Showing posts with label சமூக நீதி. Show all posts
Showing posts with label சமூக நீதி. Show all posts

Sunday, July 24, 2011

"தனியறை"யில் எம்.எல்.ஏ.வுக்கு சாப்பாடு!

ஒரிசாவில் தொடருகின்றன தீண்டாமைக் கொடுமைகள்

நலத்திட்டங்களை பரிசீலனை செய்யச் சென்ற இடத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரை மட்டும் தனியறையில் அமரச் செய்து உணவளித்த கொடுமை ஒரிசாவில் நிகழ்ந்துள்ளது.

ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் சட்டமன்ற உறுப்பினர் காஷிநாத் மல்லிக். தஸ்பல்லா என்ற தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டவராவார். நயாகர் என்ற இடத்தில் மாவட்டத்தின் நலத்திட்டங்கள் குறித்த பரிசீலனை நடைபெற்றிருக்கிறது. இவரைத் தவிர மேலும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர் ருத்ர மாதவ் ரே, மாவட்ட ஆட்சியர் ஆகியோரும் அக்கூட்டத்திற்காக வந்திருந்தனர். காலையில் கூட்டம் நடந்தது. மதிய உணவுக்காகக் கலைந்தபோது, காஷிநாத் மல்லிக் மட்டும் தனியாக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஏன் என்று அவர் கேட்டபோது அந்த அறையில் இடம் இல்லை என்று அவரிடம் சொல்லியிருக்கிறார்கள்.

மற்றவர்கள் தட்டில் சாப்பிட்ட நிலையில், இவருக்கு இலையில் சாப்பாடு வழங்கப்பட்டிருக்கிறது. எம்.பி.யும், சட்டமன்ற உறுப்பினர்களும் கவுரமாக நடத்தப்பட்ட நிலையில் தான் மட்டும் மோசமாக நடத்தப்பட்டதற்கு மல்லிக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். தான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதுதான் இத்தகைய சம்பவத்திற்குக் காரணம் என்று அவர் குற்றம் சாட்டுகிறார். தன்னைக் கீழ்த்தரமாக நடத்தியது பற்றி அவர் ஒரிசா சட்டமன்ற சபாநாயகருக்கு கடிதமும் எழுதியிருக்கிறார். நான் தலித் என்பதால்தான் தனியறையில் வைத்து சாப்பாடு போட்டனர் என்று காஷிநாத் மல்லிக் அதில் குறிப்பிடுகிறார்.

அப்பகுதி மக்களவை உறுப்பினரான ருத்ர மாதவ் ரே, ஆதிக்க சாதி மனப்பான்மையோடு இருக்கிறார் என்று நீண்டநாட்களாகவே மல்லிக் குற்றம்சாட்டி வருகிறார். சாதி பெயரைச் சொல்லி இழிவாகத் திட்டினார் என்று அவர் மீது ஏற்கெனவே மாநில மனித உரிமை ஆணையம் வரை புகார் தெரிவித்துள்ளார். இந்தப் புகாரை திரும்பப் பெ வேண்டும் என்று மாநில முதல்வரான நவீன் பட்நாயக் கூறியும், இல்லை... சட்டம் தனது கடமையைச் செய்யட்டும் என்று மல்லிக் உறுதியாக இருந்துவிட்டார். தனது மனைவியையும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டினார் என்பதும் மல்லிக், ருத்ர மாதவ் ரே மீது வைக்கும் குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.

சட்டமன்ற உறுப்பினருக்கே இத்தகைய நிலை என்றால் சாதாரண தலித் மக்களுக்கு என்ன பாதுகாப்பு என்று அம்மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமை அமைப்புகள் குரல் எழுப்பியுள்ளன. சட்டமன்ற உறுப்பினர்கள் அவமானப்படுத்தப்பட்ட சம்பவத்தில் அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்திருக்கிறார்கள். பாரபட்சமான அணுகுமுறைகள் பற்றிய புகார்களை அப்பாவி மக்கள் கொண்டு வரும்போது இவர்கள் அதை எப்படிப் பார்ப்பார்கள் என்பது இந்த அமைப்புகளின் கேள்வியாகும்.

கடவுளை நெருங்காதே..!



ஒரிசா
மாநிலத்தின் பல பகுதிகளில் தலித்துகள் கோவில்களில் நுழைய முடிவதில்லை. "அரிசனங்கள் இங்கிருந்து வழிபடலாம்" என்ற அறிவிப்புப் பலகை சில கோவில்களில் வைக்கப்பட்டுள்ளன. அதாவது, உள்ளே நுழையக்கூடிய சில கோவில்களில்கூட எங்கிருந்து கும்பிட வேண்டும் என்பதைத் தீர்மானித்து வைத்திருக்கிறார்கள். புரி மாவட்டம் நுவாபடா என்ற கிராமத்தில் உள்ள காளி கோவிலுக்குள் மூன்று இளம் தலித் பெண்கள் நுழைந்து வழிபட்ட பிறகுதான் இத்தகைய அறிவிப்புப் பலகைகளை வைத்தனர். நவீன மயமாகியுள்ளதாகச் சொல்லப்படும் இந்த நூற்றாண்டில், அதுவும் கடந்த ஆண்டில்தான் இந்தப்பலகை வைக்கப்பட்டது. கடவுளை இவர்கள் நெருங்கினால் அது ஊருக்கு நல்லதில்லை என்று சரடு விடுகிறார்கள் ஆதிக்க சாதியினர்.

மாநிலத்தின் பல பகுதிகளில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச்சட்டத்தை அமல்படுத்துவதிலும் சாதி ரீதியான பாகுபாடு உள்ளது. மற்றவர்களுக்கு தரப்படும் ஊதியம் தலித்து மக்களுக்குத் தரப்படுவதில்லை. குறிப்பாக தலித் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் செய்யும் வேலையைத்தான் நாங்களும் செய்கிறோம். எதற்காக இந்த பாகுபாடு என்கிறார் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரான சந்தனா போய். ரனபாடா என்ற இடத்தில் கோவிலுக்குள் தலித்துகள் நுழைந்ததைக் காரணம் காட்டி, 80 தலித் குடும்பங்களின் விளைநிலங்களில் ஆதிக்க சாதியினர் அறுவடை செய்து அள்ளிச்சென்ற கொடுரமும் நடந்துள்ளது.

Wednesday, July 21, 2010

நான் பிள்ளையார் பேசுறேன்....



வணக்கம். நான்தான் கோவை, சிங்காநல்லூர் பத்தாவது வட்டம் ஜீவா வீதில குடியிருந்த பிள்ளையார் பேசுறேன். இவ்வளவு நாள் மவுனமா இருந்த நான் பேசுறது அவசியம்னு நெனச்சுதான் வாயத் துறந்துட்டேன். 1989 ஆம் ஆண்டுங்குறது நல்லாவே நெனவுல இருக்கு... அப்பதான் நான் ஜீவா வீதிக்குள்ள வர்றேன். என்னக் கொண்டு வந்தவங்க உள்மனசுல என்ன இருக்குன்னு அப்போ என்னால படிக்க முடியல. என் முதுகுக்குப் பின்னாலதான் பல வேலைகள் நடந்துருக்கு...

