Tuesday, July 28, 2009

திவால் நிலையில் 305 அமெரிக்க வங்கிகள்!



அடமானக் கடனில் துவங்கி சர்வதேசப் பொருளாதார நெருக்கடி வரை கொண்டு சென்றுள்ள அமெரிக்க வங்கிகள் திவாலாகி வரும் பிரச்சனை பூதாகரமாக உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு நிறைவில் சுமார் 252 வங்கிகள் எப்போது வேண்டுமானாலும் மஞ்சக்கடுதாசி கொடுத்து விடும் என்ற நிலையில் இருந்தன. திவாலாகி வரும் வங்கிகளை எடுத்துக் கொள்வதற்காக அமெரிக்க அரசு நியமித்திருக்கும் மத்திய காப்பீட்டுக்கழகமே இந்தத் தகவலை வெளியிட்டிருந்தது. தற்போது அதே கழகத்தின் மதிப்பீட்டின்படி திவாலாகிவிடும் என்ற அபாயத்தில் இருக்கும் வங்கிகளின் எண்ணிக்கை 305 ஆக உயர்ந்துவிட்டது. வரும் மாதங்களில் இது மேலும் அதிகரிக்கும் என்பதே பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக இருந்து வருகிறது.


வங்கிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி கடந்த ஆண்டின் இரண்டாவது பாதியில்தான் உருவானது என்று பலர் கருதினாலும் அதற்கு முன்பே நெருக்கடி துவங்கிவிட்டது. ஜனவரி 2008லிருந்து இன்றுவரை திவாலான வங்கிகளின் எண்ணிக்கை 89யைத் தொட்டுவிட்டது. நடப்பாண்டில் மட்டும் 64 வங்கிகள் திவாலாகிவிட்டன. ஒவ்வொரு மாதமும் சராசரியாக ஒன்பது வங்கிகள் இழுத்து மூடப்படுகின்றன. நெருக்கடி அதிகரித்ததாகக் கூறப்படும் 2008ஆம் ஆண்டில் கூட 25 வங்கிகள் மட்டும்தான் திவாலாகின. ஆனால் நடப்பாண்டின் முதல் ஏழு மாதத்திலேயே 64 வங்கிகள் திவாலாகியுள்ள நிலையில், அமெரிக்க பொருளாதார நெருக்கடி முற்றிவிட்டதையே இது காட்டுகிறது. இதை சரிசெய்ய இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கும் என்று வலதுசாரிப் பொருளாதார ஆய்வாளர்களே குறிப்பிடுகின்றனர்.


ஒவ்வொரு நிதியாண்டின் நிறைவிலும் தங்கள் வங்கி மிகவும் வலுவாக இருக்கிறது என்றுதான் திவாலான வங்கிகளின் வரவு-செலவு அறிக்கைகள் கூறிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு வங்கியும், மற்றொரு வங்கியோடு இணைக்கப்பட்டிருந்ததால் திவால் நிலை அனைத்து வங்கிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. வங்கிகளின் சொத்து மதிப்பைக் காட்டி எந்த நிலையிலும் இந்த சொத்துக்களை விற்றாலே போதும். வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருப்பிவிடலாம் என்ற வாதத்தையே வங்கி நிர்வாகிகள் வைத்து வந்தனர். ஆனால் சொத்து மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி நிர்வாகங்களை உலுக்கி எடுத்துவிட்டது. திவாலான வங்கிகளின் மொத்த சொத்து மதிப்புக்கும், வங்கியில் உள்ள வாடிக்கையாளர்களின் பண இருப்புக்குமான இடைவெளி பெரிதும் குறைந்துவிட்டது.


சொத்துக்களை விற்றால் மட்டுமே வாடிக்கையாளர்களின் சேமிப்புப்பணம் திருப்பித்தரப்படும் என்ற நிலையில் பல வங்கிகள். மேலும் பல வங்கிகளோ அதை விட மோசமான நிலைக்கு சென்று விட்டன. அத்தனை சொத்துக்களையும் விற்றால் கூட பணத்தைத் திருப்பித் தர முடியாது என்பது அந்த வங்கிகளின் நிலை. வங்கிகளின் சரிவு துவங்கியபோது பெரிய வங்கிகள்தான் பாதிக்கப்பட்டன. சிறிய வங்கிகள் தப்பித்து விடும் என்று கூறப்பட்டது. ஆனால் பெரிய வங்கிகள் கூட மீண்டுவிடுமோ என்ற எண்ணத்தை உருவாக்குகின்றன. மீளவே முடியாத நிலைக்குப்போய்தான் சிறிய வங்கிகள் திவால் அறிவிப்பையே வெளியிடுகின்றன. பெரிய வங்கிகள் அரசின் மீட்புத்திட்டத்தின் மூலம் பெரும் பலனை அனுபவிக்கின்றன.

ஏற்கெனவே வேலையின்னை அதிகரித்துள்ள நிலையில், நிதி நிறுவனங்களின் தள்ளாட்டம் அந்த நிலையை மேலும் மோசமடையவே செய்யும். சிட்டி குழுமம் மற்றும் கோல்டுமேன் சாக்ஸ் ஆகிய இரு வங்கிகளும் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் சிறிய லாபத்தை சம்பாதித்துள்ளன. இதுவும் அவர்களின் மொத்த நஷ்டத்தை ஈடுகட்ட எந்தவிதத்திலும் உதவாது. மொத்த நஷ்டம் என்பது அமெரிக்க அரசு வாயிலாக அந்நாட்டு மக்களின் தலையில்தான் சுமத்தப்பட உள்ளது. ஆனால் சிறிய, அதிலும் குறிப்பாக கிராமப்புறத்தில் உள்ள வங்கிகள் எழவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இழுத்து மூடப்பட்டுள்ளன.

இந்த நிலைக்கு மாறாக, இந்திய வங்கிகள் லாபத்தில் இயங்கி வருகின்றன. 90 சதவீத வங்கிகள் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதே இதற்குக் காரணம் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதற்கு மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகள்தான் காரணம் என்பதை அவர் கூறாமல் விட்டுவிட்டார். இதுதான் காரணம் என்று கூறிக்கொண்டே, அந்தக்காரணத்தைக் குழியில் போட்டு மூடும் வகையில் தனியார் மயம் பற்றிய சிந்தனையில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

Sunday, July 26, 2009

பழைய தமிழ்ப்பாடலில் சிங்கு, அத்வானி, அம்பானி,



பாட்டு வரும்...பாட்டு வரும்... உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால்..

அமெரிக்க வரைபடத்தைப் பார்த்துக் கொண்டு மன்மோகன்சிங் பாடுவதாகத்தான் பாடல் துவங்குகிறது. ஆனால் அவருடைய கைகளோ புஷ், ஒபாமா, ஹிலாரி ஆகியோர் கைகளில் இருக்கும் ஆவணங்களில் கையெழுத்து இட்ட வண்ணம் இருக்கின்றன. மேலும் இந்திய வரைபடத்தை "சுருட்டுவது" போன்ற காட்சியும் அருமை.


**************


மாணிக்கத்தேரில் மரகதக்கலசம் மின்னுவதென்ன...


தோற்றுப்போய்விட்டோம் என்ற கவலையே இல்லாமல் தேரில் கிளம்பும் அத்வானி உற்சாகமாகப் பாடுவதாக படமாக்கப்பட்டுள்ளது. மரகதக்கலசம் என்ற வரி வரும்போதெல்லாம் பழைய துணியால் மறைக்கப்பட்ட ஒன்றைக் காட்டுகிறார்கள். தேர்தலுக்கு முன்பு எடுக்கப்பட்ட பாடல் காட்சியாதலால் பிரதமர் என்று அந்த இடத்தில் எழுதி வைத்திருந்தார்கள். கிழிசலுக்கிடையில் அது தெரியத்தான் செய்கிறது. தேரின் பாதையில் ஜஸ்வந்த்சிங், யஷ்வந்த்சின்கா, அருண்சோரி ஆகியோரின் வீடுகள் வரும்போது அத்வானி முகத்தைத் திருப்பிக் கொள்ளும் காட்சி தத்ரூபமாகப் படமாகியுள்ளது.


**************


ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்...


முகேஷ் அம்பானி தலைமையில் முதலாளிகள் கூட்டம் குத்தாட்டம் போடுகிறது. அமர்சிங் இல்லாததால் ஒரு மூலையில் அனில் அம்பானி தனியாக ஆடிக்கொண்டிருக்கிறார். அமெரிக்க மெட்டுக்கு ஆடுவதில் இவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சிதான். என்னடா இவங்க ஆடலையேன்னு பன்னாட்டு நிறுவனங்கள் பக்கம் திரும்பினால், ஆட்டத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் வேலையில் இருப்பது தெரிகிறது. பாட்டுக்கான மெட்டை அவர்கள்தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது அவர்களின் அசைவிலிருந்து தெரிகிறது.


**************


மாட்டுக்கார வேலா... உன் மாட்டைக் கொஞ்சம் பாத்துக்கடா...


இடதுசாரிக்கட்சிகளின் தலைவர்கள் இந்தப்பாடலைப் பாடுகிறார்கள். பொதுத்துறையை மாடாக உருவகப்படுத்தி கூறுகிறார்கள். பாடலுக்கு நடுவில் காங்கிரஸ்காரர்கள் மாட்டைக்கவருவதற்காக வருவதும், பாத்தியா உன்னால திருட முடியலை... நாங்க வந்திருந்தா இந்நேரம் திருடியிருப்போம் என்று பாஜக சொல்வதும் படமாக்கப்பட்டுள்ளது. கூடவே வரும் திமுககாரர்கள் எங்க ஏரியாவுக்குள்ள மட்டும் போயிராதீங்கன்னு கமுக்கமா சொல்றது பாடல் வரிகளை மீறி நமது காதுகளில் விழுகிறது.


**************


ஏன் பிறந்தாய் மகனே... ஏன் பிறந்தாயோ...


நாட்டு நிகழ்வுகளைப் பார்த்து தேசபக்த அக்கறையுடன் ஒரு தாய் இந்தப்பாடலைப் பாடுவதாக படமாகியுள்ளது. நியாயத்துக்குப் போராடும் மாணவர்கள், தொழிலாளர்கள் தடியடி வாங்கி சுருண்டு விழும் காட்சிகளின்போது அந்தத்தாய் விடும் கண்ணீர் பார்ப்பவர்களின் கண்களிலும் நீரை வரச்செய்கிறது. இப்போதைய நிகழ்வுகளுக்குப் பொருத்தமாக சில வரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. நியாயத்திற்குப் போராடியும் உனக்கேன் இந்த குண்டாந்தடியடி என்ற அந்த வரிகளுக்குப்பிறகு, மீண்டும் ஏன் பிறந்தாய் மகனே... ஏன் பிறந்தாயோ என்று துவங்கும்போது தியேட்டரே கண்ணீரில் மிதக்கிறது.


**************


தனிமையிலே இனிமை காண முடியுமா...


இப்பாடலை டி.ஆர்.பாலு பாடுகிறார். பதவியுடனேயே இருந்துவிட்ட அவரால் அதைப்பிரிந்து வாடும் சோகத்தை அப்படியே முகபாவனைகளில் கொண்டு வந்து விட முடிகிறது. வெளியிலிருந்து ஆதரவுன்னு என்ன வெச்சு சொல்ல வெச்சாங்களே... அப்பவே முழிச்சுகிடலை... கட்சி கிடையாது... நான்தான் வெளியிலருந்து ஆதரவு தரப்போறேன்னு தெரியாம கடுகடுன்னு முகத்தை வெச்சுகிட்டு டிவிக்கு பேட்டி கொடுத்தேனே... என்று பாடலுக்கிடையில் அவர் சோக வசனம் பேசுவதாக சேர்க்கப்பட்டுள்ள காட்சிகள் கைதட்டலை அள்ளுகின்றன.


