Friday, October 30, 2009

நம்மோடு இல்லை தோழர் மோகன்


என்ன தோழர்... ஆபீசுக்கு எப்ப வந்தாலும் பனியனோடதான் உக்காந்துருக்கீங்க... சட்டை சேர்ல தொங்கிட்டு இருக்கு...
அழுக்காகலீன்னா நாளக்கி போட்டுக்கலாமே...

பத்தாண்டுகள் எம்.பி.யாக இருந்துவிட்டு நேற்று மாலை நம்மை விட்டுப் பிரிந்த மகத்தான தோழர் மோகனுக்கும் எனக்கும் இடையில் நடந்த உரையாடல் இது.

* * * * *

எம்.பியான புதிதில் அவரை தில்லியில் ஒருமுறை சந்தித்தேன். என்னுடன் வந்த நண்பர் முதன்முறையாக ஒரு எம்.பி.க்கு எதிரில் அமர்கிறார். காலில் இருந்த ஆணியை அகற்றிவிட்டு ஓய்வில் இருந்த தோழர்.மோகன், வெல்லக்கட்டியையும், நிலக்கடலைப் பருப்பையும் வைத்து எங்களை உபசரித்தார்.

வெல்லத்தை வாங்க அவர் பட்ட சிரமத்தையும் சொன்னார். அப்போதுதான் அவர் எம்.பி.யாகியிருந்தார். வெல்லம் வாங்க கடைக்குச் சென்றிருக்கிறார். இந்தியில் எப்படி கேட்பது என்று தெரியவில்லை. கடைகளுக்குள் புகுந்து தேடியுள்ளார். அதைக்காட்டியாவது வாங்கிவிடலாம் என்று பார்த்திருக்கிறார். கிடைக்கவில்லை. கடைசியில் தமிழிலேயே கேட்பது என்ற முடிவுக்கு வந்த அவர், வெல்லம் குடு என்றிருக்கிறார்.
உடனே வெல்லம் வந்துவிட்டது. அரைக்கிலோவை வாங்கிவிட்டுத் திரும்பியவருக்கு ஒரே ஆச்சரியம். தமிழில் கேட்டால் எப்படி அவர்களால் கொடுக்க முடிந்தது என்ற கேள்வி அவரைப் பல நாட்கள் வலம் வந்து கொண்டிருந்தது. கூ(g)ட்(d) என்றே வட இந்தியாவில் வெல்லத்தை அழைக்கிறார்கள் என்று பிறகுதான் அவருக்கு தெரிய வந்தது. சொல்லி சொல்லி சிரித்தார். அந்த சிரிப்பு, மக்களின் பிரச்சனைகளைச் சொல்லும்போது அவரது கண்களில் இயல்பாகவே எழும் அனுதாபம் நினைவுக்கு வந்துகொண்டே இருக்கிறது. வந்து கொண்டேதான் இருக்கும்.

* * * * * *

ஒரு முறை குடும்பத்தோடு காரில் சென்று கொண்டிருக்கிறோம். மக்களவைத் தேர்தல் முடிந்துவிட்ட நேரமது. அழகிரி வெற்றி பெற்று விட்டார். எனது மனைவியின் தங்கை அப்போது குறிப்பிட்டார். பிரச்சாரத்துக்கு வராம உங்க மோகன் வேணும்னேதான் ஆஸ்பத்திரில போய்ப் படுத்துட்டாருன்னு பேசிக்குறாங்களே... என்றார். வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த அவருடைய கணவரும் தலையை ஆட்டி ஆமோதித்தது போல் தெரிந்தது. அப்படில்லாம் இல்லை. மார்க்சிஸ்ட் கட்சிக்காரர்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்றேன். பெரும்பாலான அரசியல்வாதிகள் கொள்ளைக்காரர்களாகவே திரிவதால் அரசியல்வாதியைப் பற்றிய குற்றச்சாட்டுகள் அனைத்தையுமே மக்கள் நம்பி விடுகிறார்கள் என்று எண்ணிக்கொண்டேன்.

ஆனால் தான் நிரபராதி என்று காட்டுவதற்கு இவ்வளவு வலுவான சாட்சியத்தை நம்முன் கொண்டு வந்து தோழர்.மோகன் நிறுத்துவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. போயே விட்டார். எந்த நோய்க்காக தேர்தல் பிரச்சாரத்திற்காக வரமுடியாமல் மருத்துவமனையில் படுத்தாரோ, அதே நோயின் கொடுரத்தைத் தாங்க முடியாமல் சென்றுவிட்டார். எந்த வாய்கள் எல்லாம் அவரைத் தூற்றினவோ, யாரெல்லாம் அந்தத் தூற்றுதலை நம்பினார்களோ அவர்களெல்லாம் தோழர்.மோகனிடம் போய் சொல்லவா முடியும்... உங்களை நாங்கள் நம்புகிறோம் என்று.
* * * * * *

Thursday, October 29, 2009

66வது கொலை விழுந்துவிட்டது!

மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நாளிலிருந்து இதுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 65 பேர் மாவோயிஸ்டுகள் மற்றும் எதிர்க்கட்சியினரால் கொலை செய்யப்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகள் மீது நடவடிக்கை எடுத்தபோதுகூட ரத்தம் சிந்தாமல்தான் அந்த நடவடிக்கை இருக்க வேண்டும் என்பதில் மேற்கு வங்க மாநில அரசு கவனமாக இருந்தது.

அறிவுஜீவிகள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக்கொள்ளும் ஒரு கூட்டம் மாவோயிஸ்டுகளின் மீதான நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்று மனப்பாடம் செய்து ஒப்பிப்பவர்களைக் போல சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் தொடர்ந்து கொலை செய்யப்படுபவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை அங்கீகரிக்கவோ அல்லது யாராக இருந்தாலும் வன்முறையில் இறங்கக்கூடாது என்று பொதுவாகச் சொல்லவோ அவர்கள் தயாராக இல்லை.

இதோ மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் 66வது கொலை விழுந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஊடகங்களின் ஒரு பகுதியினரும் பாரபட்சமாகவே செய்தி வெளியிடுகிறார்கள். ஜார்க்கண்டில் தாக்குதல் நடத்துபவர்கள் மாவோயிஸ்டுகளாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடத்துபவர்கள் பழங்குடி மக்களாம். தாக்குதல் நடத்துபவர்கள் அனைவரும் ஒரே அமைப்புதான். கண்ணை மூடிக்கொண்டு செய்தி எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

Tuesday, October 27, 2009

ஆலய நுழைவில் அரசியல் நுழைவா...?


“ஆலய அரசியலில், நுழைவு அவசியமா?” என்ற தலைப்பில், இரா.சோமசுந் தரம், தினமணி நாளேட்டில், அக்டோபர் 27ல் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். எந்த ஆல யத்திலும் தலித்துக்கள் நுழையக் கூடாது என்று சொல்வதைப் போன்ற காட்டுமிராண் டித்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது என்ற பீடிகையோடு இந்த கட்டுரை துவங்கு கிறது. ஆகா, சமூகநீதிக்காக குரல்கொடுக் கிறார், சோமசுந்தரம் என்ற மகிழ்ச்சியோடு கட்டுரைக்குள் நுழைந்தால், அன்றைக்கு பிரிட்டிஷ் ஆட்சியின்போது ஆலய நுழை வுப் போராட்டம் நடத்தியது சரிதான், இன் றைக்கு அரசு நம்முடையது; இந்து அறநிலை யத்துறை கோயில்களில் தலித்துக்கள் நுழை யத் தடை எதுவும் இல்லை; இந்நிலையில், தனியார் அல்லது ஒரு சமூகத்திற்கு சொந்த மான கோயில்களில், தலித்துக்களை அனு மதிக்காததற்காக கம்யூனிஸ்டுகள் போரா டுவது, சரிதானா; இது, அரசியல் சாயம் பூசப்பட்டது அல்லவா? என்று அடுக்கிக் கொண்டே சென்று, தனியார் அல்லது ஆதிக்க சமூகத்தினரால் நடத்தப்படும் கோயில்களில், தலித்துக்களை அனுமதிக்கா ததை நியாயப்படுத்துகிறார், கட்டுரையாளர். இதைத்தான் பாவேந்தர் பாரதிதாசன், “அழ காக முடிச்சவிழ்த்தால் விடுவார் உண்டோ” என்பார்.

தனியார் நிறுவனங்கள் போல, தனியார் கோயில்களும் இருக்கலாம் போலிருக்கிறது. அத்தகைய கோயில்களில், சாதியின் பெய ரால், ஒருபகுதி மக்கள் இழிவுசெய்யப்பட் டால் அதை யாரும் கேள்வி கேட்கக் கூடாது, என்பது சோமசுந்தரத்தின் வாதம். அப்படி பிரச்சனை இருந்தால், அரசு மற்றும் காவல்துறையிடம் புகார் செய்து, நடவடிக்கை எடுக்கலாம் அல்லவா? என்று ரொம்பவும் நல்லவர் போல கேள்வி எழுப்புகிறார், இவர். காங்கியனூரிலோ அல்லது செட்டிப்புலத் திலோ, எடுத்தவுடனேயே தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம் நடத்தவில்லை. அரசு அலுவலகங்களின் கதவுகளை பலமுறை தட்டி பலன் கிடைக்காத நிலையிலேயே, அரசின் கவனத்தை ஈர்க்க கோயில் கதவுகள் நேரடியாக தட்டப்பட்டன. காங்கியனூர் திரௌபதியம்மன் கோயி லில் தீமிதி விழாவின் போது தலித்துக்கள் யாரும் நுழையக்கூடாது என்று ஒலிபெருக்கி யிலேயே பகிரங்கமாக அறிவிக்கப்படும்; ஒலி பெருக்கிக்கும் அதை அறிவிப்பவருக்கும் சேர்த்தே காவல்துறை பாதுகாப்பு தரும். தீண் டாமையை எந்த வகையிலேனும் கடைப் பிடிப்பது, கிரிமினல் குற்றம் என்கிறது, அரசி யல் சாசனம். ஆனால், அதை மீறுபவர் களுக்கு, காவல்துறை பாதுகாப்பு தரும் நிலை.