கும்பிடறதுக்குதான் என்ன கொண்டு வந்தாங்கன்னு நெனச்சேன்... வந்த அன்னிக்கு உற்சாகம் கரை புரண்டு ஓடுச்சு. அதெல்லாம் கொஞ்ச நாள்தான். பக்கத்து வீட்டம்மா மாட்டைக் கொண்டு வந்து கட்டுச்சு. அது சாப்புடுற அழக ரசிச்சேன்... நாக்கை சுழற்றி அசை போட்டது பிரமாதமா இருந்துச்சு.. சாணம் போட்டப்ப கூட இயற்கைதானே என்றுதான் மனதுக்குள் ஓடியது.

ஆனால் மாடுகள் நிரந்தரமாகக் குடியேறினப்பதான் அது அவங்களுக்கு சொந்தமான இடம். நான் வெறும் வாட்ச்மேன்தான்னு புரிஞ்சுது. என் முதுகுக்குப் பின்னால் என்ன செய்யுறதுன்னு தெரியாம திகைச்சு நின்னவங்கள ஒரு வேளை நான் திரும்பிப் பார்த்துருவனோன்னு பயந்து ஒரு பெரிய சுவரை எழுப்பிட்டாங்க. நான்கூட அது என்னுடைய பாதுகாப்புக்குத்தானோன்னு நெனச்சுட்டேன். ஆனா அது தீண்டாமைச் சுவர். பெரியார் நகர்ல இருக்குற அருந்ததிய மக்கள் தங்களோட வீதிக்குள்ள வந்துரக்கூடாதுன்னுதான் எனக்கு கோவில்.

முதல் விநாயகர் சதுர்த்தி வந்தப்ப கொஞ்சம் பரபரப்பாக இருந்தேன். ஆனா எந்த அசைவும் இல்லை. வழக்கம்போல மாடுகள் மட்டும் வந்தன. இப்படியே ஒவ்வொரு சதுர்த்தியும் கழிஞ்சுது. ஒண்ணுல்ல... ரெண்டுல்ல... 20 விநாயகர் சதுர்த்திகள் கழிஞ்சு போச்சு. என்னோட தரப்புல இருக்குறவங்க கண்டுக்கல. அந்தத் தரப்புல இருக்குறவங்க பாதையத் திறக்க என்னவெல்லாமோ பண்ணிப் பாத்திருக்காங்க. முடியல.

திடீர்னு ஒருநாள் ஏதோ மின்னுச்சு. அப்புறம்தான் தெரிஞ்சுது புகைப்படம் எடுக்குறாங்கன்னு. மறுநாளும் வந்தாங்க. முதல்நாள் இல்லாத மாடுகள் அப்ப இருந்துச்சு. சாணம் போட்டு அந்த இடத்தையே நாறடித்த நிலைய அவங்கள்லாம் பாத்தாங்க. அதயும் ஃபோட்டோ எடுத்தாங்க. இப்படிப் பாதை போக வேண்டுமே... ஆனால் இடையில் எப்படி கோவில் வந்தது என்று அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். குறுக்கே புகுந்து சொல்ல வாய்நுனி வரைக்கும் வார்த்தைகள் வந்துருச்சு, இது கோவிலல்ல. மாட்டுத்தொழுவம்தான் என்று. கட்டுப்படுத்திக்கிட்டேன்.

ஆனா ரெண்டு, மூணு நாட்கள்ல ஒண்ணு புரிஞ்சுது. இவங்க ஏதோ வந்தார்கள்,, சென்றார்கள் மாதிரி ஆட்களல்ல. அவங்க பேச்சுலருந்து புரிஞ்சுது, ஏற்கெனவே பல மனச்சுவர்களையும், கல் சுவர்களையும் தகர்த்தவங்க இவங்கன்னு. எனக்காகவும் சில பேர் பரிஞ்சு பேசுனாங்க. அவங்கள்லாம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் விடுதலை முன்னணி அமைப்புகளச் சேந்தவங்கன்னு அப்புறம்தான் தெரிஞ்சுது.

ஜன.30. அரசு அதிகாரிகள் வந்தப்ப இவ்வளவு சீக்கிரமாவா நம்மை இந்த இடத்த விட்டு கூட்டிட்டுப் போயிருவாங்கன்னு நானும் மத்தவங்களப் போல நெனச்சேன். ஆனா இறங்குறப்பயே வந்த எல்லா அதிகாரிகள் கைலயும் பாத்தேன். தீக்கதிர்தான் இருந்துச்சு. அவங்க வர்றாங்கன்னு தெரிஞ்சு அங்கு கூடுன பெரியார் நகர் மக்களும் ஒவ்வொருத்தர் கைலயும் தீக்கதிரோடதான் நின்னாங்களாம். தீக்கதிரோட முதல் பக்கச் செய்திதான் மந்திரமாக இருந்துருக்கு. ஜேசிபி எந்திரம் வந்துச்சு. முதல்ல என்னோட முதுகுப்புறந்தான் வந்து நின்னுச்சு.
நான் மாட்டுத் தொழுவத்துல மூக்கைப் பிடிச்சுட்டு உக்காந்திருந்தப்ப வராத சில பேரு அப்ப வந்து விநாயகர் மேல கை வெச்சுருவீங்களான்னு வாய்ச்சவடால் பேசுனாங்க. வந்தவங்களோட அடைமொழியக் கேட்டா எனக்கு சிரிப்புதான் வந்துச்சு... ஒருத்தரு எரியீட்டி, இன்னொருத்தரு ஸ்டோனு. அவங்க பாச்சா பலிச்சுரக்கூடாதுன்னு அப்ப வேண்டிக்கிட்டேன். யார்கிட்ட வேண்டிக்க முடியும்.. என்கிட்டயே வேண்டிக்கிட்டேன். சுவரைப் பாத்து ஜேசிபி எந்திரம் போனதுதான் தாமதம். ஏதோ அதுக்காகவே காத்துருந்த மாதிரி பொல, பொலன்னு சுவர் உதிர்ந்து போச்சு.

சுவரை எடுத்த ஜேசிபி நானிருந்த மாட்டுத் தொழுவத்தோட வளாகச் சுவர்களையும் தீண்டுச்சு. அடுத்து நான்தான்னு மூச்சைப் பிடிச்சுக்கிட்டு உட்காந்திருந்தேன். ஆனா ஜேசிபி பின்வாங்குச்சு. பேசிக்கலாம்னு கிளம்பிட்டாங்க. அச்சச்சோ... நம்மள விட்டுட்டாங்களேன்னு நெனச்சேன். ஆனா அதுக்கப்புறமும் ஒவ்வொரு நாளும் பாத்துட்டுப் போனாங்க தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்காரங்க.

பிப்ரவரி 6. காலைல என்னோட முதுகுப்பக்கம் பரபரப்பா இருந்துச்சு. எல்லாரும் தீக்கதிர் வாங்கிப் படிச்சுட்டுருக்குற சத்தம் கேட்டுச்சு. ஏதோ மார்க்சிஸ்ட் கட்சியோட மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் முதல்வருக்கு கடிதம் எழுதிருக்காருன்னு வாசிச்சாங்க. அப்பவே நெனச்சேன், இன்னக்கி ஏதாவது நடக்கும்னு. நெனச்ச மாதிரியே மீண்டும் ஜேசிபி.

