Tuesday, April 13, 2010

"அங்காடித் தெரு"வாகும் பொதுத்துறை உருக்காலை!


தனது நாசகர உலகமய, தனியார் மய மற்றும் தாராளமயப் பாதையில் மத்திய அரசு தீவிரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் எதையும் அரசு புதிதாக உருவாக்கவில்லை. அதோடு ஏற்கெனவே இருந்துகொண்டிருக்கும் பொதுத்துறை நிறுவனங்களையும் சீர்குலைக்கும் வேலையில் இறங்கியுள்ளது. நிரந்தர மற்றும் முறையான ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகிறது. இன்றைக்கு, பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களில் நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கையை விட ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.


இன்றைக்கு ஏராளமான பணத்தை ஒவ்வொருவரும் தங்கள் கல்விக்காக செலவழித்து வருகிறார்கள். பத்தாம் வகுப்பு, ஐடிஐ, பட்டயப்படிப்புகள் மற்றும் பட்டப்படிப்புகள் என்று பல்வேறு தடைகளைத் தாண்டி தங்கள் படிப்புகளை முடிக்கிறார்கள். சரியான வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையில் அமரும் இவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலை பார்க்க சம்மதிக்கிறார்கள். ஒப்பந்ததாரர்கள் மூலமாக இந்தத் தொழிலாளர்களை நிர்வாகம் சுரண்டி எடுக்கிறது. அவர்களுக்குத் தரப்படும் சம்பளமோ அற்பமானதாகும். அதோடு, தற்போது எழுந்துள்ள நெருக்கடி நிலைமை, இருப்பதையும் பிடுங்கிவிடும் அபாயத்தை இந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் முன்பு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.


விசாகப்பட்டினம் உருக்கு ஆலையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இந்த விபரங்களை உறுதிப்படுத்துகிறது. இந்த ஆலையில் பணியாற்றும் 300 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மத்தியில் சிஐடியு சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பணியிடத்தில் கேள்வி கேட்டால் பதில் சொல்ல மாட்டார்கள் என்பதற்காக அவர்கள் வசிக்கும் இடங்களில் போய் ஆய்வு நடத்தினார்கள். விசாகப்பட்டினத்தில் உள்ள அப்பிகொண்டா மற்றும் சப்பாவரம் ஆகிய பகுதிகளில் இந்த ஆய்வு நடந்தது. அவர்களின் ஊதியம், பணியால் உண்டாகும் நோய்கள், பொருளாதார நிலை, நவீனமயத்தின் பாதிப்பு, வாழ்விடத்தில் உள்ள பிரச்சனைகள் மற்றும் சமூகப் பிரச்சனைகள் ஆகியவற்றைச் சுற்றியே கேள்விகள் அமைந்திருந்தன.


சுமை தூக்கும் பணியாளர்களின் ஊதியம் பரிதாபமாக உள்ளது. இந்தப்பணியில் இருப்பவர்களில் பலர் மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் பெறுகிறார்கள். அதிகபட்சமாக ஒரு சுமை தூக்கும் பணியாளரின் சம்பளம் வெறும் 4 ஆயிரம் ரூபாய்தான். இந்த அதிகபட்ச ஊதியம்கூட மாநில அரசு நிர்ணயித்திருக்கும் குறைந்தபட்ச கூலியை விடக்குறைவானதாகும். அதிலும் வேலை இருந்தால்தான் சம்பளம் கிடைக்கும். வேறு எந்த சலுகைகளும் அவர்களுக்கு இல்லை. கூடுதல் நேரம் வேலை செய்தால் அதற்காகத் தனி ஊதியம் எதுவும் கிடையாது. வேலை செய்யும் நாட்கள் குறைவாக இருந்தால் பி.எப் மற்றும் ஈ.எஸ்.ஐ. பிடித்தம் எல்லாம் கிடையாது. அதனால் முடிந்த அளவிற்கு இந்தப்பிடித்தம் இல்லாத அளவிற்கு நாட்களைக் குறைக்கும் வேலையையும் நிர்வாகம் செய்துவிடுகிறது.