**************


கல்வியா.. செல்வமா... வீரமா...


வீராவேசத்துடன் பாடல் துவங்கினாலும் ஏதோ நெருடல் இருந்துகொண்டேயிருக்கிறது. பாடலின் நிறைவுப்பகுதி அந்த நெருடல் உண்மை என்று நிரூபிக்கிறது. காலத்துக்கேற்ற மாற்றங்களுடன் வந்துள்ள பாடலின் கடைசி வரிகள் இந்த மூன்றை விட மின்வெட்டே பெரியது என்பதை அழுத்தந்திருத்தமாகப் பதிய வைக்கின்றன. அந்த வரிகளின்போது ஆர்க்காட்டார் கம்பீரமாக நடந்து வரும் காட்சி அற்புதம். பாடலின் நடுவில் பெண்கள் மின்கம்பத்தைச் சுற்றிவந்து வணங்குவது போன்ற காட்சி நன்கு படமாக்கப்பட்டுள்ளது.

Saturday, July 25, 2009

மூத்த அரசியல்வாதி அன்பழகனுக்குத் தெரியாதா?



1983 ஆம் ஆண்டு. திமுக, தெலுங்கு தேசம், அகாலிதளம், தேசிய மாநாட்டுக்கட்சி, இந்தியக்குடியரசுக்கட்சி போன்ற மாநிலக்கட்சிகள் மற்றும் இடதுசாரிக்கட்சிகள் கலந்து கொண்ட மாநாடு நடந்தது. மாநிலங்களுக்கு நிதி சுயாட்சி தேவை என்பது இந்த மாநாட்டின் முக்கியக்கருத்தாக இருந்தது. இந்தக்காலகட்டத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தது.

தற்போது மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் இதே கட்சியின் நிதியமைச்சர் க.அன்பழகன், மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது என்று கவலையோடு குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் எதேச்சாதிகாரப் போக்கை எதிர்த்து போர்க்குரல்கள் எழுப்பிய காலம்போய் இப்போது வெறும் கவலை தெரிவிப்பதோடு திமுக நிறுத்திக் கொள்கிறது.

மாறியுள்ள காலகட்டத்தில், அதுவும் மாநிலக்கட்சிகள் இல்லாமல் மத்தியில் ஆட்சியே அமையாது என்றிருக்கும் நிலையில் இந்தக் கோரிக்கையை வலுவாக முன்iவைக்க முடியும். சந்தையிலிருந்து பெறும் கடனில் மாநில மற்றும் மத்திய அரசுகளின் பங்கு தற்போது 20:80 சதவீதமாக உள்ளது. ஆனால் 1950களில் 50:50 சதவீதமாக இருந்தது. இந்த சதவீதத்தை மத்திய அரசுதான் நிர்ணயிக்கிறது என்றும் அன்பழகன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைக்கு மீண்டும் கொண்டு வருவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை கூறியது. மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சியில் இருக்கும் மாநில அரசுகள் தொடர்ந்து இக்கோரிக்கையை உரக்க எழுப்புகின்றன. திமுகவைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சரவையில் உள்ளனர். அதுதான் பேச வேண்டிய இடம். சட்டமன்றத்தில் ஒலித்த அமைச்சர் அன்பழகனின் கவலைக்குரல், மத்திய அமைச்சரவையில் உரிமைக்குரல்களாக மாறினால்தான் பலன் கிடைக்கும். இது மூத்த அரசியல்வாதிக்கு தெரியுமல்லவா?

Friday, July 24, 2009

நெருக்கடியா... யாருக்கு..??




பொருளாதார நெருக்கடியால் உலகின் பெரிய, பெரிய நிறுவனங்கள் எல்லாம் முழி பிதுங்கிப் போய்க்கிடக்கின்றன. கோடிக்கணக்கான தொழிலாளர்கள் இருந்ததையும் இழந்து நிற்கும் அவலம். 1930களில் ஏற்பட்ட நெருக்கடியை விட பல மடங்கு அதிகமான சிக்கல் என்று வல்லுநர்கள் ஆய்வறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


ஆனால் பெரு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள்(இதில் பலர் அந்தந்த நிறுவனங்களின் முதலாளிகள்) எக்கச்சக்கமாக சம்பளம் வாங்கியுள்ளார்கள். ஹியூலெட் பாக்கர்டு என்ற கணினி நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வெளியேற்றியது. கேட்டால் செலவு தாங்கவில்லை என்றார்கள். ஆனால் அந்நிறுவனத்தின் தலைவரான ராண்டி மோட், ஒரு ஆண்டுக்கு நூறு கோடிக்கும் மேல் தனது நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளார். 2007 ஆம் ஆண்டில் அவர் பெற்ற வருமானத்தை விட நான்கு மடங்கு அதிகமாக 2008ல்(ஆமாம்.. நெருக்கடிக்குள்ளான அதே ஆண்டில்தான்) எடுத்துக் கொண்டுள்ளார்.


ஜே.பி.மார்கன் சேஸ் நிறுவனத்தின் தலைவரோ போனசாக மட்டும் 10 கோடி ரூபாயை 2008 ஆம் ஆண்டில் பெற்றுள்ளார். திணறிக்கொண்டிருப்பதாகக் கூறப்படும் அமெரிக்க நிறுவனமான ஏடி அண்டு டியின் தலைவர் ஜான் டி ஸ்டான்கீ, 50 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம், இழப்பீடு மற்றும் போனஸ் என்று பலவகைகளில் பணம் பெற்றுள்ளார்.


உலகிலேயே அதிகமான சம்பளத்தைப் பெறும் இந்த நபர்களின் பட்டியலில் ஒரு பெண் அதிகாரியும் இடம் பெற்றுள்ளார். லாக்ஹீட் மார்ட்டின் என்ற நிறுவனத்தின் உயர் அதிகாரியான லிண்டா ஆர் கூடனும் சுமார் 50 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டியுள்ளார். எந்தக்கையால் ஊழியர்களை வீட்டுக்கு விரட்டும் உத்தரவுகளில் கையெழுத்து இடுகிறார்களோ, அதே கையால் கூசாமல் நான்கு, ஐந்து மடங்கு அதிகமான சம்பளத்தை எடுத்துக்கொண்டு நடையைக் கட்டியுள்ளார்கள் இந்த அதிகாரிகள்.

Wednesday, July 22, 2009

விடுதலை கிடைத்து 62 ஆண்டுகளாகி விட்டதாம்...?!





சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுக்காவில் உள்ள நெய்யமலை மற்றும் மன்னூர் பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்கள் அடிப்படை வசதிகள் கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர். விடுதலை கிடைத்து 62 ஆண்டுகள் ஆகியும் கவனிக்கப்படாமல் இருக்கிறோம் என்பது அந்த மக்களின் பொதுவான கருத்தாக இருந்து வருகிறது.


நெய்யமலை : நெய்யமலை அதை சுற்றியுள்ள அக்கரப்பட்டி, ஆலங்கடை ஆகிய மலை கிராமங்களில் சுமார் 1,300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 2 ஆயிரத்து 953 வாக்காளர்கள் உள்ளனர். 653 பள்ளி மாணவ, மாணவியர்கள் உள்ளனர். சேலத்திலிருந்து கருமந்துரை செல்லும் பிரதான தார் சாலையில் அக்கரப்பட்டி வரை செல்லலாம். அடர்ந்த காடுகள் வழியே 6 கிலோ மீட்டர் வரை சென்றால் நெய்யமலை அடிவாரம் வரும். அதன் பின் சுமார் 8 கிலோ மீட்டர் மூன்று மலைகளை கடந்து மலைப்பாதை வழியாக சென்றால் நெய்யமலை கிராமம் வரும்.


இக்கிராமத்திற்கு செல்ல மலைவாழ் மக்களே உருவாக்கிய மலைப்பாதைதான் உள்ளது. மழைக்காலங்களில் விளையும் உணவு தானியமும், ரேஷனில் கிடைக்க கூடிய பொருட்களும் தான் இம்மக்களுக்கு உணவாகும். ஒரு பாழடைந்த கிணற்றில் தண்ணீரை தேக்கி வைத்து. துணியால் வடிகட்டி குடிக்கும் அவல நிலையில் உள்ளனர். மின்சாரம் என்பதை இதுவரை அந்த மக்கள் பார்த்ததே இல்லை. இப்பகுதி மக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது பெண்களுக்கு பிரசவ காலங்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் 48 கி.மீ. கடந்து ஆத்தூர் செல்ல வேண்டும் அல்லது 90 கி.மீ. கடந்து சேலம் செல்ல வேண்டும். இதனால் உயிரிழப்பு என்பது சர்வ சாதாரணமாக காக்கை, குருவி இறப்பதைபோல் நடந்து கொண்டிருக்கின்றது.


கல்வி நிலையம் என்ற பெயரில் 8வது வரையில் உள்ளது. ஆசிரியர், வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் வருவார். மற்ற நாட்களில் மாணவர்களே பாடம் நடத்தும் அவல நிலையும் உள்ளது. மேற்படிப்பிற்கு பல மைல் தூரம், அதுவும் மலையில் ஏறி இறங்கி செல்ல வேண்டியிருப்பதால் மேற்படிப்பிற்கு செல்வது இல்லை. ரேஷன் பொருட்கள் வாங்கவும் கூட மலையை விட்டு கீழே இறங்கி வரும் மோசமான நிலைமையில் இம்மக்கள் உள்ளனர்.


மன்னூர் : இம்மலையில் சுமார் 700 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 2 ஆயிரத்து 153 வாக்காளர்கள் உள்ளனர். இம்மலைகிராமத்திற்கு செல்ல வேண்டும் என்றால் மண்பாதை கூட கிடையாது. பாறைகளின் சந்துகளிலும், புதர்கள் நிறைந்த வனப்பகுதியிலும் செல்ல வேண்டும். இடப்பட்டி பிரதான சாலையில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் வரை சமமான காட்டுப்பாதையில் சென்று சுமார் 12 கிலோமீட்டர் மலை ஏறிச் சென்றால் மன்னூர் கிராமம்.

5வது வரை மட்டுமே பள்ளிக்கூடம் உள்ளது. வாரம் ஒரு நாள் மட்டுமே ஆசிரியர் வருவார். மீத நாட்களில் 5 வது படிக்கும் மாணவர்கள் தான் ஆசிரியர்கள். குடிநீருக்கு 3 கிலோமீட்டர் தூரம் கடந்து சென்றால் குடிநீர் தேக்க குட்டை வரும். அதுதான் மனிதனுக்கும், மிருகத்திற்கும், குடிநீர். ஒரே வித்தியாசம், மனிதன் துணியால் வடிகட்டி குடிக்கிறான். மிருகம் அப்படியே குடிக்கின்றது.


இப்பகுதி மக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டாலும் பிரசவ காலங்களிலும் மூங்கிலில் தொட்டில் கட்டி இரண்டு பேர் தூக்கி கொண்டு கீழே வரவேண்டும். இப்படி வரும் பொழுது பலர் பாதியிலேயே இறந்து போய் உள்ளனர். பெண்களுக்கு பாதி வழியில் பிரசவம் நடந்துள்ளது. சின்ன குழந்தைகளுக்கு கல்வி கிடைக்காமல் மலையை விட்டு கீழே பல மைல்கள் கடந்து தங்கி படிக்கின்றனர். மாதம் ஒரு முறை மட்டும் மலைக்கு செல்லும் கொடுமைகள். ரேஷன் பொருட்கள் வாங்கி வர சுமார் 20 கிலோமீட்டர் தூரம் வர வேண்டியுள்ளது.


பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் பணிகள் நடக்காததால் ஜூலை 19 அன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன் தலைமையில் நடந்த இந்தப்போராட்டத்தால் நான்கு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.


போராட்டக் களத்திலேயே வெற்றி

காவல் துறையினர் பலமாக குவிக்கப்பட்ட மக்களை மிரட்டி பார்த்தனர். 62 ஆண்டுகளாக கொடுமைகளை அனுபவித்த மக்களின் கோபத்திற்கு முன் காவல்துறையினரின் மிரட்டல் பலிக்கவில்லை. அதன் பின் ஆத்தூர் தாசில்தாரும் நேரில் வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின் எழுத்து பூர்வமான ஒப்பந்தம் எழுதி அனைத்து துறை அதிகாரிகளும் கையெழுத்திட்டு இரண்டு மலைக்கும் உடனடியாக ரேஷன் கடை அமைக்க வழி வகை செய்தனர்.


மீதம் உள்ள பிரச்சனைகள் மின்சாரத்தை உடனடியாக கொண்டு வருவது வனத்துறை அதிகாரிகளுடன் பேசி சாலை வசதிகள் ஏற்படுத்துவது, குடிநிர் பிரச்சனை தீர்வு காண்பது ஆசிரியர்கள் எல்லா நாட்களும் இருக்க நடவடிக்கைகள் எடுப்பது உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செயல்படுத்த அனைத்து அதிகாரிகளும், மக்களும், வாலிபர் சங்கத் தலைவர்களும் கலந்து கொள்ளும் கூட்டத்தை கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூலை 23 அன்று நடத்திட ஒப்புதல் எழுதி கொடுத்தனர்.

எம்.குணசேகரன்

நன்றி : தீக்கதிர்

Tuesday, July 21, 2009

தினமலரின் டாப்-டென் புளுகுகள்

அண்டப்புளுகுகளையும், ஆகாசப் புளுகுகளையும் கொண்டு "நிறம் மாறுது சிவப்பு" என்ற தலைப்பில் ஒரு பக்கத்திற்கு ரீல் விட்டுள்ளது தினமலர் நாளிதழ்(ஜூலை 19). வலியப்புனைந்து எழுதப்பட்டுள்ள இந்த கற்பனைக் கட்டுரை அப்பத்திரிகையின் வாசகர்களை தவறான வழியில் அழைத்துச் செல்லவே முயல்கிறது.

இந்த ஒருபக்கக் கட்டுரையிலிருந்து வெறும் பத்து புளுகுகள் மட்டும் பட்டியலிடப்படுகிறது.

1. புளுகு - அச்சுதானந்தனை பொலிட்பீரோவில் இருந்து மட்டுமின்றி கட்சிப்பொறுப்பு எதிலும் இருக்காமல் நீக்கி விட்டது,

உண்மை - பொலிட்பீரோவில் இருந்து மட்டும்தான் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் மத்தியக்குழுவில் அவர் இன்னும் நீடிக்கிறார். அதோடு கேரள மாநில செயற்குழு மற்றும் மாநிலக்குழுக்களிலும் அவர் தொடர்கிறார்.

2. புளுகு - அச்சுதானந்தன் அமைச்சரவையில் உள்ள ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் ஊழல், அதிகார துஷ்பிரயோகத்தில் சிக்கியவர்கள்.

உண்மை - இது கடைந்தெடுத்த பொய். தற்போதுள்ள அமைச்சர்கள் யார் மீதும் எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை.

3. புளுகு - தனியே கட்டம் கட்டி பினராயி விஜயன் "மகனுக்கு அமெரிக்க படிப்பு" என்று தலைப்பு போட்டுள்ளது.

உண்மை - கட்டத்திற்குள் உள்ள செய்தியிலேயே உண்மை உள்ளது. பிரிட்டனில்தான் அவர் கல்வி கற்றுள்ளார். தினமலருக்குதான் அமெரிக்க பாசம் பொங்கி வழிகிறது.

4. புளுகு - சீன போரில் கம்யூ. வேஷம் என்ற தலைப்பிலான தனி பாக்ஸ் செய்தி உள்ளது. கட்சிக்குள் கருத்து வேறுபாடு எழுந்தபோது கம்யூ. பொதுச்செயலாளராக இருந்த ஜோதிபாசு உடனே கேரள முதல்வராக இருந்த நம்பூதிரிபாடை போனில் அழைத்துப்பேசினார் என்று செய்தியில் கூறப்பட்டுள்ளது.

உண்மை - ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலும் சரி, பிரிந்தபிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் சரி ஜோதிபாசு பொதுச்செயலாளர் பொறுப்பை வகிக்கவேயில்லை. மேலும் இவர்கள் சொல்லும் காலகட்டத்தில் இ.எம்.எஸ். கேரள முதல்வர் பொறுப்பிலும் இல்லை.

5. புளுகு - மக்களவைத் தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் என்று கூட சரிவர முடிவுக்கு வரமுடியாத நிலை உள்ளது.

உண்மை - அகில இந்திய நிலை குறித்து மத்தியக்குழுவும், ஒவ்வொரு மாநில நிலைமை குறித்து அந்தந்த மாநிலக்குழுக்களும் ஆய்வை நிறைவு செய்து அடுத்த கட்ட வேலைகளைத் துவங்கிவிட்டன.

6. புளுகு - முதல்வர் அச்சுதானந்தன் சபரிமலை சென்று வந்த நிகழ்வை சபரிமலை சர்ச்சை நாயகன் என்ற பெயரில் கட்டம் கட்டி வெளியிட்டுள்ளது.

உண்மை - அதில் சர்ச்சை எழவில்லை. முதல்வர் என்ற முறையில் சபரிமலை பக்தர்களுக்கான வசதிகள் குறித்து அறிய நடந்தே சென்று வந்தார்.

7. புளுகு - 374 கோடி ரூபாய் லால்லின் ஊழல் வழக்கில் சிக்கிய போதும்... என்று தினமலரின் செய்தி செல்கிறது.

உண்மை - திட்டத்தின் மொத்த மதிப்பையே போட்டு அவ்வளவு ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாகத் தொடர்ந்து கயிறு திரிக்கிறார்கள். அதோடு, இதை விசாரிக்கும் சிபிஐயே பினராயி விஜயன் எந்தவித சொந்த ஆதாயமும் பெறவில்லை என்றும் கூறியிருக்கிறதே...

8. புளுகு - கேரளாவில் பினராயி நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்து மேலிடம் என்றுமே கண்டு கொண்டதில்லை,

உண்மை - வெளிப்படையாக விவாதம் நடத்திய காரணத்திற்காக பொலிட்பீரோவிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டாரே... ஒருபக்கக் கட்டுரையில் அந்தச் செய்தியும்தான் இருக்கிறது.

9. புளுகு - கேரளாவில் தொண்டர்கள் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

உண்மை - அப்படியொன்றும் ஏற்படவில்லை என்பதுதான் உண்மை.

10. புளுகு - ஏழைகள் கட்சி என்ற போக்கில் இருந்து மார்க்சிஸ்ட் விலகிச் செல்வது வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது.

உண்மை - மத்திய ஆட்சிக்கு இடதுசாரிகள் ஆதரவு இருந்தபோது மட்டும் பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு, 100 நாள் வேலைத்திட்டம், அனைத்துத்தரப்பினரின் வங்கி சேமிப்பு பாதுகாக்கப்பட்டது, பழங்குடியினருக்கு பாதுகாப்பு மசோதான்னுதான் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி செயல்படுகிறது.

எந்தவித ஆதாரமுல் இல்லாமல், கேரளாவில் அந்த கட்சி ஒன்றுமில்லாமல் ஆவதற்கான அறிகுறி, பினராயிக்கு காரத் முழு ஆதரவு தருகிறார் என்பது புரியாத புதிராக உள்ளது, பினராயி மீது ஊழல் புகார்கள் ஏராளம், லாவலின் குறித்து கட்சி மவுனம் சாதிக்கிறது என்றெல்லாம் வதந்திச் சேற்றை வாரி இறைத்துள்ளது.

நிதானமாக, அதே நேரத்தில் உறுதியாக மார்க்சிஸ்ட் கட்சி நடைபோடுவதால்தான் தினமலர் போன்ற பத்திரிகைகள் பதற்றத்தால் பரபரப்பாகி உள்ளன. தங்கள் பதற்றத்தை மறைக்கவே கட்சியினர் மத்தியில் சலசலப்பு, பரபரப்பு என்றெல்லாம் இவர்களாகவே கிளப்பி விட்டுப்பார்க்கின்றனர்.

மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி செய்தியைப் போட்டாலும் அவரது படத்தையோ, பெயரையோ வெளியிடுவதில்லை என்று கொள்கை முடிவை எடுத்துள்ள தினமலர், விளம்பரம் தந்தால் மட்டும் வேண்டாம் என்று சொல்வதில்லை. சாக்கடையில் கொள்கையை வீசி எறிந்து விடுவார்கள்.

பணம் வருகிறதே ... கொள்கையாவது, மண்ணாவது..

இதுபோன்று மார்க்சிஸ்ட் கட்சியை நினைத்துவிட்டார்கள் போலும்.

Monday, July 20, 2009

பட்ஜெட் : நடுத்தர மக்களுக்கு என்ன மிச்சம்?



பட்ஜெட் : நடுத்தர மக்களுக்கு என்ன மிச்சம்?


பட்ஜெட்டை நிதியமைச்சர் வாசிக்கப்போகிறார் என்றவுடனேயே நடுத்தர வர்க்கத்தினர் பலரும் பரபரப்படைந்தனர். வருமான வரிக்கு எவ்வளவு விலக்கு தரப்போகிறார் என்ற கேள்வி அவர்களைக் குடைந்தெடுத்தது. ஊடகங்களும் அவர்களின் ஊகங்களுக்கு தீனி போட்டன. பட்ஜெட்டும் வந்தது. பரபரப்பும் அடங்கியது.மறுநாள் பத்திரிகைகளைப் பார்த்தவர்களுக்கு குழப்பம்.


இது சாதாரண மற்றும் நடுத்தர மக்களுக்கான பட்ஜெட் என்று பெரிய, பெரிய பொருளாதாரப் புலிகளெல்லாம் கூறியிருந்தன. ஆனால் விபரமாகப் பார்த்தால் புலிகளெல்லாம் தாங்கள் அனைவரும் சைவம் என்று சத்தியம் செய்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்தப் பொருளாதாரப் புலிகளின் கருத்துகளும் அமைந்தன.ஆணுக்கும், பெண்ணுக்கும் தலா பத்தாயிரமும், மூத்த குடிமக்களுக்கு பதினைந்தாயிரமும் வரம்பில் ஏற்றப்பட்டது. ஆனால் அதிக வருவாய் பெறுபவர்களுக்குத்தான் பெரிய ஆதாயம் என்பது அவர்களுக்கு எவ்வளவு சேமிப்பாகிறது என்ற கணக்கில் அம்பலமாகியுள்ளது.


2.5 லட்சம் ரூபாய் வருமானம் பெறுபவருக்கு பட்ஜெட் அறிவிப்பில் 1,300 ரூபாய் லாபம் என்றால் 25 லட்சம் ரூபாய் வருமானம் பெறுபவரோ 88 ஆயிரம் வரையில் லாபத்தை எடுத்து செல்கிறார். பத்து லட்ச ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானத்தை ஈட்டியவர்கள் மேல் இருந்த பத்து சதவீதக் கூடுதல் வரியும்(சர்சார்ஜ்) நீக்கப்பட்டுள்ளது. இவர்கள் காட்டில் மழைதான்.


