Wednesday, June 30, 2021

டி.வி.சீரியலும், கெட்ட வங்கியும்..😊😊

 "என்ன மேடை மேதாவி, சௌக்கியமா?"

"அடடே.. என்ன முத்து... நல்லா இருக்கேன்... நீங்க நலமா?"

"இந்தக் கொரோனா ரொம்ப முடக்கிப் போட்டுருச்சு...  பூங்கால நடக்கலாம்னு சொன்னாங்க... அதான் வந்தேன்..."

"ஆமா. நானும் இன்னிக்குதான் வந்தேன்.. என்னை இப்புடி மேடை மேதாவின்னு கிண்டலா யாராவது கூப்புட்டு எவ்வளவு நாளாச்சி.. உங்கள மாதிரி சில பேருதான் அப்புடிக் கூப்புடுவீங்க..."

"இந்த லாக்டவுன்ல உங்களுக்கு எப்புடி பொழுது போச்சு..."

"வழக்கம் போல பேப்பரு, புக்... அப்புறம் டி.வி. சீரியல்..."

"டி.வி.சீரியலா... நீங்களா... ஆச்சரியமா இருக்கே... அதையெல்லாம் ரொம்ப கிண்டல் பண்ணுவீங்களே.."

"இன்னிக்குப் பேப்பர் பாத்தீங்களா..."என்று திடீரென்று கேட்டார் மேடை மேதாவி.

"கொஞ்சம் பாத்தேன்... இனிமேதான் முழுசாப் படிக்கணும்"

"Bad Bankனு ஒண்ணு ஆரம்பிக்குறாங்கள்ல..." என்றபோது குறுக்கே பாய்ந்தார் முத்து. 

"இதுக்குதான் உங்கள மேடை மேதாவின்னு நாங்க கிண்டல் பண்றது... டி.வி. சீரியல் ஏன் பாக்குறீங்கன்னு கேட்டா, மேதாவி அங்க தாவிட்டீங்க, பாருங்க.." என்று நக்கலாகச் சொன்னார்.

"நான் பாக்குற சீரியல்ல, ஒரு பொண்ணு ஒரு பையனக் காதலிக்குறா... அந்தப் பையன் வேற ஒரு பொண்ணக் காதலிக்குறான்... அந்தப் பொண்ணுக்கு அத்தை பையனோட கல்யாணம் நிச்சயம் பண்ணுறாங்க... அந்தப் பையனோ ரெண்டாவதா ஒரு பொண்ணக் கல்யாணம் பண்ணனும்னு நெனக்குறான்.. இதுல அந்த அத்தை பையன வேற ஒரு பொண்ணும் காதலிக்குறா... இதுல யாரு கதாநாயகின்னு  பாக்குறதுக்குள்ள வேற ஒரு பொண்ணு கதைக்குள்ள வருது..."

"அய்யோ... நான் கேக்காமலேயே இருந்திருக்கலாமோ... தலையும் புரியல,, காலும் புரியல... இதெல்லாம் என்ன இழவுன்னு பாத்துக்கிட்டு இருக்கீங்க... நீங்க அந்த பேங்க் பத்தியே சொல்லுங்க..."

"ஆமா... வராத கடனையெல்லாம் ஒரு பேங்குல போடப் போறாங்க... "

"வராத கடன வேற பேங்குல போட்டா வந்துருமா.."

"கேளுங்க சொல்றேன்... இதுக்கு முன்னாடி  ஒரு தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம்னு ஒண்ணு வெச்சுருக்காங்க... அதையும் இந்த வங்கியோட இணைக்குறாங்க... இந்த வங்கியோட கணக்குல எத சேக்குறதுன்னு ஒரு 22 பெரிய கணக்குகள அடையாளம் பாத்து வெச்சுருக்காங்க.. 89 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு அதுக்கு..."



Image courtesy : Indibuzzonline

"அடேங்கப்பா...."

"ஆமா... வீடியோகோன், ரிலையன்ஸ்லாம் அதுல இருக்கு... இந்த வங்கிய யாரு நடத்தப் போறாங்கன்னா... 51 சதவிகிதப் பங்குகள பொதுத்துறை வங்கிகள் கிட்ட குடுத்துருவாங்க.. அதாவது எந்த வங்கிகளோட வராத கடன்கள இந்தப் புது வங்கி தலைல கட்டுறாங்களோ, அந்தப்புது வங்கிக்கும் அவங்கதான் முதலாளிங்க... "

முத்துக்கு தலை சுற்றத் துவங்கியிருந்தது.

"அப்புறம் இந்தப் பொதுத்துறை வங்கிகளோட பங்குகள வித்து அதத் தனியார் கிட்ட குடுத்துருவாங்க... அந்தப் பங்குகள ரிலையன்ஸ் வாங்கிருவாங்க... கடன் தராத பட்டியல்ல இருக்குற ரிலையன்ஸ், புது வங்கிக்கும் சேத்து முதலாளியாகிடுவார்..."

"என்னங்க இது... புரியலையே... "

"கிட்டத்தட்ட அந்த சீரியல் மாதிரிதான்... தொடர்ந்து பார்த்தா புரிஞ்சுடும். இதப் பத்தியும் தொடர்ந்து படிங்க. புரியும்.. பேரே கெட்ட வங்கினா பாத்துக்குங்களேன்.. போறதும் நீங்க போட்ட பணம்தானே... வங்கில இருக்குற பணத்துல 85 சதவிகிதம் நம்மள மாதிரி ஆட்களோடதுதான்... என்ன சத்தத்தையே காணோம்..."

திரும்பிப் பார்த்தால், பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார் முத்து. 😄

1 comment:

  1. தொடர்ந்து பார்த்தாலும் புரியாது போலருக்கே..நம்ம பணம் பறிபோகுதுன்னு புரியுது..அப்ப புரிஞ்சுக்கிட்டுத்தான் ஆவோணும்..

    ReplyDelete