Sunday, August 30, 2009

அமெரிக்க ஈயங்களும், இந்தியத் தங்கங்களும்!

பல ஆண்டுகளுக்கு முன்பே துவங்கி ஜூன் 2008ல் பெரும் நெருக்கடியாக உருவாக அமெரிக்க பொருளாதார நெருக்கடியால் அபாய கட்டத்தில் இருக்கும் வங்கிகளின் எண்ணிக்கை 416 ஆக உயர்ந்துள்ளது. இந்த அளவிற்கு அபாய கட்டத்தில் வங்கிகள் எண்ணிக்கை இருப்பது கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப்பிறகு நிகழ்ந்துள்ளது. 1994 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில்(ஏப்ரல்-ஜூன்) 434 வங்கிகள் அபாய கட்டத்தில் இருந்தன. அமெரிக்காவின் மத்திய காப்பீட்டுக்கழகம் இந்த நஷ்டத்தில் தத்தளிக்கும் வங்கிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. நெருக்கடி தீர்ந்து விட்டது, இதோ... தீரப்போகிறது என்றெல்லாம் தொடர்ந்து அறிக்கைகள் வந்து கொண்டிருக்கும் வேளையில்தான் மரணப்படுக்கையில் படுக்கும் வங்கிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நடப்பாண்டின் முதல் காலாண்டில் அபாய கட்டத்தில் உள்ள வங்கிகளின் எண்ணிக்கை 315 என்று கணக்கிடப்பட்டிருந்தது. இது குறித்து அப்போது கருத்து தெரிவித்த அமெரிக்க முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள், நெருக்கடி உச்சத்திற்குச் சென்று விட்டது என்றார்கள். ஆனால் மேலும் 111 வங்கிகள் அந்தப் பட்டியலில் சேர்ந்திருப்பது சிக்கல் நீடிப்பதையே உணர்த்துகிறது. அதோடு, 2009ல் இழுத்து மூடப்பட்டு பெரிய, பெரிய பூட்டுகள் தொங்கும் வங்கிகளின் எண்ணிக்கையும் 81 ஆக உயர்ந்துள்ளது. அபாய கட்டத்தில் இருக்கும் வங்கிகளில் போடப்பட்டுள்ள பணத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று மக்களின் தோள்களைத் தட்டிக் கொடுக்க முயற்சிக்கும் அமெரிக்க மத்தியக் காப்பீட்டுக்கழகம் வேலையிழந்துள்ள ஆயிரக்கணக்கான வங்கி ஊழியர்களை அலட்சியப்படுத்தியுள்ளது.


இவ்வளவு திவால் மற்றும் அபாய கட்டத்தில் உள்ள வங்கிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு இருந்தபோதும், இரண்டாவது காலாண்டில் வந்த அனைத்து செய்திகளும் மோசமானவை அல்ல என்று கூறிக்கொள்கிறார் காப்பீட்டுக்கழகத்தின் தலைவர் ஷீலா பேர். இரண்டாவது காலாண்டில் மட்டும் அமெரிக்க வங்கிகளின் இழப்பு 18 ஆயிரத்து 500 கோடியாக இருந்திருக்கிறது. முந்தைய இழப்புகளையெல்லாம் காப்பீட்டுக்கழகம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில்தான் இந்த இழப்பு மீண்டும் ஏற்பட்டுள்ளது. தனது கல்லாவில் 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் இன்னும் இருப்பதையே காப்பீட்டுக்கழகம் சுட்டிக்காட்டிக் கொள்கிறது. நெருக்கடி இப்படியே போனால் காப்பீட்டுக்கழகத்தின் நிலை என்ன ஆகும் என்று ஷீலா பேர் கூறவில்லை.


ஆனால் அரசு கஜானாவிலிருந்து காப்பீட்டுக்கழகம் கடன் வாங்கிக் கொள்ளும் என்கிறார். இந்தக்கழகம் தலையீடு செய்துள்ள நிதி நிறுவனங்களில் 28 சதவிகித நிறுவனங்கள் இரண்டாவது காலாண்டில் நஷ்டம் அடைந்துள்ளன. கடந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்த சதவிகிதம் 18 சதவிகிதமாகவே இருந்தன. கடன் வழங்கி அதனால் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க 3 லட்சத்து 34 ஆயிரத்து 500 கோடி ரூபாயை அமெரிக்க வங்கிகள் இரண்டாவது காலாண்டில் ஒதுக்கி வைத்திருந்தன. இதுவும் கடந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஒதுக்கி வைத்ததை விட அதிகமாகும். இதற்கிடையில் காப்பீட்டுக்கழகத்தால் எடுத்துக் கொள்ளப்பட்ட நிதி நிறுவனங்களின் சொத்து மதிப்பிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.

நிதிநிறுவனங்களின் கணக்கு வைக்கும் முறையையும் அமெரிக்க நிதித்துறையின் உயர் அதிகாரிகளில் ஒருவரான ஜான் டுகான் கேள்விக்கு உட்படுத்தியுள்ளார். சாதனை படைக்கும் அளவில் வீட்டுக்கடன் வழங்கி வரும் வேளையில் லாபத்தைச் சம்பாதித்தன அமெரிக்க வங்கிகள். நஷ்டம் ஏற்பட்டால் வைத்திருக்க வேண்டிய இருப்பு நிதியின் அளவும் அந்த நேரத்தில் அதிகரிக்காமல் குறைந்து கொண்டே போனது எப்படி என்று அவர் கேள்வி எழுப்புகிறார். நஷ்டம் ஏற்பட்டபோது அதைச் சமாளிக்க கைவசம் இருப்பு நிதி இல்லாமல் போனதும் அபாயப் பட்டியல் நீண்டுகொண்டு போவதற்கு ஒரு காரணம் என்பதை அவரது இந்த எச்சரிக்கை காட்டுகிறது. திடீரென்று நஷ்டத்தை ஈடுகட்டுவதற்கான இருப்பு நிதியை வங்கிகள் அதிகரித்தபோது வருமானம் மட்டுமல்லாமல், முதலீட்டிலேயே கைவைக்க வேண்டியிருந்தது என்கிறார் டுகான்.

அமெரிக்க காப்பீட்டுக்கழகத்திடம் இருக்கும் அவசரகால நிதியில் கிட்டத்தட்ட 40 சதவிகிதத்தை இரண்டாவது காலாண்டில் நஷ்டத்தைச் சந்தித்துள்ள வங்கிகளே விழுங்கிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் வரிப்பணத்தில் மேலும் நிதி தாருங்கள் என்று அமெரிக்க அரசிடம் காப்பீட்டுக்கழகம் கையேந்திக் கொண்டிருக்கிறது. அமெரிக்க ஈயங்களுக்கும், ஐரோப்பிய பித்தளைகளுக்கும் நடுவில் இந்திய வங்கிகள் தங்கமாய் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன. இந்திய வங்கிகள் பொதுத்துறையில் இருப்பதே நெருக்கடியிலிருந்து தப்பித்ததற்குக் காரணம் என்று அதை தனியார் மயமாக்கும் முயற்சியில் இருப்பவர்களே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்கள். பொதுத்துறையில் வங்கிகள் நீடித்ததற்கு காரணமான இடதுசாரிக்கட்சிகளின் பேச்சைக் கேட்கிறார்களோ இல்லையோ, சொந்த வாக்குமூலத்தின்படி நின்றாலே வங்கித்துறை காப்பாற்றப்படும் என்பதுதான் பல பொருளாதார நிபுணர்களின் கருத்து.

Thursday, August 27, 2009

இலங்கைத் தமிழர் வாழ்வுரிமை காப்போம்!


