Showing posts with label Politcs. Show all posts
Showing posts with label Politcs. Show all posts

Thursday, September 3, 2009

புரோக்கர்களாக மாறிய மம்தாயிஸ்டுகள்




மேற்கு வங்கத்தின் தொழில் வளர்ச்சிக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது. அதற்கெதிராக கிளம்பிய திரிணாமுல் காங்கிரஸ், மாவோயிஸ்டுகள், காங்கிரஸ், பாஜக மற்றும் எஸ்.யு.சி.ஐ ஆகியவை அடங்கிய கூட்டணி வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களைக் குறிவைத்து நடந்த தாக்குதல்களில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். முதலாளித்துவ ஊடகங்களின் உதவியுடன் பொது மக்களுக்கும், மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் இடையிலான மோதல் என்று தவறான மோசடிப் பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. இந்தப் பிரச்சாரத்திற்கு அப்பாவிப் பொது மக்களும் பலியானார்கள்.


நந்திகிராமத்தில் சிக்கல் நிலவியபோதே மாவோயிஸ்டுகளின் பயங்கரவாத நடவடிக்கைகளை திரிணாமுல் காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்கிறது என்று எச்சரிக்கை விடப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சி மீதான கண்மூடித்தனமான எதிர்ப்பு பெரும்பாலான ஊடகங்களை மவுனமாக இருக்கச் செய்துவிட்டது. ஆனால் லால்கரில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, மம்தாஜி சரணம் என்ற அபயக்குரல் மாவோயிஸ்டுகளின் தலைவர்களில் ஒருவரான கோடீஸ்வர ராவ் என்ற கிஷன்ஜி மூலமாக எழுந்தது. நந்திகிராமத்தில் நாங்கள் செய்த உதவிக்கு நன்றிக்கடன் ஆற்ற வேண்டாமா என்று ஏற்கெனவே செய்த கூட்டுச்சதியையும் போட்டு உடைத்தார்.


அதேபோல், தொழிற்சாலைகளை அமைக்க நிலங்களை மாநில அரசு எடுத்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள் அல்ல, புரோக்கர்கள்தான் என்று மார்க்சிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியது. அது உண்மைதான் என்பதும் தற்போது அம்பலமாகியுள்ளது. ஹால்டியா பகுதியில் உள்ள பல நிலங்களை தொழில் நிறுவனங்களுக்கு வாங்கித்தர புரோக்கர்கள் கிளம்பியுள்ளனர். இவர்கள் அனைவருமே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினரான சுபேந்து அதிகாரியின் ஆதரவாளர்களாவர். எட்டு லட்சம் மதிப்பிலான நிலத்தை 25 லட்சத்திற்கு புரோக்கர்கள் பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார் கொல்கத்தாவைச் சேர்ந்த தொழில் நிறுவன உரிமையாளர் ஒருவர்.


இவ்வாறு நடத்தப்படும் பேரத்தால் விவசாயிகளுக்கு பலன் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இடையிலுள்ள புரோக்கர்களே லாபத்தை அடித்துக் கொண்டு போய் விடும் அபாயம் இருக்கிறது. இந்த புரோக்கர்களுக்கு ஆதரவாகவே நிலம் கையகப்படுத்துவதற்காக மத்திய அரசு கொண்டு வரும் புதிய மசோதாவில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று மம்தா பானர்ஜி நிர்ப்பந்தித்து வருகிறார். தனியார் தொழில் துவங்குவதற்காக நிலம் கையகப்படுத்தும் வேலையை அரசு செய்யக்கூடாது என்கிறார் அவர். நேரடியாக விவசாயிகளிடமிருந்து தனியார் நிறுவனங்கள் நிலங்களை வாங்கிக் கொள்ளலாம் என்ற திட்டத்தால் பல்வேறு மாநிலங்களில் அடிமட்ட விலைக்கு விவசாயிகளின் நிலங்கள் பறிபோனது குறிப்பிடத்தக்கது.


இதுவரை நிலம் கையகப்படுத்தலுக்காக அரசாணை வெளியிடப்படாத தொழில் திட்டங்களுக்காக நிலங்களை எடுக்கப்போவதில்லை என்று மேற்கு வங்க அரசு முடிவெடுத்துள்ளது. மத்திய அரசின் புதிய மசோதாவுக்காக மாநில அரசு மற்றும் தொழில் நிறுவனங்கள் காத்திருக்கின்றன. ஆனால் புரோக்கர்களின் பிடியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் செல்வாக்குள்ள பகுதிகளில் நிலங்களை அடையாளம் காணும் வேலையில் அக்கட்சிக்காரர்கள் இறங்கியுள்ளனர். தனது நிலத்திற்கு என்ன விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பது விவசாயிகளுக்கு தெரியாத நிலை இருக்கிறது.


நிலத்தை எடுக்கும் நடவடிக்கையில் அரசு இருந்தபோது அதற்கு ஒரு வெளிப்படையான தன்மை இருந்தது. ஏழைகளிலும் ஏழையாக இருப்பவருக்கு அதில் பாதுகாப்பு கிடைத்தது. இந்த நடவடிக்கைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தவர்கள் விவசாயிகள் அல்ல, வெறும் புரோக்கர்கள்தான். தங்கள் வருமானம் போய்விடுமே என்பதுதான் அவர்களுடைய அச்சம். சந்தை மதிப்பை விட அதிகமாகக் கொடுத்து, விவசாயிகளுக்கு மாற்று வேலைக்கும் ஏற்பாடு செய்யும் மாநில அரசுக்கு எதிராக மோசடிப் பிரச்சாரத்தைக் கிளப்பிவிட்டு வன்முறையையும் ஏவிவிட்டனர். புரோக்கர்களைப் பொறுத்தவரை விவசாயிகள் ரத்தமும், சதையும் கொண்டவர்களல்ல. அவர்களும் விற்பனைப் பண்டம்தான்.

Sunday, August 16, 2009

சொன்னதை செய்யாததும் சொல்லாததை செய்ததும்!



விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, ரம்ஜான் மற்றும் தீபாவளி என்று வரும் மாதங்களில் தொடர்ந்து பண்டிகைகள் வருகின்றன. பண்டிகைக்காலத்தில் வழக்கமாக இருக்கும் உற்சாகம் இந்தமுறை இருக்குமா என்ற சந்தேகம் அனைவரிடமும் எழுந்துள்ளது. ஆட்சியாளர்களின் வழக்கமான முழக்கங்கள், மோசடிப் புள்ளிவிபரங்கள் போன்றவை மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைக்கவில்லை. நடைமுறையில் கடுமையான நெருக்கடியை மக்கள் சந்தித்து வருவதால் இதோ.. பணவீக்கத்தைப் பாருங்கள். (-)1.74 சதவிகிதமாகச் சரிந்துவிட்டது. எங்கள் சாதனையைப் பாரீர்... பாரீர்... என்ற ஆர்ப்பாட்டமான அறிவிப்போடு கடைகளுக்கு சென்றால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் முகத்தில் அறைகின்றன.