என்னைத் தூக்க மாநகராட்சி ஊழியர் தொட்டப்ப ஏதோ சாப விமோசனம் கிடைச்ச உணர்வுதான். பெரியார் நகர் நோக்கி என்னை அவர் எடுத்துட்டுப் போனப்பதான் அவ்வளவு நாளும் எனது முதுகுப்புறத்துல இருந்தவங்கள பாக்க முடிஞ்சுது. என்னை ஆவலா பாத்தாங்களே ஒழிய, குத்துக்கல் மாதிரி இவ்வளவு நாள் எங்கள மறிச்சு உட்கார்ந்திருந்தாயேனு யாரும் பாக்கலை. அங்கருந்து என்னைத் தொட்டுத் தூக்கிட்டு வந்தவர் அருந்ததியர்னு பேசிக்கிட்டதும் என்னோட காதுல விழுந்துச்சு.

எனக்காக அருந்ததியர் சமூகத்தினர் செஞ்சு வெச்ச மேடைல ஜம்முனு உக்கார வெச்சாங்க. முறைப்படி எனக்கு எதெல்லாம் செய்யணுமோ அதெல்லாம் செஞ்சாங்க. பாதை கிடைத்ததோடு, போனசாக நானும் கிடைத்தேன்னு மக்கள் பேசுனாங்க. வழிவிட்டான் பிள்ளையார் என்று எனக்கு பெயரும் சூட்டிட்டாங்க. எனக்குமல்லவா சேர்த்து வழி பிறந்துருக்கு...

Monday, April 5, 2010

"குழந்தைகள் தியாகம் வீண் போகாது...!"



என்ன தொழில் செய்கிறார் என்று கேட்டால், அதற்குப் பதில் சொல்ல வேண்டுமென்பதற்காக வேண்டுமென்றால் விவசாயம் என்று சொல்லலாமே ஒழிய, அவருக்கென்று நிரந்தரத் தொழில் எதுவும் கிடையாது. ஆனால் பலரும் கையில் எடுக்க அச்சப்படும் ஒரு விஷயத்தில் போராடி நின்று வெற்றி பெற்றுள்ளார் 55 வயதாகும் சந்திரபதி என்ற பெண்மணி. ஜூன் 15, 2007 அன்று மனோஜ் மற்றும் அவரது மனைவி பப்லி ஆகிய இருவரும் கொலை செய்யப்பட்டனர். இருவரும் தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் ஒரே கோத்திரத்தில் பிறந்த அவர்கள் திருமணம் செய்வதை அனுமதிக்க மாட்டோம் என்று சட்டவிரோதமாக ஊர்ப்பஞ்சாயத்து என்ற பெயரில் சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்தார்கள்.


இவர்கள்தான் ஊர்ப்பெரியவர்கள் என்றும் தங்களைக் கூறிக்கொள்பவர்கள். அவ்வாறு திருமணம் செய்த மனோஜ் மற்றும் பப்லி ஆகிய இருவரும் படுகொலையும் செய்யப்பட்டனர். இதில் கொலை செய்யப்பட்ட மனோஜின் தாய்தான் சந்திரபதி. இந்தக் கொடுரத்தை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஊர்க்கட்டுப்பாடு என்று பயந்து நடுங்கி இருந்து கொள்ளாமல் பஞ்சாயத்து தலைவர்களிலிருந்து கொலைகாரர்கள் வரை அனைவரையும் நீதிமன்றத்தில் கூண்டில் நிறுத்துவதில் வெற்றிபெற்றார். அவ்வாறு நிறுத்தப்பட்டவர்களில் பப்லியின் உறவினர்கள் ஐந்து பேருக்கு மரண தண்டணையும், பஞ்சாயத்துத் தலைவர் கங்கா ராமுக்கு ஆயுள் தண்டனையும் மார்ச் 30 அன்று வழங்கப்பட்டுள்ளது.


ஆனால் இந்த மூன்றாண்டுக்காலத்தில் ஏராளமான தடைக்கற்களை சந்திரபதி சமாளிக்க வேண்டியிருந்தது. ஒட்டுமொத்தமாக ஊரே அவரை சமூகப்புறக்கணிப்பு செய்தது. அதைப்பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை. கோத்திரம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொள்ள குழந்தைகளுக்கு உரிமையுள்ளது என்றார் அவர். காலம் இப்போது பெரும் அளவில் மாறியிருக்கிறது. தங்கள் வாழ்க்கைத் துணையை குழந்தைகள் தேர்வு செய்யும்போது பெண்கள் ஆதரவு தர வேண்டும். ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்து கொண்டவர்களைப் பார்த்து நீங்கள் இருவரும் சகோதர, சகோதரி என்று கூறுபவர்கள்தான் உண்மையில் கொலை செய்கிறார்கள் என்று பொரிந்து தள்ளுகிறார் சந்திரபதி.


இந்தப் போராட்டத்தில் அவருக்கு முதலில் கைகொடுத்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்தான். தற்போது வழங்கப்பட்டுள்ள கர்நால் நீதிமன்றத் தீர்ப்பு பற்றிப் பேசிய ஜனநாயக மாதர் சங்கத்தின் அரியானா மாநிலத் தலைவரான ஜக்மதி சங்வான், ஒவ்வொரு நபரும் தங்கள் விருப்பத்திற்கேற்ப திருமணம் செய்து கொள்ளலாம் என்று அரசியல் சட்டம் அளித்திருக்கும் உரிமை காக்கப்பட வேண்டும் என்று எங்கள் அமைப்பு நம்புகிறது என்றார். வழக்கம்போலவே, பாஜகவின் கருத்து மழுப்பலாகவே இருந்தது. அக்கட்சியின் தேசிய செயலாளர்களில் ஒருவரான கேப்டன்.அபிமன்யு கூறுகையில், காலத்தின்போக்கில் மாற்றமும் வரும் என்று கூறிக்கொண்டார். இவர் ஜாட் சாதி அமைப்பின் தலைவர்களில் ஒருவராகவும் இரூப்பதாலேயே இந்த மழுப்பல் பதில் வருகிறது.


சந்திரபதிக்கு ஆதரவான கருத்து சொல்பவர்களில்கூட பெரும்பாலானவர்கள் அதை வெளிப்படையாக சொல்ல மறுக்கிறார்கள். ஜாட் கூட்டமைப்பின் மற்றொரு தலைவரான ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி எம்.எ°.மாலிக் போன்றவர்கள் மறைமுகமாக இந்தக் கொடுமைகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்து கொள்வது 1946 ஆம் ஆண்டுவரை தடைசெய்யப்பட்டதாகவே இருந்தது என்று மழுப்புகிறார்கள். சாதி அமைப்புகள் கிராமப்புறங்களில் இன்னும் வலுவாக ஊடுருவியிருப்பதே இதற்குக் காரணமாகும். ஆனால் எனது குழந்தைகளின் தியாகம் வீணாகிப்போய்விடாது. சமூகத்தில் மாற்றத்தை இவர்களின் தியாகம் கொண்டு வந்தே தீரும் என்று உறுதியாகக் கூறுகிறார் சந்திரபதி.


உங்களுக்கு இரண்டு பெண்கள் இருக்கிறார்களே... அவர்களின் திருமணம் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டால், நான் அவர்களிடம் ஏற்கெனவே சொல்லிவிட்டேன். தங்கள் வாழ்க்கைத் துணைவர்களை அவர்களே தேர்வு செய்து கொள்ளலாம். அவர்களுடைய கோத்திரத்தில் உள்ளவர்களையோ அல்லது வெளியில் உள்ளவர்களையோ தங்கள் இஷ்டப்படி அவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு தடையேதும் இல்லை என்று உறுதியாகச் சொல்கிறார் சந்திரபதி. இதுவரை கட்டப்பஞ்சாயத்துப் பேர்வழிகளுக்கு ஆதரவாக இருந்த நிலை மாறி, சமூகநீதிக்காற்றின் திசை மாறியுள்ளது என்பதையே இது காட்டுகிறது என்கிறார்கள் அரியானாவைச் சேர்ந்த பலர்.