ராணுவத் தீர்வு என்பது சாத்தியமல்ல; அரசியல் தீர்வு காண்பதுதான் சாலச் சிறந்தது. ஒன்றுபட்ட இலங்கைக்கு உள் ளிட்ட வடக்கு-கிழக்கு மாகாணங்களின் தமிழர் பகுதிகளுக்குப் பரவலான சுயாட்சி அதிகாரம் வழங்கப்படுவதை உத்தரவா தம் செய்யும் வகையில் அந்த அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும்”.
இது கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து எடுத்து வந்துள்ள உறுதியான நிலைப்பாடு. இந்தக் காலகட்டம் முழு வதிலும் இதற்காக மார்க்சிஸ்ட் கட்சியை ஏசியவர்கள், ஏளனம் புரிந்தவர்கள், ஏகடியம் பேசியவர்கள் ஏராளம். இதை இன்னமும் தொடர்கிறவர்களும் உண்டு.
அரசியல் தீர்வுக்கு முதல் படியாக இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டுமென்றும், அதற்காக இந்திய அரசு ராஜீய ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் தமிழகத் திலிருந்து வலுவான குரல் எழுப்பப்பட் டதுண்டு. போர் நிறுத்தம் என்பதை இலங்கை அரசும் ஏற்கவில்லை; இந்திய அரசும் அதற்கான நெருக்குதலைக் கொடுக்கவில்லை.
இப்போது போர் நிறுத்தப்படவில்லை; போரின் இலக்குகள் எட்டப்பட்டுவிட்ட நிலையில் இலங்கை இராணுவம் போரை முடித்துக்கொண்டுவிட்டது. விடுதலைப் புலிகள் அமைப்பும் ஆயுதங்களை மவுனிக்கச் செய்துவிட்டது.
இதற்கு முன்னதாகவே தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியும், ஆளுங்கட்சியும் இலங்கைப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வையே வலியுறுத்தி நிலையெடுத்தன.
“பேச்சுவார்த்தை மூலம் அமைதி யான வழியில் அரசியல் தீர்வு காணப் படுவதே இந்த (இலங்கை)ப் பிரச்ச னையை நிரந்தரமாகத் தீர்க்க உதவும் என அதிமுக நம்புகிறது. இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணத் தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், தோட்டத் தொழிலாளர், இ°லாமியர் உள்ளிட்ட இதர சிறுபான் மைத் தமிழர்களையும் உள்ளடக்கியதாக அரசியல் தீர்வு அமைய வேண்டும்,” என்று அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஜன. 29, 2009 அன்று வெளியிட்ட அறிக்கையில் தன்னுடைய நிலைபாட்டைத் தெளிவாகக் கூறி யிருந்தார்.
இடையில் மக்களவைத் தேர்தலில் `அரசியல் தீர்வு இல்லையேல், தனி ஈழம்தான்’, `இலங்கைக்கு இந்திய இராணுவத்தையே அனுப்ப வேண்டும்’ என்றெல்லாம் வேகங்காட்டிய போதிலும், தேர்தல் முடிந்த பிறகு அஇஅதிமுக பொதுக்குழுக் கூட்டத் தீர்மானத்தில் ஜெயலலிதா கீழ்க்கண்ட நிலையையே மீண்டும் உறுதிப்படுத்தினார்.
“அதிபர் மகிந்த ராஜபக்ஷேவின் தலைமையிலான இலங்கை அரசு ஒடுக்கப்பட்ட தமிழ் சமுதாயத்தின் நியா யமான மனக்குறைகளை உடனடியாகக் களைய வேண்டும். இலங்கையில் வாழும் குடிமக்கள் அனைவருக்கும் சம உரிமை அளிப்பதை உறுதி செய்யும் வகையில், தேவையான அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்களை உடனடியாகக் கொண்டு வர வேண்டும். தமிழர்கள் (வடகிழக்கு மற்றும் மலைப் பிரதேசங் களில் வாழ்பவர்கள்), இஸ்லாமியர்கள் மற்றும் பிற குடியினத்தவர்கள் அனை வரும் கவுரவத்துடனும், சம உரிமையுடனும், சுயமரியாதையுடனும் வாழ்வது உறுதி செய்யப்பட வேண்டும்” என்றார் அவர்.
தமிழக ஆளுங்கட்சியான திமுக பிப்ரவரி 3, 2009 அன்று நடத்திய கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தில் பின்வருமாறு நிலையெடுத்தது:
“இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப்பகுதிகளில் முழுமையான அதிகாரப் பகிர்வும் சுயாட்சியும் (Full devolution of powers and autonomy)கிடைக்கின்ற அளவிற்கு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றினைக் குறிப்பிட்ட காலவரையறைக்குள் உருவாக்கிச் செயல்படுத்திட இந்திய அரசு உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”.
திமுக தலைமையும் தேர்தல் காலத் தில் “தனி ஈழம் கிடைத்தால் மகிழ்ச்சி” என்று சுருதி மாறிப்பேசியது; எனினும் அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் அரசியல் தீர்வையே முன்னிறுத்தி முதலமைச்சர் பேசினார். அந்த நேரத்தில், மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து எடுத்துவந்துள்ள நிலைப்பாடுதான் தன்னுடைய நிலைப்பாடு என்றும் அவர் அரசியல் அணி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டுத் தெளிவுபடுத்தினார். பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு பகிரங்கமாக எடுத்து வரும் நிலைபாட்டுக்கு மாறாக, சட்டமன்ற பாமக தலைவர் கோ.க. மணியும் அரசியல் தீர்வை ஒட்டியே தனது கருத்தை வெளியிட்டதையும் முதலமைச்சர் பதிவு செய்தார்.
`ஈழப்போர் 4’ நடந்துகொண்டிருந்த காலத்தில், இலங்கை அரசு, இந்திய அரசு மற்றும் தமிழக முதலமைச்சருக்கு எதிராகக் கனல் தெறிக்கும் உரைவீச்சுக் களை நிகழ்த்திக் கொண்டிருந்தவர்க ளில் ஒருவர் தமிழருவி மணியன். அவரே அண்மையில் `புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களும், விடுதலைப் புலிக ளின் ஆயுத இயக்கம் இனியும் தொடர வேண்டும் என்று ஓயாமல் குரல் கொடுப் பவர்களும் நடந்து முடிந்த நிகழ்வுகளை மறுவாசிப்புச் செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது’, என்ற கருத்தை வெளியிட்டிருந்தார்.
இந்த `மறுவாசிப்பின்’ வெளிப்பாடுகளாக, விடுதலைப் புலிகள் அமைப்பு, அதன் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரின் சமீபத்திய கோரிக்கைகளும், பிரகடனங்களும் வந்துள்ளன.
தமிழீழ விடுதலைப் போராட்டம் எதிர் கொண்ட பெரும் பின்னடைவைக் கருத்தில் கொண்டு அரசியல் ராஜதந்திர வழிமுறையே சாத்தியமானதும் வலுவானதும் என்ற முடிவுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் வந்தது என்றும், இது அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரனே எடுத்த தீர்மானம் என்றும், செல்வராசா பத்மநாதன் தெளிவுபடுத்தியிருந்தார். விடுதலைப் புலிகளின் அடுத்தகட்ட நட வடிக்கைகளுக்குத் தலைமை தாங்குபவராக அறிவிக்கப்பட்ட பத்மநாதன் இப்போது இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு வெளியே நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்றை அமைப்பதற்காக இயங்கிவரும் ஆலோசனைக் குழுவும், `தமிழ் மக்களின் அபிலாஷைகளை ஜனநாயக, அமைதி வழிகளில் வென்றெடுப் பதிலும் தன் கவனத்தைச் செலுத்தும்’, என உறுதி கூறியுள்ளது.
விடுதலைப் புலிகளின் ஆதரவுக் குழுவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இலங்கை இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை வரையறுத்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இக்கூட்டமைப்பின் (இலங்கை) நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் மக்களுக்கு அனைத்து அதிகாரங்களுடனான முழு மையான சுயாட்சி தேவை; காணி, பாதுகாப்பு, விவசாயம், கைத்தொழில் என முக்கிய அதிகாரங்கள் எங்களுடைய கையில் இருக்கும் வகையில் இந்தத் திட்டம் அமையும் என்றும் கோடிட்டுக் காட்டியுள்ளனர். ஜூலை 2 அன்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும், இக்கூட்டமைப்பின் எம்.பி.க்கள் கலந்து கொண்டு அரசியல் தீர்வுக்கான முன் மொழிவுகளை வலியுறுத்தியது குறிப் பிடத்தக்கது.
பழ. நெடுமாறன் தலைமையிலான இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அண்மையில் வெளியிட்ட உலகத் தமிழர் பிரகடனத்தில் இடம்பெற்ற கீழ்க்கண்ட வாசகங்களும் பொருள் பொதிந்தவை:
“ஈழத் தமிழ் மக்களின் மரபு வழித் தாயகத்தில் அவர்களுக்கு முழுமையான மனித, ஜனநாயக உரிமைகள் வழங்கிடவும், அதற்கேற்ற அரசியல் அமைப்பிற்கு உத்தரவாதம் தரக்கூடிய அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காக உலக மக்களின், அரசுகளின் ஆதரவுத் திரட்டிடவும், ஈழத் தமிழ் மக்கள் ஒப்புக்கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றே அவர்களின் பிரச்சனையைத் தீர்க்கும் ஒரே வழி என்பதிலும் நாங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறோம்”.
இவ்வாறு அரசியல் தீர்வுக்கு ஒத்தி சைவான சூழல் எழுந்துள்ள இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, இலங்கை அரசை அதிகாரப் பகிர்வு - சுயாட்சி உரிமை ஆகியவற்றை உள்ளடக்கிய அரசி யல் தீர்வுக்கான முயற்சிகளை விரைவாக எடுக்கச் செய்ய சர்வதேச சமூகமும் - குறிப்பாக இந்திய அரசும் - உறுதியான நிர்ப்பந்தத்தைச் செலுத்த வேண்டும்.
ஆனால் இப்போது முன்னுரிமைப் பிரச்சனையாக முகிழ்த்திருப்பது, இலங்கையில் உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்த அகதிகளாக நிற்கும் தமிழர்களின் அவ லங்கள் களையப்படுவதற்கான அவசர நடவடிக்கைகள் ஆகும்.
சற்றொப்ப 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை வவுனியாவில் உள்ள முகாம்களில் இந்த அகதிகள் மிக மோசமான நிலைமைகளில் அடைக்கப்பட்டு உயிர் பிழைக்க நேரிட்டுள்ளது. மழை, வெள்ளம் காரணமாக இந்த முகாம்கள் தங்குவதற்கு லாயக்கற்றவையாக மாறியுள்ளதோடு, அங்குள்ள மக்கள் சுகாதாரக் கேடுகளுக்கு இலக்காகி நிற்கின்றனர்.
இந்த அகதிகளை அவரவர் சொந்தக் குடியிருப்புகளில் மீள் குடியமர்த்தும் பணி, கண்ணி வெடிகளை அகற்றுவது என்ற பெயரால் தாமதப்படுத்தப்பட்டு வருகிறது.
60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களை முகாமை விட்டு வெளியேற அனுமதிக்கையில், அவர்களைப் பராமரிப்பதற்கு உதவியாகக் குடும்ப உறவுகளை உடன் அழைத்துச் செல்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
முகாம்களில் உள்ள இளம் சிறுவர், சிறுமியர்களைத் தனியாகப் பிரித்து ஒரு புனர் வாழ்வு முகாம் அமைப்பது என்ற பெயரில், அவர்களைத் தொடர்ந்து கண் காணிப்பிற்கு உட்படுத்தி வைக்க இலங்கை அரசு முற்படுகிறது.
இந்தத் தமிழ் அகதிகளின் அவல நிலைக்குச் சான்று பகருவதாக ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கருணா ரத்னாவின் பேச்சு அமைந்துள்ளது.
“போரினால் பாதிக்கப்பட்டு அகதி களாக்கப்பட்ட லட்சக்கணக்கிலான மக்கள் இன்று அகதி முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களைச் சென்று பார்வையிடவும் அவர்களைப் பற்றி அறிந்துகொள்ளவும் எமக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இங்கு ஊடகவியலாளர்கள் கூட அனுமதிக்கப்படுவதில்லை. முள் கம்பிகளால் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் கம்பிகளுக்கு அப்பால் தாயும் மறுபக்கத்தில் பிள்ளையும் என்ற நிலைமையே காணப்படுகிறது. தொடர்ந்தும் அந்த மக்களின் உரிமைகள், சுதந்திரம், சக வாழ்வு மறுக்கப்படுவதாக இருந்தால் முகாம்களுக்குள்ளேயே அவர்கள் சத்தியாக்கிரகம் மற்றும் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்துவதற்குத் தள்ளப்படுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை”, என்றார் அவர்.
எனவே சொந்த நாட்டிலேயே அகதிகளாக நிறுத்தப்பட்டுள்ள இந்தத் தமிழ் மக்கள் ஒரு மனிதப் பேரவலத்திற்கு ஆளாக்கப்படுவது இன்று சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய சவாலாக முன்னெழுந்துள்ளது.
சர்வதேச அளவில் இலங்கைத் தமிழர்களின் துயர் துடைப்புக்காக என்று வழங்கப்படுகிற நிவாரணப் பொருட்களும், நிதி உதவியும், சர்வதேச செஞ்சிலு வைச் சங்கம், ஐ.நா. அமைப்புகள் மூலமாக அந்த மக்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும்.முகாம்களில் உள்ள மோசமான நிலைமைகளை உடனடியாக மாற்றியமைத்து, அடிப்படை வசதிகளும், சுகாதாரத்தைப் பேணும் சூழலும் கொண்டதாக ஆக்க வேண்டும்.மீள் குடியமர்த்தும் பணி விரைவு படுத்தப்பட வேண்டும். ஏற்கெனவே வடக்கு மாகாணப் பகுதிகளில் தமிழ் மக்கள் வாழ்விடங்களில் சிங்களர் களைக் கொண்டு குடியமர்த்தும் முயற்சி கள் முற்றாகக் கைவிடப்பட வேண்டும். விடுதலைப் புலிகள் அமைப்பிலி ருந்து வெளியேறி, இலங்கை இராணுவத்திடம் சரண் அடைந்ததாகக் கூறப்படும் சற்றொப்ப 10,000 இளைஞர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்களின் மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இலங்கைத் தமிழ் மக்களின் இந்த வாழ்வுரிமைக் கோரிக்கைகள், அடிப்படை மனித உரிமைகளாகும். இவற்றுக்காகத் தமிழ்நாட்டு மக்களைத்திரட்டிக் குரல் கொடுப்பதும், இந்திய அரசை உட னடியாகச் செயலில் இறங்கத் தூண்டு கோலாகச் செயல்படுவதும் இன்று நம் முன் உள்ள முதற்பெரும் கடமை. இந்தக் கடமையை ஆற்றும் வகையில் ஆகஸ்ட் 29 அன்று மாவட்டத் தலைநகர்களில் கூடி ஆர்ப்பரிப்போம்! தொடர்ந்து இயக் கம் காணுவோம்!
உ.ரா.வரதராசன்

Wednesday, August 26, 2009

கள்ளச்சாராயம் வேணுமா... கள்ளச்சாராயம்...!!!

* குஜராத்தில் நடைபெற்று வரும் கள்ளச்சாராய வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் சுமார் ஆயிரம் கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.

* 1960களில் மதுவிலக்கு நடைமுறைக்கு வந்தாலும், தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனை தடையில்லாமல் குஜராத்தில் நடைபெற்று வருகிறது.

* கள்ளச்சாராயம் குடித்ததால் கடந்த மாதத்தில் 150 பேர் உயிரிழந்த சம்பவம் குஜராத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான அகமதாபாத்தில் நடந்தது. இந்த கள்ளச்சாராய வியாபாரிகளுடன் பாஜக கவுன்சிலருக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

அகமதாபாத் நகரில் கள்ளச்சாராயம் குடித்து 150 பேர் உயிரிழந்த சம்பவம் கடந்த மாதம் நடந்தது. கள்ளச்சாராய விற்பனையைக் கண்டும், காணாமல் இருந்த மோடி தலைமையிலான பாஜக அரசு உயிரிழப்பு என்றவுடன் நடவடிக்கை எடுப்பதாகக் காட்டிக்கொண்டது. கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு மரண தண்டனை தரும் அளவுக்கு புதிய சட்டம் கொண்டு வருவதாகவும் அறிவிப்புகள் வெளியாகின. ஆனால் மாநிலம் முழுவதும் கள்ளச்சாராய வியாபாரம் எப்படி நடந்து கொண்டிருந்ததோ, அதே அமர்க்களத்துடன் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. கள்ளச்சாராயத்தோடு வேறு எந்த நிறுவனம் தயாரிக்கும் மதுபானம் வேண்டுமானாலும் தாராளமாகக் கிடைக்கிறது.



அகமதாபாத் மாவட்டத்திற்குட்பட்ட சர்கேஜ் நகரில் உள்ள மகர்பா பகுதியில் புதிதாக ஒருவர் வருகிறார் என்றாலும் யாரும் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அவர் கள்ளச்சாராயம் வாங்குவதற்காகத்தான் வருகிறார் என்று அனைவருக்குமே தெரிந்திருக்கிறது. சிறு குழந்தையையிடம் கேட்டால்கூட அதோ... என்று விரலை நீட்டிக்கூறும் என்று அந்த ஊர்க்காரர்கள் பெருமையோடு(!) கூறிக்கொள்கிறார்கள். வெளியூர்க்காரர்கள் வந்தால் அந்தப் பகுதியினர் உற்சாகமாகி விடுகிறார்கள். கேள்விகள் எதையும் கேட்பதில்லை. எவ்வளவு வேண்டும் என்று கேட்டு பிளாஸ்டிக் பை அல்லது பாட்டிலில் தந்து பணத்தை வாங்கிக் கொள்கிறார்கள்.



மேலும், உயிரிழப்பிற்குப் பிறகு அரசு நடவடிக்கை எடுப்பதாகக் கூறியது பெரும் மோசடி என்பதும் அம்பலமாகியுள்ளது. வியாபாரிகள் விலையை ஏற்றி விட்டார்கள். பத்து ரூபாய்க்கு விற்று வந்த பாக்கெட் சாராயம் தற்போது 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆட்சியாளர்களையும், காவல்துறையினரையும் சமாளிக்கவே இந்த விலையேற்றம் நடந்துள்ளது என்று கூறப்படுகிறது. பிரச்சனைகள் அதிகரித்து விட்டதால் எங்களுக்கு லாபம் குறைந்துவிட்டது. அதனால்தான் இந்த விலையேற்றம் என்கிறார் ஒரு சாராய வியாபாரி. எந்த நேரம் வேண்டுமானாலும் வாருங்கள். ஆனால் இரவு பத்து மணிக்குப்பிறகு வர வேண்டாம் என்கிறார் அவர்.