தமிழக அரசின் ரூ.2க்கு ரேசனில் அரிசித்திட்டம் நடைமுறைக்கு வந்தாலும், மற்ற அறிவிப்புகள் காகிதங்களிலேயே நின்றுவிட்டன. 50 ரூபாய்க்கு 10 மளிகைப் பொருட்கள் என்று அறிவித்தார்கள். ஆனால் துவங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதோடு சரி, எப்போது திட்டத்தை இழுத்து மூடினார்கள் என்பதற்கான எந்த அறிகுறியும் தற்போது இல்லை. ரேசனில் துவரம்பருப்பு கிடைப்பதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகின. பெரும்பாலான மக்களுக்கு அது கிடைக்கவில்லை என்பதே தற்போதைய செய்தி. வெளிச்சந்தையில் பொருட்களின் விலைகள் உச்சாணிக்கொம்பில் உட்கார்ந்து கொண்டு விட்டன.


மலையாளிகள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடுவது ஓணம் பண்டிகையாகும். செப்.2 அன்று அந்தப்பண்டிகை நடப்பாண்டில் கொண்டாடப்பட உள்ளது. மக்கள் விலையுயர்வு நெருக்கடியால் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் பண்டிகை உற்சாகம் குறையாமல் இருக்க சிறப்பு விற்பனை அங்காடிகளை கேரள மாநில இடது ஜனநாயக முன்னணி அரசு திறந்துள்ளது. வெளிச்சந்தையில் இருக்கும் விலையை விட 20 சதவிகிதம் முதல் 60 சதவிகிதம் வரை குறைவான விலையில் விற்று வருகிறார்கள். மக்களுக்கு மிகவும் அத்தியாவசியத் தேவை என்று கூறப்படும் 25 பொருட்கள் அந்த அங்காடிகளில் கிடைக்கின்றன. இவ்வாறு திறக்கப்பட்டுள்ள அங்காடிகளின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தையும் தாண்டிவிட்டது.


தமிழகத்தில் 60 அல்லது 70 ரூபாய்க்கு விற்கப்படும் உளுந்தின் விலை 36 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கு விற்கப்படும் சர்க்கரை 20 ரூபாய்க்கும், 170 ரூபாய்க்கு கிடைக்கும் மிளகு, 66 ரூபாய்க்கும் இந்த அங்காடிகளில் விற்கப்படுகின்றன. 500 ரூபாய் மதிப்புள்ள பொருளின் விலையை 1000 ரூபாய் என்று போட்டு 50 சதவிகித அதிரடி தள்ளுபடி என்ற அறிவிப்போடு அசல் விலையிலேயே தலையில் கட்டிவிடும் மோசடியில்லாமல் உண்மையிலேயே தேவையான நேரத்தில் மக்களுக்கு பலன்தரும் வகையில் இந்த விற்பனை நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய விற்பனை நடந்தாலும், நெருக்கடி நேரத்தில் கூடுதல் அக்கறையோடு நடப்பாண்டில் இடது ஜனநாயக முன்னணி அரசு செயல்பட்டுள்ளது.


சொன்னதைச் செய்வோம் சொல்லாததையும் செய்வோம் என்று கூறிக் கொள்பவர்கள், 50 ரூபாய்க்கு 10 மளிகைப் பொருட்கள் என்று சொன்னதைச் செய்யவில்லை. ஆனால் தேர்தல் நேரத்தில் அளிக்கப்படாத உறுதிமொழிகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு நிறைவேற்றி வருகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிவிரைவில் ஏறிக் கொண்டிருக்கும் வேளையிலும் சிறப்பு அங்காடிகள் திறக்கப்பட்டுள்ளன. அதுவும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட அங்காடிகள் என்பது கிட்டத்தட்ட மாநிலத்தின் அனைத்துப் பகுதியினருக்கும் சென்றடையும் வகையில் அமைந்துள்ளது,

Saturday, August 15, 2009

கோடிகளில் புரளும் கதராடைகள்!



எளிமை என்றால் கக்கன் என்று அகராதியில்பதிவு செய்து கொள்ளுமளவுக்கு பெருமை பெற்றவர் அவர். அவரும் காங்கிரஸ் கட்சியில்தான் இருந்தார் என்று சொல்லி பெருமூச்சு விட்டுக்கொள்ளும் நிலையில்தான் இப்போதைய காங்கிரசின் நிலவரம் உள்ளது. அக்கட்சியினர் சர்வசாதாரணமாகக் கோடிகளில் புழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதையொன்றும் மூடி மறைத்து வைத்துக் கொள்ளவில்லை அவர்கள். கம்பம் இடைத்தேர்தலையொட்டி காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் நடந்துள்ளது. அதில் பங்கேற்ற காங்கிரசுக்காரர்கள் தேர்தலுக்கு பணம் கொடுக்கலைன்னு புலம்பித் தள்ளியுள்ளார்கள்.


உடனே தலையிட்ட மாவட்ட காங்கிரஸ் ஓ.எஸ்.எம்.ராமச்சந்திரன், காசெல்லாம் கேட்டு வாங்கிக்கிங்க. மக்களவைத் தேர்தலப்ப நம்ம வேட்பாளருக்கு திமுகவுலருந்து அஞ்சு கோடி குடுத்தாங்க. அதுல மூணு கோடியை(மிச்சம் ரெண்டு கோடி என்னாச்சு...??)வாக்காளர்களுக்கு செலவு பண்ண நான்தான் பிரிச்சுக் குடுத்தேன் என்று அமைதிப்படுத்தியுள்ளார். கூட்டணிக்கட்சியே இவ்வளவு கொடுத்தால் சொந்தக் கட்சியில எவ்வளவு குடுத்திருப்பார்கள் என்பதுதான் அரசியல் நோக்கர்களின் மனதில் எழுந்துள்ள கேள்வியாக இருக்கிறது. கேரளாவிலும் காங்கிரஸ்காரர்கள் கோடி, கோடியாக செலவழித்துள்ள விவகாரம் அம்பலமாகியுள்ளது.


