருந்து கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவுக்கு புகார் வந்தது. 2009ம் ஆண்டு செப்டம்பரில் இந்த புகார் வந்தது. புகாருக்கு உள்ளாகியிருப்பவர் ஒரு மாநிலக்குழு உறுப்பினர் என்பதால் கட்சியின் நடைமுறை விதிப்படி, மூன்று நபர் கொண்ட விசாரணைக்குழு அமைப்பது என மாநிலக்குழு முடிவு செய்தது. இந்த விசாரணைக்குழுவில் இடம்பெற்ற மூவருமே மாநிலக்குழு உறுப்பினர்கள். அவர்களில் ஒருவராக இடம்பெற்றிருந்த மத்தியக்குழு உறுப்பினர் கன்வீனராக செயல்பட்டார். மற்றொரு உறுப்பினர் மாநில செயற்குழு உறுப்பினர்.


விசாரணைக்குப் பிறகு அந்தக்குழுவின் அறிக்கை 2009 நவம்பர் 25ந்தேதி நடைபெற்ற மாநிலக்குழு கூட்டத்தில் பரிசீலனைக்காக முன் வைக்கப்பட்டது. விசாரணை அறிக்கையில் கூறப்பட்டிருந்த அம்சங்களின் அடிப்படையில், உ.ரா.வரதராசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில செயற்குழு பரிந்துரைத்தது. ஒரு மாநிலக்குழு உறுப்பினர் என்ற அடிப்படையில், உ.ரா.வரதராசன் தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிப்பதற்கான வாய்ப்பு கட்சி நடைமுறையின்படி மாநிலக்குழு கூட்டத்தில் அவருக்கு வழங்கப்பட்டது. விவாதத்திற்கு பிறகு விசாரணைக்குழுவின் கண்டறிதல்களை மாநிலக்குழு ஏற்றுக்கொண்டதோடு உ.ரா.வரதராசன், கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.


உ.ரா.வரதராசன் கட்சியின் உயர்நிலைக்குழுவான மத்தியக்குழுவில் அங்கம் வகித்த நிலையில், கட்சியின் மாநிலக்குழு முடிவு எடுக்க இயலாது. கட்சி விதிகளின்படி, மாநிலக்குழு தனது கண்டறிதல்கள் மற்றும் பரிந்துரைகளை நடவடிக்கைக்காக மத்தியக்குழுவிற்கு அனுப்பியது.கொல்கத்தாவில் 2010 பிப்ரவரி 4-6 தேதிகளில் நடைபெற்ற கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில் இந்த விஷயம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் அறிக்கை மற்றும் தீர்மானம், இந்தப் பிரச்சனை தொடர்பான அனைத்து ஆவணங்கள் மற்றும் உரா.வரதராசன் தனது நிலையை விளக்கி அனுப்பிய கடிதம் ஆகியவை மத்தியக்குழு உறுப்பினர்களிடம் சுற்றுக்கு விடப்பட்டது.


இந்தப்பொருள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது உ.ரா.வரதராசன் தனது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க உரிய வாய்ப்பு வழங்கப்பட்டது. இரண்டு மணி நேர விவாதத்திற்குப்பிறகு ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு மாநிலக்குழுவின் பரிந்துரையை அங்கீகரிப்பது என்று மத்தியக்குழு முடிவு செய்தது. கூட்டத்தில் பங்கேற்ற 74 மத்தியக்குழு உறுப்பினர்களில் யாரும் இந்த ஒழுங்கு நடவடிக்கையை ஆட்சேபிக்கவில்லை. வாக்கெடுப்பின்போது ஐந்து உறுப்பினர்கள், வாக்கெடுப்பில் கலந்து கொள்வதில்லை என்ற தங்கள் கருத்தை பதிவு செய்தனர். மத்தியக்குழுவின் முடிவை ஏற்றுக்கொள்வதாகவும் அதே நேரத்தில் மத்திய கட்டுப்பாட்டுக்குழுவிற்கு மேல்முறையீடு செய்வதற்கான உரிமையை பயன்படுத்தப் போவதாகவும் உ.ரா.வரதராசன் தெரிவித்தார்.


மேற்கூறப்பட்ட வகையில்தான் உரா.வரதராசன் மீதான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை கட்சி உறுப்பினர்கள் நன்றாக அறிவார்கள். ஆனால் ஊடகங்களில், திட்டமிட்ட முறையில் பரப்பப்படும் சில செய்திகளால் உண்மை நிலை திரித்துக்கூறப்படுகிறது.