இந்தப் பொதுத்துறை ஆலையில் 25 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். ஆலைக்குள் 10 ஆயிரம் பேரும், கட்டுமானப்பணியில் 15 ஆயிரம் பேரும் உள்ளனர். ஆலைக்குள் பணியாற்றும் 10 ஆயிரம் பேரில் சுமார் 4 ஆயிரம் பேர் நிரந்தரப்பணியாளர்கள் போலவே பணியாற்றுகிறார்கள். அவர்களுக்குத் தரப்படும் பணி, வேலை நேரம், பொறுப்பு ஆகிய நிரந்தரப் பணியாளர்களுக்குள்ளது என்றாலும் சம்பளம், படிகள் மற்றும் இதர சலுகைகள் மட்டும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இவர்களின் பெரும்பாலானவர்கள் 20 முதல் 30 வயதுக்கு சொந்தக்காரர்களாவர். தார், கால்சியம், அம்மோனியா சல்பேட், அசிட்டிலின் ஆகியவற்றை இவர்கள் கையாளுவதால், இளம் வயதிலேயே தோல் மற்றும் தொண்டை தொடர்பான வியாதிகள், எலும்புருக்கி நோய் மற்றும் முகங்களில் ஏற்படும் மாறுதல்கள் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.


700 டிகிரி முதல் 1,000 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பம் உள்ள இடங்களில் இவர்கள் பணியாற்றுகிறார்கள். 60 முதல் 80 மீட்டர் உயரத்தில் பணிபுரிபவர்களில் பலர் விபத்துக்கு உள்ளாகிறார்கள். கிடைக்கும் வருமானம் போதாததால் கிட்டத்தட்ட அனைத்து தொழிலாளர்களுமே கடனில் மூழ்கி விடுகிறார்கள். போதாக்குறைக்கு, நவீனமயம் வேறு. இதனால் ஆய்வு செய்யப்பட்ட 300 பேரில் சுமார் 50 பேருக்கு தொடர்ச்சியாக வேலை கிடைப்பதில்லை. சில சமயங்களில் ஒரு மாதம், இரண்டு மாதம் என்று வேலை கிடைக்காமல் காத்திருக்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் அவர்களுக்கு சம்பளம் கிடையாது. அதோடு, தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் அண்டை மாவட்டங்களிலிருந்து வந்தவர்களாவர்.


அவர்களிடம் ரேசன் அட்டைகள் கிடையாது. குழந்தைகளின் கல்விக்காக மாதாமாதம் 200 முதல் 300 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு வீட்டு வாடகைக்கே போய்விடுகிறது. இதெல்லாம் போதாதென்று ஏறிக்கொண்டே போகும் விலைவாசியும் இவர்களை வாட்டி எடுக்கிறது. அங்காடித் தெரு திரைப்படத்தில் ஒரு வசனம் வருகிறது. சொந்த ஊர்ல பிச்சை கூட எடுக்க முடியாது என்று. விசாகப்பட்டின உருக்காலையில் பணியாற்றும் பலருக்கும் அந்த நிலைதான். இவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தற்போது சிஐடியு இறங்கியுள்ளது.

Monday, April 5, 2010

"குழந்தைகள் தியாகம் வீண் போகாது...!"



என்ன தொழில் செய்கிறார் என்று கேட்டால், அதற்குப் பதில் சொல்ல வேண்டுமென்பதற்காக வேண்டுமென்றால் விவசாயம் என்று சொல்லலாமே ஒழிய, அவருக்கென்று நிரந்தரத் தொழில் எதுவும் கிடையாது. ஆனால் பலரும் கையில் எடுக்க அச்சப்படும் ஒரு விஷயத்தில் போராடி நின்று வெற்றி பெற்றுள்ளார் 55 வயதாகும் சந்திரபதி என்ற பெண்மணி. ஜூன் 15, 2007 அன்று மனோஜ் மற்றும் அவரது மனைவி பப்லி ஆகிய இருவரும் கொலை செய்யப்பட்டனர். இருவரும் தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் ஒரே கோத்திரத்தில் பிறந்த அவர்கள் திருமணம் செய்வதை அனுமதிக்க மாட்டோம் என்று சட்டவிரோதமாக ஊர்ப்பஞ்சாயத்து என்ற பெயரில் சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்தார்கள்.


இவர்கள்தான் ஊர்ப்பெரியவர்கள் என்றும் தங்களைக் கூறிக்கொள்பவர்கள். அவ்வாறு திருமணம் செய்த மனோஜ் மற்றும் பப்லி ஆகிய இருவரும் படுகொலையும் செய்யப்பட்டனர். இதில் கொலை செய்யப்பட்ட மனோஜின் தாய்தான் சந்திரபதி. இந்தக் கொடுரத்தை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஊர்க்கட்டுப்பாடு என்று பயந்து நடுங்கி இருந்து கொள்ளாமல் பஞ்சாயத்து தலைவர்களிலிருந்து கொலைகாரர்கள் வரை அனைவரையும் நீதிமன்றத்தில் கூண்டில் நிறுத்துவதில் வெற்றிபெற்றார். அவ்வாறு நிறுத்தப்பட்டவர்களில் பப்லியின் உறவினர்கள் ஐந்து பேருக்கு மரண தண்டணையும், பஞ்சாயத்துத் தலைவர் கங்கா ராமுக்கு ஆயுள் தண்டனையும் மார்ச் 30 அன்று வழங்கப்பட்டுள்ளது.