அங்கு போட்டியிட்ட ஒவ்வொரு காங்கிரஸ் வேட்பாளருக்கும் தில்லியில் பணப்பட்டுவாடா நடந்துள்ளது. தலா ஒன்றரைக்கோடியை அவர்களுக்குத் தந்துள்ளார்கள். இதை வாங்கிக்கொள்வதற்காக ஒவ்வொரு வேட்பாளர்கள் சார்பிலும் ஒருவர் தலைநகர் சென்றுள்ளார். முல்லப்பள்ளி ராமச்சந்திரன் சார்பில் சென்றவர் திரும்பி வருகையில் 25 லட்சம் ரூபாய் கொண்ட பெட்டியைத் தொலைத்து விட்டார். ஆனால் 25 லட்சத்தையும் அவர் லபக்கிவிட்டார் என்று கட்சி வட்டாரத்தில் புகாரைத் தட்டிவிட்டு விட்டார்கள் ஒரு கோஷ்டியினர். இதற்குப் பணத்தைத் தொலைத்தவர் விளக்கம் அளித்து எழுதிய கடிதத்தால் தேர்தல் செலவுக்கு காங்கிரஸ் மேலிடம் கோடிகளை அள்ளி வழங்கியது அம்பலமாகியுள்ளது.


இடதுசாரிகள் ஆதரவை விலக்கிக் கொண்டபோது கரன்சி மழையால் எம்.பி.க்களை நனையச் செய்து பெரும்பான்மையை நிரூபித்த காங்கிரஸ், தேர்தல் வெற்றிக்கும் அதையே நம்பியிருந்துள்ளது. ஆக.18 அன்று நடக்கப்போகும் திருவைகுண்டம், இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர் மற்றும் பர்கூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் கூட்டணிக்கட்சியான(வெற்றி ஃபார்முலாவை உருவாக்குவதில் தாய்க்கட்சி..!!) திமுகவோடு இணைந்து வாரி இறைத்துக் கொண்டிருக்கிறார்கள். சொந்தக்கட்சி வேட்பாளர் போட்டியிடும் தொண்டாமுத்தூர் தொகுதியில் பணம் கிடைக்காததால் காங்கிரஸ்காரர்கள் ஒதுங்குவது தெரிந்து மத்திய அமைச்சர் ராசா பணம் கொடுத்து உற்சாகப்படுத்தியுள்ள செய்தி பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.


இவ்வாறு திமுகவினர் கொடுக்கும் வைட்டமின் "ப" பெரிய அளவில் வேலை செய்கிறது. தங்கபாலு, சிதம்பரம் மற்றும் வாசன் பங்கேற்கும் கூட்டங்களுக்கு போகிறார்களோ இல்லையோ, நம்ம தலைவர்கள் ஸ்டாலின், அழகிரி பேசும் கூட்டங்களுக்கு காங்கிரஸ்காரர்கள் தவறாமல் போய்விடுகிறார்கள் என்று திமுகவினர் வட்டாரத்தில் கிண்டலாகப் பேசிக்கொள்கிறார்கள். தென் மாவட்டங்களில் அண்மையில் வெளியிடப்பட்ட சில காங்கிரஸ் கட்சிப் போஸ்டர்களில் மன்மோகன்சிங், சோனியா, காமராஜர், ராகுல்காந்தி ஆகியோருக்குப்பிறகு மு.க.அழகிரியின் படத்தையும் போட்டு விசுவாசம் காட்டியுள்ளனர்.


ஆனால் தேவையான சமயத்தில் காங்கிரசைப் புரட்டி எடுக்க திமுக தயங்கவில்லை என்று அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு பற்றி இடதுசாரிக்கட்சி உறுப்பினர்கள் பேசியபோது லால்கர், சிங்கூர் என்று காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் எரிந்து விழுந்தார். ஆனால் முரசொலியில் கட்டம் கட்டி வெளியிட்ட செய்தியில் இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியாத மாநிலம் காங்கிரஸ் ஆளும் மகாராஷ்டிராதான் என்பதைப் படம் பிடித்து காட்டினர். அதற்கு பாஜக தலைவரின் பேட்டியையும் ஆதாரமாக எடுத்துக் கொண்டு காங்கிரசை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தியது திமுக என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

Thursday, August 13, 2009

சோனியா அனுமதிக்கலாம், ஆனால் மக்கள்...?



இது தாராளயுகம். அரசுடைமைக்காலம் என்பது மலையேறி விட்டது என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா மக்களவையில் கூறியுள்ளார்(தினமணி, ஆக.7). கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில் கொட்டிக்கிடக்கும் நாட்டின் இயற்கை வளமான எரிவாயுவை யார் எப்படி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அம்பானி சகோதரர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாட்டின் சொத்தை பாதுகாக்க வேண்டாமா.. அப்படிப் பாதுகாக்க வேண்டுமென்றால் அரசுடைமை ஆக்குங்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கோரியதற்குத்தான் இப்படி பதிலளித்துள்ளார்.


கடந்த பத்து நாட்களாகவே இதுதான் நாடாளுமன்றத்தை உலுக்கி வரும் பிரச்சனையாகும். முகேஷ் அம்பானிக்கு ஆதரவாக அரசு விலையை நிர்ணயிக்கிறது. அனில் அம்பானிக்கு பாதிப்பு என்றவுடன் சமாஜ்வாதிக்கட்சி கொந்தளிக்கிறது. ஏதோ இந்த நாட்டின் வளம் இந்த இரு நபர்களுக்கு மட்டுமே சொந்தமானது போல இந்தக்கட்சிகள் லாவணி செய்தன. இந்த நிலையில் விவாதத்தை தேசத்தின் சொத்து பற்றியதாக இடதுசாரிக்கட்சிகள் மாற்றின. இவ்வளவு நாட்களும் நாற்காலியில் பசையைத் தேய்த்து அமர்ந்திருந்த முரளி தியோரா இது தனிப்பட்ட விஷயம் என்றவாறே எழுகிறார். அப்போதுதான் இடதுசாரிக்கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுரை சொல்லவும் முற்படுகிறார்.


இது தாராளயுகம் என்கிறார். எந்தயுகத்தில், "இந்திய வங்கிகள் சரிந்து விழாததற்கு அரசுடைமைதான் காரணம். அதனால் இந்தப் பெருமை எனது மாமியாரையே சாரும்" என்று அவரது கட்சித்தலைவர் சோனியா காந்தி பெருமிதத்தோடு கூறினாரோ, அதைத்தான் தாராளயுகம் என்று தியோரா வர்ணிக்கிறார். காங்கிரசிலேயே இரண்டு ரகம் உண்டு. ஒன்று, சோசலிசம் என்று சொல்லிக்கொண்டு முதலாளிகளுக்கு சாதகமாக செயல்படுபவர்கள்.


