Showing posts with label ஆர்.எஸ்.எஸ். Show all posts
Showing posts with label ஆர்.எஸ்.எஸ். Show all posts

Sunday, October 10, 2010

பாவம்... ராகுல் காந்தியை விட்டுவிடுங்கள்...!!

தான் செய்த குற்றத்துக்காக ஒரு ஆண்டு சிறைக்குச் சென்று திரும்பி வந்த ஒருவர் தன்னைவிட்டு அனைவரும் ஒதுங்கிப் போவதால் கோபமாக இருந்தார். அப்போதுதான் அவருக்கு அந்த விபரம் கிடைத்தது, பக்கத்துத் தெருவில் ஒரு முன்னாள் கைதி இருக்கிறார் என்று.

உற்சாகத்துடன் அவரைப் பார்க்கக் கிளம்பினார்.

"வணக்கம்... என் பெயர் கேசவன்.."

"சொல்லு... கேசவா.. என்ன விஷயமா என்னப் பாக்க வந்த.."

"நானும் உங்கள மாதிரிதான்..."

"அப்படின்னா..."

"உங்கள மாதிரியே ஜெயில்ல இருந்துட்டு வந்தேன்..."

"எத்தனை வருஷம் இருந்த..."

"ஒரு வருஷம் இருந்துட்டு வந்தேன்..." இப்படி சொல்லி முடிப்பதற்குள் ராமசாமிக்கு வந்த கோபத்தைப் பார்த்து கேசவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

"நாயே... ஓடிப்போயிடு... ஒரே ஒரு வருஷம் ஜெயில்ல இருந்துட்டு வந்து உங்கள மாதிரின்னு எனக்கு சமமா இருக்குற மாதிரி பேச எவ்வளவு தைரியம் இருக்கணும்..."

கேசவனுக்கு தலைகால் புரியவில்லை. ஏழு ஆண்டு சிறையில் இருந்த அனுபவசாலி என்ற உயர்வு(!) மனப்பான்மைதான் கோபத்துக்குக் காரணம் என்று அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கேசவனிடம் சொல்லியிருக்கிறார்கள்.

இப்படித்தான் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு கோபம் வந்துள்ளது போலும். தடை செய்யப்பட்டுள்ள சிமி அமைப்போடு ராகுல் காந்தி ஒப்பிட்டவுடன் மூக்குக்கு மேல் கோபம் வந்து பொங்கி எழுந்துவிட்டார்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள். இரண்டு அமைப்புக்கும் உள்ள வேறுபாட்டை ராகுல் காந்தி புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் ஆர்.எஸ்.எஸ். செய்தித்தொடர்பாளர் ராம் மாதவ்.

என்ன வேறுபாடு மாதவ் அவர்களே... காந்தி கொலை செய்யப்பட்டவுடன் தடை செய்யப்பட்ட உங்களோடு, போயும், போயும் இப்போது தடை செய்யப்பட்டுள்ள சிமியோடு ஒப்பிட்டதால் உங்களுக்கு இழுக்கு நேர்ந்துவிட்டதா?

மதக்கலவரங்கள் நடந்த ஒவ்வொன்றிலும் அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன்களில் பெரும்பாலும் ஆர்.எஸ்.எஸ்.சை நோக்கிதான் விரல்கள் நீண்டுள்ளன என்பதால்தான் ராகுல் காந்திக்கு வரலாறு தெரியாது என்கிறீர்களா..?

அவர் சொன்னது தவறுதான். அண்மைக்காலங்களில் உங்களோடு தொடர்புடையவர்கள் எவ்வளவு, எவ்வளவு குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியுள்ளார்கள். தென்காசியில் சொந்த அலுவலகத்திலேயே குண்டுவைத்து சாதனை நிகழ்த்திய இந்து முன்னணியைப் பெற்ற தாயல்லவா ஆர்.எஸ்.எஸ்.?!

உங்க "சீனியாரிட்டி" தெரியாமல் பேசிவிட்டார் ராகுல்காந்தி. பாவம், அவரை விட்டுவிடுங்கள்.
- ஹரி.

நன்றி : தீக்கதிர்