Showing posts with label சிபிஎம். Show all posts
Showing posts with label சிபிஎம். Show all posts

Monday, May 2, 2011

"இலவசம்" அல்ல, நியாயமான பங்கீடுதான்!

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் கருத்துப் பிரச்சாரத்தைத் தவிடு பொடியாக்கி விடுகிறோம் என்று கிளம்பியிருக்கும் எழுத்தாளர் சோலை மற்றும் திமுக வெளியீட்டுச் செயலாளர் திருச்சி செல்வேந்திரன் ஆகிய இருவருமே ஒரு புதிய சாதனையைக் கண்டுபிடித்துள்ளனர். அதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கப்பட்ட "இலவச" மாநிலங்களவை உறுப்பினர் பதவி. இதில் திருச்சி செல்வேந்திரன் ஒருபடி மேலே போய் "கலைஞரின் எத்தனையோ அறிவிக்கப்படாத இலவசங்களில் ஒன்று" என்று புளகாங்கிதமாகக் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தோழர் நல்லசிவன் மாநிலங்களவை உறுப்பினரானபிறகு, தற்போது தோழர்.டி.கே.ரங்கராஜன் கட்சி சார்பில் சென்றிருக்கிறார். 1989 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்றது. ஒவ்வொரு முறை மாநிலங்களவைத் தேர்தல் வரும்போதும், இந்த 15 உறுப்பினர்கள் திமுக சார்பில் நிற்பவர்களுக்கு தங்கள் வாக்குகளை(இலவசமாகத்தான்!) அளிப்பார்கள். அந்த சட்டமன்றத்தின் காலகட்டத்தில் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வாக்களிப்பதற்கே, நியாயமாகக் கிடைக்க வேண்டிய ஒரு இடத்தைக் கோரிப் பெற்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

அதன்பிறகு நடைபெற்ற தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரிய அளவில் சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்கவில்லை. 2006 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஒன்பது உறுப்பினர்கள் என்ற நிலையில்தான் மீண்டும் தங்கள் நியாயமான கோரிக்கையான ஒரு மாநிலங்களவை உறுப்பினர் என்பதை முன்னிறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெற்றது. இதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மாநிலங்களவை உறுப்பினரானதன் பின்னணி.

தங்களைப் போலவே மற்றவர்களையும் நினைத்துக் கொள்வதால்தான் இலவசங்கள் என்று நியாயமான பகிர்வைப் பற்றியும் திமுகவினர் நினைத்துக் கொள்கிறார்கள். 2004 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு அமைந்தபோது, இடதுசாரிக்கட்சிகளின் ஆதரவுடன்தான் உருவானது. அது நாங்கள் போட்ட இலவசம் என்று திமுகவைப் பார்த்து இடதுசாரிகள் ஒருபோதும் ஏகடியம் செய்யவில்லை. சொல்லப்போனால், திமுகவின் பங்கோடு, இலவசமாக மதிமுகவினருக்கான அமைச்சர்கள் பதவியையும் கேட்டு வாங்கிச் சென்றதுதான் திமுக. ஐக்கிய முன்னணி ஆட்சி தொடர திமுக வெளியேறினால் போதும் என்று காங்கிரஸ் சொன்னபோது, திமுகவுக்கு ஆதரவாக இடதுசாரிகள் நின்றார்கள். அதை இலவசம் என்று இடதுசாரிக்கட்சிகள் குத்திக் காட்டவில்லை.

1989 ஆம் ஆண்டில் வி.பி.சிங் தலைமையில் அரசு அமைந்தது. அதில் தி.மு.க.வும் இடம் பிடித்தது. இத்தனைக்கும் ஒரு மக்களவைத் தொகுதிகளில்கூட திமுக வெற்றி பெறவில்லை. அந்த அரசும் இடதுசாரிக்கட்சிகளின் ஆதரவால்தான் உருவானது. இதையும் எந்தக்காலகட்டத்திலும் இலவசம் என்று மார்க்சிஸ்ட் கட்சி சொன்னதில்லை.

இது ஒருபுறம் இருக்கட்டும். முரசொலி(ஏப்.29 வெளியூர் பதிப்பு) நாளிதழில் திருச்சி செல்வேந்திரன் எழுதுகிறார். "இனிமேல் தொழிற்சங்கப் பொன்மொழிகளான தர்ணா, கேரோ போன்ற வார்த்தைகள் மேற்கு வங்கத்துக்குள்ளே கேட்கக்கூடாது. ஒழுங்காய் இருங்கள்" என்று மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் சொன்னதாகக் கதைவிடுகிறார். இன்றைக்கும் மேற்கு வங்க தலைமைச் செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தலாம். இங்கு தலைமைச் செயலகம் நோக்கிச் செல்கிறோம் என்றாலே முதுகுத்தண்டைக் கீறிவிடும் அளவுக்கு காவல்துறையை ஏவிவிடும் திமுக அரசைத்தான் பார்க்க முடிந்தது.

"குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்பட்டவன் எல்லாம் குற்றவாளி அல்ல..." என்று கனிமொழிக்கு ஆதரவாக முழங்கியுள்ளார் செல்வேந்திரன். "கரும்பாலையில் வேலை செய்த ரங்கராஜனுக்கு மெமோ கொடுக்கப்பட்டிருக்கும். இதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டால் அது புத்திசாலித்தனமாக இருக்காது" என்கிறார். மக்கள் பணம் 1,76,000 கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ளது. அதில் முன்னாள் அமைச்சர் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். முதல்வரின் மகளும், கட்சியின் எம்.பி.யுமான கனிமொழி சேர்ந்து சதி செய்தார் என்று மத்தியப்புலனாய்வுக்குழு சொல்கிறது. இவரோ கரும்பாலையில் தரும் மெமோ பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதியன்று டைம்ஸ் ஆப் இந்தியாவின் கொல்கத்தா பதிப்பு வெளியிட்ட பொய்ப்பிரச்சாரக் கட்டுரை ஒன்றை எடுத்து, தலித் முரசு, குமுதம் ரிப்போர்ட்டர் ஆகிய பத்திரிகைகள் ஒரு ஆண்டு கழித்து பிரசுரித்துள்ளன. இதைத்தான் கரைத்துக் குடித்துவிட்டு செல்வேந்திரன் சொல்கிறார், பதினேழாயிரம் தலித்துகள் குழந்தை, குட்டிகளோடு சுட்டுக்கொன்று கடலிலே மூழ்கடித்த கொடுமை என்று. இதற்கு ஏற்கெனவே தீக்கதிரில் பதில் சொல்லப்பட்டுள்ளதை செல்வேந்திரன் படிக்காதது நமது குற்றமல்ல. அப்படியொரு படுகொலைச் சம்பவமே நடக்கவில்லை என்பதுதான் உண்மை. வழக்கமான கம்யூனிச எதிர்ப்புப் பிதற்றல் அது. இதற்கு மாய்ந்து, மாய்ந்து எதை எழுதச் சொல்கிறார்?

திமுக பற்றிய எகனாமிக் டைம்ஸ் கருத்து போட்டியாளரின் கருத்து என்கிறார். உண்மைதான். அனைத்து வர்த்தகத்துறைகளிலும் முதல்வரின் குடும்பம் நுழைந்துள்ளதால், யார் குறை கூறினாலும் அது போட்டியாளரின் கருத்து என்று சொல்லிக் கொள்ளலாம். அவ்வளவு பெரிய ஏகபோகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். இதனால்தான் ஒரு இடத்தில் "ரெங்கராஜன் நம்முடைய வர்க்க விரோதி" என்கிறார் செல்வேந்திரன். தெரிந்தோ, தெரியாமலோ, பெரியாரின் வாக்கியம் ஒன்றையும் அவர் நினைவு கூர்ந்திருக்கிறார்.

"நம்முடைய எதிரி உன்னை யோக்கியன் என்று சொன்னால், நீ அயோக்கியன் என்று அர்த்தம். அவர்கள் கெட்டவன் என்று சொன்னால்தான் நீ நல்லவன் என்று அர்த்தம்" என்பதுதான் அந்த வாக்கியம். எதிரி முகாமில் இருக்கும் செல்வேந்திரன், தோழர். டி.கே.ரங்கராஜனைப் பார்த்து வர்க்க விரோதி என்கிறார். பெரியாரின் வார்த்தைகளையே செல்வேந்திரனுக்கு சமர்ப்பிப்போம்.

Friday, April 29, 2011

புருலியாவில் ஆயுதம் வீசிய சதி அம்பலம் !

மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுமுன்னணி அரசின்மீது பழிசுமத்தி எப்படி யேனும் வீழ்த்தவேண்டும் என்ற தீய நோக்கத்தோடு, அம்மாநிலத்தில் உள்ள புருலியா மாவட்டத் தில் பெருமளவில் மர்மமான முறையில் ஆயுதங்கள் குவியல் குவியலாக வீசப்பட்ட சம்பவத் தில் முதன்மைகுற்றவாளியான கிம் டேவி என்பவர், தற்போது இடதுசாரி அரசுக்கு எதிராகத் தான் இந்த சதித்திட்டத்தை நிறைவேற்றினோம் என்றும், இதுகுறித்து இந்திய அரசுக்கு அனைத்துவிவரங்களும் முதலி லேயே தெரியும் என்றும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அரசியல் அரங்கில் கிம் டேவியின் இந்த பேட்டி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1995ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி மேற்குவங்க மாநிலம் புருலியா மாவட்டத்திலுள்ள ஜோவ்பூர் ஜால்தா பகுதியில் மர்மமான முறையில் ஆகாய மார்க்கமாக குவியல் குவியலாக ஆயுதங்கள் வீசப்பட்டன. மறு நாள் காலை ஆயுதக்குவியல் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே நாடு முழுவதும் இடதுமுன் னணி அரசுக்கு எதிராக செய்தி கள் பரப்பப்பட்டன. பெருமளவு ஆயுதங்களை மர்மமான முறை யில் இறக்குமதி செய்து, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி உள் ளிட்ட இடதுசாரி கட்சிகளின் ஊழியர்கள் இந்த ஆயுதங்களைக் கொண்டு எதிர்க்கட்சியினரை கொன்றுகுவித்துவருகிறார்கள் என்றெல்லாம் திட்டமிட்டு பொய்ப்பிரச்சாரம் நாடு முழு வதும் கட்டவிழ்த்துவிடப்பட்டது.

இந்த சம்பவத்தில், புருலியா உட்பட பல்வேறு பகுதிகளில் இயங்கிய ஆனந்த மார்க்கிகள் என்ற அமைப்பை சேர்ந்தவர் களே குற்றவாளிகள் என்பது பின்னர் விசாரணையில் தெரிய வந்தது. ஆனந்த மார்க்கிகள் அமைப் பிற்காக தீவிரவாத குழு வைச் சேர்ந்த கிம் டேவி என்ப வரும் பீட்டர் பிளீச் என்பவரும் இந்த காரியத்தை செய்தார்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தில் முதன் மை குற்றவாளிகளான மேற் கண்ட இருவரும் இந்தியாவிலி ருந்து தப்பிப்பதற்கு மத்திய அரசு நிர்வாகமே ஏற்பாடு செய்தது. புருலியா ஆயுத வீச்சு சம்பவத் திற்குப்பின்னால், இடதுமுன் னணி அரசுக்கு எதிராக மம்தா வின் திரிணாமுல் காங்கிரசும், காங்கிரசும் மாவோயிஸ்டுகளின் உதவியுடன் ஏராளமான முயற்சி களை செய்தவண்ணம் இருக் கின்றனர்.

இந்தப்பின்னணியில், 15 ஆண்டுகளுக்குப்பின்னர், புருலியா ஆயுத வீச்சு சம்பவத்தின் பின்னணி என்ன என்பது குறித்து பல்வேறு உண்மைகளை, இந்த சம்பவத்தில் முதன்மைக் குற்ற வாளியான நீல்கிறிஸ்டியன் நீல்சன் என்ற கிம் டேவி, டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நிருபருக்கு அளித்த நீண்ட பேட்டியில் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இந்த வழக்கில் தற்போது இந்தியாவுக்கு தன்னைக் கொண்டு வர அரசு முயற்சிக்கிறது என்றும், மறுபுறத்தில் அதே மேற்கு வங்கத்தில் மற்றொரு நாச காரியத்திற்காக சிலர் தன்னை நாடுவதாகவும் குறிப்பிட்டுள்ள கிம் டேவி, இந்தப்பின்னணி யிலேயே உண்மைகளை வெளி யிட முடிவு செய்ததாக டைம்ஸ் நவ் நிருபரிடம் ஒப்புக்கொண்டி ருக்கிறார்.

புருலியாவில் ஆயுதம் வீசுவ தன் மூலம், இடதுமுன்னணி அரசு ரகசியமாக ஆயுதக்குவிப் பில் ஈடுபடுகிறது என்ற பிரச் சாரத்தை நடத்தி, அதன்மூலம் அங்கு குடியரசுத்தலைவர் ஆட் சியை அமல்படுத்திவிட முடியும் என்ற எண்ணத்துடன், அரசியல் சக்திகளின் ஆதரவுடன் ஆனந்த மார்க்கிகள் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் தன்னை கூலிக்கு அமர்த்திக்கொண்டன என்று கிம் டேவி தனது பேட்டியில் கூறியுள்ளார்.

