Sunday, November 28, 2010

உள்குத்தில் இறங்குவதுதான் சமூகநீதிப் பாதையா?

தமிழகத்தில் உள்ள அட்டவணை சாதியினரில் மூன்று பிரிவுகள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளவையாகும். பள்ளர், பறையர் மற்றும் அருந்ததியர் ஆகிய பிரிவுகளே அவை. நீண்ட நெடுங்காலமாக சாதி ரீதியான ஏற்றத் தாழ்வை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களின் விளைவாகப் பெற்ற உரிமைகளில் அட்டவணை சாதியினருக்கான இட ஒதுக்கீடும் ஒன்றாகும். மனிதகுலம் சந்திக்கும் எந்த நெருக்கடியைப் பட்டியலிட்டாலும் இந்தியாவைப் பொறுத்த வரை, இந்த அட்டவணை சாதியினர்தான் அதில் அதிக நெருக்கடியைச் சந்தித்தவர்களாக இருக்கிறார்கள்.

மற்றவர்களோடு ஒப்பிடும்போது இந்த நிலை. அட்டவணை சாதியினருக்குள் ஒப்பிட்டுக்கொண்டால், எத்தனை முறை சொன்னாலும் பொருத்தமாக இருக்கும் ஒரு வரி என்னவென்றால், மூட்டைகளில் அடி மூட்டை என்கிற வரிக்குச் சொந்தக் காரர்களாக அருந்ததியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். இட ஒதுக்கீடு மூலம் பலன் பெற்று அட்ட வணை சாதியினரில் ஒரு சிறு பிரிவு முன்னேற முடிந்ததோ, அதுபோன்று உள் ஒதுக்கீடு தரப்பட்டால் அருந்ததியின மக்களில் ஒரு சிறு பிரிவினர் முன்னேற வாய்ப்புள்ளது என்ற கோரிக்கை 26 ஆண்டுகளுக்கு முன்பாக எழுந்தது.

இந்தக் கோரிக்கை காகித அளவில் தான் துவக்கத்தில் இருந்தது. அருந்ததிய சமூக அமைப்புகள் இந்தக் கோரிக்கை யை அந்த சமூகத்து மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றன. 2007 ஆம் ஆண்டில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியால் அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவு கிடைத்தது. வலுவான மக்கள் இயக்கங் கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண் டாமை ஒழிப்பு முன்னணி, மற்றும் அருந்ததிய அமைப்புகளால் நடத்தப்பட்டன. இந்த இயக்கங்களுக்கு அருந்ததிய மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல், மற்ற தரப்பினரிடம் கிடைத்த ஆதரவு அரசிடம் அசைவை ஏற்படுத்தியது. நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில் ஒருநபர் குழு ஏற்படுத்தப்பட்டது. அருந்ததிய மக்க ளின் துயர நிலையைக் கணக்கில் எடுத்துக் கொண்ட அக்குழு, மூன்று விழுக்காடு உள்ஒதுக்கீட்டுக்கு பரிந்துரை செய்தது. சட்டமன்றத்தில் 2009, ஏப்ரல் 29 அன்று ஒப்புதல் தரப்பட்டு, 27.5.2009 அன்று அரசாணை வெளியானது.


இந்த ஒதுக்கீட்டுக்கு காரணங்களாக நீதிபதி ஜனார்த்தனம் அளித்து, அரசு ஏற்றுக்கொண்ட அம்சங்கள் அருந்ததி யருக்கு உள்ஒதுக்கீடு என்பதை முழுமை யாக நியாயப்படுத்துகிறது-

* அரசுப்பணிகளின் ஏ,பி, மற்றும் சி- பிரிவுகளில் அருந்ததியருக்கான பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக இருக்கிறது.

* டி - பிரிவுகளில்தான் அருந்ததியினர் பெரும்பாலும் பணிபுரிகிறார்கள். மனித மலம் அள்ளுவது போன்ற பணியாக இருப்பதால் இதில் மற்ற பிரிவினர் வருவதில்லை. மேலும் இந்தப் பணிகளுக்கு எந்தவித கல்வித்தகுதியும் தேவையில்லை.

* பொதுத்துறை நிறுவனங்களில் நம்ப முடியாத அளவுக்கு அருந்ததிய சமூகத்தினரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இடஒதுக்கீட்டிலும் தலித்துகளில் கொஞ்சம் முன்னேறிய பிரிவினர்தான் வாய்ப்பை பயன்படுத்தியுள்ளார்கள். அருந்ததிய சமூகத்தினர் விடுபட்டுள்ளனர்.

* கல்வி கிடைப்பதற்கான வாய்ப்புகள் பெயரளவில்தான் உள்ளன.

இவையே நீதிபதி ஜனார்த்தனத்தின் ஒருநபர் குழு, அரசிடம் 2008, நவம்பர் 22 அன்று தந்த அறிக்கையில் உள்ள விளக் கங்களின் சுருக்கம், இதற்கு ஆதரவான புள்ளிவிபரங்களையும் தனது அறிக்கையில் விரிவாக நீதிபதி சொல்லி யிருக்கிறார் என்று தமிழக அரசு சொல்கிறது. அட்ட வணை சாதியினருக்கு தனியாக இட ஒதுக்கீடு என்ற கொள்கை உருவான தற்கு எந்த நியாயங்கள் சொல்லப்பட் டனவோ அவையனைத்தும் இங்கும் பொருந்துகிறது.