இரண்டாவது, வெளிப்படையாகவே முதலாளிகளுக்கு சாதகமாக செயல்படுபவர்கள். இதில் முரளி தியோரா இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர். ஈரானுடன் குழாய் வழியாக எரிவாயுவைக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் போடக்கூடாது என்று அமெரிக்கா கூறியது. அப்போது அமைச்சராக இருந்த மணிசங்கர் அய்யர் கையெழுத்திடுவதில் உறுதியாக இருந்தார். இதனால் அவரைத் தூக்கி கடாசிவிட்டார்கள். அமெரிக்காவின் பேச்சைத் தட்டாமல் இருக்க முரளி தியோரா அந்த இடத்தில் அமர்த்தப்பட்டார். இதிலிருந்தே அவரது விசுவாசம் யாரிடம் இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.


எந்தயுகம் மலையேறியுள்ளது என்பதைக் கொஞ்சம் பூமிப்பந்தின் மேற்கு திசையில் தியோரா பார்ப்பது நல்லது. தாராளமாக இயங்கியதால் மேற்கு நாடுகளில் உள்ள மக்களின் சேமிப்பு பறிபோயுள்ளது. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் மலையேறிய தாராளயுகம் அங்கேயிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியிலும் இருக்கிறது. அதெல்லாம் வேண்டாம்... இதோ மக்கள் பணத்தை எடுத்து தாரை வார்க்க இன்னும் தயாராகவே இருக்கிறோம் என்று ஆசை காட்டி மலையிலிருந்து இறக்க அங்குள்ள ஆட்சியாளர்கள் முயற்சித்து வருகிறார்கள்.


முரளி தியோரா ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். அவர் மக்களவையில் இருப்பது அமெரிக்காவின் அல்லது அம்பானியின் பிரதிநிதியாக அல்ல. மக்களின் பிரதிநிதியே. யுகங்கள் மக்களின் யுகங்களாகவே இருக்க வேண்டும். அதற்கு அவர்களின் நலன்களைக் காக்கும் கொள்கைகளே வர வேண்டும். தனது மாமியார் பற்றி சோனியா காந்தி பெருமைப்பட்டுக் கொண்டது நியாயமானதே. அந்த நியாயத்தைப் பலிகொடுத்துவிட வேண்டாம். மக்களின் யுகங்கள் மலையேறிவிடக்கூடாது. மாமியாரின் பெருமை பறிபோக சோனியா அனுமதிக்கலாம். ஆனால் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

Tuesday, August 11, 2009

மக்கள் பணத்தை சூறையாடிய அமெரிக்க வங்கிகள்



எந்தவிதத் திட்டமும் இல்லாமல் அடமானக் கடன்களை, அடமானத்திற்கு மேல் அடமானம் வைத்து உருக்குலைந்து போன வங்கிகள் தங்களது மோசடி வேலைகளை மட்டும் கைவிடவில்லை. மீட்புத்திட்டம் என்ற பெயரில் லட்சக்கணக்கான கோடிகளை முழுங்கி ஏப்பம் விட்டு நிற்கும் வங்கிகளில் ஒன்பது பெரிய வங்கிகள் செய்த தில்லுமுல்லுகள் மீண்டும் அம்பலமாகியுள்ளன. நெருக்கடி மற்றும் சொத்து மீட்புத்திட்டம் என்ற திட்டத்தின் கீழ் நிதியைப் பெற்றுக் கொண்ட வங்கிகள் கடந்த ஆண்டிற்காக அளித்த போனஸ் தொகை குறித்து அமெரிக்க நிதித்துறை ஆய்வு செய்துள்ளது. ஒன்பது பெரிய வங்கிகளின் கணக்குகள் மற்றும் போனஸ் தொகை பற்றிய விரிவான ஆய்வு வங்கிகளின் மோசடியை முன்னுக்குக் கொண்டு வந்துள்ளது.

வங்கிகளிலேயே அதிகமான அளவு மீட்புத்திட்ட நிதியை சிட்டி வங்கிக்குழுமம்தான் பெற்றது. திவால் நிலைக்கு சென்ற இந்த வங்கியின் பங்குகளில் மூன்றில் ஒரு பங்கை அமெரிக்க அரசே எடுத்துக் கொண்டது. மேலும் மீண்டு வரட்டும் என்பதற்காக நிதியை வாரி வழங்கியது. வங்கியின் மீட்சிக்காக அதைப் பயன்படுத்தாமல் போனஸ் வழங்குவதற்காக அந்த நிதியைப் பயன்படுத்தியுள்ளார்கள். 2008 ஆம் ஆண்டுக்கான போனசாக சுமார் 26 ஆயிரம் கோடி ரூபாயை சிட்டி குழுமம் அளித்துள்ளது. இத்தனைக்கும் 2008 ஆம் ஆண்டில் சுமார் 91 ஆயிரம் கோடி ரூபாய் மேலும் நஷ்டத்தைக் கண்டுள்ளது சிட்டி குழுமம். எவ்வளவு மீட்பு நிதி வாங்கினார்கள், அதற்கும் போனசிற்கும் என்ன விகிதம் என்றெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. ஏனென்றால் இதில் பல விஷயங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்ற கட்டாயம் இந்த மோசடியாளர்களுக்கு இல்லை.

சிட்டி குழுமம் மட்டும் தனியாக இந்த வேலையைச் செய்யவில்லை. அதற்கு கூட்டாளிகளாக இருக்கும் வகையில் பேங்க் ஆப் அமெரிக்கா, மெர்ரில் அண்டு லின்ச், ஜே.பி.மார்கன் சேஸ் மற்றும் கோல்டுமேன் சாக்ஸ் குரூப் ஆகிய வங்கிகளும் மக்களின் வரிப்பணத்தை மீட்பு நிதியாகப் பெற்றுக் கொண்டு போனசையும் வாரி வழங்கியுள்ளார்கள். இவர்களின் போனசால் அதிகமாகப் பயனடைந்தவர்கள் வால் ஸ்டிரீட்டில் உள்ள முதலீட்டு வங்கியாளர்கள்தான். வங்கிகளை சிதைத்ததோடு நிற்காமல் மீட்புக்கான நிதியையும் எடுத்துக் கொண்டு ஒட்டுமொத்தமாகக் குழிதோண்டிப்புதைக்கவும் முடிவு செய்துவிட்டார்கள்.

