Thursday, August 13, 2009

டாப் பஞ்ச் டயலாக்குகள்



அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இந்தியாவிற்கு எதிரானது என்பதற்கான ஆதாரங்கள் தொடர்ந்து அம்பலமாகி வருகிறது. அதில் தொடர் சரிவுகளை சந்தித்து வரும் பிரதமர் மன்மோகன்சிங்கைப் பார்த்து காங்கிரசுக்கு வாக்களித்த குடிமகன் கேட்கிறார்.

"நீங்க நல்லவரா... கெட்டவரா..."


*************

ஒரிசாவில் ஆர்.எஸ்.எஸ்-வி.எச்.பி.-பாஜக கூட்டம் ஆடிய வெறியாட்டத்தில் ஏராளமானோர் கொலை செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான கிறித்தவர்கள் சொந்த மாவட்டத்திலேயே அகதிகளாகியுள்ளனர். இவ்வளவு கொடுரங்களுக்குப்பிறகும் அந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அடிக்கிறார்கள் டயலாக்.

"ரிஸ்க் எடுக்குறது எங்களுக்கு ரஸ்க் சாப்புடுற மாதிரி"

*************

டபாய்த்துக் கொண்டே வந்த பூட்டாசிங்கின் மகன் சரப்ஜோத் சிங் கடைசியாக வசமாகச் சிக்கிக்கொண்டார். நண்பர்களிடம் சோகத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.

"மாப்பு.... வெச்சுட்டான்யா ஆப்பு.."

*************

ஒருகாலத்தில் சர்வதேச அரங்கில் இந்தியாவின் கருத்துக்கு மதிப்பு இருந்தது. அதைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, வெளியுறவுக்கொள்கை என்பது வெறும் பாகிஸ்தான் சம்பந்தமாக மட்டுமானதாக மாற்றுவதற்கு காங்கிரசும், பாஜகவும் போட்டி போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு அமெரிக்கா கூறுகிறது.

"சபாஷ்... சரியான போட்டி.."

*************

தேர்தல் தோல்வியை யார் மீது சுமத்துவது என்பதில் பாஜகவிற்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதல் இன்னும் நீடிக்கிறது. அதைக்கிளப்பிய யஷ்வந்த் சின்காவைப் பார்த்து அத்வானி கேட்கிறார்.

"பரட்டை... பத்த வெச்சுட்டியே பரட்டை..."

*************

பாஜகவின் தோல்விக்கு மதவெறிதான் பிரதான காரணம். ஆனாலும் செய்தியாளர்கள் விடாமல் அக்கட்சித்தலைவர் ராஜ்நாத்சிங்கைத் துரத்தித் துரத்திக் கேட்கிறார்கள், இந்துத்துவாவைக் கைவிடுவீர்களா... என்று. மாட்டோம் என்று பளிச்சென்று கூறும் அவர் தொடர்கிறார்....

"நான் ஒரு தடவ சொன்னா, நூறு தடவ சொன்ன மாதிரி..."

*************

முதலில் வருபவருக்குதான் புதிய அலைவரிசைக்கான உரிமம் என்று கூறிக்கொண்டு அனைத்து உரிமங்களையும் தானே வைத்துக் கொள்ளும் மத்திய அமைச்சர் ஆ.ராசா கொஞ்சம் தள்ளி நின்று கொண்டே சத்தம் போட்டு அடிக்கும் டயலாக்.

"தள்ளு... தள்ளு... தள்ளு....."

*************

கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த அமைச்சர் துரைமுருகனிடமிருந்து முக்கியமான இலாகா பறிக்கப்படுகிறது. அவரைத் தேடி வரும் கட்சிக்காரர்கள் எண்ணிக்கை தானாகவே சரிகிறது. அவ்வளவாக வேலையில்லை. புலம்புகிறார் அமைச்சர் துரைமுருகன்.

"எப்புடி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்..."

***********

கட்சியும், கோஷ்டியும் நகமும், சதையுமாக இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கரர்களைப் பார்த்து மக்கள் கேட்கிறார்கள். ஒரு கோஷ்டிய மன்னிச்சு, இன்னொரு கோஷ்டி ஏத்துக்குற காலம் எப்ப வரும்...?. பதிலடி தருகிறார்கள் காங்கிரசார்.

"மன்னிப்பு... தமிழ்ல எங்களுக்குப்பிடிக்காத வார்த்தை..."

************

No comments:

Post a Comment