இந்த சமூக நீதி நடவடிக்கைக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. பின்தங்கிய இஸ்லாமியர்களுக்கான இடஒதுக் கீட்டை ஆர்.எஸ்.எஸ்-பாஜகவினர் எதிர்க்கிறார்கள் என்றால் அவர்களின் மதவெறிக் கொள்கை என்று எடுத்துக் கொள்ளலாம். தலித்துகளில் ஒருபிரி வினரே எதிர்க்கிறார்கள் என்றால் அது ஒட்டுமொத்த சமூக நீதிக் கொள்கைக்கே வேட்டு வைத்துவிடும் என்ற கவலை ஜனநாயக, முற்போக்கு சக்திகளின் மத்தியில் எழுந்துள்ளது. அட்டவணை சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று பார்ப்பனியம் எத்தகைய வாதங்களை முன்வைக்குமோ அதையே உள்ஒதுக்கீட்டுக்கு எதிராக கூறுகிறார்கள்.

அருந்ததியினரின் மக்கள் தொகைக்கு ஏற்ற அளவிற்கு இந்த உள்ஒதுக்கீடு இருக்கிறதா என்ற கேள்வி ஒருபுறம். காகிதத்தில் உள்ள மூன்று விழுக்காட்டை நடைமுறைக்குக் கொண்டு வர தனிப் போராட்டம் தேவைப்படுகிறது. அர சாணைக்குப் பிறகு நிரப்பப்பட்ட ஆசிரியர் மற்றும் மின்வாரியத் தொழில்நுட்ப உதவி யாளர் பணியிடங்களில் உள்ஒதுக்கீடு இல்லை. தமிழ்நாடு அரசு போக்குவரத் துக்கழகம் (கோவை) 17 உதவிப் பொறி யாளர்கள் பணியிடங்களுக்கான நபர் களைப் பரிந்துரை செய்யுமாறு மதுரை வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியது. ஆனால் இடஒதுக்கீட்டுப் பட்டியலில் அருந்ததியருக்கு என்று தனியாக அவர்கள் குறிப்பிடவில்லை. இது அரசாணைக்கு முரணான அம்சமாகும். பொருத்தமான முறையில், வேலை வாய்ப்பு அலுவலகம் தலையிட்டு அருந்த திய சமூகத்தினருக்கு ஒரு இடம் என்று ஒதுக்கியது. நேர்காணல் நடத்தி மூன்று மாதங்கள் ஆகியும் பணி நியமனம் செய் யாமல் இருக்கிறார்கள். ஒரே ஒரு (கோவையைச் சேர்ந்த லெனின் என்பவர்) அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்தவர் தான் இந்த நேர்காணலில் பங்கேற்றார்.

அரசாணை வெளியாகி சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆனபிறகும் பெரிய அளவில் வேலைவாய்ப்பில் அருந்ததி யர்கள் பயனாளிகளாக இல்லை என்பது தான் நிதர்சனம். காவலர் வேலைவாய்ப்பு மட்டுமே விதிவிலக்கு. இதற்கான போராட்டங்களை ஒருபுறம் நடத்திக் கொண்டிருக்கும் வேளையில்தான் முதலுக்கே மோசம் என்று சொல்வார்களே, அதை ஏற்படுத்து வதற்காக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுப்பையா ராஜ் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் அருந்த தியர் உள்ஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார். அரசின் நோக்கம் சந்தேகத்திற்குள்ளாகியுள்ளது. இரண்டு மாதங்கள் கழித்து விசாரணைக்கு வந்தபோது மேலும் அவகாசம் வேண்டும் என்றுதான் கேட்டது.

சமூகநீதிப் பாதையைத் திருப்பி வேறு பக்கம் கொண்டு போய்விடுவார்களோ என்கிற அச்சத்தில், பெற்ற உரிமையைப் பாதுகாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்தியக்குழு உறுப்பினர் என்.வரதராஜன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாநிலத் தலைவர் பி.சம்பத் ஆகியோரும் வழக்கில் சேரும் வகையில் மனு செய்துள்ளனர். புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக் டர் கே.கிருஷ்ணசாமி, தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரை அருந்ததியர் சமூகத்திற்கு எதிராக நிறுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். திருச்சி, மதுரை போன்ற ஊர்களில் பிரச்சனையை எழுப்பக்கூடிய வாசகங்களுடன் சுவரொட்டி கள் ஒட்டப்பட்டிருக்கின்றன.

அட்டவiணை சாதியினரின் மக்கள் தொகைக்கு ஏற்ப தமிழகத்தில் 18 விழுக்காடு இட ஒதுக்கீட்டை 19 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வலு வாக முன்வைக்க வேண்டிய நேரத்தில் உள்குத்தில் இறங்குவது சமூக நீதிப் பாதையா என்று டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் யோசிப்பது நல்லது

Sunday, October 10, 2010

பாவம்... ராகுல் காந்தியை விட்டுவிடுங்கள்...!!

தான் செய்த குற்றத்துக்காக ஒரு ஆண்டு சிறைக்குச் சென்று திரும்பி வந்த ஒருவர் தன்னைவிட்டு அனைவரும் ஒதுங்கிப் போவதால் கோபமாக இருந்தார். அப்போதுதான் அவருக்கு அந்த விபரம் கிடைத்தது, பக்கத்துத் தெருவில் ஒரு முன்னாள் கைதி இருக்கிறார் என்று.

உற்சாகத்துடன் அவரைப் பார்க்கக் கிளம்பினார்.

"வணக்கம்... என் பெயர் கேசவன்.."

"சொல்லு... கேசவா.. என்ன விஷயமா என்னப் பாக்க வந்த.."

"நானும் உங்கள மாதிரிதான்..."

"அப்படின்னா..."

"உங்கள மாதிரியே ஜெயில்ல இருந்துட்டு வந்தேன்..."

"எத்தனை வருஷம் இருந்த..."

