Tuesday, December 28, 2010

மதம் மாறியும் ஒழியாத சாதிப்பீடை..!



சென்னையில் நல்ல வேலையில் இருப்பவர் ஜெயன். கிறித்தவ மதத்தைச் சேர்ந்த இவர் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் பல திருமணப்பதிவு மையங்களிலும் பதிவு செய்து இருந்தார்.

அவருடைய வயதுக்கேற்ப ஒரு பெண்ணின் விபரங்கள் தமிழ்மேட்ரிமோனி.காம் இணையதளத்தில் கிடைத்தது. மதம் என்பதற்கு எதிராக கிறித்தவர்-புரோட்டஸ்டன்ட் என்று அந்தப்பெண் குறிப்பிட்டிருந்தார். அடுத்தபடியாக, சாதி என்பதற்கு எதிராக சாதி ஒரு தடையில்லை என்பதாக (caste is no bar) என்று குறிப்பிட்டதைப் பார்த்தவுடன் ஜெயனுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கிறது. ஆனால் அது ஒரு விநாடி கூட நிலைக்கவில்லை. சாதி ஒரு தடையில்லை என்பதற்கு அடுத்து அடைப்புக்குறிகளுக்குள் எஸ்.சி,எஸ்.டி நீங்கலாக(SC/ST excuse) என்று குறிப்பிடப்பட்டு இருந்திருக்கிறது.

மதம் மாறியும் இந்தச் சாதிப் பீடை ஒழிய மாட்டேன்கிறதே என்று கோபமடைந்த ஜெயன், அந்தப் பெண்ணின் தொடர்பு எண்ணை டயல் செய்து ஆத்திரத்துடன் கேள்விகள் எழுப்பி இருக்கிறார். “இந்த சாதியில் மாப்பிள்ளை வேண்டும் என்று கேட்கலாம். இந்த சாதியில் வேண்டாம் என்று சொல்வதற்கு நீங்கள் யார்?” என்ற அவரது குமுறல் மிக நியாயமானது. ஆனால் மறுமுனையில் அந்தப் பெண்மணியோ எந்தவிதக் குற்றவுணர்வும் இல்லாமல் பேசியிருக்கிறார். எல்லா ஜாதிகளையும் ஒப்புக்கொள்ள முடிகிற ஒருவர், எஸ்.சி/எஸ்.டி ஜாதியை மட்டும் விலக்கி வைப்பது பெரும் அவமானமாக இருக்கிறது.

சாதி தடையில்லை என்று போட்டுவிட்டு, இவ்வாறு எஸ்.சி மற்றும் எஸ்.டியாக இருந்தால் வேண்டாம் என்பதை குறிப்பிடும்படியாக மென்பொருளை (SC/ST excuse) உருவாக்கியிருக்கும் திருமணப்பதிவு இணையதளம் முதலில் கண்டிக்கப்படவேண்டும் என்கிறார் ஜெயன். உண்மைதான். இவ்வகை தீண்டாமையை, ஒரு தெரிவாக (option) ஆக இணையதளத்தில் வடிவமைத்திருப்பது, சமூகத்தில் இருக்கும் அழுக்குகளை ஒப்புக்கொள்வதாயும், மேலும் வளர்ப்பதாயும் இருக்கிறது.

பத்திரிகைகள் அலுவலகங்களுக்கும் தொலைபேசியில் கோபத்தோடு பேசிய ஜெயன், இது ஒரு நவீன தீண்டாமை என்று பொரிந்து தள்ளியிருக்கிறார். இது தனது முதல் அனுபவமல்ல என்கிறார் அவர். கிறித்தவ திருமணத் தகவல் தொடர்பு மையங்கள் சிலவற்றிலும், சாதி பார்க்க மாட்டோம், ஆனால் தலித் என்றால் வேண்டாம் என்று கூறும் பழக்கம் இருக்கிறது என்று வேதனையோடு குறிப்பிடுகிறார் அவர்.

நகரம் விரிவடைகையில் தலித்துகளை சிறைப்படுத்தும் ரியல் எஸ்டேட்காரர்களின் சுவர்கள், சாதி வெறியர்களின் முன்பாக தலித்துகள் செல்போனில் பேசவியலாமை போன்ற நவீன தீண்டாமைக் கொடுமைகளின் பட்டியலில் திருமணப் பதிவில் சாதி தடையில்லை என்று கூறிவிட்டு தலித்-பழங்குடி வேண்டாம் என்று சொல்லும் கொடுமையும் சேர்கிறது.

Monday, December 20, 2010

"பொறுக்கத்" துவங்கிய புரட்சிக்காரர்கள்!




என்.டி.சி(தேசிய பஞ்சாலை கழகம்) மில் தொழிற்சங்க அங்கீகாரத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வெறும் மூவாயிரம் வாக்காளர்கள்தான் என்றாலும் பரபரப்பாகவே இது நடந்தது. ஓட்டுப்பொறுக்கிகள் என்று மற்ற கட்சிகளைப் பார்த்துச் சொல்லி வந்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வாக்குகள் கேட்டது(பொறுக்கியது!!) பலரின் கண்களை விரிய வைத்தது. இதையும் அவர்கள் பெருமையாகவே சொல்லிக் கொண்டார்கள். "பார்த்தீர்களா... எங்களை மக்கள் கவனிக்கிறார்கள்" என்று.