பரப்பப்படும் அவதூறுகள் மற்றும் அரைகுறையான உண்மைகள் என்ன? உ.ரா.வரதராசன் கட்சியிலிருந்து விரட்டப்பட்டார் என்பது அவதூறுகளில் ஒன்று. உ.ரா.வரதராசன் கட்சியிலிருந்து வெளியேற்றப்படவில்லை. கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்புகளிலிருந்து அவரை நீக்குவது என்ற ஒழுங்கு நடவடிக்கையின் பொருள், பொருத்தமான கட்சிக்குழுவில் அவர் இணைக்கப்படுவார் என்பதுதான். இதைப்பொறுத்தவரை பிப்ரவரி 12ம் தேதி நடைபெற்ற கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுவில் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டு கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழுவில் உ.ரா.வரதராசனை இணைத்துக்கொள்வது என்றும், தொழிற்சங்க அரங்கில் அவருக்கு பணி ஒதுக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த குறிப்பிட்ட ஒழுங்கு நடவடிக்கையின் நோக்கம், அவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்குவது அல்லது வெளியேற்றுவது என்பதல்ல; உ.ரா.வரதராசன், தொடர்ந்து தனக்குள்ள திறனை பயன்படுத்தி கட்சிப்பணியாற்ற வேண்டும் என்பதே. ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட தலைவர்கள் மற்றும் ஊழியர்கள், தொடர்ந்து கட்சிப்பணியாற்றி தங்களது தவறுகளை சரிசெய்து கொண்டு கட்சியின் உயர் பொறுப்புகளுக்கு வந்துள்ளனர் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு.


கட்சி எடுத்த ஒழுங்கு நடவடிக்கைதான் ஒரு கட்சித்தலைவரை தற்கொலை முடிவை நோக்கித் தள்ளியுள்ளது என்று சித்தரிப்பது முற்றிலும் ஆதாரமற்றது மட்டுமல்ல, இந்த துயரமான நிகழ்வை பயன்படுத்தி கட்சியையும் அதன் தலைமையையும் சிறுமைப்படுத்தும் நோக்கம் கொண்டதும் ஆகும். பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் கட்சி நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால், சம்பந்தப்பட்ட பெண் தனது குற்றச்சாட்டுகளை வெளிப்படையாக கூறியிருந்தால் அப்போது இதே ஊடகங்கள், தங்களது கட்சித்தலைவர் மீது ஒரு பெண் கொடுத்த பாலியல் தொல்லை தொடர்பான புகாரை கண்டுகொள்ளவில்லை என்று மார்க்சிஸ்ட் கட்சி மீது தாக்குதல் தொடுத்திருக்கும்.


நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான காரணங்களை விளக்காத நிலையில், கட்சி “புரிந்துகொள்ள முடியாததாக” இருக்கிறது என்றும், இதற்கு முரண்பாடான வகையில் உ.ரா.வரதராசனை “வெளிப்படையாக அவமானப்படுத்தி”விட்டனர் என்றும் கட்சி மீது குற்றம் சாட்டப்படுகிறது. உ.ரா.வரதராசன் கட்சியிலிருந்து வெளியேற்றப்படாத நிலையில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மத்தியக்குழு பகிரங்கமாக வெளிப்படுத்தவில்லை. இதற்குக்காரணம் உ.ரா.வரதராசன், கட்சியில் தரப்படும் பொறுப்பை ஏற்று தனது பணியை ஆற்ற வேண்டும் என்பதே. தன்னுடைய ஊழியர்களை “வெளிப்படையாக அவமதிப்பதில்” மார்க்சிஸ்ட் கட்சிக்கு நம்பிக்கையில்லை. உ.ரா.வரதராசன் தன்னுடைய குறைபாடுகளை சரிசெய்துகொண்டு தொடர்ந்து கட்சிப்பணியாற்ற வேண்டும் என்ற வகையிலேயே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.