புருலியாவில் ஆயுதம் வீசப்பட உள்ள நிகழ்வு குறித்து பிரிட்டிஷ் உளவுத்துறையின் தகவல் மூலம் இந்திய அரசுக்கு முன்கூட்டியே தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த சம்பவத்தில் அப்போதைய மத்திய ஆட்சியிலிருந்த கட்சி யின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் தொடர்பு உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்பிரிக்கா, மத்திய அமெ ரிக்கா உள்பட பல்வேறு பகுதி களில் கடந்த 15 ஆண்டுகளாக இதுபோன்ற பல காரியங்களுக்கு பணியாற்றி இருப்பதாகவும், கத்தோலிக்க தேவாலயம், கிரீன் பீஸ் போன்ற அமைப்புகள், இந்தியாவில் ஆனந்த மார்க்கிகள் போன்ற அமைப்புகள் என உலகம் முழுவதும் ஏராளமான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்காக பணியாற்றி இருப்பதாகவும் கிம் டேவி கூறியுள்ளார்.

மேற்குவங்கத்தில் தான் செய்த பணியின் நோக்கம், இடதுசாரி அரசை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதே என்றும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.


Monday, May 25, 2009

வாசகர்களை ஏமாற்றுவது அழகல்ல...

சில ஆண்டுகளுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்களில் ஒருவரான தீபங்கர் முகர்ஜி தொலைக்காட்சி விவாதமொன்றில் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியைத் தொகுத்துக் கொண்டிருப்பவர், பல விஷயங்களில் ஏன் சிபிஎம் இவ்வாறு சொல்கிறது என்று கேள்விகளைத் தொடுத்துக் கொண்டிருந்தார்.


பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த அவர், "இது குறித்து பல்வேறு ஆவணங்களை சிபிஎம் அளித்துள்ளது. அதைப் படித்தீர்களா... " என்று கேட்டார். அதற்குப் பதிலளிக்காமல் மீண்டும் பழைய பல்லவியை பாடினார். "கட்சி என்ன சொல்லியிருக்கிறது என்பதைப் படிக்காமல் நீங்களாக அப்படி ஏன் சொல்கிறது என்று கேட்டுக் கொண்டிருந்தால் எப்படிப் பதில் சொல்வது..." என்று தீபங்கர் முகர்ஜி பதிலடி தந்தார்.


இது ஒரு சம்பவம் அல்ல. ஊடகங்களில் பலரும் இப்படித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வரிசையில் ஞாநியும் சேர்ந்துள்ளார். குமுதம்(மே 27) ஓ... பக்கங்கள் பகுதியில், "தேர்தல் முறையிலே உள்ள மிகப்பெரிய குறைக்கெதிராகவும் விரைந்து போராட வேண்டிய அவசியத்தை உணர்வார்கள். அதுதான் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் தேவை" என்று எழுதியுள்ளார். தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றி மார்க்சிஸ்ட் கட்சியின் கருத்து என்னவென்பதைக் கூறி இதைச் சொல்லியிருந்தால் சரியாக இருக்கும்.


மொட்டையாக, அவசியத்தை உணர்வார்கள் என்று கூறுவது ஏதோ மார்க்சிஸ்ட் கட்சி இது குறித்து அக்கறை காட்டவில்லை என்பதைப் போல ஒலிக்கிறது. கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையை அவர் படித்திருந்தால் இப்படி எழுதுவதற்கு அவசியம் ஏற்பட்டிருக்காது.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை இவ்வாறு கூறியது :

* உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

* குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தல்களில் போட்டியிடுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு பொருட்களாக அரசு நிதி உதவி செய்யப்படும்.

* பெரிய நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தருவது தடை செய்யப்படும்.

உரிய தருணங்களில் பல்வேறு மேடைகளில் இத்தகைய விஷயங்களைக் கட்சி வலியுறுத்தவும் தவறவில்லை. அதோடு வாய்ப்புள்ளபோது தனது வரம்புக்குள் அதை நடைமுறைப்படுத்தவும் தவறவில்லை. எடுத்துக்காட்டாக, பெரிய நிறுவனங்களிடமிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலுக்காக நிதி பெறுவதில்லை. டாடா நிறுவனம் வழங்கியபோதும் காசோலையைத் திருப்பி அனுப்பிய கட்சி மார்க்சிஸ்ட் கட்சி என்பது ஞாநிக்கும் தெரியும்.


தேர்தல் தோல்வி பற்றி இடதுசாரிகள் சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும் என்றும் எழுதியுள்ளார். தோற்றாலும் சரி, வெற்றி பெற்றாலும் சரி சுய விமர்சனம் செய்து கொள்ள மார்க்சிஸ்ட் கட்சி தவறுவதில்லை. கணிசமான அளவு வாசகர்களைக் கொண்ட குமுதம் போன்ற பத்திரிகைகளில் எழுதும் போது அவர்களை ஏமாற்றுவது சரியானதல்ல. சரியான, உண்மையான விபரங்களை அவர்களுக்கு தர வேண்டும் என்ற கூடுதல் பொறுப்பு இருப்பதை ஞாநி மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும்.