முடிவுகளின்படி நான்கு தொழிற்சங்கங்கள் பத்து விழுக்காட்டிற்கு மேல் வாக்குகள் வாங்கியுள்ளன. தொமுச(திமுக) 650 வாக்குகளும், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் சங்கம் 477 வாக்குகளும், சிஐடியு 381 வாக்குகளும், ஐ.என்.டி.யு.சி 200 வாக்குகளும் பெற்றன. இந்த சங்கங்கள்தான் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடியும். 12 சங்கங்கள் தேர்தலில் போட்டியிட்டன.

தேர்தல் முடிவு பற்றி புளகாங்கிதத்துடன் எழுதியுள்ள வினவு, ஒரே ஒரு மில்லில்தான் சங்கமே இருந்தது. தேர்தல் நடைபெற்றதால் மற்ற மில்களில் உள்ள தொழிலாளர்களும் எங்களுக்கு வாக்களித்தார்கள் என்று குறிப்பிடுகிறது. எவ்வளவு பெரிய உண்மை. தேர்தலில் நின்றதால் மற்ற மில்களில் உள்ளவர்களையும் இவர்களால் திரட்ட முடிந்திருக்கிறது. தொழிற்சங்கப் பேச்சுவார்த்தையில் ஒரு பிரதிநிதிக்கான உரிமையைப் பெற்றிருப்பதால் அதை தொழிலாளர்களின் பணி நிரந்தரத்திற்கான கால்கோள் என்று வர்ணித்திருக்கிறார்கள்.

477 வாக்குகள் வாங்கினாலே இவ்வளவு நம்பிக்கையை ஏற்படுத்த முடியுமானால், நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் நின்று லட்சக்கணக்கான வாக்குகளை வாங்கி, ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்கே கால்கோள் விழா நடத்தலாமே...? அதைவிட்டுவிட்டு அந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு மக்களைத் திரட்டிக் கொண்டிருப்பவர்களை ஓட்டுப் பொறுக்கி என்று விமர்சித்துவிட்டு, "நாங்க 477 ஓட்டு வாங்கிட்டோம்ல" என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொள்வதுதான் "புதிய" ஜனநாயகமா?

Saturday, December 18, 2010

பொங்கலுக்கும் வராது காவலன்? ஏகபோகத்தின் பிடியில் தமிழ்த்திரையுலகம்!

ஏற்கெனவே மூன்று முறை தேதி அறிவிக்கப்பட்டு, கடைசியாக அறிவிக்கப்பட்ட டிசம்பர் 17 அன்று வெளியிட திரையரங்குகள் கிடைக்காது என்ற நிலையில் பொங்கலுக்கு வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது அப்படக்குழுவினரின் அந்த ஆசையிலும் மண் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வரின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள் திரையுலகை ஆட்டிப்படைக்கின்றன என்ற குற்றச்சாட்டு அண்மைக்காலத்தில் பெரும் அளவில் எழுந்துள்ளது. அப்படி யெல்லாம் இல்லை என்று கூறி இந்தப்படங்கள் எல்லாம் வெளிவரவில்லையா என்று சில படங்களின் பெயர்களைக்கூட அவர்கள் பட்டியலிட்டதுண்டு. வெளிவந்தது உண்மைதான். ஆனால் இந்த மூன்று நிறுவனங்களின் படங்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் வர வேண்டும் என்பதுதான் நிபந்தனை.

இவர்கள் போடும் பட்டியலில் உள்ள படங்கள் வந்தது உண்மைதான். திரையரங்குகள் கிடைத்தால் போதும் என்று வெளியிட்டு விடுகிறார்கள். தா என்ற படம் வெளியானது. படம் நன்றாகயிருக்கிறது என்பதுதான் பார்த்தவர்களின் கருத்தாகும். ஆனால் ஒரு வாரத்திலேயே படத்தை திரையரங்கு உரிமையாளர்கள் எடுத்துவிட்டார்கள். இதுதான் மற்ற படங்கள் வெளியாகும் உண்மை.

டிசம்பர் 17 ஆம் தேதி காவலன் படம் வெளியாவதற்கும் கூட எந்தத்தடையும் இல்லாமல்தான் இருந்தது. நிபந்தனை என்னவென்றால், டிசம்பர் 23 அன்று மன்மதன் அம்பு படத்திற்கு திரையரங்குகள் மாறிவிட வேண்டும். அதாவது, காவலன் படம் நன்றாக இருக்கிறதா, இல்லையா, மக்கள் ரசிக்கிறார்களா இல்லையா என்பதெல்லாம் கணக்கில் இல்லை. ஆறு நாட்கள்தான் படத்தை ஓட்ட வேண்டும். அதற்கு இடையூறு பண்ண மாட்டார்களாம்.

பொங்கல் என்று சொல்லிவிட்டார்களே ஒழிய, திரையரங்குகளைக் கேட்டபோதுதான் அவையெல்லாம் கிடைக்காது என்று தெரிந்திருக்கிறது. காரணம் வேறொன்றுமில்லை, முதல்வர் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய இளைஞன், சன் குழுமத்தின் ஆடுகளம், தயாநிதி அழகிரியின் சிறுத்தை ஆகிய படங்கள் வருகின்றன என்பதுதான். இந்தப்படங்கள் வெளியாகாத திரையரங்குகள் வேண்டுமானால் காவலனுக்குக் கிடைக்கலாம். இதோடு மன்மதன் அம்பு படத்தையும் அவ்வளவு எளிதில் திரையரங்குகளிலிருந்து எடுக்க விட மாட்டார்கள். இப்படிப்பார்த்தால் காவலன் வெளியீட்டை மீண்டும் தள்ளிவைக்க வேண்டியதுதான்.