கள்ளச்சாராயத்திற்கு எதிராக இயக்கம் நடத்திவரும் அமைப்பைச் சேர்ந்த ஹரினேஷ் பாண்டியா பாஜக தலைமையிலான மாநில அரசை நேரடியாகக் குற்றம் சாட்டுகிறார். அரசின் நேரடிப் பாதுகாப்பின் கீழ் சாராய வியாபாரம் குஜராத்தில் நடக்கிறது. உள்ளுர் காவல்துறையினர் முதல் அதற்கு மேலேயுள்ள அனைவருக்கும் இதில் பங்கு கிடைக்கிறது. சில சமயங்களில் அவர்களுக்கு நெருக்கடி கொடுப்பதுபோல அரசு நடந்து கொண்டு, பின்னர் வியாபாரம் கொழிக்கவும் வழி செய்து கொடுக்கிறது. பண்டிகை காலம் நெருங்கி விட்டது. இந்தக்காலத்தில்தான் வெளிமாநிலங்களிலிருந்து சாராயம் வருவது மற்றும் உள்ளுரில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது போன்ற வேலைகள் அதிகரித்துவிடும் என்கிறார் அவர்.

கள்ளச்சாராயத்திற்கு உதவுவதற்காக மோடி அரசு கையாளும் புதுமையான உத்திகளையும் குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் மோட்வாடியா அம்பலப்படுத்துகிறார். கள்ளச்சாராயத்தைத் தடுக்கும் பணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளை அவர்கள் நியமிக்கிறார்கள். அந்த அதிகாரிகளின் பட்டியலைப் பார்த்தாலே இவர்கள் எந்த அளவிற்கு கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். காவல்துறை பணியை விட அரசியல் வேலை பார்ப்பதில்தான் அவர்களுக்கு ஆர்வம் அதிகம். கள்ளச்சாராயம் பெருகி ஓடுவதை அவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார் மோட்வாடியா.

வழக்கம்போலவே, நிலைமை கட்டுக்குள்தான் இருக்கிறது என்கிறார் காவல்துறை டி.ஐ.ஜி. ஹஸ்முக் படேல். கள்ளச்சாராயம் இருப்பதை நியாயப்படுத்தும் வகையில் மற்ற குற்றங்களைப் போல கள்ளச்சாராயம் காய்ச்சும் குற்றமும் நடக்கத்தான் செய்யும். அதை முழுமையாக ஒழித்துவிட முடியாது. இருந்தாலும் எங்களிடம் இருக்கும் குறைவான ஆட்களை வைத்து முயற்சி செய்து வருகிறோம் என்கிறார் அவர். கள்ளச்சாராயம் ஒருபோதும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை என்று அந்தப்பிரச்சனை தொடர்ந்து இருந்து வருகிறது என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலத்தையும அவர் அளித்தார். 150 உயிர்களை இழந்தபிறகும் நடவடிக்கை எடுப்பதற்கான மனநிலையில் மோடி தலைமையிலான பாஜக அரசு வரவில்லை என்று பல கள்ளச்சாராய ஒழிப்பு அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

செய்தி ஆதாரம் - மெயில் டுடே.

Tuesday, August 25, 2009

பொதுத்துறையைக் கூறு போடுகிறார்கள்


இப்போது ஒரு வில்லையின் விலை ரூ.10 மட்டுமே என்று குளியல் கட்டி விளம்பரம் அமர்க்களமாக வெளிவரும். விளம்பரத்தைப் பார்ப்பவர்களுக்கு ஏதோ 12 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்த சோப், பத்து ரூபாய்க்கு இறங்கிவிட்டது போன்ற எண்ணம் தோன்றும். ஆனால் எட்டு ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்த சோப்பின் விலையை பத்து ரூபாய்க்கு ஏற்றி, ரூ.10 மட்டுமே என்று கூறி ஏமாற்ற முயல்வது பழைய மளிகைக்கடை ரசீதைப் பார்த்தவுடன் புரிந்துவிடும். இத்தகைய உத்தியைத்தான் மக்களின் சொத்தான பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் நடவடிக்கையில் அரசு கடைப்பிடிக்கிறது. ஒரு முறை இவ்வளவு பங்குகளுக்கு மேல் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கக்கூடாது என்று உத்தரவு போடப்போகிறார்கள்.

இந்திய உழைப்பாளிகளின் வியர்வையில் உருவான பொதுத்துறை நிறுவனங்களைத் தாரை வார்ப்பதை அனுமதிக்கக்கூடாது என்று மக்கள் கருதும்போது, ஏதோ இவர்கள் மக்களின் கருத்தை மதிக்கும் வகையில் வெறும் பத்து சதவிகிதம் அல்லது பதினைந்து சதவிகிதம் பங்குகளைத்தான் விற்கப்போகிறோம் என்று காட்டிக்கொள்ள விரும்புகிறார்கள். இதனால்தான் பத்து சதவிகிதம் மட்டுமே அல்லது பதினைந்து சதவிகிதம் மட்டுமே என்று செய்திகளை உலவ விட்டுள்ளார்கள். ஆனால் அதோடு நிற்கப்போவதில்லை என்பதையும் வெளிப்படையாகவே சொல்கிறார்கள். கேட்டால், இவ்வாறு செய்தால்தான் மற்ற பங்குகளை அதிக விலைக்கு விற்க முடியும் என்று வல்லுநர் கருத்துகளை அள்ளிவிடுகிறார்கள்.

முதன்முறையாக பங்குகளை விற்கும்போது பதினைந்து சதவிகிதம் மட்டுமே விற்பனை இருக்க வேண்டும் என்றும், அதற்குப்பிறகு ஒவ்வொரு முறையும் பத்து சதவிகிதத்திற்கு மேல் போகக்கூடாது என்றும் நிதித்துறை புதிய விதிகளை உருவாக்கியுள்ளது. தரப்பட்டியலை உருவாக்கும் நிறுவனமான கிரிசில், சீர்திருத்தப்பாதையில் ஒவ்வொரு அடியையும் அளந்து எடுத்து வைக்கிறார்கள் என்று அரசின் நாசகரப்பாதைக்கு சப்பைக்கட்டு கட்டியுள்ளது. இடதுசாரிகள் இருந்தவரைக்கும் மக்களின் சொத்துகள் எதையும் தாரை வார்க்க முடியாமல் இருந்த தங்களுக்கு, பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக மகிழ்ந்து கொள்கின்றன பெரு நிறுவனங்கள்.

பங்குச்சந்தை கணிக்க முடியாத ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் காலமிது. 21 ஆயிரம் புள்ளிகளில் கடந்த ஆண்டு இருந்த சென்செக்ஸ், 14 ஆயிரத்திற்கும், 16 ஆயிரத்திற்கும் இடையில் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறது. தோளில் துண்டைப் போட்டுக்கொண்டு கடந்த ஆண்டில் வெளியேறிய அன்னிய நிதிநிறுவன முதலீட்டாளர்கள் மீண்டும் திரும்பி வந்தார்கள். எட்டாயிரம் வரை சென்ற சென்செக்ஸ் கொஞ்சம் தலையை உயர்த்திப் பார்த்தது. ஆகஸ்டு மாதத்தில் மீண்டும் தலைகுப்புறப் பாய்கிறது. கடந்த 25 நாட்களில் மட்டும் சுமார் 700 கோடி மதிப்பிலான பங்குகளை அன்னிய நிதி நிறுவனங்கள் விற்றதே இத்தகைய இறக்கத்திற்குக் காரணமாகும்.

கடந்த வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் சுமார் 170 புள்ளிகளை இழந்தது. இந்தியாவில் மட்டுமல்ல. பல்வேறு வளரும் நாடுகளில் தாங்கள் செய்திருந்த முதலீட்டை ஒரே நேரத்தில் விலக்கிக்கொண்டு லாபம் சம்பாதித்துள்ளார்கள். இந்தக் கொள்ளை லாபத்தின் ஒரு பகுதி மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி வரும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள் பங்குச்சந்தை நிபுணர்கள். அவ்வாறு வரும் பணமும் வெறும் லாபத்தை மட்டுமே குறிவைத்து வருவதால் பங்குச்சந்தைத் தடுமாற்றங்கள் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதை மறைத்து விடுகிறார்கள். கேட்டால், சந்தையைத் தொடர்ந்து கண்காணிப்பவர்கள்தான் சரியான முதலீட்டைச் செய்ய முடியும் என்று கூறிக்கொள்கிறார்கள்.

இத்தகைய காலகட்டத்தில்தான் ஆயில் இந்தியா, தேசிய நீர்மின்நிலையக் கழகம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்குகளை விற்கும் முயற்சியில் மத்திய அரசு உள்ளது. பாஜக ஆட்சிக்காலத்தில் இதற்காக தனி அமைச்சகத்தையே உருவாக்கி 28 ஆயிரம் கோடி ரூபாய்க்கான பொதுத்துறைப் பங்குகளை விற்றார்கள். இடதுசாரிக்கட்சிகளின் ஆதரவை நம்பியிருந்ததால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் பொதுத்துறைப் பங்குகள் மீது பெருமளவு கை வைக்கமுடியவில்லை. இப்போது இடதுசாரிகள் என்ற தடை நீங்கிவிட்டதால் மக்களின் சொத்துகளை விற்கப்போகிறார்கள். எப்படியெல்லாம் விற்கப்போகிறோம் என்ற புதிய கொள்கையையும் உருவாக்கப்போகிறோம் என்கிறார் நிதித்துறைச் செயலாளர் அசோக் சாவ்லா.

விலை உயர்ந்தால் கொண்டாட்டம்!


கரும்பு விளைச்சல் இல்லை. சர்க்கரை உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்படும். அதன் விலை கடுமையான ஏற்றத்தைச் சந்திக்கும். இந்தச் செய்திகள் கோடிக்கணக்கான இந்தியர்களின் நாடித்துடிப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. ஆனால் பங்குச்சந்தை சூதாட்டக்காரர்கள் உற்சாகக்குரல் எழுப்புகிறார்கள்.

எந்தப் பங்கில் முதலீடு செய்யலாம் என்று ஆலோசனை சொல்லும் பங்குச்சந்தைப் பொருளாதாரப் புலிகள், சர்க்கரை நிறுவனங்களின் பங்குகளில் எது குறைவான விலைக்கு விற்கிறதோ அதை வாங்கிக் கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்கிறார்கள். கோடிக்கணக்காக சாமான்ய மக்களின் வாழ்வில் அதிர்வை ஏற்படுத்தும் அத்தியாவசியப் பண்டங்களின் விலையுயர்வு சூதாட்டக்காரர்களின் களமாக மாறி விடுகிறது.

சர்வதேச அளவில் நிலைமை இதுதான். அமெரிக்கப் பங்குச்சந்தைப் புள்ளிகள் அதிகரிப்பு என்று செய்தி. அதற்கான காரணமும் எழுதுகிறார்கள். சர்வதேசச் சந்தையில் பெட்ரோல் விலை அதிகரித்ததாம். சாமான்ய மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு எகிறிப்போயுள்ள விலைவாசி உயர்வுக்கு ஒரு காரணமான பெட்ரோல் விலை மேலும் உயர்ந்தால் பங்குச்சந்தையும் நிமிர்கிறது. ஆனால் சாமான்ய மக்களைப் படுக்க வைத்து விடுகிறது.

Sunday, August 23, 2009

பாஜகவின் தலித் விரோத பரிசோதனைக்கூடம்(குஜராத்)!

நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் நாகரீகமாக, மறைமுகமாக, வெளிப்படையாக மற்றும் கொடுரமாக என்று வெவ்வேறு வகையில் அன்றாடம் தீண்டாமையின் கொடிய வடிவத்தை தலித்துகள் சந்திக்கிறார்கள். இந்துத்துவ பரிசோதனைக்கூடம் என்று ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பலால் வர்ணிக்கப்படும் குஜராத்தில் அனைத்து வகையான தீண்டாமை வடிவங்களும் காணப்படுகின்றன. வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த தலித்து மாணவர்கள் மீதான கொடுமை தற்போது அம்பலமாகியுள்ளது. பாகுபாடுகளைப் போக்கும் கல்வியை அளிக்க வேண்டிய ஆசிரியப் பெருமக்களே பிரித்து வைக்கும் பணியைச் செய்கிறார்கள். வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளைச் சுத்தம் செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

மோடி தலைமையிலான மாநில அரசில் சமூக நீதித்துறை அமைச்சகமும் உள்ளது. பெயருக்குத்தான் அது இருக்கிறது என்பதை அந்தத்துறை அமைச்சரின் அறிக்கைகள் காட்டுகின்றன. எனக்குத்தெரிய இத்தகைய சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. அதுபற்றிக் கேள்விப்பட்டது கூட கிடையாது என்கிறார் அமைச்சர் ஃபகீர் வகேலா. மாநிலத்தில் தீண்டாமைக் கொடுமைகள் எதுவும் கிடையாது என்று பாஜகவினரும் அடித்துச் சொல்கின்றனர். ஆனால் கொடுமைகள் இருப்பதோடு, பள்ளிகளில் அது ஆசிரியர்களாலேயே நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று ஆவேசத்தோடு கூறினார்கள் சபர்மதி காந்தி ஆசிரமத்தில் குழுமிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள்.

தலித்துகளுக்கு எதிரான கொடுமைகளை வெளிக்கொண்டு வர நவ்சர்ஜன் என்ற தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில்தான் அந்த மாணவர்களின் குமுறல்களை ஒரே இடத்திற்குக் கொண்டு வந்தது. தண்ணீர் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்திலிருந்து ஒரு மடக்கு தண்ணீர் குடிக்க முனைந்தபோது ஆசிரியர் கையில் இருந்த தடி எனது முதுகைப் பதம் பார்த்து விட்டது என்கிறார் சுரேந்திரநகரிலிருந்து வந்திருந்த 12 வயதாகும் விஷ்ணு சாவ்தா என்ற மாணவன். முதுகிலிருந்து காயத்தையும் அனைவருக்கும் தெரியும் வகையில் காட்டுகிறார். எவ்வளவு காலத்திற்குதான் இந்தப்பிஞ்சு முகம் இந்தக் கொடுரத்தை நினைவில் வைத்துக் கொள்ளப்போகிறதோ என்று கூடியிருந்த அனைவருமே கலங்கினர்.

