Tuesday, October 6, 2009

பண்டங்களாக மாற்றப்படும் சிறுமிகள்!


பாலியல் தொழிலுக்காக பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தப்படுகிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவலை தேசிய பெண்கள் ஆணையம் கவலையுடன் தெரிவித்துள்ளது. இவ்வாறு கடத்தப்படுவது குறித்து தேசிய பெண்கள் ஆணையத்தின் சார்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. ஆய்வு விபரங்களை ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. நாட்டிலுள்ள 612 மாவட்டங்களில் 378 மாநிலங்களில் இந்தக் கொடுரம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, தென் மற்றும் கிழக்கு மாநிலங்களில்தான் இது அதிகமாக நடப்பதாக ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. இந்தக் கொடுமைகள் நடப்பதற்கு வறுமை, வேலையின்மை, எழுத்தறிவின்மை மற்றும் பாலினப் பாகுபாடு ஆகியவை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : சராசரியாக 90 சதவிகித தென் மற்றும் கிழக்கு மாநில மாவட்டங்களிலிருந்து பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்காக கொண்டு செல்லப்படுகின்றனர்.தமிழகத்திலும் இந்தக் கொடுமை பரவலாக இருக்கிறது. இங்கிருந்து 93.33 சதவிகித மாவட்டங்களிலிருந்து பெண்களையும், சிறுமிகளையும் கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பது நடந்து கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் சுமார் 28 லட்சம் பெண்கள் இந்தப் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நாட்டில் 15 முதல் 35 வயதுவரையுள்ள பெண்களின் மொத்த எண்ணிக்கையில் 2.4 சதவிகிதப் பெண்கள் இத்தகைய கொடுரங்களால் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுபவர்களில் 43 சதவிகிதம் பேர் சிறுமிகளாவர்.
இதில் பெரும்பாலான பெண்கள் மற்றும் சிறுமிகள் கட்டாயப்படுத்தப்பட்டே இத்தகைய தொழிலுக்கு தள்ளப்படுகிறார்கள். ஆசை வார்த்தை காட்டி அழைத்துச் செல்லப்பட்டுதான் இவர்கள் இத்தகைய நெருக்கடியை சந்திக்க வேண்டி வருகிறது. இதில் கொடுமையிலும் பெரிய கொடுமை என்னவென்றால் கணிசமான பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களாலேயே இத்தொழிலுக்கு தள்ளப்படுகிறார்கள் என்பதுதான். கிட்டத்தட்ட 22 சதவிகிதம் பேர் குடும்பத்தினரின் நிர்ப்பந்தம் காரணமாகவே இத்தொழிலுக்கு செல்கிறார்கள். எட்டு சதவிகிதம் பேர் தாலி கட்டிய கணவனாலேயே இந்தப் புதைகுழியில் தள்ளப்படுகின்றனர். சுமார் 18 சதவிகிதம் பேர் நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஆகியோரின் தவறான ஆலோசனைகளால் இதில் சிக்கிக்கொள்கிறார்கள்.
இவ்வாறு பெண்களும், சிறுமிகளும் நிர்ப்பந்தத்தாலும், ஆசைவார்த்தைகளாலும் சிக்கிக்கொள்வதற்கு வறுமையே பிரதான காரணமாகும். அதோடு பாலினப்பாகுபாடும் முக்கிய காரணமாக உள்ளது. பெண்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்க ஏராளமான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால் அந்த சட்டங்கள் சரியான முறையில் அமல்படுத்தப்படுவதில்லை. பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் தள்ளப்பட்டு சதி வலையில் சிக்கிக்கொள்வதற்கும், அவர்களுக்கு எதிராக அநீதி இழைக்கப்படுவதற்கும் இத்தகைய அம்சங்களே காரணங்களாக இருக்கின்றன. இவ்வாறு இந்த கொடுமை குறித்த ஆணையத்தின் அறிக்கை கூறுகிறது.இதிலிருந்து அப்பாவி பெண்களையும், சிறுமிகளையும் விடுவிக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கான தீர்வையும் தேசிய பெண்கள் ஆணையமே தனது அறிக்கையில் முன்வைக்கிறது.
பெண்களுக்கு பொருளாதார ரீதியான சுதந்திரம் இல்லாதது முக்கியமான காரணமாகும். அவர்களுக்கு அந்த சுதந்திரம் கிடைக்கச் செய்ய வேண்டும். காகிதங்களில் இருக்கும் சட்டங்கள் முறையாக நடைமுறைக்கு வர வேண்டும். அதோடு, பெண்களும் நம்மைப் போலவே ரத்தமும் சதையும் கொண்டவர்கள். அவர்களும் சமுதாயத்தில் மதிக்கப்படக்கூடியவர்கள் என்ற மனப்பான்மை மக்கள் மத்தியில் உருவாக்கப்பட வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலம் பெரும்பாலான குற்றங்களைத் தடுத்து நிறுத்திவிட முடியும் என்று தேசிய பெண்கள் ஆணையம் கருதுகிறது. பெண்களைப் பண்டங்களாகவும், குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் எந்திரங்களாகவும் பார்க்கின்ற மனநிலை மாற பள்ளிப் பாடத்திட்டத்திலேயே இது குறித்த கருத்துகள் சேர்க்கப்பட வேண்டும். சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான பாகுபாடுகள் இல்லாத நிலை உருவானாலேயே இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதுதான் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடுபவர்களின் கருத்தாகும்.
ஆட்சியாளர்களின் கொள்கைகள் மாற வேண்டும். அதுவே ஆண், பெண் பாகுபாடற்ற நிலையை நோக்கிச் செல்வதற்கான முதல்படியாக அமையும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

2 comments:

  1. Painful truth. I did NOT know that it is prevalent in South, especially in Tamil Nadu. Education is the only medicine that can cure all this.

    ReplyDelete
  2. Question : What has the Communist Government done for improving the condition of women in West Bengal in last 33 years ?

    Answer : ZEROOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO

    ReplyDelete