ஆனால் இந்த மூன்றாண்டுக்காலத்தில் ஏராளமான தடைக்கற்களை சந்திரபதி சமாளிக்க வேண்டியிருந்தது. ஒட்டுமொத்தமாக ஊரே அவரை சமூகப்புறக்கணிப்பு செய்தது. அதைப்பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை. கோத்திரம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொள்ள குழந்தைகளுக்கு உரிமையுள்ளது என்றார் அவர். காலம் இப்போது பெரும் அளவில் மாறியிருக்கிறது. தங்கள் வாழ்க்கைத் துணையை குழந்தைகள் தேர்வு செய்யும்போது பெண்கள் ஆதரவு தர வேண்டும். ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்து கொண்டவர்களைப் பார்த்து நீங்கள் இருவரும் சகோதர, சகோதரி என்று கூறுபவர்கள்தான் உண்மையில் கொலை செய்கிறார்கள் என்று பொரிந்து தள்ளுகிறார் சந்திரபதி.


இந்தப் போராட்டத்தில் அவருக்கு முதலில் கைகொடுத்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்தான். தற்போது வழங்கப்பட்டுள்ள கர்நால் நீதிமன்றத் தீர்ப்பு பற்றிப் பேசிய ஜனநாயக மாதர் சங்கத்தின் அரியானா மாநிலத் தலைவரான ஜக்மதி சங்வான், ஒவ்வொரு நபரும் தங்கள் விருப்பத்திற்கேற்ப திருமணம் செய்து கொள்ளலாம் என்று அரசியல் சட்டம் அளித்திருக்கும் உரிமை காக்கப்பட வேண்டும் என்று எங்கள் அமைப்பு நம்புகிறது என்றார். வழக்கம்போலவே, பாஜகவின் கருத்து மழுப்பலாகவே இருந்தது. அக்கட்சியின் தேசிய செயலாளர்களில் ஒருவரான கேப்டன்.அபிமன்யு கூறுகையில், காலத்தின்போக்கில் மாற்றமும் வரும் என்று கூறிக்கொண்டார். இவர் ஜாட் சாதி அமைப்பின் தலைவர்களில் ஒருவராகவும் இரூப்பதாலேயே இந்த மழுப்பல் பதில் வருகிறது.


சந்திரபதிக்கு ஆதரவான கருத்து சொல்பவர்களில்கூட பெரும்பாலானவர்கள் அதை வெளிப்படையாக சொல்ல மறுக்கிறார்கள். ஜாட் கூட்டமைப்பின் மற்றொரு தலைவரான ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி எம்.எ°.மாலிக் போன்றவர்கள் மறைமுகமாக இந்தக் கொடுமைகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்து கொள்வது 1946 ஆம் ஆண்டுவரை தடைசெய்யப்பட்டதாகவே இருந்தது என்று மழுப்புகிறார்கள். சாதி அமைப்புகள் கிராமப்புறங்களில் இன்னும் வலுவாக ஊடுருவியிருப்பதே இதற்குக் காரணமாகும். ஆனால் எனது குழந்தைகளின் தியாகம் வீணாகிப்போய்விடாது. சமூகத்தில் மாற்றத்தை இவர்களின் தியாகம் கொண்டு வந்தே தீரும் என்று உறுதியாகக் கூறுகிறார் சந்திரபதி.


உங்களுக்கு இரண்டு பெண்கள் இருக்கிறார்களே... அவர்களின் திருமணம் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டால், நான் அவர்களிடம் ஏற்கெனவே சொல்லிவிட்டேன். தங்கள் வாழ்க்கைத் துணைவர்களை அவர்களே தேர்வு செய்து கொள்ளலாம். அவர்களுடைய கோத்திரத்தில் உள்ளவர்களையோ அல்லது வெளியில் உள்ளவர்களையோ தங்கள் இஷ்டப்படி அவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு தடையேதும் இல்லை என்று உறுதியாகச் சொல்கிறார் சந்திரபதி. இதுவரை கட்டப்பஞ்சாயத்துப் பேர்வழிகளுக்கு ஆதரவாக இருந்த நிலை மாறி, சமூகநீதிக்காற்றின் திசை மாறியுள்ளது என்பதையே இது காட்டுகிறது என்கிறார்கள் அரியானாவைச் சேர்ந்த பலர்.

Thursday, March 25, 2010

மருமகளை மாமியார் எட்டி உதைக்கலாமா..?