பள்ளிக்கூடத்தை சுத்தம் செய்யுங்கள் என்று மாணவர்களை ஆசிரியர்கள் பணிப்பார்கள். ஆனால் மற்ற அறைகளை மாணவர்கள் சுத்தம் செய்யத் துவங்குவார்கள். நாங்கள் மட்டும் கழிப்பறைகளுக்கு சென்று சுத்தம் செய்ய வேண்டும் என்கிறார் விஷ்ணு. இது சுரேந்திரநகர் பகுதியில் மட்டும் உள்ள பிரச்சனையாக அமையவில்லை. மாநிலம் முழுவதும் நிலவுகிறது. பவ்நகர் உம்ராலா பகுதியைச் சேர்ந்த 15 வயதாகும் கவுதம் டோடியா மற்றும் படான் மாவட்டம் ஹார்ஜி பகுதியைச் சேர்ந்த 13 வயதாகும் கவுதம் வால்மீகி ஆகியோரும் இத்தகைய கொடுமைகள் நடப்பதாகத் தெரிவித்தனர்.

இத்தகைய கொடுமைகள் நடப்பதாக இதுவரை எங்களிடம் யாருமே புகார் கூறவில்லை என்கிறார் அமைச்சர் ஃபகீர் வகேலா. ஆனால் இந்தப் பிரச்சனை மற்றும் மனித மலத்தை மனிதனே அள்ளிக்கொண்டிருக்கும் அவலம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை நாங்கள் தொடர்ந்து அரசிடம் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்கிறார்கள் நவ்சர்ஜன் அமைப்பின் நிர்வாகிகள். பள்ளிக்கூடங்களிலேயே இத்தகைய கொடுமைகள் நடப்பதால் அதைத் தாங்க முடியாமல் பல மாணவர்கள் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்று விடுகிறார்கள். இத்தகைய இழிவுகளைப் பொறுக்க முடியாமல் தலித் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல மறுத்த நிகழ்வுகள் குஜராத்தில் ஏராளம்.

வகுப்பறையிலும் கடைசி வரிசையில் அமருமாறு நிர்ப்பந்தம். இருப்பதிலேயே மோசமான வேலைகள் அந்த மாணவர்கள் மீது திணிப்பு. இவ்வளவுக்கும் பிறகு பள்ளிக்குச்செல்ல எந்த தலித் மாணவராவது விரும்புவாரா? இதுதான் நவ்சர்ஜன் அமைப்பாளர்கள் மட்டுமில்லாமல் தலித்துகளும் எழுப்பிக் கொண்டிருக்கும் கேள்வி. கிராமங்களில் பூனை மற்றும் நாய் போன்ற விலங்குகளில் ஏதாவது ஒன்று இறந்துவிட்டால் அவற்றை அகற்றும் வேலை தலித் சிறுவர்களின் மீது திணிக்கப்படுகிறது. வால்மீகி சமூகத்தில் பிறந்த அவர்களின் கடமை இது என்று அறிவுறுத்தப்படுகிறது. மனித மலத்தை அள்ளும் துப்புரவுப் பணியாளர்களின் எண்ணிக்கையில் குஜராத் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. 65 ஆயிரம் பேர் இதில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Saturday, August 22, 2009

புதிய வரிக் கொள்(ளை!)கை



2011ல் நடைமுறைக்கு வரப்போகும் புதிய வரிக்கொள்கையின் வரைவு நகல் சுற்றிற்கு விடப்பட்டுள்ளது. இதன் மீது கருத்துச் சொல்ல விரும்புபவர்கள் அதைப் பதிவு செய்து கொள்ளலாம். உயர்தர மக்களுக்கு எக்கச்சக்க சலுகைகளை வாரி வழங்கும் இந்தக் கொள்கை அந்தச் சலுகைகளை சரிக்கட்ட நடுத்தர மக்களின் தலையில் மிளகாய் அரைப்பதற்காக தண்ணீர் தெளித்துள்ளது.
சம்பளத்தோடு கிடைத்து வந்த இதுவரை வரிக்குட்படாத சலுகைகள், ஓய்வுக்காலப்பலன்கள் என்று வரி போடப்படும் பட்டியல் நீளுகிறது. ஊழியர்கள் தங்கியிருக்கும் வீடுகளை அரசோ அல்லது நிறுவனங்களோ அளித்திருந்தால் அந்த வீடுகளுக்கு வருமான வரிக்காக ஒரு வாடகை நிர்ணயிக்கப்படும். வரி கட்டுகிறீர்களோ... வாடகையைக் கட்ட வேண்டாமா என்றும் விரைவில் கேட்கலாம்.

ஓசையின்றி ராணுவத்தினர் கழுத்திலும் கத்தி வைத்து மிரட்டுவது போன்ற விஷயமாகும் இது. அவர்களுக்கு தரப்படும் வீடுகளுக்கும் இது பொருந்துமல்லவா... விலக்கு அளிப்பதற்கான எந்த ஆலோசனையும் அந்த வரைவுக் கொள்கையில் இல்லை.

30 அல்லது 35 ஆண்டுகள் கழித்து அக்கடா..வென்று உட்காரப் போகும்போது ஓய்வூதியம் கிடைக்குமா, கிடைக்காதா என்ற கவலையை புதிய ஓய்வூதியத்திட்டத்தின் மூலம் ஏற்கெனவே அரசு ஏற்படுத்திவிட்டது. இப்போது ஓய்வின்போது வரவிருக்கும் பி.எப் மற்றும் கிராஜூவிட்டி ஆகியவற்றிலும் வரி என்ற பெயரில் அரசு கைவைக்கப்போகிறது. சேமிப்பு என்பதையே நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கைவிட வேண்டும் என்பதுதான் இவர்கள் நோக்கமாக இருக்கிறது.

நிறுவன வரியை 25 சதவிகிதமாக்கப் போகிறார்கள். வருமானம் குறையுமே... என்ற சந்தேகமெல்லாம் வேண்டாம். அதுதான் நடுத்தர மக்களின் முதுகில் ஏறிவிட்டார்களே... இனி சவாரிதான்.

Thursday, August 20, 2009

பீதியைப் பணமாக்கும் தனியார் மருத்துவமனைகள்!

பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை விட பீதியே அதிகமாகக் காணப்படும் நிலையில் பரிசோதனை செய்யப்போகிறோம் என்று கர்நாடக தனியார் மருத்துவமனைகளும் கிளம்பியுள்ளன.
ஒவ்வொரு பரிசோதனைக்கும் 1,500 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரை கட்டணம் விதிக்கப்போகும் இந்த தனியார் மருத்துவமனைகள் இந்தக் கொள்ளைக்கு "சமூக சேவை" என்று பெயரிட்டுள்ளார்கள். உண்மையில் ஆகும் செலவை விட இது நான்கு அல்லது ஐந்து மடங்கு அதிகமாகும். கட்டணத்தை விதிப்பதிலும் ஒவ்வொரு மருத்துவமனையும் தங்களது சந்தை மதிப்புக்கு ஏற்றாற்போல் வைத்துக் கொள்வார்களாம்.

அதிகபட்சமாக 500 ரூபாய்தான் இந்தப் பரிசோதனைக்கு செலவாகும் என்கிறார் ராஜீவ்காந்தி மார்பக நோய்கள் மையத்தைச் சேர்ந்த டாக்டர் பக்கி. இது மருத்துவமனை ஊழியர்களின் பாதுகாப்புக்கு வழங்கப்படும் கருவிகள், ஆலோசனைக் கட்டணம் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகும்.

தங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு மட்டும்தான் பரிசோதனை செய்யப்போவதாக சில மருத்துவமனைகள் அறிவித்துள்ளன. அங்கு தங்குவதற்கான கட்டணங்களையும் வருபவர்களின் தலையில் கட்டவே இத்தகைய உத்தியைக் கையாளுகிறார்கள். பன்றிக்காய்ச்சல் பற்றிய பீதி அதிகமாகக் கிளம்பியுள்ளதால் இவர்களுக்கு கொள்ளை லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

முறையாக பரிசோதனைகளைச் செய்த அரசு மருத்துவமனைகளில் சோதனைக்கான வசதிகளை அதிகரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொள்வதற்கான விதிமுறைகள் எதுவும் வழங்கப்படவில்லை. பணம் கொடுக்க வேண்டிய பொறுப்பு மக்கள் தலையில்தான் விழப்போகிறது என்று ஆளும் பாஜக மாநில அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

Wednesday, August 19, 2009

அன்னியர்களின் பிடியில் இந்தியப் பங்குச்சந்தை



ஒரே நாளில்(ஆக.17) 1,226 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் விற்றதால் சென்செக்சில் 627 புள்ளிகள் சரிந்தன. அன்னிய முதலீட்டாளர்கள் ஒட்டுமொத்த இந்தியப் பங்குச்சந்தையையே உலுக்கி விட முடியும் என்பதற்கு அவர்கள் கைவசம் இருக்கும் பங்குகளின் அளவு பற்றிய புள்ளிவிபரங்களே சாட்சியாகும். முதல் 500 இடங்களில் உள்ள நிறுவனங்களின் பங்குகள் குறித்த புள்ளிவிபரங்கள்தான் இத்தகைய எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்துள்ளது. ஒட்டுமொத்த மும்பை பங்குச்சந்தையின் முதலீட்டில் 93 சதவிகிதத்தை இந்த 500 நிறுவனங்கள்தான் வைத்துள்ளன. இந்த நிறுவனங்களில் 22.9 சதவிகிதத்தை அன்னிய முதலீட்டார்களே வைத்துக் கொண்டுள்ளனர். பெரும் தொழில்கள் என்று கருதப்படும் 20 துறைகளிலுமே இந்த நிலைமை உள்ளது.

இந்திய அரசின் வசம் 21.8 சதவிகிதப் பங்குகளே உள்ளன. தொழில்முனைவோர் வசம் 29.3 சதவிகிதமும், பொது மக்களிடம் 8.17 சதவிகிதமும், காப்பீட்டு நிறுவனங்களின் வசம் 4.74 சதவிகிதமும் உள்ளன. சீனா தவிர மற்ற நாடுகளின் பொருளாதாரம் பலத்த அடி வாங்கியுள்ள நிலையில் அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச்சந்தையை வலம் வந்து கொண்டிருக்கின்றனர். சீனாவின் பங்குச்சந்தை முறைப்படுத்தப்பட்ட ஒன்றாகும். பங்குகளை வாங்காமலேயே பல கை மாறும் இந்தியப் பங்குச்சந்தையில் உள்ள நடைமுறைகள் அங்கு கடுமையான நடவடிக்கைகளுக்கு உள்ளாகின்றன. இதனால் பல ஓட்டைகளைக் கொண்டுள்ள இந்தியப் பங்குச்சந்தையில் அன்னிய முதலீட்டாளர்கள் ஆதிக்கம் செய்கிறார்கள்.

சென்செக்ஸ் என்ற குறியீட்டு எண்ணைத்தான் பெரும் அளவில் பங்குச்சந்தையில் விவாதிக்கிறார்கள். பல முதலாளித்துவ ஆதரவாளர்கள் இதன் ஏற்றத்தையே இந்தியாவின் விடிவுகாலமாக வர்ணித்துக் கொள்ளும் மோசடியிலும் இறங்குவதுண்டு. ஆனால் பங்கு விற்பனையில் முதல் 30 இடங்களில் இருக்கும் நிறுவனங்களைத் தனியே பிரித்தெடுத்து அதன் ஏற்ற இறக்கத்தையே சென்செக்ஸ் புள்ளிகளாகக் குறிப்பிடுகிறார்கள். இந்த நிறுவனங்களிலும் 26.1 சதவிகிதப் பங்குகளை அன்னிய முதலீட்டாளர்களே வைத்துக் கொண்டுள்ளனர். தொழில் முனைவோர் வசம் 32.2 சதவிகிதமும், அரசின் கையில் வெறும் 13 சதவிகிதம் மட்டுமே உள்ளன.

2009 ஆம் ஆண்டில் இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்த அன்னிய முதலீட்டாளர்களுக்குத்தான் லாபம் கிடைத்துள்ளது. மற்ற நாடுகளில் நெருக்கடி முற்றிப் போனதால் குறைந்த தடுமாற்றத்துடன் இருந்த இந்தியச் சந்தையில் அவர்கள் விளையாடியுள்ளார்கள். அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு மட்டும் 15 சதவிகிதத்திலிருந்து 15.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியிலிருந்து தொடர்ந்து சரிந்து வந்த இந்தியப் பங்குச்சந்தை நடப்பாண்டு ஏப்ரல்-ஜூன் மாதங்களில் மீண்டும் மேலே சென்றது. இதற்கு வெளியே சென்ற அன்னிய முதலீட்டாளர்கள் திரும்பியதே காரணமாகும். அதிவிரைவு வேகத்தில் வெளியே சென்ற அவர்கள் அதே வேகத்தில் திரும்பி வந்தது எதற்காக என்ற கேள்வி பங்குச்சந்தை நிபுணர்கள் மத்தியில் எழுந்து நிற்கிறது.

