Thursday, February 18, 2010

பனிமலைகள் உருகவே செய்கின்றன!



2035 ஆம் ஆண்டிற்குள் இமயமலையில் பனிப்பிரதேசங்களே இல்லாமல் போய்விடும் என்ற சர்வதேச அரசுகளுக்கிடையிலான குழுவின் அறிக்கை போதிய ஆய்வுகளை மேற்கொள்ளாமல் கூறப்பட்டிருந்தது. அதை அந்தக்குழுவும், அக்குழுவின் தலைவருமான ராஜேந்திர பச்சோரியும் ஒப்புக்கொண்டனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் சார்பில் வெப்பமயமாதல் என்பது ஒரு பிரச்சனையே அல்ல என்றும், அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் என்பது வளர்ச்சிக்கு எதிரானது என்று பல பன்னாட்டு நிறுவனங்களின் சார்பில் பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டது. அதற்கு ஆதரவாக சர்வதேசக்குழுவின் இமயமலை குறித்த தவறான கணிப்பை அவர்கள் ஆதாரமாக சுட்டிக்காட்டி வருகிறார்கள்.


இமயமலை குறித்த கணிப்பில் தவறு ஏற்பட்டதை ஒப்புக்கொள்ளும் பச்சோரி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிரான கருத்துகள் தவறானவை என்கிறார். பனிப்பிரதேசங்கள் உருகி வருகின்றன என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை என்று கூறும் அவர், 2035 ஆம் ஆண்டு என்ற கணிப்புதான் தவறேயொழிய, பனி உருகிக் கொண்டிருக்கிறது என்பது பல சோதனைகளிலும் உறுதியாகியுள்ளது என்று எச்சரிக்கிறார். சுற்றுச்சூழலுக்கு சாதகமான இருப்பிடம் என்ற தலைப்பில் மும்பையில் நடந்த கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார். வெப்பமயமாதல் பிரச்சனையை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டுவிட வேண்டாம் என்று அவர் ஆட்சியாளர்களை மட்டுமின்றி, மக்களையும் கேட்டுக் கொண்டார்.


மேலும் பேசிய அவர், இமயமலை எந்தப்பாதிப்பிற்கும் உள்ளாகவில்லை என்று சிலர் கூறுவார்கள். அது சரியல்ல. அதிக வேகத்தில் அங்குள்ள பனிப்பிரதேசங்கள் உருகி வருகின்றன. துரதிருஷ்டவசமாக, நமது நாட்டில் இது குறித்த ஆய்வுகள் பெரிய அளவில் நடக்கவில்லை. போதிய தடுப்பு நடவடிக்கைகளும் செய்யப்படவில்லை. இதனால் வட இந்தியாவில் இருக்கும் ஆறுகள் அனைத்திலுமே பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. சொல்லப்போனால் இதை நாம் ஏற்கெனவே பார்த்துள்ளோம். இதுவரை வெள்ளத்தையே பார்க்காத ராஜஸ்தானில் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தோடு, வறட்சியும் மிகக் கடுமையாக ஏற்படும் நிலை உள்ளது என்றார்.


சர்வதேசக் குழுவின் அறிக்கை மீதான சர்ச்சை குறித்துப் பேசிய அவர், அந்த அறிக்கை சரியானதே. 2035 ஆம் ஆண்டு என்பதில் மட்டும்தான் மாற்றம் உள்ளது. அறிவியல் ரீதியாக சிந்திக்காமல் வெப்பமயமாதல் என்பதையே நிராகரிக்கும் நபர்கள் உள்ளனர். அதேபோல், சில சுயநல சக்திகளும் இத்தகைய கருத்துகளைப் பரப்பி வருகின்றன. வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் ஆகியவை ஏழை மக்களைக் கடுமையாகப் பாதிக்கின்றன. அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து நான் குரலெழுப்புகிறேன். இத்தகைய அணுகுமுறை சுயநல சக்திகள் விரும்பவில்லை என்று குறிப்பிட்டார். வளர்ந்த நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்களே வெப்பமயமாதல் பிரச்சனையைக் கையாள வேண்டியதில்லை என்று கருத்து தெரிவித்து வருகின்றன.


வெப்பமயமாதல் பிரச்சனையை இந்தியர்கள் அபாரமாகக் கையாளுவார்கள் என்று கருத்து தெரிவித்த அவர், இந்த நாடுதான் என்னை வளர்த்து எடுத்தது. எனக்கு இந்தியக் குடிமகன்கள் அனைவரும் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், இந்திய மக்கள் அனைவரும் மிகவும் புத்திசாலிகள். வெப்பமயமாதல் குறித்த அறிகுறிகள் ஏற்பட்டால், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அவர்கள் எடுப்பார்கள். இதன்மூலம்தான் நமது குழந்தைகளுக்கு நல்ல வருங்காலத்தை நம்மால் அளிக்க முடியும். மழைப்பொழிவு மற்றும் பனிப்பொழிவு அதிகரிக்கும் என்று சர்வதேசக்குழு கணித்துள்ளது. 2005 ஆம் ஆண்டில் மும்பையில் ஏற்பட்ட திடீர் வெள்ளமே இதற்கு எடுத்துக்காட்டாகும். இத்தகைய சம்பவங்கள் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றன. மும்பைக்கு அருகில் கடல் மட்டம் மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றார் பச்சோரி.


2003 ஆம் ஆண்டில் ஆந்திராவில் ஏற்பட்ட கடுமையான வெப்பக்காற்றை அவர் சுட்டிக்காட்டினார். இத்தகைய வெப்பக்காற்றுக்கு சுமார் நான்காயிரம் பேர் பலியானதான பதிவு செய்யப்பட்டுள்ளது. பயிர் பொய்த்துப் போதல், திடீர் வெள்ளம் மற்றும் திடீர் வறட்சி ஆகியவை வெப்பமயமாதல் பிரச்சனை இருக்கிறது என்பதையும், அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதையும்தான் காட்டுகிறது. வெப்பமயமாதல் பிரச்சனையின் அளவை ஒப்பிட்டால் சர்வதேசக் குழுவின் தவறு மிகச்சிறியதுதான். இத்தனைக்கும் அதை அக்குழுவே ஒப்புக் கொண்டுவிட்டது. இருந்தாலும் வெப்பமயமாதல் நடவடிக்கைகள் தங்கள் லாபத்தைக் குறைத்து விடும் என்பதால் பன்னாட்டு நிறுவனங்கள் எதிர்ப்பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளன.

No comments:

Post a Comment