Thursday, February 18, 2010

தலித்துகளை வெள்ளமும் விட்டுவைக்கவில்லை!


சமூக ரீதியான ஒடுக்குமுறைகளை காலம் காலமாக சந்தித்து வரும் தலித்துகள் இயற்கைப் பேரழிவுகள் ஏற்படும்போதும் அதிகமாகப் பாதிக்கப்படுபவர்களாகவே இருக்கிறார்கள் என்பது தொடர்ந்து வெளிவரும் ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்படுகிறது. உ.பி. மற்றும் பீகார் மாநிலங்களில் ஆண்டுதோறும் ஏற்பட்டு வரும் வெள்ளப்பெருக்குகள் தலித்துகளையே அதிகமாகப் பாதிக்கிறது என்பதும், நிவாரண நடவடிக்கைகளிலும் சமூக ரீதியான பாகுபாடுகள் உள்ளன என்பதும் பழைய செய்திகள். கடந்த ஆண்டு ஆந்திராவை உலுக்கி எடுத்த வெள்ளம் தலித்துகள் வாழும் பகுதிகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.


அக்டோபர் 2009ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு கர்நூல், மகபூப்நகர், குண்டுர் மற்றும் கிருஷ்ணா ஆகிய மாவட்டங்களைக் கடுமையாகத் தாக்கியது. பலநாட்கள் கடுமையான இருட்டில் ஆந்திர மக்கள் பொழுதைக் கழித்தனர். இந்த நான்கு மாவட்டங்களில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். எக்கச்சக்கமான ஏக்கர்களில் இருந்த பயிர்கள் நாசமாகின. கடந்த நூறு ஆண்டுகளில் இவ்வளவு பயங்கரமான வெள்ளத்தை ஆந்திரா பார்த்ததில்லை. ஆந்திர மாநிலம் உருவானபிறகு இதுதான் பெரும் சேதத்தை ஏற்படுத்திய இயற்கைப் பேரழிவாகும். பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் நிவாரணத்தைப் பெறவில்லை.


இந்தப் பிரச்சனைகள் பின்னுக்குப் போகும் வகையில் தனித் தெலுங்கானா கோரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தர வேண்டும் என்று கோரி மக்களைத் திரட்டும் வகையில் கர்நூல் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியுள்ளது. மற்ற மாவட்டங்களில் அத்தகைய இயக்கங்கள் நடைபெறவுள்ளன. மற்ற அனைத்து கட்சிகளுமே தெலுங்கானா விவகாரத்தில் மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிடும் பணியை மேற்கொண்டுள்ளன. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் நிலை குறித்த ஆய்வுகள், அதிர்ச்சிக்குரிய விபரங்களை வெளிக்கொண்டு வந்துள்ளது.


ஏழைகளை, குறிப்பாக தலித்துகளைத்தான் வெள்ளம் கடுமையாகப் பாதித்துள்ளது என்பதுதான் அந்த விபரங்கள். ஆந்திர வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 308 கிராமங்களில் 1,090 குடியிருப்புப் பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. பல்வேறு தலித் அமைப்புகள் உள்ளிட்ட 13 தொண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த ஆய்வை நடத்தின. தலித்துகளுக்கு ஏற்பட்ட இழப்பு, சமமான இழப்பீடு விநியோகம், நிவாரண நடவடிக்கைகளில்போது மரியாதை மற்றும் பாரபட்ச அணுகுமுறை ஆகிய அம்சங்களைக் கண்டறிய இந்த ஆய்வு முயன்றது. தலித்துகள் எந்தவகையிலாவது நிவாரணத்தைப் பெற்றுள்ளார்களா என்பதைத்தான் அந்த ஆய்வு கண்டறிய விரும்பியது.


வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 38 விழுக்காடு குடும்பங்கள் தலித்துகளின் குடும்பங்கள்தான். வெள்ளத்தில் பலியானவர்கள் மற்றும் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததாகக் கருதப்படுபவர்கள் ஆகியோரில் 55 விழுக்காட்டினர் தலித்துகளாவர். வெள்ளம் தாக்கும்முன்பே மோசமான வீடுகளில்தான் தலித்துகள் வாழ்ந்து வந்தார்கள். அந்த வீடுகளையும் வெள்ளம் விட்டுவைக்கவில்லை. வெள்ளத்தின் தாக்குதலால் வீடுகளை இழந்தவர்களில் பாதிப்பேர் தலித்துகள்தான் என்று ஆய்வு கூறுகிறது. நிலங்களில் பயிர்களை இழந்தவர்களில் குறைவான அளவில்தான் தலித்துகள் பாதிக்கப்பட்டார்கள். பயிர்ச் சேதத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 28 விழுக்காடுதான் தலித்துகள். அவர்கள் கைகளில் நிலங்கள் இல்லை என்பதுதான் இவ்வளவு குறைவாக அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்குக் காரணமாகும்.


தாழ்வான பகுதிகளில்தான் பொதுவாக தலித்துகள் வாழ்கின்றனர் என்பதுதான் அதிகமான பாதிப்புகளுக்குக் காரணம் என்கிறார் தொண்டு நிறுவனமொன்றைச் சேர்ந்த ஜி.நரசிம்மா. நிவாரணப் பணிகளில் தலித்துகளுக்கு முன்னுரிமை தர வேண்டும். இருப்பிடங்களுக்கான மனையிடங்களை அவர்களுக்கு முதலில் வழங்கிட வேண்டும் என்று நாங்கள் கோரி வருகிறோம் என்கிறார் அவர். முன்னுரிமை பெற வேண்டிய இவர்கள், பல கிராமங்களில் கடைசியாகத்தான் நிவாரணம் பெறும் அவலம் உள்ளது. இதில் கொடுமை என்னவென்றால், பல தொண்டு நிறுவனங்களே இதர பகுதியினரைப் பார்த்து நிவாரணம் வழங்கிவிட்டுதான் தலித் பகுதிகளுக்கு சென்றிருக்கிறார்கள்.


பாதிக்கப்பட்ட தலித் குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் இன்னும் பள்ளிக்கூடங்களுக்கு திரும்பவில்லை. பள்ளிக்கூடங்களுக்கு திரும்பிய குழந்தைகளுக்கும் படிப்பதற்கு போதிய வசதி இல்லை. அவர்களுக்கு இந்த ஆண்டு இறுதித்தேர்வில் கூடுதல் மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்றும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. அதோடு, இத்தகைய பேரழிவுகள் ஏற்படும்போது நிவாரண நடவடிக்கைகளில் சாதிப்பாகுபாடு பார்க்காமல் இருப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என்றும் ஆய்வின் முடிவாக தெரிவித்துள்ளனர்.

Tuesday, February 16, 2010

சுடுகாட்டை அடைய ஆற்றைக் கடக்கும் அருந்ததியர்கள்!



சுடுகாட்டை அடைய ஆற்றைக் கடக்கும் அருந்ததியர்கள்
1993 ஆம் ஆண்டு. திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரத்தைச் சேர்ந்த ஆர்.முருகேசன் என்பவர் உயிரிழக்கிறார். அவரது உடலை எடுத்துக் கொண்டு வழக்கம் போல வரட்டாறைத் தாண்டி செல்ல முற்படுகிறார்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள். அப்போது நீர்வரத்து அதிகமாக இருந்ததால் முருகேசனின் இறந்த உடல் ஆற்றில் அடித்துச் செல்லப்படுகிறது. அவரது உடலை சுமந்து சென்று கொண்டிருந்தவர்களே தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராட வேண்டியிருந்தது.


தங்கள் பகுதியிலிருந்து சுடுகாட்டிற்கு வேறு பாதை இல்லாததால் சாலை வசதி அமைத்துத் தாருங்கள் என்ற அருந்ததியர்களின் கோரிக்கை இதுவரை நிறைவேற்றபப்படவில்லை. இதர சாதியினருக்கு அந்தக் கிராமத்தில் மயானம் உள்ளது. தனி மயானம் உள்ள தலித்துகளோ அதற்குப் போகும் பாதை இல்லாததால் ஆற்று நீரில் இறங்கி மயானத்திற்கு சென்று கொண்டிருக்கின்றனர். பாலம் அமைத்துத் தருகிறோம் என்று நிர்வாகம் கொடுத்த உறுதிமொழி, உறுதிமொழியாக மட்டுமே இருக்கிறது.



பாலசமுத்திரம் பேரூராட்சியில் மொத்தம் 700 குடும்பங்கள் உள்ளன. அதில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 250 குடும்பங்கள். இந்தப்பிரச்சனை முப்பது ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த எம்.வேலுசாமி. மேலும் கூறிய அவர், இதற்கு முன்பாக பட்டா நிலமொன்றில் அருகிலிருந்த சாலையை நாங்கள் பயன்படுத்தி வந்தோம். ஆனால் அந்த நிலத்திற்குச் சொந்தமானவரோ, சாலையின் நடுவில் சாமிசிலைஒன்றை வைத்துள்ளார். பிணங்கள் அந்த வழியாகப் போக முடியாது என்றும் கூறிவிட்டார். அப்போதிருந்து ஆற்றில் இறங்கிதான் செல்கிறோம் என்றார்.


2003 ஆம் ஆண்டில் வருவாய் அதிகாரி மற்றும் தாசில்தார் ஆகிய இருவரும் இந்த பகுதிக்கு வந்து சென்றுள்ளார்கள். ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுகிறோம் என்றார்கள். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. பல முறை பிணங்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மழை காரணமாக மயானத்திற்கே செல்லாமல் பல பிணங்கள் ஆற்றின் கரையிலேயே எரிக்கப்பட்டன.


மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளது. வழக்கம் போலவே மாவட்ட நிர்வாகம், இந்தப் பிரச்சனை பற்றி வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

Sunday, January 31, 2010

தகர்ந்தது தீண்டாமைச்சுவர்!



21 ஆண்டு காலமாக நீடித்து வந்த கோவை, சிங்காநல்லூர், பத்தாவது வட்டம் ஜீவா வீதியில் கட்டப்பட்டிருந்த தீண்டாமைச்சுவர் தகர்க்கப்பட்டது. ஜேசிபி எந்திரம் அந்த சுவரைத் தள்ளியபோது பெரியார் நகர் மக்கள் எழுப்பிய கரவொலி நிற்க வெகு நேரமானது. சில பெண்கள் ஆனந்தக்கண்ணீர் வடித்தனர். தாரை தாரையாக அவர்கள் கண்களிலிருந்து நீர் வழிந்தது.


மூன்று நாட்கள்தான் எனக்கு அந்தப்பகுதியினர் பழக்கம். என்னைப்பார்த்து சில பெண்கள், அண்ணா... அதோ ரோடு தெரியுது... என்று சொன்னபோது எனக்குமே கண்கள் கலங்கத்தான் செய்தது. அடப்பாவிகளா... உங்களால் எத்தகைய வேதனையை, துக்கத்தை இந்த அப்பாவிப் பெண்கள் அடக்கி வைத்திருந்திருக்கிறார்கள் என்ற கோபமும் எழுந்தது.


சொடக்கு போடும் நேரத்தில் சாய்த்து விட்டீர்கள் என்று ஆண்கள் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினரைப் பார்த்து உற்சாகத்துடன் கூவினார்கள். எங்களுக்கும் உற்சாகம் தொற்றியது. விநாயகரை மாட்டுத்தொழுவத்திலிருந்து விடுவித்து விட்டோம் என்று அவர்கள் சொன்னது மனதைத்தொட்டது.


அதைத்தான் கோவில் என்று சொல்லிக்கொண்டு இந்து மக்கள் கட்சியினர் கலகம் விளைவிக்க முனைந்தனர். விநாயகரை எங்களிடம் கொடுங்கள். எங்கள் கோவிலுக்குள் வைத்து அவரை வழிபடுவோம் என்று அருந்ததிய மக்கள் சொன்னதும் மதவெறியர்களின் கூக்குரல்கள் எடுபடவில்லை.


முழுமையான பாதை இன்னும் உருவாகவில்லை. அதை அடைந்துவிடுவோம். தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் இருப்பதால் அதைச் சாதித்து விட முடியும் என்று அந்த மக்கள் சொன்னார்கள்.


உண்மையும் அதுதானே...

Tuesday, November 3, 2009

எல்லோரும் கோவிலுக்குள் போகலாமே...??

ஒன்றை உயர்த்திச் சொல்ல வேண்டுமானால் அதைக் கோவில் மாதிரி என்று சொல்கிறோம். ஆனால் அந்தக் கோவிலே மனிதர்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு அந்நியமாகிப் போவது நியாயமா... தூரத்தில் நின்று கொண்டு கைகளைக் தூக்கி கும்பிட்டுவிட்டுப் போகும் தலித்துகளின் மனதில் கடவுள் பற்றிய எண்ணங்களை விட தன்னை இப்படித் தள்ளி வைத்துள்ளார்களே என்ற எண்ணமே மேலோங்கியிருக்கும்...

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எப்போதுமே போராடி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் அண்மைக்காலத்தில் இதற்கு எதிராகக் கடுமையான போராட்டங்களை நடத்தியுள்ளன. அண்மைக்காலத்தில் கிடைத்த பலன்களை பட்டியலிடுவது பொருத்தமானதாக இருக்கும்.

* அருந்தியர் உள் ஒதுக்கீடு 3 சதம் கிடைத்தது.

* உத்தப்புரம் தீண்டாமைச் சுவரின் ஒரு பகுதி உடைக்கப்பட்டு தலித் மக் களுக்குப் பொதுப்பாதை கிடைத்தது.

* திருவண்ணாமலை மாவட்டம், தாமரைப்பாக்கம் அக்னீஸ்வரர் கோவில்;

* திண்டுக்கல் மாவட்டம், ஆயக்குடி காளியம்மன் கோவில்

* நெல்லை மாவட்டம், பந்தப்புளி மாரியம்மன் கோவில்

* பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட் டை தாலுகா பாதாங்கி கிராமம் சிவன் கோவில்

* பெரம்பலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம் அழகாபுரம் காசிவிஸ்வ நாதர் கோவில்

* திருவண்ணாமலை மாவட்டம், வேட வந்தாடி கிராமம் கூத்தாண்டவர் கோவில்

* விழுப்புரம் மாவட்டம், காங்கியனூர் கிராமம் திரௌபதியம்மன் கோவில்

* நாகை மாவட்டம் செட்டிப்புலம் கிராமம் ஏகாண்ட ஈஸ்வரர் கோவில்ஆகிய ஆலயங்களில் தலித் மக்களின் ஆலயப் பிரவேசம் வெற்றி பெற்றது.