வீட்டுக்கடன் வாங்கியிருக்கோமே... அந்த வட்டிக்கான வரிச்சலுகையாவது உயர்ந்திருக்கிறதா என்று கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுத் தேடிப்பார்த்து விட்டார்கள் நடுத்தர மக்கள். அதிலும் ஏமாற்றம்தான் மிச்சம்.

அகல உழாமல் ஆழ உழுது...!


அவர் வாயில் இருந்து வரப்போகும் வார்த்தைகளுக்காக கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நெஞ்சில் கைவைத்தபடி காத்திருந்தனர். இரும்பு எஃகு தொழிற்சாலைகளை நாட்டுடைமையாக்குகிறேன் என்று சாவேஸ் கூறியவுடன் உற்சாகத்தில் மிதக்க ஆரம்பித்தனர். கொண்டாட்டங்கள் துவங்குவதற்கு முன்பாக வெனிசுலாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துகின்றனர். தேசிய கீதம் நிறைவு பெற்றதுதான் தாமதம். ஒரே ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்தான். மடேசி, கான்சிகுவா, காரபோபோ, டாவ்சா உள்ளிட்டு நமது வாயில் அவ்வளவு எளிதாக நுழைய முடியாத பெயர்களைக் கொண்ட அந்த இரும்பு எஃகு தொழிற்சாலைகளின் நிர்வாகம் இனிமேலும் நம்மைச் சுரண்டாது என்ற நிலையே அவர்களின் வாழ்வில் மிக முக்கியமான தருணம் என்று அந்தக் கொண்டாட்டங்கள் உணர்த்தின. இது இரண்டு நிமிடத்தில் தயாராகும் நூடுல்ஸ் போன்ற விஷயமல்லவே... அகல உழாமல் ஆழ உழுத பெருமை சாவேசுக்குதான் சேர வேண்டும். ஆனால் தனி ஆளாக இதை சாதித்து விடவில்லை. ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கும்போது லட்சக்கணக்கான வெனிசுலா மக்களின் கரங்கள் அவருக்கு ஆதரவாக இருந்து கொண்டே யிருந்தன.


மே மாதத்தில் மட்டும் இரும்பு எஃகு, இயற்கை எரிவாயு மற்றும் சில எண்ணெய் நிறுவனங்கள் ஆகியவை நாட்டுடைமையாக்கப்பட்டன. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்றெல்லாம் திடீரென்று கிளம்பிவிடவில்லை வெனிசுலா அரசு. வெனிசுலாவைப் பொறுத்தவரை ஆட்சி மாற்றம் என்பது 1998லேயே ஏற்பட்டு விட்டது. ஆனால் மக்கள் நலக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது ஒன்றும் அவ்வளவு எளிதானதாக இல்லை. ஏற்கெனவே உருவாக்கிவைக்கப்பட்டிருந்த சட்டங்கள் பெரு நிறுவனங்கள் மற்றும் பணம் படைத்தவர்களுக்கு சாதகமாக இருந்தன.


தாண்டி வந்த பாதை


சினிமாவில் வரும் ஒன் மேன் ஆர்மி போல நாட்டின் பிரச்சனைகளைத் தீர்த்து விட முடியாது என்பதை மனதில் கொண்ட சாவேஸ், ஒரு அமைப்பின் தேவையைப் புரிந்து கொண்டார். ஐக்கிய வெனிசுலா சோசலிஸ்ட் கட்சி என்ற புதிய கட்சி உருவாக்கப்பட்டது. சோசலிசத்தை நோக்கி நாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் புதிய கட்சியில் இணைந்து கொள்ளலாம் என்று வேண்டுகோள் விடப்பட்டது. பல்வேறு இடதுசாரிக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் புதிய கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டன. சோசலிசத்தை நோக்கிச் செல்லும் பாதையில் சாவேஸ் தலைமையிலான வெனிசுலா அரசு முதலில் கையில் எடுத்த ஆயுதம் பிடிவிஎஸ்ஏ என்று அழைக்கப்படும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனம்தான். சாவேஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இந்த நிறுவனத்தின் வருமானம் அன்னிய மற்றும் உள்ளூர் பெரு நிறுவனங்களுக்கு சாதகமாகவே பயன்படுத்தப்பட்டது. 1976இல் நாட்டுடைமையாக்கப்பட்ட கச்சா எண்ணெய்த் துறையை மீண்டும் தனியார் கைகளில் ஒப்படைக்கும் முயற்சி 1996இல் மீண்டும் துவக்கப்பட்டது. பல மக்கள் விரோத நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் 1998இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்தது.


இருப்பினும் எண்ணெய் நிறுவன முதலாளிகளின் தூண்டுதலின்பேரில் 2002 ஆம் ஆண்டில் எண்ணெய் துறையை முடக்கும் முயற்சிகள் நடந்தன. உற்பத்தியே நின்று போகும் அளவிற்கு வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன. மக்களின் துணையோடு அதை முறியடித்த வெனிசுலா அரசு நிதானமாக, அதே வேளையில் தனது பாதை எதை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற திட்டத்துடன் தனது நடவடிக்கைகளைத் தொடர்ந்தது. 2007 ஆம் ஆண்டில் அரசியல் சட்டத்திருத்தங்களை மக்கள் முன் வைத்தபோது அது பெரும்பான்மை ஆதரவைப் பெறவில்லை. ஜனாதிபதி தேர்தல், பல பொது வாக்கெடுப்புகள் என்று தொடர்ந்து வெற்றியே பெற்றுக் கொண்டிருந்ததால் சாவேஸ் ஆதரவாளர்கள் அசட்டையாக இருந்ததுதான் அந்தத் தோல்விக்குப் பிரதான காரணமாக இருந்தது. மக்கள் ஆதரவோடு மீண்டும் பிப்ரவரி 2009இல் மிகவும் கவனமாக மக்கள் முன் சீர்திருத்தங்களை வைத்தபோது அவர்களின் புருவங்கள் உயர்ந்தன. இதையா தோற்கடித்தோம் என்ற எண்ணம் பரவலாகக் காணப்பட்டதை அமெரிக்கக் கண்காணிப்பாளர்கள் சிலரே தெரிவித்தனர். முந்தைய பொது வாக்கெடுப்பில் 49 சதவீத மக்களே அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இம்முறை 54 சதவீத மக்கள் சாவேசின் கரங்களை உயர்த்திப் பிடித்தனர். இரு ஆண்டுகளுக்கு முன்பு தேசிய வளர்ச்சித்திட்டம் ஒன்றை வெனிசுலா அரசு முன்வைத்திருந்தது. பொதுவாக்கெடுப்பில் கிடைத்த வெற்றி அந்தத்திட்டத்தை செயல்படுத்த உதவியது.


அந்தத்திட்டத்தின் குறிப்பிட்ட அங்கமாகவே நாட்டுடைமை நடவடிக்கைகள் நடந்துள்ளன. நாட்டுடைமை என்று அறிவித்தவுடன் லியனார்டோ கொன்சால்ஸ் என்ற தொழிலாளி, அப்பாடா... பாவிகள் ஒழிந்தார்கள். எங்களுக்கு ஏழு மாதமாக சம்பளமே கொடுக்கவில்லை என்று கைகளை சொடுக்காத குறையாக திட்டித் தீர்த்தார். இழந்த சம்பளத்தை மட்டும் இந்த நாட்டுடைமை நடவடிக்கை மீட்டுத் தரவில்லை. ஒரு நாள் சம்பளத்தில் 14 டாலர்கள் உயர்த்தப்படுகிறது என்ற அறிவிப்பு தொழிலாளர்கள் கண்களில் ஆனந்தக்கண்ணீர் உதிக்கச் செய்தது.


ஒவ்வொரு நாட்டுடைமைக்கும் ஒரே மாதிரியான உத்தியை சாவேஸ் தலைமையிலான அரசு கடைப்பிடிக்கவில்லை. சில துறைகளை அப்படியே அரசுடைமை ஆக்கியது. சில நிறுவனங்களில் பெரும்பான்மைப் பங்குகளை வாங்கியது. பங்குகளை விற்க மறுத்த நிறுவனங்கள் சட்டரீதியான நடவடிக் கையால் அரசின் கைவசம் சென்றன. அதிரடி சண் டைக்காட்சிகள் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டன. கடந்த இரு ஆண்டுகளில் அனைத்து எண்ணெய் நிறுவனங்கள், சிடோர் என்று அழைக்கப்படும் வெனி சுலாவின் பெரிய உருக்காலை, நாட்டின் மூன்றாவது பெரிய வங்கி, சிமெண்ட், தொலைத்தொடர்பு மற்றும் மின்துறை நிறுவனங்கள் ஆகியவை அரசுக்கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.


நிதானமான நடை


எட்டடி, பதினாறு அடிப்பாய்ச்சலெல்லாம் வெனிசுலாவின் நடையில் இல்லை. ஒவ்வொரு அடியாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் அதை முன்கூட்டியே திட்டமிட்டிருந்தார்கள். நாட்டுடைமை நடவடிக்கை முழுமையடைந்தவுடன் சோசலிச தொழில் வளாகம் அமைகிறது. இதில் சிறிது சிறிதாக நிறுவனங்களும், ஆலைகளும் தொழிலாளர்களின் நிர்வாகத்தின் கீழ் விடப்படும். இது இத்தனை ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும் என்றெல்லாம் சொல்லிக் கொள்ளவில்லை. இது நடக்கும் என்பதோடு நிற்கிறார்கள். ஆனால் உறுதியோடு. ஏற்கெனவே பல நிறுவனங்களில் தேர்தல்கள் மூலம் தொழிலாளர்கள் நிர்வாகத்தில் பங்கேற்கும் நடைமுறை வந்துள்ளது. அதிலும் எந்த அவசரமும் காட்டப்படவில்லை. சோதனை முயற்சிகள் நல்ல பலனைத் தந்தது. சில இடங்களில் உடனடியாக நிர்வாகத்தில் பங்கு தர வேண்டியதில்லை என்ற நிலையும் காணப்பட்டது. எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செல்லாமல் பொறுமையுடன் இத்தகையப் பிரச்சனைகள் அணுகப்படுகின்றன. கால அவகாசம் தேவைப்படுவதால் தான் ஜனாதிபதியாகத் தொடர வேண்டிய அவசியத்தை உணர்ந்த சாவேஸ் அதற்கான சட்டத்திருத்தத்தையும் மக்கள் முன் வைத்தார்.


ஒருவர் தொடர்ந்து இரு முறைதான் ஜனாதிபதியாக இருக்க முடியும் என்ற விதி மாற்றப்பட்டுள்ளது. இவ்வளவு வேலைகளுக்கு மத்தியில் அதிருப்தியும் இல்லாமலில்லை. பெரும்பான்மை பங்குகளை விலைக்கு வாங்கி நாட்டுடைமை ஆக்கும் உத்தியை சில தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நாட்டு வளத்தை சுரண்டிக் கொண்டிருந்தவர்களுக்கு தாம்பூலப்பை கொடுத்து அனுப்பும் வேலை எதற்கு என்பதுதான் அவர்களின் கேள்வி. அடுத்த திருமணம் எப்போது... மீண்டும்பத்திரிகை அடித்து தங்களை அழைக்க மாட்டார்களா... என்று காத்திருக்கும் எண்ணம்தான் சுரண்டல்வாதிகளின் மனதில் நிறைந்து கிடக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்த நடவடிக்கைகள் ஒருபுறம். மறுபுறத்தில் அரசியல் சீர்திருத்தங்களை நோக்கிய பாதையில் சரி செய்யும் வேலை நடக்கிறது. சில அரசியல் அம்சங்களில் பாதையே இப்போதுதான் போடுகிறார்கள். மாகாண அரசுகளின் அதிகாரங்கள் பற்றியெல்லாம் தெளிவாக வடிவம் உருவாகிக் கொண்டிருக்கிறது. முறையான தேர்தல் என்ற அடிப்படையில் கடந்த ஆண்டு தேர்தல்கள் நடந்தன. ஒன்றுபட்ட வெனிசுலா சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பெரும்பாலான மாகாணங்களில் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கொள்கைகள் எதுவுமின்றி நீயா.. நானா.. என்ற போட்டிகளைத் தாண்டி சோசலிசக் கொள்கைகளை முன்னிறுத்தி இந்த வெற்றிகள் ஈட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


தடைக்கற்களைப் பொறுக்கி ஓரமாக வைத்துவிட்டு புரட்சியை நோக்கி செல்கிறோம் என்கிறார் சாவேஸ். அதோடு தங்களைத் தாங்களே புனரமைத்துக் கொண்டு புரட்சியை எவ்வாறு நடத்தினோம் என்று வெனிசுலா தொழிலாளி வர்க்கம் விரைவில் உலகிற்கு பாடம் நடத்தும் என்று அவர் கம்பீரமாக நெஞ்சை நிமிர்த்திக் கூறினார். அப்போது கூடியிருந்த தொழிலாளர்களின் உதடுகளில் ஏற்பட்ட வெறும் அசைவு கூட புரட்சி வாழ்க என்ற உச்சரிப்பையே உணர்த்தியது.