உடல் முழுவதும் காணப்பட்ட புண் குண மாகி விட்டதாம். தற்போது சிறுபுண் மட்டுமே உள்ளதாம். அதற்கு மருத்துவ சிகிச்சை செய்யாமல், அதை ஆவேசமாக சொறிந்து புண்ணாக்குவது சரிதானா, என்று இவர் கேட்கிறார். இவர், எந்த உலகத்தில் வாழ் கிறார் என்று தெரியவில்லை. இன்னமும் கூட தமிழகத்தில் 7 ஆயிரத்திற்கும் மேற் பட்ட கிராமங்களில், பொது கிளாசில் டீ குடிக்க தடை; செருப்பு போட்டு நடக்கத் தடை; சைக்கிளில் செல்லத் தடை; தோளில் துண்டு அணியத் தடை; இவ்வளவு ஏன், பொதுக்கழிப்பறையை பயன்படுத்தக் கூட தடை; தலித் மக்கள் ஆண்நாய் வளர்க்கத் தடை என தீண்டாமைக் கொடுமை தலை விரித்து ஆடுகிறது. இவையெல்லாம் சிறு புண்ணாகத் தெரிகிறது இவருக்கு. ஆனால், சமூகத்தையே அரித்துத் திண்ணும் புற்றுநோ யாக தெரிகிறது கம்யூனிஸ்டுகளுக்கு! இத னால்தான் அரசிடம் சொல்லி நடக்காத இடங்களில் ஆலய நுழைவுப் போராட்டம் போன்றவற்றை கம்யூனிஸ்டுகள் நடத்து கிறார்கள். இது அரசியல் சாயம் என்றால், இதை இன்னும் அழுத்தமாக்கவே, அவர்கள் விரும்புகிறார்கள்.

செட்டிப்புலம், காங்கியனூரில் அமைதி குலைந்திருப்பதாக, கட்டுரையாளர் கவலைப் படுகிறார். சாதி ஆதிக்க வெறியால் செயற் கையாக ஏற்படுத்தப்பட்டு இருக்கும் மயான அமைதியை கலைப்பதே நல்லது. இப்படி கலைத்ததால்தான் செட்டிப்புலத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், தலித்துக்கள் ஆல யப் நுழைவு செய்ய முடிந்திருக்கிறது. காங் கியனூரிலும் அரசை அசைக்க முடிந்திருக் கிறது. பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலத் தில் தலித் தலைவர்களை பதவியேற்கச் செய்ததிலும், உத்தப்புரம் சாதிச்சுவரின் ஒருபகுதியைத் தகர்த்ததிலும், பந்தப்புளி, கல் கேரி உள்பட பல்வேறு கோயில்களில் தலித் துக்கள் நுழைய முடிந்ததிலும், கம்யூனிஸ்டு களின் “அமைதிக் குலைப்பு” முக்கியப் பங்கு வகித்துள்ளது.

போராட்டங்கள் நடத்த, தமிழகத்தில் பிரச் சனைகளா, இல்லை...? என்று கேட்டுவிட்டு, தனியார் பள்ளி- கல்லூரிகளில் நடைபெறும் அநியாய கல்விக் கட்டணத்திற்கு எதிராக போராடி ரத்தம் சிந்தக் கூடாதா? என்று கட் டுரையாளர் கேட்கிறார். சில மாதங்களுக்கு முன்பு, சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் போதே, இந்திய மாணவர் சங்கத்தினர், தனியார் கல்வி நிறுவனங்க ளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராகவும், சமச்சீர் கல்விக்காகவும் போராடி ரத்தம் சிந் தியபோது, சோமசுந்தரம் கையெடுத்துத் தொழுதிருக்க வேண்டாம்; மாணவர்களை ஆதரித்து ஒரு கட்டுரையாவது எழுதியிருக் கலாமே! உணவுக்காகப் போராடினால் கம்யூனிஸ் டுகளை தமிழகம் கையெடுத்து தொழுமே... என்று கூறியுள்ளார். சென்னையில் உணவுப் பாதுகாப்பிற்காக இடதுசாரிகள் இணைந்து கருத்தரங்கம் நடத்தினார்கள். நவம்பர் 17ல் சிறைநிரப்பும் போராட்டத்தையும் நடத்த உள்ளனர். இதில் சோமசுந்தரம் முதல் ஆளாக நின்று பங்கேற்பார் என எதிர்பார்க்கலாம்.

அரசு ஊழியர் சங்கத்தில் உள்ள தங்கள் தோழர்களை, மக்கள் நலப்பணிகளில் ஈடு படுத்தலாமே என்றும் கூறுகிறார். இடதுசாரி மனோபாவம் கொண்ட அரசு ஊழியர்கள், இரத்ததானம்; ஏழை- எளிய மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க இலவசப் பயிற்சி என பல்வேறு வழிகளில் மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். தங்களின் பணியிடங்களில் மக்கள் நலனை பாதுகாப்பதில் அவர்கள் முன்னிற்கிறார்கள். ஆலய நுழைவுப் போராட்டம் நடத்துவ தால், தலித்துக்களின் வாக்கு கம்யூனிஸ்டு களுக்கு கிடைக்காது என்று கடைசியாக சாபமிட்டுள்ளார், கட்டுரையாளர். இது வாக்குகளைக் குறிவைத்து நடத்தப்படும் இயக்கமல்ல; எதிர்காலப் போக்கு சமத்துவ சமுதாயத்தை நோக்கி இருக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் இயக்கம்.

மார்க்சிஸ்ட் கட்சி போன்று பிற கட்சிகளும் ஏன் சமூகநீதிக்காகப் போராடவில்லை என்று சோமசுந்தரத்தின் எழுதுகோல் கேட்டிருந்தால் அதில் ஒரு நியாயம் இருந்திருக்கும். தீண்டாமையை கடைப்பிடிப் பவர்களிடமிருந்து, வாக்குகள் கிடைக்காது என்று பல கட்சிகள் இந்த பிரச்சனைக்குள் நுழைவதே இல்லை என்பதுதான் உண்மை. மதம் ஒரு அபின் அல்லவா.. என்று கேட்டு முடித்திருக்கிறார். மாமேதை மார்க்ஸ் சொல்வதை, முன்னும் பின்னும் கத்தரித்து விட்டு, பலரும் பயன்படுத்துவதைப் போலவே, இவரும் கூறியிருக்கிறார். மதம் அடக்கப்பட் டவர்களின் பெருமூச்சு என்றும் மார்க்ஸ் கூறியிருக்கிறார். எல்லோருக்கும் பொது வானது என்று கதைக்கப்படும் கோயிலுக்குள் நுழைய முடியாமல் உழைக்கும் மக்கள் பெரு மூச்சு விடும்போது, அதை புயலாக மாற்று வதே கம்யூனிஸ்டுகளின் அரசியல் பணி.

- மதுக்கூர் இராமலிங்கம்

Monday, October 26, 2009

மலத்தை மனிதனே அள்ளும் கொடுமை தீருமா..?



ச்சீ...ச்சீ... என்று மலத்தைப் பார்த்தவுடன் முகத்தைச் சுளித்தவாறு நகர்ந்து விடுவார்கள் பெரும்பாலான மனிதர்கள். ஆனால் அதையும் மனிதர்கள்தான் பெரும்பாலும் அள்ளிச் சென்று அப்புறப்படுத்தும் அவல நிலை உள்ளது. இத்தனைக்கும் கையால் மலம் அள்ளுவதை சட்டம் தடை செய்துள்ளது. 1993 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட கையால் மலம் அள்ளுவோர் பணி நியமனம் மற்றும் திறந்தவெளி கழிப்பிடங்கள்(தடுப்பு) சட்டம் சில மாற்றங்களை ஏற்படுத்தியது உண்மைதான். ஆனால் பெரும்பாலும் அந்தக் கொடுமை இன்னும் நடைமுறையில் உள்ளது.


மத்திய சமூக நீதி மற்றும் வளர்ச்சிக்கான துறையின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி 6.7 லட்சம் மலம் அள்ளுபவர்கள் நாடு முழுவதும் உள்ளனர். இது 2003 ஆம் ஆண்டு தந்த புள்ளிவிபரமாகும். ஆனால் இதுவரை இதில் எத்தனை பேருக்கு மாற்றுப் பணிகள் தந்து மலம் அள்ளும் பணியிலிருந்து விலக்கிக் கொண்டுள்ளார்கள் என்ற விபரங்கள் இல்லை. உலர் கழிப்பிடங்கள் மற்றும் திறந்தவெளிக் கழிப்பிடங்களே இல்லாமல் ஆக்க வேண்டும் என்ற நோக்கத்தை நோக்கி மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது அடிகளை எடுத்து வைப்பதில் முனைப்பு இல்லை.


2007 ஆம் ஆண்டுக்குள் இதை முடிவுக்குக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று மத்திய அரசு லட்சுமணன் கோடு ஒன்றையும் போட்டது. கோடு அழிந்ததுதான் மிச்சம். 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும், மனிதக்கழிவை மனிதனே அள்ளும் கொடுமைக்கு முற்றுப் புள்ளி வைத்து, அதில் ஈடுபடுபவர்களுக்கு மாற்றுப் பணிகள் தருவதாகவும் உறுதியளிக்கப்பட்டது. 2006-07 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 11 ஆயிரத்து 691 பேருக்கு மாற்று வேலைகளுக்கான பயிற்சி தர 50 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது என்ற அறிவிப்பும் வெளியானது.


ஆனால் அடிப்படையான பிரச்சனையைத் தீர்க்காமல் மேற்பூச்சு வேலைகளால் எந்த பலனும் இல்லை. 2001 ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்குப்படி, தமிழகத்தில் உள்ள 1.41 குடும்பங்களில் சுமார் 92 லட்சம் குடும்பங்களின் வீடுகளுக்குள் கழிப்பறைகள் இல்லை. சுமார் ஆறரை லட்சம் உலர் கழிப்பிடங்கள் உள்ளதாகவும் அந்தப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. உலர் கழிப்பிடங்கள் மற்றும் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இருக்கும் வரையில் அதை அள்ளுவதற்கான ஆட்களைத் தேடும் நிலை நிற்காது.


இந்தியாவில் அதிகமான ஊழியர்களைக் கொண்டுள்ள நிறுவனமான ரயில்வேயில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்கள் தண்டவாளங்களுக்கு நடுவில் கிடக்கும் மலத்தை அள்ளிச்சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். எது, எதற்கோ நவீன கருவிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். அசிங்கம் என்று கருதப்படும் மலத்தை அள்ளத்தான் கருவிகளைக் கண்டுபிடிக்க மாட்டேனென்கிறார்கள்.