மாமியார் தனது மருமகளை எட்டி உதைத்தாலோ அல்லது தனது மகன் விவாகரத்து செய்து விடுவான் என்று மிரட்டினாலோ இந்தியக் குற்றவியல் பிரிவு 498ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகக் கருத முடியாது என்று கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஜூலை 27, 2009 அன்று வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு வெளியானவுடன் நாடு முழுவதுமுள்ள மாதர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான பிருந்தா காரத்தான் முதலில் இப்பிரச்சனையில் குரல் எழுப்பினார். இத்தகைய பிற்போக்கான தீர்ப்பில் உள்ள குறைகளைக் களையும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லியை சந்தித்து வலியுறுத்தினார்.


பெண்களுக்கு எதிரான பெரும்பாலான கொடுமைகள் பதிவு செய்யப்படாதவையாகும். தேசிய குற்றப்பதிவுப் பிரிவு இறுதியாக திரட்டிவைத்துள்ள புள்ளிவிபரங்கள் 2007 ஆம் ஆண்டுக்குரியவையாகும். கணவன் மற்றும் கணவனின் உறவினர்களால் இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து 2007 ஆம் ஆண்டில் 75 ஆயிரத்து 930 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்படுபவர்களுக்கு தண்டனை வழங்குவது வெறும் 20 விழுக்காடு வழக்குகளில்தான் இருந்துள்ளது. வரதட்சணை காரணமாக கொலை செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கையோ 8 ஆயிரத்து 93 ஆகும். இந்த வரதட்சணைக் கொலை வழக்குகளிலும் மூன்றில் இரண்டு பங்கு வழக்குகளில் குற்றவாளிகள் தப்பித்து விடுகின்றனர். பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் என்று கணக்கில் எடுத்தால் 2007 ஆம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 2 லட்சத்தைத் தொடுகிறது.


1961 ஆம் ஆண்டிலிருந்து வரதட்சணை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியா எழுகிறது என்று கூறினார்கள். இந்தியா எழுந்ததோ இல்லையோ வரதட்சணை எழுந்தது. வரதட்சணையின் பரிணாம வளர்ச்சி அதிர்ச்சியூட்டும் வகையில்தான் இருந்தது. அண்மையில் ஆந்திராவில் நடந்த ஆய்வில், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். மணமகனாக இருந்தால் உச்சபட்ச விலை அவர்களுக்கு விதிக்கப்படுகிறது என்ற தகவல்கள் அம்பலமாகின. விலை உயர, உயர வரதட்சணை தராத அல்லது கொண்டு வராத பெண்கள் மீதான தாக்குதல்களும் அதிகரிக்கின்றன. அவ்வாறு தாக்கப்பட்ட மோனிகா என்ற பெண் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார். தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் தனது கணவர் விகாஸ் சர்மா, விகாசின் பெற்றோர்கள் பாஸ்கர் லால் சர்மா மற்றும் விமலா ஆகியோர் மீது கொடுமை செய்யததற்காகவும், நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் நடந்து கொண்டதற்காகவும் அவர் வழக்கு தொடுத்திருந்தார்.


எட்டி உதைத்து கொடுமை பண்ணினார் என்றும், விவாகரத்து செய்ய வைத்து விடுவேன் என்றும் தனது மாமியார் குறித்து மோனிகா புகார் கூறியிருந்தார். ஆனால் மாமியார் எட்டி உதைப்பதோ, விவாகரத்து செய்ய வைத்து விடுவோம் என்று கூறுவதோ 498ஏ பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களல்ல என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. இந்த தீர்ப்பின் கருத்தை விளக்கிக் கூறுமாறும், அதை மறுபரிசீலனை செய்யக் கோரியும் தேசிய மகளிர் ஆணையம் மனு போட்டது. அந்த மனுவை ஏற்றுக்கொண்டு விசாரிக்க தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் எஸ்.எச்.கபாடியா, அல்டமஸ் கபீர் மற்றும் சிரியாக் ஜோசப் ஆகியோர் முடிவு செய்துள்ளனர். வழக்கில் தொடர்புள்ள இரு தரப்புக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


இந்தத்தீர்ப்பு வந்தவுடன், பெண்களின் துயரங்களை இது அதிகப்படுத்தவே செய்யும். பெண்களின் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு சட்ட மசோதாக்களின் பலன்களை நிராகரித்துவிடும் என்று பிருந்தா காரத் குறிப்பிட்டார். சட்ட அமைச்சகத்துக்கு அவர் எழுதிய கடிதத்தில், கொடுமைகள் குறித்து நீதித்துறைக்கு இத்தகைய கருத்து இருப்பது குடும்ப வன்முறைகளுக்கு உரிமம் வழங்குவது போலாகிவிடும். மனைவிகளை அடிப்பவர்களுக்கு இந்தத் தீர்ப்பு ஊக்குவிக்கும். பெண்களின் உயிரையும், கவுரவத்தையும் காக்க அரசும், நாடாளுமன்றமும் எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகள் வீணாகிப் போய்விடும் என்று குறிப்பிட்டிருந்தார்.