Sunday, July 19, 2009

சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டோம்!


பெர்லின் சுவர் தகர்ந்து இருபது ஆண்டுகளாகிவிட்டன. தகர்க்கப்படுவதற்கு முன்பாக இருந்த கிழக்கு ஜெர்மனி என்ற நாடு சட்டவிரோதமானது என்றெல்லாம் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அடிமைத்தளை முறிந்தது என்று அமெரிக்க ஆதரவு ஊடகங்கள் உரக்கக் கத்தின. அமெரிக்க மற்றும் மேற்கு ஜெர்மனி ஊடகங்களின் தவறான பிரச்சாரங்களால் கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த மக்களில் கணிசமான பகுதியினர் கம்யூனிச முழக்கங்களை எழுப்பினர். இது பெர்லின் சுவரைத் தகர்த்ததோடு, 1990 அக்டோபரில் இரு ஜெர்மனிகளும் இணைந்து ஒன்றுபட்ட நாடாக உருவாவதற்கு வழி வகுத்தது.


அண்மையில் நடந்த கருத்துக்கணிப்பு ஒன்று, கிழக்கு ஜெர்மனி வாழ்க்கை மிகவும் மேம்பட்டதாக இருந்தது என்ற கருத்தை மக்கள் கொண்டிருப்பதாகத் தெரிவித்தது. ஜெர்மனியின் கிழக்குப்பகுதியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 57 சதவீதம் பேர் முன்னாள் கிழக்கு ஜெர்மனிக்கு ஆதரவு அளித்துள்ளனர். குறிப்பாக 49 சதவீதம் பேர் மிகவும் தெளிவான பதிலுடன் இருந்துள்ளார்கள். சில பிரச்சனைகள் கிழக்கு ஜெர்மனியில் இருந்தது உண்மைதான். ஆனால் வாழ்க்கை அங்கு நன்றாக இருந்தது என்கிறார்கள் அவர்கள். மேலும், நல்ல அம்சங்கள்தான் கிழக்கு ஜெர்மனியில் அதிகமாக இருந்தது. தற்போதுள்ள ஒன்றுபட்ட ஜெர்மனியில் உள்ள வாழ்க்கையை விட நன்றாகவும், மகிழ்ச்சியானதாகவும் அப்போது இருந்தது என்கிறார்கள் கணிசமான முன்னாள் கிழக்கு ஜெர்மனி மக்கள்.


இந்தக் கருத்துக்கணிப்பு மீது ஜெர்மனியின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த கிளாஸ் ஸ்°ரோடர் என்ற பிரபல வலதுசாரி அரசியல் ஆய்வாளர் கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார். பிரதேசப் பற்றே இத்தகைய கருத்துக்களுக்கு காரணம் என்று அந்தப் பகுதி மக்களின் கருத்துகளை நிராகரிக்கிறார் ஸ்ரோடர். தங்கள் குடும்பத்தினரிடம் பேசுவதன் மூலமே இளம் பிராயத்தினர் கிழக்கு ஜெர்மனி பற்றி தெரிந்து கொள்கிறார்கள். அவர்கள் பாடப்புத்தகங்களிலிருந்து கற்றுக் கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். கிழக்கு ஜெர்மனியின் இளைஞர்களில் பாதிப்பேர் கூட முன்னாள் கிழக்கு ஜெர்மனியை சர்வாதிகார நாடு என்று கூற மாட்டேனென்கிறார்கள் என்று வருத்தப்பட்டுக் கொள்கிறார் அவர்.


இவரது இந்த விமர்சனம் கிழக்குப்பகுதி மக்கள் மத்தியில் கடும் கோபத்தைக் கிளறிவிட்டுள்ளது. எப்போதும் இல்லாத வகையில் நாலாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அவருக்கு கடிதங்கள் அனுப்பினர். பாடப்புத்தகங்கள் பதவியில் இருக்கும் வலதுசாரிகளின் ஆதரவாளர்களால் எழுதப்பட்டவை. மக்களின் அனுபவத்தை விடவா வேறு பாடம் இருக்கப்போகிறது என்று குடும்ப உரையாடல்கள் மூலம் கிடைக்கும் செய்திகளை நியாயப்படுத்துகிறார்கள் அவர்கள். முன்னாள் கிழக்கு ஜெர்மனி நாட்டை சட்டவிரோதமானது என்று கூறுவதைக் கண்டிக்கிறார் பிர்கர் என்பவர். கிழக்கு ஜெர்மனியை சர்வாதிகார நாடு என்கிறார்கள். ஆனால் இப்போதுதான் எங்களைப் பற்றி உளவுத்துறையைச் சேர்ந்தவர்கள் அதிகமான விபரங்களைச் சேகரித்து வருகிறார்கள் என்கிறார்.இப்போதுள்ள நிலையைப்பார்த்தால், பெர்லின் சுவரை உடைத்தபோது நாங்கள் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகவே உணர்கிறோம் என்கிறார் ஸ்ரோடருக்கு கண்டனக் கடிதம் எழுதியவர்களில் ஒருவர். ஜெர்மன் ஜனநாயகக் குடியரசில் வாழ்ந்த அனுபவம் கிடைத்ததற்காக 38 வயதான ஒருவர் கடவுளுக்கு நன்றி சொல்கிறார். ஒன்றுபட்ட ஜெர்மனி உருவானபிறகுதான் தங்கள் வாழ்க்கை குறித்த அச்சம் கொண்டவர்கள், பிச்சைக்காரர்கள் மற்றும் வீடில்லாமல் உழன்றவர்கள் ஆகியோரைப் பார்க்க முடிந்தது. இதெல்லாம் எனது கிழக்கு ஜெர்மனி அனுபவத்தில் பார்க்கவில்லை என்கிறார் அவர். தற்போதுள்ள ஜெர்மனியில் மக்கள் அடிமைகளாகவும், மூலதன சர்வாதிகாரம் கோலோச்சிக் கொண்டிருக்கிறது என்றும் பலர் தங்கள் கடிதங்களில் குறிப்பிடுகிறார்கள்.


ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று கருதி வந்த கிழக்கு ஜெர்மனி மக்களின் வாழ்க்கையை சோகம்தான் கவ்விப்பிடித்துள்ளது. தவறான பிரச்சாரங்கள் மக்கள் பிரச்சனைகளைத் திசைதிருப்பிவிட்டன என்றுதான் பெரும்பாலான முன்னாள் கிழக்கு ஜெர்மனி மக்கள் கருதுகிறார்கள். அவர்கள் அதிருப்தியுற்றிருக்கிறார்கள் என்பதுதான் கருத்துக்கணிப்புகளில் தெரிய வருகிறது. "தங்கள் வரலாறு மோசமானதல்ல என்பதை இளைஞர்கள் உணர்ந்து வருகிறார்கள். ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு பற்றிய அனுபவம் இல்லாதவர்கள் கூட அதன் வாழ்க்கைத்தரம் குறித்து பேசத் துவங்கியுள்ளார்கள்" என்கிறார் வரலாற்றாய்வாளர் ஸ்டீபன் ஓலே. ஏழைகளுக்கு வாழ்வதற்கான சுதந்திரத்தைத் தவிர மற்ற அனைத்து சுதந்திரங்களும் ஒன்றுபட்ட ஜெர்மனியில் உள்ளன என்கிறார்கள் கிழக்கு ஜெர்மனியினர். அக்காலகட்டத்து அரசின் சாதனைகளைக் கொண்டாடும் நிகழ்வுகள் தற்போது ஜெர்மனியில் அதிகமாகி வருகின்றன.

Thursday, July 16, 2009

ஆறு வித்தியாசங்கள்... கண்டுபிடியுங்களேன்!


"என்ன பாலு சவுக்கியமா.."

பாலு : வாங்க... மணி..(ஏதோ சொல்ல ஆரம்பிப்பதற்குள்)

சலூன்காரர் : சார் எப்ப பாத்தாலும் உங்க வீட்டுல எத்தன சேனல்லே பேசுட்டுருக்கீங்களே... வேற மேட்டரே கிடைக்காதா...?

மணி : ஏம்பா... நானே இன்னக்கி வேற ஏதாவதுதான் பேசணும்னுதான் வந்தேன்...

பாலு : அதெல்லாம் சரி... ஆறு வித்தியாசங்கள், கண்டுபிடிங்களேன்...

மணி : என்ன.. படம் காட்டப் போறீங்களா...

பாலு : இல்லப்பா... ஓட்டுப்போட்டு புது அரசாங்கத்த கொண்டு வந்துட்டோம்... முன்னாடி இருந்தவங்கதான் இப்பவும் வந்துருக்காங்க... ஆனாலும் வித்தியாசம் இருக்கே... அதான் ஆறு வித்தியாசம் சொல்லுண்ணேன்...

மணி : எப்பா... வித்தியாசம் அதிகமா இருக்கும்போலருக்கே...

பாலு : சரிப்பா... குறைஞ்சது ஆறு வித்தியாசத்த சொல்லுப்பா...

மணி : சி.எம்.பிதான் முதல் வித்தியாசம்... போன தடவ குறைந்தபட்ச பொது செயல்திட்டம்னு ஒண்ணு இருந்துச்சு...இப்ப இல்ல...

பாலு : சரியா சொன்னீங்க... முக்கியமான வித்தியாசம்தான்..

மணி : இஷ்டத்துக்கு பொதுத்துறை பங்குகள விக்க முடியாதுங்குற நிலை இருந்துச்சு... இப்ப பட்ஜெட்ல அறிவிக்காமயே தனி ரூட் போட்டுக்கிட்டு இருக்காங்க..

பாலு : பெட்ரோல் விலையுயர்வத்தான் ரெண்டாவதா சொல்வீங்கன்னு நெனச்சேன்...

மணி : ஆமா சொல்லிருக்கணும்...வரலாற்றுல முதமுறையா போன ஆட்சிலதான் விலையக் குறைச்சாங்க... இந்த முறை எடுத்தவுடனே கோணல்தான்...

பாலு : ஆமா... போன தடவ ரெண்டு முறை விலை குறைஞ்சுது... அதுவரைக்கும் நமக்கு இருந்த அனுபவமே விலை ஏற்றம்தான்...

மணி : சாமான்ய மனிதர்களுக்கு உதவுற திட்டங்கள் போன தடவ வந்துச்சு... இத நாலாவது வித்தியாசமா சொல்லலாம்...

பாலு : வேலைவாய்ப்பு உறுதிச்சட்டத்த சொல்றீங்களா...

