Showing posts with label ஜம்முகாஷ். Show all posts
Showing posts with label ஜம்முகாஷ். Show all posts

Saturday, June 26, 2021

"கும்பல்" அல்ல, "கூட்டணி" - மக்கள் தீர்ப்பு

திடீர் ஞானோதயம் வந்து காஷ்மீர் பிரச்சனை பற்றிய பேச்சுவார்த்தையை ஒன்றிய அரசு மேற்கொண்டிருக்கிறது.


புகைப்படம் - தி இந்து ஆங்கில நாளிதழ்

இந்தக் கூட்டத்தில் குப்கார் கூட்டணியும் கலந்து கொண்டது. இந்தக் கூட்டணியைத்தான் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "குப்கார் கும்பல்" என்று கிண்டலாக அழைத்துக் கொண்டிருந்தார், அதோடு நிற்காமல் காஷ்மீருக்கு இவர்கள் "தேவையற்றவர்கள்" என்றார். இதன் தலைவர்கள் சிறைகளிலும், வீட்டுக் காவல்களிலும் வைக்கப்பட்டனர். இரண்டாம் மட்டத் தலைவர்கள் பலர் 14 மாதங்களாகியும் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளனர்.

யார் இந்தக் குப்கார் கூட்டணி

2019 ஆம் ஆண்டு ஆகஸ்டு முதல் வாரத்தில் திடீரென்று பரபரப்பு தொற்றிக் கொண்டது. சுற்றுலாப் பயணிகள் உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான துணை ராணுவப் படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். ஏதோ நடக்கப் போகிறது என்ற உணர்வில் அதுவரையில் பார்த்தாலே தீட்டு என்பதைப் போன்று பிற எதிர்க்கட்சித் தலைவர்களைப் பார்க்காமல் இருந்த மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹ்பூபா, பரூக் அப்துல்லாவைச் சந்திக்கிறார். அவர்கள் என்னவென்று தெரிந்து கொள்வதற்கு முன்பாகவே, 370வது பிரிவு நீக்கப்படுகிறது என்ற அறிவிப்பு ஆகஸ்டு 5, 2019 அன்று வெளியாகிறது.

அதற்கு ஒருநாள் முன்பாக, முக்கியமான அரசியல் கட்சிகள், காங்கிரஸ் உள்ளிட்டு, பங்கேற்ற கூட்டம் பரூக் அப்துல்லா வீட்டில் நடந்தது. அதில் ஒரு உறுதிமொழி ஆவணத்தை நிறைவேற்றினார்கள். அதை அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்றுவோம் என்றும் முடிவெடுத்தனர்.

பரூக் அப்துல்லாவின் வீடு குப்கார் சாலையில் உள்ளது. அங்கு அமர்ந்து இந்த உறுதிமொழி ஆவணத்தை வெளியிட்டு உருவாக்கப்பட்ட கூட்டணிக்கு "People's Alliance for Gupkar Declaration" என்று  பெயரிட்டார்கள். மற்றொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இந்த வீட்டை 1970களின் துவக்கத்தில் ஷேக் அப்துல்லா விலைக்கு வாஙகியிருக்கிறார். 

வெற்றி

2020 ஆம் ஆண்டு டிசம்பரில் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில்களுக்கான தேர்தல் நடைபெற்றது. வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல், பிரச்சாரம் செய்ய விடாமல் குப்கார் கூட்டணி வேட்பாளர்களுக்கு முட்டுக்கட்டை போட்டதைத் தாண்டி மொத்தமுள்ள 280 வார்டுகளில் 100 வார்டுகளில் வெற்றி பெற்றனர். இந்த முடிவுகளுக்குப் பிறகுதான் "குப்கார் கும்பல்" என்று சொல்வது "குப்கார் கூட்டணி" என்ற வார்த்தை மாற்றத்தை ஏற்படுத்தியது. கும்பல் என்று சொல்லாதீர்கள், கூட்டணி என்று சொல்லுங்கள் என்று மக்கள் கட்டளையிட்டது போன்று இருந்தது.

இந்தக் கூட்டணிதான் இப்போதைக்கு நம்பகத்தன்மை கொண்டதாக உள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இடம் பெற்றிருப்பது நம்பகத்தன்மையை அதிகரித்திருக்கிறது.  தேசிய மற்றும் பிரதேச உணர்வுகளைப் பிரதிபலிப்பதாகவும் இருக்கிறது. மாநில அந்தஸ்து மற்றும் அதைத் தொடர்ந்து தேர்தல்கள் என்று அடுத்தடுத்த கட்ட நடவடிக்கைகள் மிகவும் அவசியம்.