பேங்க் ஆப் அமெரிக்கா மற்றும் மெர்ரில் லின்ச் ஆகிய இரு வங்கிகளும் கூட சுமார் 33 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் போனசாக வாரி வழங்கியுள்ளன. மீட்புத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியை இந்த இரு வங்கிகளும் இன்னும் திருப்பித்தரவில்லை. போனஸ் ஏன் தரப்பட்டது என்று கேட்டால், திறமையான நபர்களை போட்டி வங்கிகள் இழுத்துக் கொண்டு போய்விடும் என்று கதை விட்டுள்ளார்கள். வங்கிகளிலிருந்து மிக அதிகமான வருமானத்தை ஈட்டும் முதல் 100 பேரை அடையாளங்கண்டு அவர்கள் வருமானம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு கடந்த மாதத்தில் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா உத்தரவிட்டிருந்தார். அவரால் நியமிக்கப்பட்ட கென்னத் ஃபெய்ன்பர்க் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால் அவர் 2009 ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் இழப்பீடு போன்றவற்றை மட்டுமே ஆய்வு செய்ய முடியும். லட்சம் கோடி ரூபாய்க்கு மேற்பட்ட நிதி பல்வேறு வடிவங்களில் வங்கியிலிருந்து வெளியேறி விட்டது. இந்த லட்சணத்தில் ஓரிரு வங்கிகளைத் தவிர மற்ற வங்கிகள் இரண்டாவது மீட்புத்திட்ட நிதியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றன. அதோடு, மாதாமாதம் திவாலாகிக் கொண்டிருக்கும் சிறிய வங்கிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 305 அமெரிக்க வங்கிகள் திவால் நிலையை எதிர்நோக்கியுள்ளன என்று மத்திய காப்பீட்டுக்கழகம் கணித்திருந்தது. திவாலாகும் வங்கிகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு இந்தக் கழகத்தின் தோள் மீதுதான் சுமத்தப்பட்டுள்ளது.

நிறுவன மேலாண்மையில் நேர்மை, நியாயம் என்ற வார்த்தைகள் அனைத்தையும் அமெரிக்க வங்கிகள் தொலைத்துவிட்டு நிற்கின்றன. மக்கள் பணம் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் அதை முதலீடு செய்வதும், திவாலான நிலையிலும் மக்கள் பணத்தை எடுத்து போனசாக அள்ளி வீசிக்கொண்டிருப்பதும் எதை, எதையெல்லாம் நிர்வாகம் செய்யக்கூடாது என்பதற்கு உதாரணமாக இந்த வங்கிகள் செயல்படுகின்றன. இந்த வங்கிகளின் கைகளில்தான் இந்திய வங்கிகளை ஒப்படைத்துவிட வேண்டும் என்று ஒருநாளில் 26 மணிநேரம் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் மத்திய ஆட்சியாளர்கள்.

Wednesday, August 5, 2009

மார்க்சிஸ்டுகளை மட்டும் ஏன் குறி வைக்கிறார்கள்?


கடந்த இரு ஆண்டுகளில் மேற்கு மிட்னாப்பூர், புருலியா மற்றும் பங்குரா ஆகிய மாவட்டங்களில் சுமார் 100 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது அனுப்பப்பட்டுள்ள 50 துணைராணுவப் பிரிவுகளும் கூட அதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பாக மாவோயிஸ்டுகளை வெளியேற்றும் நடவடிக்கை துவங்கிய பிறகும் கூட எட்டு மார்க்சிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த ஒருவரைக்கூட குறிவைக்காமல் மார்க்சிஸ்டுகளை மட்டுமே தங்கள் இலக்காக மாவோயிஸ்டுகள் வைத்துக் கொள்வது ஏன்? மாவோயிஸ்டுகளின் தலைவர்களில் ஒருவரான பிகாஷ் என்பவர் கூறுவதை நம்புவதாக இருந்தால், மார்க்சிஸ்ட் கட்சியினர் அனைவருமே காவல்துறைக்கு தகவல் தருபவர்களாக இருப்பவர்கள்.

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான் லால்கருக்கு துணை ராணுவப்படையை அனுப்பியுள்ளது. திரிணாமுல் அந்த அரசில் அங்கம் வகிக்கிறது. இருந்தாலும், காவல்துறைக்கு இந்த இருகட்சிகளைச் சேர்ந்தவர்களும் மாவோயிஸ்டுகள் பற்றிய தகவல்களை ஏன் தருவதில்லை என்பது மர்மமாகவே இருக்கிறது. தங்கள் எதிரியின் எதிரியை மாவோயிஸ்டுகள் நண்பர்களாகக் கருதுகிறார்கள் என்பதுதான் சரியான விளக்கம்.
- மெயில் டுடே நாளிதழ்(ஆக.4)

Sunday, August 2, 2009

குண்டுகளுக்கு நடுவில் கேடயமாகக் குழந்தைகள்



மாவோயிஸ்டுகள் உள்ளிட்ட உள்நாட்டு தீவிரவாதமே நாட்டின் முன்நிற்கும் மிகப்பெரிய சவாலாகும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியிருந்தார். அந்த அளவிற்கு மாவோயிஸ்டுகளின் வன்முறை வெறியாட்டங்கள் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளன. ஆந்திரா, ஒரிசா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் நிர்வாகம்தான் பல மாவட்டங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசு எந்திரங்கள் முடங்கிய நிலையில்தான் உள்ளன. 2008 ஆம் ஆண்டு மாவோயிஸ்டுகள் நிகழ்த்திய வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை 1,591 ஆகும். இதில் 620 சம்பவங்கள் சத்தீஸ்கரில்தான் நிகழ்ந்துள்ளன.


மேற்குவங்கம் லால்கரில் மாவோயிஸ்டுகளின் வெறியாட்டத்தை மக்கள் போராட்டமாகச் சித்தரிக்கும் எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்கள் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் நிர்வாகமே அலங்கோலமாகக் இருப்பதைக் கண்டு கொள்வதில்லை. 2008ல் சத்தீஸ்கரில் நடந்த 620 சம்பவங்களில் 157 அப்பாவிப் பொதுமக்களும், பாதுகாப்புப்படையைச் சேர்ந்த 85 பேரும் கொல்லப்பட்டனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் 828 அப்பாவிகள் மாவோயிஸ்டுகளின் கொலைவெறித்தாக்குதல்களுக்குப் பலியாகியுள்ளனர். மாநிலக்காவல்துறையினரைத் தவிர 35 துணை ராணுவப் படையின் பட்டாலியன்களும் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளன.