பத்திரிகைகளில் வந்துள்ள மற்றொரு செய்தி, திட்டமிட்டே காவலன் படத்தை வெளியிட தடை போடுகிறார்கள் என்று நம்ப வைக்கிறது. காவலன் படத்தை இந்த மூன்று நிறுவனங்களின் ஒன்று கேட்டதாகவும், தர மறுத்ததால்தான் இந்த நெருக்கடி என்பதாகவும் வெளியாகியுள்ள செய்திதான் அது.

Wednesday, December 15, 2010

விக்கிலீக்ஸ் : ஜனநாயக சமூகத்தின் தேவை



ஒரு புதிய வகை இதழியலை விக்கிலீக்ஸ் முன்வைத்துள்ளது. விஞ்ஞான இதழியல் என்பதுதான் அது. மற்ற ஊடக அமைப்புகளோடு இணைந்து செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் நாங்கள் பணியாற்றுகிறோம். அதேவேளையில், அது உண்மையான செய்திதான் என்பதையும் நாங்கள் நிலை நிறுத்துகிறோம். செய்தியை நீங்கள் படிப்பதற்கு விஞ்ஞான இதழியல் அனுமதிப்பதோடு, இணையத்திலேயே "கிளிக்" செய்து அசல் ஆவணத்தையும் பார்த்துக் கொள்ள முடிகிறது. செய்தி உண்மையானதா ? பத்திரிகையாளர் துல்லியமாகச் செய்தியைத் தந்துள்ளாரா? இந்தக் கேள்விகளுக்கான விடைகளின் உண்மைத்தன்மையை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.

ஜனநாயக சமூகங்களுக்கு வலுவான ஊடகத்துறை தேவைப்படுகிறது. அத்தகையதுதான் விக்கிலீக்ஸ். நேர்மையாக அரசு இருப்பதற்கு விக்கிலீக்ஸ்உதவுகிறது. இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்கள் பற்றி சில ஜீரணிக்க முடியாத உண்மைகளை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது. பெருநிறுவனங்களின் ஊழல்கள் பற்றிய செய்திகளையும் வெளியிட்டது. நான் போருக்கு எதிரானவன் என்று மக்கள் கூறியுள்ளார்கள். நான் அப்படியில்லை. சில சமயங்களில் நாடுகள் போரைத் தொடுத்துதான் ஆக வேண்டும். ஆனால் அவை வெறும் போர்கள் மட்டுமே. அந்தப் போர்களைப் பற்றி மக்களிடம் பொய்களைச் சொல்வது, அதன்பிறகு எந்த மக்களிடம் அதைச் சொல்கிறோமோ அவர்களின் உயிரையும் பொருளையும் அந்தப் பொய்களுக்காக அர்ப்பணிக்கச் சொல்வதையும் விட பெரிய தவறு வேறு எதுவும் இருக்க முடியாது.

ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் போர்கள் பற்றிய விபரங்களையோ, அமெரிக்கத் தூதரங்களின் தகவல்களையோ அல்லது விக்கிலீக்ஸ் வெளியிட்ட வேறு எந்த செய்தியையோ நீங்கள் படித்தால், அனைத்து ஊடகங்களும் இத்தகைய செய்திகளை சுதந்திரமாக வெளியிட வேண்டிய முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். அமெரிக்க தூதரகத் தகவல்களை விக்கிலீக்ஸ் மட்டும் வெளியிடவில்லை. பிரிட்டனின் தி கார்டியன், தி நியூயார்க் டைம்ஸ், ஸ்பெயினின் எல் பய்ஸ் மற்றும் ஜெர்மனியின் டெர் ஸ்பீஜெல் ஆகியவையும் இவற்றைப் பிரசுரித்துள்ளன.

ஊருக்கு இளைத்தவன்தான் குறி

ஆனால் இந்த செய்திகளை ஒருங்கிணைத்த விக்கிலீக்ஸ்தான் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தேசத்துரோகம் செய்து விட்டதாக அமெரிக்காவும், அதன் கூட்டாளிகளும் குற்றம் சாட்டியுள்ளார்கள். இத்தனைக்கும் நான் அமெரிக்கக் குடிமகனல்ல, நான் ஒரு ஆஸ்திரேலியக் குடிமகன். அமெரிக்காவின் சிறப்புப் படைகளைக் கொண்டு என்னைப் பிடிக்க வேண்டும் என்று பல அமெரிக்கர்கள் கேட்டுள்ளனர். ஒசாமா பின் லாடனைப் போல் என்னையும் வேட்டையாட வேண்டும் என்கிறார் சாரா பாலின். பன்னாட்டு அபாயம் என்று என்னை அறிவிக்க வேண்டும் என்று குடியரசுக்கட்சி சார்பில் ஒரு மசோதா தயாராகி வருகிறது. கனடா பிரதமர் அலுவலக ஆலோசகர் ஒருவர் தொலைக்காட்சியில் தோன்றி என்னைக் கொலை செய்துவிட வேண்டும் என்கிறார். ஆஸ்திரேலியாவில் இருக்கும் எனது 20 வயது மகனைக் கடத்தி, சித்தரவதைக்குள்ளாக்க வேண்டும் என்று அமெரிக்கர் ஒருவர் வலைத்தளத்தில் கோரியிருக்கிறார்.

