Tuesday, April 13, 2010

"அங்காடித் தெரு"வாகும் பொதுத்துறை உருக்காலை!


தனது நாசகர உலகமய, தனியார் மய மற்றும் தாராளமயப் பாதையில் மத்திய அரசு தீவிரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் எதையும் அரசு புதிதாக உருவாக்கவில்லை. அதோடு ஏற்கெனவே இருந்துகொண்டிருக்கும் பொதுத்துறை நிறுவனங்களையும் சீர்குலைக்கும் வேலையில் இறங்கியுள்ளது. நிரந்தர மற்றும் முறையான ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகிறது. இன்றைக்கு, பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களில் நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கையை விட ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.


இன்றைக்கு ஏராளமான பணத்தை ஒவ்வொருவரும் தங்கள் கல்விக்காக செலவழித்து வருகிறார்கள். பத்தாம் வகுப்பு, ஐடிஐ, பட்டயப்படிப்புகள் மற்றும் பட்டப்படிப்புகள் என்று பல்வேறு தடைகளைத் தாண்டி தங்கள் படிப்புகளை முடிக்கிறார்கள். சரியான வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையில் அமரும் இவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலை பார்க்க சம்மதிக்கிறார்கள். ஒப்பந்ததாரர்கள் மூலமாக இந்தத் தொழிலாளர்களை நிர்வாகம் சுரண்டி எடுக்கிறது. அவர்களுக்குத் தரப்படும் சம்பளமோ அற்பமானதாகும். அதோடு, தற்போது எழுந்துள்ள நெருக்கடி நிலைமை, இருப்பதையும் பிடுங்கிவிடும் அபாயத்தை இந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் முன்பு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.


விசாகப்பட்டினம் உருக்கு ஆலையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இந்த விபரங்களை உறுதிப்படுத்துகிறது. இந்த ஆலையில் பணியாற்றும் 300 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மத்தியில் சிஐடியு சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பணியிடத்தில் கேள்வி கேட்டால் பதில் சொல்ல மாட்டார்கள் என்பதற்காக அவர்கள் வசிக்கும் இடங்களில் போய் ஆய்வு நடத்தினார்கள். விசாகப்பட்டினத்தில் உள்ள அப்பிகொண்டா மற்றும் சப்பாவரம் ஆகிய பகுதிகளில் இந்த ஆய்வு நடந்தது. அவர்களின் ஊதியம், பணியால் உண்டாகும் நோய்கள், பொருளாதார நிலை, நவீனமயத்தின் பாதிப்பு, வாழ்விடத்தில் உள்ள பிரச்சனைகள் மற்றும் சமூகப் பிரச்சனைகள் ஆகியவற்றைச் சுற்றியே கேள்விகள் அமைந்திருந்தன.


சுமை தூக்கும் பணியாளர்களின் ஊதியம் பரிதாபமாக உள்ளது. இந்தப்பணியில் இருப்பவர்களில் பலர் மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் பெறுகிறார்கள். அதிகபட்சமாக ஒரு சுமை தூக்கும் பணியாளரின் சம்பளம் வெறும் 4 ஆயிரம் ரூபாய்தான். இந்த அதிகபட்ச ஊதியம்கூட மாநில அரசு நிர்ணயித்திருக்கும் குறைந்தபட்ச கூலியை விடக்குறைவானதாகும். அதிலும் வேலை இருந்தால்தான் சம்பளம் கிடைக்கும். வேறு எந்த சலுகைகளும் அவர்களுக்கு இல்லை. கூடுதல் நேரம் வேலை செய்தால் அதற்காகத் தனி ஊதியம் எதுவும் கிடையாது. வேலை செய்யும் நாட்கள் குறைவாக இருந்தால் பி.எப் மற்றும் ஈ.எஸ்.ஐ. பிடித்தம் எல்லாம் கிடையாது. அதனால் முடிந்த அளவிற்கு இந்தப்பிடித்தம் இல்லாத அளவிற்கு நாட்களைக் குறைக்கும் வேலையையும் நிர்வாகம் செய்துவிடுகிறது.


இந்தப் பொதுத்துறை ஆலையில் 25 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். ஆலைக்குள் 10 ஆயிரம் பேரும், கட்டுமானப்பணியில் 15 ஆயிரம் பேரும் உள்ளனர். ஆலைக்குள் பணியாற்றும் 10 ஆயிரம் பேரில் சுமார் 4 ஆயிரம் பேர் நிரந்தரப்பணியாளர்கள் போலவே பணியாற்றுகிறார்கள். அவர்களுக்குத் தரப்படும் பணி, வேலை நேரம், பொறுப்பு ஆகிய நிரந்தரப் பணியாளர்களுக்குள்ளது என்றாலும் சம்பளம், படிகள் மற்றும் இதர சலுகைகள் மட்டும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இவர்களின் பெரும்பாலானவர்கள் 20 முதல் 30 வயதுக்கு சொந்தக்காரர்களாவர். தார், கால்சியம், அம்மோனியா சல்பேட், அசிட்டிலின் ஆகியவற்றை இவர்கள் கையாளுவதால், இளம் வயதிலேயே தோல் மற்றும் தொண்டை தொடர்பான வியாதிகள், எலும்புருக்கி நோய் மற்றும் முகங்களில் ஏற்படும் மாறுதல்கள் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.


700 டிகிரி முதல் 1,000 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பம் உள்ள இடங்களில் இவர்கள் பணியாற்றுகிறார்கள். 60 முதல் 80 மீட்டர் உயரத்தில் பணிபுரிபவர்களில் பலர் விபத்துக்கு உள்ளாகிறார்கள். கிடைக்கும் வருமானம் போதாததால் கிட்டத்தட்ட அனைத்து தொழிலாளர்களுமே கடனில் மூழ்கி விடுகிறார்கள். போதாக்குறைக்கு, நவீனமயம் வேறு. இதனால் ஆய்வு செய்யப்பட்ட 300 பேரில் சுமார் 50 பேருக்கு தொடர்ச்சியாக வேலை கிடைப்பதில்லை. சில சமயங்களில் ஒரு மாதம், இரண்டு மாதம் என்று வேலை கிடைக்காமல் காத்திருக்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் அவர்களுக்கு சம்பளம் கிடையாது. அதோடு, தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் அண்டை மாவட்டங்களிலிருந்து வந்தவர்களாவர்.


அவர்களிடம் ரேசன் அட்டைகள் கிடையாது. குழந்தைகளின் கல்விக்காக மாதாமாதம் 200 முதல் 300 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு வீட்டு வாடகைக்கே போய்விடுகிறது. இதெல்லாம் போதாதென்று ஏறிக்கொண்டே போகும் விலைவாசியும் இவர்களை வாட்டி எடுக்கிறது. அங்காடித் தெரு திரைப்படத்தில் ஒரு வசனம் வருகிறது. சொந்த ஊர்ல பிச்சை கூட எடுக்க முடியாது என்று. விசாகப்பட்டின உருக்காலையில் பணியாற்றும் பலருக்கும் அந்த நிலைதான். இவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தற்போது சிஐடியு இறங்கியுள்ளது.

1 comment: