Saturday, January 1, 2011

குடியிருப்புகளாகும் இன்டர்நெட் மையங்கள்!



“அது ஏப்ரல் மாதமிருக்கும். நாங்கள் குடியிருந்த வீட்டிற்கான குத்தகையை நீட்டிக்க வேண்டும். ஆனால் அதற்குத் தேவையான 500 டாலர்கள் எங்களிடம் இல்லை. உடைந்து போய் உட்கார்ந்திருந்தோம். உலகிலேயே விலைவாசி அதிகமாகயிருக்கும் டோக்கியோ நகரத்தில் வறுமையில் உழலத் துவங்கியிருந்தோம்...”

டோக்கியோ நகரத்திற்கு சற்று வெளியே இருக்கும் இன்டர்நெட் மையத்திலிருந்து வலைப்பூ மூலமாக உலகிற்கு தனது நிலைமை பற்றி அறிவித்துக் கொண்டிருக்கிறார் ஜப்பானிய இளைஞர் ஒருவர். தான் இதை எழுதிக் கொண்டிருக்கும்போதே கண்கள் சுழன்று உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார். பிறகு அந்த மையத்திலேயே உறங்கிவிடுகிறார். காலையில் எழுந்து பல் துலக்கிவிட்டு அங்கிருக்கும் எந்திரத்தில் தேநீரை அருந்திவிட்டு வேலை தேடச் செல்கிறார். 24 மணிநேரமும் இயங்கும் அந்த மையத்தையே தனது வீடாக அவர் மாற்றிக் கொண்டுவிட்டார்.

இவ்வாறு இவர் மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான ஜப்பானிய இளைஞர்கள் தங்குவதற்கு வீடில்லாமல் இன்டர்நெட் மையங்களில் தங்கி விடுகிறார்கள். எவ்வளவு மணி நேரம் தங்குகிறார்களோ, அதற்கு பிரவுசிங் பார்ப்பதற்கு எவ்வளவு பணம் தர வேண்டுமோ அவ்வளவு தந்துவிட்டு நடையைக் கட்டி விடுகிறார்கள். சிறிய, சிறிய அறைகளாகக் கட்டி வைத்திருக்கும் இன்டர்நெட் மையங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் மவுசு அதிகமாக உள்ளது. முண்டியடித்துக் கொண்டு போய் இடம் பிடிக்கிறார்கள். ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களுக்கு அருகில் உள்ள மையங்களுக்கு தனி கிராக்கி ஏற்பட்டிருக்கிறது.

முன்பெல்லாம், தாமதமாகி விட்டாலோ அல்லது காலையில் விரைவாக வேலைக்குப் போக வேண்டும் என்று நினைத்தவர்கள்தான் இப்படி இன்டர்நெட் மையங்கள் போன்ற இடங்களில் தங்கினார்கள். இரவு நேரங்களில் அலுவலகத்திற்குச் செல்லாமல் பணியாற்ற விரும்பியவர்களும் இத்தகைய மையங்களில் இரவு நேரங்களில் அமர்ந்து வந்தனர். இரவு நேர விருந்துகளை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்ல விரும்பாதவர்கள், காதலிகளிடம் இணையதளம் மூலமாகப் பேச விரும்புபவர்கள், தூக்கம் வராமல் கணினி விளையாட்டில் இறங்க விரும்புபவர்கள் என்று பெரிய பட்டியலே இந்த மையங்களுக்கு வருபவர்கள் பற்றி உள்ளது. ஆனால் இவர்களுக்கெல்லாம் இடம் கிடைப்பது தற்போது அரிதாகிவிட்டது.

இவ்வாறு குடியிருக்க இடம் இல்லாதவர்கள் பற்றிய சிறப்பு ஆய்வு ஒன்றினை பிக் இஷ்யூ ஃபவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனம் மேற்கொண்டுள்ளது. தங்களின் 20கள் மற்றும் 30களில் இருக்கும் இளைஞர்கள் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு மேற்கொள்ளப்பட்டவர்களின் சராசரி வயது 32.3 ஆக இருந்தது. இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குறைந்தது ஆறு மாதங்களாவது வீடு இல்லாமல் சாலையோரங்களில் தங்கினார்கள் என்பது தெரிய வந்தது. வீடில்லாதவர்களில் பெரும்பாலானவர்கள் தற்காலிக வேலைகள் உள்ளிட்ட பாதுகாப்பற்ற வேலைகளில்தான் அமர்கின்றனர். இதனால் பணிக்காலத்தில் உயர் தொழில்நுட்பம் எதையும் அவர்கள் கற்றுக் கொள்ள முடியாத நிலைமையும் இருக்கிறது.

ஒரே நேரத்தில் படித்துக் கொண்டே வேலை பார்க்கலாம் என்று கிளம்பிய ஒருவர், இப்படி நினைத்து 31 வயதை எட்டிவிட்டேன். படிக்கவும் இல்லை, நிரந்தர வேலையும் கிடைக்கவில்லை என்கிறார். மாலை எட்டு மணிவரையிலும் வேலை பார்க்க வேண்டியிருக்கிறது. 20 வயதில் ஒசாகாவுக்கு வேலைக்காக சென்றேன். சில மின்னணுப் பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகளில் பணியாற்றினேன். மின்னணுப் பொருட்களை உற்பத்தி செய்யும் வேலையில் இருந்தேன். சில சமயங்களில் பாதுகாப்பு ஊழியராகவும் இருந்தேன். ஆனால் ஒருபோதும் நிரந்தர ஊழியராக என்னை நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அவர் புலம்புகிறார்.

வேலையில் சேரும்போது நிறுவனங்கள் சொல்லும் ஊதியம் ஒன்றாகவும், கையில் வாங்கும்போது அது வேறாகவும் பல சமயங்களில் இருக்கிறது என்று தொழிலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். சில சமயங்களில் ஊதியமே இல்லாமல் போய்விடுகிறது. இப்படிப்பட்டவர்கள்தான் குடியிருக்க இடமில்லாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதார நெருக்கடியால் வேலையிழந்தவர்களும் இவர்களோடு இணைந்துள்ளார்கள். மாத வாடகை தரும் அளவுக்குக்கூட பணமில்லாத நிலையில், ஏழு மணிநேரம் இன்டர்நெட் மையங்களில் நாற்காலிகளிலேயே அமர்ந்தும், தரையில் விரிப்பை விரித்தும் படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

“குட்டி ஜப்பான்" என்ற பெயர் சூட்டப்பட்ட மற்ற நாட்டு நகரங்கள் வெட்கப்படும் அளவுக்கு ஜப்பானில் நிலைமை மோசமாகி வருகிறது.

7 comments:

  1. என்ன கொடுமை இது நண்பரே!

    ReplyDelete
  2. ஜப்பானில் கூட இந்த நிலையா, ஆச்சர்யமா இருக்கு கணேஷ்! மேலும் பல செய்திகளை தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  3. அடப்ப்பாவமே........

    ReplyDelete
  4. என்ன கொடுமை ஜப்பான் நன்பர்களே ?

    ReplyDelete
  5. நம்பவே முடியவில்லை. நாம் எவ்வளவோ தேவலை.

    ReplyDelete
  6. இந்த நிலைமை நாம் உயர்வாய் என்னும் பல நாடுகளில் சகஜம்.

    ReplyDelete
  7. ஜப்பானிலுமா???????????????????

    ReplyDelete