பங்குச்சந்தையில் புள்ளிகள் எகிறும்போது, காளை துள்ளிக் குதிக்கிறது என்றும், சரிவின்போது கரடி ஆதிக்கம் செலுத்துகிறது என்றும் வர்ணிப்பார்கள். இந்தியப் பங்குச்சந்தையைப் பொறுத்தவரை, அன்னிய முதலீட்டாளர்கள்தான் காளை மற்றும் கரடி ஆகிய இரண்டு வேடத்தையும் போட்டுக்கொள்கிறார்கள்.ஜூலை மாதத்தில் மட்டும் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேலான முதலீட்டை அன்னிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் போட்டுள்ளார்கள். இந்த வேகத்தில் சென்றால் தொழில் முனைவோரை விட அதிக சதவிகிதம் அவர்கள் கையில் போய்விடும் அபாயம் எழுந்துள்ளது. அதற்கடுத்த கட்டம் என்பது பெரும்பான்மை பங்குகள்தான். ஒட்டுமொத்த இந்திய நிறுவனங்களின் அவர்களின் கைகளில் போய்விடும்.

இந்த அபாய அறிகுறிகள் எழுந்துள்ள நிலையிலும் மத்திய அரசு தனது தூக்கத்தை இன்னும் கலைத்துக் கொள்ளவில்லை. கோடிக்கணக்கான டாலர்கள் இந்தியாவுக்குள் வந்து கொண்டிருப்பதாகப் புள்ளிவிபரங்களை மட்டும் வெளியிட்டு சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு வரும் டாலர்கள் மறுபடியும் வந்த இடத்திற்கே திரும்பிச் சென்று விடுகின்றன. அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களில்தான் இந்திய அரசு முதலீடு செய்கிறது. டாலருக்கு மாற்றாக வேறு கரன்சி பற்றிய விவாதங்கள் சர்வதேச அளவில் நடந்தாலும் அமெரிக்க நெருக்கடிக்கு முட்டுக்கொடுப்பதில் மத்திய அரசு மும்முரமாக இருக்கிறது. வளைந்து நிற்கும் வளரும் நாடுகளின் முதுகுகளில் தனது சுமையை ஏற்றிவிட்டு நெருக்கடியிலிருந்து விடுபட்டு விட்டோம் என்ற அறிவிப்பை வெளியிட அமெரிக்கா தயாராகி வருகிறது.

Monday, August 17, 2009

"பொத்"தென்று விழப்போகும் தங்கம்!


தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 1500 ரூபாயைத் தாண்டி சென்றுள்ளது. இத்தனைக்கும் பண்டிகைக் காலம் நெருங்கிய நேரம். தங்கத்துக்கான கிராக்கி இல்லையென்று சொல்லிவிட முடியாது. ஆனால் அந்தக்கிராக்கி குறைந்துள்ளது. மேலும் குறையவும் வாய்ப்புகள் உள்ளன. நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வறட்சியே இதற்குக் காரணமாகும். இந்தியாவில் 14 கோடி ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் நடைபெறுகிறது. இதில் 42 சதவிகிதம் மட்டுமே பாசன வசதியைப் பெற்றுள்ளது. மீதமுள்ள நிலங்கள் மழையை நம்பியே இருக்கின்றன. தற்போது மழை ஏமாற்றியுள்ளதால் வழக்கத்தை விட குறைவான அளவே பயிரிட்டுள்ளார்கள்.

இத்தகைய நிலை பெரும்பாலான மக்களின் வாங்கும் சக்தியைக் குறைக்கப் போகிறது. இது பண்டிகைக்கால வாங்கும் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் தங்கத்தின்மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தங்க சந்தையை தொடர்ந்து கவனித்து வரும் அதுல் ஷா, மழை பொய்த்துள்ளது உள்ளுர் சந்தையை பெரிதும் பாதிக்கும். விவசாயிகளுக்கு உபரி வருமானம் எதுவும் இருக்கப்போவதில்லை. இதனால் நாட்டின் பெரும்பான்மையான துறையைச் சேர்ந்தவர்கள் தங்கத்தை நாடிச் செல்லப்போவதில்லை என்கிறார். ஆக.8 ஆம் தேதி வரையிலான கணக்கின்படி, மழைப்பற்றாக்குறை 28 சதவிகிதமாக இருந்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17 சதவிதப்பங்கை செலுத்தும் விவசாயத்துறை பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.

23 கோடி விவசாயிகள் இந்த வறட்சியால் பாதிக்கப்படவுள்ளார்கள். கிட்டத்தட்ட 70 கோடிப்பேர் விவசாயத்தை நம்பி தங்கள் வாழ்க்கையை நடத்தி வருபவர்கள். இவர்களைப் பொறுத்தவரை பண்டிகைக்காலம் கசப்பானதாகவே இருக்கப்போகிறது. ஒவ்வொரு பண்டிகையின்போதும் வெவ்வேறு இடங்களில் தங்கம் வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். சில மாநிலங்களில் அட்சய திரிதியை, சில இடங்களில் விநாயகர் சதுர்த்தி அல்லது தீபாவளி என்று தங்கத்தின் விற்பனை அமோகமாக இருப்பதுண்டு. ஆனால் இம்முறை தங்கள் விருப்பத்தையெல்லாம் தாண்டு இரு காரணங்களுக்காக தங்க விற்பனை குறைவாக இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது.

முதல் காரணம், பெரும்பாலான மக்களின் வாங்கும் சக்தி பாதிக்கப்பட்டுள்ளதுதான். தங்கம் வாங்குவதை பெரும்பாலும் அதன் விலைதான் நிர்ணயிக்கிறது என்பது இரண்டாவது காரணம். குழந்தைப்பிறப்பு, திருமணம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்கினாலும், அதன் விலையும் பெரும்பங்கை வகிக்கிறது. இந்த இரு காரணங்களும் தங்க இறக்குமதியில் தனது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் விற்பனையாகும் பெரும்பாலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டவையாகும். கிராக்கி குறைவதால், இறக்குமதியும் குறைய வாய்ப்புள்ளது என்கிறார் தங்க விற்பனையில் ஈடுபட்டுள்ள நவீன் மாத்தூர்.

சொத்துகளை விற்றாவது பெண்ணின் திருமணத்தை நடத்தும் ஆந்திர விவசாயிகளின் வாழ்க்கையே அபாயகட்டத்தில் உள்ளது. கடந்த நாற்பது நாட்களில் தற்கொலை செய்து கொண்ட ஆந்திர விவசாயிகளின் எண்ணிக்கை 21ஐத் தாண்டிவிட்டது. மகாராஷ்டிராவில் ஏற்கெனவே நிலைமை மோசமாகத்தான் இருந்தது. தற்போது அந்த நெருக்கடி அதிகரித்துள்ளது. உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்டு, அசாம் மற்றும் இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முழுமையும் வறட்சியால் பாதிக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ஏற்கெனவே உயர்ந்துள்ள நிலையில், தற்போதைய நெருக்கடி தங்கம் வாங்குவதை மட்டுமல்ல, அன்றாடம் தேவைப்படும் பொருட்களை வாங்க முடியுமா என்ற கேள்வியையே எழுப்பியுள்ளது.

சீனாவைத் தவிர மற்ற அனைத்து நாடுகளிலும் தங்கத்திற்கான கிராக்கி குறைந்துள்ளது. ஆனாலும், அதன் விலையேற்றத்தில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை. பங்குச்சந்தைகள் கடுமையான அடி வாங்கியுள்ளதும் இதற்குக் காரணம் என்கிறார்கள் நிதித்துறை வல்லுநர்கள். மக்களுக்கு முதலீடு செய்ய வேறு வழி தெரியவில்லை. இதுதான் அவர்களை தங்கத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது. இதனால்தான் அதன் தேவை மற்றும் மதிப்பு குறைந்தாலும், விலையில் இறக்கம் தெரிய மாட்டேனென்கிறது. மற்ற முதலீடுகளுக்காக வாய்ப்புகள் அதிகரித்தால் உச்சாணிக்கொம்பில் இருக்கும் தங்கம் கீழே பொத்தென்று விழும் வாய்ப்பும் இருக்கிறது என்பதையும் சேர்த்தே சொல்கிறார்கள் வல்லுநர்கள்.

Sunday, August 16, 2009

திவாலான மற்றொரு "பெருந்தலை"!



அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைத் தளமாகக் கொண்டு இயங்கி வரும் காலனியல் பேங்க்குரூப் என்ற வங்கி திவாலாகியுள்ளது.

இந்த வங்கிக்கு சுமார் ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து உள்ளதாகக் கூறப்படுகிறது. திவால் நிலையை எட்டிவிட்டதால் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள பிபி அண்டு டி என்ற வங்கிக்கு தனது சொத்துக்களை விற்க முன்வந்தது. இந்த விற்பனைக்கு மத்திய காப்பீட்டுக்கழகம் அனுமதி அளித்துள்ளது.

திவாலாகும் நிறுவனங்களை எடுத்துக் கொள்வது மற்றும் அதன் நடவடிக்கைகளைப் பராமரிப்பது ஆகிய பணிகளை இந்த மத்தியக் காப்பீட்டுக்கழகம்தான் கவனித்துக் கொள்கிறது. காலனியல் பேங்க்குரூப்பின் திவாலால் இந்தக் கழகத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. நஷ்டத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தம் இந்தக்கழகம் மற்றும் பிபி அண்டு டி வங்கி ஆகியவற்றிற்கிடையில் கையெழுத்தானது.

இந்த வங்கி சரிந்ததோடு, நடப்பாண்டில் சரிவைச் சந்தித்துள்ள அமெரிக்க வங்கிகளின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. அதோடு, இந்த சரிவுதான் நடப்பாண்டில் நிகழ்ந்துள்ள பெரிய சரிவு என்றும் நிதித்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். ரியல் எஸ்டேட் வர்த்தகத்திற்குதான் இந்த வங்கி கடன்களை வழங்கி வந்தது.

திவாலாகப்போகும் வங்கிகளின் பட்டியலில் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை முன்னூறுக்கும் மேற்பட்டவையாகும். கடந்த ஆண்டை விட தற்போது விரைவாக வங்கிகள் திவாலாகி வருகின்றன.

நன்றி : தீக்கதிர்

சொன்னதை செய்யாததும் சொல்லாததை செய்ததும்!



விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, ரம்ஜான் மற்றும் தீபாவளி என்று வரும் மாதங்களில் தொடர்ந்து பண்டிகைகள் வருகின்றன. பண்டிகைக்காலத்தில் வழக்கமாக இருக்கும் உற்சாகம் இந்தமுறை இருக்குமா என்ற சந்தேகம் அனைவரிடமும் எழுந்துள்ளது. ஆட்சியாளர்களின் வழக்கமான முழக்கங்கள், மோசடிப் புள்ளிவிபரங்கள் போன்றவை மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைக்கவில்லை. நடைமுறையில் கடுமையான நெருக்கடியை மக்கள் சந்தித்து வருவதால் இதோ.. பணவீக்கத்தைப் பாருங்கள். (-)1.74 சதவிகிதமாகச் சரிந்துவிட்டது. எங்கள் சாதனையைப் பாரீர்... பாரீர்... என்ற ஆர்ப்பாட்டமான அறிவிப்போடு கடைகளுக்கு சென்றால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் முகத்தில் அறைகின்றன.


தமிழக அரசின் ரூ.2க்கு ரேசனில் அரிசித்திட்டம் நடைமுறைக்கு வந்தாலும், மற்ற அறிவிப்புகள் காகிதங்களிலேயே நின்றுவிட்டன. 50 ரூபாய்க்கு 10 மளிகைப் பொருட்கள் என்று அறிவித்தார்கள். ஆனால் துவங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதோடு சரி, எப்போது திட்டத்தை இழுத்து மூடினார்கள் என்பதற்கான எந்த அறிகுறியும் தற்போது இல்லை. ரேசனில் துவரம்பருப்பு கிடைப்பதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகின. பெரும்பாலான மக்களுக்கு அது கிடைக்கவில்லை என்பதே தற்போதைய செய்தி. வெளிச்சந்தையில் பொருட்களின் விலைகள் உச்சாணிக்கொம்பில் உட்கார்ந்து கொண்டு விட்டன.


மலையாளிகள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடுவது ஓணம் பண்டிகையாகும். செப்.2 அன்று அந்தப்பண்டிகை நடப்பாண்டில் கொண்டாடப்பட உள்ளது. மக்கள் விலையுயர்வு நெருக்கடியால் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் பண்டிகை உற்சாகம் குறையாமல் இருக்க சிறப்பு விற்பனை அங்காடிகளை கேரள மாநில இடது ஜனநாயக முன்னணி அரசு திறந்துள்ளது. வெளிச்சந்தையில் இருக்கும் விலையை விட 20 சதவிகிதம் முதல் 60 சதவிகிதம் வரை குறைவான விலையில் விற்று வருகிறார்கள். மக்களுக்கு மிகவும் அத்தியாவசியத் தேவை என்று கூறப்படும் 25 பொருட்கள் அந்த அங்காடிகளில் கிடைக்கின்றன. இவ்வாறு திறக்கப்பட்டுள்ள அங்காடிகளின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தையும் தாண்டிவிட்டது.


