Monday, October 12, 2009

தெற்கில் மீண்டும் வட்டமிடுகிறது அமெரிக்கக்கழுகு!




ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் ஆகிய நாடுகளின் ஆக்கிரமிப்பில் பெரும் கவனம் செலுத்திக் கொண்டிருந்த அமெரிக்கா மீண்டும் தென் அமெரிக்க நாடுகளின் பக்கம் திரும்பியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் தென் அமெரிக்காவின் அரசியல் சூழல் பெரிதும் மாறியுள்ளது. வெனிசுலா முன்னேற்றப்பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் நலக்கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் வெனிசுலா கண்டுள்ள வெற்றி மற்ற தென் அமெரிக்க நாடுகளை உத்வேகப்படுத்தியது. அரசியல் ரீதியாகவும் தென் அமெரிக்க அரசுகள் ஏகாதிபத்திய அமெரிக்காவுடன் முன்பு இருந்தது போன்ற நெருக்கத்தை வைத்துக் கொள்ளவில்லை.

கொலம்பியா மற்றும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசைக் கவிழ்த்துவிட்ட ஹோண்டுரஸ் ராணுவம் ஆகியவைதான் அமெரிக்காவிற்கு ஜால்ரா தட்டிக் கொண்டிருக்கின்றன. ஹோண்டுரசின் ஜனநாயகப் படுகொலை அமெரிக்காவின் ஆதரவில்லாமல் நடந்திருக்க முடியாது என்பதுதான் தென் அமெரிக்க நிகழ்வுகளைத் தொடர்ந்து கவனித்துவரும் அரசியல் வல்லுநர்களின் கருத்தாகும். தென் அமெரிக்க நாடுகள் ஒன்றிணைந்து தற்போது ஏற்படுத்தியுள்ள தனியாக வங்கி, தொலைக்காட்சி நிறுவனம், பிராந்திய ரீதியான வர்த்தக ஒப்பந்தங்கள் என்பதெல்லாம் 1990களில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. வெனிசுலா மற்றும் கியூபா ஆகிய நாடுகள் இந்த முயற்சிகளை எடுப்பதில் முன்நின்றன.

இந்த நிலையில்தான் அமெரிக்கா தென் அமெரிக்க நாடுகள் தனது கண்களைப் பதித்துள்ளது. கொலம்பியாவில் புதிதாக ஐந்து ராணுவத்தளங்களை அமெரிக்கா அமைக்கிறது. கேட்டால், போதைப்பொருட்கள் கடத்தலைத் தடுக்கவே இந்த ஏற்பாடு என்று கூறிக்கொள்கிறது. போதைப்பொருட்கள் கடத்தும் நாடுகள் என்று கூறி வெனிசுலாவையும், பொலிவியாவையும் கருப்புப்பட்டியலில் வைத்திருப்பதாகவும் அமெரிக்கா கூறுகிறது. ஆனால் இந்தப்பகுதியிலேயே அமெரிக்கா மற்றும் கொலம்பிய ஆகிய இருநாடுகள்தான் அதிகமாக போதைப்பொருட்களை விளைவிப்பதோடு நுகரவும் செய்கின்றன. இடதுசாரிக்கொள்கைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தும் இருநாடுகள் வெனிசுலா மற்றும் பொலிவியா என்பதே கருப்புப்பட்டியல் தயாரிப்புக்குக் காரணமாகும்.

அதோடு, பிரேசில் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் ஆயுதங்களை வாங்கிக் குவிக்கின்றன என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. கொலம்பியாவும் ஆமாம் என்று அருகில் அமர்ந்து கொண்டு தலையாட்டுகிறது. அமெரிக்காவிடமிருந்து வாங்காமல் பிரேசில் பிரான்சிடமிருந்தும், வெனிசுலா ரஷ்யாவிடமிருந்தும் ஆயுதங்களை வாங்குவதால்தான் இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. படைப்பெருக்கம் மற்றும் ஆயுதக்குவிப்பு என்று அமெரிக்கா கூறுவதெல்லாம் சொந்த நாட்டு மக்களை அச்சுறுத்தி வெளியில் தனது ஆக்கிரமிப்பை அதிகரித்துக் கொள்ளவே என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியமாகிவிட்டது.

உலகிலேயே அதிகமான நாடுகளில் தனது ராணுவத்தளங்களை ஏற்படுத்தியிருப்பது அமெரிக்காதான். 46 நாடுகளில் 865 அமெரிக்கத்தளங்கள் உள்ளன. பல நாடுகளில் அதன் அரசுகள் மற்றும் மக்களின் விருப்பத்திற்கு மாறாகவும் இந்தத்தளங்கள் அமைந்துள்ளன. லத்தீன் அமெரிக்காவிலேயே எல் சால்வடார், ஹோண்டுரஸ், பியூர்ட்டோ ரிகோ, கியூபா, அருபா, கியுராசோ மற்றும் பராகுவே ஆகிய நாடுகளில் இந்தத் தளங்கள் இன்னும் உள்ளன. இரண்டாம் உலகப்போருக்குப்பிறகு முதன்முறையாக, தென் அமெரிக்கக் கடற்பகுதிகளில் அமெரிக்கக் கப்பற்படை உலாவத் தொடங்கியுள்ளது. அர்ஜெண்டினா மற்றும் உருகுவே ஆகிய நாடுகளின் அரசுகள் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அமெரிக்க படைத்தளங்கள் தொடர்பாக ஊசலாட்டம் காட்டுகின்றன.

சொந்த பாதுகாப்பிற்காக ஆயுதங்களை வாங்கும் எங்களைப் பார்த்து, கொலம்பியாவில் ஏழு படைத்தளங்களை உருவாக்கத்திட்டமிடும் அமெரிக்கா எப்படி கேள்வி எழுப்பலாம் என்று உரிமைக்குரல் எழுப்புகிறது வெனிசுலா. அமேசான் பகுதிகளின் இயற்கைவளங்களைக் கொள்ளையடிக்கவே இந்தப்புதிய படைத்தளங்கள் என்று தென் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்புக் கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது. இந்தக்கூட்டத்தில் கொலம்பியாவும் கலந்து கொண்டது. அமெரிக்காவின் படைத்தளங்கள் அமைப்பதற்கான ஒப்பந்த விபரங்களைத் தெரிவிக்குமாறு மற்ற தென் அமெரிக்க நாடுகள் கேட்டபோது அதைத்தர கொலம்பியா மறுத்துவிட்டது. சொந்த நாட்டிற்கு எதிரான அம்சங்கள் அதில் இருப்பதுதான் காரணம் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.


No comments:

Post a Comment