லால்கரில் புகுந்து அட்டகாசம் செய்து கொண்டிருக்கும் மாவோயிஸ்டுகளை விரட்டியடிக்க சென்றுள்ள துணை ராணுவப்படையினரை வெளியேற்ற வேண்டும் என்று சிலர் கேட்கிறார்கள். ஆனால் சத்தீஸ்கரில் இந்த 35 பட்டாலியன்கள் கிட்டத்தட்ட நிரந்தர முகாம்களை அமைத்துவிட்டார்கள் என்பதைக் கண்டுகொள்வதில்லை. அதோடு இந்த மாநிலத்தில் உள்ள தெற்கு பஸ்தர் பகுதி பல ஆண்டுகளாக மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. நிர்வாகமோ அல்லது அரசியல் தலைவர்களோ அந்தப்பகுதிக்குள் நுழைய முடியாது. ஒப்பந்ததாரர்கள், வர்த்தகர்கள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து மட்டுமல்லாமல், காங்கிரஸ் மற்றும் பாஜககாரர்களிடமிருந்து பணம் வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள் மாவோயிஸ்டுகள்.


இவர்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே ரத்தத்திற்கு ரத்தம் என்ற பாணியையே கடைப்பிடிக்கின்றன. சல்வா ஜுதும் என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி மாவோயிஸ்டுகளை வேட்டையாட முற்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகள் மற்றும் சல்வா ஜுதும் மோதலுக்கு முதல் பலியே ஜனநாயகம்தான். மாவோயிஸ்டுகளோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருந்த சமூக விரோதிகள் சல்வா ஜூதுமுக்கு மாறி விட்டார்கள். அவர்கள் அட்டகாசங்கள் அரசின் ஆதரவோடு நடக்கின்றன. இந்த லட்சணத்தில் மேற்கு வங்க அரசைக் குறை கூறிப் பேசிக்கொண்டிருக்கிறார் சத்தீஸ்கர் மாநில முதல்வரான ராமன்சிங்.


குழந்தைகளை தங்கள் வன்முறை வெறியாட்டங்களுக்கு மாவோயிஸ்டுகள் தயார்படுத்துகிறார்கள் என்பது நீண்டநாளைய குற்றச்சாட்டு. பாலர் சங்கங்கள் என்று உருவாக்கி புரட்சிக்கான போரை நடத்துவதற்காக அவர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கிறார்கள். போட்டிக்கு சல்வா ஜுதும் அமைப்பில் சிறப்பு காவல் அதிகாரிகள் என்ற பெயரில் அரசும் குழந்தைகளைச் சேர்க்கிறது. நூற்றுக்கணக்கான குழந்தைகள் இவ்வாறு சேர்க்கப்பட்டு அவர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கப்படுகிறது. இரு தரப்பினருமே சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட சட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களை மீறுகின்றனர். இருதரப்புமே இந்தக்குழந்தைகளைக் கேடயமாகவே பயன்படுத்துகின்றன.


சல்வா ஜூதும் அமைப்பு தனது மதவெறிக் கொள்கைகளை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக ஆகியவை பரப்புகின்றன. கம்யூனிச எதிர்ப்பு உணர்வு கொண்ட பாஜக மாநில அரசு, சிபிஎம் மற்றும் சிபிஐ ஊழியர்களை மாவோயிஸ்டுகளோடு இணைத்துப் பேசி அவர்களைக் குறிவைக்கிறது. பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடமுமே மாவோயிஸ்டுகளை எதிர்கொள்ள எந்தக் கொள்கையும் இல்லை. காவல்துறையை மட்டுமே நம்பியுள்ளார்கள். இதில் மாவோயிஸ்டுகளை எதிர்கொள்ள என்று கேட்டு வாங்கும் நிதியில் ஏராளமான ஊழல்கள் நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.


இருதரப்பிற்கும் நடுவில் சிக்கிக்கொண்ட ஆயிரக்கணக்கான பழங்குடியினர் ஊரைக்காலி செய்து விட்டனர். இவ்வாறு கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேறுவதை மாநில பாஜக அரசும் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பகுதிகளில் இரும்பு எஃகு, தங்கம், யுரேனியம் மற்றும் பாக்சைட் ஆகிய இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பெரு நிறுவனங்கள் இவற்றை மனதில் கொண்டு வட்டமடிக்கின்றன. பாஜக அரசும் நிலங்களைத் தாரை வார்ப்பதற்கான காரணங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் காங்கிரசும் உடந்தைதான்.

Saturday, August 1, 2009

பணவீக்கத்தின் தொடர்பு எல்லைக்கு வெளியில் விலைவாசி


ஜூலை 18 அன்று நிறைவு பெற்ற வாரத்திற்கான பணவீக்க விகிதம் (-)1.54 ஆக இருந்தது. அதாவது விலைவாசி செங்குத்தாக சரிந்து கொண்டிருக்கிறது. மக்கள் எல்லாம் சுபிட்சமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நிற்க. புள்ளிவிபரத்தை மட்டும் பார்த்தால் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் வழக்கத்தை விட வேகமாக விலைவாசி ஓடிக்கொண்டிருக்கிறது.


கனிமங்களுக்கான விலைகள் பெருமளவு குறைந்துள்ளன. சுமார் 16.8 சதவீத அளவிற்கு இதன் விலைகள் குறைந்தன. இரும்புத்தாதுவின் விலைதான் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன் விலை 24 சதவீதம் சரிந்தது. பெட்ரோல், டீசல் விலைகள் கடும் எதிர்ப்புக்கிடையிலும் உயர்த்தப்பட்டன. ஆனால் ஜெட் விமானங்களுக்கான எரிபொருள் விலையை சத்தமில்லாமல் குறைத்துவிட்டார்கள். குறைவான பணவீக்கத்தை அனுபவிக்க விரும்பும் குப்பனும், சுப்பனும் ஜெட்டில் பறந்து கொள்ள வேண்டியதுதான்.


காய்கறிகளின் விலைகள் 4.9 சதவீதமும், பருப்பு வகைகளின் விலை 4.2 சதவீதமும் அதிகரித்துள்ளது. இறைச்சி, மீன், முட்டை ஆகியவற்றின் விலைகளும் ஏறுமுகம்தான். பல மாநிலங்களில் துவரம்பருப்பின் விலை சில்லரை விலைக்கடைகளில் நூறு ரூபாயைத் தாண்டி ஆட்டமிழக்காமல் ஆடிக்கொண்டிருக்கிறது.


இந்த பணவீக்க அளவைக் கொண்டுதான் வளர்ச்சியை அளவிடப்போகிறார்கள். யானைக்கால் நோய் வந்தவரைப் பார்த்து, பார்த்தாயா...அவருடைய கால் எவ்வளவு வலுவாக இருக்கிறது என்று கூறினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இவர்களின் வளர்ச்சி பற்றிய வியாக்கியானம் இருக்க முடியும்.