தமிழகத்தில் 60 அல்லது 70 ரூபாய்க்கு விற்கப்படும் உளுந்தின் விலை 36 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கு விற்கப்படும் சர்க்கரை 20 ரூபாய்க்கும், 170 ரூபாய்க்கு கிடைக்கும் மிளகு, 66 ரூபாய்க்கும் இந்த அங்காடிகளில் விற்கப்படுகின்றன. 500 ரூபாய் மதிப்புள்ள பொருளின் விலையை 1000 ரூபாய் என்று போட்டு 50 சதவிகித அதிரடி தள்ளுபடி என்ற அறிவிப்போடு அசல் விலையிலேயே தலையில் கட்டிவிடும் மோசடியில்லாமல் உண்மையிலேயே தேவையான நேரத்தில் மக்களுக்கு பலன்தரும் வகையில் இந்த விற்பனை நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய விற்பனை நடந்தாலும், நெருக்கடி நேரத்தில் கூடுதல் அக்கறையோடு நடப்பாண்டில் இடது ஜனநாயக முன்னணி அரசு செயல்பட்டுள்ளது.


சொன்னதைச் செய்வோம் சொல்லாததையும் செய்வோம் என்று கூறிக் கொள்பவர்கள், 50 ரூபாய்க்கு 10 மளிகைப் பொருட்கள் என்று சொன்னதைச் செய்யவில்லை. ஆனால் தேர்தல் நேரத்தில் அளிக்கப்படாத உறுதிமொழிகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு நிறைவேற்றி வருகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிவிரைவில் ஏறிக் கொண்டிருக்கும் வேளையிலும் சிறப்பு அங்காடிகள் திறக்கப்பட்டுள்ளன. அதுவும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட அங்காடிகள் என்பது கிட்டத்தட்ட மாநிலத்தின் அனைத்துப் பகுதியினருக்கும் சென்றடையும் வகையில் அமைந்துள்ளது,

Saturday, August 15, 2009

கோடிகளில் புரளும் கதராடைகள்!



எளிமை என்றால் கக்கன் என்று அகராதியில்பதிவு செய்து கொள்ளுமளவுக்கு பெருமை பெற்றவர் அவர். அவரும் காங்கிரஸ் கட்சியில்தான் இருந்தார் என்று சொல்லி பெருமூச்சு விட்டுக்கொள்ளும் நிலையில்தான் இப்போதைய காங்கிரசின் நிலவரம் உள்ளது. அக்கட்சியினர் சர்வசாதாரணமாகக் கோடிகளில் புழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதையொன்றும் மூடி மறைத்து வைத்துக் கொள்ளவில்லை அவர்கள். கம்பம் இடைத்தேர்தலையொட்டி காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் நடந்துள்ளது. அதில் பங்கேற்ற காங்கிரசுக்காரர்கள் தேர்தலுக்கு பணம் கொடுக்கலைன்னு புலம்பித் தள்ளியுள்ளார்கள்.


உடனே தலையிட்ட மாவட்ட காங்கிரஸ் ஓ.எஸ்.எம்.ராமச்சந்திரன், காசெல்லாம் கேட்டு வாங்கிக்கிங்க. மக்களவைத் தேர்தலப்ப நம்ம வேட்பாளருக்கு திமுகவுலருந்து அஞ்சு கோடி குடுத்தாங்க. அதுல மூணு கோடியை(மிச்சம் ரெண்டு கோடி என்னாச்சு...??)வாக்காளர்களுக்கு செலவு பண்ண நான்தான் பிரிச்சுக் குடுத்தேன் என்று அமைதிப்படுத்தியுள்ளார். கூட்டணிக்கட்சியே இவ்வளவு கொடுத்தால் சொந்தக் கட்சியில எவ்வளவு குடுத்திருப்பார்கள் என்பதுதான் அரசியல் நோக்கர்களின் மனதில் எழுந்துள்ள கேள்வியாக இருக்கிறது. கேரளாவிலும் காங்கிரஸ்காரர்கள் கோடி, கோடியாக செலவழித்துள்ள விவகாரம் அம்பலமாகியுள்ளது.


அங்கு போட்டியிட்ட ஒவ்வொரு காங்கிரஸ் வேட்பாளருக்கும் தில்லியில் பணப்பட்டுவாடா நடந்துள்ளது. தலா ஒன்றரைக்கோடியை அவர்களுக்குத் தந்துள்ளார்கள். இதை வாங்கிக்கொள்வதற்காக ஒவ்வொரு வேட்பாளர்கள் சார்பிலும் ஒருவர் தலைநகர் சென்றுள்ளார். முல்லப்பள்ளி ராமச்சந்திரன் சார்பில் சென்றவர் திரும்பி வருகையில் 25 லட்சம் ரூபாய் கொண்ட பெட்டியைத் தொலைத்து விட்டார். ஆனால் 25 லட்சத்தையும் அவர் லபக்கிவிட்டார் என்று கட்சி வட்டாரத்தில் புகாரைத் தட்டிவிட்டு விட்டார்கள் ஒரு கோஷ்டியினர். இதற்குப் பணத்தைத் தொலைத்தவர் விளக்கம் அளித்து எழுதிய கடிதத்தால் தேர்தல் செலவுக்கு காங்கிரஸ் மேலிடம் கோடிகளை அள்ளி வழங்கியது அம்பலமாகியுள்ளது.


இடதுசாரிகள் ஆதரவை விலக்கிக் கொண்டபோது கரன்சி மழையால் எம்.பி.க்களை நனையச் செய்து பெரும்பான்மையை நிரூபித்த காங்கிரஸ், தேர்தல் வெற்றிக்கும் அதையே நம்பியிருந்துள்ளது. ஆக.18 அன்று நடக்கப்போகும் திருவைகுண்டம், இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர் மற்றும் பர்கூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் கூட்டணிக்கட்சியான(வெற்றி ஃபார்முலாவை உருவாக்குவதில் தாய்க்கட்சி..!!) திமுகவோடு இணைந்து வாரி இறைத்துக் கொண்டிருக்கிறார்கள். சொந்தக்கட்சி வேட்பாளர் போட்டியிடும் தொண்டாமுத்தூர் தொகுதியில் பணம் கிடைக்காததால் காங்கிரஸ்காரர்கள் ஒதுங்குவது தெரிந்து மத்திய அமைச்சர் ராசா பணம் கொடுத்து உற்சாகப்படுத்தியுள்ள செய்தி பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.


இவ்வாறு திமுகவினர் கொடுக்கும் வைட்டமின் "ப" பெரிய அளவில் வேலை செய்கிறது. தங்கபாலு, சிதம்பரம் மற்றும் வாசன் பங்கேற்கும் கூட்டங்களுக்கு போகிறார்களோ இல்லையோ, நம்ம தலைவர்கள் ஸ்டாலின், அழகிரி பேசும் கூட்டங்களுக்கு காங்கிரஸ்காரர்கள் தவறாமல் போய்விடுகிறார்கள் என்று திமுகவினர் வட்டாரத்தில் கிண்டலாகப் பேசிக்கொள்கிறார்கள். தென் மாவட்டங்களில் அண்மையில் வெளியிடப்பட்ட சில காங்கிரஸ் கட்சிப் போஸ்டர்களில் மன்மோகன்சிங், சோனியா, காமராஜர், ராகுல்காந்தி ஆகியோருக்குப்பிறகு மு.க.அழகிரியின் படத்தையும் போட்டு விசுவாசம் காட்டியுள்ளனர்.


ஆனால் தேவையான சமயத்தில் காங்கிரசைப் புரட்டி எடுக்க திமுக தயங்கவில்லை என்று அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு பற்றி இடதுசாரிக்கட்சி உறுப்பினர்கள் பேசியபோது லால்கர், சிங்கூர் என்று காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் எரிந்து விழுந்தார். ஆனால் முரசொலியில் கட்டம் கட்டி வெளியிட்ட செய்தியில் இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியாத மாநிலம் காங்கிரஸ் ஆளும் மகாராஷ்டிராதான் என்பதைப் படம் பிடித்து காட்டினர். அதற்கு பாஜக தலைவரின் பேட்டியையும் ஆதாரமாக எடுத்துக் கொண்டு காங்கிரசை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தியது திமுக என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

Thursday, August 13, 2009

டாப் பஞ்ச் டயலாக்குகள்



அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இந்தியாவிற்கு எதிரானது என்பதற்கான ஆதாரங்கள் தொடர்ந்து அம்பலமாகி வருகிறது. அதில் தொடர் சரிவுகளை சந்தித்து வரும் பிரதமர் மன்மோகன்சிங்கைப் பார்த்து காங்கிரசுக்கு வாக்களித்த குடிமகன் கேட்கிறார்.

"நீங்க நல்லவரா... கெட்டவரா..."


*************

ஒரிசாவில் ஆர்.எஸ்.எஸ்-வி.எச்.பி.-பாஜக கூட்டம் ஆடிய வெறியாட்டத்தில் ஏராளமானோர் கொலை செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான கிறித்தவர்கள் சொந்த மாவட்டத்திலேயே அகதிகளாகியுள்ளனர். இவ்வளவு கொடுரங்களுக்குப்பிறகும் அந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அடிக்கிறார்கள் டயலாக்.

"ரிஸ்க் எடுக்குறது எங்களுக்கு ரஸ்க் சாப்புடுற மாதிரி"

*************

டபாய்த்துக் கொண்டே வந்த பூட்டாசிங்கின் மகன் சரப்ஜோத் சிங் கடைசியாக வசமாகச் சிக்கிக்கொண்டார். நண்பர்களிடம் சோகத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.

"மாப்பு.... வெச்சுட்டான்யா ஆப்பு.."

*************

ஒருகாலத்தில் சர்வதேச அரங்கில் இந்தியாவின் கருத்துக்கு மதிப்பு இருந்தது. அதைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, வெளியுறவுக்கொள்கை என்பது வெறும் பாகிஸ்தான் சம்பந்தமாக மட்டுமானதாக மாற்றுவதற்கு காங்கிரசும், பாஜகவும் போட்டி போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு அமெரிக்கா கூறுகிறது.

"சபாஷ்... சரியான போட்டி.."

*************

தேர்தல் தோல்வியை யார் மீது சுமத்துவது என்பதில் பாஜகவிற்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதல் இன்னும் நீடிக்கிறது. அதைக்கிளப்பிய யஷ்வந்த் சின்காவைப் பார்த்து அத்வானி கேட்கிறார்.

"பரட்டை... பத்த வெச்சுட்டியே பரட்டை..."

*************

பாஜகவின் தோல்விக்கு மதவெறிதான் பிரதான காரணம். ஆனாலும் செய்தியாளர்கள் விடாமல் அக்கட்சித்தலைவர் ராஜ்நாத்சிங்கைத் துரத்தித் துரத்திக் கேட்கிறார்கள், இந்துத்துவாவைக் கைவிடுவீர்களா... என்று. மாட்டோம் என்று பளிச்சென்று கூறும் அவர் தொடர்கிறார்....

"நான் ஒரு தடவ சொன்னா, நூறு தடவ சொன்ன மாதிரி..."

*************

முதலில் வருபவருக்குதான் புதிய அலைவரிசைக்கான உரிமம் என்று கூறிக்கொண்டு அனைத்து உரிமங்களையும் தானே வைத்துக் கொள்ளும் மத்திய அமைச்சர் ஆ.ராசா கொஞ்சம் தள்ளி நின்று கொண்டே சத்தம் போட்டு அடிக்கும் டயலாக்.

"தள்ளு... தள்ளு... தள்ளு....."

*************

கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த அமைச்சர் துரைமுருகனிடமிருந்து முக்கியமான இலாகா பறிக்கப்படுகிறது. அவரைத் தேடி வரும் கட்சிக்காரர்கள் எண்ணிக்கை தானாகவே சரிகிறது. அவ்வளவாக வேலையில்லை. புலம்புகிறார் அமைச்சர் துரைமுருகன்.

"எப்புடி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்..."

***********

கட்சியும், கோஷ்டியும் நகமும், சதையுமாக இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கரர்களைப் பார்த்து மக்கள் கேட்கிறார்கள். ஒரு கோஷ்டிய மன்னிச்சு, இன்னொரு கோஷ்டி ஏத்துக்குற காலம் எப்ப வரும்...?. பதிலடி தருகிறார்கள் காங்கிரசார்.

"மன்னிப்பு... தமிழ்ல எங்களுக்குப்பிடிக்காத வார்த்தை..."

************

சோனியா அனுமதிக்கலாம், ஆனால் மக்கள்...?



இது தாராளயுகம். அரசுடைமைக்காலம் என்பது மலையேறி விட்டது என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா மக்களவையில் கூறியுள்ளார்(தினமணி, ஆக.7). கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில் கொட்டிக்கிடக்கும் நாட்டின் இயற்கை வளமான எரிவாயுவை யார் எப்படி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அம்பானி சகோதரர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாட்டின் சொத்தை பாதுகாக்க வேண்டாமா.. அப்படிப் பாதுகாக்க வேண்டுமென்றால் அரசுடைமை ஆக்குங்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கோரியதற்குத்தான் இப்படி பதிலளித்துள்ளார்.


கடந்த பத்து நாட்களாகவே இதுதான் நாடாளுமன்றத்தை உலுக்கி வரும் பிரச்சனையாகும். முகேஷ் அம்பானிக்கு ஆதரவாக அரசு விலையை நிர்ணயிக்கிறது. அனில் அம்பானிக்கு பாதிப்பு என்றவுடன் சமாஜ்வாதிக்கட்சி கொந்தளிக்கிறது. ஏதோ இந்த நாட்டின் வளம் இந்த இரு நபர்களுக்கு மட்டுமே சொந்தமானது போல இந்தக்கட்சிகள் லாவணி செய்தன. இந்த நிலையில் விவாதத்தை தேசத்தின் சொத்து பற்றியதாக இடதுசாரிக்கட்சிகள் மாற்றின. இவ்வளவு நாட்களும் நாற்காலியில் பசையைத் தேய்த்து அமர்ந்திருந்த முரளி தியோரா இது தனிப்பட்ட விஷயம் என்றவாறே எழுகிறார். அப்போதுதான் இடதுசாரிக்கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுரை சொல்லவும் முற்படுகிறார்.