இதுபற்றியெல்லாம் எந்தக்கவலையுமில்லாமல் இருக்கும் ஜூலியா கில்லார்டு மற்றும் அவரது அரசு பற்றி ஆஸ்திரேலியர்கள் யோசிக்க வேண்டும். ஆஸ்திரேலிய அரசின் அதிகாரங்கள் அனைத்தும் அமெரிக்காவின் கைவசம் இருப்பது போல் தோன்றுகிறது. எனது பாஸ்போர்ட்டை ரத்து செய்தா அல்லது வேவு பார்ப்பதா அல்லது விக்கிலீக்ஸ் ஆதரவாளர்களை தொந்தரவுக்குள்ளாக்குவதா என்ற வழிகளை ஆஸ்திரேலிய அரசு ஆய்வு செய்து வருகிறது. ஆஸ்திரேலியாவின் அரசு வழக்கறிஞரோ, தன்னால் முடிந்த அளவுக்கு அமெரிக்க விசாரணைக்கு உதவி ஆஸ்திரேலியர்களைக் கப்பலேற்றி அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கான அனைத்து வேலைகளையும் செய்கிறார்.
மற்ற ஊடகங்களைப் பற்றி பிரதமர் கில்லார்டு மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் ஆகியோர் எதுவும் சொல்லவில்லை. ஏனென்றால், கார்டியன், நியூயார்க் டைம்ஸ் மற்றும் டெர் ஸ்பீஜல் ஆகியவை பழமையானது என்பதோடு, பெரிய ஊடக நிறுவனங்களாகும். விக்கிலீக்ஸ் புதியது மற்றும் சிறிய அளவுள்ளதாகும். செய்தி கொண்டு வந்தவரைக் கொலை செய்து உண்மையை மறைக்க கில்லார்டு அரசு விரும்புகிறது. ஆஸ்திரேலிய அரசு மற்றும் அரசியல் பேரங்கள் குறித்த தகவல்களையும் சேர்த்து மூடி மறைக்க முயற்சிக்கிறார்கள்.

கையாலாகாத ஆஸ்திரேலிய அரசு

இவ்வளவு மிரட்டல்கள் எனக்கு வந்திருப்பது குறித்து ஆஸ்திரேலிய அரசு என்ன செய்தது? தனது குடிமகன்களில் ஒருவரைப் பாதுகாக்க ஆஸ்திரேலிய பிரதமர் முயன்றிருப்பார் என்று நினைக்கலாம். அதுதான் இல்லை. பிரதமரும், அரசு வழக்கறிஞரும் பாரபட்சமில்லாமல் பணியைச் செய்ய வேண்டும் என்பது நியதி. தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வேலையில் அவர்கள் இருப்பதால், அதை அவர்கள் செய்ய மாட்டார்கள். ஒவ்வொரு முறை உண்மையை வெளியிடும்போதும், "அய்யோ.. உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும்", "தேசியப் பாதுகாப்பு போச்சு", "படைகளைச் சந்திக்க நேரிடும்" என்றெல்லாம் கூக்குரலிடுகிறார்கள். அதன்பிறகு, விக்கிலீக்ஸ் வெளியிடுவதில் எந்தவித முக்கியத்துவமும் இல்லை என்றும் சொல்கிறார்கள். இதில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்க முடியும். அது எது?

இரண்டுமே கிடையாது. நான்கு ஆண்டுகளாக விக்கிலீக்ஸ் செய்திகளைப் பிரசுரித்து வருகிறது. இந்தக் காலகட்டத்தில் ஒட்டுமொத்த அரசையே மாற்றியிருக்கிறோம். ஆனால் ஒரு தனிநபர்கூட இதனால் பாதிக்கப்படவில்லை. ஆனால், அமெரிக்காவோ, ஆஸ்திரேலியாவின் உதவியுடன், கடந்த சில மாதங்களில் ஆயிரக்காணவர்களைக் கொன்று தீர்த்துள்ளது. ஆப்கானிஸ்தான் போர் பற்றிய விபரங்கள் வெளியானதால் அமெரிக்காவின் உளவு வேலைகளோ அல்லது உளவு உத்திகளோ பாதிக்கப்படவில்லை என்று அமெரிக்க நாடாளுமன்றத்திடம் அந்நாட்டு ராணுவத்துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸ்கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறார். நாம் விபரங்களை வெளிட்டதால் ஆஸ்திரேலியப் படைகளுக்கு எந்த பாதிப்பு ஏற்படவில்லை.

ஆனால் நமது வெளியீடுகள் பல அதிர்ச்சிகரமான தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளன.

* ஈரானைத் தாக்குமாறு சவூதி அரேபிய அரசர் அப்துல்லா அமெரிக்காவைக் கேட்டுக்கொண்டார்.

* இராக் தொடர்பாக பிரிட்டனில் நடத்தப்பட்ட விசாரணை அமெரிக்க நலன்களைப் பாதுகாக்கும்படி இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்தித்தார்கள்.

* நேட்டோ அமைப்பில் மறைமுக உறுப்பினராக ஸ்வீடன் உள்ளது.

* குவாண்டனாமோவில் இருக்கும் கைதிகளை மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா நிர்ப்பந்தித்தது. ஒரு கைதியை ஸ்லோவேனியா ஏற்றுக் கொண்டால்தான் அந்நாட்டு ஜனாதிபதியை ஒபாமா சந்திக்க முடியும் என்று கூறப்பட்டது.

பெண்டகன் ஆவணங்கள் வழக்கில், "சுதந்திர மற்றும் கட்டுப்பாடுகளற்ற ஊடகத்துறையே அரசின் தவறுகளை அம்பலப்படுத்தும்" என்று அமெரிக்காவின் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கான உரிமை அனைத்து வகையான ஊடகங்களுக்கும் இருக்க வேண்டும் என்ற தேவையை விக்கிலீக்சைக் சுற்றி உருவாகியுள்ள நெருக்கடி உணர்த்துகிறது.