பிருந்தா காரத்தின் கருத்துகளையே தேசிய மகளிர் ஆணையத்தில் மனு பிரதிபலிக்கிறது. 498ஏ பிரிவு என்பது வெறும் வரதட்சணைக் கொடுமை குறித்தது மட்டும்தான் என்று பார்த்து விடக்கூடாது. அது வரதட்ணைக் கொடுமை மற்றும் அந்தக் கோரிக்கையால் ஏற்படும கொடுமை ஆகியவற்றோடு வரதட்சணை கோராமல் புகுந்த வீட்டாரால் நடத்தப்படும் கொடுமைகளையும்கூட சேர்த்தே பார்க்க வேண்டும் என்று அந்த மனு கூறுகிறது. அதனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அந்த மனு முன்வைக்கிறது. இந்த மனுவை விசாரணைக்கு நீதிபதிகள் எடுத்துக் கொண்டுள்ளதால் உச்சநீதிமன்றத்தின் கருத்து மாறலாம் என்ற எதிர்பார்ப்பு மாதர் சங்கங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Friday, March 19, 2010

ஜீவனிழந்து கிடக்கும் யமுனை...!!!



மீத்தேன் வாயு மெதுவாக வெளிக்கிளம்பிக் கொண்டிருக்கிறது. தேங்கிக் கிடக்கும் குட்டை போலக் காட்சியளிக்கும் இடங்களில் முட்டை விடுவது போல குமிழியை உருவாக்கி பிறகு உடைந்து அதன் மூலம் மீத்தேன் வெளியேறிக் கொண்டிருக்கிறது. அருகில் சென்றாலே குடலைப் பிடுங்கும் அளவுக்கு நாறிப் போய்க்கிடக்கிறது. புனித நதி என்றும், இந்துக்களால் கடவுள் என்றும் அழைக்கப்படும் யமுனை நதிதான் இவ்வாறு சீரழிந்துபோய்க்கிடக்கிறது. ஒரு உணர்ச்சிப் பிரவாகத்தோடு ஓடிக்கொண்டிருந்தது போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்த யமுனை நதி, ஜீவனின்றிக் கிடப்பதுபோல தற்போது காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.


இத்தனைக்கும் மார்ச் 22 அன்று உலக தண்ணீர் தினத்தை உலகமே அனுசரிக்கப்போகிறது. ஆனாலும் இந்தியாவின் பெரிய ஆறுகளில் ஒன்றான யமுனை தனது உண்மைத்தன்மையை இழந்து நிற்கிறது. புதுதில்லியின் உயிர்நாடியான யமுனை நதி பெரும் அளவுக்கு மாசுபட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் போய்ச் சேராததற்கு காரணம், நதி தெரியாத அளவிற்கு பெரிய, பெரிய சுவர்களும், மேம்பாலங்களும், சாலைகளும், ஆலைகளும் கட்டப்பட்டுள்ளதாகும். ஒரு சில இடங்களில் மட்டும்தான் ஆற்றிற்கு மக்கள் செல்லும் வாய்ப்பு உள்ள நிலை ஏற்பட்டுள்ளது. புதுதில்லியைச் சேர்ந்த மக்களில்கூட 60 விழுக்காட்டினர்தான் யமுனை நதி ஓடுவதைப் பார்த்திருக்கிறார்கள் என்று கணக்கு சொல்கிறது °வேச்சா என்ற தொண்டு நிறுவனம். புதுதில்லியின் மக்கள் தொகை 1 கோடியே 40 லட்சமாகும்.


யாருமே யமுனையைப் பார்க்கவில்லை என்றால் அதை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் என்று கேள்வி எழுப்புகிறார் ஸ்வேச்சா அமைப்பின் செயல் இயக்குநரான விமலேந்து கே. ஜா. தில்லியை வந்தடையும்வரை யமுனை மிகவும் அழகாகத்தான் இருக்கிறது. தலைநகருக்கு வெளியே நீர் மிகவும் தெளிவாக உள்ளது. பறவைகள் நீருக்கு மேல் பறந்து கொண்டிருப்பது கொள்ளை அழகாகக் காட்சியளிக்கிறது. வலையைப் போட்டு மீன்களை அள்ளும் மீனவர்கள் மகிழ்ச்சியோடு திரிந்து கொண்டிருக்கிறார்கள். இங்கிருந்துதான் ஆலைக்கழிவுகள் மற்றும் ஒட்டுமொத்த தில்லியின் சாக்கடைகள் யமுனையில் கலக்கத் துவங்குகின்றன. இந்தக் கலக்கலுக்கு முன்பே விவசாய நோக்கத்திற்காக அரியானா கட்டியுள்ள அணை மூலம் தங்களுக்குத் தேவையான நீரை அந்த மாநிலம் திருப்பிக் கொள்கிறது.