மணி : ஆமா... கிராமப்புறத்துக்கான இந்தத்திட்டம் நகர்ப்புறத்துக்கும் வந்துரும்னு அறிகுறிலாம் இருந்துச்சு... இப்ப அது மறைஞ்சுருச்சு...

சலூன்காரர் : சார்.... நீங்க உக்காருங்க... இங்க உக்காந்துக்கிட்டே வித்தியாசத்தக் கண்டுபிடிங்க... நானும் என் வேலையப் பாக்குறேன்....

மணி : ஆன்லைனுல அத்தியாவசியப் பொருட்கள விக்கக்கூடாதுன்னு சட்டம் இருந்துச்சு...

பாலு : இப்ப ஒவ்வொண்ணா சத்தமில்லாம எடுத்து விட்டுட்டாங்க... அப்படித்தான...

மணி(சலுhன்காரரைப் பார்த்து) : ஏம்பா... நாங்க ரெண்டு பேரு பேசுறதயும் கேட்டுக்கிட்டே இருக்கியே... ஏதாவது சொல்லேன்...

சலூன்காரர் : சார்... நீங்க சொல்றத நான் எண்ணிக்கிட்டுதான் இருக்கேன்... அஞ்சு சொல்லிட்டீங்க... என்கிட்ட கேட்டுருந்தா முத வித்தியாசமே போன தடவ இடதுசாரிக்கட்சிக்காரங்க ஆதரவுல ஆட்சி இருந்துச்சு... இப்ப இல்லன்னு சொல்லிருப்பேன்...

பாலு : சபாஷ்... இவ்வளவு நேரம் மணி சொன்ன வித்தியாசங்கள்லாம் இருக்குறதுக்கு இந்த வித்தியாசம்தான காரணம்... அவங்க ஆதரவோட ஆட்சி இருந்ததுனாலதான் 100 நாள் வேலைத்திட்டம் வந்துச்சு.. மக்கள் சொத்தான பொதுத்துறைக்கு பாதுகாப்பு...

சலூன்காரர் : ஆமா சார்... குறிப்பா அந்த பெட்ரோல் விலைக்குறைப்பு இருக்கு பாருங்க... நெனச்சுப் பாக்க முடியுமா...

மணி : பாத்தீங்களா பாலு... எந்த விஷயம் சாமான்ய மக்கள பாதிச்சுருக்குன்னு...

பாலு : பெட்ரோல், டீசல் விலை கூடுச்சுனா அரிசி, பருப்பு, காய்கறி எல்லாம் விலை ஏறிடுமே...

மணி : ஆமா... ஆனா கேட்டா பணவீக்கம் குறைஞ்சுருச்சுன்னு புள்ளிவிபரத்த அள்ளித் தெளிக்குறாங்க...

பாலு : சரி.. மணி.. நேரமாச்சு... கிளம்புட்டுமா...

மணி : வாங்க... அடுத்த தடவ வேற மேட்டர் பேசலாம்.. வாங்க..

Tuesday, July 14, 2009

கர்ப்பிணிகளையும் விட்டுவைக்கவில்லை!



உரும்கி எங்கே இருக்கிறது?

உரும்கி என்பது சின்ஜியாங் உய்குர் சுயாட்சிப் பகுதியின் தலைநகராகும். இந்த சுயாட்சிப்பகுதி சீனாவின் வட மேற்கில் அமைந்துள்ளது.

அங்கு என்ன நடந்தது?

சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கும் வகையில் அங்கு வன்முறை நிகழ்ந்துள்ளது. ஜூலை 5, 2009 அன்று மாலையில் அது துவங்கியது. கத்திகள் மற்றும் கற்களோடு கிளம்பிய வன்முறையாளர்கள் பல குழுக்களாக இருந்தனர். உரும்கியின் சந்து பொந்துகளில் எல்லாம் வலம்வந்த அவர்கள் கண்டவர்களையெல்லாம் தாக்கினார்கள். கட்டிடங்களுக்கு தீ வைத்தனர். கடைகள் மற்றும் வாகனங்கள் ஆகியவற்றை உடைத்து நொறுக்கி அவற்றையும் கொளுத்தினர். சின்ஜியாங் உய்குர் சுயாட்சிப் பகுதியில் சுமார் 220 இடங்களில் இந்த வன்முறை செயல்கள் நிகழ்த்தப்பட்டன.

வன்முறையின் வடிவம்...?

மிகவும் கோரமாக இருந்தது. கர்ப்பிணிப் பெண்களையும், இளம் பெண்களையும் கூட வன்முறையாளர்கள் விட்டு வைக்கவில்லை. 184 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். 260 வாகனங்கள் மற்றும் 209 கடைகள் பலத்த தேசமடைந்தன.

அப்பகுதி நிர்வாகம் என்ன செய்தது?

அமைதியை திரும்ப கொண்டு வருவதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக வன்முறையாளர்களைக் கைது செய்ய உத்தரவிட்டது. காயமடைந்தவர்களை வன்முறை நிகழும் இடத்திலிருந்து மீட்டு வந்து அவர்களுக்குத் தேவையான சிகிச்சை தரப்பட்டது. உரும்கியில் வன்முறை வெடித்தவுடன் அங்கு என்ன நடக்கிறது என்பதை சர்வதேச சமூகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அன்னிய ஊடகங்களை அங்கு அனுப்ப சீன அரசு வசதி செய்து தந்தது. நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் வன்முறைக்கு பிறகுள்ள நிலைமையை சரிசெய்வதற்கான வேலைகளில் நிர்வாகம் இறங்கியுள்ளது.

இத்தகைய வன்முறை நிகழ்ந்ததன் பின்னணி என்ன..?

ஜூன் 26 அன்று உள்ளுர் தொழிலாளர்களுக்கும், இடம் பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்களுக்கும் இடையே சிறு மோதல் ஏற்பட்டது. இதற்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது. ஆனால் கிழக்கு துர்க்கி°தானிலிருந்து இயங்கி வரும் உலக உய்குர் காங்கிர° என்ற அமைப்பு இனவெறியைத் தூண்டிவிடும் வேலையில் இறங்கியது. இதற்கு பிரிவினைவாதம் பேசிவரும் ரெபியா கதீர் தலைவராக உள்ளார். இணையதளங்களும் மற்றும் வேறு சில தகவல் தொடர்பு ஏற்பாடுகள் மூலமாகவும் தைரியமான நடவடிக்கைகளிலும், ஏதாவது பெரிய வேலையிலும் இறங்குமாறு அந்த அமைப்பு வெறியேற்றியது.

வன்முறையை எப்படித் துவங்கினார்கள்?

ஜூலை 5 அன்று ஏதாவது பெரிய நடவடிக்கை இருக்கும் என்று ரெபியா தொடர்ந்து கூறிவந்தார். என்ன நடக்கிறது என்பதைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு தனது ஆதரவாளர்களை அவர் கேட்டுக்கொண்டார். உள்நாட்டில் உள்ள சிலரும் அவர்களோடு இணைந்து கொண்டனர். சவுத் கேட் மற்றும் ரென்மின் சதுக்கம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளுமாறு இணைய தளங்கள் மூலமாக அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். வெளிநாடுகளில் உள்ள பிரிவினைவாதிகளின் தூண்டுதலோடு, உள்நாட்டில் உள்ள பிரிவினைவாதிகள் இந்த வன்முறை நிகழ்த்தப்பட்டது என்பது தெரிகிறது.

தாங்கள் வன்முறையைக் கையாள்வதில்லை என்று உலக உய்குர் காங்கிர° கூறுகிறதே?

இது அப்பட்டமான பொய். உள்நாட்டில் மட்டுமல்ல, கலவரத்தின் இரண்டாவது நாளில் நெதர்லாந்தில் உள்ள சீனத் தூதரகம் மீது கிழக்கு துர்கி°தான்காரர்கள் தாக்குதல் நடத்தினர். ஜெர்மனி நகரமான மூனிச்சில் உள்ள சீனத்தூதரகமும் தாக்கப்பட்டது. நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிராக இந்த கிழக்கு துர்கி°தான் பிரிவினைவாதிகள் இருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு தேவையில்லை.

நியாயமான விசாரணை இருக்காது என்று மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றனவே?

இந்தக் கொடுரமான கொலைகளுக்கு எதிராகவும், பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு அனுதாபம் தெரிவித்தும் இந்த மனித உரிமை அமைப்புகள் ஒன்றும் செய்யவில்லை. சின்ஜியாங் பகுதியிலுள்ள அனைத்து மக்களின் நலன்களைப் பாதுகாக்கவே சீனக்காவல்துறை வன்முறையாளர்களை கைது செய்துள்ளது. அதுவும் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதை உலகிலுள்ள எந்த அரசும் கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்காது. சட்டத்தின் அடிப்படையில் இயங்கும் சீனாவில் அனைத்து குற்றவாளிகளுக்கும் சட்டப்படி தண்டனை அளிக்கப்படும்.

பல்வேறு இனங்கள் பற்றிய தனது கொள்கையை சீனா மாற்றிக் கொள்ளுமா?

வரலாற்று ரீதியாகவே சீனாவில் உள்ள அனைத்து இனங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்து வாழ்கின்றன. நாட்டுப்பிரிவினை மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்து சீனா தெளிவான நிலையை எடுக்கிறது. பழங்குடி சிறுபான்மையினர் வாழும் பகுதிக்கு சுயாட்சி வழங்கி அதிகாரப் பகிர்வை மேற்கொள்வது என்ற கொள்கையை சீன அரசு கடைப்பிடிக்கிறது. இதனால் நிலையான தன்மை கிடைக்கிறது.

சின்ஜியாங் பகுதி வளர்ச்சி பற்றி...?

பல்வேறு அம்சங்களில் இந்தப்பகுதி அபாரமாக வளர்ந்து வருகிறது. மக்கள் அமைதியான வாழ்க்கையை வாழ்கிறார்கள். பல்வேறு இனங்களைச் சேர்ந்த 2 கோடி மக்கள் இப்பகுதியில் உள்ளனர். அவர்கள் மத்தியில் ஒற்றுமையும், ஒருமைப்பாடும் நிலவுகிறது. சுயாட்சி அவர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

அப்படியானால் தற்போதுள்ள பிரச்சனையை அலட்சியப்படுத்தலாமா?

கூடாது. உரும்கி பிரச்சனை நம்முடைய உறுதியையும் மீறி நடந்துள்ளது. அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கான சூழலை உருவாக்கும் பணிகளை அதிகப்படுத்த வேண்டும். இதைத்தான் உரும்கி வன்முறைச் சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.

(புதுடில்லியில் உள்ள சீனத்தூதரகத்தின் செய்தித்தொடர்பாளர் சோ யோங்ஹோங்கின் தி இந்து(ஜூலை 13) கட்டுரை கேள்வி-பதில் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது)

Wednesday, July 8, 2009

மாவோயிஸ்டு ஆதரவு நண்பர்களுக்காக...



அது நவம்பர் 13, 2007. இன்று மாவோயிஸ்டுகளைத் தடை செய்வதற்கு மார்க்சிஸ்டுகள் தயங்குகிறார்கள் என்று குற்றம் சாட்டும் பாஜகவின் தலைவர் அத்வானி தனது தேசிய ஜனநாயகக் கூட்டணித்தலைவர்களோடு இந்தத் தேதியில் நந்திகிராமத்திற்கு சென்றார்.

அங்கு மார்க்சிஸ்டுகள் மீது கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தி வரும் மாவோயிஸ்டுகள்-மம்தாயிஸ்டுகள்-காங்கிரஸ்-பாஜகவினரின் சார்பில் பல இடங்களில் பேசினார். இவர்களின் ஆதரவாளர்களிடம் குறை கேட்கிறோம் என்ற பெயரில் விஷமப் பிரச்சாரமும் செய்தார். மாவோயிஸ்டுகள் சார்பில் செங்கொடியோடு அவர் சென்ற இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது

எளிமை + அர்ப்பணிப்பு = கக்கன்



காங்கிரஸ் கட்சியும் கோஷ்டி சண்டையும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள், என ம.பொ.சி கேலி செய்வார்.