இது தாராளயுகம் என்கிறார். எந்தயுகத்தில், "இந்திய வங்கிகள் சரிந்து விழாததற்கு அரசுடைமைதான் காரணம். அதனால் இந்தப் பெருமை எனது மாமியாரையே சாரும்" என்று அவரது கட்சித்தலைவர் சோனியா காந்தி பெருமிதத்தோடு கூறினாரோ, அதைத்தான் தாராளயுகம் என்று தியோரா வர்ணிக்கிறார். காங்கிரசிலேயே இரண்டு ரகம் உண்டு. ஒன்று, சோசலிசம் என்று சொல்லிக்கொண்டு முதலாளிகளுக்கு சாதகமாக செயல்படுபவர்கள்.


இரண்டாவது, வெளிப்படையாகவே முதலாளிகளுக்கு சாதகமாக செயல்படுபவர்கள். இதில் முரளி தியோரா இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர். ஈரானுடன் குழாய் வழியாக எரிவாயுவைக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் போடக்கூடாது என்று அமெரிக்கா கூறியது. அப்போது அமைச்சராக இருந்த மணிசங்கர் அய்யர் கையெழுத்திடுவதில் உறுதியாக இருந்தார். இதனால் அவரைத் தூக்கி கடாசிவிட்டார்கள். அமெரிக்காவின் பேச்சைத் தட்டாமல் இருக்க முரளி தியோரா அந்த இடத்தில் அமர்த்தப்பட்டார். இதிலிருந்தே அவரது விசுவாசம் யாரிடம் இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.


எந்தயுகம் மலையேறியுள்ளது என்பதைக் கொஞ்சம் பூமிப்பந்தின் மேற்கு திசையில் தியோரா பார்ப்பது நல்லது. தாராளமாக இயங்கியதால் மேற்கு நாடுகளில் உள்ள மக்களின் சேமிப்பு பறிபோயுள்ளது. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் மலையேறிய தாராளயுகம் அங்கேயிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியிலும் இருக்கிறது. அதெல்லாம் வேண்டாம்... இதோ மக்கள் பணத்தை எடுத்து தாரை வார்க்க இன்னும் தயாராகவே இருக்கிறோம் என்று ஆசை காட்டி மலையிலிருந்து இறக்க அங்குள்ள ஆட்சியாளர்கள் முயற்சித்து வருகிறார்கள்.


முரளி தியோரா ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். அவர் மக்களவையில் இருப்பது அமெரிக்காவின் அல்லது அம்பானியின் பிரதிநிதியாக அல்ல. மக்களின் பிரதிநிதியே. யுகங்கள் மக்களின் யுகங்களாகவே இருக்க வேண்டும். அதற்கு அவர்களின் நலன்களைக் காக்கும் கொள்கைகளே வர வேண்டும். தனது மாமியார் பற்றி சோனியா காந்தி பெருமைப்பட்டுக் கொண்டது நியாயமானதே. அந்த நியாயத்தைப் பலிகொடுத்துவிட வேண்டாம். மக்களின் யுகங்கள் மலையேறிவிடக்கூடாது. மாமியாரின் பெருமை பறிபோக சோனியா அனுமதிக்கலாம். ஆனால் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

Tuesday, August 11, 2009

மக்கள் பணத்தை சூறையாடிய அமெரிக்க வங்கிகள்



எந்தவிதத் திட்டமும் இல்லாமல் அடமானக் கடன்களை, அடமானத்திற்கு மேல் அடமானம் வைத்து உருக்குலைந்து போன வங்கிகள் தங்களது மோசடி வேலைகளை மட்டும் கைவிடவில்லை. மீட்புத்திட்டம் என்ற பெயரில் லட்சக்கணக்கான கோடிகளை முழுங்கி ஏப்பம் விட்டு நிற்கும் வங்கிகளில் ஒன்பது பெரிய வங்கிகள் செய்த தில்லுமுல்லுகள் மீண்டும் அம்பலமாகியுள்ளன. நெருக்கடி மற்றும் சொத்து மீட்புத்திட்டம் என்ற திட்டத்தின் கீழ் நிதியைப் பெற்றுக் கொண்ட வங்கிகள் கடந்த ஆண்டிற்காக அளித்த போனஸ் தொகை குறித்து அமெரிக்க நிதித்துறை ஆய்வு செய்துள்ளது. ஒன்பது பெரிய வங்கிகளின் கணக்குகள் மற்றும் போனஸ் தொகை பற்றிய விரிவான ஆய்வு வங்கிகளின் மோசடியை முன்னுக்குக் கொண்டு வந்துள்ளது.

வங்கிகளிலேயே அதிகமான அளவு மீட்புத்திட்ட நிதியை சிட்டி வங்கிக்குழுமம்தான் பெற்றது. திவால் நிலைக்கு சென்ற இந்த வங்கியின் பங்குகளில் மூன்றில் ஒரு பங்கை அமெரிக்க அரசே எடுத்துக் கொண்டது. மேலும் மீண்டு வரட்டும் என்பதற்காக நிதியை வாரி வழங்கியது. வங்கியின் மீட்சிக்காக அதைப் பயன்படுத்தாமல் போனஸ் வழங்குவதற்காக அந்த நிதியைப் பயன்படுத்தியுள்ளார்கள். 2008 ஆம் ஆண்டுக்கான போனசாக சுமார் 26 ஆயிரம் கோடி ரூபாயை சிட்டி குழுமம் அளித்துள்ளது. இத்தனைக்கும் 2008 ஆம் ஆண்டில் சுமார் 91 ஆயிரம் கோடி ரூபாய் மேலும் நஷ்டத்தைக் கண்டுள்ளது சிட்டி குழுமம். எவ்வளவு மீட்பு நிதி வாங்கினார்கள், அதற்கும் போனசிற்கும் என்ன விகிதம் என்றெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. ஏனென்றால் இதில் பல விஷயங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்ற கட்டாயம் இந்த மோசடியாளர்களுக்கு இல்லை.

சிட்டி குழுமம் மட்டும் தனியாக இந்த வேலையைச் செய்யவில்லை. அதற்கு கூட்டாளிகளாக இருக்கும் வகையில் பேங்க் ஆப் அமெரிக்கா, மெர்ரில் அண்டு லின்ச், ஜே.பி.மார்கன் சேஸ் மற்றும் கோல்டுமேன் சாக்ஸ் குரூப் ஆகிய வங்கிகளும் மக்களின் வரிப்பணத்தை மீட்பு நிதியாகப் பெற்றுக் கொண்டு போனசையும் வாரி வழங்கியுள்ளார்கள். இவர்களின் போனசால் அதிகமாகப் பயனடைந்தவர்கள் வால் ஸ்டிரீட்டில் உள்ள முதலீட்டு வங்கியாளர்கள்தான். வங்கிகளை சிதைத்ததோடு நிற்காமல் மீட்புக்கான நிதியையும் எடுத்துக் கொண்டு ஒட்டுமொத்தமாகக் குழிதோண்டிப்புதைக்கவும் முடிவு செய்துவிட்டார்கள்.

பேங்க் ஆப் அமெரிக்கா மற்றும் மெர்ரில் லின்ச் ஆகிய இரு வங்கிகளும் கூட சுமார் 33 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் போனசாக வாரி வழங்கியுள்ளன. மீட்புத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியை இந்த இரு வங்கிகளும் இன்னும் திருப்பித்தரவில்லை. போனஸ் ஏன் தரப்பட்டது என்று கேட்டால், திறமையான நபர்களை போட்டி வங்கிகள் இழுத்துக் கொண்டு போய்விடும் என்று கதை விட்டுள்ளார்கள். வங்கிகளிலிருந்து மிக அதிகமான வருமானத்தை ஈட்டும் முதல் 100 பேரை அடையாளங்கண்டு அவர்கள் வருமானம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு கடந்த மாதத்தில் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா உத்தரவிட்டிருந்தார். அவரால் நியமிக்கப்பட்ட கென்னத் ஃபெய்ன்பர்க் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால் அவர் 2009 ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் இழப்பீடு போன்றவற்றை மட்டுமே ஆய்வு செய்ய முடியும். லட்சம் கோடி ரூபாய்க்கு மேற்பட்ட நிதி பல்வேறு வடிவங்களில் வங்கியிலிருந்து வெளியேறி விட்டது. இந்த லட்சணத்தில் ஓரிரு வங்கிகளைத் தவிர மற்ற வங்கிகள் இரண்டாவது மீட்புத்திட்ட நிதியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றன. அதோடு, மாதாமாதம் திவாலாகிக் கொண்டிருக்கும் சிறிய வங்கிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 305 அமெரிக்க வங்கிகள் திவால் நிலையை எதிர்நோக்கியுள்ளன என்று மத்திய காப்பீட்டுக்கழகம் கணித்திருந்தது. திவாலாகும் வங்கிகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு இந்தக் கழகத்தின் தோள் மீதுதான் சுமத்தப்பட்டுள்ளது.

நிறுவன மேலாண்மையில் நேர்மை, நியாயம் என்ற வார்த்தைகள் அனைத்தையும் அமெரிக்க வங்கிகள் தொலைத்துவிட்டு நிற்கின்றன. மக்கள் பணம் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் அதை முதலீடு செய்வதும், திவாலான நிலையிலும் மக்கள் பணத்தை எடுத்து போனசாக அள்ளி வீசிக்கொண்டிருப்பதும் எதை, எதையெல்லாம் நிர்வாகம் செய்யக்கூடாது என்பதற்கு உதாரணமாக இந்த வங்கிகள் செயல்படுகின்றன. இந்த வங்கிகளின் கைகளில்தான் இந்திய வங்கிகளை ஒப்படைத்துவிட வேண்டும் என்று ஒருநாளில் 26 மணிநேரம் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் மத்திய ஆட்சியாளர்கள்.

Thursday, August 6, 2009

"அடி" இடதுசாரிகளுக்கு... "வலி" மக்களுக்கு...!!

(ஏடிஎம் வாசலில்)

என்ன.. சார் இன்னக்கி ஆபிசுக்கு சரி
யான நேரத்துக்கு போக முடியாது போலருக்கே... ஏடிஎம்மில் பணம் எடுக்க வரிசையில் நின்று கொண்டிருந்த பாலு, நண்பர் மணியிடம் கேட்டார்.

ஆமா... பாலு.. ரெண்டு நாளக்கி முன்னாடியே பணத்த எடுத்திருக்கலாம்.. வேலைநிறுத்தம் பண்ணப்போறோம்னு முதல்லயே அறிவிச்சுட்டாங்க...

ஆனா... இப்புடி இஷ்டத்துக்கு ஸ்டிரைக் பண்ணலாமா... முத அஞ்சு நாள் பணம் எடுக்காம விட்டுட்டேன்... இவங்க ரெண்டு நாள் ஸ்டிரைக் பண்ணிட்டாங்க... இன்னக்கி பாத்தா இவ்வளவு கூட்டம் இருக்கு...

என்ன சொல்றீங்க பாலு... இஷ்டத்துக்கா...

ஆமா மணி.. வேலை நிறுத்தம் பண்ணி என்ன சாதிக்கப்போறாங்க...

பாலு... எதுவும் சாதனை பண்ணறதுக்காக இல்ல. கொடுக்க வேண்டிய ஊதிய உயர்வைக் கேட்டுதான் போராடுறாங்க..

எதுக்கெடுத்தாலும் ஊதிய உயர்வு கேட்டா தந்துற முடியுமா..

மாதாமாதம் கேக்குற விஷயமில்ல பாலு இது. அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவ ஊதிய ஒப்பந்தம் போடுவாங்க... 2007ல போட வேண்டிய ஒப்பந்தத்த இன்னும் போடாம இருக்காங்க...

அதுதான் பேச்சுவார்த்தை நடக்குதே...

அதுக்குப்பேரு பேச்சுவார்த்தையே கிடையாது...

என்ன சொல்றீங்க...

ஊழியர்கள் கேட்டது 20 சதவிகித உயர்வு... முதல்ல 17.5 சதவிகித உயர்வு தர்றதா சொன்ன நிர்வாகங்கள் அடுத்த பேச்சுவார்த்தைல 15 சதவிகிதமா குறைச்சாங்க... ரெண்டு நாளக்கி முன்னாடி நடத்துன பேச்சுவார்த்தை 13 சதவிகிதம்தான் தர முடியும்னு சொல்லிட்டாங்க... அதோட புது பென்சன் திட்டத்த ஒப்புக்கணும்னு நிபந்தன வேற...

என்னது... பேச்சுவார்த்தைக்குப் பேச்சுவார்த்தை குறைஞ்சுட்டே போகுதா... அப்புடி நான் கேள்விப்பட்டதே இல்லையே... புதுசா இருக்கு... தொழிற்சங்கம் அவ்வளவு பலவீனமா இருக்கா...

அப்படில்லாம் இல்ல... அதிகாரிகள், ஊழியர்கள்னு எல்லாருமே ஒண்ணு சேந்து நிக்குறாங்க... அத உடைக்கத்தான் இப்புடி வண்டிய ரிவர்ஸ் கியர்ல ஓட்டிப் பாக்குறாங்க...

சவால் விடுறமாதிரில்ல இருக்கு...