இத்தகைய கொடுரங்களுக்கு எதிராக, வெறும் காகிதத்தில் இருக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்துக என்ற அக்.27 பேரணி முழக்கம் ஆட்சியாளர்களின் காதுகளில் போர்ப்பறையாக ஒலிக்கவிருக்கிறது.

0.16 சதவிகிதம்தான் பத்தாம் வகுப்பைத் தாண்டியவர்கள்!


தமிழகத்திலுள்ள துப்புரவுத் தொழிலாளர்களில் 95 சதவிகிதம் பேர் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். அதிலும் 33 சதவிகிதம் பெண்கள்தான். இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மற்ற சாதியினரின் தயவில்தான் வாழ்க்கையை ஓட்டுகின்றனர். பத்து சதவிகித அருந்ததியர்கள் கையில்தான் சிறிய அளவிலாவது நிலம் உள்ளது.

கல்வி ரீதியாகவும் இந்த சமூகத்தினர் மிகவும் பின்தங்கியவர்களாக உள்ளனர். கிராமப்புற பெண்கள் மேம்பாட்டு அமைப்பு என்ற தொண்டு நிறுவனம் அளிக்கும் புள்ளிவிபரங்களின்படி, அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களில் 1.75 சதவிகிதம் பேர் மட்டுமே எழுத்தறிவு பெற்றவர்களாக உள்ளனர். 0.16 சதவிகித அருந்ததியர்கள் மட்டுமே பத்தாம் வகுப்பைத் தாண்டியுள்ளனர்.

இந்த சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலான கிராமப்புற சிறுவர்கள் வயல்களில் கொத்தடிமைகளாக வேலை செய்கிறார்கள். நகர்ப்புறங்களில் ஓட்டல்கள் போன்றவற்றில் கூலி வேலைகள் செய்பவர்களாகவும் உள்ளனர். ஒருவேளை, பத்தாம் வகுப்பை முடித்து விட்டாலும் மேற்கொண்டு படிப்பதற்கு போதிய பொருளாதார வசதி அவர்களிடம் பெரும்பாலும் இருப்பதில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு அருந்ததிய அமைப்புகளின் வலுவான இயக்கத்தால் இந்த சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மூன்று சதவிகித உள்ஒதுக்கீடு கிடைத்துள்ளது.

இதை முறையாக நடைமுறைப்படுத்தக்கோரும் மக்களின் எழுச்சிக்குரல்கள் அக்.27 அன்று கோட்டையின் கதவுகளை தட்டப்போகின்றன.

Saturday, October 24, 2009

அணுகுண்டா... இது வீண் பழியே...!


வெனிசுலாவில் யுரேனியம் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள் என்ற செய்தி வெளியானவுடனேயே ஈரானுக்கு யுரேனியத்தை வெனிசுலா ஏற்றுமதி செய்யப்போகிறது என்றும், சொந்தமான அணுகுண்டைத் தயாரிக்க வெனிசுலா திட்டமிட்டுள்ளது என்றும் மேற்கத்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிடத் துவங்கிவிட்டன. அந்த யுரேனியம் பயன்படுமா இல்லையா என்பது பற்றியெல்லாம் கூட இன்னும் ஆய்வுகள் முடியவில்லை. இதை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள் என்று சாவேசை கேள்வி கேட்டும் பத்திரிகையாளர்கள் துளைத்து எடுத்து விட்டார்கள்.

அவருடைய பதில் மிகவும் தெளிவாக இருந்தது. "அணுகுண்டை வெனிசுலா ஒருபேதும் தயாரிக்காது. அடுத்தவர்களைக் குறை சொல்லி தங்களை வளர்த்துக்கொள்ள விரும்பும் நாடுகள் இத்தகைய பொய்ப்பிரச்சாரத்தை செய்கின்றன. யுரேனியத்தை நாங்கள் தவறாகப் பயன்படுத்தப்போவதாக மேற்கத்திய ஊடகங்கள் எங்களைக் குறை சொல்லப் போகின்றன. இப்பொழுதுதான் யுரேனியம் எங்கள் மண்ணில் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளோம். அதற்குள்ளாக எங்கள் நாட்டுக்கெதிரான பிரச்சார யுத்தத்தை துவக்கி விட்டார்கள். ஆயுதங்களைத் தயாரிப்பதைத் தாண்டி மின்னுற்பத்தி போன்ற மிக முக்கியமான பணிகளை நாங்கள் செய்து கொள்ள முடியும்" என்றார் அவர்.

தங்களிடமிருக்கும் யுரேனியத்தை பயன்படுத்தும் வித்தையைக் கற்றுக் கொடுங்கள் என்று ரஷ்யாவிடம் வெனிசுலா கேட்கப்போகிறது. தென் அமெரிக்க நாடுகள் இந்தியா, ரஷ்யா, சீனா, மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தி வருகின்றன. தனது பிடி பெரும் அளவில் நழுவியுள்ளதால் மீண்டும் இறுக்கிப்பிடிக்க அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன் முதல்கட்டமாகத்தான் இருக்கும் ஒன்றிரண்டு கூட்டாளிகளில் கொலம்பியாவில் புதிய ராணுவத்தளங்களை அமைக்கிறது. தனது இந்த நடவடிக்கைகளை மறைக்கவே வெனிசுலாவின் அணுகுண்டு என்ற புரளியைக் கிளப்பி விட்டுள்ளது.

மேலும், சாவேஸ் தலைமையிலான வெனிசுலா அரசு அமெரிக்காவின் ஒவ்வொரு தலையீட்டையும் கடுமையாகக் கண்டித்து வருகிறது. ஒபாமாவுக்கு சமானத்திற்கான நோபல் பரிசு வழங்கியதை விமர்சித்த அவர், கொலம்பியாவில் ஏழு ராணுவத்தளங்களை அமைக்கப்போகிறோம் என்பது அவரின் நினைவுக்கு வருவது நல்லது என்றார். அதோடு நிற்காமல் தென் அமெரிக்க நாடுகளின் ஒற்றுமைக்காகவும் வெனிசுலா பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தங்களுக்குள் பரிவர்த்தனை செய்து கொள்ள சுக்ரே என்ற புதிய நாணயத்தை அறிமுகப்படுத்தப்போவது இந்த நடவடிக்கைகளில் ஒன்றாகும். டாலருக்கு மாற்றாகக் கிளம்பியுள்ள இந்த புதிய நாணயம் அமெரிக்காவுக்கு பீதியைக் கிளப்பியுள்ளது.
அண்மையில் நடந்த அல்பா(தென் அமெரிக்க நாடுகளுக்கான பொலிவாரிய மாற்று) அமைப்புக்கூட்டத்தில் பல அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டன. சுற்றுச்சூழல் உறுதிமொழிகளை நிறைவேற்றாத நாடுகளை கூண்டுக்குள் ஏற்றி விசாரிக்கும் வகையில் ஒரு பருவநிலை மாற்றம் குறித்த நீதிமன்றத்தை அமைக்க அந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும் அல்பாஎக்சிம் என்ற ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் ஒன்றையும் தென் அமெரிக்க நாடுகள் இணைந்து துவக்கியுள்ளன. பரஸ்பர நலன்களைப் பாதுகாக்கும் வகையில் அந்த நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் நடப்பதை இந்த நிறுவனம் உறுதிப்படுத்தும்.

கடந்த நூற்றாண்டில் தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளால் பிரிந்து கிடந்த தென் அமெரிக்க நாடுகள் எப்போதும் இல்லாத அளவிற்கு அணி திரண்டுள்ளார்கள். அமெரிக்காவின் புழக்கடை போன்று தங்கள் நாடுகளை நடத்துவதை இனி ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற உறுதியை அவர்கள் எடுத்துள்ளார்கள். இது வெறும் ஆட்சியாளர்களின் ஆசையல்ல. ஒட்டுமொத்த தென் அமெரிக்க மக்களின் விருப்பமாகும். இதனால்தான் பிரித்து வைக்கும் முயற்சியில் வெனிசுலாவில் யுரேனியம் கிடைக்கிறது என்றவுடனேயே அணுகுண்டு வதந்தியைப் பரப்புகிறார்கள். யுரேனியத்தில் வெனிசுலா விஞ்ஞானிகளே இன்னும் கை வைக்கவில்லை. அதற்குள் ஈரானுக்கு கப்பலில் யுரேனியம் கிளம்பிவிட்டதாக கதை கட்டுகிறார்கள்.

Friday, October 23, 2009

"வளர்ச்சி"க்காக வளர்ச்சியை சிதைக்கும் மாவோயிஸ்டுகள்!



மாவோயிஸ்டுகளின் வன்முறை நடவடிக்கைகளையும் தாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறிக்கொண்டாலும், அவர்களுக்கு ஆதரவாக திரண்டுள்ள சில அறிவுஜீவிகள் அந்த வன்முறைகள் நிகழும்போதெல்லாம் மவுனம்தான் சாதிக்கின்றனர். நாட்டிலுள்ள 625 மாவட்டங்களில் 161 மாவட்டங்களில் இயங்கி வரும் இந்த மாவோயிஸ்டுகள் கடந்த பத்து மாதங்களில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்டவர்களைக் கொலை செய்துள்ளனர். வளர்ச்சிப்பணிகளை அரசுகள் செய்திருந்தால் இந்த வன்முறைகள் நிகழ்ந்திருக்காதே என்று அவர்கள் அங்கலாய்க்கிறார்கள்.


வளர்ச்சிப்பணிகள் நடைபெறவில்லை என்ற மாவோயிஸ்டுகளின் குற்றச்சாட்டு ஒருபுறம். மறுபுறத்தில் ஏற்கெனவே செய்யப்பட்டுள்ள வளர்ச்சிப்பணிகளை தரைமட்டமாக்கும் வேலையை மாவோயிஸ்டுகள் செய்கின்றனர். ரயில்வே தண்டவாளங்கள், தொலைபேசிக் கோபுரங்கள், மின்னுற்பத்தி நிலையங்கள், கனிம சுரங்கங்கள், பள்ளிக்கட்டிடங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்கள் ஆகியவற்றைத் தகர்த்து எறிகிறார்கள்.