"ஒரு வருஷம் இருந்துட்டு வந்தேன்..." இப்படி சொல்லி முடிப்பதற்குள் ராமசாமிக்கு வந்த கோபத்தைப் பார்த்து கேசவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

"நாயே... ஓடிப்போயிடு... ஒரே ஒரு வருஷம் ஜெயில்ல இருந்துட்டு வந்து உங்கள மாதிரின்னு எனக்கு சமமா இருக்குற மாதிரி பேச எவ்வளவு தைரியம் இருக்கணும்..."

கேசவனுக்கு தலைகால் புரியவில்லை. ஏழு ஆண்டு சிறையில் இருந்த அனுபவசாலி என்ற உயர்வு(!) மனப்பான்மைதான் கோபத்துக்குக் காரணம் என்று அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கேசவனிடம் சொல்லியிருக்கிறார்கள்.

இப்படித்தான் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு கோபம் வந்துள்ளது போலும். தடை செய்யப்பட்டுள்ள சிமி அமைப்போடு ராகுல் காந்தி ஒப்பிட்டவுடன் மூக்குக்கு மேல் கோபம் வந்து பொங்கி எழுந்துவிட்டார்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள். இரண்டு அமைப்புக்கும் உள்ள வேறுபாட்டை ராகுல் காந்தி புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் ஆர்.எஸ்.எஸ். செய்தித்தொடர்பாளர் ராம் மாதவ்.

என்ன வேறுபாடு மாதவ் அவர்களே... காந்தி கொலை செய்யப்பட்டவுடன் தடை செய்யப்பட்ட உங்களோடு, போயும், போயும் இப்போது தடை செய்யப்பட்டுள்ள சிமியோடு ஒப்பிட்டதால் உங்களுக்கு இழுக்கு நேர்ந்துவிட்டதா?

மதக்கலவரங்கள் நடந்த ஒவ்வொன்றிலும் அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன்களில் பெரும்பாலும் ஆர்.எஸ்.எஸ்.சை நோக்கிதான் விரல்கள் நீண்டுள்ளன என்பதால்தான் ராகுல் காந்திக்கு வரலாறு தெரியாது என்கிறீர்களா..?

அவர் சொன்னது தவறுதான். அண்மைக்காலங்களில் உங்களோடு தொடர்புடையவர்கள் எவ்வளவு, எவ்வளவு குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியுள்ளார்கள். தென்காசியில் சொந்த அலுவலகத்திலேயே குண்டுவைத்து சாதனை நிகழ்த்திய இந்து முன்னணியைப் பெற்ற தாயல்லவா ஆர்.எஸ்.எஸ்.?!

உங்க "சீனியாரிட்டி" தெரியாமல் பேசிவிட்டார் ராகுல்காந்தி. பாவம், அவரை விட்டுவிடுங்கள்.
- ஹரி.

நன்றி : தீக்கதிர்

Monday, October 4, 2010

எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!


ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) "ஜெமினி பிலிம்ஸ்' உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான "சந்திரலேகா' 1948-ல் தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் வெளியானது. இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது, இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை.

தஞ்சாவூரில் "சந்திரலேகா' வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் என்ற உரிமையில் வாசனை நேரடியாகவே அவர் அணுகினார். வாசனோ மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: ""ஒரு சின்ன நகரத்தில் பல திரையரங்குகளில் படம் வெளியிடுவது நல்லதல்ல. யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது. நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. எல்லோரும் பிழைக்க வேண்டும் அல்லவா?''

படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியில் எல்லோருக்கும் பங்கு தரப்பட வேண்டும் என நினைத்தார் வாசன். படத் தயாரிப்புக் குழு மேலாளரிலிருந்து படம் ஓடிய திரையரங்குகளில் டிக்கெட் கிழித்த தொழிலாளிகள் வரை எல்லோருக்கும் சிறப்பு ஊக்கப் பரிசு அளித்தது "ஜெமினி ஸ்டுடியோ'. "சந்திரலேகா' வரலாறானது. தொழில் தர்மத்துக்காக இன்றளவும் வாசன் நினைவுகூரப்படுகிறார்!

ஏறத்தாழ ரூ.160 கோடி முதலீடு, ஒரே நேரத்தில் 3 மொழிகளில் 2,200 பிரதிகளுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, இதுவரை இந்திய கதாநாயகிகள் யாரும் பெற்றிராத ரூ. 6 கோடி சம்பளத்தில் கதாநாயகியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஆஸ்கர் விருதுபெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசை, எல்லாவற்றுக்கும் மேலாக "சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்...

வரலாறுதானா "சன் பிக்சர்'ஸின் "எந்திரன்'?

நிச்சயமாக "எந்திரன்' ஒரு வரலாறுதான். ஒரு ஜனநாயக நாட்டில் விஞ்ஞானத்தின் உதவியுடன், அரசாங்கத்தின் ஆசியுடன் வணிக மோசடியும் வணிக ஏகாதிபத்தியமும் எப்படி ஜனநாயகமாக மாற்றப்படுகிறது என்கிற வரலாறு.

மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள். முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள்; 4 காட்சிகள்; டிக்கெட் விலை ரூ. 250 எனக் கொண்டால்கூட முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி. "சன் குழும' ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான "கோலோஸியம்' உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை "எந்திரன்' உருவாக்கி இருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்! எனில், மொத்த வருமானம்?