இமயமலையில் உருவாகி கங்கையில் சங்கமமாகும் யமுனையின் மொத்த நீளம் 1,370 கிலோ மீட்டராகும். இதில் வெறும் 22 கி.மீ. தூரம்தான் புதுதில்லியில் உள்ளது. ஆனால் யமுனை நதியை மாசுபடுத்துதலில் 80 விழுக்காடு பணிகள் இந்த 22 கி.மீ. தூரத்தில்தான் நடைபெறுகின்றன. தலைநகரின் பல பகுதிகளிலுமிருந்து 18 பெரிய சாக்கடைக் கால்வாய்கள் யமுனை நதியில் வந்து சேருகின்றன. யமுனையில் உள்ள ஆக்சிஜனில் பெரும்பகுதியை இந்தக் கழிவுகள் காலி செய்து விடுகின்றன. இந்த தண்ணீரால் விலங்குகளைக் கூட கழுவிவிடக்கூடாது என்று தில்லி நிர்வாகம் சொல்லும் அளவுக்கு நதியின் நச்சுத்தன்மை அதிகரித்துள்ளது.


மேலும் ஒன்பது விழுக்காடு மாசு என்பது தில்லியைத் தாண்டியவுடன் ஆக்ராவில் நடக்கிறது. இந்த யமுனைக்கரையில்தான் உலகக் புகழ்பெற்ற தாஜ்மகால் அமைக்கப்பட்டுள்ளது. யமுனையின் தாக்கம் அதோடு நின்று விடுவதில்லை. மற்றொரு புனித நதி என்று அழைக்கப்படும் கங்கையில் கலந்து அதை மேலும் மாசுபடுத்தி விடுகிறது. தில்லியின் குடிநீர்த் தேவையை யமுனைதான் பூர்த்தி செய்து வருகிறது. ஆனால் தேவைப்படும் நீரை தலைநகருக்குள் நுழைவதற்கு முன்பே எடுத்துக் கொள்கிறார்கள். தலைநகருக்குள் இருக்கும் பல்வேறு சுத்திகரிப்பு நிலையங்களும் சரியாக வேலை செய்யவில்லை. இது மாசுபடுதலை அதிகரித்துவிடும் என்பதுதான் சுற்றுச்சூழல் வல்லுநர்களின் கருத்தாகும்.


தலைநகரில் வீடில்லாமல் தவிப்பவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. குளிர் தாங்காமல் வீடில்லாத ஏழை மக்கள் உயிரிழக்கிறார்கள் என்பதால்தான் அந்த உத்தரவு இடப்பட்டது. அவர்களின் பெரும்பாலானவர்கள் இந்த யமுனை நதிக்கரையில்தான் தங்குகிறார்கள். மாசுபடிந்து கிடக்கும் யமுனைதான் அவர்களுக்கு குளியலறை மற்றும் குடிநீர்த்தொட்டி. அவர்களைப் பொறுத்தவரை தண்ணீரே இல்லாமல் இருப்பதைவிட நாறிப்போயிருக்கும் தண்ணீரே பரவாயில்லை என்பதுதான் நிலை. தில்லியைத் தாண்டிய பிறகு யமுனை பாய்ந்து ஓடும் அனைத்து மாநிலங்களுக்கும் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. நதியைச் சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்ட பணம் எல்லாம் எங்கு சென்றது என்பதே தெரியவில்லை. நம்முன் அதிகமாக மாசுபட்டு நிற்கும் யமுனையே அதற்கு சாட்சி என்கிறார் விமலேந்து ஜா.

Sunday, March 14, 2010

ஓ... மகசீயா.. ஓ.. மகசீயா...