தமிழகத்தில் பல கிராமங்களில் இரட்டைக் குவளை முறை ஒழிப்பு, முடிவெட் டும் உரிமை, பொதுப்பாதையை பயன்படுத்தும் உரிமை, சலவையகங்களில் துணி சலவை செய்துதரும் உரிமை, பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்தும் உரிமை, பொது மயான உரிமை, தனி மயானத்தில் பாதை உரிமை என பல தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களில் வெற்றி கிடைத்தன. அக்.27 அன்று சென்னையில் நடைபெற்ற பேரணியில் இந்த வெற்றிகளின் பிரதிபலிப்பு இருந்தது.

அந்தப் பிரதிபலிப்பின் அர்த்தம் இதுதான்...

போராட்டம் தொடரும் என்பதுதான்.

Tuesday, October 27, 2009

ஆலய நுழைவில் அரசியல் நுழைவா...?


“ஆலய அரசியலில், நுழைவு அவசியமா?” என்ற தலைப்பில், இரா.சோமசுந் தரம், தினமணி நாளேட்டில், அக்டோபர் 27ல் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். எந்த ஆல யத்திலும் தலித்துக்கள் நுழையக் கூடாது என்று சொல்வதைப் போன்ற காட்டுமிராண் டித்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது என்ற பீடிகையோடு இந்த கட்டுரை துவங்கு கிறது. ஆகா, சமூகநீதிக்காக குரல்கொடுக் கிறார், சோமசுந்தரம் என்ற மகிழ்ச்சியோடு கட்டுரைக்குள் நுழைந்தால், அன்றைக்கு பிரிட்டிஷ் ஆட்சியின்போது ஆலய நுழை வுப் போராட்டம் நடத்தியது சரிதான், இன் றைக்கு அரசு நம்முடையது; இந்து அறநிலை யத்துறை கோயில்களில் தலித்துக்கள் நுழை யத் தடை எதுவும் இல்லை; இந்நிலையில், தனியார் அல்லது ஒரு சமூகத்திற்கு சொந்த மான கோயில்களில், தலித்துக்களை அனு மதிக்காததற்காக கம்யூனிஸ்டுகள் போரா டுவது, சரிதானா; இது, அரசியல் சாயம் பூசப்பட்டது அல்லவா? என்று அடுக்கிக் கொண்டே சென்று, தனியார் அல்லது ஆதிக்க சமூகத்தினரால் நடத்தப்படும் கோயில்களில், தலித்துக்களை அனுமதிக்கா ததை நியாயப்படுத்துகிறார், கட்டுரையாளர். இதைத்தான் பாவேந்தர் பாரதிதாசன், “அழ காக முடிச்சவிழ்த்தால் விடுவார் உண்டோ” என்பார்.

தனியார் நிறுவனங்கள் போல, தனியார் கோயில்களும் இருக்கலாம் போலிருக்கிறது. அத்தகைய கோயில்களில், சாதியின் பெய ரால், ஒருபகுதி மக்கள் இழிவுசெய்யப்பட் டால் அதை யாரும் கேள்வி கேட்கக் கூடாது, என்பது சோமசுந்தரத்தின் வாதம். அப்படி பிரச்சனை இருந்தால், அரசு மற்றும் காவல்துறையிடம் புகார் செய்து, நடவடிக்கை எடுக்கலாம் அல்லவா? என்று ரொம்பவும் நல்லவர் போல கேள்வி எழுப்புகிறார், இவர். காங்கியனூரிலோ அல்லது செட்டிப்புலத் திலோ, எடுத்தவுடனேயே தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம் நடத்தவில்லை. அரசு அலுவலகங்களின் கதவுகளை பலமுறை தட்டி பலன் கிடைக்காத நிலையிலேயே, அரசின் கவனத்தை ஈர்க்க கோயில் கதவுகள் நேரடியாக தட்டப்பட்டன. காங்கியனூர் திரௌபதியம்மன் கோயி லில் தீமிதி விழாவின் போது தலித்துக்கள் யாரும் நுழையக்கூடாது என்று ஒலிபெருக்கி யிலேயே பகிரங்கமாக அறிவிக்கப்படும்; ஒலி பெருக்கிக்கும் அதை அறிவிப்பவருக்கும் சேர்த்தே காவல்துறை பாதுகாப்பு தரும். தீண் டாமையை எந்த வகையிலேனும் கடைப் பிடிப்பது, கிரிமினல் குற்றம் என்கிறது, அரசி யல் சாசனம். ஆனால், அதை மீறுபவர் களுக்கு, காவல்துறை பாதுகாப்பு தரும் நிலை.

உடல் முழுவதும் காணப்பட்ட புண் குண மாகி விட்டதாம். தற்போது சிறுபுண் மட்டுமே உள்ளதாம். அதற்கு மருத்துவ சிகிச்சை செய்யாமல், அதை ஆவேசமாக சொறிந்து புண்ணாக்குவது சரிதானா, என்று இவர் கேட்கிறார். இவர், எந்த உலகத்தில் வாழ் கிறார் என்று தெரியவில்லை. இன்னமும் கூட தமிழகத்தில் 7 ஆயிரத்திற்கும் மேற் பட்ட கிராமங்களில், பொது கிளாசில் டீ குடிக்க தடை; செருப்பு போட்டு நடக்கத் தடை; சைக்கிளில் செல்லத் தடை; தோளில் துண்டு அணியத் தடை; இவ்வளவு ஏன், பொதுக்கழிப்பறையை பயன்படுத்தக் கூட தடை; தலித் மக்கள் ஆண்நாய் வளர்க்கத் தடை என தீண்டாமைக் கொடுமை தலை விரித்து ஆடுகிறது. இவையெல்லாம் சிறு புண்ணாகத் தெரிகிறது இவருக்கு. ஆனால், சமூகத்தையே அரித்துத் திண்ணும் புற்றுநோ யாக தெரிகிறது கம்யூனிஸ்டுகளுக்கு! இத னால்தான் அரசிடம் சொல்லி நடக்காத இடங்களில் ஆலய நுழைவுப் போராட்டம் போன்றவற்றை கம்யூனிஸ்டுகள் நடத்து கிறார்கள். இது அரசியல் சாயம் என்றால், இதை இன்னும் அழுத்தமாக்கவே, அவர்கள் விரும்புகிறார்கள்.

செட்டிப்புலம், காங்கியனூரில் அமைதி குலைந்திருப்பதாக, கட்டுரையாளர் கவலைப் படுகிறார். சாதி ஆதிக்க வெறியால் செயற் கையாக ஏற்படுத்தப்பட்டு இருக்கும் மயான அமைதியை கலைப்பதே நல்லது. இப்படி கலைத்ததால்தான் செட்டிப்புலத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், தலித்துக்கள் ஆல யப் நுழைவு செய்ய முடிந்திருக்கிறது. காங் கியனூரிலும் அரசை அசைக்க முடிந்திருக் கிறது. பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலத் தில் தலித் தலைவர்களை பதவியேற்கச் செய்ததிலும், உத்தப்புரம் சாதிச்சுவரின் ஒருபகுதியைத் தகர்த்ததிலும், பந்தப்புளி, கல் கேரி உள்பட பல்வேறு கோயில்களில் தலித் துக்கள் நுழைய முடிந்ததிலும், கம்யூனிஸ்டு களின் “அமைதிக் குலைப்பு” முக்கியப் பங்கு வகித்துள்ளது.

