
சில நாட்களுக்கு முன்பு, சிறிய அளவிலான மாரடைப்பு ஏற்பட்டு பாரதி அண்ணன் அனுமதிக்கப்பட்டார் என்று தோழர் கோவிந்தராஜன் குறிப்பிட்டார். இரண்டு நாட்கள் முன்புகூட தோழர் சுவாமிநாதனிடம் கேட்டபோது, நன்றாக இருக்கிறார். ஆஞ்சியோ செய்துள்ளார்கள் என்றார். பார்க்கப் போகவில்லையே என்ற எண்ணம் ஒரு ஓரத்தில் இருந்தது.
ஆனால் இன்று வந்த எஸ்.எம்.எஸ்.தான் என்னை உலுக்கி எடுத்துவிட்டது. ஆஞ்சியோ செய்து நான்கு நாட்களே ஆகியிருந்த நிலையில் ஜன.22 அன்று பணியில் சேர்ந்துள்ளார். அதற்குக் காரணம் ஜன.21 அன்று நாடு தழுவிய அளவில் எல்.ஐ.சி.ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ததுதான். 22 அன்று வேலையில் சேரவில்லை என்றால், வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் விடுப்பில் இருந்ததாகப் பதிவு செய்யப்பட்டுவிடும்.
நியாயமான கோரிக்கைகளுக்காக நடக்கும் வேலை நிறுத்தப்போராட்டம் முழு வெற்றி என்ற செய்தியைத் தவிர வேறு எதையும் கேட்க விரும்பாத போர்க்குணம்தான் ஜன.22 அன்று அலுவலகத்திற்கு அவரை அழைத்துச் சென்றது. 21 அன்று நடந்த வேலைநிறுத்தத்தில் அனைவரும் பங்கேற்றனர் என்பதுதான் அவர் கேட்க விரும்பிய செய்தி. தன்னைத்தவிர என்று ஒரு கொசுறு அந்தச் செய்தியில் தொங்கிக் கொண்டிருப்பதை வெறுத்திருக்கிறார்.
அற்புதமான தொழிற்சங்கப் போராளியான பாரதி அண்ணன் சக சங்க உறுப்பினர்களுக்கு செய்முறை வகுப்பு எடுத்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். நிஜமாவே ஹீரோதான்.
அவரது உடல் விரைவில் தேற வாழ்த்தியே ஆக வேண்டும். வாழ்த்துக்கள் தோழரே...
(எங்களால் அன்புடன் பாரதி அண்ணன் என்று அழைக்கப்படும் தோழர்.சந்திரசேகரன், காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம், மதுரைக்கோட்டத்தின் தலைவராக உள்ளார்.)