2009 ஆம் ஆண்டில் மட்டும் இத்தகைய இடங்களைக் குறிவைத்து 183 வன்முறைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். எந்த மக்களுக்காக போராடுகிறோம் என்று சொல்லிக் கொள்கிறார்களோ, அந்த மக்களுக்கான பள்ளிக்கூடங்கள், உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்கள் ஆகியவைதான் இந்த வன்முறைத் தாக்குதல்களின்போது குறிவைக்கப்பட்டன. மக்களின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட மக்கள் பணத்திலிருந்தே இந்தக் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைகள் ஏழை மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் வேலையையே செய்கின்றன.


இவர்கள் தாக்குதல்கள் நடத்தும் பகுதிகளில் நூறு நாள் வேலைத்திட்டங்கள் போன்றவற்றை நடைமுறைப்படுத்துவதில் பெரும் சிரமங்கள் ஏற்படுகின்றன. சில மாநிலங்களில் இந்தத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட பல்வேறு பணிகள் மாவோயிஸ்டுகளால் சிதைக்கப்பட்டன. அரசை ஸ்தம்பிக்கச் செய்கிறோம் என்று இவர்கள் நடத்தும் வளர்ச்சிக்கு எதிரான வன்முறைகளை இவர்களுக்கு ஆதரவாக இயங்கும் அறிவுஜீவிகள் கண்டுகொள்வதேயில்லை.


இவர்கள் "வளர்ச்சி" என்று சொல்வது மாவோயிஸ்டு அமைப்பின் வளர்ச்சியைப் பற்றியதாக இருக்குமோ...?

Tuesday, October 20, 2009

குள்ள அப்புவின் சர்க்கஸ் துப்பாக்கியும், தங்க விலையும்

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. மக்களின் தேவைகள் மற்றும் அவர்களின் வாங்கும் சக்தியைத்தாண்டி விலை சென்றுவிட்டதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் மக்கள், தங்கத்தின் மீது முதலீடு செய்வது பற்றியெல்லாம் யோசிக்கும் நிலையில் இல்லை.

இந்த நிலை ஒருபுறம் இருந்தாலும், இந்தியாவில் தங்கம் விலை மேலே, மேலே... மேலே என்று விளம்பரப்பாட்டைப் பாடிக் கொண்டே உயரப் பறக்க ஆரம்பித்தது. சர்வதேசச் சந்தையில் அதிகரித்துவிட்டதே... என்ன செய்வது என்று கையைப் பிசைவதைப் போல அபிநயம் பிடித்துக் காட்டினர் அத்துறையைச் சேர்ந்தவர்கள். அதையும் மீறி இந்தியர்கள் தங்கம் வாங்கினார்கள் என்று விலையேற்றத்திற்கு ஆதரவாக செய்திகளும் வெளிவந்தன. விலையேற்றம் காரணமாக பல திருமணங்கள் தள்ளிப் போயிருக்கின்றன என்பது பிரசுரமாகாத செய்திகளில் ஒன்றாக இருந்துவிட்டது.

அபூர்வ சகோதரர்கள் என்ற படத்தில் குள்ள வேடத்தில் நடித்த கமல்ஹாசன் கையில் ஒரு சர்க்கஸ் துப்பாக்கி இருக்கும். வில்லன் கையில் அந்தத் துப்பாக்கி சிக்கிவிடும். கமல்ஹாசனை குறிவைத்து வில்லன் சுடும்போது துப்பாக்கியின் பின்புறமிருந்து குண்டு கிளம்பி வில்லனையே பதம்பார்த்துவிடும். கமல்ஹாசன் சிரித்துக் கொண்டே சொல்வார், அது சர்க்கஸ் துப்பாக்கி. பின்னாடியும் சுடும் என்று. உடனே வில்லன், துப்பாக்கியைத் திருப்பிப் பிடித்துக் கொண்டு சுடுவார். அப்போதும் குண்டு அவர் மேல்தான் பாயும். முன்னாலும் சுடும் என்பார் கமல்.

இதுபோல்தான் தங்கத்தின் விலை ஆகிவிட்டது. சர்வதேசச் சந்தையில் ஏறும்போதும் ஏறியது. அங்கு இறங்கும்போதும் இங்கு ஏறுகிறது. ஒரேயொரு வித்தியாசம். படத்தில் அடிபட்டது வில்லன். இங்கு அடிபடுவது பொது மக்கள்.

Sunday, October 18, 2009

"தேசியவாதி நரகாசுரன்" - கற்பனை



தீபாவளி மலருக்கு சிறப்பு பேட்டி கேட்டு பலரைச் சந்திக்கிறார் பத்திரிகையாளர் ஒருவர்.

வணக்கம். அத்வானிஜி, தீபாவளிக்கு சிறப்பு செய்தியா ஏதாவது சொல்ல விரும்புறீங்களா...

அத்வானி : நான் அப்புடி பாரபட்சமா பாக்குறதுல்லயே... எப்பவுமே சிறப்பு செய்திதான். ஜின்னா, காந்தஹார், ஜஸ்வந்த்சிங்னு தீபாவளி, தசரா பாத்தா கொடுத்தேன்...??

பத்திரிகையாளர் : இருந்தாலும் தீபாவளின்னா மக்கள்கிட்ட ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்ல...

அத்வானி : ஓ... சரி...சரி.. தீபாவளின்னா நரகாசுரன்தான் நினைவுக்கு வர்றாரு...

பத்திரிகையாளர் : இயல்புதான... எல்லாருக்குமே நினைவுக்கு வருவாரு...

அத்வானி : அது வேற... என்னோட பார்வை வேற... நரகாசுரன் ஒரு தேசியவாதி.

பத்திரிகையாளர் : அப்படியா... சொல்லவே இல்லை...

அத்வானி : அதான் சொல்லிட்டனே... அவரு சமாதி எங்கருக்குனு தெரியாது. தெரிஞ்சா பெரிய மாலை ஒண்ணு வெச்சு தீபாவளி அன்னிக்கு அஞ்சலி செலுத்தலாம்...

பத்திரிகையாளர் : உங்க கட்சிக் கொள்கைக்கு எதிரா போற மாதிரில்ல இருக்கு...

அத்வானி : கட்சியா... அத ஆரம்பிக்குறதயே நான் ஒத்துக்கலை... கட்சி துவக்குறதுக்காக நடந்த கூட்டத்துல நான் கலந்துக்கல...
பத்திரிகையாளர் : இல்லையே... அந்தக்கூட்டப் புகைப்படத்துல நீங்க இருந்தது எங்களுக்கு ஞாபகம் இருக்கே...

அத்வானி : ஃபோட்டோவுல இருப்பேன்... ஆனா கூட்டத்துல இல்லை..

பத்திரிகையாளர் : தீபாவளி அதுவுமா சிறப்பா ஏதாவது பேட்டி கொடுப்பீங்கன்னு பாத்தா விவகாரமால்ல போகுது...

அத்வானி : தீபாவளி கொண்டாடுறதயே நான் ஒப்புக்கலை.. தெரியுமா...

அங்கிருந்து ஓட்டம் பிடிக்க ஆரம்பித்த பத்திரிகையாளர் மன்மோகன்சிங் முன்னால் மூச்சிரைக்க போய் நின்றார்.

(கவலையுடன் காட்சியளிக்கும் மன்மோகன்சிங்) : வாங்க... வாங்க...

பத்திரிகையாளர் :தீபாவளிக்கு ஒரு சிறப்பு பேட்டி எடுக்கலாம்னு வந்தேன். நீங்க கவலையா இருக்குற மாதிரி இருக்கே...

மன்மோகன்சிங் : ஆமா... தீபாவளி அன்னக்கி எல்லாரும் அணுகுண்டு வெடிப்பாங்களே... ஒபாமா ஏதாவது நினைச்சுப்பாரோன்னு கவலையா இருக்கு...

பத்திரிகையாளர் : தீபாவளிக்கு சிறப்பா ஏதாவது சொல்ல விரும்புறீங்களா...

மன்மோகன்சிங் : ஒரே கோரிக்கைதான்... அணுகுண்டு வெடிய மட்டும் வெடிக்காதீங்கன்னு பெரியவங்க, சின்னவங்கங்களுக்கு கேட்டுக்குறேன்... அமெரிக்க இந்தியர்கள் வெடிச்சுக்கலாம்.. இந்திய இந்தியர்கள் தயவு செஞ்சு வெடிக்காதீங்க... ஒபாமா சர்டிபிகேட் தர மாட்டேன்னு சொல்லிட்டா அவ்வளவுதான்... என்னோட காதல் தோல்விக்கு நீங்க காரணமாயிராதீங்க...

அதற்குள் தொலைபேசி அழைப்பு.

மன்மோகன்சிங் : யாரு... குட்ரோச்சியா.. ஹேப்பி தீபாவளி...(என்று உற்சாகமாகிறார்) ஆமா... கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. சின்ன வேலைதான்... உங்கள வழக்குலருந்து விடுவிக்குற வேலை... எவ்வளவு நாளாகிப்போச்சு...(மீண்டும் சோகம் அவரைக் கவ்வுகிறது)

இவர் சோகம் நம்மளத்தாக்கி... ம்..ஹூம்.. தாங்காது.. என்றவாறு நகர்கிறார் பத்திரிகையாளர்.

அடுத்து அவர் சந்தித்தது மத்திய அமைச்சர் அழகிரி. மக்கள் நலத்திட்டங்கள் எல்லாமே அவர் கையால்தான் இப்போதெல்லாம் வழங்கப்படுகிறது. மனுவில் குத்த குண்டுசி வேணும்னு ஒரு பொதுஜனம் கேட்டால்கூட அவரை அழைத்து அவர் கையால் கொடுக்க வைப்பார்கள் என்ற அளவிற்கு போயுள்ளது.

தீபாவளி வருது... விலைவாசி எக்குத்தப்பா ஏறிப்போயிருக்கே.. என்று கண்ணீரும், கம்பலையுமாக நிற்கும் மக்களின் கண்ணீரைத் துடைக்க அரசு இலவச கைக்குட்டையை வழங்கும் திட்டத்தை அறிவித்தது. மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அழகிரியே கைக்குட்டைகளை வழங்கிக் கொண்டிருந்தார். மேடைக்குக்கீழ் இருந்த கட்சிக்காரர்கள் சிலர், அடுத்தது அமைச்சரே கண்ணீரைத்துடைத்துவிடும் திட்டம்தான் என்றனர்.

பத்திரிகையாளர் : வணக்கம் சார். தீபாவளிக்கு ஏதாவது...