தமிழ்ப்படம்


படத்தின் நாயகர் அழகிரி அடிக்கடி "தமிழ்... தமிழ்" என்று சொல்லியவாறு வலம் வருகிறார். "ஓ.. மகசீயா" பாடலை அவர் பாடும்போது பன்மொழிப்புலவரைப் போன்ற ஒரு பெருமிதம் முகத்தில் தெரிகிறது. பல பாத்திரங்களை ஒரே படத்தில் கொடுக்க முனைந்திருக்கிறார். இடைத்தேர்தல்கள் அடிக்கடி வருவதால் வாக்கு வித்தியாசங்களைக் கணக்கிட நிரந்தரமாக ஒரு கால்குலேட்டரை பாக்கெட்டிலேயே வைத்திருப்பது அபாரம். 2011 தேர்தலுக்குப்பிறகு அவர்கள் இருக்க மாட்டார்கள், இவர்கள் இருக்க மாட்டார்கள் என்று படம் முழுவதும் சொல்லிக் கொண்டே இருக்கிறார். தில்லிக்கு விமானம் ஏறும் சோகக்காட்சிகளிலும் வெளுத்து வாங்குகிறார்.

**********

விண்ணைத் தாண்டி வருவாயா?

விலைவாசியைச் சுற்றிதான் கதை வளைய வருகிறது. எந்த பொருளின் விலை அதிவேகமாக ஏறுகிறது என்று போட்டி நடப்பது போன்ற காட்சிகள் நகைச்சுவைக் காட்சிகளாக வைக்கப்பட்டிருந்தாலும், பார்ப்பவர்களின் வயிறையும் எரியச் செய்கிறது. துணைக்கதையாக, முரளிதியோரா, பிரணாப் காட்சிகள். இவர்தான் எண்ணெய் விலையை ஏற்றப்போகிறார் என்று எல்லோரும் தியோராவையேப் பார்த்துக் கொண்டிருக்கும்போது பிரணாப் அதிரடியாக விலையை ஏற்றும் காட்சி திகில்தான். தியோராவை நம்பி வசனம் பேசிய துணை நடிகர்களான கருணாநிதி மற்றும் மம்தா ஆகியோர் முழிக்கும் காட்சி சிரிப்பூட்டுகிறது.

**********

தீராத விளையாட்டுப்பிள்ளை

சண்டைக்காட்சிகள் அதிகமாக இடம் பெற்றுள்ளன. ஆன்டி-ஹீரோ என்பார்களே... அதாவது வில்லன்தான் கதைக்கு நாயகன். அதுதான் இந்தப்படம். அப்பாவிகளாகப் பார்த்து வில்லன் கூட்டம் போட்டுத்தள்ளுகிறது. கதாநாயகன் கிஷன்ஜியோ, கொலைகளை இயக்குகிறார். தொலைபேசிகளில் பேசுகிறார். "93 கொலைகளை செய்துள்ளேன். ஆனால் நான் மென்மையானவன்" என்று அவர் சொல்லும்போது தோளில் சாய்ந்திருக்கும் துப்பாக்கி நக்கலாக சிரிப்பதாக இருக்கும் கிராபிக்ஸ் காட்சி அபாரம். 25ஆம் தேதி முதல் நாங்கள் இரண்டு நாட்களுக்கு சண்டையை நிறுத்துகிறோம் என்று 29 ஆம் தேதி அவர் சொல்வதாக அமைந்துள்ள காட்சி தியேட்டரையே சிரிப்பலையில் ஆழ்த்துகிறது. படத்தின் இசைக்கு மம்தா பானர்ஜி பொறுப்பேற்றுள்ளார்.

**************
அசல்
யார் அசல் என்பதைக் கண்டுபிடிக்க படத்தைப் பார்ப்பவர்களுக்கு போட்டி வைத்து விடுகிறார்கள். மகளிருக்கு 33 விழுக்காடு மசோதா வருகிறது. இதற்கு யார் எதிரி என்பதுதான் கதை. சரத் யாதவ் தலைமறைவே ஆகி விடுகிறார். லாலு, முலயாம் ஆகியோர் வெளிப்படையாகவே மிரட்டுகிறார்கள். இவர்கள்தான் எதிரி என்று முடிவுக்கு வருவதற்குள் மசோதாவைக் கொண்டு வந்தவரே, வந்த வேகத்தில் திரும்பவும் ஓடிவிடுகிறார். ஓஹோ... இவர்கள்தான் எதிரிகள் என்பதற்குள், காட்சி மாறுகிறது. அப்பாடா... அவர்களே திரும்ப ஓடி விட்டார்கள் என்று நெஞ்சைத் தடவியவாறு நிற்கிறார் அருண் ஜெட்லி. கடைசிக்காட்சியில், வாருங்கள் பேசுவோம் என்று லாலு, முலயாம் ஆகியோரின் தோள்கள் மீது கைகளைப் போட்டவாறு அழைத்துச் செல்கிறார் மன்மோகன்சிங். மகிழ்ச்சிகரமான முடிவை வைக்கவேண்டிய கட்டாயம் இயக்குநர் சோனியா காந்திக்கு இருந்திருக்கிறது என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது.
************
குரு சிஷ்யன்