Tuesday, July 28, 2009

திவால் நிலையில் 305 அமெரிக்க வங்கிகள்!



அடமானக் கடனில் துவங்கி சர்வதேசப் பொருளாதார நெருக்கடி வரை கொண்டு சென்றுள்ள அமெரிக்க வங்கிகள் திவாலாகி வரும் பிரச்சனை பூதாகரமாக உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு நிறைவில் சுமார் 252 வங்கிகள் எப்போது வேண்டுமானாலும் மஞ்சக்கடுதாசி கொடுத்து விடும் என்ற நிலையில் இருந்தன. திவாலாகி வரும் வங்கிகளை எடுத்துக் கொள்வதற்காக அமெரிக்க அரசு நியமித்திருக்கும் மத்திய காப்பீட்டுக்கழகமே இந்தத் தகவலை வெளியிட்டிருந்தது. தற்போது அதே கழகத்தின் மதிப்பீட்டின்படி திவாலாகிவிடும் என்ற அபாயத்தில் இருக்கும் வங்கிகளின் எண்ணிக்கை 305 ஆக உயர்ந்துவிட்டது. வரும் மாதங்களில் இது மேலும் அதிகரிக்கும் என்பதே பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக இருந்து வருகிறது.


வங்கிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி கடந்த ஆண்டின் இரண்டாவது பாதியில்தான் உருவானது என்று பலர் கருதினாலும் அதற்கு முன்பே நெருக்கடி துவங்கிவிட்டது. ஜனவரி 2008லிருந்து இன்றுவரை திவாலான வங்கிகளின் எண்ணிக்கை 89யைத் தொட்டுவிட்டது. நடப்பாண்டில் மட்டும் 64 வங்கிகள் திவாலாகிவிட்டன. ஒவ்வொரு மாதமும் சராசரியாக ஒன்பது வங்கிகள் இழுத்து மூடப்படுகின்றன. நெருக்கடி அதிகரித்ததாகக் கூறப்படும் 2008ஆம் ஆண்டில் கூட 25 வங்கிகள் மட்டும்தான் திவாலாகின. ஆனால் நடப்பாண்டின் முதல் ஏழு மாதத்திலேயே 64 வங்கிகள் திவாலாகியுள்ள நிலையில், அமெரிக்க பொருளாதார நெருக்கடி முற்றிவிட்டதையே இது காட்டுகிறது. இதை சரிசெய்ய இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கும் என்று வலதுசாரிப் பொருளாதார ஆய்வாளர்களே குறிப்பிடுகின்றனர்.


ஒவ்வொரு நிதியாண்டின் நிறைவிலும் தங்கள் வங்கி மிகவும் வலுவாக இருக்கிறது என்றுதான் திவாலான வங்கிகளின் வரவு-செலவு அறிக்கைகள் கூறிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு வங்கியும், மற்றொரு வங்கியோடு இணைக்கப்பட்டிருந்ததால் திவால் நிலை அனைத்து வங்கிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. வங்கிகளின் சொத்து மதிப்பைக் காட்டி எந்த நிலையிலும் இந்த சொத்துக்களை விற்றாலே போதும். வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருப்பிவிடலாம் என்ற வாதத்தையே வங்கி நிர்வாகிகள் வைத்து வந்தனர். ஆனால் சொத்து மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி நிர்வாகங்களை உலுக்கி எடுத்துவிட்டது. திவாலான வங்கிகளின் மொத்த சொத்து மதிப்புக்கும், வங்கியில் உள்ள வாடிக்கையாளர்களின் பண இருப்புக்குமான இடைவெளி பெரிதும் குறைந்துவிட்டது.


சொத்துக்களை விற்றால் மட்டுமே வாடிக்கையாளர்களின் சேமிப்புப்பணம் திருப்பித்தரப்படும் என்ற நிலையில் பல வங்கிகள். மேலும் பல வங்கிகளோ அதை விட மோசமான நிலைக்கு சென்று விட்டன. அத்தனை சொத்துக்களையும் விற்றால் கூட பணத்தைத் திருப்பித் தர முடியாது என்பது அந்த வங்கிகளின் நிலை. வங்கிகளின் சரிவு துவங்கியபோது பெரிய வங்கிகள்தான் பாதிக்கப்பட்டன. சிறிய வங்கிகள் தப்பித்து விடும் என்று கூறப்பட்டது. ஆனால் பெரிய வங்கிகள் கூட மீண்டுவிடுமோ என்ற எண்ணத்தை உருவாக்குகின்றன. மீளவே முடியாத நிலைக்குப்போய்தான் சிறிய வங்கிகள் திவால் அறிவிப்பையே வெளியிடுகின்றன. பெரிய வங்கிகள் அரசின் மீட்புத்திட்டத்தின் மூலம் பெரும் பலனை அனுபவிக்கின்றன.

ஏற்கெனவே வேலையின்னை அதிகரித்துள்ள நிலையில், நிதி நிறுவனங்களின் தள்ளாட்டம் அந்த நிலையை மேலும் மோசமடையவே செய்யும். சிட்டி குழுமம் மற்றும் கோல்டுமேன் சாக்ஸ் ஆகிய இரு வங்கிகளும் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் சிறிய லாபத்தை சம்பாதித்துள்ளன. இதுவும் அவர்களின் மொத்த நஷ்டத்தை ஈடுகட்ட எந்தவிதத்திலும் உதவாது. மொத்த நஷ்டம் என்பது அமெரிக்க அரசு வாயிலாக அந்நாட்டு மக்களின் தலையில்தான் சுமத்தப்பட உள்ளது. ஆனால் சிறிய, அதிலும் குறிப்பாக கிராமப்புறத்தில் உள்ள வங்கிகள் எழவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இழுத்து மூடப்பட்டுள்ளன.

இந்த நிலைக்கு மாறாக, இந்திய வங்கிகள் லாபத்தில் இயங்கி வருகின்றன. 90 சதவீத வங்கிகள் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதே இதற்குக் காரணம் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதற்கு மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகள்தான் காரணம் என்பதை அவர் கூறாமல் விட்டுவிட்டார். இதுதான் காரணம் என்று கூறிக்கொண்டே, அந்தக்காரணத்தைக் குழியில் போட்டு மூடும் வகையில் தனியார் மயம் பற்றிய சிந்தனையில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

Sunday, July 26, 2009

பழைய தமிழ்ப்பாடலில் சிங்கு, அத்வானி, அம்பானி,



பாட்டு வரும்...பாட்டு வரும்... உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால்..

