Saturday, October 10, 2009

அடடே... மதியுமா...??


அடடே...(தினமணி, அக்.7) பகுதியில் ஏர் இந்தியா மகாராஜாவே சலித்துக் கொள்வது போன்ற கேலிச்சித்திரம் வரையப்பட்டுள்ளது. அவரால் தனது பைலட்டுகளை நம்ப முடியவில்லையாம். எப்ப சம்பளத்தை உயர்த்திக் கேப்பாங்க.. எப்ப ஸ்டிரைக் பண்ணுவாங்க... அடிதடியில இறங்குவாங்க... ஒண்ணுமே புரிய மாட்டேங்குதுன்னு சொல்வது போல் அந்தக் கேலிச்சித்திரம் உள்ளது.


பொதுத்துறை, வங்கி, காப்பீடு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் தங்கள் கோரிக்கைகளுக்காக போராடினால் வரிந்து கட்டிக் கொண்டு இறங்கி விடுகிறார்கள் இந்த தனியார்துறை ஆதரவாளர்கள். மதியும் அவர்களின் வரிசையில் இணைந்து கொள்கிறார். ஜெட் ஏர்வேஸ் பைலட்டுகளின் வேலை நிறுத்தம் நிறைவு பெற்று இன்னும் அந்நிறுவனத்தின் அனைத்து விமானங்களும் விண்ணில் பறக்கத் துவங்கவில்லை. அப்போதுமட்டும் ஜெட் நிறுவனத்தைக் கேலி செய்து சித்திரம் வரைய மதிக்கு ஏன் தோணவில்லை..? அது தனியார் நிறுவனம் என்பதாலா...??


சில நாட்களுக்கு முன்பு, முதலாளிகள் தங்கள் நிறுவனத்திலிருந்து எடுத்துக்கொள்ளும் ஊதியத்திற்கு வரம்பு தேவை என்று மத்திய அமைச்சர் சல்மான் குர்சித் கூறினார். உடனே முதலாளிகள் சங்கங்கள் அவர் மீது பாய்ந்து விட்டன. இவர்களுக்கு ஆதரவாக ஊடகங்களும் தொடையைத் தட்டிக் கொண்டு இறங்கிவிட்டன. பாவம்... ஊதியத்தைக் குறைத்துவிட்டால் அடுத்த வேளைச் சோற்றிற்கு எங்கே போவார்கள்... என்பதுபோல ஓலமிடுகிறார்கள்.


இதுதான் இவர்களின் சம்பளப் பட்டியல்(ரூ.கோடியில்)


முகேஷ் அம்பானி - 44.02

மல்விந்தர் சிங் - 19.59

சுனில் மிட்டல் - 19.55

சஜ்ஜன் ஜிண்டால் - 16.73

பங்கஜ் ஆர் படேல் - 14.43

குமாரமங்கலம் பிர்லா - 11.25

கமல் சிங் - 10.64

ஒவ்வொரு ஆண்டும் வெறும் சம்பளமாக இவர்கள் வாங்கும் தொகை இது. நெருக்கடி நிலவுகிறது என்று கூறி சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மானியமாக வாங்கிக்கொண்ட முதலாளிகள் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள மாட்டேனென்கிறார்கள். ஆனால் ஊழியர்கள் என்று வந்துவிட்டால் அவர்கள் சீட்டைக் கிழித்து அனுப்பவதுதான் முதலாளிகளின் தலையாய கடமையாக இருக்கிறது.

அடடே... மதியுமா..? என்ற வாசகர்கள் நினைத்துக் கொள்வதுபோல்தான் இந்தக் கேலிச்சித்திரமும் உள்ளது.

No comments:

Post a Comment