போராட்டங்கள் நடத்த, தமிழகத்தில் பிரச் சனைகளா, இல்லை...? என்று கேட்டுவிட்டு, தனியார் பள்ளி- கல்லூரிகளில் நடைபெறும் அநியாய கல்விக் கட்டணத்திற்கு எதிராக போராடி ரத்தம் சிந்தக் கூடாதா? என்று கட் டுரையாளர் கேட்கிறார். சில மாதங்களுக்கு முன்பு, சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் போதே, இந்திய மாணவர் சங்கத்தினர், தனியார் கல்வி நிறுவனங்க ளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராகவும், சமச்சீர் கல்விக்காகவும் போராடி ரத்தம் சிந் தியபோது, சோமசுந்தரம் கையெடுத்துத் தொழுதிருக்க வேண்டாம்; மாணவர்களை ஆதரித்து ஒரு கட்டுரையாவது எழுதியிருக் கலாமே! உணவுக்காகப் போராடினால் கம்யூனிஸ் டுகளை தமிழகம் கையெடுத்து தொழுமே... என்று கூறியுள்ளார். சென்னையில் உணவுப் பாதுகாப்பிற்காக இடதுசாரிகள் இணைந்து கருத்தரங்கம் நடத்தினார்கள். நவம்பர் 17ல் சிறைநிரப்பும் போராட்டத்தையும் நடத்த உள்ளனர். இதில் சோமசுந்தரம் முதல் ஆளாக நின்று பங்கேற்பார் என எதிர்பார்க்கலாம்.

அரசு ஊழியர் சங்கத்தில் உள்ள தங்கள் தோழர்களை, மக்கள் நலப்பணிகளில் ஈடு படுத்தலாமே என்றும் கூறுகிறார். இடதுசாரி மனோபாவம் கொண்ட அரசு ஊழியர்கள், இரத்ததானம்; ஏழை- எளிய மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க இலவசப் பயிற்சி என பல்வேறு வழிகளில் மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். தங்களின் பணியிடங்களில் மக்கள் நலனை பாதுகாப்பதில் அவர்கள் முன்னிற்கிறார்கள். ஆலய நுழைவுப் போராட்டம் நடத்துவ தால், தலித்துக்களின் வாக்கு கம்யூனிஸ்டு களுக்கு கிடைக்காது என்று கடைசியாக சாபமிட்டுள்ளார், கட்டுரையாளர். இது வாக்குகளைக் குறிவைத்து நடத்தப்படும் இயக்கமல்ல; எதிர்காலப் போக்கு சமத்துவ சமுதாயத்தை நோக்கி இருக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் இயக்கம்.

மார்க்சிஸ்ட் கட்சி போன்று பிற கட்சிகளும் ஏன் சமூகநீதிக்காகப் போராடவில்லை என்று சோமசுந்தரத்தின் எழுதுகோல் கேட்டிருந்தால் அதில் ஒரு நியாயம் இருந்திருக்கும். தீண்டாமையை கடைப்பிடிப் பவர்களிடமிருந்து, வாக்குகள் கிடைக்காது என்று பல கட்சிகள் இந்த பிரச்சனைக்குள் நுழைவதே இல்லை என்பதுதான் உண்மை. மதம் ஒரு அபின் அல்லவா.. என்று கேட்டு முடித்திருக்கிறார். மாமேதை மார்க்ஸ் சொல்வதை, முன்னும் பின்னும் கத்தரித்து விட்டு, பலரும் பயன்படுத்துவதைப் போலவே, இவரும் கூறியிருக்கிறார். மதம் அடக்கப்பட் டவர்களின் பெருமூச்சு என்றும் மார்க்ஸ் கூறியிருக்கிறார். எல்லோருக்கும் பொது வானது என்று கதைக்கப்படும் கோயிலுக்குள் நுழைய முடியாமல் உழைக்கும் மக்கள் பெரு மூச்சு விடும்போது, அதை புயலாக மாற்று வதே கம்யூனிஸ்டுகளின் அரசியல் பணி.

- மதுக்கூர் இராமலிங்கம்

Monday, October 26, 2009

மலத்தை மனிதனே அள்ளும் கொடுமை தீருமா..?



ச்சீ...ச்சீ... என்று மலத்தைப் பார்த்தவுடன் முகத்தைச் சுளித்தவாறு நகர்ந்து விடுவார்கள் பெரும்பாலான மனிதர்கள். ஆனால் அதையும் மனிதர்கள்தான் பெரும்பாலும் அள்ளிச் சென்று அப்புறப்படுத்தும் அவல நிலை உள்ளது. இத்தனைக்கும் கையால் மலம் அள்ளுவதை சட்டம் தடை செய்துள்ளது. 1993 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட கையால் மலம் அள்ளுவோர் பணி நியமனம் மற்றும் திறந்தவெளி கழிப்பிடங்கள்(தடுப்பு) சட்டம் சில மாற்றங்களை ஏற்படுத்தியது உண்மைதான். ஆனால் பெரும்பாலும் அந்தக் கொடுமை இன்னும் நடைமுறையில் உள்ளது.


மத்திய சமூக நீதி மற்றும் வளர்ச்சிக்கான துறையின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி 6.7 லட்சம் மலம் அள்ளுபவர்கள் நாடு முழுவதும் உள்ளனர். இது 2003 ஆம் ஆண்டு தந்த புள்ளிவிபரமாகும். ஆனால் இதுவரை இதில் எத்தனை பேருக்கு மாற்றுப் பணிகள் தந்து மலம் அள்ளும் பணியிலிருந்து விலக்கிக் கொண்டுள்ளார்கள் என்ற விபரங்கள் இல்லை. உலர் கழிப்பிடங்கள் மற்றும் திறந்தவெளிக் கழிப்பிடங்களே இல்லாமல் ஆக்க வேண்டும் என்ற நோக்கத்தை நோக்கி மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது அடிகளை எடுத்து வைப்பதில் முனைப்பு இல்லை.


2007 ஆம் ஆண்டுக்குள் இதை முடிவுக்குக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று மத்திய அரசு லட்சுமணன் கோடு ஒன்றையும் போட்டது. கோடு அழிந்ததுதான் மிச்சம். 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும், மனிதக்கழிவை மனிதனே அள்ளும் கொடுமைக்கு முற்றுப் புள்ளி வைத்து, அதில் ஈடுபடுபவர்களுக்கு மாற்றுப் பணிகள் தருவதாகவும் உறுதியளிக்கப்பட்டது. 2006-07 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 11 ஆயிரத்து 691 பேருக்கு மாற்று வேலைகளுக்கான பயிற்சி தர 50 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது என்ற அறிவிப்பும் வெளியானது.