கட்சியின் ஸ்தாபனக்கோட்பாடான ஜனநாயக மத்தியத்துவத்தை இழிவுபடுத்துவதற்கும் இந்த நிகழ்வு பயன்படுத்தப்படுகிறது. மத்தியத்துவம் மற்றும் எதேச்சதிகார அடிப்படையிலேயே உ.ரா.வரதராசனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக புனைந்துரைக்கப்படுகிறது. இந்த ஒழுங்கு நடவடிக்கையின்போது மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளே இந்த கூற்றில் உள்ள முரண்பாட்டை வெளிப்படுத்தும். அவர் நேரடியாக பணியாற்றிய மாநிலக்குழுதான் அவர் மீதான புகாரை விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறைகளை துவக்கியது. நடவடிக்கை எடுக்குமாறு மாநிலக்குழு வேண்டுகோள் விடுத்த பிறகுதான் உயர்நிலைக்குழுவான மத்தியக்குழு பிரச்சனையில் தலையிடுகிறது. ஒழுங்கு நடவடிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் எதேச்சதிகாரமாக முடிவெடுக்கக்கூடாது என்ற ஜனநாயக நடைமுறையும் அழுத்தமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. முறையான விசாரணைக்குப்பிறகு சம்பந்தப்பட்ட தோழரை நேரடியாக அழைத்து அவரது கருத்தையும் நேரடியாக கேட்டபிறகே எந்த ஒரு முடிவும் எடுக்கப்படும்.


உ.ரா.வரதராசனுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் கட்சி மேற்கொண்டுள்ள நெறிப்படுத்தும் இயக்கத்தையும் முடிச்சுபோடுவதற்கான முயற்சியும் நடக்கிறது. உ.ரா.வரதராசன் சம்பந்தப்பட்ட விசயத்திற்கும் நெறிப்படுத்தும் இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உண்மையில் மத்தியக்குழு நெறிப்படுத்தும் ஆவணத்தை இறுதி செய்வதற்கு முன்பே, இந்த விசயம் தொடர்பான புகார் வந்துவிட்டது. நெறிப்படுத்தும் இயக்கத்தின் நோக்கம், கட்சிக்குள் நிலவும் தவறான போக்குகளை துல்லியமாகக் கண்டறிந்து அதை சரிசெய்வதே ஆகும். கட்சி உறுப்பினர்கள் மீது தனிப்பட்ட முறையில் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது இதன் நோக்கமல்ல.


தன்னுடைய ஊழியர்களுக்கு குறிப்பாக தங்களுடைய முழு நேரத்தையும் வாழ்க்கையையும் கட்சிப்பணிக்காக ஒப்படைத்துள்ள ஊழியர்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபனம் அதிகபட்ச முன்னுரிமை அளிக்கிறது. தோழர்கள் தவறான நிர்ணயிப்புகளுக்கு வரும்போது அல்லது தவறிழைக்கும்போது, அவருடைய ஒட்டுமொத்த பங்களிப்பையும் கட்சி கவனத்தில் கொள்கிறது. அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை என்பது சம்பந்தப்பட்ட தோழர் தன்னுடைய தவறை சரிசெய்துகொள்ள வேண்டும் என்ற முறையிலேயே அமைந்திருக்கும். இத்தகைய நடைமுறையில் பல்வேறுகட்ட நடவடிக்கைகளுக்குப்பிறகு கடைசி கட்ட நடவடிக்கையாகவே கட்சியிலிருந்து வெளியேற்றுவது என்பது அமையும்.


உ.ரா.வரதராசன் விஷயத்தைப் பொறுத்தவரை அவர் தனது பிரச்சனையிலிருந்து மீண்டுவந்து கட்சிக்கும், இயக்கத்திற்கும் முழுமையாக பணியாற்ற வேண்டும் என்றே கட்சி எதிர்பார்த்தது. ஆனால் அது நடைபெறவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.


-பிரகாஷ்காரத்

Friday, February 19, 2010

வெந்த புண்ணில் பம்பரம் விடுகிறார்கள்!



உணவுப் பொருட்களின் பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. அரசோ இதைக் குறைப்பதற்காக வழிகளைக் கண்டறியாமல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வெந்த புண்ணில் பம்பரம் விடப்பார்க்கிறது. கடந்த ஆண்டிலிருந்து விலையை விட உருளைக்கிழங்கின் விலை 57.67 விழுக்காடு அதிகரித்துள்ளது. உரித்தால் கண்ணீர் வரவழைக்கும் வெங்காயத்தின் விலையைப் பார்த்தாலே கண்ணீர் விட வேண்டியுள்ளது. அரிசியும், கோதுமையும் எங்கே என்னைப் பிடியுங்கள் பார்க்கலாம் என்று மேலே, மேலே போய்க் கொண்டிருக்கின்றன.