அது உண்மை என்பதை இன்றைக்கும் நிகழ்ச்சிப் போக்குகள் பறைசாற்றும். ஆனால் காங்கிரஸ் கட்சி தமிழ் நாடு கமிட்டியிலும் கோஷ்டி சண்டையை மறந்து ஒன்றுபட்டிருந்த காலம் ஒன்று இருந்தது என்பது ஆச்சரியமாக இருக்கும். ஆனால் உண்மை.


1955-57 ஆண்டுகளில் பூ.கக்கன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக செயல்பட்ட இந்த குறுகிய காலமே கோஷ்டி சண்டை மட்டுப்பட் டிருந்த காலம் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். மேலும் கக்கன் தலைவராக இருந்து சந்தித்த 1957 பொதுத் தேர்தலில்தான் காங்கிரஸ் கட்சி 155 இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்தது.


கக்கனின் சாதனை மகுடத்தில் எளிமை, நேர்மை, அர்ப்பணிப்பு, திறமை என பல மாணிக்கக் கற்கள் உண்டு. அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் நேரத்தில் அவற்றை அசை போடுவது உயர் விழுமியங்களை உயர்த்திப் பிடிப்பதாக அமையும்.


மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் தும்பைப்பட்டி என் னும் சிற்றூரில் வாழ்ந்தவர் பூசாரி கக்கன் .இவர் மேலூர் வீரமாகாளியம்மன் கோயில் பூசாரியாகவும் அரசு தோட்டியாகவும் பணியாற்றியவர். இவருக்கு பெரும்பி அம்மாள், குரும்பி என இரண்டு மனைவிகள் உண்டு. தான் தாழ்த்தப் பட்ட சாதியில் பிறந்து தோட்டியாக பணிபுரிய நேரிட்டாலும் தம் பிள்ளைகள் கல்வி கற்று முன்னேற வேண்டும் என தணி யாத வைராக்கியத்தோடு பிள் ளைகளைப் படிக்கவைத்தார்.


இவரின் முதல் மனைவிக்கு 1909ஜூலை 18ஆம் நாள் பிறந்தார் நம் கதாநாயகன் கக்கன். ஐந்து வயதில் மேலூர் தொடக்கப் பள்ளியில் பயின்றார். பின் திருமங்கலம்அரசு மாணவர் விடுதியில் தங்கி உயர்நிலைக் கல்வி பயின்றார். பின்னர் ஆசிரி யர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து பயின்று ஆசிரியர் ஆனார். தான் படித்துத் தேறியது தனக்காக அல்ல, தமது சமுதாயத்துக்காகவே என உணர்ந்த கக்கன், தான் வாழ்ந்த பகுதியில் தீண்டப்படாதவர் வாழும்படி நிர்பந்திக் கப்பட்ட சேரிப்பகுதிகளில் இரவுபாடசாலைகள் அமைத்து பிள்ளைகளுக்கு கல்வி போதித்து பள்ளிகளில் சேரவைத்தார். இந்த அருந்தொண்டு பற்றி கேள்விப்பட்ட மதுரை வைத்தியநாத ஐயர், இவரை வாழ்த்தி ஊக்கம் அளித்தார்.


விடுதலை இயக்கத்திலும் அரிஜன சேவையிலும் கக்கனின் பணிகள் முத்திரை பதித்தன. மதுரை மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையில் அரிஜனப் பள்ளிகள் துவக்கப்பட்டன. மேலூரில் மாணவ, மாணவியருக்கு என இரண்டு தனித்தனி விடுதிகள் கட்டப்பட்டன. இரண்டுக்கும் கக்கன் காப்பாளராக இருந்தார்.


1938ஆம் ஆண்டு சொர்ணம் பார்வதி என்பவரை மணந்தார். சிவகங்கை அரசரின் உறவின ரான ஆர்.சசிவர்ணத்தேவர் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில் சடங்கு சாங்கிய மின்றி எளிமையாக திருமணம் செய்துகொண்டார்.1932ஆம் ஆண்டுக்கு பிறகு அரிஜன சேவை யில் மும்முரம் காட்டிய காங்கிரசார்,கோவில் நுழைவுப் போராட் டங்களில் தீவிரம் காட்டினர். கக்கன் அதில் முன்னிலையில் நின்றார்.


1939 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் நாள் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புனிதமடைந்தது. ஆம், அதுவரை தீண்டத்தகாதவர்கள் உள்ளே நுழைய இருந்த வேலியை உடைத்துக் கொண்டு வைத்தியநாத ஐயர் எல்.என் கோபால்சாமி, தலை மையில் பூ.கக்கன், சாமிமுரு கானந்தம், முத்து, விஎஸ் முரு கானந்தம், வி.ஆர். பூவலிங்கம் ஆகிய ஐந்து தாழ்த்தப்பட்ட தோழர்களும் விருதுநகர் எஸ்.எஸ் சண்முக நாடார் (அன் றைய காலகட்டத்தில் நாடார் களும் தீண்டத்தகாதவர்கள் போல் கோவில் நுழைவுஉரிமை மறுக்கப்பட்டிருந்தனர்)ஆகியோர் மீனாட்சி அம்மன் கோயிலில் நுழைந்து தரிசனம் செய்தனர். இதனை “குருதி சிந்தாப் புரட்சி” என ராஜாஜி வர்ணித்தார். அதைத் தொடர்ந்து கூடல் அழகர்,கள்ளழகர் என வரிசை யாக பல கோயில்களில் கோவில் நுழைவுப் போராட்டம் நடை பெற்றது.அரசும் சட்டமியற்றி உரிமை வழங்கியது.


வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1942ஆகஸ்ட்8 அன்று துவங்கியது. கக்கன் கைது செய்யப்பட்டு தஞ்சை சிறை யில் அடைக்கப்பட்டார். சிறைக்குள் கக்கன் கடுமையாக தாக் கப்பட்டார்.அப்போது ஏற்பட்ட காயம் இறுதிவரை தழும்பாக அவரது உடலில் பதிந்து விட்டது. ஒன்றரை வருட காலம் சிறைத் தண்டனை அனுபவித்தார் .


காமராஜரின் நம்பிக்கைக்கும் பாராட்டுதலுக்கும் உரிய சீடர் ஆனார். 1952-57 காலகட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 1957-67 வரை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந் தெடுக்கப்பட்டார். முதலில் காமராஜர் முதலமைச்சராக இருந்த அமைச்சரவையிலும் பின்னர் பக்தவச்சலம் அமைச்சராக இருந்த அமைச்சரவையிலும் அமைச்சராகச் செயல் பட்டார். உள்துறை, வேளாண்மை, அரிஜன நலத்துறை உட்பட அமைச்சரவைப் பொறுப்புகளை 9 ஆண்டுகாலம் வகித்தார்.


மூன்றே முக்கால் நாள் ஒரு பதவி கிடைத்தாலே வாரிச் சுருட்டுகிற உலகில், கறைபடாத கரங்களுக்குச் சொந்தக்கார ராகவே இருந்தார். சொத்து சேர்க்கவில்லை. தலைக்கனம் பிடிக்கவில்லை. எளிமையும் நேர்மையும் அவரது மறுபெய ராயின. 1975-ல் காமராஜர் மறைவுக்கு பின்னர் தீவிர அரசியலை விட்டு ஒதுங்கிவிட்டார்.


அமைச்சராய் இருந்தவர் அரசு பேருந்துக்கு காத்து நின்று பயணம் போனதும்; மதுரை பொதுமருத்துவமனை யில் படுக்கை கூட இல்லாமல் தரையில் படுத்திருந்ததும் நாடறிந்த செய்தி.
1979ம்ஆண்டு அரசு அவருக்கு இலவச பஸ் பாஸ் ,வீடு, மருத்துவ வசதி அளித்தது. 1981 டிசம்பர் 28 ஆம் நாள் இந்தத் அர்ப்பணிப்புச் சுடர் அணைந்தது. கக்கனோடு எளிமையும் தியாகமும் காங்கிரசிடம் இருந்து விடைபெற்றுவிட்டது. அவர்கள் கக்கனை மறந்துவிட்டார்கள். ஆனால் நாடு மறக்கக் கூடாது. நூற்றாண்டு விழாவில் அவரைப் பற்றி உரக்கப் பேசுவோம்.

சு.பொ.அகத்தியலிங்கம்
இணையாசிரியர், தீக்கதிர்

Monday, July 6, 2009

உள் ஒதுக்கீடா? உள் குத்தா?




கெடுவைத்துப் பேசுவது காங்கிரசாருக்கு வழக்கமாகி உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின்போது தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழித்துவிடுவோம் என்று மன்மோகன் சிங் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி, நீங்கள் ஏற்கனவே ஐந்தாண்டு காலம் ஆட்சியிலே இருந்தீர்களே...அப்போது அந்த 100 நாட்கள் கிடைக்கவில்லையா என்று சூடாகவும் சுவையாகவும் கேட்டார்.எப்படியோ மன்மோகன்சிங் மீண்டும் பிரதமராகிவிட்டார். கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிறது. வேலையில்லாத் திண்டாட்டத்தை நிச்சயமாக 100 நாட்களுக்குள் ஒழித்து விடுவார். 101வது நாள் யாராவது வேலையில்லாதவர்கள் இருந்தால் மன்மோகன் சிங்கை அணுகலாம்.


மன்மோகன் சிங் அரசு வைத்த அடுத்த கெடு குடியரசுத்தலைவர் உரையில் குறிப்பிடப்பட்டது. 100 நாட்களுக்குள் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றுவோம் என்பதுதான் அது. குடியரசுத்தலைவர் பதவியை பெண் ஒருவர் அலங்கரிக்கும் நிலையில், மக்களவை சபாநாயகராக பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ஆட்சியின் அதிகார மையமாக பெண் ஒருவர் நீடிக்கும் நிலையில் மகளிர் மசோதா எளிதில் நிறைவேறிவிடும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.ஆனால் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் மகளிர் மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றுவது குறித்த எந்த அறிவிப்பும் இல்லாமல் கூட்டத் தொடர் முடிந்துவிட்டது.கேட்டால் சரத்யாதவ், முலாயம்சிங் யாதவ், லாலுபிரசாத் யாதவ் போன்ற தலைவர்கள் இம் மசோதாவை இப்போதுள்ள வடிவத்தில் நிறைவேற்றக்கூடாது. பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவில் பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ஒதுக்கீடு வேண்டுமென்று கோருகிறார்கள். அவர்களோடு பேசி கருத்தொற்றுமையை உருவாக்கப்போகிறோம் என்று காங்கிரசார் கூறுகின்றனர்.



