Sunday, January 2, 2011

தள்ளு மாடல் வண்டி இது.. தள்ளி விடுங்க...!!



கடந்த வாரத்தில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கட்கான் என்ற ரயில் நிலையத்திற்குள் நுழைந்த சிரஞ்சீவி எக்ஸ்பிரஸ் தண்டவாளத்திலிருந்து இறங்கி ஓடத்துவங்கியது. நடைபாதையைத் தாண்டிய ரயில் சில இரு சக்கர வாகனங்களைச் சுக்குநூறாக்கியது. பாதை சரியாகத் தெரியாத அளவிற்கு பனி மூடியிருந்ததுதான் இதற்குக் காரணமாகும். நல்லவேளையாக, அதற்கு மேல் ஓடாமல் ரயில் நின்று விட்டது. ஆனால் இத்தகைய விபத்துகள் ஒவ்வொரு ஆண்டிலும் நடப்பது சாதாரண நிகழ்வாக ஆகி விட்டது என்கிறார்கள் ரயில்வே ஊழியர்கள். பாதுகாப்பு தொடர்பாக ரயில்வே நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதுதான் இத்தகைய விபத்துகள் தொடர்ந்து நிகழ்வதற்குக் காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

தண்டவாளங்களை பனி மூடிக்கிடக்கும் நிலையில் அதை எதிர்கொள்ளும் வகையிலான கருவிகளை ரயில்களில் பொருத்த வேண்டும் என்று நீண்டநாட்களாகக் கோரிக்கை இருந்து வருகிறது. ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கோ கோப்புகளைப் பார்ப்பதற்கு நேரமில்லை. உயர் அதிகாரிகளோ பாதுகாப்புக் கருவிகள் வாங்குவது வீண் செலவு என்கிறார்கள். இத்தகைய பாதுகாப்புக் கருவிகளை அனைத்து ரயில்களிலும் பொருத்துவதற்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவாகும் என்கிறார்கள் அவர்கள். ரயில்வே நிர்வாகம் தற்போதுள்ள நிலையில் இத்தகைய கருவிகளை வாங்க முடியாது. இந்தக் கருவிகள் ஆண்டில் ஒரே ஒரு மாதம்தான் பயன்படும் என்பது அவர்கள் கருத்தாக உள்ளது.

இவர்களின் கருத்துகளைத் தாண்டி மக்களின் பாதுகாப்புக்காக இந்தக் கருவிகள் அவசியம் என்று சொல்வதற்கு மக்களின் பிரதிநிதியான அமைச்சர் வேலைக்குச் செல்வதே அபூர்வமானதாக இருப்பதே காரணமாகும். ஆனால் மேடைகளில் ரயில்வே பாதுகாப்பு பற்றி மம்தா பானர்ஜி பொரிந்து தள்ளி வருகிறார். விபத்தே இல்லாத ரயில்வே என்ற முழக்கத்தை முன்வைக்கிறார். கொல்கத்தாவில் மெட்ரோ சேவை ஒன்றைத் துவக்கி வைத்துப் பேசிய அவர், விபத்துகளைத் தடுக்கும் வகையிலான கருவிகளை இன்னும் ஓரிரு ஆண்டுகளில் பொருத்தி விடுவோம். எந்தவிதமான விபத்தும் ஏற்படுவதிலிருந்து பாதுகாப்பதோடு, வருங்காலத்தில் விபத்தே இல்லாத நிலைமை உருவாகும் என்று பேசினார். ஆனால் பாதுகாப்பு கருவிகள் வாங்குவதற்கு தலைநகரில் அமர்ந்திருக்கும் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து வருகிறார்கள்.

3 ஆயிரம் பயணிகள் ரயில்கள் மற்றும் ஆயிரம் சரக்கு ரயில்களில் இந்தக் கருவிகள் பொருத்தப்பட வேண்டும். இவற்றோடு சிக்னல்களின் தொழில்நுட்பத்தையும் மேம்படுத்த வேண்டியுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் பாகத்தில் ரயில்வேதுறை பெரிய அளவில் முன்னேறியிருப்பதாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டனர். ஆனால் பாதுகாப்பு தொடர்பான ஊழியர்கள் பணியிடங்களில் சுமார் 90 ஆயிரம் இடங்களை நிரப்பவேயில்லை. தற்போது அமைச்சராக இருக்கும் மம்தா பானர்ஜி பொறுப்பேற்று ஓராண்டாகியும் அந்தப் பணியிடங்கள் பற்றி வாய் திறக்கவேயில்லை. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பனி மூடிக்கிடந்ததால் தில்லி-லக்னோ ரயில் பாதையில் இரண்டு விபத்துகள் நடந்தன. அதில் பத்து பேர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

கடுமையான குளிர் இருக்கும்போது வட மாநிலங்களில் பயணம் செய்யும் மக்களில் பெரும்பாலானர்கள் தங்கள் பயணத்தை நேரத்தில் முடிக்கவில்லை. பலரும் பயணத்தையே ரத்து செய்து வருகிறார்கள். கடந்த வாரத்தில் தில்லிக்கு வந்து சேர வேண்டிய 45 ரயில்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டன. ஒரே நாளில் எட்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இத்தகைய பிரச்சனைகளையெல்லாம் தடுக்கக்கூடிய பாதுகாப்புப் கருவிகளைப் பொருத்துவது தொடர்பாக பல ஆலோசனைக் கூட்டங்கள் நடந்துவிட்டன. அதிகாரிகளின் கருத்துதான் மேலோங்கி நிற்கிறது. மம்தா பானர்ஜியைப் பொறுத்தவரை, அமைச்சரின் நாற்காலியில் வந்து அமர்வதே பத்திரிகைகளில் செய்தியாகும் அளவுக்கு அவருடைய வருகை இருக்கிறது.

இடதுசாரிக்கட்சிகள் மற்றும் ரயில்வே தொழிற்சங்கங்களின் நிர்ப்பந்தத்தால் பாதுகாப்பு கருவிகளை வாங்க முயற்சிக்கிறோம் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த உறுதிமொழிக்கும் வேறு ஏதாவது முட்டுக்கட்டை வராமல் இருந்தால், அடுத்த ஆண்டு குளிர்காலத்திலாவது பாதுகாப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுவிடும். முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டால் அடுத்த ஆண்டும் இதேகதைதான் இருக்கும் என்று ரயில் அமைச்சகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் குறிப்பிடுகிறார்.

No comments:

Post a Comment