
மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக பெரும் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் மாவோயிஸ்டுகள் தங்கள் இயக்கத்தை வர்த்தக நிறுவனம் போன்றே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நாடு முழுவதும் பல பகுதிகளில் இவர்கள் அடிக்கும் கொள்ளையால் சராசரியாக ஆண்டுதோறும் ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் வருகிறது என்று கடந்த ஆண்டே பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அதோடு, 2007 ஆம் ஆண்டில் மட்டும் அவர்கள் பறித்த பணத்தின் அளவு 1,500 கோடி ரூபாயையும் தாண்டிவிட்டது என்று சத்தீ°கரைச் சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
மக்கள் யுத்தத்தை நடத்துவதாகக் கூறிக்கொள்ளும் இவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பகுதிகளை விடுதலை மண்டலங்களாக அறிவித்துக் கொள்கின்றனர். சத்தீஸ்கர், பீகார், ஜார்க்கண்டு, ஆந்திரா மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களில் இத்தகைய விடுதலை மண்டலங்கள் உள்ளன. மேற்கு வங்கத்தில் அவர்களின் இத்தகைய முயற்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தடுத்ததே விடுதலை மண்டலம் உருவாகாததற்குக் காரணமாகும். அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலிலும் மாவோயிஸ்டுகள் ஊடுருவியிருந்த பகுதிகளில் மார்க்சி°ட் கட்சியின் வெற்றியும் அவர்களுக்கு அரசியல் ரீதியாகப் பலத்த அடியைத் தந்தது.
மேற்கு வங்கத்தில் தாக்குதல் நடத்திவிட்டு அருகாமையில் உள்ள ஜார்க்கண்டு மாநிலத்திற்குள் ஓடி ஒளிந்து கொள்ளும் மாவோயிஸ்டுகளுக்கு வருமானத்திற்கு மட்டும் பஞ்சமே ஏற்படவில்லை. பணம் கிடைக்கிறது என்றால் யாரையும் அவர்கள் விட்டுவைப்பதில்லை. யாருக்காகப் போராடுகிறோம் என்று அவர்கள் சொல்லிக்கொள்கிறார்களோ அத்தகைய ஏழை, எளிய உழைப்பாளிகளின் பாக்கெட்டுகளில் கையை நுழைக்கவும் மாவோயிஸ்டுகள் தயங்குவதில்லை. இரு பெரிய நக்சலைட் அமைப்புகள் இணைந்து செப்டம்பர் 2004ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மாவோயிஸ்டு) என்ற அமைப்பை உருவாக்கின. கட்சியின் ஒவ்வொரு ஊழியரும் ஆண்டு சந்தாவாக ரூ.10 தரவேண்டுமென்று அப்போது முடிவெடுத்தனர்.
ஆனால் தங்களுக்கு இந்த வருமானம் போதாது என்பதால் அனுதாபிகளிடமிருந்து வசூல் செய்வதோடு, பலவந்தமாகவும் மக்களிடமிருந்து பணம் பறிப்பது என்றும் மாவோயிஸ்டுகள் முடிவு செய்தார்கள். சுற்றுச்சூழல் குறித்து எழுதி வரும் ரிச்சர்டு மஹாபத்ரா என்ற எழுத்தாளர் இதை அம்பலப்படுத்தினார். 2001 ஆம் ஆண்டில் அவர் எழுதிய கட்டுரை ஒன்றில், மூங்கில் மரங்களை வெட்டும் ஏழைத் தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கூலியிலிருந்து ஐந்து ரூபாயை நாள்தோறும் தர வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் நிர்ப்பந்தப்படுத்தியிருந்தார்கள் என்று குறிப்பிட்டார். புகையிலை பறிக்கும் ஏழைப் பழங்குடி மக்களையும் மாவோயிஸ்டுகள் விட்டுவைக்கவில்லை.
ஆந்திராவில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களை நான்கு பிரிவுகளாக மாவோயிஸ்டுகள் பிரித்தனர். பணிகளை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்று கோரி அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. மொத்த செலவில் பிரிவுவாரியாக எட்டு, ஆறு, நான்கு மற்றும் இரண்டு சதவீத நிதியை மாவோயிஸ்டுகளுக்கு அவர்கள் தந்துவிட வேண்டும் என்று மிரட்டினார்கள். அதோடு, 2001 ஆம் ஆண்டில் ஆந்திராவைச் சேர்ந்த காகித ஆலையிடமிருந்து மாதாமாதம் 50 லட்சம் ரூபாயை மாவோயிஸ்டுகள் வாங்கியுள்ளனர். மற்றொரு துணி ஆலையிடமிருந்து ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாயை மாவோயிஸ்டுகள் வாங்கிக் கொண்டிருந்தார்கள் என்று ஆந்திரக் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.
நாகாலாந்து மாநிலத்தில் அரசு ஊழியர்கள் உள்ளிட்டு அனைவரின் ஊதியத்திலிருந்து தீவிரவாதிகளுக்கு பணம் தரப்படுவது போன்றே பீகார் மற்றும் ஜார்க்கண்டு மாநிலங்களில் லெவி வசூலிக்கப்பட்டுள்ளது. மாவோயிஸ்டுகளின் மிரட்டல்களுக்குப் பயந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணம் தந்துள்ளனர். இது போன்ற நிலையை மேற்கு வங்கத்தில் உருவாக்குவதற்கு நடந்த முயற்சிக்கு அரசியல் ரீதியான எதிர்ப்பு இருந்ததால்தான் பெரும் வன்முறையை மாவோயிஸ்டுகள் கட்டவிழ்த்து விட்டனர். அவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தற்போது நடந்து வருகின்றன.