இத்தனைக்கும் தற்போது மத்திய அரசின் உணவுப் பொருட்கள் கிடங்குப் பணியாளர்கள் ஒன்றும் ஈயோட்டிக் கொண்டிருக்கவில்லை. அபரிமிதமான அளவில் உணவு தானியங்கள் கிடங்குகளில் பத்திரமாக இருக்கின்றன. தேவையொட்டிகூட மக்களுக்கு விநியோகிக்காத அளவுக்கு பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். விலைவாசியை எப்படி கட்டுக்குள் கொண்டு வரலாம் என்பது பற்றி ஆலோசிக்க அண்மையில் முதல்வர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. அதற்குப்பிறகும் கூட கிடங்குகளில் உள்ள தானியங்கள் வெளியுலகைப் பார்க்க முடியவில்லை.



அங்கு எலிகள் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கின்றன. கிடங்குகளில் கிடக்கும் உணவு தானியங்களைக் குறைக்க என்ன வழி என்று யோசித்துப் பார்த்திருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். நடப்பாண்டில் கோதுமைக் கொள்முதலைக் குறைத்துக் கொள்ளத் திட்டமிட்டு விட்டார்கள். கோதுமை அறுவடைக்காலம் என்பது இந்த ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் மாத வரையிலானதாகும். கொள்முதல் குறித்து இப்போதே ஆலோசனை செய்து விட்டார்கள். கடந்த ஆண்டின் அறுவடைக்காலத்தில் 2.53 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது. வரும் காலத்தில் 2.40 கோடி டன்னை மட்டுமே கொள்முதல் செய்யப்போகிறது மத்திய அரசு.



அதோடு, மத்திய அரசின் கொள்முதல் விலையை விட சந்தையில் விலை அதிகமாக இருப்பதால் விவசாயிகள் மத்திய உணவுக்கழகத்திடம் கொடுக்காமலே போகும் ஆபத்தும் உள்ளது. இதனால் மத்திய அரசின் கொள்முதல் மேலும் சரியும் என்று கருதப்படுகிறது. இவ்வளவு பிரச்சனைகள் இருக்கையில் மத்திய விவசாயத்துறை அமைச்சரோ, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு எந்த இடையூறும் செய்யாதீர்கள் என்று பால்தாக்கரேயிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.

Thursday, February 18, 2010

தலித்துகளை வெள்ளமும் விட்டுவைக்கவில்லை!


சமூக ரீதியான ஒடுக்குமுறைகளை காலம் காலமாக சந்தித்து வரும் தலித்துகள் இயற்கைப் பேரழிவுகள் ஏற்படும்போதும் அதிகமாகப் பாதிக்கப்படுபவர்களாகவே இருக்கிறார்கள் என்பது தொடர்ந்து வெளிவரும் ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்படுகிறது. உ.பி. மற்றும் பீகார் மாநிலங்களில் ஆண்டுதோறும் ஏற்பட்டு வரும் வெள்ளப்பெருக்குகள் தலித்துகளையே அதிகமாகப் பாதிக்கிறது என்பதும், நிவாரண நடவடிக்கைகளிலும் சமூக ரீதியான பாகுபாடுகள் உள்ளன என்பதும் பழைய செய்திகள். கடந்த ஆண்டு ஆந்திராவை உலுக்கி எடுத்த வெள்ளம் தலித்துகள் வாழும் பகுதிகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.


அக்டோபர் 2009ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு கர்நூல், மகபூப்நகர், குண்டுர் மற்றும் கிருஷ்ணா ஆகிய மாவட்டங்களைக் கடுமையாகத் தாக்கியது. பலநாட்கள் கடுமையான இருட்டில் ஆந்திர மக்கள் பொழுதைக் கழித்தனர். இந்த நான்கு மாவட்டங்களில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். எக்கச்சக்கமான ஏக்கர்களில் இருந்த பயிர்கள் நாசமாகின. கடந்த நூறு ஆண்டுகளில் இவ்வளவு பயங்கரமான வெள்ளத்தை ஆந்திரா பார்த்ததில்லை. ஆந்திர மாநிலம் உருவானபிறகு இதுதான் பெரும் சேதத்தை ஏற்படுத்திய இயற்கைப் பேரழிவாகும். பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் நிவாரணத்தைப் பெறவில்லை.