ஒரு தொழில் நிறுவனம் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இப்படிச் சம்பாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். நியாயம்தான். தொழில் நிறுவனம்தான், புத்திசாலித்தனமாகத்தான் சம்பாதிக்கிறார்கள்; "வால்மார்ட்'டுக்கும் "கோகோ கோலா'வுக்கும் "ரிலையன்ஸ் ஃப்ர'ஷுக்கும்கூட இந்த நியாயம் பொருந்தும். ஆனால், நாம் அவர்களை ஆதரிக்கவில்லையே, ஏன்? அவர்களை எந்தக் காரணங்கள் எதிர்க்க வைக்கின்றனவோ அதே காரணங்கள்தான் "எந்திர'னையும் எதிர்க்கவைக்கின்றன.

சென்னையில் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் "எந்திரன்' வெளியாகி இருக்கிறது. ஆனால், ஆச்சர்யம் இது இல்லை. தமிழகத்தின் மிக சாதாரண நகரங்களில் ஒன்றான (தமிழகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் தங்கிய மாவட்டத்தின் தலைநகரமும்கூட) புதுக்கோட்டையில்கூட 4 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் நிலை.
இந்தச் சூழல் இதுவரை ஒருபோதும் இல்லாதது. இந்தியத் திரையுலகம் முன்னெப்போதும் எதிர்கொண்டிராதது. ரசிகனுக்கு "எந்திரன்' படத்தைத் தவிர, வேறு எந்தப் படத்தையுமே பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி, தங்களது பணபலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் பெருவாரியான திரையரங்குகளில் தங்களது படத்தை மட்டுமே திரையிட வைத்திருக்கும் ஏகபோக மனோபாவம்.

படம் வந்த சில நாள்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வமே பரந்துபட்ட "எந்திரன்' பட வெளியீட்டுக்கான வியாபார சூட்சமமாக மாறியிருக்கிறது. பொதுவாக, எந்த ஒரு வெற்றித் திரைப்படத்துக்கும் அதிகபட்சம் 10 நாள்களுக்குத்தான் கூடுதல் விலையில் டிக்கெட்டை விற்க முடியும். நூறு நாட்கள் ஓடக்கூடிய ஒரு வெற்றிப் படம் ஓர் ஊரில் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டால், முதல் 10 நாட்களில் பார்க்கும் ரசிகர்கள்தான் கூடுதல் கட்டணத்தில் படம் பார்க்க நேரிடும். எஞ்சிய 90 நாட்களில் படம் பார்க்கும் ரசிகர்கள் சாதாரண கட்டணத்திலேயே படம் பார்த்துவிடலாம். ஆனால், ஒரு திரையரங்குக்குப் பதில் ஊரிலுள்ள 10 திரையரங்குகளிலும் படத்தை வெளியிட்டால், 100 நாள்களும் படத்தைக் கூடுதல் கட்டணத்திலேயே ஓட்டியதற்குச் சமம். இதுதான் "எந்திரன்' அறிமுகப்படுத்தி இருக்கும் "ஏகபோக' (மோனாப்பலி) வியாபார சூட்சமம்.

தயாரிப்பாளர்கள் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு எழுதப்படாத விதியை அறிவித்தது. அதன்படி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற ஆரம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாநாயகர்கள் நடித்த திரைப்படத்தை தீபாவளி, பொங்கல், சித்திரைப் புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் மட்டுமே திரையிட வேண்டும். ஏனைய நாள்களில் சிறிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவை குறைந்தது இரண்டு வாரங்களாவது ஓடி விநியோகஸ்தர்களுக்கு குறைந்தபட்ச லாபத்தையாவது ஏற்படுத்திக் கொடுக்கும். மற்றவர்களுக்கு நியாயம் சொல்லும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமோ, விநியோகஸ்தர்கள் சங்கமோ, "எந்திரன்' விஷயத்தில் வாயைத் திறக்கவே இல்லையே, ஏன்? பயமா இல்லை ஆட்சியாளர்களின் பாததூளிகளுக்கு சாமரம் வீசும் அடிமைத்தன மனோபாவமா!

"எந்திரன்' திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்டிருந்தால் திரையிடக் காத்திருக்கும் பல சிறிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டு இரண்டு, மூன்று வாரங்கள் ஓடியிருக்கும். "எந்திரன்' வெற்றிப்படமாகவும் அமைந்துவிட்டால், பாவம் சிறிய படங்களைத் தயாரித்து வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிட மேலும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை திரையரங்குகள் கிடைக்காது. கிடைத்தாலும் "எந்திரன்' படத்தின் வெற்றி ஜுரத்தில் அந்தப் படங்கள் ஓடாது. போட்ட முதலும், அதிகரித்த வட்டியும், அந்தத் தயாரிப்பாளர்களை திவாலாக்கி நடுத்தெருவில் நிறுத்தும். ஏகபோகத்தின் கோர முகம் இதுதான்!



நன்றி - தினமணி

Wednesday, July 21, 2010

நான் பிள்ளையார் பேசுறேன்....



வணக்கம். நான்தான் கோவை, சிங்காநல்லூர் பத்தாவது வட்டம் ஜீவா வீதில குடியிருந்த பிள்ளையார் பேசுறேன். இவ்வளவு நாள் மவுனமா இருந்த நான் பேசுறது அவசியம்னு நெனச்சுதான் வாயத் துறந்துட்டேன். 1989 ஆம் ஆண்டுங்குறது நல்லாவே நெனவுல இருக்கு... அப்பதான் நான் ஜீவா வீதிக்குள்ள வர்றேன். என்னக் கொண்டு வந்தவங்க உள்மனசுல என்ன இருக்குன்னு அப்போ என்னால படிக்க முடியல. என் முதுகுக்குப் பின்னாலதான் பல வேலைகள் நடந்துருக்கு...