குருவாக அத்வானியும், சிஷ்யராக நரேந்திர மோடியும் நடித்துள்ளனர். இப்ப மாநிலத்துக்குள்ளயே அடக்கி வாசிக்குற மாதிரி, நான் பொறுப்புல இருந்தப்ப இருந்துருக்கலாமேன்னு மோடியைப் பார்த்து அத்வானி கேட்பதுபோல படம் துவங்குகிறது. அனல் பறக்கும் வசனங்கள் படத்தில் உள்ளன. நான் இல்லேனா நீங்க எம்.பி.கூட கிடையாதுன்னு குருவைப் பார்த்து சொல்லும்போது சிஷ்யரின் முகத்தில் ஆக்ரோசம். அந்த காட்சியில் மோடியின் தயவில் எம்.பி. பதவி பெற்ற மற்றொருவரான அருண் ஜெட்லியைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறார் சுஷ்மா சுவராஜ். இதைப்பற்றி யோசிக்காமல் கோட்லா மைதானம் பற்றிய கவலையில் இருக்கிறார் அருண் ஜெட்லி. இடையிடையே நகைச்சுவைக் காட்சிகள். நான் குருவும் இல்ல...எனக்கு சிஷ்யனும் இல்லனு சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசும் நிதின் கட்காரி கலகலப்பூட்டுகிறார்.
***********

Wednesday, March 10, 2010

தேங்கிய வழக்குகளை தீர்க்க 320 ஆண்டுகள்...!!


தற்போதுள்ள நிலையில் நாடு முழுவதும் தேங்கிக்கிடக்கும் வழக்குகளைத் தீர்க்க இந்திய நீதித்துறைக்கு 320 ஆண்டுகள் ஆகும் என்று ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதி வி.வி.எஸ்.ராவ் கூறியுள்ளார்.

உயர்நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளையும் சேர்த்து நாடு முழுவதுமுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் 3 கோடியே 12 லட்சத்து 80 ஆயிரம் வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன. குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படாமலும், அப்பாவிகளுக்கு நீதி கிடைக்காமலும், கிடைக்க வேண்டிய தண்டனையை விட கூடுதல் தண்டனை அனுபவிப்பதும் தொடர்கதைகளாகி உள்ளன. ஆந்திரப் பிரதேச நிர்வாகத் தீர்ப்பாயக் கூட்டமொன்றில் பேசிய வி.வி.எஸ்.ராவ், இந்திய நீதித்துறையில் தேங்கிக் கிடக்கும் அனைத்து வழக்குகளையும் நாம் கணக்கில் எடுத்துக் கொண்டால், நாட்டிலுள்ள ஒவ்வொரு நீதிபதியின் வசமும் சராசரியாக 2 ஆயிரத்து 147 வழக்குகள் இருக்கும் என்கிறார். இந்த சராசரி ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளன.

இதற்குப் பிரதான காரணம், அனைத்துத்துறைகளிலும் சொல்லப்படும் ஆட்பற்றாக்குறை என்ற அதே காரணம்தான். அரசால் ஒப்புதல் தரப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 641 ஆகும். இதில் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையான 630 என்பதும் அடங்கும். ஆனால் தற்போது வெறும் 14 ஆயிரத்து 576 நீதிபதிகள்தான் உள்ளனர். பத்து லட்சம் பேருக்கு 10.5 நீதிபதிகள் என்கிற முறையில் நாட்டின் நீதித்துறையின் நிலைமை உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி வி.வி.எஸ்.ராவ், 2002 ஆம் ஆண்டிலேயே இது குறித்து உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. பத்து லட்சம் பேருக்கு 50 நீதிபதிகள் என்பதே சரியாக இருக்கும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது என்கிறார்.

மேலும் பேசிய அவர், 2030 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 150 கோடியாகவோ அல்லது 170 கோடியாகவே இருக்கும். பத்து லட்சம் பேருக்கு 50 நீதிபதிகள் என்பது அப்போது நிறைவேறினால் நீதிபதிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரமாக உயர்ந்துவிடும். ஆனால் அவர்கள் கைவசமோ 30 கோடி வழக்குகளுக்கு மேல் இருக்கும். எழுத்தறிவு விகிதம் மற்றும் விழிப்புணர்வு அதிகரிப்பதால் வழக்குகளும் அதிகரித்து வருகின்றன என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. கேரளாவை இதற்கு எடுத்துக்காட்டாகக் காட்டலாம். மக்கள் தொகையின் ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் சராசரியாக 28 புதிய வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் பதிவாகி வருகின்றன என்று குறிப்பிட்டார்.