இந்தப் பிரச்சனைகள் பின்னுக்குப் போகும் வகையில் தனித் தெலுங்கானா கோரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தர வேண்டும் என்று கோரி மக்களைத் திரட்டும் வகையில் கர்நூல் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியுள்ளது. மற்ற மாவட்டங்களில் அத்தகைய இயக்கங்கள் நடைபெறவுள்ளன. மற்ற அனைத்து கட்சிகளுமே தெலுங்கானா விவகாரத்தில் மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிடும் பணியை மேற்கொண்டுள்ளன. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் நிலை குறித்த ஆய்வுகள், அதிர்ச்சிக்குரிய விபரங்களை வெளிக்கொண்டு வந்துள்ளது.


ஏழைகளை, குறிப்பாக தலித்துகளைத்தான் வெள்ளம் கடுமையாகப் பாதித்துள்ளது என்பதுதான் அந்த விபரங்கள். ஆந்திர வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 308 கிராமங்களில் 1,090 குடியிருப்புப் பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. பல்வேறு தலித் அமைப்புகள் உள்ளிட்ட 13 தொண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த ஆய்வை நடத்தின. தலித்துகளுக்கு ஏற்பட்ட இழப்பு, சமமான இழப்பீடு விநியோகம், நிவாரண நடவடிக்கைகளில்போது மரியாதை மற்றும் பாரபட்ச அணுகுமுறை ஆகிய அம்சங்களைக் கண்டறிய இந்த ஆய்வு முயன்றது. தலித்துகள் எந்தவகையிலாவது நிவாரணத்தைப் பெற்றுள்ளார்களா என்பதைத்தான் அந்த ஆய்வு கண்டறிய விரும்பியது.


வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 38 விழுக்காடு குடும்பங்கள் தலித்துகளின் குடும்பங்கள்தான். வெள்ளத்தில் பலியானவர்கள் மற்றும் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததாகக் கருதப்படுபவர்கள் ஆகியோரில் 55 விழுக்காட்டினர் தலித்துகளாவர். வெள்ளம் தாக்கும்முன்பே மோசமான வீடுகளில்தான் தலித்துகள் வாழ்ந்து வந்தார்கள். அந்த வீடுகளையும் வெள்ளம் விட்டுவைக்கவில்லை. வெள்ளத்தின் தாக்குதலால் வீடுகளை இழந்தவர்களில் பாதிப்பேர் தலித்துகள்தான் என்று ஆய்வு கூறுகிறது. நிலங்களில் பயிர்களை இழந்தவர்களில் குறைவான அளவில்தான் தலித்துகள் பாதிக்கப்பட்டார்கள். பயிர்ச் சேதத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 28 விழுக்காடுதான் தலித்துகள். அவர்கள் கைகளில் நிலங்கள் இல்லை என்பதுதான் இவ்வளவு குறைவாக அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்குக் காரணமாகும்.


தாழ்வான பகுதிகளில்தான் பொதுவாக தலித்துகள் வாழ்கின்றனர் என்பதுதான் அதிகமான பாதிப்புகளுக்குக் காரணம் என்கிறார் தொண்டு நிறுவனமொன்றைச் சேர்ந்த ஜி.நரசிம்மா. நிவாரணப் பணிகளில் தலித்துகளுக்கு முன்னுரிமை தர வேண்டும். இருப்பிடங்களுக்கான மனையிடங்களை அவர்களுக்கு முதலில் வழங்கிட வேண்டும் என்று நாங்கள் கோரி வருகிறோம் என்கிறார் அவர். முன்னுரிமை பெற வேண்டிய இவர்கள், பல கிராமங்களில் கடைசியாகத்தான் நிவாரணம் பெறும் அவலம் உள்ளது. இதில் கொடுமை என்னவென்றால், பல தொண்டு நிறுவனங்களே இதர பகுதியினரைப் பார்த்து நிவாரணம் வழங்கிவிட்டுதான் தலித் பகுதிகளுக்கு சென்றிருக்கிறார்கள்.


பாதிக்கப்பட்ட தலித் குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் இன்னும் பள்ளிக்கூடங்களுக்கு திரும்பவில்லை. பள்ளிக்கூடங்களுக்கு திரும்பிய குழந்தைகளுக்கும் படிப்பதற்கு போதிய வசதி இல்லை. அவர்களுக்கு இந்த ஆண்டு இறுதித்தேர்வில் கூடுதல் மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்றும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. அதோடு, இத்தகைய பேரழிவுகள் ஏற்படும்போது நிவாரண நடவடிக்கைகளில் சாதிப்பாகுபாடு பார்க்காமல் இருப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என்றும் ஆய்வின் முடிவாக தெரிவித்துள்ளனர்.