கும்பிடறதுக்குதான் என்ன கொண்டு வந்தாங்கன்னு நெனச்சேன்... வந்த அன்னிக்கு உற்சாகம் கரை புரண்டு ஓடுச்சு. அதெல்லாம் கொஞ்ச நாள்தான். பக்கத்து வீட்டம்மா மாட்டைக் கொண்டு வந்து கட்டுச்சு. அது சாப்புடுற அழக ரசிச்சேன்... நாக்கை சுழற்றி அசை போட்டது பிரமாதமா இருந்துச்சு.. சாணம் போட்டப்ப கூட இயற்கைதானே என்றுதான் மனதுக்குள் ஓடியது.

ஆனால் மாடுகள் நிரந்தரமாகக் குடியேறினப்பதான் அது அவங்களுக்கு சொந்தமான இடம். நான் வெறும் வாட்ச்மேன்தான்னு புரிஞ்சுது. என் முதுகுக்குப் பின்னால் என்ன செய்யுறதுன்னு தெரியாம திகைச்சு நின்னவங்கள ஒரு வேளை நான் திரும்பிப் பார்த்துருவனோன்னு பயந்து ஒரு பெரிய சுவரை எழுப்பிட்டாங்க. நான்கூட அது என்னுடைய பாதுகாப்புக்குத்தானோன்னு நெனச்சுட்டேன். ஆனா அது தீண்டாமைச் சுவர். பெரியார் நகர்ல இருக்குற அருந்ததிய மக்கள் தங்களோட வீதிக்குள்ள வந்துரக்கூடாதுன்னுதான் எனக்கு கோவில்.

முதல் விநாயகர் சதுர்த்தி வந்தப்ப கொஞ்சம் பரபரப்பாக இருந்தேன். ஆனா எந்த அசைவும் இல்லை. வழக்கம்போல மாடுகள் மட்டும் வந்தன. இப்படியே ஒவ்வொரு சதுர்த்தியும் கழிஞ்சுது. ஒண்ணுல்ல... ரெண்டுல்ல... 20 விநாயகர் சதுர்த்திகள் கழிஞ்சு போச்சு. என்னோட தரப்புல இருக்குறவங்க கண்டுக்கல. அந்தத் தரப்புல இருக்குறவங்க பாதையத் திறக்க என்னவெல்லாமோ பண்ணிப் பாத்திருக்காங்க. முடியல.

திடீர்னு ஒருநாள் ஏதோ மின்னுச்சு. அப்புறம்தான் தெரிஞ்சுது புகைப்படம் எடுக்குறாங்கன்னு. மறுநாளும் வந்தாங்க. முதல்நாள் இல்லாத மாடுகள் அப்ப இருந்துச்சு. சாணம் போட்டு அந்த இடத்தையே நாறடித்த நிலைய அவங்கள்லாம் பாத்தாங்க. அதயும் ஃபோட்டோ எடுத்தாங்க. இப்படிப் பாதை போக வேண்டுமே... ஆனால் இடையில் எப்படி கோவில் வந்தது என்று அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். குறுக்கே புகுந்து சொல்ல வாய்நுனி வரைக்கும் வார்த்தைகள் வந்துருச்சு, இது கோவிலல்ல. மாட்டுத்தொழுவம்தான் என்று. கட்டுப்படுத்திக்கிட்டேன்.

ஆனா ரெண்டு, மூணு நாட்கள்ல ஒண்ணு புரிஞ்சுது. இவங்க ஏதோ வந்தார்கள்,, சென்றார்கள் மாதிரி ஆட்களல்ல. அவங்க பேச்சுலருந்து புரிஞ்சுது, ஏற்கெனவே பல மனச்சுவர்களையும், கல் சுவர்களையும் தகர்த்தவங்க இவங்கன்னு. எனக்காகவும் சில பேர் பரிஞ்சு பேசுனாங்க. அவங்கள்லாம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் விடுதலை முன்னணி அமைப்புகளச் சேந்தவங்கன்னு அப்புறம்தான் தெரிஞ்சுது.

ஜன.30. அரசு அதிகாரிகள் வந்தப்ப இவ்வளவு சீக்கிரமாவா நம்மை இந்த இடத்த விட்டு கூட்டிட்டுப் போயிருவாங்கன்னு நானும் மத்தவங்களப் போல நெனச்சேன். ஆனா இறங்குறப்பயே வந்த எல்லா அதிகாரிகள் கைலயும் பாத்தேன். தீக்கதிர்தான் இருந்துச்சு. அவங்க வர்றாங்கன்னு தெரிஞ்சு அங்கு கூடுன பெரியார் நகர் மக்களும் ஒவ்வொருத்தர் கைலயும் தீக்கதிரோடதான் நின்னாங்களாம். தீக்கதிரோட முதல் பக்கச் செய்திதான் மந்திரமாக இருந்துருக்கு. ஜேசிபி எந்திரம் வந்துச்சு. முதல்ல என்னோட முதுகுப்புறந்தான் வந்து நின்னுச்சு.
நான் மாட்டுத் தொழுவத்துல மூக்கைப் பிடிச்சுட்டு உக்காந்திருந்தப்ப வராத சில பேரு அப்ப வந்து விநாயகர் மேல கை வெச்சுருவீங்களான்னு வாய்ச்சவடால் பேசுனாங்க. வந்தவங்களோட அடைமொழியக் கேட்டா எனக்கு சிரிப்புதான் வந்துச்சு... ஒருத்தரு எரியீட்டி, இன்னொருத்தரு ஸ்டோனு. அவங்க பாச்சா பலிச்சுரக்கூடாதுன்னு அப்ப வேண்டிக்கிட்டேன். யார்கிட்ட வேண்டிக்க முடியும்.. என்கிட்டயே வேண்டிக்கிட்டேன். சுவரைப் பாத்து ஜேசிபி எந்திரம் போனதுதான் தாமதம். ஏதோ அதுக்காகவே காத்துருந்த மாதிரி பொல, பொலன்னு சுவர் உதிர்ந்து போச்சு.