ஜூலியன் அசாங்கே

- தி ஆஸ்திரேலியன் நாளிதழில் வெளியான கட்டுரையின் ஒரு பகுதி.

தமிழில் : கணேஷ்
------------




Sunday, November 28, 2010

உள்குத்தில் இறங்குவதுதான் சமூகநீதிப் பாதையா?

தமிழகத்தில் உள்ள அட்டவணை சாதியினரில் மூன்று பிரிவுகள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளவையாகும். பள்ளர், பறையர் மற்றும் அருந்ததியர் ஆகிய பிரிவுகளே அவை. நீண்ட நெடுங்காலமாக சாதி ரீதியான ஏற்றத் தாழ்வை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களின் விளைவாகப் பெற்ற உரிமைகளில் அட்டவணை சாதியினருக்கான இட ஒதுக்கீடும் ஒன்றாகும். மனிதகுலம் சந்திக்கும் எந்த நெருக்கடியைப் பட்டியலிட்டாலும் இந்தியாவைப் பொறுத்த வரை, இந்த அட்டவணை சாதியினர்தான் அதில் அதிக நெருக்கடியைச் சந்தித்தவர்களாக இருக்கிறார்கள்.

மற்றவர்களோடு ஒப்பிடும்போது இந்த நிலை. அட்டவணை சாதியினருக்குள் ஒப்பிட்டுக்கொண்டால், எத்தனை முறை சொன்னாலும் பொருத்தமாக இருக்கும் ஒரு வரி என்னவென்றால், மூட்டைகளில் அடி மூட்டை என்கிற வரிக்குச் சொந்தக் காரர்களாக அருந்ததியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். இட ஒதுக்கீடு மூலம் பலன் பெற்று அட்ட வணை சாதியினரில் ஒரு சிறு பிரிவு முன்னேற முடிந்ததோ, அதுபோன்று உள் ஒதுக்கீடு தரப்பட்டால் அருந்ததியின மக்களில் ஒரு சிறு பிரிவினர் முன்னேற வாய்ப்புள்ளது என்ற கோரிக்கை 26 ஆண்டுகளுக்கு முன்பாக எழுந்தது.

இந்தக் கோரிக்கை காகித அளவில் தான் துவக்கத்தில் இருந்தது. அருந்ததிய சமூக அமைப்புகள் இந்தக் கோரிக்கை யை அந்த சமூகத்து மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றன. 2007 ஆம் ஆண்டில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியால் அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவு கிடைத்தது. வலுவான மக்கள் இயக்கங் கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண் டாமை ஒழிப்பு முன்னணி, மற்றும் அருந்ததிய அமைப்புகளால் நடத்தப்பட்டன. இந்த இயக்கங்களுக்கு அருந்ததிய மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல், மற்ற தரப்பினரிடம் கிடைத்த ஆதரவு அரசிடம் அசைவை ஏற்படுத்தியது. நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில் ஒருநபர் குழு ஏற்படுத்தப்பட்டது. அருந்ததிய மக்க ளின் துயர நிலையைக் கணக்கில் எடுத்துக் கொண்ட அக்குழு, மூன்று விழுக்காடு உள்ஒதுக்கீட்டுக்கு பரிந்துரை செய்தது. சட்டமன்றத்தில் 2009, ஏப்ரல் 29 அன்று ஒப்புதல் தரப்பட்டு, 27.5.2009 அன்று அரசாணை வெளியானது.


இந்த ஒதுக்கீட்டுக்கு காரணங்களாக நீதிபதி ஜனார்த்தனம் அளித்து, அரசு ஏற்றுக்கொண்ட அம்சங்கள் அருந்ததி யருக்கு உள்ஒதுக்கீடு என்பதை முழுமை யாக நியாயப்படுத்துகிறது-

* அரசுப்பணிகளின் ஏ,பி, மற்றும் சி- பிரிவுகளில் அருந்ததியருக்கான பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக இருக்கிறது.

* டி - பிரிவுகளில்தான் அருந்ததியினர் பெரும்பாலும் பணிபுரிகிறார்கள். மனித மலம் அள்ளுவது போன்ற பணியாக இருப்பதால் இதில் மற்ற பிரிவினர் வருவதில்லை. மேலும் இந்தப் பணிகளுக்கு எந்தவித கல்வித்தகுதியும் தேவையில்லை.

* பொதுத்துறை நிறுவனங்களில் நம்ப முடியாத அளவுக்கு அருந்ததிய சமூகத்தினரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இடஒதுக்கீட்டிலும் தலித்துகளில் கொஞ்சம் முன்னேறிய பிரிவினர்தான் வாய்ப்பை பயன்படுத்தியுள்ளார்கள். அருந்ததிய சமூகத்தினர் விடுபட்டுள்ளனர்.

* கல்வி கிடைப்பதற்கான வாய்ப்புகள் பெயரளவில்தான் உள்ளன.

இவையே நீதிபதி ஜனார்த்தனத்தின் ஒருநபர் குழு, அரசிடம் 2008, நவம்பர் 22 அன்று தந்த அறிக்கையில் உள்ள விளக் கங்களின் சுருக்கம், இதற்கு ஆதரவான புள்ளிவிபரங்களையும் தனது அறிக்கையில் விரிவாக நீதிபதி சொல்லி யிருக்கிறார் என்று தமிழக அரசு சொல்கிறது. அட்ட வணை சாதியினருக்கு தனியாக இட ஒதுக்கீடு என்ற கொள்கை உருவான தற்கு எந்த நியாயங்கள் சொல்லப்பட் டனவோ அவையனைத்தும் இங்கும் பொருந்துகிறது.

