Tuesday, October 6, 2009

வெடிக்கக் காத்திருக்கும் புற்றுநோய்க்குண்டு!



இந்தியர்களைப் பெருமளவில் பாதிக்கும் நோய் காசநோயாகும். எய்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நோய்களைப் பற்றிய விவாதங்கள், விளம்பரங்கள் மற்றும் சிகிச்சைக்கான நிதியுதவிகள் என்று நடந்தாலும் காசநோய் பற்றிய அக்கறை அரசுத்தரப்பில் பெருமளவில் காட்டப்படுவதில்லை. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 17 லட்சம் பேர் காச நோயால் மடிந்து போகிறார்கள். அதில் கிட்டத்தட்ட 30 சதவிகிதம் பேர் இந்தியர்களாவர். இந்த கொடுமை ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மறுபுறத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 2020 ஆம் ஆண்டில் பெருமளவில் வெடிக்கும் வகையில் இதன் பாதிப்பு இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

புற்றுநோய் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்தியக் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் 2020 ஆம் ஆண்டுக்குள் 20 சதவிகிதம் அதிகரிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 4 லட்சத்து 47 ஆயிரம் பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். 2020 ஆம் ஆண்டுக்குள் இந்த ஆண்டு சராசரி சுமார் ஐந்தரை லட்சத்தைத் தொட்டுவிடும் அபாயம் எழுந்துள்ளது. அனைத்து வகையான புற்றுநோய்களுமே அதிகரித்துள்ளன. கடந்த 24 ஆண்டுகள் குறித்த இந்த ஆய்வின்படி வாய்ப்புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

தற்போது ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 28 ஆயிரத்து 66 புதிய வாய்ப்புற்று நோயாளிகள் உருவாகின்றனர். 2020 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 46 ஆயிரத்து 785 ஆக அதிகரிக்கப் போகிறது. சுமார் 66 சதவிகித அதிகரிப்பை புதிய நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்த பத்தாண்டுகள் ஏற்படுத்தப்போகிறது. இரண்டாவதாக மார்பகப்புற்று நோய் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. புதிய நோயாளிகளின் ஆண்டு சராசரி தற்போது 42 ஆயிரத்து 863 ஆக உள்ளது. 2020க்குள் இந்த சராசரி எண்ணிக்கை 51 ஆயிரத்து 194 ஆக உயர்ந்துவிடும். மூளை, நரம்பு, வயிறு என்று அனைத்துப் புற்றுநோய்களுமே அதிகரிக்கவே செய்கின்றன.

இந்த ஆய்வறிக்கையை தயார் செய்துள்ள குழுவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் வினோத் ரெய்னா, இந்தியாவில் ஏற்படும் புற்றுநோயில் முப்பது சதவிகிதம் புகை பிடிப்பதாலும், புகையிலையை வாயில் போட்டு மென்று தின்றுவிடுவதாலும்தான் ஏற்படுகிறது. மார்பக மற்றும் வாய்ப்புற்று நோய்கள் அதிகரித்துள்ளதற்கும் இதுதான் காரணமாகும். பொது இடங்களில் புகை பிடிப்பது மற்றும் புகையிலை சாப்பிடுவது தொடர்பாக செய்யப்படும் விளம்பரங்கள் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும் நாம் பார்க்க வேண்டும். அதோடு, அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் அதிகமாக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். இந்திய மக்கள் தொகையில் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் நெருக்கடியை அதிகரிக்கச் செய்கிறது என்று கூறுகிறார்.

புற்றுநோய்க் கட்டுப்பாட்டுத்திட்டத்தில் புதிய உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது. அதற்கு இந்த ஆய்வறிக்கையின் புள்ளிவிபரங்கள் பெரிதும் உதவும் என்கிறார் மருத்துவ ஆய்வுக்கான இந்தியக்கவுன்சிலின் அதிகாரி ஒருவர். செல்போன்கள் பயன்படுத்துவதால் மூளையில் ஏற்படுத்தும் பாதிப்பை தனியாக ஆய்வு செய்ய வேண்டும். அதன் பயன்பாடு அதிகரித்திருப்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது கவுன்சிலின் கருத்தாக உள்ளது. நார்ச்சத்து உள்ள உணவுகள் குறைந்ததாலும் இந்தியாவில் பாதிப்பு அதிகரித்துள்ளது. மேற்கத்திய உணவுப்பழக்கங்கங்களுக்கு மாறியுள்ளவர்கள்தான் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது ஆய்வறிக்கை.

தேசிய புற்றுநோய் நிதியம் ஒன்றை உருவாக்கி புற்றுநோயால் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு உதவப்போவதாக மத்திய அரசு கூறுகிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வந்தபோதே சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவிகிதமாக உயர்த்துவோம் என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதிமொழி அளித்தது. மக்களுக்கு அளிக்கப்பட்ட அந்த உறுதிமொழி இன்றுவரை காப்பாற்றப்படவில்லை. நோய்கள் பெருகுகின்றன. பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றன என்று அரசுத்துறைகள் தரும் புள்ளிவிபரங்களே கூறுகின்றன. தேவை ஒரு சரியான சுகாதாரக் கொள்கையே என்கிறார்கள் அத்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள்.

No comments:

Post a Comment