சுவரை எடுத்த ஜேசிபி நானிருந்த மாட்டுத் தொழுவத்தோட வளாகச் சுவர்களையும் தீண்டுச்சு. அடுத்து நான்தான்னு மூச்சைப் பிடிச்சுக்கிட்டு உட்காந்திருந்தேன். ஆனா ஜேசிபி பின்வாங்குச்சு. பேசிக்கலாம்னு கிளம்பிட்டாங்க. அச்சச்சோ... நம்மள விட்டுட்டாங்களேன்னு நெனச்சேன். ஆனா அதுக்கப்புறமும் ஒவ்வொரு நாளும் பாத்துட்டுப் போனாங்க தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்காரங்க.

பிப்ரவரி 6. காலைல என்னோட முதுகுப்பக்கம் பரபரப்பா இருந்துச்சு. எல்லாரும் தீக்கதிர் வாங்கிப் படிச்சுட்டுருக்குற சத்தம் கேட்டுச்சு. ஏதோ மார்க்சிஸ்ட் கட்சியோட மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் முதல்வருக்கு கடிதம் எழுதிருக்காருன்னு வாசிச்சாங்க. அப்பவே நெனச்சேன், இன்னக்கி ஏதாவது நடக்கும்னு. நெனச்ச மாதிரியே மீண்டும் ஜேசிபி.

என்னைத் தூக்க மாநகராட்சி ஊழியர் தொட்டப்ப ஏதோ சாப விமோசனம் கிடைச்ச உணர்வுதான். பெரியார் நகர் நோக்கி என்னை அவர் எடுத்துட்டுப் போனப்பதான் அவ்வளவு நாளும் எனது முதுகுப்புறத்துல இருந்தவங்கள பாக்க முடிஞ்சுது. என்னை ஆவலா பாத்தாங்களே ஒழிய, குத்துக்கல் மாதிரி இவ்வளவு நாள் எங்கள மறிச்சு உட்கார்ந்திருந்தாயேனு யாரும் பாக்கலை. அங்கருந்து என்னைத் தொட்டுத் தூக்கிட்டு வந்தவர் அருந்ததியர்னு பேசிக்கிட்டதும் என்னோட காதுல விழுந்துச்சு.

எனக்காக அருந்ததியர் சமூகத்தினர் செஞ்சு வெச்ச மேடைல ஜம்முனு உக்கார வெச்சாங்க. முறைப்படி எனக்கு எதெல்லாம் செய்யணுமோ அதெல்லாம் செஞ்சாங்க. பாதை கிடைத்ததோடு, போனசாக நானும் கிடைத்தேன்னு மக்கள் பேசுனாங்க. வழிவிட்டான் பிள்ளையார் என்று எனக்கு பெயரும் சூட்டிட்டாங்க. எனக்குமல்லவா சேர்த்து வழி பிறந்துருக்கு...

Tuesday, April 13, 2010

"அங்காடித் தெரு"வாகும் பொதுத்துறை உருக்காலை!


தனது நாசகர உலகமய, தனியார் மய மற்றும் தாராளமயப் பாதையில் மத்திய அரசு தீவிரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் எதையும் அரசு புதிதாக உருவாக்கவில்லை. அதோடு ஏற்கெனவே இருந்துகொண்டிருக்கும் பொதுத்துறை நிறுவனங்களையும் சீர்குலைக்கும் வேலையில் இறங்கியுள்ளது. நிரந்தர மற்றும் முறையான ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகிறது. இன்றைக்கு, பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களில் நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கையை விட ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.


இன்றைக்கு ஏராளமான பணத்தை ஒவ்வொருவரும் தங்கள் கல்விக்காக செலவழித்து வருகிறார்கள். பத்தாம் வகுப்பு, ஐடிஐ, பட்டயப்படிப்புகள் மற்றும் பட்டப்படிப்புகள் என்று பல்வேறு தடைகளைத் தாண்டி தங்கள் படிப்புகளை முடிக்கிறார்கள். சரியான வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையில் அமரும் இவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலை பார்க்க சம்மதிக்கிறார்கள். ஒப்பந்ததாரர்கள் மூலமாக இந்தத் தொழிலாளர்களை நிர்வாகம் சுரண்டி எடுக்கிறது. அவர்களுக்குத் தரப்படும் சம்பளமோ அற்பமானதாகும். அதோடு, தற்போது எழுந்துள்ள நெருக்கடி நிலைமை, இருப்பதையும் பிடுங்கிவிடும் அபாயத்தை இந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் முன்பு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.


விசாகப்பட்டினம் உருக்கு ஆலையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இந்த விபரங்களை உறுதிப்படுத்துகிறது. இந்த ஆலையில் பணியாற்றும் 300 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மத்தியில் சிஐடியு சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பணியிடத்தில் கேள்வி கேட்டால் பதில் சொல்ல மாட்டார்கள் என்பதற்காக அவர்கள் வசிக்கும் இடங்களில் போய் ஆய்வு நடத்தினார்கள். விசாகப்பட்டினத்தில் உள்ள அப்பிகொண்டா மற்றும் சப்பாவரம் ஆகிய பகுதிகளில் இந்த ஆய்வு நடந்தது. அவர்களின் ஊதியம், பணியால் உண்டாகும் நோய்கள், பொருளாதார நிலை, நவீனமயத்தின் பாதிப்பு, வாழ்விடத்தில் உள்ள பிரச்சனைகள் மற்றும் சமூகப் பிரச்சனைகள் ஆகியவற்றைச் சுற்றியே கேள்விகள் அமைந்திருந்தன.