இந்த சமூக நீதி நடவடிக்கைக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. பின்தங்கிய இஸ்லாமியர்களுக்கான இடஒதுக் கீட்டை ஆர்.எஸ்.எஸ்-பாஜகவினர் எதிர்க்கிறார்கள் என்றால் அவர்களின் மதவெறிக் கொள்கை என்று எடுத்துக் கொள்ளலாம். தலித்துகளில் ஒருபிரி வினரே எதிர்க்கிறார்கள் என்றால் அது ஒட்டுமொத்த சமூக நீதிக் கொள்கைக்கே வேட்டு வைத்துவிடும் என்ற கவலை ஜனநாயக, முற்போக்கு சக்திகளின் மத்தியில் எழுந்துள்ளது. அட்டவணை சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று பார்ப்பனியம் எத்தகைய வாதங்களை முன்வைக்குமோ அதையே உள்ஒதுக்கீட்டுக்கு எதிராக கூறுகிறார்கள்.

அருந்ததியினரின் மக்கள் தொகைக்கு ஏற்ற அளவிற்கு இந்த உள்ஒதுக்கீடு இருக்கிறதா என்ற கேள்வி ஒருபுறம். காகிதத்தில் உள்ள மூன்று விழுக்காட்டை நடைமுறைக்குக் கொண்டு வர தனிப் போராட்டம் தேவைப்படுகிறது. அர சாணைக்குப் பிறகு நிரப்பப்பட்ட ஆசிரியர் மற்றும் மின்வாரியத் தொழில்நுட்ப உதவி யாளர் பணியிடங்களில் உள்ஒதுக்கீடு இல்லை. தமிழ்நாடு அரசு போக்குவரத் துக்கழகம் (கோவை) 17 உதவிப் பொறி யாளர்கள் பணியிடங்களுக்கான நபர் களைப் பரிந்துரை செய்யுமாறு மதுரை வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியது. ஆனால் இடஒதுக்கீட்டுப் பட்டியலில் அருந்ததியருக்கு என்று தனியாக அவர்கள் குறிப்பிடவில்லை. இது அரசாணைக்கு முரணான அம்சமாகும். பொருத்தமான முறையில், வேலை வாய்ப்பு அலுவலகம் தலையிட்டு அருந்த திய சமூகத்தினருக்கு ஒரு இடம் என்று ஒதுக்கியது. நேர்காணல் நடத்தி மூன்று மாதங்கள் ஆகியும் பணி நியமனம் செய் யாமல் இருக்கிறார்கள். ஒரே ஒரு (கோவையைச் சேர்ந்த லெனின் என்பவர்) அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்தவர் தான் இந்த நேர்காணலில் பங்கேற்றார்.

அரசாணை வெளியாகி சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆனபிறகும் பெரிய அளவில் வேலைவாய்ப்பில் அருந்ததி யர்கள் பயனாளிகளாக இல்லை என்பது தான் நிதர்சனம். காவலர் வேலைவாய்ப்பு மட்டுமே விதிவிலக்கு. இதற்கான போராட்டங்களை ஒருபுறம் நடத்திக் கொண்டிருக்கும் வேளையில்தான் முதலுக்கே மோசம் என்று சொல்வார்களே, அதை ஏற்படுத்து வதற்காக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுப்பையா ராஜ் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் அருந்த தியர் உள்ஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார். அரசின் நோக்கம் சந்தேகத்திற்குள்ளாகியுள்ளது. இரண்டு மாதங்கள் கழித்து விசாரணைக்கு வந்தபோது மேலும் அவகாசம் வேண்டும் என்றுதான் கேட்டது.

சமூகநீதிப் பாதையைத் திருப்பி வேறு பக்கம் கொண்டு போய்விடுவார்களோ என்கிற அச்சத்தில், பெற்ற உரிமையைப் பாதுகாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்தியக்குழு உறுப்பினர் என்.வரதராஜன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாநிலத் தலைவர் பி.சம்பத் ஆகியோரும் வழக்கில் சேரும் வகையில் மனு செய்துள்ளனர். புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக் டர் கே.கிருஷ்ணசாமி, தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரை அருந்ததியர் சமூகத்திற்கு எதிராக நிறுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். திருச்சி, மதுரை போன்ற ஊர்களில் பிரச்சனையை எழுப்பக்கூடிய வாசகங்களுடன் சுவரொட்டி கள் ஒட்டப்பட்டிருக்கின்றன.

அட்டவiணை சாதியினரின் மக்கள் தொகைக்கு ஏற்ப தமிழகத்தில் 18 விழுக்காடு இட ஒதுக்கீட்டை 19 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வலு வாக முன்வைக்க வேண்டிய நேரத்தில் உள்குத்தில் இறங்குவது சமூக நீதிப் பாதையா என்று டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் யோசிப்பது நல்லது

Sunday, October 10, 2010

பாவம்... ராகுல் காந்தியை விட்டுவிடுங்கள்...!!

தான் செய்த குற்றத்துக்காக ஒரு ஆண்டு சிறைக்குச் சென்று திரும்பி வந்த ஒருவர் தன்னைவிட்டு அனைவரும் ஒதுங்கிப் போவதால் கோபமாக இருந்தார். அப்போதுதான் அவருக்கு அந்த விபரம் கிடைத்தது, பக்கத்துத் தெருவில் ஒரு முன்னாள் கைதி இருக்கிறார் என்று.