அழகிரி : அது வட இந்தியப் பண்டிகையாச்சே... இப்பல்லாம் வட இந்தியான்னாலே வெறுப்பாதான் இருக்குது... ஏன்னே புரியலை...

பத்திரிகையாளர் : பருவநிலை ஒத்துக்கலையோ...

அழகிரி : பருவநிலை, சூழ்நிலை, கோப்புநிலைனு எல்லாம்தான் ஒத்துக்க மாட்டேங்குது... மதுரைல இருந்தாதான் தெம்பா இருக்குற மாதிரி இருக்கு...

பத்திரிகையாளர் : என்ன சார்... தீபாவளிக்கு யாருமே சிறப்பா எதுவும் சொல்ல மாட்டேங்குறீங்களே...

அழகிரி : அப்படின்னா பல பேர்கிட்ட கேட்டுகிட்டு கடைசியாத்தான் இங்க வந்தீங்களா...?? (சுற்றியிருந்தவர்கள் பத்திரிகையாளரை நோக்கி பாய்ந்தனர்.)

தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடிய பத்திரிகையாளர் கமலாலயத்திற்குள் நுiஎழகிறார் பத்திரிகையாளர். கூட்டமாகத் தெரிந்தது. மூன்று பேர் அமர்ந்திருந்தார்கள். அதில் ஒருவர் இல.கணேசன்.

பத்திரிகையாளர் : வணக்கம்.. கணேசன்ஜி..

இல.கணேசன் : வாங்க... வாங்க...

பத்திரிகையாளர் : தீபாவளிக்கு சிறப்பு செய்தி வாங்க வந்தேன்...என்று இழுத்தார்.

இல.கணேசன் : அடடே.. வாங்க.. சிறப்போ சிறப்புதான்... தீபாவளிய ஒட்டி நாடே திரும்பிப்பாக்குற மாதிரி ஒண்ணு செய்யப்போறோம்...

பத்திரிகையாளர் : என்னது அது...இல.கணேசன் : தீபாவளியக் கொண்டாடுற எல்லாரும் எங்க கட்சி உர்ருப்பினர்கலனு அறிவிக்கப்போறோம்...

பத்திரிகையாளர் : அவங்க ஒப்புக்கணுமே...

இல.கணேசன் : ஒப்புக்குறவங்க மட்டும்தான் தீபாவளி கொண்டாடனும்... மத்தவங்கள்லாம் பாகிஸ்தானுக்கு போயிரலாம்... இதக்கண்காணிக்க முத்தாலிக் தலைமைல குழு போட்டிருக்கோம்...

பத்திரிகையாளர் : இதுக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன சம்பந்தம்...?

இல.கணேசன் : அதப்பத்தி பேசாம எப்படி இருக்க முடியும்... எங்க கட்சில இருக்கணும்னா பாகிஸ்தானத் திட்டணும்... கட்சில இருந்து வெளியேறணும்னா பாகிஸ்தானப் பாராட்டணும்... இதான் கொள்கை...

பத்திரிகையாளர் : நரகாசுரனக் கொன்னதுக்குதான தீபாவளி கொண்டாடுறோம்...

இல.கணேசன் : நஸ்ருதீன்தான் நரகாசுரன்... எல்லை தாண்டி வந்த ஆள்தான். பேர மாத்திக்கிட்டான்...

இளைப்பாறலாம் என்று வந்த இடத்தில் தலைவலி அதிகமாகி விடுமோ என்ற அச்சத்தில் பத்திரிகையாளர் வெளியேற முயன்றபோது, இருங்க... உறுப்பினர் கார்டு வாங்கிட்டுப்போய் தீபாவளி கொண்டாடுங்க... என்று தடுத்தார் இல.கணேசன்.

அய்யய்யோ... என்னை விட்டுருங்க... சிறப்புப் பேட்டியே வேண்டாம்.. என்றவாறு ஓடுகிறார் பத்திரிகையாளர்.

யார் மீதோ மோதி விடுகிறார். யார் என்று நிமிர்ந்து பார்த்தால் சாட்சாத் நரகாசுரனே நிற்கிறார்.

நரகாசுரன் : என்னைப் பார்த்தால் பயமாக இல்லையா...??

பத்திரிகையாளர் : யார் நீங்க...

நரகாசுரன் : நான்தான் நரகாசுரன்...

பத்திரிகையாளர் : துவரம்பருப்பு கிலோ 100 ரூபாயைத் தொட்டுக்கிட்டு இருக்குற பயங்கரத்த பாத்த மக்கள் உமக்கெல்லாம் இனி பயப்பட மாட்டார்கள்...

நரகாசுரன் : என்ன...

பத்திரிகையாளர் : இதுக்கு மேலயும் இங்க நின்னா ஏதாவது பெரிய ஜவுளிக்கடை வாசல்ல வர்றவங்கள வரவேற்குறதுக்கு நிறுத்திருவாங்க... போறவங்க, வர்றவங்க எல்லாம் காமெடி பண்ணிருவாங்க...
"அய்யய்யோ" என்று அலறியவாறு நரகாசுரன் ஓடுகிறார்.
பத்திரிகையாளர் நிதானமாக நடந்து செல்கிறார்.

Tuesday, October 13, 2009

எம்.பி.க்களுக்கு "விஸ்கி" அனுப்பினார் மல்லையா!



தீபாவளி பரிசாக விஸ்கி பாட்டில்களை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் மதுபான தொழிலதிபர் விஜய் மல்லையா.


தில்லியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு இந்த பாட்டில்கள் அனுப்பப்பட்டன. பல உறுப்பினர்கள் தலைநகரில் தற்போது இல்லை. அவர்கள் பெரும்பாலும் தீபாவளி கழித்துதான் தலைநகருக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் வீடுகளில் இருந்த உறுப்பினர்களில் சிலர் இதை தங்களுக்கு ஏற்பட்ட அவமரியாதையாகப் பார்த்துள்ளனர்.


இவ்வாறு மது பாட்டில்களை அனுப்புவதற்கு முன்பாக நாடாளுமன்றம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் சட்டம் ஆகியவற்றிற்கு உள்ள கவுரவத்தை மனதில் கொண்டிருக்க வேண்டும் என்று பிரபாத் ஜா என்ற உறுப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளார். பொது இடங்களில் குடிப்பவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்போவதாக தில்லி அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் வெளிப்படையாக இந்தப் பாட்டில்களை அனுப்பிய மல்லையா மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கன் என்று தெரியவில்லை என்கிறார் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்.


இவ்வாறு பாட்டில்களை வாங்கியது மற்றும் அனுப்பி வைப்பதற்காக ஏற்பட்ட செலவை மல்லையாவின் பாக்கெட் ஏற்றுக்கொள்கிறதா அல்லது அவரது தலைமையிலான நிறுவனங்களின் தலையில் கட்டப்படுகிறதா என்பதையும் பார்க்க வேண்டும் என்கிறார்கள் சிலர். வெறும் காலண்டர் தயாரிப்பதற்காக நூற்றுக்கணக்கான மாடல்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று நிறுவனத்தின் கணக்கில் கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்தவர் இந்த மல்லையா என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, October 12, 2009

தெற்கில் மீண்டும் வட்டமிடுகிறது அமெரிக்கக்கழுகு!




ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் ஆகிய நாடுகளின் ஆக்கிரமிப்பில் பெரும் கவனம் செலுத்திக் கொண்டிருந்த அமெரிக்கா மீண்டும் தென் அமெரிக்க நாடுகளின் பக்கம் திரும்பியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் தென் அமெரிக்காவின் அரசியல் சூழல் பெரிதும் மாறியுள்ளது. வெனிசுலா முன்னேற்றப்பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் நலக்கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் வெனிசுலா கண்டுள்ள வெற்றி மற்ற தென் அமெரிக்க நாடுகளை உத்வேகப்படுத்தியது. அரசியல் ரீதியாகவும் தென் அமெரிக்க அரசுகள் ஏகாதிபத்திய அமெரிக்காவுடன் முன்பு இருந்தது போன்ற நெருக்கத்தை வைத்துக் கொள்ளவில்லை.

கொலம்பியா மற்றும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசைக் கவிழ்த்துவிட்ட ஹோண்டுரஸ் ராணுவம் ஆகியவைதான் அமெரிக்காவிற்கு ஜால்ரா தட்டிக் கொண்டிருக்கின்றன. ஹோண்டுரசின் ஜனநாயகப் படுகொலை அமெரிக்காவின் ஆதரவில்லாமல் நடந்திருக்க முடியாது என்பதுதான் தென் அமெரிக்க நிகழ்வுகளைத் தொடர்ந்து கவனித்துவரும் அரசியல் வல்லுநர்களின் கருத்தாகும். தென் அமெரிக்க நாடுகள் ஒன்றிணைந்து தற்போது ஏற்படுத்தியுள்ள தனியாக வங்கி, தொலைக்காட்சி நிறுவனம், பிராந்திய ரீதியான வர்த்தக ஒப்பந்தங்கள் என்பதெல்லாம் 1990களில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. வெனிசுலா மற்றும் கியூபா ஆகிய நாடுகள் இந்த முயற்சிகளை எடுப்பதில் முன்நின்றன.

இந்த நிலையில்தான் அமெரிக்கா தென் அமெரிக்க நாடுகள் தனது கண்களைப் பதித்துள்ளது. கொலம்பியாவில் புதிதாக ஐந்து ராணுவத்தளங்களை அமெரிக்கா அமைக்கிறது. கேட்டால், போதைப்பொருட்கள் கடத்தலைத் தடுக்கவே இந்த ஏற்பாடு என்று கூறிக்கொள்கிறது. போதைப்பொருட்கள் கடத்தும் நாடுகள் என்று கூறி வெனிசுலாவையும், பொலிவியாவையும் கருப்புப்பட்டியலில் வைத்திருப்பதாகவும் அமெரிக்கா கூறுகிறது. ஆனால் இந்தப்பகுதியிலேயே அமெரிக்கா மற்றும் கொலம்பிய ஆகிய இருநாடுகள்தான் அதிகமாக போதைப்பொருட்களை விளைவிப்பதோடு நுகரவும் செய்கின்றன. இடதுசாரிக்கொள்கைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தும் இருநாடுகள் வெனிசுலா மற்றும் பொலிவியா என்பதே கருப்புப்பட்டியல் தயாரிப்புக்குக் காரணமாகும்.