அமெரிக்க வரைபடத்தைப் பார்த்துக் கொண்டு மன்மோகன்சிங் பாடுவதாகத்தான் பாடல் துவங்குகிறது. ஆனால் அவருடைய கைகளோ புஷ், ஒபாமா, ஹிலாரி ஆகியோர் கைகளில் இருக்கும் ஆவணங்களில் கையெழுத்து இட்ட வண்ணம் இருக்கின்றன. மேலும் இந்திய வரைபடத்தை "சுருட்டுவது" போன்ற காட்சியும் அருமை.


**************


மாணிக்கத்தேரில் மரகதக்கலசம் மின்னுவதென்ன...


தோற்றுப்போய்விட்டோம் என்ற கவலையே இல்லாமல் தேரில் கிளம்பும் அத்வானி உற்சாகமாகப் பாடுவதாக படமாக்கப்பட்டுள்ளது. மரகதக்கலசம் என்ற வரி வரும்போதெல்லாம் பழைய துணியால் மறைக்கப்பட்ட ஒன்றைக் காட்டுகிறார்கள். தேர்தலுக்கு முன்பு எடுக்கப்பட்ட பாடல் காட்சியாதலால் பிரதமர் என்று அந்த இடத்தில் எழுதி வைத்திருந்தார்கள். கிழிசலுக்கிடையில் அது தெரியத்தான் செய்கிறது. தேரின் பாதையில் ஜஸ்வந்த்சிங், யஷ்வந்த்சின்கா, அருண்சோரி ஆகியோரின் வீடுகள் வரும்போது அத்வானி முகத்தைத் திருப்பிக் கொள்ளும் காட்சி தத்ரூபமாகப் படமாகியுள்ளது.


**************


ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்...


முகேஷ் அம்பானி தலைமையில் முதலாளிகள் கூட்டம் குத்தாட்டம் போடுகிறது. அமர்சிங் இல்லாததால் ஒரு மூலையில் அனில் அம்பானி தனியாக ஆடிக்கொண்டிருக்கிறார். அமெரிக்க மெட்டுக்கு ஆடுவதில் இவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சிதான். என்னடா இவங்க ஆடலையேன்னு பன்னாட்டு நிறுவனங்கள் பக்கம் திரும்பினால், ஆட்டத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் வேலையில் இருப்பது தெரிகிறது. பாட்டுக்கான மெட்டை அவர்கள்தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது அவர்களின் அசைவிலிருந்து தெரிகிறது.


**************


மாட்டுக்கார வேலா... உன் மாட்டைக் கொஞ்சம் பாத்துக்கடா...


இடதுசாரிக்கட்சிகளின் தலைவர்கள் இந்தப்பாடலைப் பாடுகிறார்கள். பொதுத்துறையை மாடாக உருவகப்படுத்தி கூறுகிறார்கள். பாடலுக்கு நடுவில் காங்கிரஸ்காரர்கள் மாட்டைக்கவருவதற்காக வருவதும், பாத்தியா உன்னால திருட முடியலை... நாங்க வந்திருந்தா இந்நேரம் திருடியிருப்போம் என்று பாஜக சொல்வதும் படமாக்கப்பட்டுள்ளது. கூடவே வரும் திமுககாரர்கள் எங்க ஏரியாவுக்குள்ள மட்டும் போயிராதீங்கன்னு கமுக்கமா சொல்றது பாடல் வரிகளை மீறி நமது காதுகளில் விழுகிறது.


**************


ஏன் பிறந்தாய் மகனே... ஏன் பிறந்தாயோ...


நாட்டு நிகழ்வுகளைப் பார்த்து தேசபக்த அக்கறையுடன் ஒரு தாய் இந்தப்பாடலைப் பாடுவதாக படமாகியுள்ளது. நியாயத்துக்குப் போராடும் மாணவர்கள், தொழிலாளர்கள் தடியடி வாங்கி சுருண்டு விழும் காட்சிகளின்போது அந்தத்தாய் விடும் கண்ணீர் பார்ப்பவர்களின் கண்களிலும் நீரை வரச்செய்கிறது. இப்போதைய நிகழ்வுகளுக்குப் பொருத்தமாக சில வரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. நியாயத்திற்குப் போராடியும் உனக்கேன் இந்த குண்டாந்தடியடி என்ற அந்த வரிகளுக்குப்பிறகு, மீண்டும் ஏன் பிறந்தாய் மகனே... ஏன் பிறந்தாயோ என்று துவங்கும்போது தியேட்டரே கண்ணீரில் மிதக்கிறது.


**************


தனிமையிலே இனிமை காண முடியுமா...


இப்பாடலை டி.ஆர்.பாலு பாடுகிறார். பதவியுடனேயே இருந்துவிட்ட அவரால் அதைப்பிரிந்து வாடும் சோகத்தை அப்படியே முகபாவனைகளில் கொண்டு வந்து விட முடிகிறது. வெளியிலிருந்து ஆதரவுன்னு என்ன வெச்சு சொல்ல வெச்சாங்களே... அப்பவே முழிச்சுகிடலை... கட்சி கிடையாது... நான்தான் வெளியிலருந்து ஆதரவு தரப்போறேன்னு தெரியாம கடுகடுன்னு முகத்தை வெச்சுகிட்டு டிவிக்கு பேட்டி கொடுத்தேனே... என்று பாடலுக்கிடையில் அவர் சோக வசனம் பேசுவதாக சேர்க்கப்பட்டுள்ள காட்சிகள் கைதட்டலை அள்ளுகின்றன.


**************


கல்வியா.. செல்வமா... வீரமா...


வீராவேசத்துடன் பாடல் துவங்கினாலும் ஏதோ நெருடல் இருந்துகொண்டேயிருக்கிறது. பாடலின் நிறைவுப்பகுதி அந்த நெருடல் உண்மை என்று நிரூபிக்கிறது. காலத்துக்கேற்ற மாற்றங்களுடன் வந்துள்ள பாடலின் கடைசி வரிகள் இந்த மூன்றை விட மின்வெட்டே பெரியது என்பதை அழுத்தந்திருத்தமாகப் பதிய வைக்கின்றன. அந்த வரிகளின்போது ஆர்க்காட்டார் கம்பீரமாக நடந்து வரும் காட்சி அற்புதம். பாடலின் நடுவில் பெண்கள் மின்கம்பத்தைச் சுற்றிவந்து வணங்குவது போன்ற காட்சி நன்கு படமாக்கப்பட்டுள்ளது.