உற்சாகத்துடன் அவரைப் பார்க்கக் கிளம்பினார்.

"வணக்கம்... என் பெயர் கேசவன்.."

"சொல்லு... கேசவா.. என்ன விஷயமா என்னப் பாக்க வந்த.."

"நானும் உங்கள மாதிரிதான்..."

"அப்படின்னா..."

"உங்கள மாதிரியே ஜெயில்ல இருந்துட்டு வந்தேன்..."

"எத்தனை வருஷம் இருந்த..."

"ஒரு வருஷம் இருந்துட்டு வந்தேன்..." இப்படி சொல்லி முடிப்பதற்குள் ராமசாமிக்கு வந்த கோபத்தைப் பார்த்து கேசவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

"நாயே... ஓடிப்போயிடு... ஒரே ஒரு வருஷம் ஜெயில்ல இருந்துட்டு வந்து உங்கள மாதிரின்னு எனக்கு சமமா இருக்குற மாதிரி பேச எவ்வளவு தைரியம் இருக்கணும்..."

கேசவனுக்கு தலைகால் புரியவில்லை. ஏழு ஆண்டு சிறையில் இருந்த அனுபவசாலி என்ற உயர்வு(!) மனப்பான்மைதான் கோபத்துக்குக் காரணம் என்று அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கேசவனிடம் சொல்லியிருக்கிறார்கள்.

இப்படித்தான் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு கோபம் வந்துள்ளது போலும். தடை செய்யப்பட்டுள்ள சிமி அமைப்போடு ராகுல் காந்தி ஒப்பிட்டவுடன் மூக்குக்கு மேல் கோபம் வந்து பொங்கி எழுந்துவிட்டார்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள். இரண்டு அமைப்புக்கும் உள்ள வேறுபாட்டை ராகுல் காந்தி புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் ஆர்.எஸ்.எஸ். செய்தித்தொடர்பாளர் ராம் மாதவ்.

என்ன வேறுபாடு மாதவ் அவர்களே... காந்தி கொலை செய்யப்பட்டவுடன் தடை செய்யப்பட்ட உங்களோடு, போயும், போயும் இப்போது தடை செய்யப்பட்டுள்ள சிமியோடு ஒப்பிட்டதால் உங்களுக்கு இழுக்கு நேர்ந்துவிட்டதா?

மதக்கலவரங்கள் நடந்த ஒவ்வொன்றிலும் அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன்களில் பெரும்பாலும் ஆர்.எஸ்.எஸ்.சை நோக்கிதான் விரல்கள் நீண்டுள்ளன என்பதால்தான் ராகுல் காந்திக்கு வரலாறு தெரியாது என்கிறீர்களா..?

அவர் சொன்னது தவறுதான். அண்மைக்காலங்களில் உங்களோடு தொடர்புடையவர்கள் எவ்வளவு, எவ்வளவு குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியுள்ளார்கள். தென்காசியில் சொந்த அலுவலகத்திலேயே குண்டுவைத்து சாதனை நிகழ்த்திய இந்து முன்னணியைப் பெற்ற தாயல்லவா ஆர்.எஸ்.எஸ்.?!

உங்க "சீனியாரிட்டி" தெரியாமல் பேசிவிட்டார் ராகுல்காந்தி. பாவம், அவரை விட்டுவிடுங்கள்.
- ஹரி.

நன்றி : தீக்கதிர்

Monday, October 4, 2010

எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!


ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) "ஜெமினி பிலிம்ஸ்' உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான "சந்திரலேகா' 1948-ல் தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் வெளியானது. இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது, இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை.

தஞ்சாவூரில் "சந்திரலேகா' வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் என்ற உரிமையில் வாசனை நேரடியாகவே அவர் அணுகினார். வாசனோ மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: ""ஒரு சின்ன நகரத்தில் பல திரையரங்குகளில் படம் வெளியிடுவது நல்லதல்ல. யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது. நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. எல்லோரும் பிழைக்க வேண்டும் அல்லவா?''

படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியில் எல்லோருக்கும் பங்கு தரப்பட வேண்டும் என நினைத்தார் வாசன். படத் தயாரிப்புக் குழு மேலாளரிலிருந்து படம் ஓடிய திரையரங்குகளில் டிக்கெட் கிழித்த தொழிலாளிகள் வரை எல்லோருக்கும் சிறப்பு ஊக்கப் பரிசு அளித்தது "ஜெமினி ஸ்டுடியோ'. "சந்திரலேகா' வரலாறானது. தொழில் தர்மத்துக்காக இன்றளவும் வாசன் நினைவுகூரப்படுகிறார்!

ஏறத்தாழ ரூ.160 கோடி முதலீடு, ஒரே நேரத்தில் 3 மொழிகளில் 2,200 பிரதிகளுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, இதுவரை இந்திய கதாநாயகிகள் யாரும் பெற்றிராத ரூ. 6 கோடி சம்பளத்தில் கதாநாயகியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஆஸ்கர் விருதுபெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசை, எல்லாவற்றுக்கும் மேலாக "சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்...

வரலாறுதானா "சன் பிக்சர்'ஸின் "எந்திரன்'?