ஆமா பாலு... தொழிற்சங்க இயக்கத்துக்கு சவால்தான்... மேலும் கடிவாளம் போட இடதுசாரிகள் இல்லைங்குறதையும் பாக்கணும்...

அவங்க எதுக்கெடுத்தாலும் பிரச்சனை பண்ணுனவங்களாச்சே...

அவங்க பிரச்சனை பண்ணுனது தொழிலாளர்களுக்கோ... ஊழியர்களுக்கோ அல்ல... ஏழைங்களுக்கு 100 நாள் வேலையை உத்தரவாதம் பண்ணுனாங்க... சர்வதேச அளவுல வங்கிகள்லாம் சரிஞ்சப்ப இங்க மட்டும் பாருங்க நிமிர்ந்து நிக்குது... இதெல்லாம்தான் அவங்க பண்ணுன பிரச்சனை...

இப்பதான் ஞாபகம் வருது மணி... ரெண்டு நாளக்கி முன்னாடி பாலிசிக்கு பணம் கட்டப்போனேன்... பாத்தா அங்க ஊழியர்கள்லாம் ஸ்டிரைக் பண்ணிருந்தாங்க...

ரெண்டு மணிநேரம் வெளிநடப்புதான் பாலு.. ஸ்டிரைக் கிடையாது..அதுவும் உங்களுக்காகத்தான்..

எனக்காகவா...? புரியலையே...

பாலிசிக்கு போனஸ் தருவாங்கள்ல... அதக்குறைக்க அரசு திட்டமிட்டிருக்கு.. அதுக்கு எதிராத்தான் போராட்டம்..

பரவாயில்லையே... நான்கூட ஏதோ அவங்க சம்பளத்தக் கூட்டத்தான் ஸ்டிரைக்குனு நெனச்சுட்டேன்..

ஸ்டிரைக் இல்ல.. வெளிநடப்புதான்... உபரி வருமானத்துல 95 சதவிகிதத்த பாலிசிதாரருக்கு ஒதுக்கிருந்தாங்க... அத 90 சதவீதமா குறைக்குறாங்க...
அப்படின்னா போனஸ் குறையுமா...

நிச்சயமா... அது மட்டுமில்லாம வெளிநடப்பு செஞ்சதுக்கு வேற காரணங்களும் இருக்கு... தனியார் மயங்குற புதைகுழிய நோக்கி இழுத்துட்டுப் போறாங்க...

என்ன மணி... இதுக்கும் கடிவாளம் இல்லாததுதான் காரணம்னு சொல்வீங்களா...

ஆமா பாலு... பிட்டுக்கு மண் சுமந்த கதை ஞாபகம் இருக்கா... அடி மட்டும்தான் பரமசிவனுக்கு... வலி மக்களுக்குதான். இங்கயும் அப்புடித்தான்.

இடதுசாரிகளுக்கு அடி.. சரிவு... பின்னடைவுன்னு சில பேரு கொண்டாடுனாங்க... எனக்கு... உங்களுக்குனு பரவலா மக்களுக்குதான் வலிக்குது...

ஆஹா... நல்ல உதாரணம் சொன்னீங்க மணி..

உள்ள போங்க பாலு... அடுத்து நீங்கதான்...

Wednesday, August 5, 2009

மார்க்சிஸ்டுகளை மட்டும் ஏன் குறி வைக்கிறார்கள்?


கடந்த இரு ஆண்டுகளில் மேற்கு மிட்னாப்பூர், புருலியா மற்றும் பங்குரா ஆகிய மாவட்டங்களில் சுமார் 100 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது அனுப்பப்பட்டுள்ள 50 துணைராணுவப் பிரிவுகளும் கூட அதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பாக மாவோயிஸ்டுகளை வெளியேற்றும் நடவடிக்கை துவங்கிய பிறகும் கூட எட்டு மார்க்சிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த ஒருவரைக்கூட குறிவைக்காமல் மார்க்சிஸ்டுகளை மட்டுமே தங்கள் இலக்காக மாவோயிஸ்டுகள் வைத்துக் கொள்வது ஏன்? மாவோயிஸ்டுகளின் தலைவர்களில் ஒருவரான பிகாஷ் என்பவர் கூறுவதை நம்புவதாக இருந்தால், மார்க்சிஸ்ட் கட்சியினர் அனைவருமே காவல்துறைக்கு தகவல் தருபவர்களாக இருப்பவர்கள்.

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான் லால்கருக்கு துணை ராணுவப்படையை அனுப்பியுள்ளது. திரிணாமுல் அந்த அரசில் அங்கம் வகிக்கிறது. இருந்தாலும், காவல்துறைக்கு இந்த இருகட்சிகளைச் சேர்ந்தவர்களும் மாவோயிஸ்டுகள் பற்றிய தகவல்களை ஏன் தருவதில்லை என்பது மர்மமாகவே இருக்கிறது. தங்கள் எதிரியின் எதிரியை மாவோயிஸ்டுகள் நண்பர்களாகக் கருதுகிறார்கள் என்பதுதான் சரியான விளக்கம்.
- மெயில் டுடே நாளிதழ்(ஆக.4)

Sunday, August 2, 2009

குண்டுகளுக்கு நடுவில் கேடயமாகக் குழந்தைகள்



மாவோயிஸ்டுகள் உள்ளிட்ட உள்நாட்டு தீவிரவாதமே நாட்டின் முன்நிற்கும் மிகப்பெரிய சவாலாகும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியிருந்தார். அந்த அளவிற்கு மாவோயிஸ்டுகளின் வன்முறை வெறியாட்டங்கள் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளன. ஆந்திரா, ஒரிசா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் நிர்வாகம்தான் பல மாவட்டங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசு எந்திரங்கள் முடங்கிய நிலையில்தான் உள்ளன. 2008 ஆம் ஆண்டு மாவோயிஸ்டுகள் நிகழ்த்திய வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை 1,591 ஆகும். இதில் 620 சம்பவங்கள் சத்தீஸ்கரில்தான் நிகழ்ந்துள்ளன.


மேற்குவங்கம் லால்கரில் மாவோயிஸ்டுகளின் வெறியாட்டத்தை மக்கள் போராட்டமாகச் சித்தரிக்கும் எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்கள் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் நிர்வாகமே அலங்கோலமாகக் இருப்பதைக் கண்டு கொள்வதில்லை. 2008ல் சத்தீஸ்கரில் நடந்த 620 சம்பவங்களில் 157 அப்பாவிப் பொதுமக்களும், பாதுகாப்புப்படையைச் சேர்ந்த 85 பேரும் கொல்லப்பட்டனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் 828 அப்பாவிகள் மாவோயிஸ்டுகளின் கொலைவெறித்தாக்குதல்களுக்குப் பலியாகியுள்ளனர். மாநிலக்காவல்துறையினரைத் தவிர 35 துணை ராணுவப் படையின் பட்டாலியன்களும் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளன.


லால்கரில் புகுந்து அட்டகாசம் செய்து கொண்டிருக்கும் மாவோயிஸ்டுகளை விரட்டியடிக்க சென்றுள்ள துணை ராணுவப்படையினரை வெளியேற்ற வேண்டும் என்று சிலர் கேட்கிறார்கள். ஆனால் சத்தீஸ்கரில் இந்த 35 பட்டாலியன்கள் கிட்டத்தட்ட நிரந்தர முகாம்களை அமைத்துவிட்டார்கள் என்பதைக் கண்டுகொள்வதில்லை. அதோடு இந்த மாநிலத்தில் உள்ள தெற்கு பஸ்தர் பகுதி பல ஆண்டுகளாக மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. நிர்வாகமோ அல்லது அரசியல் தலைவர்களோ அந்தப்பகுதிக்குள் நுழைய முடியாது. ஒப்பந்ததாரர்கள், வர்த்தகர்கள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து மட்டுமல்லாமல், காங்கிரஸ் மற்றும் பாஜககாரர்களிடமிருந்து பணம் வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள் மாவோயிஸ்டுகள்.


இவர்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே ரத்தத்திற்கு ரத்தம் என்ற பாணியையே கடைப்பிடிக்கின்றன. சல்வா ஜுதும் என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி மாவோயிஸ்டுகளை வேட்டையாட முற்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகள் மற்றும் சல்வா ஜுதும் மோதலுக்கு முதல் பலியே ஜனநாயகம்தான். மாவோயிஸ்டுகளோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருந்த சமூக விரோதிகள் சல்வா ஜூதுமுக்கு மாறி விட்டார்கள். அவர்கள் அட்டகாசங்கள் அரசின் ஆதரவோடு நடக்கின்றன. இந்த லட்சணத்தில் மேற்கு வங்க அரசைக் குறை கூறிப் பேசிக்கொண்டிருக்கிறார் சத்தீஸ்கர் மாநில முதல்வரான ராமன்சிங்.


குழந்தைகளை தங்கள் வன்முறை வெறியாட்டங்களுக்கு மாவோயிஸ்டுகள் தயார்படுத்துகிறார்கள் என்பது நீண்டநாளைய குற்றச்சாட்டு. பாலர் சங்கங்கள் என்று உருவாக்கி புரட்சிக்கான போரை நடத்துவதற்காக அவர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கிறார்கள். போட்டிக்கு சல்வா ஜுதும் அமைப்பில் சிறப்பு காவல் அதிகாரிகள் என்ற பெயரில் அரசும் குழந்தைகளைச் சேர்க்கிறது. நூற்றுக்கணக்கான குழந்தைகள் இவ்வாறு சேர்க்கப்பட்டு அவர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கப்படுகிறது. இரு தரப்பினருமே சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட சட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களை மீறுகின்றனர். இருதரப்புமே இந்தக்குழந்தைகளைக் கேடயமாகவே பயன்படுத்துகின்றன.


சல்வா ஜூதும் அமைப்பு தனது மதவெறிக் கொள்கைகளை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக ஆகியவை பரப்புகின்றன. கம்யூனிச எதிர்ப்பு உணர்வு கொண்ட பாஜக மாநில அரசு, சிபிஎம் மற்றும் சிபிஐ ஊழியர்களை மாவோயிஸ்டுகளோடு இணைத்துப் பேசி அவர்களைக் குறிவைக்கிறது. பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடமுமே மாவோயிஸ்டுகளை எதிர்கொள்ள எந்தக் கொள்கையும் இல்லை. காவல்துறையை மட்டுமே நம்பியுள்ளார்கள். இதில் மாவோயிஸ்டுகளை எதிர்கொள்ள என்று கேட்டு வாங்கும் நிதியில் ஏராளமான ஊழல்கள் நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.


இருதரப்பிற்கும் நடுவில் சிக்கிக்கொண்ட ஆயிரக்கணக்கான பழங்குடியினர் ஊரைக்காலி செய்து விட்டனர். இவ்வாறு கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேறுவதை மாநில பாஜக அரசும் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பகுதிகளில் இரும்பு எஃகு, தங்கம், யுரேனியம் மற்றும் பாக்சைட் ஆகிய இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பெரு நிறுவனங்கள் இவற்றை மனதில் கொண்டு வட்டமடிக்கின்றன. பாஜக அரசும் நிலங்களைத் தாரை வார்ப்பதற்கான காரணங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் காங்கிரசும் உடந்தைதான்.

Saturday, August 1, 2009

பணவீக்கத்தின் தொடர்பு எல்லைக்கு வெளியில் விலைவாசி


ஜூலை 18 அன்று நிறைவு பெற்ற வாரத்திற்கான பணவீக்க விகிதம் (-)1.54 ஆக இருந்தது. அதாவது விலைவாசி செங்குத்தாக சரிந்து கொண்டிருக்கிறது. மக்கள் எல்லாம் சுபிட்சமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நிற்க. புள்ளிவிபரத்தை மட்டும் பார்த்தால் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் வழக்கத்தை விட வேகமாக விலைவாசி ஓடிக்கொண்டிருக்கிறது.


கனிமங்களுக்கான விலைகள் பெருமளவு குறைந்துள்ளன. சுமார் 16.8 சதவீத அளவிற்கு இதன் விலைகள் குறைந்தன. இரும்புத்தாதுவின் விலைதான் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன் விலை 24 சதவீதம் சரிந்தது. பெட்ரோல், டீசல் விலைகள் கடும் எதிர்ப்புக்கிடையிலும் உயர்த்தப்பட்டன. ஆனால் ஜெட் விமானங்களுக்கான எரிபொருள் விலையை சத்தமில்லாமல் குறைத்துவிட்டார்கள். குறைவான பணவீக்கத்தை அனுபவிக்க விரும்பும் குப்பனும், சுப்பனும் ஜெட்டில் பறந்து கொள்ள வேண்டியதுதான்.


காய்கறிகளின் விலைகள் 4.9 சதவீதமும், பருப்பு வகைகளின் விலை 4.2 சதவீதமும் அதிகரித்துள்ளது. இறைச்சி, மீன், முட்டை ஆகியவற்றின் விலைகளும் ஏறுமுகம்தான். பல மாநிலங்களில் துவரம்பருப்பின் விலை சில்லரை விலைக்கடைகளில் நூறு ரூபாயைத் தாண்டி ஆட்டமிழக்காமல் ஆடிக்கொண்டிருக்கிறது.


இந்த பணவீக்க அளவைக் கொண்டுதான் வளர்ச்சியை அளவிடப்போகிறார்கள். யானைக்கால் நோய் வந்தவரைப் பார்த்து, பார்த்தாயா...அவருடைய கால் எவ்வளவு வலுவாக இருக்கிறது என்று கூறினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இவர்களின் வளர்ச்சி பற்றிய வியாக்கியானம் இருக்க முடியும்.