அதோடு, பிரேசில் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் ஆயுதங்களை வாங்கிக் குவிக்கின்றன என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. கொலம்பியாவும் ஆமாம் என்று அருகில் அமர்ந்து கொண்டு தலையாட்டுகிறது. அமெரிக்காவிடமிருந்து வாங்காமல் பிரேசில் பிரான்சிடமிருந்தும், வெனிசுலா ரஷ்யாவிடமிருந்தும் ஆயுதங்களை வாங்குவதால்தான் இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. படைப்பெருக்கம் மற்றும் ஆயுதக்குவிப்பு என்று அமெரிக்கா கூறுவதெல்லாம் சொந்த நாட்டு மக்களை அச்சுறுத்தி வெளியில் தனது ஆக்கிரமிப்பை அதிகரித்துக் கொள்ளவே என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியமாகிவிட்டது.

உலகிலேயே அதிகமான நாடுகளில் தனது ராணுவத்தளங்களை ஏற்படுத்தியிருப்பது அமெரிக்காதான். 46 நாடுகளில் 865 அமெரிக்கத்தளங்கள் உள்ளன. பல நாடுகளில் அதன் அரசுகள் மற்றும் மக்களின் விருப்பத்திற்கு மாறாகவும் இந்தத்தளங்கள் அமைந்துள்ளன. லத்தீன் அமெரிக்காவிலேயே எல் சால்வடார், ஹோண்டுரஸ், பியூர்ட்டோ ரிகோ, கியூபா, அருபா, கியுராசோ மற்றும் பராகுவே ஆகிய நாடுகளில் இந்தத் தளங்கள் இன்னும் உள்ளன. இரண்டாம் உலகப்போருக்குப்பிறகு முதன்முறையாக, தென் அமெரிக்கக் கடற்பகுதிகளில் அமெரிக்கக் கப்பற்படை உலாவத் தொடங்கியுள்ளது. அர்ஜெண்டினா மற்றும் உருகுவே ஆகிய நாடுகளின் அரசுகள் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அமெரிக்க படைத்தளங்கள் தொடர்பாக ஊசலாட்டம் காட்டுகின்றன.

சொந்த பாதுகாப்பிற்காக ஆயுதங்களை வாங்கும் எங்களைப் பார்த்து, கொலம்பியாவில் ஏழு படைத்தளங்களை உருவாக்கத்திட்டமிடும் அமெரிக்கா எப்படி கேள்வி எழுப்பலாம் என்று உரிமைக்குரல் எழுப்புகிறது வெனிசுலா. அமேசான் பகுதிகளின் இயற்கைவளங்களைக் கொள்ளையடிக்கவே இந்தப்புதிய படைத்தளங்கள் என்று தென் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்புக் கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது. இந்தக்கூட்டத்தில் கொலம்பியாவும் கலந்து கொண்டது. அமெரிக்காவின் படைத்தளங்கள் அமைப்பதற்கான ஒப்பந்த விபரங்களைத் தெரிவிக்குமாறு மற்ற தென் அமெரிக்க நாடுகள் கேட்டபோது அதைத்தர கொலம்பியா மறுத்துவிட்டது. சொந்த நாட்டிற்கு எதிரான அம்சங்கள் அதில் இருப்பதுதான் காரணம் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.


Saturday, October 10, 2009

அடடே... மதியுமா...??


அடடே...(தினமணி, அக்.7) பகுதியில் ஏர் இந்தியா மகாராஜாவே சலித்துக் கொள்வது போன்ற கேலிச்சித்திரம் வரையப்பட்டுள்ளது. அவரால் தனது பைலட்டுகளை நம்ப முடியவில்லையாம். எப்ப சம்பளத்தை உயர்த்திக் கேப்பாங்க.. எப்ப ஸ்டிரைக் பண்ணுவாங்க... அடிதடியில இறங்குவாங்க... ஒண்ணுமே புரிய மாட்டேங்குதுன்னு சொல்வது போல் அந்தக் கேலிச்சித்திரம் உள்ளது.


பொதுத்துறை, வங்கி, காப்பீடு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் தங்கள் கோரிக்கைகளுக்காக போராடினால் வரிந்து கட்டிக் கொண்டு இறங்கி விடுகிறார்கள் இந்த தனியார்துறை ஆதரவாளர்கள். மதியும் அவர்களின் வரிசையில் இணைந்து கொள்கிறார். ஜெட் ஏர்வேஸ் பைலட்டுகளின் வேலை நிறுத்தம் நிறைவு பெற்று இன்னும் அந்நிறுவனத்தின் அனைத்து விமானங்களும் விண்ணில் பறக்கத் துவங்கவில்லை. அப்போதுமட்டும் ஜெட் நிறுவனத்தைக் கேலி செய்து சித்திரம் வரைய மதிக்கு ஏன் தோணவில்லை..? அது தனியார் நிறுவனம் என்பதாலா...??


சில நாட்களுக்கு முன்பு, முதலாளிகள் தங்கள் நிறுவனத்திலிருந்து எடுத்துக்கொள்ளும் ஊதியத்திற்கு வரம்பு தேவை என்று மத்திய அமைச்சர் சல்மான் குர்சித் கூறினார். உடனே முதலாளிகள் சங்கங்கள் அவர் மீது பாய்ந்து விட்டன. இவர்களுக்கு ஆதரவாக ஊடகங்களும் தொடையைத் தட்டிக் கொண்டு இறங்கிவிட்டன. பாவம்... ஊதியத்தைக் குறைத்துவிட்டால் அடுத்த வேளைச் சோற்றிற்கு எங்கே போவார்கள்... என்பதுபோல ஓலமிடுகிறார்கள்.


இதுதான் இவர்களின் சம்பளப் பட்டியல்(ரூ.கோடியில்)


முகேஷ் அம்பானி - 44.02

மல்விந்தர் சிங் - 19.59

சுனில் மிட்டல் - 19.55

சஜ்ஜன் ஜிண்டால் - 16.73

பங்கஜ் ஆர் படேல் - 14.43

குமாரமங்கலம் பிர்லா - 11.25

கமல் சிங் - 10.64

ஒவ்வொரு ஆண்டும் வெறும் சம்பளமாக இவர்கள் வாங்கும் தொகை இது. நெருக்கடி நிலவுகிறது என்று கூறி சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மானியமாக வாங்கிக்கொண்ட முதலாளிகள் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள மாட்டேனென்கிறார்கள். ஆனால் ஊழியர்கள் என்று வந்துவிட்டால் அவர்கள் சீட்டைக் கிழித்து அனுப்பவதுதான் முதலாளிகளின் தலையாய கடமையாக இருக்கிறது.

அடடே... மதியுமா..? என்ற வாசகர்கள் நினைத்துக் கொள்வதுபோல்தான் இந்தக் கேலிச்சித்திரமும் உள்ளது.

Thursday, October 8, 2009

கோவிலுக்குள் நுழைந்தே விட்டார்கள் தலித்துகள்!



விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்தில் உள்ளது காங்கியனூர் கிராமம். இங்குள்ள திரௌபதி அம்மன் கோவிலில் வழிபட தலித்துகள் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் தீ மிதி திருவிழாவில் பங்கேற்கவும் தடைசெய்யப்பட்டது.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் புகார் அளித்தனர். தலித்து மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்கப்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் அதைக் கிடப்பில் போட்டார்கள். இதனால் மக்களைத் திரட்டி கோவிலுக்குள் நுழைவது என்று முடிவு செய்யப்பட்டது.


செப்.30 அன்று ஆலய நுழைவுப் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், ஜி.லதா எம்எல்ஏ, மாவட்ட செயலாளர் ஜி.ஆனந்தன், அம்பேத்கர் நிக் கோலஸ் ஆகியோர் தலைமை தாங்கி னர். ஊர்வலமாக சென்ற போது காவல்துறையினர் 3கி.மீ தூரத்திற்கு முன்னதாகவே தடுத்து நிறுத்தினர். மேலும், தலைவர்கள் மீதும் மக்கள் மீதும் காட்டு மிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியதோடு 105 பேரை கைது செய்து கடலூர் மத்திய சிறை யில் அடைத்தனர்.


காவல்துறையின் அடாவடி தனத்தை கண்டித்தும், தலித் மக்கள் வழிபட அனுமதிக்க வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் தொடர்ந்து கண்டன இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில் கிராமத்தில் அமைதி யை நிலைநாட்ட அக்டோபர் 6 மற் றும் 7 ஆகிய தேதிகளில் திருக்கோவி லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற் றது. 6ம் தேதி கோட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமையில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில், திரௌபதி அம்மன் கோவில்அனைவருக்கும் பொதுவானது. அனைத்து மதத்தினரும் சாமியை வழிபட உரிமை உள் ளது. இதனை தடைசெய்ய யாருக்கும் உரிமை இல்லை. அப்படி தடை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப் பட்டது.


மேலும் இந்தகூட்டத்தில் அமைதி ஒப்பந்தமும் ஏற்படுத்தப்பட்டது. இதில் தலித் பகுதியில் இருந்து சென்ற முக்கிய பிரமுகர்கள் மட்டும் கையொப்பமிட்டனர். எதிர் தரப்பில் கையெழுத்திட அவகாசம் கோரப் பட்டது. 24 மணி நேர அவகாசம் வழங்கிய அதிகாரிகள் உரிய பதில் கிடைக்க வில்லை என்றால் கோவி லுக்கு பூட்டு போடப்படும் என்றும் எச்சரித்தனர். மறுநாள் (அக்டோபர் 7) மாவட்ட வருவாய் அலுவலர் கதிர வன் தலைமையில் மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெற்றது. மறுதரப்பி னர் கையெழுத்து இடவில்லை. அதனை தொடர்ந்து டிஎஸ்பி நல்லியப்பன் தலைமையில் தலித் மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபட்டனர். இதுபோன்று தலித்துகள் உள்ளே நுழைய முடியாத நூற்றுக்கணக்கான கோவில்கள் தமிழகத்தில் இன்னும் உள்ளன. பட்டியல் பெரியதுதான். ஆனால் தீண்டாமை ஒழிப்பு முன்னணி துவக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள்தான் ஆகியுள்ளது. அதற்குள் சுமார் 25 கோவில்களில் நுழைய அனுமதி பெற்றுத்தந்துள்ளது. இரட்டைத் தம்ளர், பொதுக்குளத்தில் தண்ணீர் எடுக்க தடை, சலூனில் தலித்துகளுக்கு முடிவெட்ட தடை உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகளோடு தலித்துகளின் அன்றாட வாழ்க்கையே போராட்டமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 105 பேரும் இன்னும் சிறையில்தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, October 7, 2009

இடைநிலைக்கல்வியை இடையிலேயே விட்ட அரசு!



பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே விட்டு விட்டு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த நிலையை கல்வி வல்லுநர்கள் கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், அரசோ அனைத்தையும் தனியார் கையில் கொடுத்துவிட்டால் எல்லாம் தீர்ந்துவிடும் என்று கூறுகிறது. தற்போதைய மத்திய கல்வித்துறை அமைச்சரான கபில் சிபல், புரட்சிகரமான(!) பல திட்டங்களை அறிவித்துக் கொண்டே போகிறார். அரசுப்பள்ளிகளை தரமாக்க அதிரடி ஆலோசனை ஒன்றையும் கூறினார். அப்பள்ளிக்கட்டிடங்களில் முதல் மாடியில் தனியார்கள் பள்ளி நடத்த அனுமதி அளிக்கப்போவதாகக் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார்.



சமூக நல நடவடிக்கைகள் வெட்டுங்கள் என்று இவர்களுக்கு மருந்துச்சீட்டு எழுதிக்கொடுத்த உலக வங்கியே கொந்தளிக்கும் அளவிற்கு மத்திய அரசின் அலட்சியம் உள்ளது. இந்தியாவின் ஆரம்ப, இடைநிலை மற்றும் உயர்கல்வி குறித்து உலக வங்கி ஆய்வொன்றைச் செய்துள்ளது. சாம் கார்ல்சன் என்ற ஆய்வாளர் இந்த ஆய்வை மேற்கொண்டார். அதில் திறன்படைத்த உழைப்பாளிகளை உருவாக்கக்கூடிய இடைநிலைக்கல்விக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதை அவர் கண்டுள்ளார். தற்போது கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியில் ஆரம்பக்கல்விக்கு 52 சதவிகிதமும், இடைநிலைக்கல்விக்கு 30 சதவிகிதமும், உயர்கல்விக்கு 18 சதவிகிதமும் செலவழிக்கப்படுகிறது.



கடந்த முறை ஆட்சிக்கு வந்தபோதே கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்துவோம் என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதிமொழி அளித்தது. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு சதவிகித நிதியை கல்விக்காக ஒதுக்குவோம் என்று குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் எழுதியே வைத்தனர். இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டதற்கு இடதுசாரிக்கட்சிகள் அளித்த நிர்ப்பந்தமே காரணம். ஆனால் பெயரளவுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீட்டை அதிகரித்த மத்திய அரசு, தற்போது இடதுசாரிகளின் ஆதரவில் ஆட்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லாததால் அது பற்றிப் பேசுவதேயில்லை.



நாடு முழுவதுமுள்ள பள்ளிகளில் சுமார் 25 சதவிகித ஆசிரியப் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன. கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றுபவர்களில் முதுநிலைப்பட்டம் அல்லது ஆய்வுப்படிப்பு முடிக்காமல் இருப்பவர்கள் 57 சதவிகிதம் பேராகும். இடைநிலைக்கல்வி முடித்து உயர்கல்விக்கு செல்பவர்களுக்காக ஏழு சதவிகித இடங்கள் மட்டுமே உள்ளன. ஆரம்பக் கல்வி நிறைவு செய்பவர்களிலேயே 52 சதவிகிதம் பேர்தான் இடைநிலைக்கல்விக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. சீனாவில் இது 91 சதவிகிதமாகவும், இலங்கையில் 83 சதவிகிதமாகவும், வியட்நாமில் 72 சதவிகிதமாகவும் உள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த நிலைமை மோசவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. 2017-18 ஆம் ஆண்டில் ஆரம்பக்கல்வி பயில சுமார் ஆறு கோடி மாணவர்கள் பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள் என்று உலகவங்கி ஆய்வு கணிக்கிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாதிரியான நிலைமை இருக்கிறது. ஆரம்பக்கல்வி முடித்து இடைநிலைக்கல்விக்கு அனுமதி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை பீகாரில் 22 சதவிகிதமாக உள்ளது. ஜார்க்கண்டு மிக மோசமான நிலையில் வெறும் நான்கு சதவிகிதமாக இருக்கிறது. தமிழகத்திலும் வெறும் 44 சதவிகித மாணவர்கள்தான் ஆரம்பக் கல்வியிலிருந்து இடைநிலைக்கல்விக்கு செல்கிறார்கள் என்று உலகவங்கி கூறுகிறது. பொதுவாகவே கல்வியில் முன்னேறிய மாநிலமான கேரளாவில் 92 சதவித மாணவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்கின்றனர். படிப்பை நடுவிலேயே கைவிடும் பிரச்சனையைத் தீர்க்க பல்வேறு ஆலோசனைகளை தனது ஆய்வறிக்கையில் உலகவங்கி முன்வைத்துள்ளது.

தரமான கல்வி, போதிய வாய்ப்புகள், நலிந்த பிரிவினருக்கு சிறப்பு உதவிகள் என்றெல்லாம் உலகவங்கியால் தரப்படும் பரிந்துரைகள் இந்திய கல்வி வல்லுநர்களால் முன்வைக்கப்பட்டவையே ஆகும். உலக வங்கியின் ஆய்வில் மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயம் ஒன்றுதான். அதாவது, மிகவும் அபாரமான கல்வித்திறனை வெளிப்படுத்தக்கூடிய முதல் ஐந்து சதவிகித இந்திய மாணவர்கள் சர்வதேச அளவிலும் முன்னணியில் இருக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான். ஆனால் ஒட்டுமொத்த மாணவர்களின் கல்வித்திறன் பற்றிய ஆய்வில், ஆய்வு செய்யப்பட்ட 51 நாடுகளில் இந்தியாவுக்கு 43வது இடம்தான் கிடைத்துள்ளது. இந்தப் புள்ளிவிபரங்கள் மத்திய அரசுக்கு புதிதாக இருக்கலாம். ஆனால் பிரச்சனை மத்திய அரசுக்கு புதிதல்ல. ஏற்கெனவே தெரிந்தும் கண்டுகொள்ளவில்லை. தெரிந்தே மத்திய அரசு செய்யும் தவறுகளில் இதுவும் ஒன்று.

Tuesday, October 6, 2009

பண்டங்களாக மாற்றப்படும் சிறுமிகள்!


பாலியல் தொழிலுக்காக பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தப்படுகிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவலை தேசிய பெண்கள் ஆணையம் கவலையுடன் தெரிவித்துள்ளது. இவ்வாறு கடத்தப்படுவது குறித்து தேசிய பெண்கள் ஆணையத்தின் சார்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. ஆய்வு விபரங்களை ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. நாட்டிலுள்ள 612 மாவட்டங்களில் 378 மாநிலங்களில் இந்தக் கொடுரம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, தென் மற்றும் கிழக்கு மாநிலங்களில்தான் இது அதிகமாக நடப்பதாக ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. இந்தக் கொடுமைகள் நடப்பதற்கு வறுமை, வேலையின்மை, எழுத்தறிவின்மை மற்றும் பாலினப் பாகுபாடு ஆகியவை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : சராசரியாக 90 சதவிகித தென் மற்றும் கிழக்கு மாநில மாவட்டங்களிலிருந்து பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்காக கொண்டு செல்லப்படுகின்றனர்.தமிழகத்திலும் இந்தக் கொடுமை பரவலாக இருக்கிறது. இங்கிருந்து 93.33 சதவிகித மாவட்டங்களிலிருந்து பெண்களையும், சிறுமிகளையும் கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பது நடந்து கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் சுமார் 28 லட்சம் பெண்கள் இந்தப் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நாட்டில் 15 முதல் 35 வயதுவரையுள்ள பெண்களின் மொத்த எண்ணிக்கையில் 2.4 சதவிகிதப் பெண்கள் இத்தகைய கொடுரங்களால் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுபவர்களில் 43 சதவிகிதம் பேர் சிறுமிகளாவர்.
இதில் பெரும்பாலான பெண்கள் மற்றும் சிறுமிகள் கட்டாயப்படுத்தப்பட்டே இத்தகைய தொழிலுக்கு தள்ளப்படுகிறார்கள். ஆசை வார்த்தை காட்டி அழைத்துச் செல்லப்பட்டுதான் இவர்கள் இத்தகைய நெருக்கடியை சந்திக்க வேண்டி வருகிறது. இதில் கொடுமையிலும் பெரிய கொடுமை என்னவென்றால் கணிசமான பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களாலேயே இத்தொழிலுக்கு தள்ளப்படுகிறார்கள் என்பதுதான். கிட்டத்தட்ட 22 சதவிகிதம் பேர் குடும்பத்தினரின் நிர்ப்பந்தம் காரணமாகவே இத்தொழிலுக்கு செல்கிறார்கள். எட்டு சதவிகிதம் பேர் தாலி கட்டிய கணவனாலேயே இந்தப் புதைகுழியில் தள்ளப்படுகின்றனர். சுமார் 18 சதவிகிதம் பேர் நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஆகியோரின் தவறான ஆலோசனைகளால் இதில் சிக்கிக்கொள்கிறார்கள்.
இவ்வாறு பெண்களும், சிறுமிகளும் நிர்ப்பந்தத்தாலும், ஆசைவார்த்தைகளாலும் சிக்கிக்கொள்வதற்கு வறுமையே பிரதான காரணமாகும். அதோடு பாலினப்பாகுபாடும் முக்கிய காரணமாக உள்ளது. பெண்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்க ஏராளமான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால் அந்த சட்டங்கள் சரியான முறையில் அமல்படுத்தப்படுவதில்லை. பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் தள்ளப்பட்டு சதி வலையில் சிக்கிக்கொள்வதற்கும், அவர்களுக்கு எதிராக அநீதி இழைக்கப்படுவதற்கும் இத்தகைய அம்சங்களே காரணங்களாக இருக்கின்றன. இவ்வாறு இந்த கொடுமை குறித்த ஆணையத்தின் அறிக்கை கூறுகிறது.இதிலிருந்து அப்பாவி பெண்களையும், சிறுமிகளையும் விடுவிக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கான தீர்வையும் தேசிய பெண்கள் ஆணையமே தனது அறிக்கையில் முன்வைக்கிறது.
பெண்களுக்கு பொருளாதார ரீதியான சுதந்திரம் இல்லாதது முக்கியமான காரணமாகும். அவர்களுக்கு அந்த சுதந்திரம் கிடைக்கச் செய்ய வேண்டும். காகிதங்களில் இருக்கும் சட்டங்கள் முறையாக நடைமுறைக்கு வர வேண்டும். அதோடு, பெண்களும் நம்மைப் போலவே ரத்தமும் சதையும் கொண்டவர்கள். அவர்களும் சமுதாயத்தில் மதிக்கப்படக்கூடியவர்கள் என்ற மனப்பான்மை மக்கள் மத்தியில் உருவாக்கப்பட வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலம் பெரும்பாலான குற்றங்களைத் தடுத்து நிறுத்திவிட முடியும் என்று தேசிய பெண்கள் ஆணையம் கருதுகிறது. பெண்களைப் பண்டங்களாகவும், குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் எந்திரங்களாகவும் பார்க்கின்ற மனநிலை மாற பள்ளிப் பாடத்திட்டத்திலேயே இது குறித்த கருத்துகள் சேர்க்கப்பட வேண்டும். சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான பாகுபாடுகள் இல்லாத நிலை உருவானாலேயே இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதுதான் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடுபவர்களின் கருத்தாகும்.
ஆட்சியாளர்களின் கொள்கைகள் மாற வேண்டும். அதுவே ஆண், பெண் பாகுபாடற்ற நிலையை நோக்கிச் செல்வதற்கான முதல்படியாக அமையும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