அணுசக்தி உடன்பாட்டில் கையெழுத்திட இத்தகைய கருத்தொற்றுமையை உருவாக்குவது பற்றி காங்கிரசார் கவலைப்படவில்லை. உடன்பாட்டில் கையெழுத்திட முடிவு செய்ததால் இடதுசாரிக் கட்சிகள் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்ட நிலையில், முலாயம்சிங் யாதவை வளைத்துப்போட்டு, காந்தி நோட்டைக் காட்டி ஆட்சியை வெட்கமின்றி தக்கவைத்துக்கொண்டனர். இம்மாதிரி நேரங்களில் அமர்சிங் விசுவரூபம் எடுத்துவிடுவார். எடுத்தார். மகளிர் மசோதா விஷயத்தில் மட்டும் கருத்தொற்றுமை என்று கழுத்தறுப்பு நாடகம் நடத்துகின்றனர். அதிலும் சரத்யாதவ் இம்மசோதவை நிறைவேற்றினால் விஷம் குடித்துச்சாவேன் என்று வீரவசனம் பேசினார். பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது அமுதமும் விஷமும் ஒருசேர வந்ததாம். பகவான் பரமசிவன் விஷத்தை எடுத்துக்குடிக்க பார்வதிதேவிதான் விஷத்தை பரமசிவனின் தொண்டைக்குழிக்குக் கீழே இறங்காமல் தடுத்து உடையவனைக் காப்பாற்றினாராம்.இது புராணக்கதை. ஆனால் நடைமுறையில் ஆணாதிக்க சமுதாயம் அமுதத்தை தான் குடித்துவிட்டு விஷத்தை மட்டுமே பெண்களுக்கு கொடுத்து வருகிறது.மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் உள்ஒதுக்கீடு கேட்பதே பெண்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக்கூடாது என்ற ஆதிக்க வெறி மனோபாவத்தில்தான்.



மசோதாவை எதிர்க்கும் கட்சிகள் பிற்படுத்தப்பட்ட சமூக பெண்களை நிறுத்துவதை யாரும் ஆட்சேபிக்கப் போவதில்லை. இப்போது இந்தக்கட்சிகளின் சார்பில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஆண்கள்தான் பெரும்பாலோர் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். சொல்லப் போனால் எந்தக் கட்சியுமே பிற்படுத்தப்பட்ட சமூகத்தைப் புறக்கணித்துவிட்டு தேர்தலில் போட்டியிடுவதைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. அப்படியிருக்க, மசோதா நிறைவேறி விட்டால் உயர்சாதிப் பெண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்து வார்கள் என்று இவர்கள் கட்டை போடுவது மகளிருடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள இவர்கள் தயாராக இல்லை என்பதையே வெளிக்காட்டுகிறது. நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள்மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரிக்கின்றன. அரசு நினைத்தால் நிச்சயம் மசோதாவைநிறை வேற்றிவிடமுடியும்.



அதற்கான அரசியல் உறுதி காங்கிரசுக்கு இருக்கிறதா என்பது தான் கேள்வி.

- மதுக்கூர் இராமலிங்கம்

நன்றி : புதிய ஆசிரியன்
www.puthiyaaasiriyan.com

Friday, July 3, 2009

எப்படித்தயாராகிறது பட்ஜெட்?



பட்ஜெட் உரைக்காக மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்திற்கு வரும்போது கேமராக்களின் கண்கள் அவர் கையில் உள்ள பெட்டி மீதுதான் பதிந்திருக்கும். அந்தப் பெட்டிக்குள் பட்ஜெட் உரை போவதற்குள் ஏழு மலை மற்றும் ஏழு கடல்களைத் தாண்டுகிறது. சத்தமே இல்லாமல் திட்டக்குழுதான்(ஆமாங்க... ஆமாம்... எல்லாத்தையும் தனியார் மயமாக்கனும்னு துடிக்குற அந்த அலுவாலியாதான் இதுக்கு பொறுப்பு!!) துவக்க ஆட்டக்காரராகக் களமிறங்கும். அரசின் பல்வேறு துறைகளிடம் திட்டக்குழுதான் பழைய மற்றும் புதிய திட்டங்களைப் பற்றிப் பேசி தகவல்களை நிதித்துறையிடம் கொண்டு சேர்க்கிறது.

அதேபோல் நிதித்துறையின் ஒரு பிரிவான பொருளாதார விவகாரத்துறையும் திட்டக்கமிஷனைப் போலவே திட்டங்களை அடையாளம் காணும் வேலையைச் செய்கிறது. முதலாளிகள், தொழிலாளிகளை அழைத்து பட்ஜெட்டில் என்ன வேண்டும் என்று இத்துறையினர் கேட்பார்கள். சில கூட்டங்களில் நிதியமைச்சரே கலந்து கொள்வார். தொழிலாளிகள் கேட்டது, கேட்டதோடு நின்றுவிடும். கண்துடைப்பு சமாச்சாரம்தான் என்றாலும் கூட்டங்கள் மட்டும் தவறாமல் நடக்கின்றன.

நிதியமைச்சகத்தில் உள்ள வருவாய்த்துறை மற்றும் செலவினத்துறை ஆகிய இரண்டும் தனியாக விபரங்களைத் தயாரிக்கின்றன. கையைக் கடிக்கும் பட்ஜெட்டுகள்தானே நமது ஆட்சியாளர்களின் சாதனை. திட்டங்களை அறிவித்துவிட்டு கூடவே இவ்வளவு பற்றாக்குறை என்று கூறி திட்டத்திற்கு எதிரில் கேள்விக்குறியைப் போடும் வேலை பட்ஜெட்டில் நடைபெறும்.

திட்டக்குழு, பொருளாதார விவகாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் செலவினத்துறை ஆகியவை அளிக்கும் விபரங்களைக் கொண்டுதான் பட்ஜெட் தயாராகிறது. பட்ஜெட் உரையைக் கணினியில் அடிப்பவர், பிரிண்ட் எடுப்பவர் எல்லாரும் பெட்டி, படுக்கைகளோடு வந்துவிட வேண்டும். பட்ஜெட் வெளியாகும் வரை அவர்கள் வீட்டுக்குப் போகக்கூடாது.

பட்ஜெட் ரகசிய ஆவணம் என்பது இந்தியக் குடிமகன்களுக்குத்தான். ஆட்சியாளர்கள் என்ற பொம்மைகளை ஆட்டுவிக்கும் அன்னிய முதலீட்டாளர்கள் மற்றும் அன்னிய நிதி நிறுவனங்களின் கைகளில் முன்கூட்டியே இதன் விபரங்கள் தவழ்கின்றன என்பது நீண்டநாளைய குற்றச்சாட்டாகும்.

Wednesday, July 1, 2009

நான் கம்யூனிஸ்ட் ஆகிட்டேன்...



எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் இயங்கிய அமெரிக்க நிதி நிறுவனங்களின் மோசடிகளால் ஏற்பட்ட பாதிப்பு சர்வதேசப் பொருளாதாரத்தை உலுக்கி எடுத்துள்ளது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் என்று கருதப்படும் ஜப்பானிலும் அதன் பாதிப்புகள் கடுமையாக உள்ளன. ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்து வருகின்றனர். சில மாதங்களாகவே ஜப்பானின் பல நகரங்களில் தொழிலாளர்களின் பேரணிகள் நடந்து வருகின்றன. ஜப்பானின் நாடாளுமன்றக் கட்டிடத்தின் முன்பு நடந்த பேரணியை, அந்த நாட்டில் நடந்த மிகப்பெரிய பேரணிகளின் ஒன்று என்று வர்ணிக்கின்றனர்.


நெருக்கடியால் வேலையை இழந்தவர்கள் மட்டும் அதில் பங்கேற்கவில்லை. அவர்களோடு, வேலையை இழந்துவிடுவோம் என்று நினைப்பவர்களும், அவ்வளவு ஆபத்து இல்லை என்று கருதுபவர்களும் பாதிக்கப்பட்டவர்களோடு இணைந்து நின்றனர். அவர்களின் கரங்களில் செங்கொடிகள் தவழ்ந்தன. பேரணியில் கலந்து கொண்டவர்களில் பலரிடம் செய்தியாளர்கள் பேட்டி கண்டபோது ஒருவர், தற்காலிகத் தொழிலாளர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தரவே இந்தப் பேரணியை நாங்கள் நடத்துகிறோம். இத்தகைய பிரச்சனைகளில் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே கவனம் செலுத்துகிறது என்றார். மற்றொருவரிடம் கேட்டபோது, நான் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு தருகிறேன். தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு அந்தக்கட்சிதான் முன்னுரிமை தருகிறது என்று கூறியுள்ளார்.


நான்கு லட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியில் கடந்த சில மாதங்களாகவே ஒவ்வொரு மாதமும் சராசரியாக ஆயிரம் பேர் புதிதாக உறுப்பினர்களாகப் பதிவு செய்துள்ளனர். ஜப்பானியக் கம்யூனிஸ்ட் கட்சியோடு ஒப்பிடும்போது ஆளும் லிபரல் டெமாக்ரெடிக் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை இருமடங்காக உள்ளது. ஆனால் அக்கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த மாற்றம் குறித்து கருத்து தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சித்தலைவரும், ஜப்பானிய நாடாளுமன்ற உறுப்பினருமான அகிரா கசாய், தற்போதுள்ள முதலாளித்துவ முறை சரிதானா என்று பல ஜப்பானியர்கள் யோசிக்கிறார்கள். வாழ்க்கை நிலை சரிந்து கொண்டிருக்கிறது. பணக்காரர் மற்றும் ஏழைக்குமிடையிலான இடைவெளி அதிகரித்துள்ளது என்கிறது.


தங்கள் முதலாளிகளுக்கு எதிராக ஜப்பானிய ஏழை மீனவர்கள் கிளர்ந்தெழுந்த கதை 1929 ஆம் ஆண்டில் நாவலாகியது. கனிகோசன் என்று பெயரிடப்பட்ட அந்த நாவல் பற்றி யாரும் பெரிதாகக் கவலைப்படவில்லை. ஆனால் சுனாமியைப் போலத் தாக்கியுள்ள பொருளாதார நெருக்கடி, அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் எழுந்துள்ள எதிர்ப்பலைகள் ஆகியவை இந்த நாவலையும் பிரபலப்படுத்திவிட்டது. அதோடு, தேடுவற்காகவே உள்ள இணையதளங்களில் மார்க்ஸ், மார்க்சியம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய வார்த்தைகள் அதிகமாகத் தேடப்பட்ட வார்த்தைகளாக இருந்தன. இணைய தளங்கள் மூலமாக ஜப்பானியக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பலர் தொடர்பு கொண்டனர்.


இணையதளம் மூலமாகக் கம்யூனிசம் பற்றித் தெரிந்து கொண்ட ஒரு பெண் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். தனது மேலதிகாரிகளுக்கு தெரிந்தால் வேலை போய்விடும் என்பதால் பெயரைத் தெரிவிக்க மறுத்துவிட்டார். முதலாளிகளும், முதலீடுகளுமே தற்போது எங்களைக் கட்டுப்படுத்தும் நிலை உள்ளது. கம்யூனிச சமூகத்தில் மட்டுமே ஒட்டுமொத்த சமூகத்தைப்பற்றி நாம் யோசிக்க முடியும். பொருளாதாரத்திலும் ஜனநாயகத்தைக் கடைப்பிடிக்க முடியும் என்று கூறுகிறார். நான் கம்யூனிஸ்ட் ஆகிவிட்டேன் என்று பெற்றோரிடம் கூறியபோது அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள் என்றும் அவர் தெரிவிக்கிறார்.


கார்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் எந்திரங்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதில் அதிகமாக ஈடுபட்டிருந்து ஜப்பானியப் பொருளாதாரம் சிக்கலில் உள்ளது. கடைசியாக நடந்த நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கடிக்கு முன்பு நடந்ததாகும். அதிலேயே 44 லட்சம் வாக்குகளை(7.5 சதவீதம்) கம்யூனிஸ்ட் கட்சி பெற்றது. நடப்பாண்டின் இறுதியில் அடுத்த தேர்தல் நடக்கப்போகிறது. எங்கள் இறுதி இலக்கு சோசலிச, கம்யூனிச சமூகம்தான். ஆனால் ஒவ்வொரு படியாக முன்னேறுவதுதான் எங்கள் அணுகுமுறை. மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதே முதல் கட்டம் என்கிறார் அகிரா கசாய்.

குறிப்பு : மேலே உள்ள ஓவியம் ஒரு சீன போஸ்டர்.