Sunday, October 4, 2009

வரம் தர மறுக்கும் பூசாரி!

கிராமப்புற இந்தியாவில் வெறும் 28.3 சதவிகிதம் பேர் மட்டுமே வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்கள் என்பதுதான் அரசின் அதிகாரபூர்வ ஒப்புதல் வாக்குமூலம். வறுமையின் அளவைக் குறைக்க புதிய உத்தியையும் கண்டுபிடித்தார்கள். கிராமப்புற இந்தியர் மாதம் 365 ரூபாய் வருமானம் ஈட்டினால் வறுமைக்கோட்டைத் தாண்டி விடுகிறார் என்பதுதான் அந்த உத்தி. ஒவ்வொரு மனிதருக்கும் தேவையான கிலோரி உணவு அடிப்படையில் கணக்கிட்டால் உதைக்கிறதே என்பது ஆட்சியாளர்களின் கவலை. ஆட்சியாளர்களின் கணக்கு பல ஏழைக்குடும்பங்களை வறுமைக்கோட்டிலிருந்து உதைத்துத் தள்ளியுள்ளது.

இதற்கிடையில் மேலும் புதிய உத்திகளோடு வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்களை எதிர்கொள்ள(!) சுரேஷ் டெண்டுல்கர் தலைமையில் ஒரு குழுவைப் போட்டார்கள். இந்தக்குழு தனது வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. தங்களைப் பற்றி ஒரு குழு ஆய்வு செய்கிறது என்பது எத்தனை ஏழைகளுக்கு தெரியும் என்பது ஒருபுறம். மறுபுறத்தில், ஆட்சியாளர்களும் செல்வந்தர்களும் இந்தக்குழுவின் அறிக்கையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையைச் சொன்னால் இந்த அறிக்கையின் நிலைமை என்ன ஆகும் என்பதை திட்டக்குழு நடத்திக் காட்டியிருக்கிறது. வறுமைக்கோடு பற்றி கிராமப்புற மேம்பாட்டுத்துறை ஒரு ஆய்வு செய்தது. அதை திட்டக்குழு கடுமையாக விமர்சித்துள்ளது. வறுமைக்கோட்டை நிர்ணயிக்க தற்போதுள்ள வருமான வரம்பின்படி சுமார் 1800 கலோரிகளைத்தான் கிராம மக்களால் பெறமுடியும் என்பது அத்துறையின் கண்டுபிடிப்பு. இதனால் தற்போதுள்ள வருமான வரம்புப்படி 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற இந்தியர்கள் வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது. கிராமப்புற வருமான வரம்பை ரூ.700 ஆக உயர்த்தலாம் என்பது அக்குழுவின் பரிந்துரை. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி தர மாட்டார் என்று சொல்வார்கள். இங்கும் மாண்டேக்சிங் அலுவாலியா போன்ற பூசாரிகள் இடைமறிக்கிறார்கள்.

ஐம்பது சதவிகிதத்திற்கு மேல் வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளார்கள் என்று சொல்வதா... என்று திட்டக்குழு துணைத்தலைவர் அலுவாலியா கேள்வி எழுப்புகிறார். இவ்வளவு பேர் வறுமையில் வாடுவது அபாயமான நிலை இல்லையாம். அப்படிச் சொல்வதுதான் அபாயமாம். சுரேஷ் டெண்டுல்கரின் ஆய்வறிக்கைக்கு காத்திருக்கலாம் என்று கூறிவிட்டார்கள். அவரும் அபாயச் சங்கை கையிலெடுத்தால் பூசாரி அலுவாலியா பாய்ந்து பிடுங்கி விடுவார் போலிருக்கிறது.

3 comments:

  1. //இவ்வளவு பேர் வறுமையில் வாடுவது அபாயமான நிலை இல்லையாம். அப்படிச் சொல்வதுதான் அபாயமாம். //
    இங்கு உண்மைகளைச் சொல்லுவதுதான் ஆபத்தானது! முக்கியமான பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. nice matter

    -Surya

    ReplyDelete
  3. hello , i have read your blog. nalla irukku. continue this gud work....
    Mani, Chennai

    ReplyDelete