ஆனால் அடிப்படையான பிரச்சனையைத் தீர்க்காமல் மேற்பூச்சு வேலைகளால் எந்த பலனும் இல்லை. 2001 ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்குப்படி, தமிழகத்தில் உள்ள 1.41 குடும்பங்களில் சுமார் 92 லட்சம் குடும்பங்களின் வீடுகளுக்குள் கழிப்பறைகள் இல்லை. சுமார் ஆறரை லட்சம் உலர் கழிப்பிடங்கள் உள்ளதாகவும் அந்தப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. உலர் கழிப்பிடங்கள் மற்றும் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இருக்கும் வரையில் அதை அள்ளுவதற்கான ஆட்களைத் தேடும் நிலை நிற்காது.


இந்தியாவில் அதிகமான ஊழியர்களைக் கொண்டுள்ள நிறுவனமான ரயில்வேயில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்கள் தண்டவாளங்களுக்கு நடுவில் கிடக்கும் மலத்தை அள்ளிச்சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். எது, எதற்கோ நவீன கருவிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். அசிங்கம் என்று கருதப்படும் மலத்தை அள்ளத்தான் கருவிகளைக் கண்டுபிடிக்க மாட்டேனென்கிறார்கள்.


இத்தகைய கொடுரங்களுக்கு எதிராக, வெறும் காகிதத்தில் இருக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்துக என்ற அக்.27 பேரணி முழக்கம் ஆட்சியாளர்களின் காதுகளில் போர்ப்பறையாக ஒலிக்கவிருக்கிறது.

0.16 சதவிகிதம்தான் பத்தாம் வகுப்பைத் தாண்டியவர்கள்!


தமிழகத்திலுள்ள துப்புரவுத் தொழிலாளர்களில் 95 சதவிகிதம் பேர் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். அதிலும் 33 சதவிகிதம் பெண்கள்தான். இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மற்ற சாதியினரின் தயவில்தான் வாழ்க்கையை ஓட்டுகின்றனர். பத்து சதவிகித அருந்ததியர்கள் கையில்தான் சிறிய அளவிலாவது நிலம் உள்ளது.

கல்வி ரீதியாகவும் இந்த சமூகத்தினர் மிகவும் பின்தங்கியவர்களாக உள்ளனர். கிராமப்புற பெண்கள் மேம்பாட்டு அமைப்பு என்ற தொண்டு நிறுவனம் அளிக்கும் புள்ளிவிபரங்களின்படி, அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களில் 1.75 சதவிகிதம் பேர் மட்டுமே எழுத்தறிவு பெற்றவர்களாக உள்ளனர். 0.16 சதவிகித அருந்ததியர்கள் மட்டுமே பத்தாம் வகுப்பைத் தாண்டியுள்ளனர்.

இந்த சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலான கிராமப்புற சிறுவர்கள் வயல்களில் கொத்தடிமைகளாக வேலை செய்கிறார்கள். நகர்ப்புறங்களில் ஓட்டல்கள் போன்றவற்றில் கூலி வேலைகள் செய்பவர்களாகவும் உள்ளனர். ஒருவேளை, பத்தாம் வகுப்பை முடித்து விட்டாலும் மேற்கொண்டு படிப்பதற்கு போதிய பொருளாதார வசதி அவர்களிடம் பெரும்பாலும் இருப்பதில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு அருந்ததிய அமைப்புகளின் வலுவான இயக்கத்தால் இந்த சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மூன்று சதவிகித உள்ஒதுக்கீடு கிடைத்துள்ளது.

இதை முறையாக நடைமுறைப்படுத்தக்கோரும் மக்களின் எழுச்சிக்குரல்கள் அக்.27 அன்று கோட்டையின் கதவுகளை தட்டப்போகின்றன.

Thursday, October 8, 2009

கோவிலுக்குள் நுழைந்தே விட்டார்கள் தலித்துகள்!



விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்தில் உள்ளது காங்கியனூர் கிராமம். இங்குள்ள திரௌபதி அம்மன் கோவிலில் வழிபட தலித்துகள் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் தீ மிதி திருவிழாவில் பங்கேற்கவும் தடைசெய்யப்பட்டது.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் புகார் அளித்தனர். தலித்து மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்கப்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் அதைக் கிடப்பில் போட்டார்கள். இதனால் மக்களைத் திரட்டி கோவிலுக்குள் நுழைவது என்று முடிவு செய்யப்பட்டது.


செப்.30 அன்று ஆலய நுழைவுப் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், ஜி.லதா எம்எல்ஏ, மாவட்ட செயலாளர் ஜி.ஆனந்தன், அம்பேத்கர் நிக் கோலஸ் ஆகியோர் தலைமை தாங்கி னர். ஊர்வலமாக சென்ற போது காவல்துறையினர் 3கி.மீ தூரத்திற்கு முன்னதாகவே தடுத்து நிறுத்தினர். மேலும், தலைவர்கள் மீதும் மக்கள் மீதும் காட்டு மிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியதோடு 105 பேரை கைது செய்து கடலூர் மத்திய சிறை யில் அடைத்தனர்.


காவல்துறையின் அடாவடி தனத்தை கண்டித்தும், தலித் மக்கள் வழிபட அனுமதிக்க வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் தொடர்ந்து கண்டன இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில் கிராமத்தில் அமைதி யை நிலைநாட்ட அக்டோபர் 6 மற் றும் 7 ஆகிய தேதிகளில் திருக்கோவி லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற் றது. 6ம் தேதி கோட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமையில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில், திரௌபதி அம்மன் கோவில்அனைவருக்கும் பொதுவானது. அனைத்து மதத்தினரும் சாமியை வழிபட உரிமை உள் ளது. இதனை தடைசெய்ய யாருக்கும் உரிமை இல்லை. அப்படி தடை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப் பட்டது.


மேலும் இந்தகூட்டத்தில் அமைதி ஒப்பந்தமும் ஏற்படுத்தப்பட்டது. இதில் தலித் பகுதியில் இருந்து சென்ற முக்கிய பிரமுகர்கள் மட்டும் கையொப்பமிட்டனர். எதிர் தரப்பில் கையெழுத்திட அவகாசம் கோரப் பட்டது. 24 மணி நேர அவகாசம் வழங்கிய அதிகாரிகள் உரிய பதில் கிடைக்க வில்லை என்றால் கோவி லுக்கு பூட்டு போடப்படும் என்றும் எச்சரித்தனர். மறுநாள் (அக்டோபர் 7) மாவட்ட வருவாய் அலுவலர் கதிர வன் தலைமையில் மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெற்றது. மறுதரப்பி னர் கையெழுத்து இடவில்லை. அதனை தொடர்ந்து டிஎஸ்பி நல்லியப்பன் தலைமையில் தலித் மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபட்டனர். இதுபோன்று தலித்துகள் உள்ளே நுழைய முடியாத நூற்றுக்கணக்கான கோவில்கள் தமிழகத்தில் இன்னும் உள்ளன. பட்டியல் பெரியதுதான். ஆனால் தீண்டாமை ஒழிப்பு முன்னணி துவக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள்தான் ஆகியுள்ளது. அதற்குள் சுமார் 25 கோவில்களில் நுழைய அனுமதி பெற்றுத்தந்துள்ளது. இரட்டைத் தம்ளர், பொதுக்குளத்தில் தண்ணீர் எடுக்க தடை, சலூனில் தலித்துகளுக்கு முடிவெட்ட தடை உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகளோடு தலித்துகளின் அன்றாட வாழ்க்கையே போராட்டமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 105 பேரும் இன்னும் சிறையில்தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.