வெடிக்கக் காத்திருக்கும் புற்றுநோய்க்குண்டு!



இந்தியர்களைப் பெருமளவில் பாதிக்கும் நோய் காசநோயாகும். எய்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நோய்களைப் பற்றிய விவாதங்கள், விளம்பரங்கள் மற்றும் சிகிச்சைக்கான நிதியுதவிகள் என்று நடந்தாலும் காசநோய் பற்றிய அக்கறை அரசுத்தரப்பில் பெருமளவில் காட்டப்படுவதில்லை. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 17 லட்சம் பேர் காச நோயால் மடிந்து போகிறார்கள். அதில் கிட்டத்தட்ட 30 சதவிகிதம் பேர் இந்தியர்களாவர். இந்த கொடுமை ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மறுபுறத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 2020 ஆம் ஆண்டில் பெருமளவில் வெடிக்கும் வகையில் இதன் பாதிப்பு இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

புற்றுநோய் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்தியக் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் 2020 ஆம் ஆண்டுக்குள் 20 சதவிகிதம் அதிகரிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 4 லட்சத்து 47 ஆயிரம் பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். 2020 ஆம் ஆண்டுக்குள் இந்த ஆண்டு சராசரி சுமார் ஐந்தரை லட்சத்தைத் தொட்டுவிடும் அபாயம் எழுந்துள்ளது. அனைத்து வகையான புற்றுநோய்களுமே அதிகரித்துள்ளன. கடந்த 24 ஆண்டுகள் குறித்த இந்த ஆய்வின்படி வாய்ப்புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

தற்போது ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 28 ஆயிரத்து 66 புதிய வாய்ப்புற்று நோயாளிகள் உருவாகின்றனர். 2020 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 46 ஆயிரத்து 785 ஆக அதிகரிக்கப் போகிறது. சுமார் 66 சதவிகித அதிகரிப்பை புதிய நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்த பத்தாண்டுகள் ஏற்படுத்தப்போகிறது. இரண்டாவதாக மார்பகப்புற்று நோய் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. புதிய நோயாளிகளின் ஆண்டு சராசரி தற்போது 42 ஆயிரத்து 863 ஆக உள்ளது. 2020க்குள் இந்த சராசரி எண்ணிக்கை 51 ஆயிரத்து 194 ஆக உயர்ந்துவிடும். மூளை, நரம்பு, வயிறு என்று அனைத்துப் புற்றுநோய்களுமே அதிகரிக்கவே செய்கின்றன.

இந்த ஆய்வறிக்கையை தயார் செய்துள்ள குழுவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் வினோத் ரெய்னா, இந்தியாவில் ஏற்படும் புற்றுநோயில் முப்பது சதவிகிதம் புகை பிடிப்பதாலும், புகையிலையை வாயில் போட்டு மென்று தின்றுவிடுவதாலும்தான் ஏற்படுகிறது. மார்பக மற்றும் வாய்ப்புற்று நோய்கள் அதிகரித்துள்ளதற்கும் இதுதான் காரணமாகும். பொது இடங்களில் புகை பிடிப்பது மற்றும் புகையிலை சாப்பிடுவது தொடர்பாக செய்யப்படும் விளம்பரங்கள் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும் நாம் பார்க்க வேண்டும். அதோடு, அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் அதிகமாக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். இந்திய மக்கள் தொகையில் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் நெருக்கடியை அதிகரிக்கச் செய்கிறது என்று கூறுகிறார்.

புற்றுநோய்க் கட்டுப்பாட்டுத்திட்டத்தில் புதிய உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது. அதற்கு இந்த ஆய்வறிக்கையின் புள்ளிவிபரங்கள் பெரிதும் உதவும் என்கிறார் மருத்துவ ஆய்வுக்கான இந்தியக்கவுன்சிலின் அதிகாரி ஒருவர். செல்போன்கள் பயன்படுத்துவதால் மூளையில் ஏற்படுத்தும் பாதிப்பை தனியாக ஆய்வு செய்ய வேண்டும். அதன் பயன்பாடு அதிகரித்திருப்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது கவுன்சிலின் கருத்தாக உள்ளது. நார்ச்சத்து உள்ள உணவுகள் குறைந்ததாலும் இந்தியாவில் பாதிப்பு அதிகரித்துள்ளது. மேற்கத்திய உணவுப்பழக்கங்கங்களுக்கு மாறியுள்ளவர்கள்தான் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது ஆய்வறிக்கை.

தேசிய புற்றுநோய் நிதியம் ஒன்றை உருவாக்கி புற்றுநோயால் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு உதவப்போவதாக மத்திய அரசு கூறுகிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வந்தபோதே சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவிகிதமாக உயர்த்துவோம் என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதிமொழி அளித்தது. மக்களுக்கு அளிக்கப்பட்ட அந்த உறுதிமொழி இன்றுவரை காப்பாற்றப்படவில்லை. நோய்கள் பெருகுகின்றன. பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றன என்று அரசுத்துறைகள் தரும் புள்ளிவிபரங்களே கூறுகின்றன. தேவை ஒரு சரியான சுகாதாரக் கொள்கையே என்கிறார்கள் அத்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள்.

Sunday, October 4, 2009

வரம் தர மறுக்கும் பூசாரி!

கிராமப்புற இந்தியாவில் வெறும் 28.3 சதவிகிதம் பேர் மட்டுமே வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்கள் என்பதுதான் அரசின் அதிகாரபூர்வ ஒப்புதல் வாக்குமூலம். வறுமையின் அளவைக் குறைக்க புதிய உத்தியையும் கண்டுபிடித்தார்கள். கிராமப்புற இந்தியர் மாதம் 365 ரூபாய் வருமானம் ஈட்டினால் வறுமைக்கோட்டைத் தாண்டி விடுகிறார் என்பதுதான் அந்த உத்தி. ஒவ்வொரு மனிதருக்கும் தேவையான கிலோரி உணவு அடிப்படையில் கணக்கிட்டால் உதைக்கிறதே என்பது ஆட்சியாளர்களின் கவலை. ஆட்சியாளர்களின் கணக்கு பல ஏழைக்குடும்பங்களை வறுமைக்கோட்டிலிருந்து உதைத்துத் தள்ளியுள்ளது.

இதற்கிடையில் மேலும் புதிய உத்திகளோடு வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்களை எதிர்கொள்ள(!) சுரேஷ் டெண்டுல்கர் தலைமையில் ஒரு குழுவைப் போட்டார்கள். இந்தக்குழு தனது வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. தங்களைப் பற்றி ஒரு குழு ஆய்வு செய்கிறது என்பது எத்தனை ஏழைகளுக்கு தெரியும் என்பது ஒருபுறம். மறுபுறத்தில், ஆட்சியாளர்களும் செல்வந்தர்களும் இந்தக்குழுவின் அறிக்கையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையைச் சொன்னால் இந்த அறிக்கையின் நிலைமை என்ன ஆகும் என்பதை திட்டக்குழு நடத்திக் காட்டியிருக்கிறது. வறுமைக்கோடு பற்றி கிராமப்புற மேம்பாட்டுத்துறை ஒரு ஆய்வு செய்தது. அதை திட்டக்குழு கடுமையாக விமர்சித்துள்ளது. வறுமைக்கோட்டை நிர்ணயிக்க தற்போதுள்ள வருமான வரம்பின்படி சுமார் 1800 கலோரிகளைத்தான் கிராம மக்களால் பெறமுடியும் என்பது அத்துறையின் கண்டுபிடிப்பு. இதனால் தற்போதுள்ள வருமான வரம்புப்படி 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற இந்தியர்கள் வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது. கிராமப்புற வருமான வரம்பை ரூ.700 ஆக உயர்த்தலாம் என்பது அக்குழுவின் பரிந்துரை. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி தர மாட்டார் என்று சொல்வார்கள். இங்கும் மாண்டேக்சிங் அலுவாலியா போன்ற பூசாரிகள் இடைமறிக்கிறார்கள்.

ஐம்பது சதவிகிதத்திற்கு மேல் வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளார்கள் என்று சொல்வதா... என்று திட்டக்குழு துணைத்தலைவர் அலுவாலியா கேள்வி எழுப்புகிறார். இவ்வளவு பேர் வறுமையில் வாடுவது அபாயமான நிலை இல்லையாம். அப்படிச் சொல்வதுதான் அபாயமாம். சுரேஷ் டெண்டுல்கரின் ஆய்வறிக்கைக்கு காத்திருக்கலாம் என்று கூறிவிட்டார்கள். அவரும் அபாயச் சங்கை கையிலெடுத்தால் பூசாரி அலுவாலியா பாய்ந்து பிடுங்கி விடுவார் போலிருக்கிறது.