சுமை தூக்கும் பணியாளர்களின் ஊதியம் பரிதாபமாக உள்ளது. இந்தப்பணியில் இருப்பவர்களில் பலர் மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் பெறுகிறார்கள். அதிகபட்சமாக ஒரு சுமை தூக்கும் பணியாளரின் சம்பளம் வெறும் 4 ஆயிரம் ரூபாய்தான். இந்த அதிகபட்ச ஊதியம்கூட மாநில அரசு நிர்ணயித்திருக்கும் குறைந்தபட்ச கூலியை விடக்குறைவானதாகும். அதிலும் வேலை இருந்தால்தான் சம்பளம் கிடைக்கும். வேறு எந்த சலுகைகளும் அவர்களுக்கு இல்லை. கூடுதல் நேரம் வேலை செய்தால் அதற்காகத் தனி ஊதியம் எதுவும் கிடையாது. வேலை செய்யும் நாட்கள் குறைவாக இருந்தால் பி.எப் மற்றும் ஈ.எஸ்.ஐ. பிடித்தம் எல்லாம் கிடையாது. அதனால் முடிந்த அளவிற்கு இந்தப்பிடித்தம் இல்லாத அளவிற்கு நாட்களைக் குறைக்கும் வேலையையும் நிர்வாகம் செய்துவிடுகிறது.


இந்தப் பொதுத்துறை ஆலையில் 25 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். ஆலைக்குள் 10 ஆயிரம் பேரும், கட்டுமானப்பணியில் 15 ஆயிரம் பேரும் உள்ளனர். ஆலைக்குள் பணியாற்றும் 10 ஆயிரம் பேரில் சுமார் 4 ஆயிரம் பேர் நிரந்தரப்பணியாளர்கள் போலவே பணியாற்றுகிறார்கள். அவர்களுக்குத் தரப்படும் பணி, வேலை நேரம், பொறுப்பு ஆகிய நிரந்தரப் பணியாளர்களுக்குள்ளது என்றாலும் சம்பளம், படிகள் மற்றும் இதர சலுகைகள் மட்டும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இவர்களின் பெரும்பாலானவர்கள் 20 முதல் 30 வயதுக்கு சொந்தக்காரர்களாவர். தார், கால்சியம், அம்மோனியா சல்பேட், அசிட்டிலின் ஆகியவற்றை இவர்கள் கையாளுவதால், இளம் வயதிலேயே தோல் மற்றும் தொண்டை தொடர்பான வியாதிகள், எலும்புருக்கி நோய் மற்றும் முகங்களில் ஏற்படும் மாறுதல்கள் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.


700 டிகிரி முதல் 1,000 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பம் உள்ள இடங்களில் இவர்கள் பணியாற்றுகிறார்கள். 60 முதல் 80 மீட்டர் உயரத்தில் பணிபுரிபவர்களில் பலர் விபத்துக்கு உள்ளாகிறார்கள். கிடைக்கும் வருமானம் போதாததால் கிட்டத்தட்ட அனைத்து தொழிலாளர்களுமே கடனில் மூழ்கி விடுகிறார்கள். போதாக்குறைக்கு, நவீனமயம் வேறு. இதனால் ஆய்வு செய்யப்பட்ட 300 பேரில் சுமார் 50 பேருக்கு தொடர்ச்சியாக வேலை கிடைப்பதில்லை. சில சமயங்களில் ஒரு மாதம், இரண்டு மாதம் என்று வேலை கிடைக்காமல் காத்திருக்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் அவர்களுக்கு சம்பளம் கிடையாது. அதோடு, தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் அண்டை மாவட்டங்களிலிருந்து வந்தவர்களாவர்.


அவர்களிடம் ரேசன் அட்டைகள் கிடையாது. குழந்தைகளின் கல்விக்காக மாதாமாதம் 200 முதல் 300 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு வீட்டு வாடகைக்கே போய்விடுகிறது. இதெல்லாம் போதாதென்று ஏறிக்கொண்டே போகும் விலைவாசியும் இவர்களை வாட்டி எடுக்கிறது. அங்காடித் தெரு திரைப்படத்தில் ஒரு வசனம் வருகிறது. சொந்த ஊர்ல பிச்சை கூட எடுக்க முடியாது என்று. விசாகப்பட்டின உருக்காலையில் பணியாற்றும் பலருக்கும் அந்த நிலைதான். இவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தற்போது சிஐடியு இறங்கியுள்ளது.

Monday, April 5, 2010

"குழந்தைகள் தியாகம் வீண் போகாது...!"



என்ன தொழில் செய்கிறார் என்று கேட்டால், அதற்குப் பதில் சொல்ல வேண்டுமென்பதற்காக வேண்டுமென்றால் விவசாயம் என்று சொல்லலாமே ஒழிய, அவருக்கென்று நிரந்தரத் தொழில் எதுவும் கிடையாது. ஆனால் பலரும் கையில் எடுக்க அச்சப்படும் ஒரு விஷயத்தில் போராடி நின்று வெற்றி பெற்றுள்ளார் 55 வயதாகும் சந்திரபதி என்ற பெண்மணி. ஜூன் 15, 2007 அன்று மனோஜ் மற்றும் அவரது மனைவி பப்லி ஆகிய இருவரும் கொலை செய்யப்பட்டனர். இருவரும் தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் ஒரே கோத்திரத்தில் பிறந்த அவர்கள் திருமணம் செய்வதை அனுமதிக்க மாட்டோம் என்று சட்டவிரோதமாக ஊர்ப்பஞ்சாயத்து என்ற பெயரில் சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்தார்கள்.