நிச்சயமாக "எந்திரன்' ஒரு வரலாறுதான். ஒரு ஜனநாயக நாட்டில் விஞ்ஞானத்தின் உதவியுடன், அரசாங்கத்தின் ஆசியுடன் வணிக மோசடியும் வணிக ஏகாதிபத்தியமும் எப்படி ஜனநாயகமாக மாற்றப்படுகிறது என்கிற வரலாறு.

மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள். முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள்; 4 காட்சிகள்; டிக்கெட் விலை ரூ. 250 எனக் கொண்டால்கூட முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி. "சன் குழும' ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான "கோலோஸியம்' உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை "எந்திரன்' உருவாக்கி இருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்! எனில், மொத்த வருமானம்?

ஒரு தொழில் நிறுவனம் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இப்படிச் சம்பாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். நியாயம்தான். தொழில் நிறுவனம்தான், புத்திசாலித்தனமாகத்தான் சம்பாதிக்கிறார்கள்; "வால்மார்ட்'டுக்கும் "கோகோ கோலா'வுக்கும் "ரிலையன்ஸ் ஃப்ர'ஷுக்கும்கூட இந்த நியாயம் பொருந்தும். ஆனால், நாம் அவர்களை ஆதரிக்கவில்லையே, ஏன்? அவர்களை எந்தக் காரணங்கள் எதிர்க்க வைக்கின்றனவோ அதே காரணங்கள்தான் "எந்திர'னையும் எதிர்க்கவைக்கின்றன.

சென்னையில் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் "எந்திரன்' வெளியாகி இருக்கிறது. ஆனால், ஆச்சர்யம் இது இல்லை. தமிழகத்தின் மிக சாதாரண நகரங்களில் ஒன்றான (தமிழகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் தங்கிய மாவட்டத்தின் தலைநகரமும்கூட) புதுக்கோட்டையில்கூட 4 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் நிலை.
இந்தச் சூழல் இதுவரை ஒருபோதும் இல்லாதது. இந்தியத் திரையுலகம் முன்னெப்போதும் எதிர்கொண்டிராதது. ரசிகனுக்கு "எந்திரன்' படத்தைத் தவிர, வேறு எந்தப் படத்தையுமே பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி, தங்களது பணபலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் பெருவாரியான திரையரங்குகளில் தங்களது படத்தை மட்டுமே திரையிட வைத்திருக்கும் ஏகபோக மனோபாவம்.

படம் வந்த சில நாள்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வமே பரந்துபட்ட "எந்திரன்' பட வெளியீட்டுக்கான வியாபார சூட்சமமாக மாறியிருக்கிறது. பொதுவாக, எந்த ஒரு வெற்றித் திரைப்படத்துக்கும் அதிகபட்சம் 10 நாள்களுக்குத்தான் கூடுதல் விலையில் டிக்கெட்டை விற்க முடியும். நூறு நாட்கள் ஓடக்கூடிய ஒரு வெற்றிப் படம் ஓர் ஊரில் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டால், முதல் 10 நாட்களில் பார்க்கும் ரசிகர்கள்தான் கூடுதல் கட்டணத்தில் படம் பார்க்க நேரிடும். எஞ்சிய 90 நாட்களில் படம் பார்க்கும் ரசிகர்கள் சாதாரண கட்டணத்திலேயே படம் பார்த்துவிடலாம். ஆனால், ஒரு திரையரங்குக்குப் பதில் ஊரிலுள்ள 10 திரையரங்குகளிலும் படத்தை வெளியிட்டால், 100 நாள்களும் படத்தைக் கூடுதல் கட்டணத்திலேயே ஓட்டியதற்குச் சமம். இதுதான் "எந்திரன்' அறிமுகப்படுத்தி இருக்கும் "ஏகபோக' (மோனாப்பலி) வியாபார சூட்சமம்.

தயாரிப்பாளர்கள் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு எழுதப்படாத விதியை அறிவித்தது. அதன்படி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற ஆரம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாநாயகர்கள் நடித்த திரைப்படத்தை தீபாவளி, பொங்கல், சித்திரைப் புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் மட்டுமே திரையிட வேண்டும். ஏனைய நாள்களில் சிறிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவை குறைந்தது இரண்டு வாரங்களாவது ஓடி விநியோகஸ்தர்களுக்கு குறைந்தபட்ச லாபத்தையாவது ஏற்படுத்திக் கொடுக்கும். மற்றவர்களுக்கு நியாயம் சொல்லும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமோ, விநியோகஸ்தர்கள் சங்கமோ, "எந்திரன்' விஷயத்தில் வாயைத் திறக்கவே இல்லையே, ஏன்? பயமா இல்லை ஆட்சியாளர்களின் பாததூளிகளுக்கு சாமரம் வீசும் அடிமைத்தன மனோபாவமா!

"எந்திரன்' திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்டிருந்தால் திரையிடக் காத்திருக்கும் பல சிறிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டு இரண்டு, மூன்று வாரங்கள் ஓடியிருக்கும். "எந்திரன்' வெற்றிப்படமாகவும் அமைந்துவிட்டால், பாவம் சிறிய படங்களைத் தயாரித்து வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிட மேலும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை திரையரங்குகள் கிடைக்காது. கிடைத்தாலும் "எந்திரன்' படத்தின் வெற்றி ஜுரத்தில் அந்தப் படங்கள் ஓடாது. போட்ட முதலும், அதிகரித்த வட்டியும், அந்தத் தயாரிப்பாளர்களை திவாலாக்கி நடுத்தெருவில் நிறுத்தும். ஏகபோகத்தின் கோர முகம் இதுதான்!



நன்றி - தினமணி