இவர்கள்தான் ஊர்ப்பெரியவர்கள் என்றும் தங்களைக் கூறிக்கொள்பவர்கள். அவ்வாறு திருமணம் செய்த மனோஜ் மற்றும் பப்லி ஆகிய இருவரும் படுகொலையும் செய்யப்பட்டனர். இதில் கொலை செய்யப்பட்ட மனோஜின் தாய்தான் சந்திரபதி. இந்தக் கொடுரத்தை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஊர்க்கட்டுப்பாடு என்று பயந்து நடுங்கி இருந்து கொள்ளாமல் பஞ்சாயத்து தலைவர்களிலிருந்து கொலைகாரர்கள் வரை அனைவரையும் நீதிமன்றத்தில் கூண்டில் நிறுத்துவதில் வெற்றிபெற்றார். அவ்வாறு நிறுத்தப்பட்டவர்களில் பப்லியின் உறவினர்கள் ஐந்து பேருக்கு மரண தண்டணையும், பஞ்சாயத்துத் தலைவர் கங்கா ராமுக்கு ஆயுள் தண்டனையும் மார்ச் 30 அன்று வழங்கப்பட்டுள்ளது.


ஆனால் இந்த மூன்றாண்டுக்காலத்தில் ஏராளமான தடைக்கற்களை சந்திரபதி சமாளிக்க வேண்டியிருந்தது. ஒட்டுமொத்தமாக ஊரே அவரை சமூகப்புறக்கணிப்பு செய்தது. அதைப்பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை. கோத்திரம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொள்ள குழந்தைகளுக்கு உரிமையுள்ளது என்றார் அவர். காலம் இப்போது பெரும் அளவில் மாறியிருக்கிறது. தங்கள் வாழ்க்கைத் துணையை குழந்தைகள் தேர்வு செய்யும்போது பெண்கள் ஆதரவு தர வேண்டும். ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்து கொண்டவர்களைப் பார்த்து நீங்கள் இருவரும் சகோதர, சகோதரி என்று கூறுபவர்கள்தான் உண்மையில் கொலை செய்கிறார்கள் என்று பொரிந்து தள்ளுகிறார் சந்திரபதி.


இந்தப் போராட்டத்தில் அவருக்கு முதலில் கைகொடுத்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்தான். தற்போது வழங்கப்பட்டுள்ள கர்நால் நீதிமன்றத் தீர்ப்பு பற்றிப் பேசிய ஜனநாயக மாதர் சங்கத்தின் அரியானா மாநிலத் தலைவரான ஜக்மதி சங்வான், ஒவ்வொரு நபரும் தங்கள் விருப்பத்திற்கேற்ப திருமணம் செய்து கொள்ளலாம் என்று அரசியல் சட்டம் அளித்திருக்கும் உரிமை காக்கப்பட வேண்டும் என்று எங்கள் அமைப்பு நம்புகிறது என்றார். வழக்கம்போலவே, பாஜகவின் கருத்து மழுப்பலாகவே இருந்தது. அக்கட்சியின் தேசிய செயலாளர்களில் ஒருவரான கேப்டன்.அபிமன்யு கூறுகையில், காலத்தின்போக்கில் மாற்றமும் வரும் என்று கூறிக்கொண்டார். இவர் ஜாட் சாதி அமைப்பின் தலைவர்களில் ஒருவராகவும் இரூப்பதாலேயே இந்த மழுப்பல் பதில் வருகிறது.


சந்திரபதிக்கு ஆதரவான கருத்து சொல்பவர்களில்கூட பெரும்பாலானவர்கள் அதை வெளிப்படையாக சொல்ல மறுக்கிறார்கள். ஜாட் கூட்டமைப்பின் மற்றொரு தலைவரான ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி எம்.எ°.மாலிக் போன்றவர்கள் மறைமுகமாக இந்தக் கொடுமைகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்து கொள்வது 1946 ஆம் ஆண்டுவரை தடைசெய்யப்பட்டதாகவே இருந்தது என்று மழுப்புகிறார்கள். சாதி அமைப்புகள் கிராமப்புறங்களில் இன்னும் வலுவாக ஊடுருவியிருப்பதே இதற்குக் காரணமாகும். ஆனால் எனது குழந்தைகளின் தியாகம் வீணாகிப்போய்விடாது. சமூகத்தில் மாற்றத்தை இவர்களின் தியாகம் கொண்டு வந்தே தீரும் என்று உறுதியாகக் கூறுகிறார் சந்திரபதி.


உங்களுக்கு இரண்டு பெண்கள் இருக்கிறார்களே... அவர்களின் திருமணம் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டால், நான் அவர்களிடம் ஏற்கெனவே சொல்லிவிட்டேன். தங்கள் வாழ்க்கைத் துணைவர்களை அவர்களே தேர்வு செய்து கொள்ளலாம். அவர்களுடைய கோத்திரத்தில் உள்ளவர்களையோ அல்லது வெளியில் உள்ளவர்களையோ தங்கள் இஷ்டப்படி அவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு தடையேதும் இல்லை என்று உறுதியாகச் சொல்கிறார் சந்திரபதி. இதுவரை கட்டப்பஞ்சாயத்துப் பேர்வழிகளுக்கு ஆதரவாக இருந்த நிலை மாறி, சமூகநீதிக்காற்றின் திசை மாறியுள்ளது என்பதையே இது காட்டுகிறது என்கிறார்கள் அரியானாவைச் சேர்ந்த பலர்.